நிரல் மொழி – 5

_20200803_115712

நிரல் மொழி – 5

இரண்டு நாட்கள் கழித்து

மாலை வேளை! இருள் சூழத் தொடங்கி இருந்தது.

அடுத்த நாள் காலையில், நிகில் சென்னைக்குத் திரும்பிச் செல்ல வேண்டிய நாள்!

அன்றுதான் பயணத்தை முன்பதிவு செய்திருந்தான். அதிகாலையிலே விமான நிலையம் செல்ல வேண்டும்.

அதற்காகத்தான், இக்கணம் தன் பயணப் பொதிகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தான்.

துணிகள், லேப்டாப் பேக், எடுத்து வந்த நிரல் மொழி பத்திரிக்கைகள்… என மூளை ஒவ்வொன்றாக நியாபகப்படுத்த, கை அதனை எடுத்து வைத்தது.

ஆனால் மனம்!?

அவனது மனம் முழுவதும், ‘மிலாவின் அம்மா எதுவும் சொல்லவில்லையே’ என்ற நினைவிலே இருந்தது.

அந்த நினைவு, அவனது முகத்தில் ஒரு வாட்டத்தைக் கொண்டு வந்தது.

தான் மிலாவை நினைப்பது போல்… அவள், தன்னை நினைக்கவில்லையோ? என்ற எண்ணம் வந்தது!

இல்லை, மூன்றே முறை நடந்த சந்திப்பிலே… ‘அவளும் தன்னைப் போல் உணர வேண்டும்’ என்று நினைப்பது அதிகப்படியோ என்ற கேள்வி எழுந்தது.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்!

அது, ‘நான் நானாக இல்லை’ என்று உணர்வு!!

இப்படி நினைத்துக் கொண்டிருக்கும் போது, ஆஷா உள்ளே வந்தாள்.

“வாங்க அண்ணி” என்றான் சுறுசுறுப்பே இல்லாத குரலில்.

அதைக் கவனித்தவள், “எல்லாம் எடுத்து வச்சிட்டியா?” என்று கேட்டாள்.

“ம்ம்ம்” என்றவன், “அண்ணி… ஒரு ஹெல்ப்” என்று கேட்டு நின்றான்.

“சொல்லு நிகில்” என்றதும்,

தன் மேசையின் உள்ளே இருந்து, ஒரு கைப்பேசியை எடுத்தவன்… “அண்ணி, இது மிலாவோடது. அவகிட்ட கொடுத்திட முடியமா?” என்று கேட்டான்.

ஆஷா கேள்வியாகப் பார்த்து நின்றாள்.

“அன்னைக்கு மொபைல் ரிப்பேர் பண்ணித் தர்றேன்னு சொல்லி வாங்கினது. ரிப்பேர் பண்ணிட்டேன்.  ம்ம்ம், இனிமே பார்க்க முடியுமான்னு தெரியலை! அதான்… நீங்களே பார்த்துக் கொடுத்திடுங்களேன்” என்று சோகமாகச் சொன்னான்.

‘மிலாவை இவனுக்கு இவ்வளவு பிடிக்குமா?’ என்று நினைத்தவள், “என்னால கொடுக்க முடியாதே நிகில்” என்றாள், புன்னகையை மறைத்துக் கொண்டு.

“அண்ணி ப்ளீஸ்” என்று கெஞ்சினான்.

“என்ன ப்ளீஸ்?” என்றாள் கொஞ்சம் புன்னகை செய்து!

“அண்ணி நானே… ” என்று பாதியில் நிறுத்தி, நொந்து கொண்டான்.

“நிகில் போதும். இப்போதான் மிலா அம்மா ஃபோன் பண்ணாங்க. அவங்களுக்கு ஓகே-வாம்” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்.

“அண்ணி!” என்றவன் முகம் சட்டென பிரகாசமானது. மகிழ்ச்சி காட்டியது.

“அவங்க அம்மா உன்னைப் பார்க்கணும்னு சொன்னாங்க. ஆனா, இப்போ எப்படி முடியும்?!. நீ சென்னை போறது வேற அவங்களுக்குத் தெரியாதில்லையா?”

“அன்னைக்கு நீங்க சொல்லலையா அண்ணி?”

“சொல்லலை நிகில். அதான்… நாளைக்கு ஏர்போர்ட் பக்கத்தில இருக்கிற ஏதாவது ஒரு ப்ளேஸ்ல மீட் பண்ணலாம்னு, அத்தை சொல்லிருக்காங்க” என்றாள் சந்தோஷமாக!

கொஞ்சம் சிரித்தான்.

“ஸோ, நாளைக்கு மிலாவை நேரப் பார்க்கிறப்போ… நீயே கேட்டுக்கோ” என்றாள்.

“ம்ம்ம், சரி அண்ணி” என்று சிரித்துக் கொண்டே தலையை ஆட்டினான்.

“இப்போ ஹேப்பியா?”

“ரொம்ப ஹேப்பி” என்றவன், “தேங்க்ஸ் அண்ணி” என்றான் சற்றே அதிகமாகச் சந்தோஷப்பட்டபடி!

அவன் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தைப் பார்த்தபடியே, ஆஷா அறையை விட்டு வெளியே சென்றாள்.

தன் கைபேசியை எடுத்து ஷில்பாவிற்கு அழைத்து விடயத்தைச் சொன்னான்.

அடுத்த நாள்

விமான நிலையம், டெல்லி!

விமான நிலையத்தின் அருகில் இருந்த, ஒரு ‘பொக்கே ஷாப்பில்’ குழுமியிருந்தனர்.

சிறிய இடம்தான். பாமினி, திலகம், மிலா அமர்ந்திருந்தனர். ஆஷா, மீரா, நிகில் நின்று கொண்டிருந்தனர்.

மிலா, தலை நிமிர்ந்து யாரையும் பார்க்கவில்லை. ஆனால், நிகிலின் கண்கள் அடிக்கடி மிலாவைப் பார்த்தன.

‘அவள் என்ன உணர்கிறாள்?’ என்று தெரிய வேண்டும் என்று அவன் பார்வை சொன்னது.

திலகமும் பாமினியும் திருமணம் நடத்துவது பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

“பசங்க ரெண்டு பேரும் துபாய்ல இருக்காங்க. அவங்க வர்றப்போ கல்யாணத்தை வச்சிக்கலாம்” என்று பாமினி சொல்லவும்,

“எப்போ வருவாங்க?” என்று திலகம் கேட்டார்.

பாமினி ஆஷாவைப் பார்த்தார்.

“அவங்க வர்றதுக்கு இன்னும் ஏழு மாசம் ஆகும்” என்றாள் ஆஷா.

“அதுக்கப்பறம் ஆரம்பிக்கவா… ” என்று திலகம் கேட்டதற்கு,

“இல்லை.. இல்லை. இவங்க ரெண்டு பேருமே எல்லாம் பார்த்துப்பாங்க” என்று ஆஷாவையும் மீராவையும் கை காட்டினார்.

“ம்ம் சரி” என்றார் திலகம்.

சற்று நேரம், திருமணம் சம்பந்தப்பட்ட விடயங்கள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர்.

பின், “மிலா எதுவும் பேச மாட்டாளா? அன்னைக்கும் பேசலை…” என்று பாமினி மெதுவாகக் கேட்டார்.

“மிலா… கேட்கிறாங்கள… பேசு” என்று திலகம் சொன்னதும்,

“ம்மா… நான் உங்களைத் தனியா விட்டுட்டு… எப்படிம்மா?” என்று கண்கலங்கினாள்.

கேட்டவர் அனைவருக்கும் ஒரு மாதிரி சங்கடமாயிற்று.

நிகிலிற்கு இது பழக்கப்பட்ட வசனம் என்றாலும், இந்த நேரத்தில்… இவள் இதைச் சொன்னால், ‘அம்மா என்ன நினைப்பார்கள்?’ என்று பாமினியைப் பார்த்தான்.

அவன் நினைத்தது சரி என்பது போல், பாமினியும் நிகிலைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார்.

அந்த நொடியில், ‘இவள்தான் என் விருப்பம்’ என்ற உறுதியை நிகில் கண்களில் காண்பித்தான்.

‘இதற்கு மேல் இவனிடம் என்ன சொல்ல?’ என்று நினைத்தபடியே… ‘பெண்ணிற்கு விருப்பமில்லையோ’ என்பது போல், பாமினி திலகத்தைப் பார்த்தார்.

அவர் பார்வையின் அர்த்தம் புரிந்து, “அது.. அது… நான் தனியா இருப்பேன்னு, அவளுக்கு ஒரு பயம்… அதான்” என்று திலகம் சமாளித்தார்.

“அப்படியா மிலா?” என்று பாமினி மிலாவைப் பார்த்துக் கேட்டார்.

‘ஆம்’ என்று தலையசைத்தாள். ஆனால், நிமிர்ந்து பார்க்கவில்லை.

“நீங்க தனியா இருக்க வேண்டாம். மேரேஜுக்கு அப்புறம் எங்ககூட சென்னை வந்திடுங்க” என்றான் நிகில்.

அப்பொழுதான், மிலா நிமிர்ந்து நிகிலைப் பார்த்தாள்.

“ச்சே ச்சே அதெல்லாம் வேண்டாம்”  என்று திலகம் மறுத்தார்.

“அவங்க வேலைக்குப் போறாங்க. வேலையை விட்டுட்டு எப்படி வருவாங்க நிகில்?” என்றார் பாமினி.

இப்போது, மிலா மீண்டும் தலை குனிந்து கொண்டாள்.

ஏதோ ஒரு நெருடல் உருவாவது போல், ஆஷாவும் மீராவும் உணர்ந்தனர்.

நிகிலின் விருப்பம் ஆஷாவிற்குத் தெரியும் என்பதால், “இங்க பாரு மிலா… நாங்க எல்லாரும் இங்கதான இருக்கோம். அவங்களுக்கு எதுவும் தேவைன்னா, நாங்க பார்த்துப்போம்” என்றாள் ஆறுதலாக!

“அதெல்லாம்… ” என்று மறுக்கப் போன திலகத்திடம்,

“நீங்க சரின்னு சொல்லுங்க. அப்பதான் அவ சந்தோஷமா இருப்பா” என்றாள் மீரா.

“சரி” என்றவர், “மிலா, அம்மாக்குஎப்போ உன்னை பார்க்கணும்னு தோணுதோ… அப்போ சென்னை வந்திடுவேன்” என்றார்.

‘சரியென்று’ என்று தலையசைத்தாள். 

அக்கணம், ஷில்பாவிடமிருந்து பாமினிக்கு அழைப்பு வந்தது.

“யாரு அத்தை?” என்றாள் ஆஷா.

“ஷில்பா… வீடியோ கால்-ல வர்றா” என்றவர்… அழைப்பை ஏற்று, “சொல்லு ஷில்பா” என்றார்.

“எல்லாரும் மீட் பண்ணியாச்சா மா?” என்றாள் எடுத்தவுடன்.

“ஆமா ஷில்பா. எல்லாரும் இங்கதான் இருக்கோம்” என்றார் தொடு திரையைப் பார்த்துக் கொண்டே!

“அப்போ கரெக்ட் டைம்க்கு ஜாயின் பண்ணியிருக்கேன்” என்று சந்தோஷப்பட்டவள், “மேரேஜ் டேட் பிக்ஸ் பண்ணியாச்சா?” என்று கேட்டாள்.

“இல்லை ஷில்பா. அதெல்லாம் அப்புறம்தான்”

“சரி-ம்மா, ஃபோன பொண்ணுகிட்ட கொடுங்க. நான் பார்க்கணும்” என்றாள் ஆவலுடன்.

“இதோ…” என்று பாமினி மிலாவிடம் கைப்பேசியை நீட்டினார்.

அவள் வாங்கத் தயங்கினாள்.

“வாங்கிப் பேசு மிலா” என்று திலகம் சொன்னதும், கைப்பேசியை வாங்கினாள்.

“ஹாய்” என்று ஆரம்பித்தாள் ஷில்பா.

“ஹாய்…”

“வாவ்! அழகா இருக்க!! பட், பார்க்கிறதுக்கு டெல்லி பொண்ணு மாதிரிதான் தெரியற” என்றாள்.

“ஹே ஷில்பா! உனக்கும் அப்படித்தான் தோணுதா?” என்று ஆஷா மிலாவின் பின்னே நின்று, கைப்பேசியின் திரையைப் பார்த்துக் கேட்டாள்.

“உங்களுக்கும் அப்படித்தான் தோணிச்சா அண்ணி?”

“ஆமா ஃபர்ஸ்ட்! அப்புறம் நானும் மீராவும் பேசிக்கிட்டோம்”

இப்படியே இவர்கள் படபடவென்று பேச… மிலா எதுவும் பேசவில்லை.

சற்று நேரம் எல்லாரிடமும் ஷில்பா பேசினாள். மிலாவின் அம்மாவிடமும் பேசினாள்.

திலகத்திற்கு, முதலில் இருந்த தயக்கம் கூட இப்பொழுது இல்லை.

அவர்கள் அனைவரிடமும் பேசின பிறகு… ஓர் திருப்தி வந்திருந்தது, அவருக்கு!

அதன்பின், ‘மிலாவிடம் தனியாகப் பேச வேண்டும்’ என்று நிகில் சொன்னதால், மற்றவர்கள் ஒதுங்கினர்.

விமான நிலையம், உள்நாட்டு நுழைவாயில் முன்னே

மிலாவும், நிகிலும் எதிரே நின்று கொண்டிருந்தனர்.

இப்பொழுதும் மிலா நிமிர்ந்து பார்க்கவில்லை.

“மிலா” என்று அழைத்தான்.

“ஹாங் கஹியே” என்றாள் குனிந்து கொண்டே,

“நான் சொல்றது இருக்கட்டும். நீ ஏன் எதுவும் பேச மாட்டிக்க?” என்று கேட்டான். 

அமைதியாக இருந்தாள்.

“மேரேஜ் முடியட்டும், உங்க அம்மாவை கன்வின்ஸ் பண்ணி சென்னை கூட்டிட்டுப் போகலாம்”

“நிஜமா?” என்று கேட்டு, நிமிர்ந்து பார்த்தாள்.

“ம்ம்ம், உங்க அம்மா-க்கு வேலையை விட்டுட்டு வர்றது ஓகேன்னா… நிஜமா கூட்டிட்டுப் போகலாம்” என்றான்.

அவன் விளக்கமாகப் பதில் சொன்னதும், மீண்டும் மிலா குனிந்து கொண்டாள்.

“மிலா” என்று அழைத்து, அவளை நிமிர்ந்து தன்னைப் பார்க்கச் செய்தான்.

மேலும், “இந்தா உன் மொபைல்” என்று சரி செய்த கைப்பேசியை அவளின் முன் நீட்டினான்.

‘ரிப்பேர் பண்ணிட்டியா?” என்று கேட்டுக் கொண்டே, கைப்பேசியை வாங்கிக் கொண்டாள்.

“ம்ம்ம்”என்றவன், “ஆமா, நீ ஏன் ‘பார்க்’ வரலை மிலா?” என்று கேட்டான்.

“அது… அம்மா போக வேண்டாம்னு சொன்னாங்க. அதான் வரலை.  அப்புறம்…” என்று தயங்கிப் பாதியிலேயே நிறுத்தினாள்.

“சும்மா சொல்லு” என்றான்.

“ஒண்ணுமில்லை” என்றாள் மறுத்து தலையாட்டியபடியே!

“ஃபோன் என்கிட்ட கொடுத்ததுக்கு உங்க அம்மா திட்டினாங்களா?” என்று கேட்டான்.

சட்டென நிமிர்ந்து, “உனக்கு எப்படித் தெரியும்?” என்றாள்.

அவள் கேள்விக்குப் பதில் சொல்லாமலே நின்றான்.

அவன் அமைதியாக இருப்பதைக் கண்டு, அவள் குனிந்து கொண்டாள்.

இரண்டு நிமிடங்கள், இருவரின் மௌனத்தில் கழிந்தன.

மீண்டும், “மிலா” என்றான்.

“ம்ம்ம்” என்றாள் நிமிர்ந்து.

“உன்கிட்ட பேசணும்னு ரெண்டு நாளும் பார்க்ல வந்து வெயிட் பண்ணேன். நீ வரலைன்னதும்… கொஞ்சம் பீல் பண்ணேன்” என்று உணர்ந்து சொன்னான்.

அவள், அதை உணர்ந்தாளோ? இல்லையோ?, “சாரி” என்று மட்டும் சொன்னாள்.

“பரவால்ல. ஆனா, இனிமே டெய்லி ஃபோன் பண்ணுவேன். நீ பேசணும்” என்ற வேண்டுகோளை முன் வைத்தான்.

“ம்ம்” என்று தலையாட்டினாள்.

மீண்டும் மௌனம். சுற்றிலும் நடக்கும் நிகழ்வுகளில் கவனத்தை வைத்திருப்பது போல் இருவரும் நின்று கொண்டிருந்தனர்.

சில நிமிடங்களில், “மிலா ஃபர்ஸ்ட் டே ஒரு கொஸ்டின் கேட்டியே! அதை இப்பவும் கேட்பியா?” என்று மீண்டும் பேச்சைத் தொடங்கினான்.

“என்ன கொஸ்டின்?” என்று யோசித்தாள்.

” ‘உனக்கு என்னை-ய பிடிச்சிருக்கா’ – ன்னு கேட்ட” என்று நியாபகப் படுத்தினான்.

“ஓ! அதுவா?”

“அதேதான்! இப்பவும் அந்தக் கேள்வி கேட்பியா?”

‘இல்லை’ என்று தலையசைத்து, அமைதியாக நின்றாள்.

“பட், நான் கேட்கணும். உனக்கு என்னை பிடிச்சிருக்கா?” என்றான் நேரடியாக!

சட்டென, “நீயும்… நான் கேட்டதுக்குப் பதில் சொல்லலையே?” என்று பதில் சொல்லி, புன்னகை செய்தாள்.

“இப்படியே சிரிச்சிக்கிட்டே இரு.  அழாத! சரியா?” என்று ஒரு கோரிக்கை வைத்தான்.

“ம்ம்ம்” என்று சிரித்தாள்.

அப்படியே…. சிரிக்கும் மிலாவின் முகம், அழுது கொண்டிருந்தது…. அதே விமான நிலையத்தில்எட்டு மாதங்கள் கழித்து

முழங்கை வரை, இரு கைகளிலும் மெகந்தி… வெள்ளை மற்றும் சிகப்பு வண்ணங்களில் பாரம்பரிய வளையல்கள்… கற்கள் பதித்த புடவை… நெற்றியில் குங்குமம் என்று மிலா மாறியிருந்தாள்.

ஆம்! நிகிலிற்கும் மிலாவிற்கும் திருமணம் முடிந்து  இருபது நாட்கள் ஆகியிருந்தது.

மிலா… நிகில்… இருவரையும் வழியனுப்ப அனைவரும் விமான நிலையம் வந்திருந்தனர்.

ஆஷா… மீரா… பாமினி… திலகம்… என்று அனைவரும்.

ஷில்பா திருமணத்திற்கு வந்திருந்தாள்.

அதன்பின் ஐந்து நாட்கள் இருந்தாள்.

ஆனால், அதற்கு மேல் அவளுக்கு விடுப்பு கிடைக்கவில்லை.

அவளது நிறுவனத்திற்கு டென்டர் கிடைத்திருந்தது. அது தொடர்பான வேலைப்பளு அதிகமாக இருந்ததால், அவள் சென்றுவிட்டாள்.

நிகிலின் அண்ணன்கள் இரண்டு நாட்களுக்கு முன் துபாய் கிளம்பிச் சென்றுவிட்டனர்.

மிலாவும் நிகிலும் இன்று சென்னை செல்கிறார்கள்!

திலகம், தன் வேலையை விட்டுவிட்டு சென்னை செல்ல விரும்பவில்லை. எவ்வளவு கேட்டுப் பார்த்தாலும், ஒத்துக் கொள்ளவில்லை.

ஆதலால்தான், இவ்வளவு அழுகை மிலாவிடம்!!

“அழாத மிலா” என்று திலகம் சொல்லிப் பார்த்தார்.

அருகே நின்ற ஆஷாவும் மீராவும் சொன்னார்கள்.

மிலா கேட்கவேயில்லை. மாறாக அழுகை அதிகரித்தது.

“ம்மா…” என்று அம்மாவைக் கட்டிப் பிடித்து அழுதாள்.

“அவங்களுக்கு எதுவும் தேவைன்னா, நாங்க பார்த்துக்கிறோம்” என்று ஆஷா சொன்னாள்.

“ஆமா மிலா! நீ இப்படி அழாத” என்று மீரா சொல்லிப் பார்த்தாள்.

ஆனாலும் அழுதாள்.

“போதும். நீங்க என்ன சொன்னாலும் அவ அழறதை நிறுத்த மாட்டா” என்ற பாமினி, “லேட்டாகிடப் போகுது, நிகில். செக்-இன் பண்ணனும்ல. ரெண்டு பேரும் கிளம்புங்க” என்றார்.

திலகமும், “கிளம்பு மிலா. எப்போ லீவ் கிடைக்கோ, அப்போ அம்மா சென்னை வர்றேன்” என்றார்.

“ம்மா”

“மிலா, இனிமே அழுதா அம்மா திட்டுவேன். ப்ளைட்டுக்கு லேட்டாகுது. கிளம்பு” என்று சொல்லி, அவளைத் தள்ளி நிறுத்தினார்.

மிலா, கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

சற்று நேரம், திலகம் சாதரணமாகப் பேசி… மிலாவைச் சமாதானம் செய்தார்.

மிலாவின் கண்ணீர் கொஞ்சம் குறைந்தது.

அதன்பின் ஒவ்வொருவரிடமும் விடைபெற்றுக் கொண்டு, மிலாவும்… நிகிலும்…விமான நிலையம் உள்ளே சென்றனர்.

சோதனைகள் முடிந்து… போர்டிங் செய்து… விமானத்தின் இருக்கையில் அமர்ந்த பின்பே, நிகில் மிலாவைப் பார்த்தான்.

விமானத்தின் சன்னல் வழியே ஓடுதளத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“மிலா” என்று அழைத்தான்.

அவனைத் திரும்பிப் பார்க்கும் போதே, அவளது கண்கள் கலங்கியிருந்தன.

“அழாத! கொஞ்ச நேரம் தூங்கு. சரியாயிடுவ” என்றான்.

அவளும் கண்மூடி, இருக்கையின் பின்னே சாய்ந்தாள்.

சற்று நேரம் கழித்து, ‘மிலா’ என்று அழைத்துப் பார்த்தான். அவள் கண் திறக்கவில்லை.

பின், அவனும் இருக்கையின் பின்புறம் சாய்ந்து… கண்மூடினான்.

மிலாஎன்று அழைத்து, மெதுவாக கண் திறந்தான். – இது இன்று!

மழை விட்டிருந்தது. இரைச்சல் சத்தம் ஏதும் இல்லை.

மருத்துவமனை வராண்டாவில் பேச்சு சத்தம் கேட்டது. கொஞ்சம் பதற்றம் வந்தது.

‘யார் பேசுகிறார்கள்? ‘என்று உற்றுக் கேட்டான். செவிலியர்கள் குரல்தான் என்று தெரிந்ததும், சற்று நிதானம் வந்தது.

வயிற்றுக் காயத்தின் வலி அதிகமாயிருந்தது. இப்பொழுதும் கால்களை நகர்த்த முயன்று பார்த்தான்.

சிறிதளவு கூட நகர்த்த இயலவில்லை. இப்பொழுது அடிபட்ட கால் கனத்திருந்தது.

படுத்துக் கொண்டே, தன் கைப்பேசியை எக்கி எடுத்து மணியைப் பார்த்தான்.

4:15 எனக் காட்டியது.

கைப்பேசியை வைத்து யோசித்துக் கொண்டே இருந்தான்.

நிச்சயம் ‘நல் கேர்’ தன் கைப்பேசியை ‘டிராக்’ செய்வான் என்று தெரியும்.

ஆதலால், பொறுமையாகச் செயல்பட வேண்டும் என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டான்.

கைப்பேசியை வைத்துவிட்டு, தலையணையில் தலை சாய்த்தான்.

உறக்கம் வரவில்லை. மீண்டும் யோசிக்க ஆரம்பித்தான்.

இன்று இந்த நிலையில் தான் இருக்க காரணம்… ‘நல் கேர்’ என்று தெரியும்.

ஆனால் ஏன்?

நல் கேர்… தன் வாழ்வில் வந்த நாளை நினைத்துப் பார்க்க ஆரம்பித்தான்.

 

 

Leave a Reply

error: Content is protected !!