⛪️லேவியின் நவி அவள்🛕

IMG_20230201_214732

⛪️லேவியின் நவி அவள்🛕

லேவியின் நவி  4

காதல் என்ற ஒன்று வந்து விட்டால், அது திருமணத்தில் முடிந்தே ஆக வேண்டும்…

உண்மையான காதலர்களின் விருப்பமும் அதுவே…

அதுவே நடக்குமா? என்று குழப்பம் இருப்பின் பல தயக்கங்கள் இருக்கத்தானே செய்யும்…

தயக்கங்கள் அனைத்தும் கலையும் நேரமும் வந்தே தீரும்…

வைஷு வேலையில் சேர்ந்து ஆறு மாதங்கள் ஓடியிருந்தது.

இப்போது வைஷு மற்றும் ஜானின் உறவு இன்னும் மேம்பட்டிருந்தது.

அதிலும் வைஷு, அவள் டி.எல் பத்தி ஜானிடம் புலம்பு புலம்பியே அவனிடம் சகஜமாய் பேச துவங்கி இருந்தாள்.

அவள் வேலையில் சேர்ந்த புதிதில், பாக்யா அவளுக்கு ஒவ்வொன்றாக சொல்லித் தரும் போது, புரிவது போல் இருந்தது. அவள் தனியாய் சென்று பார்க்கும் போது புரியாது மண்டை காய்ந்தது.

தான் படித்ததற்கும் இதற்கும் மலையளவு வித்தியாசம் இருந்ததை உணர்ந்து கொண்டாள் அவள்.

அதிலும் அவள் டி.எல் எதற்கெடுத்தாலும் காச் மூச்சு என்று கத்திக் கொண்டே இருந்தார்.

இப்போது கொஞ்சம் வேலைகள் பிடிப்பட, அதை கண்ணும் கருத்துமாக செய்தாள். ஒரு முக்கிய பிரச்சையை தீர்த்தாள்.

ஆனால் அதை அவள் டி.எல் செய்ததாய் கூறி நல்ல பெயர் வாங்கிக்கொள்ள, இவளுக்கு இதெல்லாம் புரியவில்லை.

இப்பொழுதெல்லாம் மதிய உணவு இவளும் கேப்பிடீரியாவில் வாங்கிக் கொள்கிறாள்.

அவளின் ஹாஸ்டல் உணவை ஜானிற்க்கு கொடுத்து, அவனையும் கஷ்டப்படுத்த விரும்பாமல் எடுத்த முடிவு இது. சில சமயங்களில் அவளுக்கு பிடித்தமான உணவை கேட்டு சமைத்து வந்து கொடுத்தான் ஜான்.

இவளுக்காய் தேடி தேடி தன் அக்காவிடம் கேட்டு செய்வான்.

ஜானிற்கு அவன் அக்கா என்றால் மிகவும் பிடிக்கும். அவனுக்கு அவர் தான் தோழி, வழிகாட்டி அனைத்தும்.

அவரிடம் எதையும் மறைக்க மாட்டான். அப்படிதான் வைஷுவின் மேல் ஏற்பட்ட ஈரப்பை பற்றியும் கூறியது.

தம்பி அவளுக்காய் பார்த்து பார்த்து சமைப்பது, அவளை பற்றி பேசும் போது அவன் குரலில் இருக்கும் உற்சாகம் எல்லாம் தம்பி காதல் நோயில் விழுந்ததை அவருக்கு பறைசற்ற, இருந்தும் அவனாய் கூறும் போது பார்த்துக் கொள்ளலாம் என விட்டுவிட்டார்.

மதிய உணவு வேலையும், மாலை அந்த குளக்கரையில் அதை ரசித்துக்கொண்டே பேசுவது, என அவனுடன் செலவழிக்கும் அந்த நேரங்களை ரசித்தாள்.

ஒரு கம்பெனியின்னுள் எப்படி எல்லாம் பாலிடிக்ஸ் செய்வார்கள். எங்கெல்லாம் அவர்கள் தலையைப் போட்டு உருட்டுவார்கள் என்பன போன்ற தகவல்களை ஜான் அவளுக்கு சொல்லி இருந்தான்.

அவளும் அதற்கேற்றார் போல் நடந்து கொள்ளவே இப்பொழுதெல்லாம்  எவ்விதமான பிரச்சனையும் சந்திக்காமல் போய்க் கொண்டிருந்தது அவளின் வேலை.

அம்மா பாட்டி அடுத்து, அவர்கள் காட்டும் அதே அக்கறையுடன் நடந்துக் கொள்பவனுடன் இருக்கும் நேரங்கள் இனித்தது.

அவர்களின் ஃபேவரிட் ஸ்பாட்டான அந்த குளப் படிக்கட்டில், அவனுடன் பேசிக் கொண்டிருக்கையில், பாக்யா அவளிடம் கூறிய விஷயத்தை அவனிடம் கூறினாள்.

“ஓ! அது தான் மேடம் அன்னைக்கு எனக்கு மார்க் போட்டிங்களா. சரி நான் தேருவனா? மாட்டனா?” என அவன் கேட்கவும் இவள் திருதிருவென முழித்தாள்.

“சரி சரி இப்படி முழிச்சி வைக்காத” என அவன் சிரிக்க,

“சரி நீங்க ஏன் பாக்கி சொன்னா மாதிரி என்கிட்ட மட்டும் நல்ல பேசுறீங்க”, என இவள் பதிலுக்கு வினவ,

இப்போது முழிப்பது இவன் முறையானது.

இவர்கள் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் அவளுக்கு போன் வந்தது. அவள் அன்னை தான் அழைத்திருந்தார்.

“ஐய்! அம்மா”, என இவள்  குதூகலமாய் போனை எடுக்க, அதை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான் ஜான்.

போனில் அவள் அன்னை கூறிய விஷயத்தை கேட்டு, இவளின் முகம் போன போக்கை பார்த்து ஜானிற்க்கு யோசனை ஆனது.

“இப்ப இதெல்லாம் வேணாமேமா”

“இல்லமா நான் தெளிவா தான் இருக்கேன்”.

“சரிமா”, என அவள் போனை வைத்தவுடன்.

“என்னாச்சு”, என ஜான் கேட்க,

“அம்மாவோட ஃப்ரெண்ட் ஒருத்தவங்க அவங்க பையனுக்கு…”, அதற்கு மேல் அவள் கூறவில்லை.

இவனுக்கு புரிந்தது அவளை பெண் கேட்டு இருக்கிறார்கள் என்று.

“அம்மா என்ன சொல்றாங்க?”

“அம்மா என்னை கேக்குறாங்க. நான் இப்ப இதெல்லாம் வேணாம்னு சொன்னேன். ஆனா அம்மா பொறுமையா யோசி அப்படின்னு சொல்றாங்க.”

“என்ன முடிவு எடுக்க போற”, இதைக் கேட்டவனின் குரலில் அன்று வரை இல்லாத ஏதோ ஒரு புது உணர்வு இருந்தது.

அது அவனுக்கே புதிதாய் பட்டது அவளும் அதை கவனித்தாள்.

பின் அங்கே அமைதி மட்டுமே நிலவியது.

கேப்புக்கு நேரமாகவே இருவரும் சென்று கேபில் ஏறி அமர்ந்தனர்.

ஜானின் பார்வை முழுவதும் வைஷுவின் மேல் தான் இருந்தது.

இவளுமே அடிக்கடி அவனை பார்த்துக் கொண்டிருந்தாள். அவனின் பார்வை இவளிடம் ஏதோ ஒன்றே உணர்த்துவது போல் இருக்க இவள் குழம்பினாள்.

நாளையிலிருந்து அவளுக்கு நைட் ஷிப்ட். ஆனால் ஜானிற்கு ஒரு வாரம் கழித்து தான் நைட் ஷிப்ட் வரும்.

***

மறுநாள் மாலை ஆறு மணிக்கு இவளுக்கு ஷிப்ட். எனவே ஐந்து மணிக்கு எல்லாம் இவளுக்கு கேப்.

வேலைக்கு சேர்ந்து ஏழாவது மாதத்தின் தொடக்கத்தில் இருந்தாள். இத்தனை நாட்களில் இதுதான் முதல் முறை அவன் இல்லாத இந்த கேப் பயணம்.

அவளின் கண் அடிக்கடி அந்த டிரைவரின் அருகே இருந்த சீட்டிற்கு சென்று வந்தது. அது காலியாக இருப்பதை பார்க்க மனம் ஏதோ செய்தது.

அவன் இல்லையென்றாலும் அந்த புறம் செல்லும் தன் கண்களை தடுக்க முடியவில்லை அவளால்.

பேசாமல் சீட்டில் சாய்ந்து கண்களை மூடி காதல் ஹெட்செட் மாட்ட, அதில் ஒலித்தது இந்த வரிகள்

🎼உயிர் தோழன் என்பாயா ? வழிப்போக்கன் என்பாயா ?
விடை என்ன சொல்வாய் அன்பே ?
சான்ஜாடும் சூரியனே
சந்திரனை அழவைதாய்
சோகம் ஏன் சொல்வாயா ?
செந்தாழம் பூவுக்குள்
குயிலோன்றை அழவைதால்
என்னாகும் சொல்வாயா ?🎼

ஆபீஸ் சென்று இறங்கவும்  ஏதோ மனம் உந்த அந்த குளத்திற்கு சென்றாள்.

அங்கே இவர்களின் வழக்கமான இடத்தில், ஏதோ யோசனையோடு அமர்ந்திருந்தான் ஜான்.

தனிசையாக அவள் கால்கள் அவன் அருகே சென்றது, அவன் அமர்ந்திருக்கும் படிக்கட்டுக்கு கீழ்ப்படிக்கட்டில் காலை மடக்கி அமர்ந்தாள்.

“இன்னிக்கு மத்தியானம் ஒழுங்கா சாப்பிட்டு இருக்க மாட்டியே. இந்தா சாப்பிடு”, என்று வாங்கி வைத்திருந்த சாண்ட்விச்சையும் மினி பர்கரையும் அவளிடம் நீட்டினான்.

உண்மையாலே பயங்கர பசியில் தான் வந்திருந்தாள் அவள். அவர்கள் ஹாஸ்டலில் இன்று மீள்மேக்கர் குழம்பு.

எந்தெந்த நாட்களுக்கு இந்த இந்த குழம்பு தான் என்று பட்டியல் போட்டு வைத்திருப்பார்கள்.

அவனின் அந்த கரிசனத்தில் கண்ணை கரைத்துக் கொண்டு வந்தது பெண்ணிற்கு… அவன் கொடுத்ததை வாங்கி உண்ண துவங்கினாள்.

அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை அமைதியாக இருந்தவன். “அப்புறம் அம்மாகிட்ட உன் முடிவை சொல்லிட்டியா.”

“சொல்லிட்டேன்”

“என்ன சொன்ன”

“நான் தெளிவா யோசிச்சு எனக்கு என்ன தோணுதோ அதை சொன்னேன்.” என அவனிடம் விளையாட்டாய் கூற,

“ஏப்பா… சரி அவங்க கிட்ட நீ என்ன வேணா சொல்லிட்டு போ. என்கிட்ட தெளிவா சொல்லு உனக்கு என்ன புடிச்சிருக்கா?”

“புரியல”, அவன் என்ன கூற வருகிறான் என்பது புரிந்தாலும், அது இவ்வளவு சீக்கிரம் வரும் என்று நினைக்காதவள் யோசனையோடு சொன்னாள்.

“என்ன கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேட்டேன்” பட்டேன போட்டு உடைத்தான்.

“என்ன…புரிஞ்சுதா பேசுறீங்களா” சொல்லிவிட்டானே என்ற பரபரப்பு உள்ளே இருந்தாலும் அதை வெளியில் காட்டாமல் கேட்டாள்.

“தெளிவா புரிஞ்சுதான் பேசுறேன்”

….

“இங்க பாரு நவி எனக்கு புரியுது நீ யோசிக்கிறது. நமக்குள்ள எவ்வளவோ முரண்பாடு இருக்குதான் நான் இல்லன்னு சொல்லலை. ஆனா நீ இல்லாம இருக்க முடியும் எனக்கு தோணல”

“உன்ன முதல் முதல்ல பார்க்கும்போதே உன் மேல ஒரு ஈர்ப்பு, உன் கூட பழக்க பழக்க அது அதிகமாயிட்டே தான் போச்சு எந்த இடத்தில அது காதலா மாறுச்சுன்னு எனக்கு சொல்ல தெரியல.”

“ஐ லவ் யூ நவி… நான் உன்னை தொந்தரவு பண்ண விரும்பல யோசி…” என சென்று விட்டான்.

அப்பொழுதுதான் பாவை என்னும் சிற்பத்திற்கு உயிர் வர, செல்லும் அவனே பார்த்திருந்தாள்.

அவளுக்கு அவனை பிடிக்கும். ஏன் அவனை ஒர பார்வையில் அடிக்கடி ரசித்திருக்கிறாள். இப்பொழுது அவன் கூறிய விஷயம் கூட, ஏற்கனவே அவன் பார்வை அவளுக்கு உணர்த்தியதுதான்.

இருந்தும் அவனாய் சொல்லவும் இவளுக்கு என்னவென்று புரியாத உணர்வு…

அவள் அம்மாவிடம் இப்பொழுது திருமணம் வேண்டாம் என்று தான் சொல்லியிருந்தாள்…

“அப்போ அவங்க கிட்ட கொஞ்சம் தள்ளி போட சொல்லலாமா?” என்ன அவள் அம்மா கேட்க,

“அந்த சம்பந்தமே வேண்டாம்”, என தேங்காய் உடைத்தால் போல் சொல்லிவிட்டாள்.

திருமணம் என்பது விளையாட்டல்லவே, தங்களுக்குள் இருக்கும் முரண்பாடுகளை நினைத்துப் பார்க்கையில் அது அவளை முள்ளாய் குத்தியது.

இரு விட்டாரும் சம்மதிப்பார்களா? இப்படி பல யோசனையை அவளுள்.

இப்படி அவள் பல யோசனையில் மூழ்கிருந்த நேரம் பாக்யா அவளைக் கண்டு,

“ஷிப்ட்க்கு டைம் ஆயிடுச்சு என்ன இங்கேயே உக்காந்துட்டு இருக்க வா போலாம்”, என அழைக்க, இவளும் தன் யோசனையை பின் தள்ளிவிட்டு அவளுடன் சென்றாள்.

அன்று முழுக்க அவளுக்கு வேலை ஓடவே இல்லை நினைவெல்லாம் ஜான் கூறியதிலேயே இருந்தது.

அதிலும் அவனின் நவி என்ற அழைப்பு அவளுள் புகுந்து அவளை பாடாய்படுத்தியது.

முதலில் அவள் அம்மாவின் ஃபிரெண்டான அவளைப் பெண் கேட்ட அந்த ஆன்ட்டியை தீட்டி தீர்த்தாள். எல்லாம் அவர்களால் தான் இப்படி ஒரு விஷயம் நடக்காமல் இருந்திருந்தால் அவன் இவ்வாறு சொல்லி இருப்பானா என்ற எண்ணம்.

அவள் மனம் இவ்வாறு நினைக்க, அவள் மூளையோ ‘அவன் உன்ன லவ் பண்றான் இன்னைக்கு இல்லனாலும் என்னைக்காவது ஒருநாள் கண்டிப்பாக இத சொல்லித்தான் இருக்கப் போறான் யாரைரோ என்னவோ திட்டி என்ன ஆகப்போகுது?’, என அவளை குட்டியது.

அதுவும் சரிதானே என அவள் மனமும் வழிமொழிந்தது.

இப்படியே அவள் மனதிற்கும் மூளைக்கும் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்க, இவ்ளோ அமைதியை தத்து எடுத்துக்கொண்டு அதை தள்ளி நின்று வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அன்று முழுவதும் அவளுக்கு இதே நிலைதான்.

திருமணம் என்பது இருவர் மட்டும் சம்பந்தப்பட்டதில்லையே. இரு குடும்பங்கள் சம்பந்தப்பட்டது.

இங்கோ இரு குடும்பமும் வெவ்வேறு மதங்களை அனுஷ்டிப்பவர்கள. இந்த திருமணம் நடக்க சாத்தியம் இருக்கின்றதா? இந்த கேள்வி தான் அவளின் மனதையும் மூளையையும் சண்டையிட செய்து கொண்டிருந்தது.

இப்படிருக்கையில் நைட் சிப்ட் ஆரம்பித்த ஐந்தாவது நாள் இரவு கேபில், இவள் தான் இறுதி டிராப். அனைவரும் அவரவர்கள் ஏரியாவில் இறங்கி விட்டார்கள்.

யாரோ ஒருவர் புதிதாய் வந்திருக்க, அவரின் ஏரியா குரோம்பேட்டுக்கு அருகில் இருக்கும் அஸ்தினாபுரத்தில் ஏதோ ஒரு மூலையில் உள்ளே இருந்தது.

கேபில் லேடி ஸ்டாப் இருந்தால், நிச்சயமாக அதற்கு ஒரு செக்யூரிட்டி இருப்பார். அந்த செக்யூரிட்டி, டிரைவர் மற்றும் வைஷு இவர்கள் மூவர் மட்டும் தான் கேபில் இருந்தார்கள்.

டிரைவரோ சென்னைக்கு புதிது அவருக்கு இவர்கள் தான் அவர்கள் வீட்டின் வழியை சொல்ல வேண்டும். இவ்வளவு நேரம் அப்படித்தான் அனைவரும் சொல்லிக் கொண்டு வந்தார்கள்.

டிரைவர் இவளிடம் வழி கேட்க, இவளோ அந்த ஏரியாவை பார்த்து திருதிரு என விழித்துக் கொண்டிருந்தாள்.

அந்த முழியே சொன்னது இவளுக்கு தெரியவில்லை என்று.

அந்த செக்யூரிட்டியோ ஹிந்தி காரர். அவருக்கு இந்த ஏரியாவை பத்தி ஒன்னும் தெரியவில்லை.

பின், அந்த டிரைவர் எப்படியாவது மெயின் ரோடு சென்று விடுவோம். அங்கே சென்று விட்டால், இவளுக்கு வழி தெரியும் என்று சொன்னதால் மெயின் ரோட்டிற்கு செல்ல வழியை பார்த்துக் கொண்டிருந்தார்.

பகல் நேரம் என்றால் ஈஸியாக வழியை கண்டுபிடித்து இருக்கலாம். அதுவோ நல்இரவு இரண்டரை மணி ரோட்டில் யாரும் இல்லை வழி கேட்கவும் ஆள் கிடைக்காமல் சுற்றி சுற்றி வந்தனர்.

ஒரு மணி நேரமாக அந்த ஏரியாவையே சுற்றிக் கொண்டிருந்தார். போனில் இருக்கும் மேப்பில் பார்க்கலாம் என்று வைஷு போனை எடுக்க, அதில் சார்ஜ் போயிருந்தது.

ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரமாக ஏறிய போது, பயம் சூழ்ந்து கண்களில் சிறிதாய் நீர் எட்டிப் பார்க்க துவங்கியது அவளுக்கு.

டிரைவரும் சுற்றி சுற்றி பார்க்க அனைத்து இடமும் முட்டு சந்தாக போனது, இல்லையென்றால் அதனுள் சென்றால் வேறு எங்கோ அழைத்து சென்றது மெயின் ரோட்டை மட்டும் காணவில்லை.

கேபிலிருந்த செக்யூரிட்டி, ஆபீஸ் செக்யூரிட்டி ரூமுக்கு அழைத்தார்.

வைஷுவிடம் கொடுத்து பேச சொல்ல, அவளோ சிறிது நடுங்கும் குரலிலேயே பேசினாள்.

ஏதேனும் ஒரு அடையாளமாவது தெரியும்படி இருக்கிறதா? என்று கேட்க, இவள் இல்லை என்றாள்.

அந்த ஏரியாவிலிருக்கும் யாராவது ஒருவர் இவளுக்கு தெரியுமா? என்று கேட்டு அந்த எம்பிளாயிக்கு கால் பண்ண சொன்னார்கள்.

ஏற்கனவே ஜானிற்க்கு போன் செய்யலாம் என்று யோசித்தாள் தான், ஆனால் அவன் தன் காதலை கூறிய பிறகு இவள் எதுவும் பேசாமலிருந்து இப்பொழுது உதவி என்று மட்டும் அழைக்க, ஒரு மாதிரி இருந்தது இவளுக்கு. எனவே அழைக்காமல் இருந்தாள்.

ஆனால் இவ்வளவு நேரமான பின்பு, இனி அது எல்லாம் பார்ப்பது சரியில்லை என்று செக்யூரிட்டியின் மொபைலிருந்து ஜானனிற்க்கு அழைப்பு விடுத்து இருந்தாள்.

அழைப்பு சென்று கொண்டிருக்க இவள் திக் திக் மனதுடன் காத்திருந்தாள். இரண்டு ரிங்கிலேயே அழைப்பு எடுக்கப்பட,

தூக்கம் நிறைந்த குரலில் “யாரது”, என்றான் தூக்கம் கலைந்த கடுப்புடன்.

“நான்…” என்று அவள் கூறி முடிக்கவில்லை, அதற்குள் அவன் “நவி…” என்றிருந்தான்.

அவளின் பதட்டமான சிறிது அழுகை கலந்த குரல், அவனின் தூக்கத்தை முழுதாய் கலைத்திருந்தது.

“என்னாச்சும்மா ஏதாவது ப்ராப்ளமா”, என அவன் பரிவாய் கேட்கவும்,

இவளுக்கு இன்னும் அழுகை பொத்துக் கொண்டு வந்தது. ஆனால் அருகில் இருவர் இருக்கவும் சற்று அவளை தேற்றிக்கொண்டு விஷயத்தை கூறினாள்.

“சரி சரி ஒண்ணுமில்ல இதுக்கு நீ டென்ஷன் ஆகாத, நீ இருக்க தெரு பேர் ஏதாவது தெரியுதான்னு பாரு”, என அவன் ஆறுதல் கூறி கேட்க,

“ம்…”, என்றவள் சுற்றி முற்றி தெருவின் பெயர் இருக்கிறதா என்று பார்த்தாள்.

டிரைவரும் சிறிது தூரம் வண்டியை ஓட்டிக்கொண்டு செல்ல, ‘பாரதியார் தெரு’ என்ற பெயர் பலகை கண்ணில் பட்டது.

அதைப் பார்த்தவுடன் சிறு நம்பிக்கை வர, அதை அவனிடம் கூறினாள்.

“ஓகே ஒரு நிமிஷம் இரு” என்ன நெட்டில் மேப்பை ஆன் செய்து அவள் இருக்கும் ஏரியாவை பார்த்தான்.

அதன்பின் போனை டிரைவரிடம் ஸ்பீக்கரை போட்டு கொடுக்கச் சொல்ல, இவளும் கொடுத்தாள்.

“அண்ணா ஒன்னும் இல்லன்னா கொஞ்சம் உள்ள தான் இருக்கீங்க. இப்ப அந்த இடத்திலிருந்து ஸ்ட்ரைட்டா வந்துட்டு ரைட் எடுங்க, அப்புறம் இன்னும் கொஞ்சம் நகர்ந்து வாங்க…”,

இவ்வாறு அவன் வழி சொல்லிக் கொண்டிருக்க, அவனின் குரலே இவளுக்கு தெம்பூட்டுவதாக இருக்க, இப்பொழுது சிறிது நிதானித்து வழியை பார்த்துக் கொண்டே வந்தாள்.

ஒரு இடத்தில் இவர்கள் முட்டு சந்து என்று வண்டியை திருப்பி இருந்தனர்.

ஆனால் அங்கே சிறிதாய் ஒரு தெரு இருந்தது. அதை இவர்கள் கவனிக்கவில்லை அதன் வழியே தான் வெளியே வர வேண்டும்.

அவன் கூறினார் போல், அவர் மெயின் ரோட்டுக்கு வந்து விட்டார்.

“மெயின் ரோடு வந்திருச்சு தம்பி.” டிரைவர் போனை வைஷுவிடம் கொடுக்க,

இப்ப வழி தெரியுது தானே வைஷு இல்ல நான் டிரைவர் கிட்ட சொல்லவா.

நவி என்று அழைப்பு இப்பொழுது வைஷுவாக மாறி இருப்பதை கவனித்தவளுக்கு சிறிதாய் ஒரு நெருடல் இருந்தது. அதை பின்னுக்கு தள்ளி, “எனக்கு தெரியுது இனி நானே போயிடுவேன் ரொம்ப தேங்க்ஸ்.” என போனை வைத்தாள்.

ஹாஸ்டலில் இறங்கியவுடன்  அந்த டிரைவர் அண்ணாக்கு மிகவும் நன்றி கூறி,

செக்யூரிட்டிக்கும் நன்றி கூறி, அவர் கொடுத்த செக்யூரிட்டி நோட்டில் தான் பத்திரமாக இறங்கி விட்டதாய் கையெழுத்து போட்டு கொடுத்தாள்.

நைட் ஷிப்ட் என்பதால் நளிரவில் தான் வருவாள் என்று இவள் முன்கூட்டியே சொல்லியிருந்தால், ஹாஸ்டலில் மெயின் கேட்டிற்கு இவளிடம் ஒரு சாவி கொடுத்திருந்தார்கள்.

தன்னிடமிருந்த திறவுகோலில் திறந்து உள்ளே சென்றவள் உள்பக்கமிருந்து பூட்ட நினைக்க, அப்பொழுது தெருவில் ஏதோ நிழலாட எட்டிப் பார்த்தாள்,

அங்கே இவளை பார்த்துக்கொண்டு நின்று இருந்தான் ஜான்.

இவள் பார்க்கவும் அவன் திரும்பி போய் விட்டான். அதைப் பார்த்தவளுக்கு தன் மீது கோபமாய் இருக்கிறானோ என கவலையானது.

விறுவிறுவென்று உள்ளே சென்று சிறிது நேரம் போனை சார்ஜ் போட்டு விட்டாள்.

மொபைளுக்கு உயிர் வந்தவுடன் எடுக்க, அதில் ஜானின் மெசேஜ் வந்திருந்தது.

‘பத்திரமா வந்துட்டியானு பாக்குறதுக்கு தான் வந்தேன். கோபம் எதுவும் இல்ல, நீ டக்குனு கதவை திறந்து வந்துட போறனு தான் திரும்பி வந்துட்டேன்’

‘இந்த நேரத்துல பேசுறத யாரவது பார்த்தா தப்பா நினைக்க வாய்ப்பிருக்கு.’

‘இனிமே மொபைல்ல சார்ஜ் ஃபுல்லா டிரை ஆகுற அளவுக்கு வச்சுக்காத, இந்த மாதிரி சின்ன சின்ன பிரச்சனைக்கல்லாம் தேவ இல்லாம அழுகாத குட் நைட் தூங்கு.’

மேலும் மேலும் அவன் காட்டும் இந்த அக்கறையில் அவள் மனது மெழுகாய் உருகியது.

ஜானின் அந்த மெசேஜ் பார்த்து அவள் மனம் நிம்மதியானது.

அன்று முழுவதும் மனம் ஓயாமல் சிந்தித்தது, இப்பொழுது வழி தெரியாமல் இவ்வளவு நேரம் அலைந்து அழுதது,

என நிம்மதி, அழுத்தம் மற்றும் அலைச்சல், இரவு முழுக்க தூங்காமல் இருந்தது, அனைத்தும் சேர்த்து அவளுக்கு உறக்கத்தை வர வைத்தது.

உறக்கத்திற்கு சென்ற அவளை நித்திராதேவி கனவுலகத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கே கண்ட கனவில் தூக்கி வாரிப் போட எழுந்தாள் வைஷு  ஜானின் நவி.

 

லேவியின் நவி தொடரும்…

error: Content is protected !!