MK 20

eiS8VZ63923-991c9399

MK 20

மயங்கினேன்.!கிறங்கினேன்.!

அத்தியாயம் 20

“தடியன் சார் , உங்க கிட்ட ஒன்னு கேக்கணும்னு நினைசிட்டே இருந்தேன் .அத இப்போ கேக்கலாமா ?”கேட்டபடி அவனது அறைக்குள் நுழைந்தாள் இனியா .

அப்போது தான் வீட்டிற்கு வந்த வெற்றி , ரெப்ரேஷ் ஆகிவரேன் என்று அறைக்குள் வந்திருந்தான் .

” ஒரு நிமிஷம் அப்டி உட்காரு , நான் வந்து நீ என்ன கேட்டாலும் பதில் சொல்றேன்” சொல்லிய வெற்றி குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.

“சரி , நான் வெயிட் பண்றேன் நீங்க ரெப்ரெஷ் ஆகிட்டு வாங்க ” கூறியவள் பீன் பேகில் அமர்ந்து கொண்டாள் .

“இவருக்கு மட்டும் வாங்கி வச்சிருக்காரு பாரு , ஏன் கூட நான் ஒருத்தி இருக்கேனே எனக்கும் ஒன்னு வாங்கி தந்திருந்தா தான் என்னவாம் ” பொருமித்தள்ளினாள் இனியா .

“என்ன ஏதோ சொல்ற மாதிரி இருக்கு “குளியலறைக்குள் இருந்த படி வெற்றி கேட்க ,

” எதும் சொல்லல , சும்மா பாட்டு பாடிட்டு இருந்தேன் ” முகத்தை உர்ரென்று வைத்து கொண்டு சொன்னாள் .

“மிஸ்ஸஸ் .வெற்றிமாறன் , எனக்கு சின்ன வயசுலையே காது குத்திட்டாங்க சரியா ,நீ திரும்ப குத்தவேணாம் “கிண்டலாய் வெற்றி மொழிய ,

” அப்றம் எதுக்கு மிஸ்டர் .இனியா தெரியாத மாதிரி கேக்கனுமாம் “

ஏதும் பதில் பேசாது வெளியே வந்து பார்த்த வெற்றி அவளின் சிறுபிள்ளைத்தனத்தில் மெய்மறந்து அவளை இரசிக்க செய்தான் .

‘அய்யோ ! இத்தனை க்யூடா இருக்காளே , அம்மா சொன்னது சரி தான் போல . இவ கிடைக்கிலன்னா ஏதாவது ஒரு சாதாரண பொண்ணை தான் கல்யாணம் பண்ணிருப்பேன் . அழகுள மட்டும் என் சில் அழகு இல்ல மனசளவுளையும் என் சில் அழகு தான் ‘ அவளது பின்பத்துக்கு சுற்றி போட்டவன் அவளுக்கு தெரியாமல் மெல்லமாக நடந்து மொபைலை எடுத்தவன் அவளை புகைப்படம் எடுத்து வைத்தான் .

அவளோ இது ஏதும் தெரியாது பீன் பேகில் அமர்ந்து விளையாடி கொண்டிருந்தாள் .

பக்கத்தில் இருந்த டேபிளில் மொபைலை வைத்தவன் சாதாரணமாக அப்போது தான் வர மாதிரி வந்தான் வெற்றி.

” ம்ஹூம் ” தொண்டை சரி செய்தபடி வரவும் , இனியா முகத்தை சாதாரணமாக வைத்து கொண்டாள்.

” சொல்லுங்க மிஸஸ். வெற்றிமாறன் ” என்றவன் சுவரோரம்  சாய்ந்து ஒற்றை காலை சுவற்றின் மீது வைத்து மயக்கும் கண்ணனாக சிரிப்போடு அவள் முன் நின்றான்.

” நான் உங்க கிட்ட ஒன்னு கேட்க தான் வந்தேன் “

” அப்போ கேளு சில்..”

” அது என்ன இப்போல்லாம் புதுசா சில்னு சொல்லி கூப்பிடுறீங்க ” எங்கோ பார்த்து அவள் கேட்க ,

” என்னது ? எனக்கு சரியா கேட்கல”

” அது நீங்க‌.. ” என்று சொல்ல தொடங்கியவள் அவனின் மயக்கும் புன்னகையில் மயங்கி தான் போனாள்.

அவனையே மெய்மறந்து பார்த்தவள் , வெற்றி சொடுக்கிடவும் தான் நினைவிற்கே திரும்பினாள்.

” என்ன மேடம் அப்படியே ஸ்டனாகி நிக்குறீங்க ஏதோ சொல்ல வந்துட்டு பேசாம இருந்தா என்ன அர்த்தம் ” புருவம் உயர்த்தி வெற்றி கேட்கவே அவளது இமைகள் இரண்டும் படபடத்தது.

” ஏன் இப்போ..இப்போல்லாம் பு..பு..புதுசா சில்னு கூப்பிடுறீங்க ” அவனது இந்த நெருக்கத்தில் இனியாவுக்கு வார்த்தைகள் தந்தியடிக்க தொடங்கியது.

” ஹோ அதுவா..” என்றவன் எழுந்து எதிர்புறத்திலிருந்த கட்டிலில் அமர்ந்து சொல்லலானான்.

அவனது விலகளில் தான் பெண்ணவளுக்கு மூச்சே விடவே முடிந்தது.

” சில்வண்டுன்னு பேரு வச்ச நேரம் , வண்டு போல் என்னை கொடஞ்சி  எடுத்துட்ட . அதுனால தான் வண்டை தூக்கிட்டு சில்னு வச்சிட்டேன் . அதுவுமில்லாமல் சில்வண்டு பெருசா இருக்கு கூப்பிட சோ ஷார்டாகியாச்சி”

” ம்ம் , அப்போ நானும் உங்களுக்கு நேமிங் சேர்மனி வைப்பேன் “

” வையேன் பார்ப்போம் ” உல்லாசமாக சொன்னான் வெற்றி.

” தடியன் சாரை சுருக்கி தடியனில் முதல் எழுத்தையும் சாரில் இறுதி எழுத்தான ர்யையும் சேர்த்து தரு என்று இன்று முதல் அழைக்கப்படுவீர்கள் மிஸ்டர். இனியா “

” பார்ரா..ம்ம் தரு நைஸ் “

” தேங்க்யூ தேங்க்யூ ” சந்தோஷமாக கூறினாள்.

*************
” இன்னைக்கு என்ன சமைக்கலாம் தரு?”

“சப்பாத்தியும் குருமாவும் செய்யலாம் டா ” என்க

” சரி , அப்போ நான் மாசு பிசையுறேன் . நீங்க காய்கறி நறுக்கி கொடுங்க குருமா வச்சிடலாம் ” என இனியா கூற ,

” டன் செஃப் ” என்ற வெற்றி தேவையான காய்கறிகளை எடுத்து வெட்ட துவங்கினான்.

பின்னர் இருவருமாக சேர்ந்து சமையல் வேலையை முடித்திருந்தனர்.

அன்றைய தினத்திலிருந்தே சமையல் வேலை பெண்ணுக்கு மட்டும் இல்லை என்பதற்கான முதல் படியாக , வெற்றியும் சமையல் கற்றுக்கொள்ள துவங்கினான்.

வாழ்க்கை இருவருக்கும் சரிசமமானது என்பதால் எதிலையும் இருவரும் சேர்ந்தே செய்தனர்‌.

வீட்டை சுத்தம் செய்வதிலிருந்து வீட்டிற்காக பொருட்கள் வாங்குவது வரை எல்லாமே இருவருமாக  சேர்ந்து தான் செய்வது.

” நான் போய் குளிச்சிட்டு வந்தறேன். நீங்க எல்லாத்தையும் கொஞ்ச எடுத்து வச்சறீங்களா . இன்னைக்கு கொஞ்சம் ஆஃபிஸ்ல வேலை அதிகம் ” தலையில் போட்டிருந்த கொண்டையை அவிழ்த்து மீண்டும் கொண்டையை போட்டாள்.

” நான் பார்த்துக்கிறேன். நீ போய் குளிச்சிட்டு வா ” என்று சொல்ல இனியாவும் அவளது அறைக்குள் நுழைந்திருந்தாள்.

அவள் குளித்து முடித்து உடை மாற்றிவிட்டு வரவும் இருவருமாக சேர்ந்து சாப்பிட்டனர்.

அந்த நேரம் பார்த்து பலராமன் அழைத்திருக்க , மொபைலை ஸ்பீக்கரில் போட்டான்.

” சொல்லு பலா கொட்டை என்ன இந்த நேரத்தில?”

” உன்கிட்ட ஒரு ஹாப்பியான விஷயம் சொல்லனும் டா ” என சந்தோஷமாக கூற

” அப்டி என்ன சந்தோஷமான விஷயம் டா மச்சான். இப்டி இரவு நேரத்துல புதுமண தம்பதியை தொந்தரவு பண்ற அளவுக்கு ” என கிண்டலாக சொல்லி இனியாவிடம் கிள்ளு வாங்கினான்.

” அடேங்கப்பா ! நீங்க பிசியா இருக்கீங்களோ .சரி டா பா நீங்க உங்க வேலையை பாருங்க நான் ஃபோனை வைக்குறேன் ” என்றதும் பட்டென்று இனியா ” அச்சோ அவரு ஏதோ விளையாட்டுக்கு சொன்னாரு அண்ணா. நீங்க பேசுங்க ” என்றதும் இருவருமாக சிரிக்க தொடங்கினர்.

“ரெண்டு பேரும் எதுக்கு இப்போ சிரிக்கிறீங்க ” அறியா பிள்ளையாய் இனியா இருவரிடமும் கேட்க

“அப்றம் சிரிக்காம என்ன பண்ணுவாங்க , அவன் போட்டு வாங்க ட்ரை பண்ணான் நீயும் அவனுக்கு ஏற்ப பதில் பேசிட்ட ” விளக்கத்தை கொடுக்க இனியாவிற்கு வெட்கமாய் போய்விட்டது .

“சரி மச்சான் , நீ ஏதோ ஹாப்பி நியூஸ் சொல்லணும்னு சொன்னியே அதை சொல்லு முதல “

“எனக்கும் யாழிக்கும் நிச்சயதார்த்தம் ஆகிருச்சி டா மச்சான் ” சந்தோசமாக சொல்ல ,

“சூப்பர் டா மச்சான் . ஏன் டா என்னை விழாக்கு கூப்பிடல ” கோபமாய் வெற்றி கேட்கவே பதில் சொன்னான் ராமன் .

“இப்டி ஒரு விஷயம் நடக்கும்னு நான் எதிர் பார்க்கவே இல்லை மச்சான் .உனக்கு தான் தெரியுமே எங்களுக்குள்ள இருக்குற பிரச்சனை, அதுனால இப்டி ஒன்னு நடக்கும்னு நான் நினைக்கல டா . ஆனா பெரிய மாமாவும் சின்ன மாமாவும் வீட்டுக்கு வந்து என் பொண்ணை உன் பையனுக்கு கொடுக்கணும்னு ஆசைப்படறேன்னு சொல்லி நிச்சயத்தையும் நடத்திட்டாங்க டா ” விளக்கத்தை நண்பனிடம் சொன்னான் .

“ரொம்ப சந்தோஷம் டா . எங்க உன் யாழி போட்டோ அனுப்பு பாப்போம் ” வெற்றி கேட்க

“அதெல்லாம் நீ கல்யாணத்துக்கு வந்து பார்த்துக்கோ டா . நீயும் வந்திடனும் மா தங்கச்சி ” அன்பு கட்டளை இட ,

“அதெல்லாம் கண்டிப்பா வந்திடுவோம் அண்ணா ” சந்தோஷமாக சொன்னவளுக்கு தெரியவில்லை அவர்கள் கூட்டை கலைக்கவென அவர்கள் கூட்டிலிருந்து கழுகு ஒன்று கிளம்ப இருக்கிறது என்று .

“சரி மா ,நாம இன்னொரு நாளைக்கு பேசலாம் எப்டியும் நான் சென்னைக்கு வருவேன் அப்போ பார்க்கலாம் ” அழைப்பை துண்டித்தான் பலராமன் .

“ஏங்க நான் சொல்லவே மறந்துட்டேங்க ,நாளைக்கு நம்மளை என்னோட பிரெண்ட் அவளோட வீட்டுக்கு விருந்துக்கு கூப்பிட்டிருக்கா ” என்று இனியா சொல்ல ,

“இதை நீ கொஞ்சம் முன்னாடியே சொல்லிருக்கலாம் சில் “

“ஏன் தரு ?”

“நான் நாளைக்கு கௌதமை வீட்டுக்கு லஞ்சுக்கு கூப்பிட்டுருக்கேன் ” நெற்றியை நீவிய படி வெற்றி சொல்ல ,

“அச்சோ ,இப்போ என்னங்க பண்றது ?” கேள்வியாய் கணவனை நோக்கினாள் இனியா .

“ஒன்னும் பண்ண முடியாது . கெளதம் கிட்ட வர வேணாம்னு சொல்லணும் வேற வழி இல்ல “

” பேசாம நாம அவங்க வீட்டுக்கு போறதுக்கு எல்லாரும் வெளிய மீட் பண்ணலாமே ” இனியா யோசனை கூற வெற்றி யோசித்தான் .

“ரொம்ப யோசிக்காதிங்க தரு . நாம வெளியவே மீட் பண்ணலாம் .நான் ரோ கிட்ட பேசுறேன் நீங்களும் கெளதம் அண்ணா கிட்ட பேசுங்க ” சொன்ன படி இருவருக்கும் இருவரும் அழைத்து விவரத்தை சொல்ல , இருவரும் இவர்களது முடிவுக்கு ஒத்துப்போயினர் .

**********

அடுத்தநாள் மதியம்

” தரு சீக்கிரமா வீட்டை க்ளீன் பண்ணுங்க. நமக்கு நேரமாகுது பாருங்க ” துணியை துவைத்தப்படி பாத்ரூமிலிருந்து கத்தினாள் இனியா.

” மிஸஸ். வெற்றி ! கொஞ்சம் பொறுமையா இருங்க வேலை செஞ்சிட்டு தானே இருக்கேன். நீங்க சீக்கிரமா துவைச்சி காய போடுங்க ” வீட்டை துடைத்தவாறே கூறினான்.

” எனக்கு தெரியும் மிஸ்டர். இனியா “

அதற்குள் இனியாவிற்கு அழைப்பு வந்தது.

” ஏங்க கொஞ்ச யாருன்னு பாருங்களேன். ரோவா இருந்தா கிளம்பிட்டு இருக்கோம்னு சொல்லிடுங்க “

” சரி சரி . இரு யாருன்னு பார்க்குறேன் ” என்று அவளது அறைக்குள் சென்று மொபைலை எடுத்து பார்க்க ‘ டார்லிங் அத்தை ‘ என்று வந்தது.

‘ ஹோ ஆத்தாக்கு பேரு டார்லிங் அத்தையா ‘ உள்ளுக்குள் புகைய செய்தது வெற்றிக்கு.

” சொல்லுங்க டார்லிங் அத்தை “

” என்னடா அம்முக்கு கூப்பிட்டா நீ எடுக்கிற ? அவ என்ன பண்றா ஃபோனை கூட எடுக்காம “

” அவகிட்ட புருஷனா வேலை பார்க்கிற மனிசனை வேலை வாங்கிட்டு இருக்கா “

” பார்க்கட்டும் அதைவிட அவளோட புருஷனுக்கு என்ன வேலையாம். வாரம் பூரா எதையோ பேசணும்னு பேசி நேரத்தை போக்க வேண்டியது  ” விஜயா சிக்ஸர் போட , ஆடித்தான் போனான் வெற்றி.

” நீயெல்லாம் ஒரு அம்மாவா , புள்ள பார்க்குற வேலைய போய் இப்டி கிண்டல் பண்ற . அது தான் உன் மருமகளுக்கு சோறு போடுது “

” போடா டேய் ‌! என் அம்மு சம்பாத்தியம் போதும் டா அவளை அவள் தனியா பார்த்துக்க “

” நீயே போதும் மா என் குடும்பத்தை கும்மியடிச்சிடுவ போல. உன் கூட சேர்ந்து தான் அவ கெட்டு போகுறா , முதல உன்கூட பேச விடாம பண்ணனும் ” கடுப்பாக கூறினான் வெற்றி.

” எனக்கு அம்முவோட சந்தோஷம் தான் முக்கியம் மகனே. நீ எப்டியோ போ “

” யாருங்க ஃபோன்ல ரோவா ?” கேட்டபடி இனியா வந்தாள்.

” என்னோட எமன் . இந்தா நீயே பேசு நான் போய் துணி காய போடுறேன் ” என்று வெடுக்கென அவள் கையில் மொபைலை திணித்து விட்டு நகர்ந்தான்.

” என்ன அத்தை உங்க பிள்ளை கோபமா போறாரு ?”

” அவன் கிடக்குறான் ஒரு லூசு. நீங்க கிளம்பிட்டீங்களா மா ?”

” இல்ல அத்த . இப்போ தான் வீட்டு வேலை எல்லாம் முடிஞ்சது இனி தான் கிளம்பனும் ” இனியா சொல்ல ,

” சரி மா அப்போ நீங்க கிளம்புங்க நான் அப்றமா பேசுறேன் ” என்று வைத்துவிட்டார் விஜயசாந்தி.

பின் இருவரும் அவரவரது அறைக்கு சென்று கிளம்பத் தொடங்கினர்.

அரைமணி நேரத்தில் குளித்து கிளம்பி வெளியே வந்த வெற்றி தன்னவளுக்காக காத்திருக்க அவளோ வெளிவருவேணா என்றிருந்தாள்.

‘ இவ இப்போதைக்கு வெளிவர மாட்டா போலயே ‘ கதவை பார்த்து பார்த்து கண்கள் இரண்டும் பூத்து போனது.

” இனியா கொஞ்சம் கதவை திறயேன் ” என கதவை தட்ட

” இருங்க தரு கிளம்பிட்டு இருக்கேன் “

” நீ கதவை திறக்க போறியா இல்லையா.?”

” முடியாது தரு”

“ஏன்?”

” ஏன்னா அது சாத்தவே இல்லை ” சொல்லி கிளுக்கி சிரித்தாள் இனியா.

‘பங்கம் டா வெற்றி உனக்கு ‘ மனசாட்சி வெளிவந்து அவனை கலாய்க்க , அதனை அடித்து துரத்தி விட்டு அறைக்குள் நுழைந்தவன் அவளது அழகில் மெய்மறந்து போனான் வெற்றிமாறன்.

உள்ளே வந்த வெற்றி மனைவியின் அழகை பார்த்து இமைக்க மறந்து போனான்.

அப்படியே மெது நடையாக  நடந்து இனியாவை நெருங்கியவன் , ” நான் உன்கிட்ட ஒன்னு சொல்லனும்னு நினைக்கிறேன் ” வேகவேகமாக கிளம்பிக் கொண்டிருந்தவளை இடைமறித்து சொன்னான்.

” அப்றமா சொல்லுங்களேன். இப்போ நேரமாகுது கிளம்பனும் ” புடவையின் மடிப்பை சரி செய்தபடியே சொன்னாள் இனியா.

” இப்போ நான் சொல்றதை கேட்க போறியா இல்லையா ” வெற்றி சிறுபிள்ளை போல் அடம்பிடிக்க துவங்க ,

” சரி சொல்லுங்க தரு” மார்புக்கு நடுவே கைகளை கட்டியபடி அவனை எதிர்நோக்கி நின்றாள்.

” அதுவந்து..” என அவளை நெருங்கி வர ,

” எதுனாலும் தூரமா இருந்தே சொல்லலாம். எனக்கு காது நல்லாவே கேட்கும் ” இரண்டடி பின்தங்கினாள் இனியா.

” அது நீ…” மேலும் முன்னேற ,

‘ இவருக்கு என்னாச்சி எதுக்கு இப்போ என்னைய நெருங்கி வராரு ‘ நினைத்த மனம்  மன்னவனின் நெருக்கத்தில் வேகமாய் துடித்தது.

“ப்ளிஸ் கிட்ட வராதீங்களேன் ” வார்த்தைகள் வெளிவர மறுத்து காற்றோடு கலந்தது.

” அப்போ தானே நான் சொல்ல வரது கிக்கா இருக்கும் ” அவள் காதில் கிசுகிசுக்க , இனியாவின் உடலெங்கும் ஒரு விதமான சிலிர்ப்பு.

” நீ ரொம்ப…” என்று வெற்றி நிறுத்தி அவளின் கைகளை பிடித்து கொண்டான்.

” நான் ரொம்ப..?” அவளும் கொக்கி போட்டு காட்டி படப்படத்த மனதோடு அவனிடமிருந்து தன் கைகளை உருவ முயன்றாள்.

வெற்றி அவளை நெருங்கி நூலளவு மட்டுமே இடைவெளி விட்டு நின்றவன் அதனை சொல்ல வாயை திறக்கையில் அழைப்பு அழைத்து இருவரது மோனநிலையையும் கலைத்தது.

இருவருமே பட்டென்று விலகிக்கொள்ள , வெற்றி மொபைலை எடுத்து பார்த்தவன் பல்லை நறுநறுத்தபடி வெளியேறினான்.

அவனின் இந்த நெருக்கம் பெண்ணை என்னவோ செய்தது.‌என்ன இருந்தாலும் வெற்றி அவளின் காதல் கண்ணாலன் அல்லவா.

அவளால் இந்த நெருக்கத்தை ஏற்க்கவும் முடியாமல் தடுக்கவும் முடியாமல் இரண்டுக்கும் நடுவில் தவித்துக் கொண்டிருக்கிறாள்.

அடுத்த பத்து நிமிடத்திலே இனியா கிளம்பி வெளியே வர , இருவருமாக  கிளம்பி பீனிக்ஸ் மாலுக்கு சென்றனர்.

இவர்களுக்கு முன்பே கௌதம் வந்து காத்திருக்க , மூவருமாக உள்ளே சென்றனர்.

” உன் ப்ரெண்டுக்கு கால் பண்ணி எங்க இருக்காங்கன்னு கேளு சில்” என்க

அவளும் ரோஷினிக்கு அழைத்து பேசினாள்.

“இதோ வந்துட்டாலாம் தரு “

” ம்ம்..” அதற்குள் கௌதமிற்கு ஃபோன் வர அதை எடுத்து பேசச்சென்றவன் யாரோ ஒருத்தர் மீது மோத பார்த்தான்.

” சாரி ” விலகி செல்ல பார்த்தவனை திட்ட துவங்கினாள் அவன் இடிக்கப் பார்த்திருந்த பெண்.

” மிஸ்டர் ஃபோன் பேசிட்டு போறது தப்பில்லை ஆனா முன்னே யார் வராங்க போறாங்கன்னு பார்க்கணும். அப்படியே தனக்கு மட்டும் தான் இந்த ரோடு சொந்தமாதிரி போக கூடாது “

” சாரிங்க தெரியாம இடிக்க வந்துட்டேன் ” மன்னிப்பை கேட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டான் கௌதம்.

அந்த பெண்ணோ அவனை முறைத்து விட்டு சென்றது.

‘ச்சை யார் முகத்துல முழிச்சேனோ தெரியல ‘ மனதிற்குள் புலம்பியபடி உள்ளே சென்றவளை பின்னாலிருந்து அழைத்தது ஒரு குரல்.

” ரோ “

” ஹே இனியா ! எப்படி இருக்க? “

” நான் நலம் . பாப்புவ கொடு என்கிட்ட நான் வச்சிருக்கேன் “

” பிடி உன் பாப்புவ , இவள கிளப்புறதுக்குள்ள எனக்கு போதும் போதும்னு ஆகிடுச்சி. இரு நான் வாஷ் ரூம் போயிட்டு வந்தறேன் ” சொல்லிட்டு சென்றாள் ரோஷினி.

திரும்பி வந்து பார்த்த ரோஷினிக்கு கோபம் சுளீரென்று வந்தது.

” குழந்தையை கொடு முதல ” வெடுக்கென பாப்புவை கௌதம் கையிலிருந்து வாங்கிக் கொண்டாள்.

” குழந்தையை கடத்துறவனா நீ , அதான் அப்பவே மோதுற மாதிரி வந்தியாக்கும் . பார்க்க டிப்டாப்பா ட்ரெஸ் பண்ணிக்கிட்டு இந்த மாதிரியான வேலையை பார்க்க வேண்டியது” ஏகத்துக்கும் ரோஷினி பேச,

” யாரு இது தங்கச்சி?” பக்கவாட்டாக திரும்பி இனியாவிடம் கேட்க

” ரோ , இது தான் நான் சொன்ன என்னோட அண்ணா “

” அண்ணா இவுங்க தான் பாப்புவோட அம்மா , என்னோட ப்ரெண்ட் ரோஷினி “

” சாரிங்க , நான் குழந்தை கடத்துறவுங்கன்னு நினைச்சிட்டேன் எக்ஸ்ட்ரிமிலி சாரி ” ரோஷினி வருந்தி கூற

” பரவால்லங்க , தெரிஞ்சா பண்ணீங்க “

பின்பு நால்வரும் சாப்பிட்டு விட்டு கிளம்பினர். கிளம்பும் வரையும் பாப்பு கௌதமின் கையில் தான் இருந்தது.

**********

பெங்களூரு

சமையலறைக்குள் ஏதோ வேலை செய்த படி இருந்த சாம்பவியிடம் சென்ற இசை ,” நீங்க என்னை அனுப்பி வைக்கிறதா சொல்லியே ஒரு வாரம் ஆகிடுச்சு. நீங்க என்னை சமாதானம் பண்ண தான் சொன்னீங்களா ?” சாம்பவியை நிற்க வைத்து கேள்வி கேட்டாள் இசை.

” உன்ன மாதிரி உன்னோட பசங்களுக்கு சுதந்திரத்துல எந்த ஒரு பிரச்சனையும் வர கூடாது பாரு. அதான் பார்க்குறேன் “

” என்ன பிரச்சினை ? எனக்கு புரியல கொஞ்சம் புரியுற மாதிரி சொல்லுங்க ” இசை அவர் கூற்று புரியாது வினவினாள்.

” நான் ஓடி போனேன்னு ஒரு காரணத்துக்காக தானே உனக்கான சுதந்திரம் பறிபோச்சி. அந்த மாதிரி உனக்கு பிறக்கப்போகும் குழந்தைக்கு நடக்கக்கூடாது. அதான் கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கேன் ” சாம்பவி சொல்ல , அத்தையை நம்பவா வேண்டாமா என்பது போல் பார்வை பார்த்தாள் இசை.

” உன்னோட பார்வையே சொல்லுது நீ என்னை நம்பலன்னு. ஆனா ஒன்னு சொல்றேன்  உன்னை பாதுக்காப்பா இங்க இருந்து அனுப்ப வேண்டியது என் பொறுப்பு “

” சீக்கிரமா இங்க இருந்து என்னை அனுப்புங்க. எனக்கு என்னோட பேபியை பார்க்கணும் . அவன் ஒரு பிரச்சினையில மாட்டிருக்கான். நான் போனா தான் சரி செய்ய முடியும்” வெற்றிக்கு நடந்திருந்த திருமணத்தை மனதில் வைத்து இசை சொன்னாள்.

” கவலைப்படாத சீக்கிரமாவே உன் காதலன் கிட்ட உன்னை அனுப்பி வைச்சிடுறேன் ” என்றவர் அவரது அறைக்கு சென்றுவிட்டார்.

அறைக்கு வந்தவள் , அவனது புகைப்படத்தை பார்க்க துவங்கினாள்.

இந்த புகைப்படத்தை எடுப்பதற்கு அவள் நிறைய திருட்டு வேலை செய்திருக்கிறாள்.

ஒவ்வொரு புகைப்படங்களும் அவளுக்கு பொக்கிஷங்களே.  அவனது புகைப்படங்கள் மட்டுமே அந்த மொபைலில் இருக்கும்.

எங்கே நண்பர்கள் தனது மொபைலை எடுத்து பார்த்து வெற்றியை இரசித்து விடுவார்களோ என்றெண்ணி அவனுக்காக தனி கோப்புறை வைத்து ஹைட் செய்து வைத்திருக்கிறாள்.

” பேபி உன்ன இப்போவே பார்க்கணும் போல இருக்கு. நான் கால் பண்ணா இப்போ நீ எப்படி ரீயாக்ட் பண்ணுவ ” யோசிக்கும் பாவனை கொடுத்தாள்.

“சந்தோஷத்துல என்னை ஹக் பண்ணிக்குவ தானே .எனக்கு தெரியும் டா பேபி நீ என்னை ரொம்பவே லவ் பண்றன்னு. ஆனா பாரு நம்ம காதலுக்கு கடவுள் சில டெஸ்ட் வச்சிருக்காரு அதனை மட்டும் எளிதாக கடந்துட்டோம்னா நம்ம வாழ்க்கையில பிரிவுனே ஒன்னு இருக்காது பேபி” அத்தனை சந்தோஷமாக மொபைலில் படமாக இருந்த வெற்றியிடம் கூறினாள்.

அடுத்த  வாரத்தில் , சந்தோஷமாக ஊருக்கு செல்வதற்காக துணிகளை எல்லாம் தயார்படுத்தினாள்.

அந்த நேரம் பார்த்து அறைக்குள் நுழைந்த கிரிஜா ,” நினைச்சதை எப்படியோ சாதிச்சுட்ட போலையே ” குத்தலாக சொல்ல

” கண்டிப்பா இல்ல மா. ராம் தான் ஒரு வேலையா என்னை கூப்பிட்டது. அப்பா முன்னாடி தானே அவன் சொல்லி என்னை கூப்பிட்டான் . நீ வந்து நானா ப்ளான்  பண்ணி பண்ண மாதிரி பேசுற ” அன்னையிடம் கடுப்பாக எகிரினாள் .

” நல்லா பேச கத்துக்கிட்ட இசை “

” கத்துக்க வச்சது இங்க இருக்கிறவுங்க தானே மா. நானா எதையும் இங்க செய்யல ” விட்டோத்தியாக பதலிளத்தாள்.

“உனக்காக பார்த்து பார்த்து செஞ்சவருக்கு நீ செய்ற பரிகாரமா இது இசை “

” எதுக்கு பார்த்து பார்த்து செய்யனும் அதுக்கு நான் என் வாழ்க்கையை கடனா கொடுக்கணும் சொல்லுங்க . உங்களோட தேவைக்கு புள்ள பெத்துக்கீட்டீங்க அதுக்காக நான் வாரி வாரி என் வாழ்க்கையை பிச்சு கொடுக்கனுமா ” இடக்காக இசை பேச வாயடித்து போனார் கிரிஜா.

” இளரத்தம் உன்னை பேச வைக்குது. ஒரு நாள் பெத்தவுங்களை நீ புரிஞ்சிப்ப  இசை அன்னைக்கு வருத்தப்படுவ ” வருத்தத்தோடு அறையை விட்டு வெளியேறினார் கிரிஜா.

” கிளம்பிட்டியா யாழி ” கேட்டப்படி வந்தான் பலராமன்.

” எஸ் ராம் ” அத்தனை சந்தோஷம் அவள் முகத்தில்.

” சரி வா ஃப்ளைட்டுக்கு நேரமாகுது போலாம் ” என்று அவள் பையை எடுத்து கொண்டு கீழே வந்தான்.

” அப்போ நாங்க கிளம்புறோம் மாமா “

” சரிங்க மாப்பிள்ளை பத்திரமா போயிட்டு வாங்க ” சுவாமிநாதன் கூற புன்னகைத்தனர் இருவரும்.

இருவரது புன்னகையும் வாசுதேவ் ப்ராசத்திற்கு அத்தனை ஆத்திரத்தை உண்டு பண்ணியது.

அடுத்த ஒரு மணிநேரத்தில் இருவரும் சென்னை வந்து சேர்ந்தனர்.

அதேநேரம் கடந்தவாரம் திருச்சி செல்லாததால் இந்த வாரம் செல்லலாம் என்று முடிவெடுத்து கார் அங்கே இருப்பதால் இவர்கள் இந்த முறை விமானத்தில் போகலாம் என்று வந்திருந்தனர்.

புதுமண தம்பதிக்குறிய நெருக்கம் இல்லையென்றாலும் ஒருவிதமான இணக்கம்  இருக்கத்தான் செய்தது.

” உன்னை எதுக்கு அம்மா சென்னைக்கு கூட்டிட்டு போக சொல்லி சொன்னாங்கன்னு தெரியல. ஆனாலும் உன்னை இங்க கூட்டிட்டு வந்து விட சொன்னாங்க விட்டுட்டேன். நீ உன் வேலையை பாரு எதுவா இருந்தாலும் எனக்கு கூப்பிடு சரியா. வருங்கால புருஷனா இல்லைன்னாலும் ஒரு நண்பனா நான் உனக்கு எந்த உதவினாலும் செய்வேன். ஃபர்ஸ்ட் ஃப்ரெண்ட் நெக்ஸ்ட் தான் ஹஸ்பண்ட் புரியுதா ” சொல்லி விட்டு சென்றவன் அடுத்த பத்தாவது நிமிடத்தில் ‘ யாழினி ‘ என்ற கத்தலோடு அவளை நோக்கி ஓடினான்.

Leave a Reply

error: Content is protected !!