மோகனம் 29

மோகனங்கள் பேசுதடி!

மோகனம் 29

இங்கு சொல்லப்படும் அனைத்தும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதாக இருக்க, பதில் கூற வேண்டியவர்களோ அமைதி  காக்கவும், குடும்பத்தினருக்கு எண்ணவோட்டங்கள் எங்கெங்கோ சென்றது.

இது இப்படி இருக்குமோ, அப்படியிருக்குமோ, ஏன் இவர்கள் கூறுவதுகூட பொய்யாக இருந்திட கூடாதா என்ற நப்பாசைகூட உதிர்த்தது. அதிலும் அருணின் பதில் வேறு பெற்றோருக்கு இடியை இறக்கியது.

அருணை நோக்கி ஒருவித படபடப்புடணும் பயத்துடணும் வந்தவர், மனமே இல்லாமல்தான் அதனைக் கேட்டார் மஞ்சுளா.

சங்கடம்தான் இருந்தாலும் கேட்க வேண்டிய நிர்ப்பந்தத்தை உணர்ந்தவர் கேட்கவும் செய்ய, பதிலோ அருணிடம் அல்லாது விஷ்வாவிடமிருந்து வந்தது.

“இல்லை அம்மு என் குழந்தை.‌ அவ என்னோட இரத்தம்…” என ஸ்திரமாய் சொல்லியபடி உள்ளே நுழைந்தான் விஷ்வா. அவனுடன் ஜீவாவும்.

விஷ்வாவைக் கண்ட அருவி கண்ணீரோடு ஓடிச்சென்று அவனை அணைத்துக் கொண்டு தேம்பினாள், “விஷ்வா… விஷ்வா…” என்ற அழைப்போடு. அவளை நெஞ்சோடு இறுகணைத்து சமாதானம் செய்யத் துவங்கினான் விஷ்வா.

இப்போது விஷ்வா கூறிய பதிலில் மேலும் அதிர, கங்காதரன் நெஞ்சைப் பிடித்து விட்டார். உடனே அருண் அவரைத் தாங்கிப் பிடித்தவன், பக்கத்திலிருந்த சோஃபாவில் அமர வைத்துத் தண்ணீர் கொடுத்தான்.

சிறிது குடித்தவர், “இங்க என்னதான் நடக்குது? ஆளாளுக்கு ஒன்னொன்னா சொல்லிட்டே போறீங்க? அப்படி என்னத்தை எங்கககிட்ட இருந்து மறைச்சு வச்சிருக்கீங்க? எல்லாத்தையும் இப்பவே சொல்லிடுங்க.” என்றார் கங்காதரன்.

“நாங்க சொல்றோம்பா, கொஞ்சம் பொறுமையா இருங்க. அகல்மா அம்முவை கூட்டிட்டு ப்ளே ஸ்டேஷன்ல விடு.” என்ற விஷ்வா அருவியைச் சமாதானம் செய்தான். இப்போதைக்கு அவனுக்கு முக்கியம் அவனின் காதல் மனைவியின் மனநிலைதான்.

அவள்தான் இங்கே அதிகம் பாதிக்கப்பட்டவள், அவள் வாழ்வில் அவளுக்கு தெரியாமலே நடந்த விடயங்களைத் தெரிந்துகொள்ளும் பக்குவம் வேண்டும். அதற்கு அவன் வேண்டும்!

அவளுடன் அவன் இருக்க வேண்டும்!

காதல் கொண்டவனின் அருகாமை அவளைப் பலப்படுத்தும்!

“ரிலாக்ஸ் ஆருமா! அதான் நான் வந்துட்டேன்ல, இனி ஒரு பிரச்சனையும் இல்ல.” என மெல்ல தட்டிக் கொடுத்தவாறே சமாதானம் செய்ய,

“நான் தப்பான பொண்ணு இல்ல ப்ராசாத்… நான்… நான் அப்படிப்பட்ட பொண்ணு கிடையாது.” என அழுக மனம் கனத்தது விஷ்வாவிற்கு.

இதற்கெல்லாம் காரணமான ஜின்சியைக் கொன்று விடும் ஆவேசம். ஆனாலும் மனைவிக்காகக் கட்டுப்படுத்தினான்.

“இங்க பாருடா…” என அவள் முகத்தைத் தன்னைப் பார்க்குமாறு செய்தவன், விழியோடு விழிகளைக் கலக்கவிட்டான்.

“அழக்கூடாது! தப்பு செஞ்சவங்கதான் அழுகணும், அவளே தலையை நிமிர்த்தி நிற்கும்போது நீ இந்த விஷ்வாவோட பொண்டாட்டி கெத்தா இருக்க வேணாமா? இப்படியா அழுறது?” என கண்களைத் துடைத்து விட்டான். ஆனாலும் கண்களில் கண்ணீர் வர சிமிட்டி நிறுத்த முயற்சித்தாள்.

“ஷ்ஷூ! போதுமேடா அழுதது. பாரு கண்ணு எல்லாம் எப்படி சிவந்து போச்சின்னு. இப்படி இருந்தா நல்லாவா இருக்கும்? போ, போய் முகம் கழுவிட்டு வா. இங்க ஒருத்தருக்கு நல்ல பாடத்தை கத்துக்கொடுக்க வேண்டியதிருக்கு பாரு.” என்றவன் மனைவியை உள்ளே அனுப்பினான். பின் சோஃபாவில் அமர்த்தலாக அமர்ந்தவனின் கண்கள் சிவப்பாகின.

“எதுக்கு எல்லாரும் நிக்கிறீங்க? உட்காருங்க.” என்றவன் வேட்டையாடும் சிங்கமாய் மாறினான். அவனின் அனல் கக்கும் பார்வையே அனைவரையும் சில்லிடவைத்தது.

“என்ன ஜின்சி நான் அமைதியா போனா, என்னை ஏமாளின்னு நினைச்சிட்டியோ? தப்பு பண்ணிட்டியே! நீ பூனைன்னு நினைச்சு சிங்கத்து கோட்டையில கை வச்சிட்ட, இனி அது உன்னை சும்மா விடாது.” குரலில் கட்டுக்கடங்காத சீற்றம் தென்பட்டது. இவனின் இந்த பரிணாமத்தில் பெற்றோர்களேத் திகைத்தனர். அதற்குள் அருவி வந்துவிட, சீற்றத்தில் இருந்த முகம் சாந்தமாய் மாறியது.

“இங்க வா அருவிமா!” என தன் பக்கத்தில் அவளை அமர்த்தியவன், “இப்போ பெட்டராடா?” என்றான் கவலையான குரலில்.

“ம்ம்ம்…” என தலையசைத்து மென்னகைப் புரிந்தாள். மகனின் செயலில் இந்நிலையிலும் சிரிப்பு வந்தது மஞ்சுளாவிற்கு. மகனின் காதலை எண்ணி ஏன் சிறிது பெருமையாககூட இருந்தது.

“உனக்கு உன்னோட வாழ்கையில நடந்த சில விஷயம் தெரியாதுடா. அதுனால இங்க பலரும் அதை பயன்படுத்திக்க பார்க்கிறாங்க.” என்றான் நேத்ராவையும் ஜின்சியையும் எரிப்பது போல் பார்த்து.

“இது உன்கிட்ட சொல்லக்கூடாதுன்னு நான் நினைச்சது இல்ல, ஆனா அதுக்கான சந்தர்ப்பம் எனக்கு கிடைக்கல. அத்தோடு நீ இவளை தோழியா அவ்வளவு நம்பின, ஏன் நான்கூட நம்பதான் செஞ்சேன். அப்புறம்தான் தெரிஞ்சது இது பதுங்கி இருந்து நேரம் பார்த்து கொத்துற விஷப்பாம்புன்னு…” என அத்தனை சினத்துடன் சொன்னான்.

“இனியும் இதை நான் மறைக்க விரும்பலைடா. நீ, நான் சொல்றதை பொறுமையா கேட்பல, அழுக கூடாது.” ஏதோ குழந்தைக்கு ஊசி போடுவதற்கு முன் சமாதானம் செய்யும் அன்னைப் போல் பேசி அவளைத் தேற்றினான்.

“அழ மாட்டேன்… நான் எதையும் ஃபேஸ் பண்ண ரெடி.” என்றாள் கணவன் தன்னோடு இருக்கும் தைரியத்தில்.

“சரி” என்றவன் அனைவரையும் பார்த்து, “இத்தனை நாள் மறைத்து வைத்திருந்த எல்லா உண்மையையும் சொல்றேன்.” என்று தமையனை ஒருமுறைப் பார்க்க, அவனோ பேசு என்பதுபோல் சைகையில் சம்மதத்தை சொன்னான்.

“நீங்க நினைக்கிற மாதிரி நாங்க கல்லூரி காலத்துல காதலிக்க எல்லாம் இல்லை. நான் காதலிச்சேன், அருவி என்னைய ஒரு நல்ல வெல்விஷராதான் பார்த்தா. அப்படி இருந்த சமயத்துலதான் ஜின்சி அவளோட காதலை சொல்ல, நான் மறுத்திட்டேன். அது அவ ஈகோவை டச் பண்ணிடுச்சி. சோ, எங்களோட ஃபேர்வல் பார்ட்டி அன்னைக்கு அருவியைக் கடத்திட்டா.” எனும்போதே மனைவியின் கையை இறுக பிடித்துக்கொண்டான்.

“எனக்கு இப்படி அருவி காணோம்ன்றது அகல்மா  சொல்லிதான் தெரியவந்தது. எங்கயெல்லாமோ தேடினேன். அதுக்கப்புறம்தான் ஒரு யோசனை, இது ஜின்சி வேலையா இருக்குமோன்னு? அப்புறம் கடைசியா அருவியைப் பார்க்கும்போது அவ சுயநினைவிலே இல்லை. அப்போ என்னை யாரோ அடிக்க மயங்கிட்டேன்” என அடுத்தடுத்து நடந்தது என ஒன்றுவிடாமல் அனைத்தையும் கூறினான்.

“எனக்கு அந்த நேரத்துல என்ன பண்றதுன்னு தெர்ல அருவிமா. உன்னை கடத்திட்டாங்கன்னு சொன்னா நிறைய கேள்விகள் வரும். அது உன்னோட வாழ்க்கையை அடுத்து எப்படி கொண்டு போகுமோன்னு பயந்துதான் அப்படியொரு பொய்யை சொன்னேன். என்னை மன்னிச்சிடுடா.” என வருத்தம் தோய்ந்த குரலில் சொல்ல, முகில்நகை புரிந்தாள்.

ஜின்சியின் உண்மை முகம் வெளிவர வர, விக்ராந்த் அவளிடமிருந்து விலகினான்.

“நான் வெளிநாடு சென்ற மூன்று மாதத்திலே திரும்பி இங்கே வந்தேன்.” என்க இது புது செய்தியாக இருந்தது.

“நீ ஊருக்கு வந்தியா? எங்களுக்கு இது தெரியாதேடா?” என மஞ்சுளா சொல்ல,

“அது நான் கெஞ்சி கேட்டதால் வந்தான்மா. என்னோட நிலை அவனை வரவழைத்தேன்.” சொல்ல, இப்போது அகல்விழி அருணின் கரத்தைப் பிடித்து அழுத்தம் கொடுத்தாள்.

“இந்துக்கு இன்னும் குழந்தை உண்டாகலையேன்னு ரொம்ப வருத்தம்மா. அதுனால நாங்க ரெண்டு பேரும் செக்கப் போனோம். அப்போதான் எனக்கு குழந்தை பெத்துக்கிற தகுதி இல்லைன்னு தெரியவந்தது. ஆனா இது இந்துக்கு தெரியாது. தெரியவந்துச்சின்னா தாங்க மாட்டான்னு யோசிச்சு, ஐவிஎஃப் மூலமா குழந்தை பெத்துக்கலாம்னு முடிவெடுத்து நான் விஷ்வாக்கிட்ட பேசினேன். அவன் முதல்ல ஒதுக்கவே மாட்டேன்னுட்டான்.

நான்தான் கெஞ்சி அவனை இங்கே வரவழைச்சி, அவனோட விந்தணுவை இந்திராவோட கர்ப்பப்பையில செலுத்தினோம். ஆனா அவளுக்கு ஏதோ டிஃபெக்ட்னால குழந்தை அபார்ட் ஆகிடுச்சும்மா. அது தாங்க முடியாமதான் அவ தற்கொலை பண்ணிக்கிட்டா.” என்று சொல்லும்போதே உடைந்து விட்டான் அருண். மனைவி இறப்பிற்கு தானே காரணமாகிவிட்டோமே என வருந்தினான்.

“ஒருநாள் ஜின்சி அருவியைப் பார்த்து எதையோ சொல்லி பயமுறுத்திட்டு யோயிருக்கா, எங்களால அருவியை அந்த நிலையில பார்க்கவே முடியல. அவளை தேற்றவே ரொம்ப கஷ்டப்பட்டேன். அப்புறம்தான் அருவியோட ட்ரீட்மெண்ட் பத்தி விசாரிக்க ஆரம்பிச்சோம். அப்போதான் உண்மை தெரியவந்தது. இந்த ஜின்சிதான் காசைக் கொடுத்து விந்தணுவை மாத்தி வச்சிருக்கா. இதுக்கு ஆதாரம் எல்லாம் இருக்கு. அத்தோட அதை செய்த புண்ணியவான்களையும் கூட்டிட்டு வந்திருக்கோம்.” என அனைத்தையும் கூறி முடித்தான் விஷ்வா.

இதனைக் கேட்ட அனைவரும் அருவிக்காக வருந்தினர். ஆனால் அருவியோ அந்த நிமிடம் நிம்மதியாக உணர்ந்தாள். உண்மைகள் எல்லாம் உடைபெற, நைஸாக தப்பிக்க பார்த்த ஜின்சியைப் பிடித்து நிறுத்தினான் ஜீவா.

“எங்க ஓட பார்க்குறீங்க? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. நாங்களே உங்களை  உங்க மாமியார் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறோம்.” என்றவன் அவளை கீழே தள்ளி விட்டான்.

சரியாக அருவியின் காலடியில் விழுந்தவள் தப்பிப்பதற்காக, “இவங்க எல்லாம் என்னென்னமோ சொல்றாங்க. நம்பாத ஹனி, நான் அப்படி எதுவும் பண்ணலை. நான் எதுக்கு அந்த மாதிரி எல்லாம் பண்ண போறேன் சொல்லு?” பதற்றத்துடனே பேசினாள்.

அவளை உறுத்து விழித்த அருவி, “அதேதான் நானும் கேக்குறேன் எதுக்கு இந்த மாதிரி எல்லாம் செஞ்ச? அப்படி என்ன நாங்க பண்ணோம்னு இவ்வளவு கீழ்தரமா செய்திருக்க?” பொறுமையாகவேதான் இதனைக் கேட்டாள்.

“நான்தான் ஒன்னும் பண்ணலைன்னு சொல்றேன்ல, என்னை நம்பு ஹனி.”

“நான் என்ன பழைய அருவின்னு நினைச்சியா? இங்க இப்போ இருக்கிறது விஷ்வாவோட பொண்டாட்டி அருவி. எதுக்கு இப்படி பண்ணின?” என அவளை எழுப்பி கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டாள்.

அவளின் அறையில் கன்னத்தில் கை வைத்தவள், தன்னை இவள் அடிப்பதா என்ற கோபத்தில், “நான் இப்படி செய்ய காரணமே நீதான்டி. விஷ்வாவை பார்த்த நாளில் இருந்தே எனக்கு அவன் மேல லவ். ஆனா அவன் உன்னை மட்டும்தான் பார்ப்பான். எரிச்சலா இருக்கும், இருந்தும் அமைதியா நான் என்னுடைய காதலை சொன்னா உன்னை காட்டி என் காதலை அவமதிச்சிட்டான். அதான் அவனை பழிவாங்க உன்னை பயன்படுத்திக்கிட்டேன்.

அப்புறம் நான் பாட்டுக்குதான் இருந்தேன். நீதான் திரும்பவும் என் வாழ்க்கைக்குள்ள வந்த. இந்தமுறை விக்ராந்தோட மனைவியா வந்த, எந்த விதத்துல உன்னை காயப்படுத்தலாம்னு யோசிச்சேன். இதுதான் சரியா இருக்கும்னு தோனுச்சு செஞ்சேன்.” சொல்லி முடிக்கவுமே விக்ராந்த் அவளைக் கன்னம் பழுக்கும் அளவிற்கு ஓங்கி அடித்திருந்தான்.

“ஒரு பொண்ணா இருந்திட்டு எப்படி இப்படியெல்லாம் உன்னால செய்ய முடிஞ்சது? ச்சீ, உன்னை போயா இத்தனை வருஷமா காதலிச்சேன்னு நினைக்கிறப்போ எனக்கே என்னை பார்க்க பிடிக்கலை.” தன்னை நினைத்தே அருவருத்துப் போனான் விக்ராந்த்.

அதன்பின் அருவியிடம் வந்தவன், “என்னை மன்னிச்சிடு தேனருவி. என்னாலதான் உனக்கு இத்தனை கஷ்டமும். எங்க அம்மா எனக்கு ஒரு தேவதையைதான் பார்த்திருக்காங்க. நான்தான் ஒரு பிசாசுக்கிட்ட மாட்டிக்கிட்டேன். இதோ இப்பகூட இவ சொன்னதாலதான் இங்க வந்ததே. நான் எவ்வளவு பெரிய தப்பை பண்ணிட்டேன், என்னை மன்னிச்சிடு.” அவள்முன் மன்னிப்பை வேண்டினான்.

அருவியோ விஷ்வாவிடம் வந்தவள் அவனின் கரம் கோர்த்து, “நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லணும். ஏதோ ஒரு வகையில எனக்கு இவரு கிடைக்க தெரிந்தோ, தெரியாமலோ உதவி செய்திருக்கீங்க.” என்றவள் கணவனைப் பார்த்து கண் சிமிட்ட, அவளை அணைத்துக் கொண்டான் விஷ்வப்ராசாத்.

தன் வாழ்க்கையைக் கெடுத்து இவர்கள் நிம்மதியா வாழ்வதா என கிறுக்காக யோசித்தவள் சுற்றியும் முற்றிலும் பார்க்க, கண்கள் பளிச்சென்றது. பக்கத்தில் இருந்த கத்தியை எடுத்து அருவியைக் குத்த செல்ல, எங்கிருந்தோ வந்த தலையனை அவள்மீது விழுந்து கத்தி தூர விழுந்தது.

கத்தி விழுந்த சத்தத்தில் அனைவரும் பார்க்க, சந்தானமூர்த்திதான் தலைகாணியைத் தூக்கி ஜின்சியின்மீது எறிந்திருந்தார். மீண்டும் அவள் கத்தியை எடுக்கப் பார்க்க, அதற்குள் அங்கு வந்த பெண் போலிஸ்காரர்கள் அவளைப் பிடித்தனர்.

“என்னைய விடுங்க, நான் எதுவும் பண்ணலை. என் வாழ்க்கையை கெடுத்தவ அங்க இருக்கா. அவளை பிடிச்சிட்டு போங்க.” என ஆக்ரோஷமாய் கத்தி ஆர்பாட்டம் செய்தாள்.

“எங்களுக்கு எல்லாம் தெரியும் வா முதல்ல…” என அவளை இழுத்துச் சென்றனர். அவளுடன் அவளுக்கு துணைபோன மருத்துவரையும் செவிலியரையும் சேர்த்தே அழைத்து சென்றனர். அவர்கள் இருவரும் எத்தனைக் கெஞ்சியும் விஷ்வா மனமிறங்கவில்லை.

அனைத்தும் முடிந்து விக்ராந்த்தும் கிளம்பியிருக்க வீடே  நிசப்தமாக இருந்தது. யாரும் எதையும் பேசும் நிலைமையில் இல்லை. பெரியோர்களுக்கு சிறியவர்கள் கூறிய விடயங்களை எல்லாம் ஜீரணிக்க நேரம் தேவைப்பட்டது. அதனாலே விஷ்வா அனைவரையும் ஓய்வெடுக்கும்படி சொல்லிவிட்டு அருவியை அழைத்துக்கொண்டு அறைக்கு வந்துவிட்டான். அறைக்குள் வந்ததும்தான் தாமதம் கணவனை இறுக அணைத்தவள் முத்தமழை பொழிந்தாள்.

அவன் காட்டில் காதல் மழை அடித்து பெய்ய, வேண்டும் அளவு அதில் நனைந்தான்.

“எனக்கு மனசுல ஒருபுறம் வருத்தம் இருந்திட்டேதான் இருந்தது ப்ராசாத். என்ன இருந்தாலும் அம்மு உங்களுக்கு பிறந்தவ இல்லையேன்னு. ஆனா இப்போ ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன். எனக்கு என்னோட சந்தோஷத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை.” அவளின் மகிழ்வைக்காட்ட, அவனின் காதல் பார்வை ஊசிப்போல் துளைக்க, காதல் வீச்சைத் தாங்க முடியாது அவனுள்ளே புதைந்து போக, அவனின் மோகனங்கள் பேசத்துவங்கியது மனைவியின் தேகத்தில்.

அன்றைய இரவு அவர்களுக்கு இனிமையாய் கடக்க, மதியே இதற்குமேல் தாங்காதுடா சாமி என மெல்ல மெல்ல தன்னைக் கதிரவனிடம் மறைத்து கொள்ள, விடியல் பிறந்தது.

அதிகாலை பொழுது  மலர்களில் இருந்து பனித்துளிகள் சொட்டாய் கீழே விழ, மொட்டுகள் எங்கும் விரியத் துவங்கிய நேரம் கண்கள் மெதுவாய் திறந்தாள் அருவி. கண்களைத் திறந்ததும் அவளின் விழிகளுக்கு அவளவன் அழகாய் தரிசனம் தர, சற்று எக்கி அவனின் சிகையைக் கோதி நெற்றியில் அழுந்த முத்தமிட்டாள்.

காந்தையின் வாசத்தில் மெல்ல கண்கள் திறக்க, அவனவளின் அழகிய வதனம் தெரிய அழகாய் ஒற்றைக் குழி விழ மோகனமாய் புன்னகை, அவன்மீது மீண்டுமொருமுறை மையல் கொண்டாள் காரிகை.

“இந்த சிரிப்புதான் உங்க மேல என்னை பித்தாக்குது. இன்னும் இன்னும் உங்க மேல பைத்தியமாகுறேன். லவ் யூ சோ மச் ப்ராசாத்!” காதல் சொன்னவளின் முகத்தில் அத்தனை தேஜஸ். காதலைச் சொன்ன அதரங்களை அப்படியேக் கவ்வினான்.

அவனின் தீண்டலில்… ஸ்பரிசத்தில்… முகம் செவ்வானமாய் சிவந்தது.

நீண்ட நெடிய முத்தம் இருவருக்கும்!

மனம் முழுவதும் தீரா காதலும் தெவிட்டா ஆசைகளும் போட்டியிட, தித்திக்கும் தேனாய் திகட்டா சுவையாய் அவன் கையில் பாவைக் கரைந்தாள்.

காதல்… காதல்… அறை முழுதும் காதல் வாசமே!

கீழே அனைவரும் விஷ்வா மற்றும் அருவிக்காய் சாப்பிடாமல் காத்திருக்க, அவர்களோ அவர்களின் பசியை எல்லாம் போக்கிய பின்பு நேரம் கழித்தேதான் கீழே வந்தனர். வரும்போதே, “உங்களால தான் லேட்…” ஒருவித வெட்கத்துடனே சிணுங்க,

“எது நானா? நல்லா யோச்சி பாரு, யாரு யாரை முதல்ல டெம்ப்ட் பண்ணதுன்னு…” கிண்டல் செய்ய, செல்லமாய் கணவனை அடித்தாள் அருவி.

அருவி கவலையாக இருப்பாள், அவளைத் தேற்றலாம் என குடும்பமேக் காத்திருக்க, அவளோ அத்தனை சந்தோஷத்தை குத்தகைக்கு எடுத்ததுப் போல் அழகாய் ஒளிர்ந்தாள்.

அவளை ஒளிர வைத்தது விஷ்வாவின் காதல்!

தாயும் தந்தையும் வருவதைக் கண்ட பூவினி, அவர்களிடம் ஓடினாள். பிள்ளையைத் தூக்கி கொண்ட விஷ்வா அவளின் கன்னத்தில் முத்தம் பதிக்க, அதற்குப் பதிலாய் அவள் இருமடங்காக முத்தமிட்டு தன் பங்கைக் கொடுத்தாள்.

“எனக்கு?” என அருவியும் அவள் கன்னத்தைக் காட்ட, அவள் கன்னங்களையும் ஈரமாக்கினாள் பூவினி.

இவர்களின் மகிழ்வைக் கண்ட மஞ்சுளாவும் சந்திராவும் இவர்களுக்கு முதலில் சுற்றிப்போட வேண்டுமென நினைத்தனர்.

“போதும்… போதும்… இங்க ஆல்ரெடி எல்லாரும் ஜன்னி வந்த மாதிரிதான் இருக்கோம். உங்க பாச மழையில எங்களை படுக்க வச்சிடாதீங்க…” அகல்விழி மூவரையும் நக்கல் செய்ய, அந்த வீடே சிரிப்பொலியால் கலகலத்தது.