Mayanginen kiranginen 02

eiS8VZ63923-c6255047

Mayanginen kiranginen 02

அத்தியாயம் 02

“ச்ச, எந்த நேரத்துல அந்த டீ எல் கிட்ட திட்டு வாங்கி கிளம்பினேனோ, இப்படி வண்டி பாதி வழியிலே ப்ரேக் டௌன் ஆகிடுச்சு” புலம்பிய படியே கார் டயரை எட்டி உதைத்தாள்.

“யாருமே இந்த நேரத்துல வரமாட்டேங்கிறாங்களே, அந்த டீ எல் மட்டும் என்னைய முன்னாடியே அனுப்பி இருந்தா, இப்படி நான் ‌மழையில நின்னு கஷ்டப்படனும்னு எந்த அவசியமும் இருந்திருக்காது” என அவளின் டீ எல்லை திட்டிக்கொண்டிருந்தாள் அவள்.

பாவம் அந்த ஜீவன் மட்டும் இப்போது அவள் முன்பு நின்றிருந்தால் கோபத்தில் அவனை என்ன செய்திருப்பாளோ.? அது அவள் மட்டுமே அறிந்த விடயமாகும்.

அவளின் டீ எல்லை வஞ்சனையின்றி திட்டிய படி, வழியில் ஏதும் வண்டி வருகிறதா என்று பார்வையிட்டிருந்தாள்.

அவள் நிற்பதோ ஒரு ஹைவேஸில், அவளுக்கான பாதுக்காப்பு ஏதுமின்றி அவள் தனித்து நிற்க, உள்ளுக்குள் உதறல் எடுத்தாலும் வெளியில் நிமிர்வாகவே நின்றிருந்தாள் பேதையவள்.

“ஏன் யாருமே இந்த நேரம் வரமாட்டேங்கிறாங்களோ.? நான் எவ்வளவு நேரம் தான் இப்படி தனியா மழைல நிக்கிறது கடவுளே. உனக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா” எனச் சரமாரியாகக் கடவுளையும் திட்டினாள்.

அவரோ பரிதாபமாக அந்தப் பெண்ணைப் பார்த்து விட்டு, ‘இதோ உனக்கான வண்டியை அனுப்புகிறேன்’ என்றிருந்தார்.

அவள் கடவுளைத் திட்டிய ஐந்தே நிமிடத்தில் ஒரு வண்டி சாலையில் சீறி பாய்ந்து வருவதை பார்த்தவள், வேகமாக அதன் முன்பு நின்று அந்தக் காரை நிறுத்த முயன்றாள்.

“இது என்ன கார் இவ்வளவு வேகமா வருது. நாம கடவுளைத் திட்டின திட்டுக்கு, அவருக்குக் கோபம் வந்து இப்படி பண்ணிட்டாரோ” என உள்ளுக்குள் நினைத்தவள், “எப்படியாவது இந்த வண்டியை நிறுத்தியே ஆகணும்” என்று முடிவெடுத்தாள்.

அவள் ரோட்டில் வந்து நின்ற நேரம், அவளைக் கண்ட வெற்றிக்கு வண்டியின் வேகத்தைக் குறைக்க முடியாமல் போகச் சடன் ப்ரேக் போடவே, அதனைப் பார்த்த அவளுக்கு’ சாவு கன்ஃபாரம்’ என்று மனது ஊளையிட்டது.

வண்டி வந்த வேகத்தைப் பார்த்தவள்,’ உயிர் தான் முக்கியம்’ என்று தள்ளி நின்றாள்.

ஆனால் அவளின் கெட்ட நேரமோ என்னவோ, சடன் ப்ரேக் போட்டத்தில் அவனின் வண்டி கட்டுப்பாட்டை மீறி அவளை உரசி விட்டுச் சிறிது தூரம் சென்றே நின்றது.

வண்டி உரசியதில் கீழே விழுந்தவளுக்கு, கை முட்டியில் அடிப்பட்டிருக்க அவளால் எழுந்திரிக்க கூட முடியவில்லை.

பேந்த பேந்த விழித்த வெற்றிக்கு, யாரையோ உரசிவிட்டு வண்டியை நிறுத்தியது ஞாபகத்தில் வரவே, வேகமாகக் காரை விட்டு இறங்கினான்.

மழையில் நனைய தொடங்கவும், அவன் அடித்த பீர் பாட்டிலின் போதை குறைய தொடங்க, அந்தக் கும்மிருட்டில் அவள் எங்கே என்று ‌தேடினான்.

ஒரு ஒருத்தில் எந்திரிக்க முடியாமல் அந்தப் பெண் கடினப்படுவதை பார்த்தவன் வேகமாக அவள் அருகே சென்றான்.

வெற்றி அங்கே சென்று, அவள் முகத்திற்கு நேராக மொபைல் ஃபிளாஷ் லைட் அடித்தான்.

கண்ணுக்கு நேராக லைட் அடிக்கவும் அவளது விழிகள் தாமாக மூடியது.

“ஏங்க… ஏங்க… ஏங்க…” என அவன் வாய் குழறிய படி அழைக்க,

அவன் குடித்திருப்பது அறிந்து” இப்படி தான் வந்து வண்டியை விட்டு இடிப்பீங்களா “என முறைக்க,அவனோ யாருக்கு வந்த விருந்தோ என்பது போல் நின்றிருந்தான்.

“எழுந்துக்க முடியாமல் கஷ்டப்படுறது தெரியுதுல, கொஞ்சம் கைத்தான் கொடுத்துத் தூக்கிவிடுறது” என முறைப்பாகவே அவள் சொல்ல,

‘ஹான் அது எப்படி கைக்கொடுக்கிறது. அது நான் என்னோட இசைக்குச் செய்யும் துரோகமாச்சே’ என மனதோடு நினைத்தவன் அமைதியாய் நின்றான்.

” அறிவில்லாதவனே, இப்படி இடிச்சுபுட்டு தூக்கி கூட விடமாட்டியா “

“நான் எதுக்கு உங்களைத் தூக்கி விடணும். நீங்க யாரு எனக்குச் சொல்லுங்க”

அவனின் பதிலில் கோபம் தலைக்கேற, அதனை அடக்க வழி தெரியாமல் வலியோடு திண்டாடினாள்.

” ஹார்ட்லெஸ் பீப்ள்” என முணுமுணுத்தாள்.

“யார பார்த்து ஹார்ட்லெஸ்ன்னு சொல்ற, உங்கள மாதிரி பொண்ணுங்களுக்கு தான் அது இல்லை. எங்கள மாதிரி பசங்களுக்கு நிறையாவே இருக்கு” கூறி அவளைத் தூக்கி நிற்க வைக்க உதவி செய்தான்.

அவளை எந்திரிக்க வைக்க உதவி செய்தவன், அவளை முறைத்து விட்டு நகர பார்க்க, “எக்ஸ் க்யூஸ் மீ மிஸ்டர் கொஞ்சம் நில்லுங்க” என்றாள்.

அவளைத் திரும்பிப் பார்த்தவன் என்னவென்று புருவம் உயர்த்தி கேட்க

“வெயிட்ட மினிட்” என்று அவளது காருக்குச் சென்று, அதற்குள் இருந்த அவள் பொருட்களை எடுத்து வந்து, “இப்போ வாங்க போலாம்” என்று அவனுக்கு முன்பு நடந்து காரின் முன் இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

அவன் மழையிலே நிற்பதை பார்த்து, “மிஸ்டர் மதுபிரியரே, ஏன் இன்னும் அங்கேயே நிக்கிறீங்க.? சீக்கிரமா வண்டியை எடுங்க” என அவள் கூப்பாடு போட்டுக் கத்த,

” என்னைய பார்த்துக் குடிகாரன்னு சொல்லாம சொல்லுறா, இதுக்கெல்லாம் நீ தான் காரணம்” என மனசாட்சியை திட்டித் தீர்த்தான்.

‘அய்யோ ! இவனுக்குக் காதல் வந்து தோல்வியானதுக்கு நம்மளை இந்தப் பாடு படுத்துறானே’ எனத் தலையில் அடித்துக் கொண்டது மனசாட்சி.

சிறிது நேரம் அங்கே மழையிலே நின்றவன், என்ன நினைத்தானோ எதுவும் பேசாது வண்டியை நோக்கி நடையிட்டான்.

அவனின் அமைதியே, அவளுக்குப் போதுமானதாக இருக்க சிறிது நேரம் அமைதியாக வந்தவள் அவனைக் காய்ச்சி எடுக்கத் துவங்கினாள்.

“ஏன்டா, தடிமாடு உனக்குக் கண்ணு என்ன பொடனியிலா வச்சிருக்க.? ஒரு பொண்ணு நிக்கிறது கூடத் தெரியாம இப்படி தான் வண்டிய விட்டு ஏத்துவியா” கோபத்தில் கத்தினாள் அவள்.

“நான் ஒன்னும் வண்டியை விட்டு ஏத்தலை, ஜஸ்ட் ஒரு உரசு தான் ‌உரசினேன்.அதுக்காகத் தான் இப்போ உன்னைய வண்டில கூட்டிட்டு போய்ட்டு இருக்கேன்” என்றான் சாலையில் கவனம் வைத்தவாறே.

“இப்போ காட்டுற கவனத்தை அப்பவே காட்டிருக்க வேண்டியது தானே, நானாவது கீழ விழுகாம இருந்திருப்பேன்” எனப் பொறிய,

“பச், கொஞ்சம் அமைதியா வரியா.நானே கடுப்புல இருக்கேன். நீ வேற ஏன் என்னைய டார்ச்சர் பண்ற” என்று கடுகடுத்தான் யாரென்றே தெரியாத அவளிடம்.

“ஏது, நான் உன்ன டார்ச்சர் பண்றேன்னா, நல்ல கதையா இருக்கே. நீயா வந்து என்னைய வண்டிய விட்டு ஏத்தி காயத்தை உண்டு பண்ணிட்டு, இப்படி வேற பேசுவியா” எனக் கண்களில் தீயை நிரப்பிக்கொண்டு பேசினாள்.

‘அய்யோ !’ என்றிருந்தது  வெற்றிமாறனுக்கு.

இவர்களுக்குள் நடக்கும் சம்பாஷனைகளை கண்டு சிரித்துக் கொண்டிருந்தது மனசாட்சி.

“என்ன இளிப்பு உனக்கு.?” கோபமாய் மனசாட்சியை நோக்கிப் பாய,

‘நான் சிரிக்கிறதுல இவனுக்கு என்ன நோவுதாம்’ என நினைத்த மனசாட்சி அவனைப் பார்த்து,

” உன் பக்கத்துல இருக்கிற பொண்ணை கவனி டா. எதுக்கு என்கிட்டயே வந்து நிக்கிற” எனப் பொறுமையாய் சொல்ல,

“யூ ப்ளெடி ராஸ்கல்… உன்னால தான் நான் இப்போ இப்படி இருக்கேன். இதுல நீ என்ன வேலை பாக்குற தெரியுமா” காரி உமிழ,

” பேய்க்குத் தெரியுமா அல்வாவோட வாசனை. உனக்கு எல்லாம் அந்த இரத்த பொரியல் வாசனை தான் புரியும்” எனச் சிடுசிடுத்து மறைந்தது.

அதற்குள் அவனை ஒரு உலுக்கு உலுக்கியதில் சுயநினைவு பெற்றான்.

“இப்போ எதுக்கு இப்படி டச் பண்ணுற.?” எனக் கோபமாய் அவள்மீது பாய,

” ஒரு மொடா குடிகாரனை டச் பண்ணணும்னு ஆசையா எனக்கு. ரொம்ப நேரமா கூப்பிட்டுட்டு இருக்கேன். ஆனா நீ உன்னோட உலகத்துல ட்ராவல்  பண்ணிட்டு இருந்தா எப்படி, அதான் உன்ன டச் பண்ண வேண்டியதா போச்சி” என்றவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

அவள் மொடா குடிகாரன் என்று சொன்னதும், அந்த மனசாட்சியின் மீது கோபம் கொப்பளிக்க, அவன் ஒரு பெரிய மூச்சினை இழுத்து விடுத்து தன்னை சமநிலைக்கு கொண்டு வர முயன்றான்.

அடுத்த ஐந்து நிமிடத்திலே, அவனை நோக்கித் திரும்பியவள்,” பச், நான் எதுக்கு கூப்பிட்டேன்னு கேட்க மாட்டியா.?”

“நான் எதுக்கு உன்கிட்ட கேக்கணும் சொல்லு” எனப் பார்வையை வண்டி ஓட்டுவதிலே வைத்துக் கேட்டான்.

” திமிரு பிடிச்சவன்” என அவள் இதழ்கள் தானாக முணுமுணுத்தது.

அவளைப் பார்த்து முறைத்தவன், எதுவும் பதில் பேசாது வண்டி ஓட்டுவதிலே தன் கவனம் முழுவதையும் செலுத்தினான்.

“பச், எனக்குப் பசிக்குது.உன்கிட்ட இந்தப் பீர் பாட்டிலை தவிர்த்துச் சாப்பிட வேற என்ன இருக்கு.?”

அவளை ஏகத்துக்கும் முறைத்தவன்,” இந்தக் குடிகாரன் கிட்ட குடிக்கிறதை தவிர வேற எதுவும் இல்லை” எனத் தெனாவெட்டாகப் பதில் சொன்னான்.

“பச்” என இதழ் சுளித்து காண்பித்து ஜன்னலோரம் திரும்பிக் கொண்டாள்.

அடுத்த ஐந்து நிமிடத்திலே, “எனக்கு ரொம்ப போர் அடிக்குது, எதாவது பேசுங்களேன்” என அவள் ஆர்வமாகத் திரும்பிட,

“வாய மூடிக்கிட்டு வரதுன்னா வா, இல்லன்னா இப்படியே இறங்கிக்கோ” எனச் சிடுசிடுக்க,

”  உங்க வீட்ல குடிச்சிட்டு வந்து திட்ற மாதிரி என்னைய திட்டாதீங்க. நான் ஒன்னும் உங்க வீட்டுக்காரியோ இல்ல உங்க சொந்தக்காரியோ இல்லை “

” பச், நானே காதல் தோல்வியில குடிச்சிட்டு இருக்கேன். தேவையில்லாம பேசி என்னைக் கடுப்படிக்காத “

” ஹோ ! லவ் ஃபெயிலியர் பார்ட்டியா நீ ?ஏன் உன்னைய அந்தப் பொண்ணு வேணாம்னு சொன்னா, சொல்லு சொல்லு” இமைகள் சிமிட்டி அவள் ஆர்வமாகக் கேட்டிட,

அவள் கேட்டதில்  சட்டென்று வண்டியை நிறுத்தினான் வெற்றிமாறன்.

அதில் அவள் டாஷ்போர்டில் இடித்துக் கொள்ளவும், அவன் காதல் கதையைக் கேட்கும் ஆர்வம் போய் அவனை முறைக்கலானாள்.

“வண்டியை விட்டு இறங்கு” எனக் கோபமாகச் சொல்ல,

“ஹான், நான் எதுக்கு இறங்கணும். நான் இறங்கமாட்டேன்” எனச் சட்டமாக அமர்ந்திருந்தாள் பேதையவள்.

“இப்போ இறங்க போறியா இல்லையா நீ” எனக் கடுகடுத்தான் வெற்றி.

“மாட்டேன்… மாட்டேன் … நான் இறங்க மாட்டேன் “

” ஒழுங்கு மரியாதையா இறங்கிடு “

” ப்ளிஸ் வேணாமே, நான் உங்க காதல் தோல்வி கதை எல்லாம் கேட்கவே மாட்டேன்” எனக் கொஞ்சும் குரலில் கெஞ்ச,

அவளின் கெஞ்சலில் தன் கோபத்தை விடுத்தவன்,” சரி நீ இறங்க வேணாம். இங்கேயே இரு, எனக்குப் பசிக்குது நான் போய்ச் சாப்பிட்டு வரேன்” என்று காரை விட்டு இறங்கி லாக் செய்தான்.

அப்போது தான் சுற்றி இருந்த இடத்தை நோக்கினாள் அவள். அது ஊருக்கு வெளியே கட்டப்பட்டிருந்த ஒரு சிறு உணவகம், அதன் பக்கத்தில் சீடி விற்கும் கடையென ஒரு சில கடைகள் அமைந்திருந்தது.

“மிஸ்டர், இப்படி என்னைய விட்டுட்டு போய் நீங்க மட்டும் சாப்பிட்டா உங்க வயிறு தான் வலிக்கும் பாத்துக்கோங்க” எனச் சிறுபிள்ளையாய் மிரட்டல் விடுத்தாள்.

“பரவால்ல”

“ஹான், அப்படி எப்படி சொல்லலாம் நீங்க.?”

” வாயால தான்”

” நைஸ் காமெடி, பட் இன் ராங் டைம் அண்ட் ராங் சிட்சுவேஷன் “

“ஹாஹாஹா” எனக் காதல் தோல்வியை மறந்து வாய்விட்டுச் சிரித்தான் வெற்றி.

“சிரிக்கும்போது நீங்க அழகா இருக்கீங்க மிஸ்டர்” என்க

கப்சிப் என்று வாயை மூடிக்கொண்டு அவளைத் தவிர்த்து அங்கிருந்த ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்தான்.

“என்ன நம்மள சாப்பிட கூடக் கூப்பிடாம போய்ட்டான். அய்யோ பசிக்குதே, ஒரு பச்ச பிள்ளையை விட்டுட்டு இந்தத் தடியனுக்கு எப்படி தான் சாப்பிட தோணுதோ” என வாய்க்குள் முணுமுணுக்க,

” ஹோ ! நீங்கப் பச்ச பிள்ளை, நான் தடியனா?”

” போனா போகுதுனு சாப்பாடு வாங்கி கொடுக்கலாம்னு நினைச்சா, நீ இப்படி எல்லாம் பேசுற. உனக்குச் சாப்பாடு கட்” என்று திரும்ப,

‘ அய்யோ வட இல்ல இல்ல புவா போச்சே’ என்று அலறியது அவள் மனம்.

” சார்… சார்… சாரி சார்… தடியன் சார் தெரியாம சார் சொல்லிட்டேன் சார்.ப்ளிஸ் சார் கருணை சார் காட்டுங்க சார்… பசிக்குது சார்” என வார்த்தைக்கு வார்த்தை சார் போட்டுப் பேச,

“அடிங்கு”

“சார்…சார் வேணாம் சார்‌. க்ரீன் பேபியை பீட் பண்ற க்ரைம் உங்களுக்கு வேணாமே சார்” எனப் பயந்தவாளாய் சொல்ல,

அதில் மென்னகை புரிந்தவன்,” இந்தா சாப்பிடு” எனக் கொடுக்க,

” இதுக்கு நான் அங்கேயே வந்து சாப்பிட்டுருப்பேனே தடியன் சார், எதுக்கு நீங்க எனக்குச் சர்வேன்ட் வேலை பார்க்கணும்” என்க

“மழையில நனைஞ்சி, உன் ட்ரெஸ் ஈரமா இருக்கு. அதான் உனக்கு ஃபுட் வாங்கி வந்து கொடுத்தேன்” எனச் சாதாரணமாக அவன் சொல்ல,

அவளுக்குத் தான் அதைக் கேட்டுச் சங்கடமாகப் போய் விட, அவனை ஒரு நன்றி பார்வை பார்த்தாள்.

” உங்களை வேணாம்னு சொன்ன அந்தப் பொண்ணு ரொம்பவே அன்லக்கி சார்” என‌ உள்ளார்ந்து அவள் கூற,

அதைக் கேட்டவன் மனமோ, ‘இசை’ என்று கூச்சலிட்டது.

” சீக்கிரமா சாப்பிடு, கிளம்பணும்” என்றவன் கார் பின்னாடி சென்று நின்றவனுக்கு மனம் முழுவதும் அவனின் இசையே நிறைந்திருந்தாள்.

” ஏன்டி, என்னைய வேணாம்னு சொன்ன? இந்த ட்ரிப் உன்கூட சேர்ந்து நான் போக வேண்டியது. ஆனா பாரு இப்போ யாருன்னே தெரியாத ஒரு பொண்ணு கூடப் போய்ட்டு இருக்கேன்” எனப் புலம்பியனுக்கு பின்னாலிலிருந்து குரல் வந்தது.

“இனியா…”

“என்னது…?”

“நீங்கத் தானே யாருன்னு தெரியாத ஒரு பொண்ணு கூடப் போய்ட்டு இருக்கேன்னு சொன்னீங்க. அதான் என்னோட பேரு இனியான்னு சொன்னேன்” என்று அவனைப் பார்த்துக் கண்ணடித்தாள்.

வெற்றி அவளைப் பார்த்து ஏகத்துக்கும் முறைத்து வைக்க, அதனைக் கண்டு கொள்ளாது முன்னே நடந்தாள் இனியா.

” சீக்கிரமா வாங்க சார். உங்க லவ் ஃபெய்லியர் ஸ்டோரியை கேட்டுட்டே ஜாலியா போகலாம்” என அவனைச் சீண்டி விட,

அவளைப் பார்த்து முறைத்தவாறே, வண்டியை எடுத்தான் வெற்றிமாறன்.

Leave a Reply

error: Content is protected !!