Thithikkum theechudare – 14

TTS

Thithikkum theechudare – 14

தித்திக்கும் தீச்சுடரே – 14

கடற்கரை இருளில், மீரா தன் மனதை திறந்தாள். முகிலன், எதிர் பக்கம் வேகப்படகின் மீது ஒரு கேமராவும், தன் பாக்கெட்டில் ஒரு காமெராவும் வைத்திருந்தான். அவள் எந்த கோணத்தில் இருந்தாலும் அவளும் அவள் பேசுவதும் பதியப்பட வேண்டும் என்பதில் அவன் தெளிவாக இருந்தான்.

மீரா, அவன் முகத்தைப் பார்க்க விரும்பவில்லை. தன் சோகம் கவ்விய முகத்தை அவள் யாரிடமும் காட்ட விரும்பவில்லை.

“ஹீரோ, நான் காலேஜ் படிக்கும் பொழுது, ஒரு நாள் திரும்பி வீட்டுக்கு வந்தேன். எங்க அம்மா அங்க இல்லை. அம்மா எங்கன்னு கேட்டதுக்கு, என் அம்மா… என் அம்மா…” மேலும் பேச முடியாமல் வார்த்தைகளை விழுங்கினாள்.

“என் அம்மா ஓடிப் போய்ட்டாங்கன்னு… இன்னும் ஏதேதோ சொன்னாங்க” அவள் அழவில்லை. இரும்பாக இந்த வார்த்தைகளைச் சொன்னாள். அவள் வார்த்தைகள் வலியை தேக்கி கொண்டு பாறை போல் விழுந்தது.

“எங்க வீடு முழுக்க ரத்த கறை. நான் போலீசுக்கு போகணுமுன்னு எவ்வளவோ பிடிவாதம் பண்ணியும் அப்பா…” பழைய நினைவுகளில் அவள் ஜெயசாரதியை அப்படித்தான் அழைத்தாள்.

“அப்பா வேண்டாமுன்னு சொல்லிட்டாங்க. அம்மாவை பத்தி ஊரெல்லாம் தப்பா பேசுவாங்கன்னு சொல்லிட்டாங்க. நான் எவ்வளவோ கெஞ்சினேன். ஆனால், நடக்கலை.  என் அம்மா அப்படி கிடையாது. எனக்கு அது தெரியும். ஒருவேளை என் அம்மா, இந்த வாழ்க்கை பிடிக்கலைனு போயிருந்தா கூட என்னை கூட்டிகிட்டு தான் போயிருப்பாங்க”  அவள் குரலில் அத்தனை உறுதி இருந்தது.

“ஆனால், அம்மாவுக்கு பிடிக்காமல் போக அவங்க வாழ்க்கையில் ஒண்ணுமே இல்லை. நான் அம்மாவும் அப்பாவும் சண்டை போட்டு கூட பார்த்ததில்லை. அம்மாவுக்கு என்ன பிரச்சனை. ஏன் போயிருக்கணும்? அப்பா ஏன் அப்படி சொல்லணும்?”  அப்படின்னு எனக்கு ஒரே குழப்பம். அவள் அந்த நினைவுகளில் அப்படியே அங்கிருந்த கல் மீது அமர்ந்தாள்.

அவள் எதுவும் பேசவில்லை.

“மீரா…” அவன் அழைக்க, “ஆ….” அவள் சுயநினைவு பெற்றவளாக  தலையசைத்தாள்.

“என் கேள்விக்கெல்லாம் இரண்டே நாளில் பதில் கிடைச்சுது. மிஸ்டர் ஜெயசாரதி, வள்ளியம்மை கூட வந்தார். அதுவும் என்னை விட இரண்டு, மூணு வயசு சின்ன பையனோட. எனக்கு எல்லாம் புரிஞ்சிது. இப்ப, மிஸ்டர் ஜெயசாரதி வாழ்ந்துகிட்டு இருக்கிறது எங்க அம்மா சொத்தில். அப்ப, அம்மாவை இத்தனை காலம் சொத்துக்காக தான் சகிச்சிட்டு இருந்தாங்களா அப்பான்னு எனக்கு கேள்வி? அம்மாவுக்கு இதெல்லாம் தெரியுமா? இல்லை, தெரியாமலே விரட்டப்பட்டாங்களா?” அவள்  கேள்விகளை நிறுத்தினாள்.

“ஆனால், அம்மா அந்த வீட்டில் சந்தோஷமா தான் இருந்தாங்க. நான் அன்னைக்கு காலையில் காலேஜ் போற வரைக்கும். நான் திரும்பி வரும் பொழுது அம்மா இல்லை.” அவள் குழந்தை போல் உதட்டை பிதுக்கினாள்.

“நான் சும்மா விடலை. வள்ளியம்மை வீட்டுக்கு வந்ததும், நேரா போலீஸ் ஸ்டேஷன் போனேன்.” அவள் விரக்தியாக சிரித்தாள். “எல்லா போலீசும், நான் சொன்ன வார்த்தையை அப்படியே மிஸ்டர் ஜெயசாரதி கிட்ட சொல்லிடுவாங்க. அவர் என்னை அடி வெளுத்திருவார். அந்த ஜெயசாரதி என் அப்பா இல்லை. என் மேல பாசம் காட்டின அப்பா இல்லை. மீராம்மா… மீராம்மா… மீரம்மா… அப்படின்னு என்னை கொஞ்சிய அப்பா இவர் இல்லை. என் அம்மா போகும் பொழுது அந்த மனுஷனும் காணாமல் போய்ட்டார். அதுவரைக்கும் என் மேல் அவர் காட்டின பாசம் எல்லாம் வேஷமா? நான் ஏமாந்துட்டேனா? எனக்கு தெரியலை” அவள் குரலில் ஏமாற்றம் மட்டுமே இருந்தது.

“எத்தனை அடி? எத்தனை மிதி?” அவள் இதழ்கள் ஏளனமாக வளைந்தன. “ஆனால், நானும் விடலை. அறியா வயசு. ஓவ்வொரு போலீஸ் வரும் பொழுதும் நான் கம்பளைண்ட் கொடுப்பேன். இதில் விஷேஷம் என்னன்னா, அந்த போலீசும் மிஸ்டர் ஜெயசாரதியும் நெருக்கமாகறதுக்கு நான் கொடுக்குற கேஸ் காரணமாகிரும். நல்ல போலீஸ் இருக்கலாம். ஆனால், நான் அவங்க யாரையும் இதுவரை சந்திக்கவே இல்லை.” அவள் ஆழமாக மூச்செடுத்தாள்.

“நான் இன்ஜினீரிங் முடிச்சிட்டு ஜர்னலிசம் பண்ணேன். எதுக்கு தெரியுமா? என் அம்மாவை கண்டுபிடிக்க” அவள் கூற, அவன் புருவம் சுருங்கியது.

அவள் அவன் பக்கம் திரும்பினாள். “என்னைப் பார்த்தா உங்களுக்கு லூசு மாதிரி இருக்குல்ல? நான் லூசெலாம் இல்லை. பத்திரிக்கைக்கு வந்தா பலருடைய தொடர்ப்பு கிடைக்கும். என் அம்மாவை கண்டுபிடிக்கலாமில்லை?” அவள் கண்களில் ஆர்வம் மின்ன கேட்டாள்.

“உங்க அம்மா உயிரோட இருக்காங்கன்னு நீ எப்படி நம்புற?” அவன் சந்தேகமாக கேட்டான்.

“என் அம்மா எங்கையோ போய்ட்டாங்கன்னு தானே ஜெயசாரதி சொன்னார். அதுமட்டுமில்லை, எனக்கு தெரிந்த ஆள் மூலம், எங்க அம்மாவை கப்பலில் ஏத்தினத தெரிஞ்சிகிட்டேன். அப்ப, எங்க அம்மா ஏதாவது ஒரு தீவில் தானே இருக்கணும்?” அவள் கேட்க, “எந்த தீவில் தெரியாது. இருக்காங்களா இல்லையான்னு தெரியாது. ஆனால், உங்க அம்மாவை தேடி கண்டுபிடிக்க நீ கிளம்பிட்டீயா?” அவன் குரலில் இப்பொழுது நக்கல் தான் இருந்தது.

“என்னைப் பார்த்தா மத்தவங்களுக்கு எல்லாம் லூசு மாதிரியும் முட்டாள் மாதிரியும் தான் தெரியும். ஆனால், இந்த கடலில் நீங்க எங்கையாவது மாட்டிக்கிட்டா, இந்த கடலில் இருந்து நாம தப்பிக்க முடியாதுன்னு சும்மாவே வா இருப்பீங்க? ஒரு கட்டை கிடைச்சா கூட உங்க உயிரை காப்பாத்திக்க நினைக்க மாட்டீங்க? அந்த கடல் முழுக்க, அந்த கட்டையில் போக முடியாதுன்னு உங்களுக்கு தெரிஞ்சாலும், போய்ட முடியுமுன்னு உங்களுக்கு நம்பிக்கை இருக்குமில்லை? அப்படித்தான் என் அம்மாவை தேடி வந்தேன்.” அவள் பிடிவாதமாக கூற, அவள் நம்பிகையை குலைக்க அவன் விரும்பவில்லை.

“எனக்கு இரண்டு விஷயம் உறுதியா தெரியும். ஒன்னு எங்க அம்மா உயிரோடத்தான் இருக்காங்க. என் உள் மனசு அதை உறுதியா நம்புது. என் அம்மாவின் இந்த நிலைமைக்கு ஜெயசாரதி தான் காரணம்” அவள் ஆணித்தரமாக கூற, “எனக்கு ஜெயசாரதியை பழிவாங்கும் எண்ணம் எல்லாம் இல்லை. எனக்கு என் அம்மா வேணும்.” அவள் தன் நினைவுகளில் மூழ்க, அவன் மௌனமாக நின்றான்.

அவளறியாமல் லாவகமாக தான் பதிவு செய்து கொண்டிருக்கும் காணொளியை அணைத்தான்.

” மிஸ்டர் ஜெயசாரதியின் மகன் எங்க?” அவன் கண்களைச் சுருக்கி கேட்க, “நம்ம நாட்டுக்கு நல்லது பண்ணறேன்னு சொல்லிட்டு தெரியுற பெரும்பாலானவங்களோட பசங்க வெளிநாட்டில் தானே படிப்பாங்க. இவனும் அப்படித்தான். வெளிநாட்டில் படிக்கிறான்” அவள் அசட்டையாக கூறினாள்.

“என் துணையோடு போலீசுக்கு போவோமா?” அவன் பேச்சை மாற்ற, “வேண்டாம்” அவள் மறுப்பாக தலையசைத்தாள். “ஏன்?” அவன் கேட்க, “என் அம்மா பெயரை நாறடிப்பாங்க. வேண்டாமே” அவள் குரல் கெஞ்சியது.

அவன் முன்னே வந்து அவன் கைகளை பிடித்தாள். “என் அம்மாவை கண்டுபிடிக்க, நீங்க எனக்கு உதவி பண்ணுவீங்களா? நான் ஏன் உங்களை நம்புறேன். எப்படி எல்லாத்தையும் உங்க கிட்ட சொல்றேன். அதெல்லாம் எனக்கு தெரியாது. நான் சொன்னதில் பெரிய விஷயம் எல்லாம் இல்லை. ஏற்கனவே அரசல்புரசலா உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும்” அவள் கூற, அவன் எதுவும் பேசவில்லை.

“நீங்க எனக்கு இதை சும்மா பண்ண வேண்டாம். அதுக்கு பதிலா நான் உங்களுக்கு ஜெயசாரதி பண்ண எல்லா ஊழல் பத்தின விவரமும் தரேன். நான் அவங்களுக்கு தெரியாம எல்லாம் சேகரிச்சு வச்சிருக்கேன். ஆதார பூர்வமா எல்லாம் என் கிட்ட இருக்கு. நீங்க அதை பயன்படுத்திக்கோங்க. உங்க அரசியல் வளர்ச்சிக்கு உதவும். என் அம்மா விஷயமா போலீஸ்க்கு போக வேண்டாம். எங்க அம்மாவை அசிங்க படுத்திருவாங்க. நான் நிறைய பார்த்துட்டேன்” அவள் இயல்பாக நடந்ததைக் கூறினாள்.

அவன் எதுவும் பேசவில்லை. அவளும் எதுவும் பேசவில்லை. அங்கு மௌனம் சில நிமிடங்களுக்கு நீடித்தது. அவன் தான் அங்கிருந்த மௌனத்தை கலைத்தான்.

“இந்த தீவுக்கு தனியா ஏன் வந்த? உங்க அம்மா, இந்த ஆளில்லா தீவில் தான் இருக்காங்களா என்ன?” அவன் அவள் மனதை மாற்ற கேலியை கையில் எடுத்துக் கொண்டான்.

அவன் போக்கை புரிந்தவள் போல், அவள் முகத்தில் மென்னகை. “இன்னைக்கு நைட் சாப்பிட்டோமே. தோசை, பீர்க்கங்காய் கிச்சடி. அந்த பீர்க்கங்காய் கிச்சடியில் எங்க அம்மா கைமணம் இல்லை. ஆனால், எங்க அம்மா இப்படி தான் செய்வாங்க. நான் விசாரிச்ச அப்ப, இங்க தான் சமைப்பாங்கன்னு சொன்னாங்க. அது தான் இங்க ஏதாவது துப்பு கிடைக்குதா? இல்லை யாராவது இருக்காங்களான்னு பார்க்க வந்தேன்” அவள் கண்களை உருட்டி உருட்டி கூற,

“நீ என்ன சாப்பாடு ராமியா?” அவன் கேலி செய்ய, “நல்ல சமையல் கூட பண்ணுவேன். எங்க அம்மா சொல்லி கொடுத்திருக்காங்க. நல்லா சாப்பிடவும் செய்வேன். ஏன் நீங்க சாப்பிடாமலா, இப்படி வளர்ந்திருக்கீங்க?” அவள் உதட்டை சுளிக்க, “அது சரி” அவன் தலையசைத்தான்.

“இப்படி தனியா வர்றப்ப, உனக்கு ஏதாவது ஆபத்து வராதா? உனக்கு ஏதாவது ஆகிருச்சுனா?” அவன் கேட்க, “ஒரு சொட்டு கண்ணீர் விட கூட யாரும் கிடையாது. எங்க அம்மாவுக்காது நான் இருக்கேன். எனக்கு அந்த ஒரு ஜீவன் கூட கிடையாது” அவள் தோள்களை குலுக்கி சிரித்தாள்.

“நான் ஒரு சுதந்திர பறவை. எனக்கு பயம் கிடையாது. எனக்கு கவலையும் கிடையாது. என் தேடல் என் அம்மா மட்டும் தான். எனக்கு சிறை என் வீடு தான். ஆனால், அங்கிருந்து தப்பிக்கும் மார்க்கம் எனக்கு தெரியும். அந்த சிறை எல்லாம் எனக்கு ஜுஜுபி” அவள் அந்த பறந்து விரிந்த வானத்தின் கீழ் கைவிரித்து சுதந்திரமாக கூறினாள். 

‘எனக்கென்று யாரும் இல்லை. நான் ஒரு சுதந்திர பறவை’ என்று அவள் வருத்தம் இல்லாமல் கூறினாலும், ‘இல்லை, நான் இருக்கிறேன்.’ என்று அவளை தோளோடு சேர்த்து ஆறுதல் சொல்ல அவன் மனம் துடித்து, அவளுக்காக வருந்தியது.

‘இது காதலும் இல்லை. அன்புமில்லை. இரக்கம்.’ அவன் மூளை எச்சரிக்கை மணி அடிக்க, முகிலன் மௌனித்துக் கொண்டான்.

“சரி, இங்க யாருமில்லை. நாம திரும்ப போகலாம்.” அவள் கூற, “உங்க அம்மாவை தேட நான் கண்டிப்பா உதவி பண்றேன். அவங்க இருக்காங்கன்னு நீ நம்புற. அப்படினா, அவங்களை உன்கிட்ட கொண்டு வர்ற எல்லா முயற்சியும் செய்யறது என் பொறுப்பு. ஆனால், இனி நீ இப்படி தனியா எங்கையும் போக கூடாது.” அவன் அவளிடம் வாக்கு பெறுவது போல் கைகளை நீட்ட, அவன் கைகள் மீது தன் கைகளை வைத்தாள்.

அவன் கரங்கள் மீது கை வைத்தவள் சட்டென்று கரங்களை திருப்பினாள். அவள் கரங்கள் கீழே சென்று அவன் கரங்கள் இப்பொழுது மேலே இருக்க, “நான் சொன்ன இந்த விஷயம்  போலீஸ் கிட்டயோ, வேற எங்கையோ போக கூடாது. எங்க அம்மா பெயருக்கு ஒரு களங்கமும் வரக் கூடாது” அவள் கேட்க, அவன் மௌனித்துக் கொண்டான். அவன் மௌனமே சம்மதம் என்று அவள் எடுத்துக் கொண்டாள்.

இருவரும் வேகப்படகில் ஏற, “என்னை பிடிச்சுக்கோ. கீழ விழுந்திராத” அவன் கூற, அவள் அவன் தோள்களை பிடித்துக் கொண்டாள். அது ஜிவ்வென்று சென்றது. “ஹீரோ…” அவள் அழைக்க, “என்ன?” என்று  என்றான் தன் கவனத்தை படகில் செலுத்தியபடியே.

“எனக்கு இந்த பயணம் பிடிச்சிருக்கு.” அவன் தோள் மீது அவள் முகம் தீண்டாதவாறு வைத்துக் கொண்டு அவள் கூற, அவள் குரலில் ஒரு வித மாறுதலை அவன் உணர்ந்தான். “அதுக்காக இப்படியே போவோமா?” அவன் நக்கலாக கேட்க, அவன் நக்கலை அவள் உணரவில்லை.

“ம்…” என்றாள் அந்த கடல் காற்றை ரசித்தபடி. “ரவுடியா நீ?” அவன் கேட்க, “ஏன்?” என்று வினவினாள் கொஞ்சம் முன்னே சரிந்து அவன் முகத்தை பார்த்தப்படி.

அவன் தன் கையை அவள் கை மீது வைத்து “ஒழுங்கா பிடி மீரா” அழுத்தமாக அவன் கூற, அவன் அவளை அழுத்தமாக பிடித்துக் கொண்டாள். “இன்னும் கொஞ்சம் நேரம் போலாமா?” அவள் ஆர்வமாக கேட்க, அவன் பதில் பேசவில்லை. மாறாக இன்னும் கொஞ்சம் தூரம் படகை செலுத்தினான் அவள் விருப்பதிற்கிணங்கி. அவன் அருகாமையில் அந்த படகின் பயணத்தை அவள் ரசித்தாள்.

அவள் ரசனையை அவன் உள்வாங்கி கொண்டான். அவள் என்ன நினைக்கிறாள் என்று அவனுக்கு தெரியவில்லை. ஆனால், அவன் மனம் அவள் அருகாமையை ரசிக்கிறது என்பதை உணர்ந்து கொண்டான்.

இருவரும் அந்த பங்காளவிற்குள் நுழைய,  அவன் மேலாளர் அவர்களை பார்த்துக் கொண்டிருந்தார்.  மீரா அவள் அறைக்குள் செல்ல, அவன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். அவன் கண்களில் ரசனை. அவன் இதழோரம் புன்னகை.

அவன் மேலாளர் அவன் அருகில் வந்தார். இடமாறியிருந்த ஜெர்கின் அவருக்கு ஏதேதோ உணர்த்த, “சார்…” என்றார் மெதுவாக. “இந்த பொண்ணுக்கு நிறைய ஆபத்து இருக்கு சார். அவங்க வீட்டில் இருந்தா, ஜெயசாரதி பார்த்துப்பார். ஆனால், இங்க இருந்தா பழியை உங்க மேல போட்டு, யார் வேணுமின்னாலும் எதை வேணும்ன்னாலும் செய்யலாமுன்னு நினைக்குறாங்க” அவர் கூற, அவன் ஆமோதிப்பாக தலையசைத்தான்.

“எஸ்… மீரா ஜெயசாரதிக்கு விரைவில் முற்று புள்ளி வைக்கணும்.” அவன் கூற, மேலாளர் அவனை புரியாமல் பார்த்தாலும், ‘இந்த மீராவுக்கு முற்று புள்ளி வைத்தாள் போதும்’ என்று அவர் மனம் நிம்மதி கொண்டது.

இதுவரை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாததை  முகிலனிடம் பகிர்ந்து கொண்டதில், மீரா நிம்மதியாக உறங்கினாள். ஆனால், முகிலனால் உறங்க முடியவில்லை. மீரா பேசியதில் தேவை இல்லாதவற்றை அந்த காணொளியிலிருந்து நீக்கினான். ஜெயசாரதிக்கு எதிராக கிடைத்த ஆதாரம். அவன் மீண்டும் மீண்டும் அந்த காணொளியை பார்த்தான். அவன் உள்ளம் துள்ளாட்டம் போட்டது. ‘ஆனால், மீராவுக்கு செய்வது துரோகம்.’ அவன் மனம் அவனை குற்ற உணர்ச்சிக்கு தள்ளியது. தூக்கம் வராமல் தவித்தான் முகிலன்.

மறுநாள் காலை!

ஜெயசாரதி செய்தித்தாளை பார்த்தார். அவர் நினைத்தது போல் முகிலன் மீராவை பற்றிய செய்தி வரவில்லை. அவர் முகத்தில் கர்வ புன்னகை தோன்றியது.

“தொடை நடுங்கி, ஒத்த ஆக்சிடெண்டுக்கு பின்வாங்கிட்டான். இவனெல்லாம் ஒரு ஆள், ஆயிரம் கொலையை பார்த்தா கூட கிங் மாதிரி நிக்கணும். இவனெல்லாம் ஹீரோ” அவர் முணுமுணுத்தார்.

“வள்ளி, மீரா மத்தியானம் சாப்பிட வீட்டுக்கு வருவா. அவளுக்கு பிடித்ததை செய்ய சொல்லு” கூறிக்கொண்டு ஜெயசாரதி வெளியே கிளம்பினார்.

அதே நேரம்,  தீவில் இருந்த விமான நிலையத்தில். முகிலன் அமைதியாக அமர்ந்திருந்தான்.  அவன் அருகே செய்தித்தாள் இருந்தது. அவன் நினைத்தது போல் செய்தி வரவில்லை. ‘ஜெயசாரதியிடம் மீண்டும் தோல்வி.’ அவன் முகம் கோபத்தில் கடுகடுத்தது.

பற்களை நறநறத்து, தன் கோபத்தை கட்டுப்படுத்தினான். ‘அயோக்கியன், இவனை போல் என்னால் மனுஷங்களை காவு கொடுக்க முடியாது. அஞ்சுவது அஞ்சாது பேதமை.’ அவன் மனம் அவனை அமைதி காக்க செய்தது.

‘நான் நினைத்த நியூஸ் வரலை. ஆனால், உன் லட்சணம் முழுக்க என் கையில் இருக்கு. வீடியோவை வெளிய விட்டேன் நீ காலி. உன் பொண்ணு கொடுத்த வாக்கு மூலம் என் கையில்.’ அவன் சிந்தை வேகமாக சிந்திக்க, “ஹீரோ…” அவன் முன் புன்னகையோடு காபி கோப்பையை நீட்டினாள் மீரா.

‘இவள் மீது நான் அக்கறை செலுத்தி இருக்க கூடாது. இவளுக்கு என் மேல் நம்பிக்கை வந்திருக்க கூடாது.’ அவன் மனம் முரண்பாடாக யோசித்தது.

“என்ன யோசிக்குறீங்க? எதுவும்  தப்பா பண்ண போறீங்களா?” அவள் கேட்க, அவன் திடுக்கிட்டு போனான். “என்ன நீ இப்படி எல்லாம் கேட்குற?” அவன் சமாளிப்பாக கேட்க, “ஸோ சிம்பிள்” என்றாள் அவன் அருகே அமர்ந்தபடி.

“நீங்க தலையை வலப்பக்கமும் இடப்பக்கமும் அசைச்சுகிட்டே யோசனை செஞ்சீங்க. அப்ப, நீங்க யோசிக்குறதை உங்க மனசு வேண்டாமுன்னு சொல்லுதுன்னு தானே அர்த்தம்?” அவள் கேட்க, அவன் அவள் தலையை செல்லமாக தட்டினான்.

“ரவுடி…” அவன் இதழ்கள் அவளை அவள் பேச்சை ரசித்தபடி முணுமுணுத்தது. ‘இவள் ஒரு துருப்பு சீட்டு. அவ வந்த காரியம் முடிஞ்சிருச்சு. பகடை காய்க்கு பாதிப்பு இல்லாம அவ வீட்டுக்கு கொண்டு சேர்க்க வேண்டியது உன் பொறுப்பு.’ அவன் சிந்தை கூற, அவன் சிந்தையை கலைத்தது அந்த அலைபேசியின் ஒலி.

அந்த எண்ணைப் பார்த்ததும் சட்டென்று மீராவிடமிருந்து விலகி சென்று பேசினான். “மீரா கிளம்பியாச்சா?” கம்பீரமாக ஒலித்தது ஜெயசாரதியின் குரல்.  “ம்…” அவன் கூற, “இனி, உனக்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் இருக்க கூடாது. நீ அப்படியே நாலு பாட்டுக்கு டான்ஸ் ஆடினோமா, ரெண்டு சண்டையை போட்டோமா,  நாலு காமெடி பண்ணோமான்னு  உன் வழியை பார்த்துட்டு போய்கிட்டே இருக்கணும்.  ரியல் டைம் ஹீரோ ஆகலும்முனு எல்லாம் நினைக்க கூடாது தம்பி. புரியுதா?” அவர் கூற, அவன் அலைபேசி பேச்சை துண்டித்தான்.

“திமிர்…திமிர் பிடித்தவன். தைரியம் ஒரு சொட்டு கூட கிடையாது” மறுப்பக்கம் ஜெயசாரதி  தன் மீசையை முறுக்கி கொண்டார்.

முகிலன் மௌனமாக மீரா அருகே வந்து அமர்ந்தான். விமானத்திற்கான அழைப்பு வர, இருவரும் விமானதிற்குள் ஏறினர்.

‘விடியோவை வைரல் ஆக்கிவிட்டா என்ன?’ அவனுள் யோசனை பரவியது. அவனைப் பார்த்து நட்போடு, தன் புருவத்தை ஏற்றி இறக்கினாள் மீரா. ‘இந்த நட்புக்கு இன்றோடு முற்றுப்புள்ளி.’ அவன் மனம் வலித்தது. தன் நெஞ்சை நீவிக்கொண்டான்.

“ஹீரோ, உங்களுக்கு நெஞ்சு வலி கொடுக்குற அளவுக்கு நான் நடந்துக்குறேனா? நெஞ்சை எல்லாம் பிடிக்கறீங்க? எனக்கு முதலுதவி எல்லாம் செய்ய தெரியாது” அவள் படபடக்க, அவன் சிரித்துக் கொண்டான்.

அவன் எதுவும் பேசவில்லை. “நீங்க என்னை திரும்ப கூட்டிகிட்டு வர மாடீங்க தானே?” அவள் கேட்க, அவன் அவளை அதிர்ச்சியாக பார்த்தான். “என்ன அப்படி பார்க்கறீங்க?” அவள் கேட்க, “நீ ஏன் அப்படி கேட்குற?” அவன் அவளை கூர்மையாக பார்த்தபடி கேட்டான்.

“ஹீரோ ரொம்ப அமைதியா இருக்கிற மாதிரி இருக்கு. அது தான் என்னை நைசா எங்க வீட்டுக்கு அனுப்பறீங்களோன்னு தோணுது. எங்க வீட்டிலிருந்து திரும்ப உங்க கூட வர்றது கொஞ்சம் கஷ்டம் தான். ஆனால், வந்துருவேன். உங்க கூட கண்டிப்பா வந்துருவேன்” அவள் கூற, அவன் சிந்தை செயலிழந்தது.

அவன் மனம் மட்டுமே விழித்துக்கொண்டு நின்றது. அவன் விழிகள் அவள் விழிகளை ஆழமாக பார்த்தது.  அவளின் துறுதுறு கண்கள் அவனை இம்சித்தது. அவள் இதழ்கள் அவனிடம் வேறு எதுவோ கேட்பது போல் இருக்க, அவன் தன் விழிகளை மீண்டும் அவள் விழிகளின் பக்கம் நகர்த்தினான்.

அவன் முகத்தில் இத்தனை நேரம் இருந்த வெறுப்பு அத்தனையும் மறைந்து போனது.  “உனக்கு என் கூட இருக்க பிடிச்சிருக்கா?” அவன் கேட்க, “ப்ளீஸ் ஹவ் யுவர் சீட் பெல்ட்ஸ் ஆன்” என்ற குரலில் இருவரும் சீட் பெல்ட் அணிந்தனர். 

“உங்க கூட இருக்க பிடிச்சிருக்கான்னா? இப்படியா?” அவர்கள் அருகாமையில் அமர்ந்திருப்பதை காட்டியபடி அவள் கேட்டாள்.  அவளுக்கு எதுவோ புரிவது போல் தான் இருந்தது. ஆனால்,எதையும் யூகித்து கொள்ள அவள் விரும்பவில்லை. அவன் சிந்தை இந்த சில வினாடி தாமதத்தில் விழித்துக் கொண்டது.

‘நான் என்ன கேட்டிருக்கேன்.’ தான் கேட்டதை நினைத்து அவன் தன்னை நொந்து கொள்ள, ‘இந்த வீடியோ வெளிய போனா, மீராவுக்கு அவங்க வீட்டில் என்ன ஆகும்?’ அவன் சிந்தையும் இப்பொழுது விழித்துக் கொண்டுஅவளுக்காக சிந்திக்க ஆரம்பித்தது. ‘மீராவுக்கு பாதுகாப்பு வேணுமே. நான் கேட்டது சரிதான்.’ அவன் சிந்தையும் ஒரு சேர நினைக்க, அவளுக்கு சிக்கலை தீர்க்க வழி கண்டுபிடிக்க, தன்னையும் அதே சிக்கலில் சிக்க வைத்தான்.

“என்ன ஹீரோ, அமைதியா இருக்கீங்க?” அவன் கேட்க, “நாம கல்யாணம் பண்ணிப்போமா?” அவன் அவள் முகம் பார்த்து நேரடியாக கேட்டான்.

இப்பொழுது அவள் மௌனமாக இருக்க, அவன் புருவம் உயர்த்தினான். “இல்லை, நீங்க மைண்ட் வாய்ஸ்ன்னு நினைச்சி சத்தமா பேசறீங்களா?” அவள் தன் இமைகளை அசைக்காமல் கேட்க, அவன் இப்பொழுது சிரித்தான்.

“அப்ப, என் மைண்ட் வாய்ஸ் உனக்கு ஓகேவா?” அவன் கேட்க, “எனக்கு தெரியலை” அவள் தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.

சட்டென்று திரும்பி, “நீங்க என்னை லவ் பண்ணறீங்களா?” அவள் சந்தேகமாக கேட்க,   அவன் மறுப்பாக தலையசைத்தான்.  “நீ என் கூட இருந்தால் நல்லாருக்குமுன்னு நினைக்குறேன்.” அவன் கூற, அவள் எதுவும் பேசவில்லை. அவளிடம் மௌனம் மௌனம் மௌனம் மட்டுமே!

தித்திப்புகள் தொடரும்…

Please use the coupon code DISC20 for 20%discounts on all products Dismiss

error: Content is protected !!