Mogavalai – 7

Mogavalai – 7
அத்தியாயம் – 7
ஆர்த்தியின் மாதங்கள் மசக்கையோடு கழிய, ராகவின் நாட்கள் உற்சாகமாக நகர்ந்தது.
தனது குழந்தையின் வரவை ஆர்வமாக எதிர்பார்த்தான். ஆர்த்தியை உள்ளங்கையில் தாங்கினான் ராகவ்.
‘இதெல்லாம் ரொம்ப அதிகப்படி.’ என்ற எண்ணம் தோன்றினாலும், பார்வதி எதுவும் பேசவில்லை.
மீராவை நன்றாகப் பார்த்துக்கொண்டாலும், வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ராகவ் செய்யும் ஆர்ப்பாட்டம் பார்வதிக்குச் சற்று அதிகப்படியாகவே தெரிந்தது. இருந்தும் அவர் எதையும் வெளிக்காட்டவில்லை. ஆர்த்தியிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை.
‘அவரால் தன் மகளின் மனதில் குழப்பம் ஏற்பட்டு மகளின் வாழ்வில் பிரச்சனை ஏற்பட்டுவிடுமோ?’ என்ற அச்சம் பார்வதியை அமைதி காக்கச் செய்தது.
கவலை அவரை அரித்துக் கொண்டு தான் இருந்தது.
மாதங்கள் சென்றாலும் குழந்தை மீராவின் பேச்சில் எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனால், மீரா தன் தாயின் மேடிட்ட வயிற்றைத் தடவிப் பார்த்துக் குதூகலமாக இருந்தாள்.
ஆர்த்தி சந்தோஷமாக இருந்தாலும், அவள் முகத்தில் ஒரு கவலையின் ரேகை இருக்கத்தான் செய்தது.
‘ஆர்த்தி அவளாகவே சொல்லட்டும்.’ என்ற எண்ணத்தோடு அவளைக் கண்காணித்துக் கொண்டிருந்தான்.
சுமார் எட்டு மாதங்கள் கடந்த நிலையில், கைகளில் வளையல் குலுங்க ஆர்த்தி வேலையில் மூழ்கியிருந்தாள்.
அவள் கைகள் வேலை செய்ததே ஒழிய, அவள் மனம், அவள் எண்ணங்கள் எதுவும் அலுவலக வேலையைச் சுற்றி இல்லை என்று அப்பட்டமாகத் தெரிந்தது.
அவள் பார்த்துக் கொண்டிருந்த கோப்புகளை முடித்துவிட்டு, “சீனியர் மேனேஜர் கிட்ட குடுத்திருங்க.” என்று அங்கிருந்த பணிப்பெண்ணிடம் கூறினாள் ஆர்த்தி.
பணிப்பெண் ராகவின் அறைக்குள் சென்று கொடுக்க, சிறிது நேரத்தில் ஆர்த்திக்கு அழைப்பு வந்தது.
ராகவின் முகத்தில் கோபம் அப்பட்டமாகத் தெரிந்தது. “அவ்வளவு தப்பு இருக்கு ஆர்த்தி.” என்று கோப்புகளைச் சுட்டிக் காட்டியபடி வருத்தத்தோடு அதே நேரம் சலிப்போடும் கூறினான் ராகவ்.
‘இதுவே வேறு யாரோவாக இருந்திருந்தால் இவன் பேச்சு இப்படி இருக்காது.’ என்ற எண்ணம் ஓட, ஆர்த்தி எதுவும் பேசாமல் மௌனித்தாள்.
கோப்புகளை ஒரு பக்கம் தள்ளி விட்டு, “எனக்கு இது முக்கியம் இல்லை ஆர்த்தி. வாட் இஸ் ஈட்டிங் யுவர் பிரைன்? எனக்கு இந்தக் கேள்விக்குப் பதில் தெரிஞ்சாகணும்.” என்று அழுத்தமாகக் கோபமாகக் கேட்டான் ராகவ்.
ராகவின் முதல் கோபம். அவ்வப்பொழுது அவன் நினைத்ததைச் செய்வதுண்டு. ஆனால், சினம் கொண்டதில்லை.
ஆர்த்தி எதிர்பாராத அவனின் இந்த கோபத்தில் தவித்து அவனைப் பரிதவிப்போடுப் பார்த்தாள்.
‘நான் இவளை நல்லா தானே வச்சிருக்கேன்? என்கிட்டே கூட ஏன் அவ மனசில் உள்ளதைப் பகிர்ந்துக்க மாட்டேங்குறா?’ என்ற ஆதங்கத்தோடு, “என்ன பிரச்சனை? எனக்குத் தெரிஞ்சாகணும்.” என்று பிடிவாதத்தோடுக் கேட்டான் ராகவ்.
“மீரா….” என்று ஆர்த்தி தொடங்க, தன் கண்களைச் சுருக்கி அவளை அமைதியாகப் பார்த்தான் ராகவ்.
“மீராவுக்கு இன்னும் பேச்சு வரலை. கொஞ்சம் கூட இம்ப்ரூவ்மென்ட் இல்லை. ஏழு மாசத்துக்கு மேல ஆகுது. சொல்லி எல்லாரையும் ஏன் கஷ்டப்படுத்தணுமுன்னு தான் சொல்லலை.” என்று ஆர்த்தி பொறுமையாகத் தயக்கமாகக் கூறினாள்.
“அப்ப, ஏழு மாசமா நீ கவலையோடு தான் இருக்க?” என்று கூரிய அம்பாக அவன் கேள்வி வந்திறங்கியது.
“ஏழு மாசமில்லை. ஆனா, ரெண்டு மூணு மாசமா…” என்று ஆர்த்தி தன் வாக்கியத்தை முடிக்காமல் தவிக்க, “அறிவில்லை?” என்று தன் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் கர்ஜித்தான் ராகவ்.
அவனின் இந்த திடீர் கோபத்திற்கு, காரணம் புரியாமல் ஆர்த்தி அவனைப் பார்க்க, “நீ மீராவுக்குப் பேச்சு வரலை. பேச்சு வரலைன்னு அதையே யோசிச்சிக்கிட்டு இருந்தா, அது நம்ம குழந்தையைப் பாதிக்காதா?” என்று எழுந்து நின்று கடுங்கோபத்தில் கத்தினான் ராகவ்.
அடைக்கப்பட்ட அறை. வெளியில் இருப்பவர்களுக்கு இவர்கள் பேசுவதைக் கேட்கவோ, பார்க்கவோ வாய்ப்பில்லை. பலமுறை, ராகவ் காதல் சொன்ன அறை. அக்கறையை வெளிப்படுத்திய அதே அறை. இன்று அவன் கோபத்தைக் காட்டிக் கொண்டிருந்தது.
ராகவ் ஆர்த்தியைக் கோபமாகப் பார்க்க, ஆர்த்தி பதில் பேசாமல் அவனை அதிர்ச்சியாகப் பார்த்தாள்.
ஆர்த்தியிடம் பதில் வராமல் போக, “மீரா பத்தின உன் கவலை, நம்ம குழந்தையைப் பாதிக்காதா?” என்று ராகவ் மீண்டும் அதே கேள்வியில் அழுத்தமாக நிற்க, “மீரா யாரு ராகவ்?” என்று ஆர்த்தி அழுத்தமாக, நிதானமாகப் பிடிவாதமாகக் கேட்டாள்.
அந்த ஒரு கேள்வியில் தன் சர்வமும் அடங்கியது போல் ராகவ் அதிர்ச்சியானான்.
‘ஆர்த்தியின் இந்தக் கேள்வி, இந்த சிந்தனை வாழ்க்கையை அழித்துவிடும்.’ என்ற எண்ணம் தோன்ற, ராகவ் எதுவும் பேசவில்லை.
“எனக்கு லீவு வேணும். மனசு சரி இல்லை.” என்று கூறிக்கொண்டு, மேலும் எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பினாள் ஆர்த்தி.
ராகவும் தடுக்கவில்லை.
‘ரொம்ப பேசிட்டோமோ?’ என்ற எண்ணம் தோன்ற ராகவ் அந்த சுழல் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தான்.
ஆர்த்தி அலுவலகத்திலிருந்துக் கிளம்பினாள். ‘எங்க போக? ஆபிசில் இருந்தால், ராகவிடம் பேச்சு வளரும். சண்டை வலுக்கும். கிளம்பியது சரி.’ என்ற எண்ணத்தோடு சாலையில் நடந்தாள் ஆர்த்தி.
‘வீட்டுக்கு போனா, அம்மா கிட்ட எதாவது உளறிருவோம். அப்புறம் அம்மா ராகவைத் திட்டுவாங்க. இதைத் தான் நான் சொன்னேன்னு, எனக்கும் திட்டு விழும்.’ என்று எண்ணம் தோன்ற, மணியைப் பார்த்தாள்.
‘மீராவை ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டு வர்ற நேரம். அம்மா கிட்ட சொல்லிட்டு மீரா ஸ்கூலுக்குப் போவோம்.’ என்ற எண்ணம் தோன்ற தன் தாய்க்கு அலைபேசியில் அழைத்துச் சொல்லிவிட்டு ஒரு ஆட்டோவில் ஏறிப் பள்ளியை நோக்கிச் சென்றாள் ஆர்த்தி.
‘நம்ம குழந்தையைப் பாதிக்காதா?’ ராகவ் கேட்ட கேள்வி அவள் காதில் மீண்டும் மீண்டும் ஒலித்தது.
தன் மேடிட்ட வயிற்றைத் தடவிப் பார்த்தாள் ஆர்த்தி. சென்னை குண்டும் குழியும் நிறைந்த பாதையில் அந்த ஆட்டோ செல்ல, அந்த வயிறும் ஒரு முறை மேலே குலுங்கி கீழே இறங்கியது.
ராகவின் பேச்சும் சேர்ந்தே நினைவு வந்தது. ‘கார்ல போ… ஆட்டோல போகாத…’ என்ற ராகவின் கண்டிப்பான குரல்.
‘வசதியா தான் இருக்கோம். ஆனால், ஒவ்வொரு முறையும் கார்ல போகிற அளவுக்கெல்லாம் இல்லை.’ என்ற ஆர்த்தியின் எண்ணத்தைத் தொடர்ந்து, ‘ராகவ் இந்தக் குழந்தைக்கு அதிகமா முக்கியத்துவம் கொடுக்கிறானோ?’ என்ற சந்தேகமும் முதல் முறையாக தன் மேடிட்ட வயிற்றைப் பார்த்தபடி எழுந்தது.
தன் வயிற்றைத் தடவிக்கொண்டு சாலையைப் பார்த்தாள் ஆர்த்தி.
‘எனக்கு இந்த குழந்தையைப் பிடிக்கும் தான். ஆனால், மீராவும் அப்படித் தானே? ராகவுக்கு அப்படி இருக்காதோ?’ என்ற எண்ணம் தோன்றக் காரணம் தெரியாமல் ஆர்த்தியின் கண்கள் கலங்கியது.
“ச்ச… ச்ச…. அப்படி எல்லாம் இருக்காது. நானே சந்தேகத்தை வளர்த்து, என்னை குழப்பிக்கக் கூடாது.” என்று தனக்குத் தானே சமாதானம் செய்வது போல் சத்தமாக முணுமுணுத்துக் கொண்டு, கண்களைத் துடைத்துக் கொண்டாள் ஆர்த்தி.
பள்ளி வந்துவிட, ஆர்த்தி மீராவை அழைத்துக் கொண்டு வீடு திரும்பினாள்.
பள்ளியிலிருந்து வீடு நடக்கும் தூரம் என்பதால் இருவரும் நடந்து வந்தனர். வழக்கமாகப் பார்வதியுடன், வீடு திரும்பும் மீரா, இன்று தன் தாயைப் பார்த்ததும் குதூகலமாக தன் தாயை அணைத்துக் கொண்டாள்.
தாயிடம் செல்லம் கொஞ்சி, அங்கிருந்த பலூனைக் கை காட்டிக் கேட்டாள் மீரா. ஆர்த்தி மீராவுக்கு பலூன் வாங்கிக் கொடுத்துவிட்டு பணத்தைக் கொடுக்க மறுபக்கம் திரும்பினாள்.
பலூன் பறந்து விட, அதைத் துரத்திக் கொண்டு சாலைக்கு ஓடிவிட்டாள் மீரா.
அப்பொழுது வேகமாக ஓர் இரு சக்கர வாகனம், மீராவை நோக்கி வர, ஆர்த்தியின் படபடப்பு அதிகமாகியது. ஓட முடியாமல், வயிற்றைத் தள்ளிக் கொண்டு, “மீரா…” என்று கத்திக் கொண்டு ஓடினாள் ஆர்த்தி.
அதற்குள் பின்பக்கமாக ஒரு கை லாவகமாக மீராவைத் தூக்கி இருந்தது. தூக்கிய நபரைப் பார்த்த அதிர்ச்சியில் ஆர்த்தியின் கால்கள் பின்னிப் பிணைந்தது.
மீரா செல்வமணியின் கைகளில்!
கனவிலும் நடக்கக் கூடாது என்று ஆர்த்தி நினைத்த காட்சி அவள் கண்முன்னே!
குழந்தைக்கு அடிபடாமல், செல்வமணி குழந்தையைக் கைகளில் தூக்கி இருந்தான். மீராவைக் கைகளில் ஏந்தியபடி அந்த பலூனை எடுத்துக் குழந்தையிடம் கொடுத்தான் செல்வமணி.
‘என்னைக்கும் இல்லாம, இன்னைக்கின்னு பார்த்தா இவனைப் பார்க்கணும்.’ என்று அழுது வடிந்த தன் கோலத்தையும், மீராவையும் எண்ணி நொந்துக் கொண்டாள் ஆர்த்தி.
அதற்குள் அங்குக் கூட்டம் கூடியது. பலர் பல கேள்விகள் கேட்க, செல்வமணி வழக்கம் போல் சங்கோஜத்தோடுப் பேசத் தடுமாறினான்.
ஆனால், அழுது கொண்டிருந்த குழந்தை மீராவை மென்மையாகப் பேசி சமாதானம் செய்தான் செல்வமணி.
“அம்மா எங்க?” என்று செல்வமணி கேட்க, குழந்தை ஆர்த்தியைக் கைகாட்டியது.
தன் கோலம் என அனைத்தும் மறந்து ஆர்த்திக்குப் பயம் தொற்றிக்கொண்டது.
‘குழந்தையைப் பார்த்ததும் மீராவைக் கேட்டிருவானோ?’ என்ற எண்ணம் தோன்ற, ஆர்த்தியின் கைகள் நடுங்கியது.
வேகமாக மறுபக்கம் திரும்பிக்கொண்டு, புடவை முந்தானையால் வெயிலுக்கு மறைப்பது போல், தன் முகத்தை வேகமாக மறைத்துக் கொண்டாள் ஆர்த்தி.
“நீ பேசமாட்டியா?” என்று குழந்தையிடம் கேட்டுக்கொண்டே ஆர்த்தி அருகே வந்தான் செல்வமணி.
செல்வமணியைப் பார்ப்பதைத் தவிர்க்க, படக்கென்று குழந்தையைப் பிடித்துக் கொண்டு வீட்டை நோக்கி வேகமாக நடந்தாள் ஆர்த்தி.
ஆர்த்தி யாரென்று அறியாமல், அவள் செய்கையின் காரணம் புரியாமல் தோள்களைக் குலுக்கிக் கொண்டு, எதிர் பக்கமாக நடக்க ஆரம்பித்தான் செல்வமணி.
ஆர்த்தியின் நிலை கருதி, “குழந்தை பத்திரம்மா…” என்று மென்மையாக அறிவுரை கூறிக்கொண்டு பலர் அவளைக் கடந்து சென்றனர்.
ஆர்த்தி படபடப்பாக உள்ளே நுழைய, அங்கு ராகவ் அமர்ந்திருந்தான்.
‘இவங்க ஏன் சீக்கிரம் வந்தாங்க?’ என்ற எண்ணத்தோடு அவனைப் பார்த்தாள் ஆர்த்தி.
“நீ கிளம்பிட்டியா? அது தான் உனக்கு உடம்பு எப்படி இருக்கோன்னு பார்க்க வந்தேன்.” என்று ராகவ் கூற, எதுவும் பேசாமல் குழந்தையைத் தாயிடம் விட்டுவிட்டு அவர்கள் அறைக்குள் நுழைந்து கொண்டாள் ஆர்த்தி.
“ஆர்த்தி… எதுவும் பிரச்சனையா? ஏன் ஒரு மாதிரி இருக்க?” என்று தன் மனைவியின் முகத்தை நிமிர்த்திக் கேட்டான் ராகவ்.
‘இன்று நடந்ததை சொல்லுவோமா?’ என்ற கேள்வி ஆர்த்தியின் மனதில் எழ, இன்றைய ராகவின் வார்த்தை, இன்றைய அவன் கோபம் ஆர்த்தியின் மனதில் விஸ்வரூபம் எடுக்க ஆர்த்தி தன் முகத்ததைத் திருப்பிக் கொண்டாள்.
‘எதுவும் சொல்ல வேணாம். சொன்னா, ஆட்டோவில் போனியா? மீராவைப் பிடிக்க ஓடுனியா? இப்படி ஆயிரம் கேள்விகள் வரும்.’ என்ற எண்ணத்தோடு மௌனம் காத்தாள் ஆர்த்தி.
“நான் ஆஃபிஸில் பேசினதுக்குத் தான் கோபமா?” என்று ராகவ் கேட்க, ‘இன்று நடந்த எதையும் உளற வேண்டாம்.’ என்று வைராக்கியத்தோடு மௌனமாகப் படுத்துவிட்டாள் ஆர்த்தி.
‘நான் அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்? இப்படி மூஞ்சியைத் தூக்கி வச்சிக்குற அளவுக்கு?’ என்ற எண்ணத்தோடு ராகவும் மௌனமாகப் படுத்துவிட்டான்.
இருவரும் அவர்கள் மனநிலையில் மூழ்க, மீரா பார்வதியோடு பாட்டியின் கதையைக் கேட்டுக்கொண்டு உறங்கிவிட்டாள்.
‘இதுவரைக்கும் எதுவும் சண்டை வந்த மாதிரி தெரியலியே? இன்னைக்கி சண்டையோ?’ என்ற கேள்வியோடு மேலே சுற்றிக் கொண்டிருக்கும் மின்விசிறியைப் பார்த்தபடிப் படுத்திருந்தார் பார்வதி.
பார்வதியின் சந்தேகம் உண்மை என்பது போல், ஆர்த்தி ராகவுக்கு இடையில் முதல் மனசுணக்கம் ஏற்பட்டது.