Vaanavil – 2

3b2b729068070f100f7913f29cbfa6b1-9c3ee50e

Vaanavil – 2

அத்தியாயம் – 2

தன் அம்மாவிடம் பேசி குழலியின் தாயான செல்விக்கு சின்ன சின்ன உதவிகள் செய்தாள். அவர்களின் நட்பு ஒருபடி வளர்ந்து இரண்டு குடும்பமும் நன்றாக நட்புடன் வளர்ந்தது. மகிழ்வதனி – கார்குழலி இருவரும் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் வாங்குவதோடு நிற்காமல் பள்ளிகூடத்தில் வைக்கப்படும் போட்டிகளில் ஆர்வமாகக் கலந்து கொண்டனர்.

கார்குழலிக்கு விளையாட்டில் ஆர்வமில்லை என்றபோதும் தோழிக்காகப் போட்டிகளில் கலந்து கொண்டாள்.  இப்படி நாட்கள் விரைந்திட திடீரென்று ஒரு நாள் எதிர்ப்பாராத விதமாக, மாரடைப்பு காரணமாக செல்வி இறந்தார். அத்தோடு அவளின் படிப்பு பத்தாம் வகுப்புடன் தடைபட்டுவிட குடும்ப பாரம் முழுக்க அவளின் தலையில் விழுந்தது.

கார்குழலியின் சொந்த ஊரான குற்றாலத்தில் தாயின் பெயரில் இருக்கும் விவசாய நிலத்தைப் பராமரிக்க அவள் தென்காசியிலிருந்து கிளம்பினாள் தன் தம்பி தங்கைகளுடன். அவளுக்கு உதவ நினைத்த மகிழ்வதனி, தன் பெற்றோரின் வேலையை மாற்றல் வாங்கிக்கொண்டு மீண்டும் குற்றாலத்திற்கு வந்து சேர்ந்தாள்.

செல்வியின் பெயரில் இருந்த ஒரு வீடும், ஒரு ஏக்கர் நிலமும் கார்குழலியின் வாழ்க்கைக்கு ஆதாரமாக மாறிப்போனது. மனோகரன் கார்டியன் என்று கையெழுத்து போட்டு, கார்குழலியின் தம்பி மற்றும் தங்கைகளைப் பள்ளியில் சேர்த்துவிட்டார்.

அவர் அடுத்த தெருவில் ஒரு வீட்டில் குடியேற மகிழ்வதனியை அங்கிருந்த பள்ளியில் மேல் படிப்பிற்கு சேர்க்க, “அப்பா குழலியையும் பள்ளிக்கூடத்துல செத்து விடுறீயளா” மகள் கொஞ்சலாகக் கேட்க மனோகரன் அவளின் பேச்சிற்கு செவி சாய்த்தார்.

மறுநாள் மூவரும் கார்குழலியின் வீட்டிற்கு சென்றனர்.

பசுமை சற்றும் குறையாத வயக்காடும், அத்தோடு வீடும் சேர்ந்து அமைந்திருந்தது. அந்த அமைதியான சூழல் மனதிற்கு இதமாக இருக்க வீட்டிற்கு நிழல் கொடுத்தது வாசலில் இருந்த வேப்பமரம்.

“குழலி” என்ற அழைப்புடன் மூவரும் வீட்டினுள் நுழைய சத்தம்கேட்டு ஓடி வந்தான் சரவணன்..

“வாங்கம்மா.. வாங்கப்பா..” வரவேற்று பனையோலை பாயை எடுத்து விரித்துவிட்டு மனோகரன் அமர மர நாற்காலியை எடுத்து போட்டான்.

அங்கே அமர்ந்திருந்த அனிதாவிடம், “நீ பொறவாசலுக்கு போயி அக்காவ வர சொல்லுலே..” என்றான் பொறுப்பான பிள்ளையாக.

“நான் போயி நீர்மோரு எடுத்து வந்துடுதேன்” என கூறி சிட்டாய் பறந்தாள் சின்னவள் காயத்ரி.

அண்ணன் சொன்னது தான் தாமதம் காலில் சக்கரம் கட்டியது போல ஓடிய அனிதா, “அக்கா உன்னைய பாக்க வதனிக்காவோட வூட்டில் இருந்து வந்திருக்கவ..” என சத்தமாக குரல்கேட்டு வேகமாக கையை அலம்பிவிட்டு தங்கையின் பின்னோடு வேகமாக வீட்டினுள் நுழைந்தாள்.

காயத்ரி ஓடிச்சென்று வந்திருந்த மூவருக்கும் மோர் எடுத்து வந்து கொடுக்க, “படிப்புபெல்லாம் எப்படி கண்ணு போவுது” சரவணனிடம் விசாரித்தார் மனோகரன்.

“அதெல்லாம் நல்ல போவுதுங்க” என்றான் மரியாதையோடு.

அதற்குள் வேகமாக வந்த குழலி, “நீங்க எதுக்கு இவ்வளவு தூரம் வந்தீயா? ஒரு வார்த்தை சொல்லி அனுப்பியிருந்தா நானே வந்திடுப்பேன்ல” சிரித்த முகமாய் வதனியின் அருகில் வந்து அமர்ந்தாள்.

அதுவரை அமைதியாக இருந்த பரிமளா, “உங்க வூடு அம்பது மையிலுக்கு அந்தாண்ட இருக்கிறாப்புல பேச்ச பாரு.. ஒரு தெரு தள்ளி இருக்கிறவலுக்கு சேதி சொல்லி வுடணுமாக்கும்” நொடித்துக் கொள்ள  வதனி மட்டும் அமைதியாக குழலியின் முகம்  பார்த்தாள்.

“என்னலே வேலை அதிகமோ? முதல்லே இந்த நீர் மோரை கொஞ்சம் குடிவ” வதனி கையில் டம்ளாரை திணிக்க மறுப்பின்றி வாங்கி குடித்தாள்

பரிமளா தன் கணவனிடம், ‘பேசுங்க’ என்றார் விழிஜாடையில்.

இருவரின் முகத்தையும் கண்ட கார்குழலி, “என்னவோ என்கிட்டே கேட்க கேக்கத் தயங்கறாப்புல இருக்குதும்மா” என்றாள்.

“உன்னைய படிக்க வைக்க நினக்குதுதோம்மா. நீயும் வதனியோட பள்ளிக்கூடம் போவுதியா?” எந்தவிதமான எதிர்பார்ப்பும் இன்றி மனோகரன் கேட்க மெளனமாக மூவரையும் ஏறிட்டாள் கார்குழலி.

ஒரு தோழி என்ற நிலையைத் தாண்டி வதனி செய்த உதவுகளும், மகளின்  சொல்லுக்கும் மறுப்பேச்சு பேசாமல் உதவி செய்யும் அவளின் பெற்றோரையும் பார்த்து அவளின் நெஞ்சு விம்மியது.

பெண் என்றாலே பாரம் என்று நினைக்கும் இந்தக் காலத்தில் அவர்கள் செய்த உதவியை அவளால் மறக்கவே முடியாது. இப்போது அவளைப் படிக்க வைக்கிறேன் என்று சொல்லும் அவர்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன்?

“வேணாம் அப்பா. நானும் படிக்க போயிட்ட பொறவு தம்பி, தங்கச்சிகளோட படிப்பு? அதெல்லாம் சரிபட்டு வராது அப்பா. நான் இனி இவியலுக்காக வாழலாம்னு இருக்கேன்” நிதர்சனம் புரிந்து அவள் பதில் கொடுத்தாள்.

கணவனும், மனைவியும் ஒருவரையொருவர் பார்த்துகொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் மகளைப் பார்க்க, “அது சரிபடாதுன்னு சொல்லுதியா? அப்போ நீ டுடேரியல் போய் படிக்குதியா? படிப்பு இல்லாமல் யாரும் நம்ம மதிக்கமாட்டாங்கடி! அதுதான் சொல்லுதேன் குழலி” என்றாள் தோழியின் கரம்பிடித்து.

“ஏட்டி உன்ன படிக்க வச்ச நீ நல்லாப் படிவ.. இரண்டு காளை மாடும், ஒரு கறவை மாடு, நாலு ஆடுக்குட்டி, ஒரு ஏக்கர் நிலம் இதுக போதும். நான் எம்புட்டு சீக்கிரமா மேலே வாரேன்னு பாருலே” என்றாள் தோழிக்கு தைரியமூட்டும் வகையில்.

அவளின் இந்த உறுதியை கண்டு, “இங்கன வா கண்ணு” பரிமளா குழலியை அழைத்தார்.

அவள் அருகே சென்றவுடன் அவளின் நெற்றியில் இதழ் பதித்து, “வயசுல சின்னவளா இருந்தாலும் உம் பேச்சு மனசுக்கு நிறைவா இருக்கு. உமக்கு எந்த நேரத்தில் என்ன உதவி தேவைப்பட்டாலும் கேளுவ. நாங்க இருக்கோம்”தன்னருகே அமர்ந்திருந்த மகளையும் இழுத்து அணைத்துக் கொண்டார்.

அப்புறம் சிறிதுநேரம் பேசிவிட்டு அவர்கள் கிளம்ப மகிழ் மட்டும் ஓடிவது, “நாளையிலிருந்து நான் ஸ்கூல் போவுதேன் குழலி. உன்னய ரொம்ப மிஸ் பண்ணுவேன்ல. சாயங்காலம் ஸ்கூல் விட்டதும் நேரா இங்கனதான்  வருவேன்” தோழியின் கன்னத்தில் முத்தமிட்டு அங்கிருந்து கிளம்பினாள்.

அவர்களை அனுப்பிவிட்டு  வீட்டிற்குள் நுழைந்த கார்குழலி தன் தம்பி  தங்கைகளிடம், “நம்ம மேல நல்ல மதிப்பும் மரியாதையும் வச்சிருக்காவ மனோப்பாவும், பரிமளா அம்மாவும். அவுக நம்பிக்கையைக் கடைசிவரை காப்பாத்தணும்லே” என்றவள் பின் வாசலின் வழியாக கொள்ளை புறத்திற்கு சென்றாள்.

அந்த இடத்தில் ஒருபுறம் மாட்டு தொழுவம் இருக்க இன்னொரு  புறம் கிணறும் இருக்க நடுவே கொஞ்ச இடம் மட்டும் மீதியாக இருப்பதை கவனித்துவிட்டு அந்தபக்கம் போன செல்லதாயைப் பார்த்தும், “அக்கா” என்று அழைத்தாள்.

அவள் அழைத்த பெண்மணி நின்று, “ஏட்டி இப்போ எதுக்கு என்ன காரணமே இல்லாம கூப்பிடுத” சலித்துக் கொள்ள,

“அக்கா நம்ம பெரிய ஐயா வூட்டுல தோட்டத்தில் நட இரண்டு  வாழக்கன்னு கேட்ட கொடுப்பாகளா” என்றாள் சந்தேகமாகவே.

“நீயே நேரில் போயி கேட்டுப்பாருலே.. கொடுப்பாகன்னு தான் நினைக்கிதேன்..” சிந்தனையுடன் மீண்டும் வீட்டிற்குள் நுழைந்தாள். தன் தாய் இறக்கும்போது சேர்த்து வைத்த பணம் பத்தாயிரத்தில் ஒரு இரண்டாயிரம் ரூபாயை எடுத்துகொண்டு கிளம்பினாள்.

அந்த ஊரின் பெரிய மிராசுதாரர் என்றவுடன் முதலில் ஞாபகத்திற்கு வருவது தர்மசீலனின் முகம் தான். அவர் பெயர் போலவே தர்மம் செய்யும் குணம் உடையவர்.

அவரின் வீடு நாலாபுறமும் வயல்வெளிக்கு நடுவே தன் வீட்டைக் கம்பீரத்துடன் அமைத்திருக்க வீட்டின் கேட் அருகே இரண்டு தென்னங்கன்று விண்ணை தொட்டு கொண்டிருந்தது.

மெல்ல கேட்டிற்குள் நுழைந்த அங்கே வேலை செய்த பெண்மணியிடம், “அய்யா வூட்டுல இருக்காகளா” என்று தயக்கத்துடன் கேட்க அவளின் குரல்கேட்டு சமையலறையிலிருந்து எட்டிப்பார்த்தார் செண்பகம். தர்மசீலனின் மனைவி.

“ராசாத்தி யாருலே அது” விரைந்து வாசலுக்கு வந்தவரைக் கண்டு மதிப்பும், மரியாதையும் தானாகவே வந்தது.பட்டுப்புடவையை பின் கொசுவம் வைத்து நேர்த்தியாக கட்டியிருந்தவர் கொண்டையிட்டு முகத்திற்கு மஞ்சள் பூசி மங்களகரமாக நடந்து வந்தார்.

“அம்மா எனக்கு இருபது தென்னங்கன்னும், பத்து வாழக்கன்னும் வேணும்” என்றபடி அவரை எதிர்கொண்டாள் கார்குழலி.

சட்டென்று அவளின் அருகே வந்தவர், “எட்டி இந்த வயசுல விவசாயம் பண்ண போவுதியா? உனக்கு வைராக்கியம் ஜாஸ்தி பிள்ள” அவளை வாசலில் நிற்க வைத்துவிட்டு, “பூரணி” என்று வீட்டிற்குள் குரல் கொடுத்தார்.

தர்மசீலன் – செண்பகத்தின் ஒரே  மகனான குணசீலனின் மனைவி பூரணி. அடுத்த நிமிஷம் அவர் வாசலுக்கு வந்து தன் அத்தையிடம், “என்னங்கத்தை” என்று பணிவுடன் கேட்டாள். 

“நம்ம செல்வியோட மகளுக்கு இருபது வாழக்கன்னும், இருபது தென்னங்கன்னும் ராசப்பன் கிட்ட கொடுத்து விடு.. அப்படியே புள்ளக்கு குடிக்க நீர்மோரும் ஒருபடி நெல்லே எடுத்துட்டு வாத்தா”என்றார்.

சரியென்று தலையசைத்துவிட்டு வீட்டின் உள்ளே செல்ல கார்குழலியை இழுத்து திண்ணையில் அமர வைத்தவர், “தம்பி, தங்கைக என்ன செய்யறாவ?” என்றார் செண்பகம்.

“மூணு பேருமே பக்கத்து பள்ளிகூடத்தில படிக்கிறவ” என்றாள்.

“எம் மருமகளுக்கு நல்ல கைராசிக்காரக் கண்ணு. அவ கையாள நீ விதை வாங்கி விளைச்சல் பண்ணின நீ நல்ல நிலைக்கு சீக்கிரமே வந்திருவலே” என்றவர் பாசத்துடன் கார்குழலியின் முகத்தை வருடினார்.

சிறிது நேரத்தில் அத்தை சொன்னதை எல்லாம் வேலைகாரர்களிடம் கொடுத்து அனுப்பிவிட்டு விதை நெல்லுடன் வந்த பூரணி, “இங்கன வா கண்ணு” என்று விதை நெல்லைக் கொடுத்தனர்.

அவள் அதை வாங்கிகொண்டு மரக்கன்றுகளுக்கு பணம் கொடுக்க, “இது வேணாம் பிள்ள. நீ சின்னப் பொண்ணு இந்த விவசாயத்தில் எத்தன கஷ்டப்படோணும் தெரியும்லே. நீயே வச்சுக்கோ ஆசத்தர அவசரத்துக்கு உதவும்” என்று சொல்லி மாமியாரும், மருமகளும் குழலியை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

அன்று வாங்கி வந்த மரங்களைப் பின்னாடி இருந்த கொஞ்ச இடத்தில் கொண்டு வந்து வைத்தவள், மறுநாளிலிருந்து நிலத்தை கடப்பாரையால்  கொத்திப் புல்லை பிடிங்கி வீசிவிட்டு நிலத்தை சுத்தம் செய்தாள். மறுநாள் இரண்டு காளை மாடுகளைக் கொண்டு நிலத்தை உழும் வேலையைத் தொடங்கிவிட்டாள்.

மறுநாள் வழக்கம்போலப் பள்ளிக்கூடம் சென்றவளின் பார்வை ரசனையோடு சுற்றி இருந்த வயல்வெளிகளின் மீது படிந்து மீண்டது. அவளை எதிர்ப்பார்த்தபடி வயலின் ஓரத்தில் நின்றிருந்தவனைக் கண்டவுடன், வெக்கத்தில் முகம் சிவக்க மெல்ல நடந்தாள்.

அவனைக் கடந்து செல்ல நினைக்கும்போது, “வதனி நில்லுவ” என்று அவளின் கையை எட்டிப் பிடித்தான். தன் கையை உருவிக்கொண்டு அவனை கேள்வியாக நோக்கியவளை பார்வையால் அருகே அழைத்தான்.

மறுப்பாகத் தலையசைத்துவிட்டு இரண்டடி எடுத்து வைக்க, “எட்டி மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கிறவ. முதல்ல மாதிரி எம்மோட பேச மாட்டேங்கிற.. என்ன காரணம்னு சொல்லவா.. இன்னைக்கு அது தெரியாம உன்ன பள்ளிக்கூடம் அனுப்பறதா இல்லவ” அவளின்  விழிகளை ஊடுருவியபடி.

“பெரிய பொண்ணு ஆகிட்டதால பசங்ககூட பேசக்கூடாதுன்னு சொல்லிட்டவ.. அதாம்ல உம்மோட பேச தயக்கமா இருக்குது” என்றாள் தலையைக் குனிந்தபடி.

அவளின் முகத்தை ஒரு விரல்கொண்டு நிமிர்த்தி அவளின் பார்வையை சந்தித்தவனோ, “நானும்தாம்ல பெரிய பையன் ஆயிட்டேன். என்னைய பொண்ணுக கூட பேசாதன்னு எங்கம்மா சொல்லவே இல்லயேடி” கண்ணில் குறும்பு மின்ன மெல்லிய குரலில் கேட்க, முகம் சிவந்தாள் வதனி.

வலுக்கட்டாயமாக அவனின் கையிலிருந்து கரங்களை உருவிக்கொண்டு ஓட, “ஏ புள்ள எனக்கு ஒரு பதில் சொல்லுவ” என்றவனின் சிரிப்பொலி அவளைப் பின் தொடர்ந்தது.

அவ்வளவு வேகமாக வந்தவளிடம், “இன்னும் நேரம் கிடக்கு.. இப்போ எதுக்கு ஓடி வரவ” என்றனர் மற்ற தோழிகள்.

உள்ளத்தின் படபடப்பை மறந்து, “ம்ஹும் நீனு கேப்பேன்னு தான் ஓடியாந்தேன்” இடக்காக சொல்லிவிட்டு அவர்களோடு இணைந்து நடந்தவள் யாரும் அறியாமல் பின்னால் திரும்பிப் பார்த்தாள்.

அவளின் பார்வை கண்டவுடன் அவன் குறும்புடன் கண்சிமிட்ட, ‘ச்சீ’ என்றவளின் முகம் குப்பென்று சிவந்தது. மார்பின் குறுக்கே அவன் கைகளைக் கட்டிக்கொண்டு அவன் நின்ற தோற்றம் அவளின் ஆழ்மனதில் இடம்பிடித்தது.

அவள் பின்னாடி திரும்பிப் பார்த்தபடியே நடப்பதைக் கண்ட சௌந்தர்யா, “யாரைப் பார்க்கறவ” என்ற கேள்வியுடன் பின்னால் திரும்பிப் பார்க்க அங்கே யாரையும் காணவில்லை.

ஆனால் மகிழ்வதனி திரும்பிப் பார்க்கும்போது அவன் சிரித்தபடி பின் தொடர்ந்தான். சாண்டில் கலர் சர்ட், ப்ளூ கலர் ஜீன்ஸ் அணிந்து வசீகரமான புன்னகையோடு தன்னை வருவதைக் கவனித்தவளோ  அவனிடமிருந்து தப்பிக்க வேகமாக நடக்க தொடங்கினாள்.

அன்று மாலை வீட்டிற்கு வரும் வழியில் கார்குழலியின் வீட்டிற்கு சென்ற மகிழ்வதனி, “இந்தப் புஸ்தகத்தில விவசாயம் செய்வது பற்றி விளக்கமாகக் கொடுத்து இருப்பாங்க வாசி” புத்தகத்தை அவளிடம் கொடுத்துவிட்டு தன்னருகே எழுதிக் கொண்டிருந்தாள்.

அனிதாவிடம்,  “இன்னைக்கு என்ன ஹோம் வொர்க் கொடுத்தாகன்னு சொல்லுடி” அவள் கணக்கு நோட்டை எடுத்து அவளிடம் கொடுத்தாள். அவள் தங்கைக்குக் கணக்கு சொல்லி தருவதைப் புன்னகையோடு பார்த்த கார்குழலி தன் தம்பியை  அழைத்தாள்.

அவன் கேள்வியாக நோக்கிட,  “சரவணா உனக்கு என்ன சந்தேகம் வந்தாலும் வதனிட்ட கேளுவ. அவ உனக்கு தெளிவா நல்லா சொல்லி தருவா” அடுப்பில் வைத்திருந்த சீம்பாலை கொண்டு வந்து மகிழிடம் கொடுத்தாள்.

“ஏய் சீம்பால் இல்ல இது” என்று அவள் ஆசையாக வாங்கி சாப்பிட, “நம்ம பட்டு இன்னைக்கு தாம்ல கன்னு போட்டுச்சு.. அதான் சீம்பால் காய்ச்சி வச்சேன்” வதனியை அழைத்துச்சென்று மாட்டையும், கன்னு குட்டியையும் காட்டினாள்.

வெள்ளை கன்றுக்குட்டியை ஆரத்தழுவி, “எங்க வூட்டுக்குப் புதிய உறுப்பினரா? உமக்கு என்ன பேரு வைக்கலாம்..” என்று தீவிரமாகச் சிந்தித்தவள், “நிதி” என்று பெயர் வைத்தாள்.

அவளின் குழந்தைத்தனமான பேச்சை கண்டு, “ஏட்டி கன்னுக்குட்டிக்கு நிதின்னு பேரு வைக்கிறவ நீ தேறிவிடுவ போ” என்று சொல்லிவிட்டு மீண்டும் கலகலவென்று சிரித்தாள் கார்குழலி.

அவள் வாய்விட்டு கவலை இல்லாமல் சிரிப்பதைக் கண்ட வதனி, “என் பேரில் இருக்கிற மகிழ்ச்சியை இன்னைக்கு தாம்ல உம்மோட முகத்தில் பாக்ககேன்” நிறைவுடன் கூறினாள்.

அதற்குள் வானம் இருட்டிவிட வீட்டிற்கு கிளம்பிய மகிழ் தன் தோழியிடம்  சில புத்தகத்தைக் கொடுத்து, “இதெல்லாம் அம்மா உன்னிடம் கொடுக்கச் சொன்னாவே” என்று பாட புத்தகத்தை அவளிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து சிட்டென்று பறந்துவிட்டாள்.

பகலில் வேலையைக் கவனித்த கார்குழலி இரவில் படிக்க தொடங்கினாள்.

Leave a Reply

error: Content is protected !!