Vaanavil – 5

fdef3c6c-b575-445f-854c-a6b9bd3e77b8_1024-a372c1b7

Vaanavil – 5

அத்தியாயம் – 5

ஆங்கில இசை மெதுவாக கசிய கலர் கலரான லைட் வெளிச்சத்தில் ஆண், பெண் பேதம் இல்லாமல் ஆடிக்கொண்டு இருக்க, இன்னொரு புறம் போதையோடு அமர்ந்திருந்தனர் இளைஞர் பட்டாளம்.  அடுத்த தலைமுறை என்று சொல்லப்படும் இவர்கள் அனைவரும் காலச்சாரம் பற்றிய கருத்தை தவறாக புரிந்து வைத்திருந்தனர்.

தந்தையின் சம்பாத்தியத்தில் கார், பணம், பதவி, பங்களா என்று வாழும் பணக்கார குடும்பத்தின் வாரிசுகள்.

அனைவரையும் பார்த்தபடியே சிகரெட்டை பற்ற வைத்த கார்த்திக், “என்ன வேந்தா எல்லோரையும் வேடிக்கை பார்த்துட்டு உட்கார்ந்து இருக்கிற” என்றான்.

“வேற என்ன பண்ணனும்னு சொல்ற” என்று கேள்வியாக புருவம் உயர்த்தினான் வேந்தன்.

“என் லவ் சக்ஸஸ் ஆகிருச்சுன்னு பார்ட்டி வெச்சேன். நீ மட்டும் எதையும் குடிக்காமல் அமைதியாக இருக்கிற” குறுநகையோடு விசாரிக்க வேந்தனின் மனதில் அண்ணனின் முகம் தோன்றி மறைந்தது.

“எனக்கு தண்ணி, சிகரெட் விஷயமெல்லாம் சரிவராது” என்றவனின் பார்வை அங்கிருந்தவர்களை சுற்றி வந்தது.

“என்னடா எல்லோரையும் ஒரு மாதிரி பார்க்கிற” அவன் சிகரெட்டை இழுத்தபடியே கேட்க,

“ஒண்ணுமில்ல மச்சி. இங்கே இந்த ஆட்டம் போட்டுட்டு நாளைக்கு வரபோகும் மனைவியிடம் எப்படி நான் உத்தமன்னு நிருபீக்கிறாங்க என்ற கேள்விக்கு விடை தேடிட்டு இருக்கேன்டா” என்றபடி சேரில் சாய்ந்து கம்பீரமாக அமர்ந்தான் மேகவேந்தன்.

“அது இந்த காலத்து பசங்களுக்கு கைவந்த கலை மச்சி” காலரைத் தூக்கிவிட்டு கூறியவன் தன் முன்னிருந்த முழு பாட்டில் சரக்கையும் வாய்க்குள் ஊத்திக் கொண்டான்.

அந்தநேரத்தில் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தவனைக் கண்டதும் கார்த்திக் புருவங்கள் கேள்வியாக சுருங்கியது.

“டேய் மச்சி உங்க அண்ணாவுக்கு க்ளப் வர பழக்கம் இல்லன்னு சொன்ன.. அங்கே  பாரு உங்க அண்ணா வரும் வேகத்தை..” போதையில்  உளறினான்.

வேந்தன் சட்டென்று திரும்பி பார்க்க, கோபத்தை விழிகளில் தேக்கி அழுத்தமான காலடி ஓசையுடன் அவர்களை நெருங்கியவனை கண்டு, “என்ன அண்ணா பிரச்சனை?” என்ற கேள்வியுடன் எழுந்து நின்றான்.

கார்த்திக் கன்னத்தில் பளார் என்று ஒரு அறைவிட, தலைக்கு ஏறிய போதை இறங்கியதும் தன் எதிரே நின்றவனை அடையாளம் கண்டு எழுந்து நின்றான்.

கண்ணிமைக்கும் நொடியில் நடந்த சம்பவத்தில் மற்றவர்களின் கவனம் தங்களின் மீது திரும்புவதை உணர்ந்து, “ஸாரி” என்றவன் கார்த்திக்கை தரதரவென்று இழுத்துக்கொண்டு வெளியே செல்ல காரணம் புரியாமல் தமையனை பின் தொடர்ந்தான் மேகவேந்தன்.

அங்கிருந்து வெளியே வந்ததும், “ மனசில என்னடா நினைச்சிட்டு இருக்கிற? நீ மும்பை வந்துட்ட செய்கின்ற தப்பிலிருந்து தப்பிச்சிடலாம் என்ற என்னமோ?” கோபத்தில் உறும, வேந்தனின் பார்வை நண்பனின் மீது கேள்வியாக படிந்தது.

“அண்ணா கோபப்படும் அளவுக்கு என்ன பண்ணி வச்ச?” என்றான் வேந்தன்.

“நான் காலேஜ் படிக்கும்போது விரும்பிய பெண்ணை மும்பை வருவதற்கு முன்னால் திருமணம் செய்துக்கொண்டு அங்கேயே விட்டுட்டு வந்துட்டேன்” என்று சொல்ல அவனை முறைத்தான்.

தன் தமையன் தேவையின்றி கோபப்படும் குணம்  உடையவன் அல்ல என்று உணர்ந்திருந்தால், “இதுக்காகவா அண்ணா அவனை அடிச்சீங்க?” புரியாமல் கேட்க, இப்போது நேரடியாக தன் தம்பியை முறைத்தான் தமையன்.

‘டேய் கார்த்திக் கடன்காரா என்ன காரியம் பண்ணி வெச்சிட்டு வந்தன்னு தெரியல. இவன் வேற கோபத்தில் என்னை முறைக்கிறான்’ மனதிற்குள் நண்பனை வருத்தேடுத்தான்.

“அவ இப்போ கண்சீவாக இருக்கிறா..” ஒரு வழியாக உண்மையை உரைக்க கார்த்திக் மறுகன்னத்தில் பளார் என்று ஒரு அறைவிட்டான்.

“உன்னை நம்பி வாழ்க்கையை ஒப்படைத்த பொண்ணு அங்கே உயிருக்கு போராட்டிட்டு இருக்கிறா.. நீ இங்கே சாராவுக்கு லவ் ப்ரபோஸ் பண்ணிட்டேன்னு பார்ட்டி கொடுத்திட்டு இருக்கிற இல்ல” செழியன் கோபத்தில் வார்த்தையை கடித்து துப்பினான்.

“உன்னை எங்க அண்ணா அடிச்சது தப்பே இல்ல” தன் தமையனுக்கு சப்போர்ட் செய்தான் வேந்தன்.

“ஐயோ தேவிக்கு என்னாச்சு?” என்றவனை அழுத்தத்துடன் நோக்கிய செழியனின் பார்வைக்கான அர்த்தம் புரிந்து தலைகுனிந்தான் கார்த்திக்.

தேவியை கல்யாணம் முடிந்த மறுகணமே கணவன் என்ற உரிமையை காட்டிவிட்டு வந்திருந்தான். அங்கே அவன் காட்டிய உரிமை அவளின் வயிற்றில் கருவாக மாறி எட்டு மாதம் ஆகிவிட்டது. அவனை தேடிவந்த அவளின் பெற்றோரிடம் சாராவை லவ் பண்ற விஷயத்தை கூறினான்.

அதைக் கேட்டு அந்தப் பெண் தற்கொலைக்கு முயற்சி செய்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாள். அந்த உண்மையை தன் தந்தையின் மூலம் அறிந்துகொண்ட செழியன் இப்போது கார்த்திக்கை நிற்க வைத்து கேள்வி கேட்டுக் கொண்டிருந்தான்.

“அண்ணா நான் செய்தது தவறுதான்” என்று கார்த்திக் உண்மையை ஒப்புகொள்ள,

“நான் அப்பாவுக்கு கால் பண்ணி சொல்றேன். நீ கார்த்திக்கை கூட்டிட்டு குற்றாலம் கிளம்பு” என்றான். தன் தமையனின் பேச்சிற்கு வேந்தன்  என்றுமே மறுப்பு சொன்னதில்லை என்பதால் அவனும் சம்மதமாக தலையாட்டினான்.

“ஹே லுக் நம்மள ஒரு பொண்ணு விரும்பினால் அவளை நேசிக்கிறது தப்பில்ல. ஆனால் அவளை ஏமாற்றிட்டு வாழணும்னு நினைப்பது தான் தப்பு” செழியன் கோபத்துடன் அங்கிருந்து நகர்ந்தான்.

“அண்ணா கார்  கீ” என்ற வேந்தனின் குரல்கேட்டு, “இந்தா பார்த்து ஜாக்கிரதையா போ. இவன் அங்கே போய் ஏதாவது கோல்மால் பண்ண மகனே உனக்கும் சேர்த்து அடி விழுகும் நினைவில் வெச்சுக்கோ” அவனின் மிரட்டலில் வாய்விட்டு சிரித்தான் வேந்தன்.

“அண்ணா நான் இவனுக்கு சப்போர்ட் இனிமேல் போடமாட்டேன். அம்மா மேலே பிராமிஸ்” என்ற தம்பியைப் பார்த்து தன்னை மீறி சிரித்த செழியன் கார் கீயை தூக்கி போடவே கேச் பிடித்தான்.

தன் கார் டிரைவருக்கு போன் செய்து வர சொல்லிவிட்டு செழியன் அங்கிருந்து செல்ல,“எங்க அண்ணாவோடகோபம் தெரிந்தும் உண்மையை மறைச்சு கன்னம் வீங்கும் அளவிற்கு அடி வாங்கிட்டியே மச்சி” வேந்தன் கார்த்திக்கை தன்னோடு அழைத்துக்கொண்டு குற்றாலம் நோக்கி பயணமானான்.

பிரம்மாண்டமான மாளிகையின் உள்ளே நுழைந்ததும் செழியன் வீட்டிற்குள் செல்ல அங்கே மயான அமைதி நிலவியது. இரண்டே ஆண்கள் தங்கி இருக்க அவ்வளவு பெரிய வீட்டை வாங்கி கொடுத்திருந்தார் தர்மசீலன்.

அவன் வருவதைக் கண்ட சிங்காரம், “தம்பி சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா” என்று அக்கறையுடன் கேட்க மறுப்பாக தலையசைத்துவிட்டு வேகமாக மாடி ஏறிவிட்டான்.

தன்னறைக்கு சென்ற செழியன் தன் அண்ணனுக்கு போன் செய்து தம்பியுடன் கார்த்திக்கை ஊருக்கு அனுப்பிவிட்ட விஷயத்தைக் கூறினான். பிரபலமான பத்திரிகை ஒன்றில் மகிழ்வதனியின் பேட்டியை படித்தவனின் புருவங்கள் கேள்வியாக சுருங்கியது.

முன்னணி இடத்தில் ஒரு பெண் என்ற எண்ணமே அவனின் மனதை அசைத்துப் பார்த்தது. அவளின் பேட்டி வாசித்தவனுள் சிறிய சலனத்தை ஏற்படுத்திய மகிழ்வதனி நினைவில் வெகுநேரம் தூங்காமல் விழிந்திருந்தான்.

அதே நேரத்தில் ஹோட்டல் அறையில் குளித்து இரவை முடித்துக்கொண்டு படுக்கையில் விழுந்த வதனியின் நினைவலைகள் சற்றுநேரத்திற்கு முன்னர் சந்தித்த அவனின் மீதே இருந்தது.

“என்னவ சிந்தனையெல்லாம் பலமா இருக்கு?” என்ற கேள்வியோடு ஒரு சேரை இழுத்துபோட்டு அவளின் அருகே அமர்ந்தான் அவன்.

“ஓஹோ அதுவா.. இன்னைக்கு அந்த மீட்டிங் முடிஞ்சி கிளம்பும்போது எதிரே வந்தவனைப் பற்றி யோசிச்சிட்டு இருக்கேன்” என்றாள் சாதாரணமாகவே.

“என்ன சைட் அடிச்சத பத்தி யோசிக்கிதியா?” குறும்புடன் அவன் சிமிட்ட தலையணையைத் தூக்கி சேரில் அமர்ந்திருந்த அவனின் மீது வீசினாள்.

அடுத்த கணமே அவன் அங்கிருந்து சென்றிருக்க, ‘நான் ஏன் அவனைபற்றி யோசிக்கிதேன். அவன் எப்படி..’ என்ற கேள்வி மனதைக் குடைந்தது. அவள் வீசிய தலையணையை எடுத்து மார்புடன் அணைத்தபடி ஆழ்ந்த நித்திரைக்கு சென்றாள் மகிழ்வதனி.

கிழக்குவானம் செவ்வானமாய் சிவக்க பறவைகள் இரைதேடி வானில் பறந்தது.  தர்மசீலனின் வீடே பரபரப்புடன் காணப்பட்டது.

“ஏலே செந்தூரா நம்ம கடைக்குட்டி ஊரில் இருந்து வருவதா தகவல் வந்திருக்குல. அவன் வருவதற்குள் தடபுடலாக விருந்து ரெடி செய்திடோணும்” வீட்டில் இருந்த அனைவரையும் விரட்டி விரட்டி வேலை வாங்கிக் கொண்டிருந்தார் செண்பகம்.

‘கடைக்குட்டி பேரன் வரான்னு சொன்னதும் இவ பதினாறு வயசு புள்ள மாதிரி ஓடி ஓடி வேலை பார்க்கிறா’ என்று உள்ளுக்குள் நினைத்த தர்மசீலனின் உதடுகளில் புன்னகை கீற்றாய் தோன்றி மறைந்தது.

தன்னருகே யாரோ அமரும் ஆராவாரம் கேட்டு திரும்ப, “என்னப்பா அம்மா எல்லோரையும் பம்பரமாக சுத்தவிட்டுட்டு இருக்கவ.. ஆமா என்ன சங்கதி” என்று விசாரித்தான் அவரின் ஒரே மகனான குணசீலன்.

அதே நேரத்தில் வெள்ளை வெட்டி சட்டையில் முழு கையை மடித்துவிட்டபடி வந்த மணிவண்ணன், “வேந்தன் வரும் தகவலை தெரியாதனமா பாட்டிட்ட உளறிட்டேன். பொறவு என்ன காலையில் கோழி கூவுனதுல இருந்து இப்படித்தான் இருக்காவ” என்று சொல்ல மற்ற இரண்டு ஆண்களுக்கும் சிரிப்பு வந்தது.

“எம்லே நீ என் கைக்குள்ள வளைந்ததால எனக்கு எதுவும் தெரியல. ஆனா செழியனும், வேந்தனும் அப்படியா? இரண்டு பேரையும் சின்னத்திலேயே இங்கே இருந்தா காடுகரையில சுத்திக்கிட்டு படிக்க மாட்டவன்னு சொல்லி ஹாஸ்டலில் கொண்டுபோய் சேர்த்திட்டு வந்திட்டிக.. இப்போ அவனுவ இரண்டுபேரும் ஊருப்பக்கம் வருவதையே மறந்துட்டானுங்க” என்று பெரிய மகனை வாணலில் இல்லாமல் வருத்தேடுத்தார் பூரணி.

தாயிடம் அத்தனை வசவையும் வாங்கிகொண்டு வாய்விட்டு சிரித்த மணிவண்ணனை இமைக்கமறந்து பார்த்தார் தர்மசீலன். மற்றவர்கள் மதிக்கும் அளவிற்கு நடந்து தன் பெரிய பேரனின் மீது அவருக்கு எப்போதும் ஒரு நல்ல எண்ணம் உண்டு. ஆனால் ஊருக்குள் அரசல்புரசலாக சொல்லப்படும் விஷயங்கள் உண்மையா பொய்யா என்று தெரியாமல் சிந்தனையுடன் குழப்பத்தில் இருக்கிறார்.

அதே நேரத்தில் வீட்டில் வேலை செய்யும் பெண்ணான செல்லத்தாய் “அட என்ன ஆத்தா உன் பேரன் வரான்னு சொன்னதும் எங்களை இப்படி வேலை வாங்கற..” என்று சிலுப்புகொண்டு போக,

“இன்னைக்கு என்ற தம்பி ஊரிலிருந்து வரான். இப்புட்டு நாளா ஹாஸ்டலு சாப்பாடு, ஹோட்டலு சாப்பாடு சாப்பிட்டு நாக்கு செத்து போயிருக்கும். என்னைக்கோ ஒருநாளு ஊருக்கு வர தம்பிக்கு வாய்க்கு பிடிச்சதா சமைச்சு போடத்தான். ஆச்சி உங்கள இந்த விரட்டு விரட்டுறாவ..” என்றவன் தந்தையின் பக்கம் திரும்பினான்.

“கார்த்திக் மருத்துவமனையில் விட்டுவிட்டு தம்பி நேராக இங்கனதான் வருவான்னு நினைக்குதேன். அதுக்குள் நான் ரைஸ்மில் வரைக்கும் போயிட்டு வந்துடுதேன்” தன் புல்லட்டில் அங்கிருந்து கிளம்பினான்.

தர்மசீலன் – செண்பகம் தம்பதிகளுக்கு ஒரே வாரிசு குணசீலன். அவனின் விருப்பம் அறிந்து பூரணியை மகனுக்கு மனம் முடித்து வைத்தனர்.

குணசீலன் – பூரணி தம்பதிகளுக்கு மூன்று வாரிசு. முதல் வாரிசான மணிவண்ணன் இருபத்தி எட்டு வயதாகியும் இன்னும் திருமணம் இல்லாமல் இருக்கிறான்.  பத்தாம் வகுப்புக்கு மேல் படிப்பு வரவில்லை என்றதும் தாத்தா மற்றும் அப்பாவுடன் இணைந்து விவசாயம் செய்ய கற்றுகொண்டு இன்று ஊரே மதிக்கும் அளவிற்கு இருக்கிறான்.

இவனுக்கு அடுத்து நம்ம இளஞ்செழியன். மணிவண்ணனை விட ஒரு வயது சிறியவன். எஸ்.வி. இண்டர்ஸ்ரிஸ் எம்.டி. மும்பையில் அவனின் கம்பெனிதான் முதல் இடத்தில் இருகிறது. செழியன் என்றாலே நேர்வழியில் செல்பவன். இந்த துறையில் அவன் இவ்வளவு சீக்கிரம் முன்னணி இடத்தைப் பிடிக்க ஒரே காரணம் அவனின் பொறுமை மட்டுமே!

வீட்டின் கடைக்குட்டி மேகவேந்தன் எஸ்.வி. இண்டர்ஸ்ரிஸ் ஜி. எம். அண்ணனுக்கு தப்பாத தம்பி என்று சொல்லலாம். அவனோடு ஹாஸ்டலில் தங்கிப் படித்தவன் தன் படிப்பை முடித்தும் அண்ணனின் கரம்பிடித்து தொழில் துறையில் அடியெடுத்து வைத்தான். அவர்கள் இருவருமே சொந்த ஊரான குற்றாலம் பக்கம் வந்தே பல ஆண்டுகள் ஆகியிருந்தது.

தன் சொந்த மண்ணில் கால் பதித்த வேந்தனின் கார் சீரான வேகத்தில் ஊருக்குள் புழுதியை கிளப்பிக்கொண்டு சென்றது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் பசுமையோடு இருப்பது அவனின் மனதிற்கு இதமாக இருந்தது.

மும்பையில் திரும்பிய இடமெங்கும் போக்குவரத்து நெரிசல், வானத்தை தொடும் கட்டிடங்கள் என்று பார்த்து பழகிய வேந்தனுக்கு இந்த பசுமை பிடித்திருந்தது. அங்கிருந்த ஆற்றில் பசங்க எல்லாம் பல்டி அடிப்பதை ரசிக்க எதுவாக மெல்ல காரை செலுத்தினான்.

எந்த தெருவின் வழியாக வீட்டிற்கு செல்வதென்ற குழப்பத்தில் காரை நிறுத்தி பார்வையைச் சுழற்றினான். அதே நேரத்தில் மாட்டுக்கு தட்டு வாங்கி தலையில் சும்மாடி கட்டி வைத்துகொண்டு பாவாடை தாவணியில் பதுமையாய் நடந்து வந்தவளை கண்டு இமைக்க மறந்தான்.

அவள் காரை கடந்து செல்ல நினைக்கும்போது தன்னிலைக்கு மீண்டவன், “இந்த பெரிய வீட்டுக்கு எப்படி போறது” என்றான்.

அவனை ஏறயிறங்க பார்த்த குழலி, “ஊருக்கு புதுசா?” என்றவுடன் குத்து மதிப்பாக தலையாட்டி வைத்தான் வேந்தன்.

“இப்படியே நேரா போனா கடைசி வூடுதான் நீ கேட்ட பெரிய வீடு” என்று சொல்லிவிட்டு செல்ல  அவனின் பார்வையில் ரசனை கூடியது.

“சொந்த வீட்டுக்கு வழி தெரியாமல் நின்ற ஒரே படிச்ச முட்டாள் நானாகத்தான் இருப்பேன்” என்று நினைக்கும்போது புல்லட் சத்தம் கேட்க காரின் கண்ணாடி வழியாக பார்க்க காரின் பின்னோடு வரும் மணிவண்ணனை கண்டு முகம் பளிச்சிட்டது. அவனின் குறும்புத்தனம் தலை தூக்கிட காரைவிட்டு இறங்கி மணிவண்ணனின் வண்டியை கைகாட்டி நிறுத்தினான்.

Leave a Reply

error: Content is protected !!