💙இருளை ஈர்க்கும் ஒளி💙

💙இருளை ஈர்க்கும் ஒளி💙
ஈர்ப்பு 26
எனக்கே தெரியாமல் உன்னை என் மனதிற்குள் பூட்டி வைத்தேன் அது புரிந்த நேரம் நீயே அதை காயப்படுத்தி அதற்கு மருந்தும் ஆனாய்…
வர்ஷாவுக்கு, ‘தன் அண்ணன் தியாவை எங்கேதான் அழைத்துக் கொண்டு சென்றான்’ என்ற விவரம் புரியவில்லை.
‘ஒரு வேலை இருவரும் காதல் பகிர்ந்து விட்டார்களோ, அதனால்தான் இவ்வாறு தனிமையை நாடி சென்றார்களோ’ என்ற எண்ணம் கூட வந்தது.
‘சரி நமக்கு எதற்கு’ என்று கையில் வைத்திருந்த, புத்தகத்தை படிக்க ஆரம்பித்தாள்.
தியா தான் ‘புத்தகம் படித்தால் அவளுக்கு சிறு மாறுதலா இருக்கும்’ என அதை எடுத்துக்கொண்டு வந்திருந்தாள்.
‘கையில் தானே அடி சிறிது நடமாடலாம்’ என்று அவள் நினைத்தாலும் வீட்டில் யாரும் அவளை படுக்கையை விட்டு எழுந்து கொள்ள அனுமதிக்கவே இல்லை.
நடமாட்டமும் இல்லாமல் இருந்தவர்களுக்கு, மனது ஏதேதோ சிந்தனையில் அலைந்துக் கொண்டு இருந்தது.
சும்மா இருக்கும் மனம் சாத்தானின் உலைக்களம் என்பார்கள். அதுபோல இவளின் மனம் இப்பொழுது ஏதேதோ சிந்தனைகளில் குழம்பி தவித்துக் கொண்டிருந்தது
அவள் அம்மாவின் இடத்தில் இவளால் சொல்லவும் முடியவில்லை சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை. ‘தன்னை யாரோ கொல்ல முயற்சிக்கிறார்கள்’ என்பது மனதில் புகுந்து அவளை மிகவும் தொல்லை செய்து கொண்டே இருந்தது. ‘தான் யாருக்கு என்ன செய்தோம்?’ என்ற நினைவு வேறு அவளுக்கு சுழன்று கொண்டே இருந்தது.
இப்படி பல சிக்கல்களில் மாட்டிக் கொண்டிருந்தவளுக்கு அந்த புத்தகம் படிப்பது மிகவும் ஆறுதலாகவே இருந்தது.
இப்படி அவள் புத்தகத்தில் மூழ்கி இருந்த நேரம், அவள் அறை கதவு திறக்கவும் ‘தியா தான் வந்துவிட்டாள்’ என அவள் நிமிர, அங்கே நின்றிருந்ததோ அவளின் மனதின் நாயகனான ராஜ்.
அவனை சற்றும் அங்கே எதிர்பார்க்காதவள், அவனின் திடீர் வரவால், தன் கையிலிருந்த புத்தகத்தை கீழே போட்டு விட்டாள்.
உடனே ராஜ் அவள் புறம் வந்து, அந்த புத்தகத்தை எடுத்து அவள் மடி மீது வைத்தான்.
“என்ன ஆச்சு…”, என்றவன் கேட்க,
“ஒன்னும் இல்ல திடீர்னு வரவும்…”, என்றாள் மெதுவாய்.
“சாரி, நான் உன்னை பயமுறுத்துட்டேனா..”, என்றான் கவலையாய்.
“அப்படிலாம் இல்ல…”
“தியா உன் கூட தான் இருக்கானு உங்க அம்மா சொன்னாங்க எங்க அவளை காணோம்…”, அந்த ரூமை கண்களால் சுழற்றி பார்த்துக்கொண்டே கேட்டான்.
“அதுதான் எனக்கும் தெரியல…”
“அப்படின்னா வீட்டுக்கு கிளம்பிட்டாளா என்ன?”, என்றான் புரியாமல்.
“அப்படிலாம் இல்ல, அண்ணா அவகிட்ட ஏதோ பேசணும்னு கூட்டிட்டு போனாங்க அதுக்கப்புறம் ஆளையே காணோம்…”
“சரி விடு ஏதோ ஆபீஸ் விஷயம் பேசிட்டு இருப்பாங்களா இருக்கும்…”
“ஆபீஸ் விஷயமா அவங்களா?”
“பின்ன…”
“இந்த அண்ணன் சரியே இல்ல, எனக்கு என்னவோ தியாவ அவன் லவ் பண்றானோ ஒரு டவுட்”, என்றால் ஏதோ பெரிய ரகசியம் சொல்வது போல்.
“டவுட் எல்லாம் வேணாம் உண்மையா லவ் பண்றேன்னு தான் சொன்னான்”, என்றான் இவன் சாதாரணமாய்.
“உங்களுக்கு அவனே சொன்னானா?”, என்றாள் ஆச்சரியமாய்.
“ஆமா”
“அவனுக்கு எவ்ளோ கொழுப்பு உங்க கிட்ட சொல்லி இருக்கான். எனக்கு சொல்லவே இல்ல பாத்திங்களா”, என்றாள் அவள் அண்ணனை கருவிக் கொண்டே,
“அவனா சொல்லல உன்ன மாதிரி டவுடாகி நானா தான் கேட்டேன்”, என்றான் சமாதானமாய் கூறியவன், அவள் கைகளையே பரிவாய் பார்த்தான்…
அவன் பார்வையை புரிந்து கொண்டவள், அவளே பதிலளித்தாள் “இப்போ பரவால்ல…”
“உங்க கை எப்படி இருக்கு?”, என்றால் அவன் கைகளை பார்த்துக் கொண்டே,
“அது ஒன்னும் இல்ல சின்ன காயம் தான் சரி ஆயிடுச்சு”, என்றான் அவள் பார்ப்பதற்கு ஏதுவாய் கைகளை காட்டி.
“ம்…”
“தலைல வலி எப்படி இருக்கு?”, என விசாரிக்க,
“இப்போ அங்க வலி இல்ல…’, என்றாள்.
“அந்த ரவியை போட்டு தொவச்சி எடுத்தாச்சி, அவனா இருக்கும்னு தோணல…”, என்றான் யாரா இருக்கும் என்ற யோசனையுடன்.
“அப்போ யாரா இருக்கும்?”
“தெரியல…உனக்கு யார் மேலயாச்சி டவுட் இருக்கா…”
“இல்லையே….யாருக்கு என்ன பன்னேனு தெரியலையே…”, என்றாள் ஒன்றும் புரியாமல்.
“பயமா இருக்கா…”, என்றான் பரிவாய்.
“இல்லையே அதான் நீங்க இருக்கீங்களே. ஏசிபி பொண்டாட்டிய யார் என்ன பண்ண முடியும்? ஆல்ரெடி ஒருத்தன் ட்ரை பண்ணி கம்பி என்றானே…”, மறைமுகமாய் அவன் காதலிக்கு சமதத்தை தெரிவித்தால் பெண்.
அவள் சொன்னதை கிரகித்துக் கொள்ள, அவன் சிறிது நேரம் எடுத்துக் கொண்டான்.
புரிந்த பின் ‘அது உண்மைதானா’ என அவளை பார்க்க, அவளும் அவனையே பார்திருந்தாள்.
“வர்ஷு நீ என்ன சொல்றனு புரிந்து தான் சொல்றியா…”
“ஏன் புரியாம பேச என்ன பாத்தா சின்னதம்பி பிரபு மாதிரி இருக்கா என்ன?”
அவன் சிரித்து விட்டான்.
“ஹப்பா! இப்ப இந்த மாதிரி நீங்க சிரிக்கிறத பார்த்தா, ஸ்கூல் படிக்கும்போது பார்த்த மாதிரி இருக்கு”.
“உனக்கு என்ன அப்ப ஞாபகம் இருக்கா?”
“அப்ப என்னனு புரியாத வயசு அண்ணா என்னை விட உங்க கூட அதிகமா ஒன்னா இருக்கான்றது ஒரு மாதிரி இருந்துச்சி”, என்றாள் உண்மையை.
“ஓ! அது தான் நீ என்கிட்ட சரியா பேசாதத்துக்கு காரணமா?”, என்றான் பல நாள் கேள்விக்கு விடை தெரிந்த சந்தோஷத்தில்.
“ஆமா, அப்புறம் அது ஏன்னு புரிஞ்ச அப்போ உங்கள நெனச்சி கஷ்டமா இருந்துச்சி…”
அவள் அதை கூறும் போது அவன் முகம் வருத்தத்தை பூசிக் கொண்டது.
அவன் முக சுணக்கம் இவளை தாக்க, அவன் கைகளைப் பிடித்து அழுத்தி கொடுத்தாள்.
அந்த அழுத்தத்தில் தெரிந்த, அவளின் அக்கறையில் அவன் முகம் வருத்தத்தை துடைத்து, மகிழ்ச்சியை பூசிக் கொண்டது.
தன் வேண்டுதலுக்கு செவி சாய்த்து, அந்த இறைவனே பக்தனுக்கு காட்சியளித்து, வரம் தந்தார் போன்ற நிலைமையில் இருந்தான் ராஜ்.
“அப்புறம் அந்த ரவி விஷயம்…”, என அவள் துவங்க அவளை பேச விடாமல் தடுத்து,
“அது பத்தி எல்லாமே நீ ஆல்ரெடி சொல்லிட்ட வர்ஷுமா”.
“கல்யாணம் பத்தி பேசும்போது வீட்ல எல்லாருக்கும் உங்களை ரொம்ப புடிச்சி இருந்துச்சு, அதுக்காகவாச்சும் ஒத்துக்கலாமான்னு யோசிச்ச போது, என்ன ரொம்பவே தடுத்த ஒரு விஷயம் இந்த ரவி பத்தினது”
“புரியல…ஏன்?”
“இல்ல நாள பின்ன நமக்குள்ள ஒரு பிரச்சனைனா அதுவும் அவனால வந்த, அதை என்னால தாங்கிக்க முடியாது.”, என்றாள் மனதை வெளிப்படையாய் திறந்து,
“ஐ ப்ரோமிஸ் யூ, அந்த ரவியால நமக்குள்ள எந்த பிரச்சினையும் வராது”, என்றான் திடமாய்.
எது எல்லாம் தடையாய் இருக்கும் என்று கருதினாளோ, அதை அனைத்தையும் அவனிடம் பகிர்ந்து கொண்டாள் அந்த மங்கை. அவனிடம் ஒவ்வொன்றாய் அவள் கூறக் கூற, மலையாய் நினைத்ததெல்லாம் பனிமலையாய் மாறி, ராஜ் என்னும் சூரியனால் உருகி கரைந்து கொண்டிருந்தது.
வர்ஷாவுக்குமே அவனிடம் பகிர்ந்து கொண்டது மன நிறைவாய் இருந்தது.
“ஆமா, வீட்ல இருக்கவங்களுக்காக மட்டும்தான் இப்படி பேசுறியா?”, இன்சான் அவளை உற்றுப் பார்த்து,
“என்ன பாத்தா மத்தவங்களுக்காக பேசிட்டு இருக்க மாதிரியா தெரியுது உங்களுக்கு.”
அவளைப் பார்த்தான், குறிப்பாக அவள் நயனங்களை பார்த்தான் அதில் காதல் பொங்கி வழிந்தது. அதற்கு மேல் அவன் ஏதாவது கேட்க வேண்டுமா என்ன?
அவள் அருகே படுக்கையில் அமர்ந்து, அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு காதல் கதை பேசிக் கொண்டிருந்தார்கள் அவர்கள் இருவரும்…
மற்றவை அனைத்தும் அவர்களுக்கு மறைந்து விட்டன, அவர்கள் உலகில் இப்பொழுது அவர்கள் இருவர் மட்டுமே…
***
ஷ்யாம் கேட்ட கேள்வியில், தியா திருதிருவென விழித்தால்…
“என்ன தவிர வேற யார் இப்படிலாம் பண்ணி இருந்தாலும் நீ செருப்பை கழட்டி அடிச்சிருப்பதானே? அப்படி இல்லனாலும், உங்களோட ஐட்டம்ஸ் இருக்கே அந்த மிளகா பொடி, குண்டு ஊசி, சேஃப்டி பின்னு… இத யூஸ் பண்ணி இருப்ப தானே”
அவள் வாய் திறந்து எதுவும் கூறவில்லை. ஆனால் தனக்குள் யோசித்துக் கொண்டிருந்தாள் ‘சரிதானே இவனை தவிர வேறு யார் அவளை சீண்டினாலும் அவள் சும்மா இருந்திருப்பாளா. இவனிடம் மட்டும் கோபத்திற்கு மாறாக இந்த வெட்கம் வந்து தொலைப்பது ஏன்?’
தான் கேட்டதற்கு எதுவும் கூறாமல் சிந்தனையில் ஆழ்ந்த பாவையை பார்த்தவன் உற்சாகமானான். ‘இப்பவாச்சும் யோசிச்சு பாரு தியா குட்டி’.
அவள் சிந்தனையை கலைத்தது ஷ்யாமின் பேசி…
“ச்ச!”, ‘ஒவ்வொரு தடவை இவகிட்ட ஏதாவது சொல்ல வரும்போது எல்லாம் போன் அடிச்சு கெடுக்குது’, என சலித்துக் கொண்டே அதை எடுத்து பேசினான்.
ரங்கநாதன் அங்கிள் தான் அழைத்திருந்தார். அதை பார்த்தவுடன் தான் “அய்யய்யோ! மீட்டிங்கை மறந்துட்டேனே” வாய்விட்டே கூறினான்.
“தம்பி இங்க எல்லாரும் பதினைந்து நிமிஷத்துல வந்துருவாங்க, எங்க இருக்கீங்க”.
“இதோ கிளம்பிட்டேன் அங்கிள், டென் மினிட்ஸ்ல வந்துடுறேன்”.
“சாரி தியாம்மா சுத்தமா மறந்துட்டேன் இப்போ எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு. சரி நீ யோசித்து வை, நான் அப்புறம் வந்து உன் கிட்ட பேசுறேன் பை…”
தங்கையிடமும் சொல்லிக் கொண்டு புறப்படலாம் என்று, தியாவை கூட்டிக்கொண்டு தங்கையின் அறைக்கு வர, அங்கே அவர்கள் கண்ட காட்சி இருவருக்கும் அதிர்ச்சியையும், மகிழ்ச்சியையும் ஒருங்கே தந்தது.
ராஜும், வர்ஷாவும் ஒருவர் கையை ஒருவர் பற்றிக் கொண்டு, கண்களில் காதல் கதை எழுதிக் கொண்டிருந்தனர்.
“ரெண்டு பேத்தையும் பார்த்தியா”
“பாத்துட்டு தான் இருக்கேன்…இவங்களுக்காக என்கிட்ட சண்டை வேற போட்டீங்க”.
“சாரி தியாம்மா ப்ளீஸ்…”
“அப்படியெல்லாம் அசால்டா விட்ற முடியாது”
“சரி உனக்கு என்ன வேணும்னு சொல்லு”
“இப்ப வேணாம், வேணுன்றபோது கேட்டு வாங்கிக்கிறேன்”.
“ஓகே டன்”
இவர்கள் வந்து வெகு நேரம் ஆகியும் அவர்கள் நிலையில் மாற்றம் இல்லை. பின் ஷ்யாம் தான் தொண்டையை செருமி தங்கள் வருகையை அவர்களுக்கு தெரிவித்தான்.
சத்தம் வரவும் அதுவரையில் வர்ஷாவின் படுக்கையில் அமர்ந்திருந்த ராஜ் எழுந்து கொண்டான்.
“என்னடா நடக்குது இங்க”, அன்று ராஜ் கேட்டது போல் ஷ்யாம் தான் அவனை கிண்டல் செய்தான்.
பின் தன் தங்கையிடம் சென்றவன் “நல்ல முடிவு எடுத்திருக்க வர்ஷுமா”, என அவள் தலை வருடினான்.
“சரி டைம் ஆயிடுச்சு நான் ஆபீஸ்க்கு கிளம்புறேன்”
நண்பனுக்கு வாழ்த்து கூறவும் மறக்கவில்லை. அவனை ஒரு நிமிடம் வெளியே அழைத்து, ‘வர்ஷாவை கொல்ல நினைத்தவன் பற்றி எதாவது தெரிந்ததா’ என்பதை விசாரித்து விட்டே சென்றான்.
அண்ணாவுக்கும், வர்ஷாவுக்கும் தனிமை கொடுக்க நினைத்த தியா வேலை இருப்பதாய் கூறி, ஷ்யாமுடன் ஆபீசுக்கு புறப்பட்டாள்.
ஒருவன் தன் காதலினால் அவன் காதலியை விழ்த்தி விட்டான். மற்றவனோ தன் காதலை அவளுக்கு புரிய வைக்கவும், அவளுக்குள் அமிழ்ந்திருக்கும் காதலை வெளிக்கொண்டு வரவும் முயற்சித்திருக்கிறான் முயற்சி வெற்றி பெறுமா?
***
ஆபிஸில்…….
ஆபீஸ் சென்றதும் அவள் கோப்புகளின் அறைக்குள் செல்ல, இவன் அந்த மீட்டிங் அட்டென்ட் செய்ய புறப்பட்டான்.
மீட்டிங் நல்லபடியாக முடிந்தவுடன், தியாவை மத்திய உணவு உண்பதற்காக அழைத்தான்.
எப்பொழுதும் பேசி, சிரித்து, சீண்டி எனச் செல்லும் உணவு நேரம் இன்று அமைதியாய் சென்றது.
சாப்பிட்டு முடித்து தன் அறைக்கு திரும்ப நினைத்தவளை ஷ்யாம் அழைத்தான்.
“தியா என் மேல கோவமா…” குரலில் குற்ற உணர்வைத் தேக்கி கேட்டான்.
“தெரியல ஆனா மனசு கஷ்டமா இருக்கு” என்றாள் சோர்வாய்.
இந்த பதில் அவனை மிகவும் பாதித்தது.
அவள் மனதை மாற்ற அவளை சீண்டினான்.
“நான் கூட நீ அங்கில் கிஸ் (angle kiss) ஆன்கில் கிஸ்(ankle kiss) ரெண்டுத்துக்கும் டிஃபரென்ஸ் கண்டு பிடிக்கிறியோன்னு நினைச்சேன்”.
“அதுதான் எனக்கு தெரியுமே அங்கில் கிஸ் இமைல கொடுக்கறது, ஆன்கில் கிஸ் கால கொடுக்கறது”, என படபடவென பேசியவள் ஷ்யாமின் மெச்சுதலான பார்வையில் கன்னம் சிவக்க, நாக்கை கடித்து அமைதியானாள்.
“நீ செம ஷார்ப்பு தியாமா ஒரு தடவை சொல்லி கொடுத்தாலே ஈஸியா கத்துக்கிறியே. அப்போ நெக்ஸ்ட் கிஸ்கு…ச்ச…நெக்ஸ்ட் பாடத்துக்கு ரெடியா இருக்க போலயே”
“உங்க விளையாட்டுக்கு நான் வரல சாமி நான் கொஞ்சம் ப்ராஜெக்ட் வொர்க் பாக்க போறேன்”, என அங்கிருந்து ஓடிவிட்டாள்.
அவள் சென்ற திசை பார்த்து ‘இந்த விளையாட்டெல்லாம் நான் உன்கிட்ட தான் விளையாட முடியும் தியாமா’, என தனக்குள் கூறிக்கொண்டான்.
கோப்புகள் அறைக்குள் சென்ற, தியாவிற்கு பலத்த யோசனை அவளுக்குத் தன் மனம் புரிந்தது.
ஷ்யாம் சொன்னார் போல் தன்னிடம் வேறு யார் இப்படி நடந்து கொண்டிருந்தாலும், அவள் இப்படி கைகளை கட்டிக் கொண்டு பார்த்திருக்க மாட்டாள். முன்பே அவளுக்கு இருந்த சந்தேகம் தான் சிறிது காலமாகவே ஷ்யாமை சைட் அடிக்க ஆரம்பித்திருந்தாள்.
அன்று அவன் கொடுத்த இமை முத்தம் இவளை மிகவும் பாதித்திருந்தது. அதன் பின் அதை பலமுறை நினைத்துப் பார்த்து சிலிர்த்து இருக்கிறாள்.
இன்று அவன் கணுக்காலில் கொடுத்த முத்ததை நினைத்து பார்க்க, இப்பொழுதுதான் நடந்தது போல் அவளுடல் சிலிர்த்தது.
தனக்கே தெரியாமல் சிறிது சிறிதாய் தன்னை ஆக்கிரமித்த, மாயவனை எண்ணி அதிசயத்தது அந்த பெண் மனம்.
உடனேயே ‘இன்று காலை அவன் திட்டியதை’ நினைத்து மனம் வருந்தியது. அவன் அண்ணன் மூலம் அவளுக்கு நன்றாகவே பரிச்சயம் ஆனது தான் அவனின் முன்கோபம், இருந்தும்தன்னிடம் அது வெளிப்பட்டதில் மிகவுமே சோர்வுற்றாள் பெண்.
பின் தன் சிந்தனையிலிருந்து வெளிவந்த தியா, அன்றைய ப்ராஜெக்ட்கான வேலைகளில் மூழ்கினாள்.
இந்தக் ‘காதல்’ என்ற ஒன்று இருக்கிறதே, அது ஒருவர் மேல் வந்துவிட்டால் கோபம் தெரியாது, மற்றவர் இழைக்கும் தவறு தெரியாது, அவரவர், அவரவரின் குணங்களோடு ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை நமக்கு அளிக்கும். இவை காதலுக்கே உரிய இயல்புகள்.
எனவே ஷ்யாமின் கோபம் இவளை வருத்தப்படுத்தினாலும் அவனை அது வெறுக்க வைக்கவில்லை. பெண்ணின் இயல்பும் அதுவல்லவே, யார் எப்படி இருந்தாலும், அவர்கள் மேல் அன்பு செய்பவள் இவள். அப்படியிருக்க தன்னவனின் கோபமா இவளே அவனை வெறுக்க செய்யப் போகிறது.
ஒருவர் மற்றவரை புரிந்து விட்டுக் கொடுத்து, ஒருவர் குணத்தை மற்றவர் ஏற்றுக்கொண்டு நடந்து கொண்டால் எந்த ஒரு உறவிலும் விரிசல் ஏற்படாது.
ஷ்யாமின் முன்கோபத்திற்கு ஏற்ற பொறுமைசாலி இவள். இன்னொரு விஷயமும் இருக்கிறது அவர்தான் தாழ்ந்து போகிறாரே ‘நாம் எவ்வளவுதான் கோபப்பட்டாலும் நம்மளை எதுவும் சொல்வதில்லையே’ என்று மட்டும் மற்றவர்களை எய்க்க கூடாது. அது மிகுந்த பின் விளைவுகளை ஏற்படுத்தும்.
***
ராஜ் வீடு……
“அம்மா…” என கத்திக் கொண்டே வந்தான் ராஜ்.
இவன் குரல் கேட்டு வந்த, லட்சுமியை கட்டிக் கொண்டு சுற்றினான் ராஜ்.
“என்னடா பண்ற பெரிய ஏசிபினு தான் பேரு எப்படி நடந்துக்கிற பாரு, வெளியே யாராவது உன்னை பார்த்தா என்னடா சொல்லுவாங்க”, என்றார் மகனின் குழந்தை தனமான செயலில்.
“யாருனா எதுனா சொல்லிட்டு போகட்டும் இன்னிக்கு நான் செம்ம ஜாலி மூடுல இருக்கேன் மா”, என்றான் அத்தனை பல்லையும் கட்டி.
“அதான் பார்த்தாலே தெரியுதே, என்ன விஷயம் சொல்லு”, என்றார் ஆர்வமாய்.
“உன் மருமக என் காதலுக்கு பச்சை கொடி காட்டிட்டாமா”, எனக் கத்தினான்.
“என்னடா சொல்ற நிஜமாவா”, என்றவரின் குரலிலும் சந்தோஷம் வழிந்தது.
“ஆமாம்மா இப்பதான் அவளுக்கு என் மனசு புரிஞ்சுச்சு”
“ரொம்ப சந்தோஷம் டா கண்ணா, இரு வரேன்”, என சமயலறை சென்று சர்க்கரை எடுத்து வந்து, அவன் வாயில் கொட்டினார்.
பதிலுக்கு அவனும் சிறிதள்ளி அவன் அம்மாவின் வாயில் போட்டான்.
பின் வர்ஷுக்கு கால் செய்து, தன் அன்னையிடம் கொடுத்தான். சிறிது நேரம் மருமகளும், மாமியாரும் உரையாடினர்.
அதன் பின் ராஜுக்கு ஒரு கால் வந்தது…
அதில் சொன்ன விஷயத்தை கேட்டு, விரைந்து ஒரு இடம் நோக்கி புறப்பட்டான்.
ராஜ் எங்கே, எதற்காக சென்றான்?
எல்லாம் நன்றாக சென்று கொண்டிருந்தால், இந்த விதிக்கு ஏன் பொறுக்கவே மாட்டேன் என்கிறது? இல்லை ஏதேனும் நன்மை நோக்கி செல்கிறானா? காலத்தின் கைபாவைகள் நாம், எதையும் முன்னரே தெரிந்து, அறிந்து நடக்கமுடியாதே…விதி வலியது அது ஆணித்தரமான உண்மை,ஆமாம் தானே…?
(போன எபிக்கு லைட்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் போட்ட அன்பு உள்ளங்களுக்கு நன்றி🙏 அடுத்த எபில சந்திக்கலாம்…. பை…. பை….)