யாழ்-5

யாழ்-5
யாழ்-5
ஐந்து வருடங்களுக்கு முன்..
“இப்ப என்ன? மணி ஏழு தானே ஆகுது. எதுக்கு பிள்ளைய இப்படி பாடாப்படுத்துற கல்யாணி!” மனைவியிடம் முறையிட்டுக் கொண்டிருந்தார் சக்திவேல்.
“ஆமா, தொட்டில்ல போட்டு ஆட்டுங்க சரியா. நாளைக்கே ஒரு வீட்டுக்கு போனானா என்னைத்தானே திட்டுவாங்க! உங்களுக்கு என்ன?” கத்திக் கொண்டிருந்தார் கல்யாணி.
“அதுதான் அடுத்த வீட்டுக்குப் போறவரைக்கும் இங்க, அது இஷ்டத்துக்கு இருக்கட்டும்னு சொல்றேன்!” சக்திவேல் மீண்டும் வாதாட,
“எல்லாம், நீங்களும் உங்க அண்ணனும் குடுக்கிற செல்லம்தான்” கல்யாணி பொரிய, கொட்டாவி விட்டபடியே தன்னுடைய அறையில் இருந்து வெளியே வந்தாள் ராஷ்மிகா. அவர்களுடைய ஒரே புதல்வி.
“அம்மா காஃபி!” என்று ஷோபாவில் வந்து ‘னங்’ என்று அமர்ந்த மகளை முறைத்தார் கல்யாணி.
“ஏண்டி, எவ்வளவு தடவ சொல்றது? நேரத்துல எந்திரிச்சுப் பழகுனு. மணியைப் பாத்தியா ஏழரையே ஆகப்போகுது” கடிகாரத்தைச் சுட்டிக்காட்டி மகளைத் திட்டினார் கல்யாணி.
“நானும், எவ்வளவு தடவ சொல்றது? என்னால எந்திரிக்க முடியலனு..” திருப்பி வாயாடிய மகளைக் கோபமாய்ப் பார்த்தவர்,
“போய் மாமியார்ட்ட இடி வாங்குவல்ல.. அப்பதான்டி என் அருமை தெரியும், உனக்கெல்லாம்” என்று திட்டியவர் மகள் கேட்ட காஃபியைக் கலக்க உள்ளே சென்றுவிட்டார்.
“ப்பா.. பாருங்கப்பா! இந்த அம்மாவை எப்பப்பாரு கல்யாணம் பண்ணி
அனுப்பி விடறதுலையே இருக்காங்க” சிடுசிடுத்தாள் ராஷ்மிகா.
“நீ விடுடா.. அவ கிடக்கறா” சக்திவேல் செல்லம் கொஞ்ச காஃபியைக் கலக்கிக்கொண்டு வந்த கல்யாணி, அப்பா மகள் இருவரையும் பார்த்துவிட்டு,
“ஏய்! உனக்கென்ன சின்னக் குழந்தைனு நினைப்பா? கொஞ்சமாவது இருபத்தியொரு வயசுப்பொண்ணு மாதிரி நடந்துக்க..” அதட்டியபடியே மகளின் கையில் காஃபியைக் கொடுத்தார்.
“முடியாது முடியாது” வடிவேலு பாணியில் ராஷ்மிகா சொல்லிவிட்டு
காஃபியைக் குடிக்க மகளின் தலையில், நறுக்கென்று கொட்டிவிட்டுப் போனார் கல்யாணி.
சமையலறைக்குள் செல்லும் அன்னையை சிறிது கோபத்தோடு பார்க்க, “விடுடா! அவளை அப்புறம் பாத்துக்கலாம்” மகளின் தலையைத் தேய்த்து விட்டபடியே தந்தை சொல்ல, காஃபியை ரசித்து ரசித்து உறிஞ்சியபடியே அவரிடம் வாயடித்துக்கொண்டிருந்தாள் ராஷ்மிகா.
ராஷ்மிகா, சக்திவேல்-கல்யாணி தம்பதியருக்குப் பிறந்த ஒரே செல்ல மகள். சக்திவேலுடைய அண்ணன்தான் சிவக்குமார்.
சிவக்குமார்-விஜயலட்சுமி தம்பதியருக்கு கல்யாணம் ஆகியும் மூன்று வருடம் குழந்தை இல்லாத போதுதான் ராஷ்மிகா பிறந்தது. தம்பி மகளை பார்த்த அன்றே, மலர் பந்தாய் இருந்தவளின் அழகில் உருகிய சிவக்குமார் ராஷ்மிகாவை அன்பால் கரைய வைக்க, விஜயலட்சுமியும் சளைக்காமல் பாசத்தைக் கொட்ட, அவர்களுக்கும் செல்லமாகி வளர்ந்தாள் ராஷ்மிகா.
ராஷ்மிகா பிறந்து ஒன்றரை வருடத்திலேயே ஹர்ஷவர்தனும் பிறந்தான். அப்போதும் ராஷ்மிகாவிற்கு செல்லத்தில் குறைவில்லை. ஹர்ஷவர்தனிற்கும் அன்பிலும் குறை வைக்கவில்லை யாரும்.
இன்றுவரை எந்தத் தப்புத் தண்டாவும் ராஷ்மிகா வைத்துக் கொண்டது இல்லை.
குளித்துவிட்டுப் பிஸ்தா நிற குர்தாவையும் ப்ளூ ஜீன்ஸையும் அணிந்து கொண்டு வந்த ராஷ்மிகா, “அம்மா காலையில என்ன சாப்பிட?”
என்றபடியே கழுத்துக்கும் கொஞ்சம்வரை கீழிருந்த முடியை ஸ்டைலாகக் கோதியபடியே வந்தாள்.
“போய் சாமி கும்பிட்டு வந்து சாப்பிடு” அன்னை சொல்ல, தட்டாமல் செய்தாள். காரணம், அவளது தந்தை வழிப்பாட்டி தெய்வநாயகி. சிறிய வயதில் இருந்து தவறாமல் அவள் செய்யும் பழக்கம்.
“ஏண்டி! தலமுடிய நல்லா வளத்தி, நல்லா சீவுனா எப்படியிருக்கும் அழகா..” கல்யாணி குற்றப்பத்திரிகை வாசிக்கத் துவங்க,
“ஹம்ஹம்.. நாளையில இருந்து எண்ணை தேச்சு தலைய பிண்ணிட்டு போறேன்” நக்கலாய் இட்லியைப் பிட்டு வாயில் போட்டபடியே ராஷ்மி சொல்ல,
“திமிரு, திமிரு. இதெல்லாம் அடக்க ஒருத்தன் வருவான் பாரு” என்றவர் இன்னொரு இட்லியை மகளிற்காக வைக்கத் தவறவில்லை.
“ஹாய் ஆன்ட்டி! ஹாய் அங்கிள்!” என்றபடியே உள்ளே வந்த சரண், சக்திவேல் அருகில் அமர்ந்தான்.
“என்னடா தடிமாடு சாப்பிட்டியா?” ராஷ்மி கேட்க, “எத்தனை தடவை சொல்றது ஆம்பளை பசங்களை கண்டபடி கூப்பிடாதேன்னு” அதட்டினார் கல்யாணி.
“ஆம்பளை.பையனா… ஹாஹாஹா” ராஷ்மிகா சிரிக்க, “இங்க பாருங்க உங்க பொண்ணு ரொம்பதான் இப்போல்லாம் பண்றா” கல்யாணி, சக்திவேலிடம் சொல்ல,
“என்ன ராஷ்மிமா? சீக்கிரம் விளையாட்டு பண்ணாம காலேஜ் கிளம்பு” மனைவிக்குத் தெரியாமல், மகளுக்குச் சொல்ல அதைப் புரிந்து கொண்ட ராஷ்மியோ சீக்கிரம் சாப்பிட்டு முடித்துக்கொண்டு எழுந்தாள்.
“பை அம்மா“ என்றவள், “பை அப்பா” என்று அவரை ஒருமுறை கட்டிப் பிடித்துவிட்டு, “டேய் டிரைவர் வா” வேண்டுமென்றே சரணை டிரைவர் என்று வம்பிழுத்துவிட்டு முன்னே நடந்தாள்.
சரணுடன் காரில் ஏறி அமர்ந்தவள், அன்னை தந்தைக்கு டாடா காமிக்க, சரணும் அவர்களுக்குக் கையை ஆட்டிவிட்டு காரை எடுத்தான்.
“என்னங்க பயமா இருக்குங்க” சக்திவேலிடம் கல்யாணி சொல்ல,
“எதுக்கு பயம் கல்யாணி”
“வயசுப்பொண்ணு. இப்படிப் போனா என்னங்க நினைப்பாங்க?” கல்யாணி தாய்க்குரிய ஆதங்கத்தில் கேட்க,
“இதுல என்ன இருக்கு கல்யாணி? அவங்க டென்த்-ல இருந்து ஒன்னா படிக்கறாங்க. நல்ல ப்ரண்ட்ஸ். சரணும் நல்லபையன். நம்ம பொண்ணு அந்த மாதிரி எதுவும் பண்ணாது” மகளின் மீதுள்ள அதீத நம்பிக்கையில் பேசினார்.
ஆனால் கல்யாணிக்கோ மனம் ஆறவில்லை. மனதுக்குள் இப்போது எல்லாம் அவருக்கு காரணமில்லாமல் படபடப்பாக இருந்தது.
கணவரை ஏறிட்டுப் பார்த்தவர், “அது சரிங்க.. இரண்டு பேருமே நல்ல பிள்ளைகதான். ஆனா, ஊரும் அதே மாதிரி நினைக்குமா?”
“சென்னைல இருக்க கோடி பேருக்கும் வேலையிருக்கு கல்யாணி. நம்ம பொண்ண கவனிக்கறதுல யாருக்கும் வேலையில்ல” குறுஞ்சிரிப்புடன் சொல்லி, மனைவியைத் திரும்பிப் பார்க்க கல்யாணியின் யோசனையான முகத்தைக் கண்டவர்,
“இங்க பாருமா. எதுக்கு தேவையில்லாம யோசிச்சு குழம்பற. எது நடந்தாலும் நல்லதுக்குதான்” சமாதானம் செய்துவிட்டு தன்னுடைய டிப்பார்ட்மென்டல் ஸ்டோருக்குக் கிளம்பினார் சக்திவேல்.
காரில் சென்று கொண்டிருந்த சரணிடம் வளவளத்தபடியே வந்தாள் ராஷ்மிகா. “டேய் இன்னிக்கு கட் அடிச்சிடலாம். நம்ம கேங்-அ பேசாம ஓ.எம்.ஆர் வரச்சொல்லிடுடா” என்று கேட்க, அவளின் தைரியத்தில் சரண் சடன் ப்ரேக் போடாத குறைதான்.
“ஏய்! பைனல் இயர் வந்த தைரியம் உனக்கு அதிகம்தான். வேண்டாம் ராஷ்மி. இன்னிக்கு காலேஜ்ல ஜூனியர்ஸ் வராங்கலாம். போய் அவங்கள வச்சு ஃபன் பண்ணலாம்” குஷியாக அவன் சொல்ல,
“பொண்ணுங்கள சைட் அடிக்கப் போறன்னு சொல்லு” அவனை மேலிருந்து கீழ்வரை கேவலமான லுக்விட்டவள் சிக்னல் வர வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.
சிக்னலில் தங்கள் அருகில் பைக்கில் தந்தையுடன் உட்கார்ந்திருந்த ஐந்துவயது சிறுவனைப் பார்த்தவள், தனது வேலையை ஆரம்பித்தாள்.
“ஹாய்” என்று கையை ஆட்ட சிறுவனும் கையை ஆட்டினான்.
“உன் பேர் என்ன?” சைகையில் கேட்க, “அஷ்வின்” என்றான்.
“என் பேர் தெரிமா?” கேட்க, சிறுவன் இடமும்வலமும் தலையை ஆட்ட, “ராஷ்மிகா” என்று சொன்னாள்.
சிக்னல் விழுந்ததும் சரண் காரையெடுக்க, “பை அஷு!” என்று ப்ளையிங் கிஸ்ஸைத்தர, சிறுவனோ வெட்கப்பட்டு டக்கென்று டாடா காண்பித்துவிட்டு கண்களை மூடிக்கொண்டான்.
சிறுவனின் செயலில் காரின் சீட்டில் சாய்ந்து ராஷ்மிகா சிரிக்க “அடங்கவே மாட்டியா ராஷ்மி” சரண் கேட்ட, மாத்திரத்தில் அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
“நீ பையன்கிட்ட பேசற. அங்க இருந்த நிறையபேர் உன்னதான் பாத்துட்டு இருந்தாங்க. அந்த பையனோட அப்பாவும்” சிரித்தவனை, முறைத்தவள் மேலே எதுவும் பேசவில்லை.
இருவரும் வந்து காலேஜில் காரை பார்க் செய்துவிட்டு நடக்க ஆரம்பிக்க, ராஷ்மிகாவின் ஃபோன் அலறியது. ஃபோனை எடுத்தவள், “சொல்லுடி” என்றாள்.
“ராஷ்மி எங்க இருக்கீங்க? நீயும் சரணும் தானே?” அவர்கள் கேங்கில் ஒருத்தியான மான்சி.
“ஆமாடி. பர்ஸ்ட் ஹார் எங்க?” ராஷ்மிகா கேட்க,
“இல்ல.. நீங்க ஆடிட்டோரியம் வாங்க” என்றுவிட்டு வைத்துவிட்டாள்.
“டேய் வா. ஆடிட்டோரியம் போனுமாம்.. ஐ திங்க் இன்னிக்கு ஃபர்ஸ்ட் இயர்க்கு ஓரியன்டேஷன் ப்ரோகிராம்” என்று சொல்ல இருவரும் நடந்து ஆடிட்டோரியத்தை அடைந்தனர்.
ஆடிட்டோரியம் வந்து கடைசி வரிசையில் சென்று தங்கள் படையோடு உட்கார, சரண் பசங்களோடு சேர்ந்து, ‘எந்த பொண்ணு நல்லா இருக்கு’ என்று பார்க்க ஆரம்பிக்க, ராஷ்மிகா தோழிகளோடு அரட்டையில் லயித்திருந்தாள்.
ப்ரினிசிபால், கரஸ்பாண்டன்ட் என அனைவரும் பேசிமுடிக்க ஒருவழியாக அந்தக்கூட்டம் கலைந்தது.
இவர்களும் கடனே என்று மதியம்வரை வகுப்பில் உட்கார்ந்திருந்தனர். மதியம் கான்டீனில் அமர்ந்து அனைவரும் உண்ண, “ஹேய்! நான் இன்னிக்கு அவளை ராக் பண்ண போறேன்” என்று ஆரம்பித்தான் அவர்களுள் ஒருவனான சிவா.
அனைவரும் யாரென்று திரும்பிப் பார்க்க, அங்கே ஒரு பெண் இன்னொரு பெண்ணுடன் அமர்ந்துகொண்டு தனது உணவை
அளந்துகொண்டு இருந்தாள்.
“பாத்தா பெரிய இடத்து பொண்ணு மாதிரி இருக்கு சிவா. வேண்டாம்
ரிஸ்க். ஏதாச்சு கம்ப்ளைன்ட் பண்ண போறா” மான்சி எச்சரிக்க,
“பெரிய இடம்னா. தனியா காலேஜ் கட்டி படிக்க சொல்லு. டேய் சிவா, ஈவ்னிங் ஆடிட்டோரியம்ல வச்சிடலாம்” ராஷ்மிகா ஆரம்பிக்க சரண் தலையில் கைவைத்துக் கொண்டான்.
“அப்ப நீ வர மாட்டல.. அப்ப அவ்வளவுதான்ல ஃப்ரண்ட்ஷிப்” சரணின் செய்கையில் முகத்தை வேண்டுமென்றே ராஷ்மிகா பாவமாக வைத்து ஆரம்பிக்க,
“ஆத்தா.. மாரியாத்தா.. வரேன் போதுமா.. அதுக்குன்னு இந்த மாதிரி மூஞ்சிய வைக்காத” என்றான் ஒரு கும்பிடோடு.
இவர்களின் மொழியில் ராக்கிங் என்றால் கூப்பிட்டு குரலை இறுக வைத்துக்கொண்டு பெயர், ஊர் என எதையாவது பேசவது மட்டுமே. சீனியர் என்ற கெத்தை காட்ட நினைப்பது. மத்தபடி எதுவுமில்லை.
பிரச்சனையை காசு கொடுக்காமல் வாங்க முன் வந்தனர் நால்வரும். அன்று மாலை ஒரு இரண்டாமாண்டு மாணவியை வைத்து அப்பெண்ணை ஆடிட்டோரியம் வர வைத்தனர்.
உள்ளே நுழைந்தவள் யாரும் இல்லாததைக் கண்டு கண்களை சுற்றிமுற்றித்தேட, திடீரென ஆடிட்டோரியம் ஸ்பீக்கரை ஆன் செய்தனர்.
அது எழுப்பிய சத்தத்தில் பயந்து அவள் காதைப்பொத்த, “சௌன்ட்டை கம்மி பண்ணு எரும.. பயந்துட்டா போல பாவம்” என்றாள் ராஷ்மிகா சிவாவிடம்.
“ஹே ரிலாக்ஸ்! இங்க மேல வா!” ஒளிந்திருந்த ராஷ்மிகா வெளியே வந்து, அப்பெண்ணை ஸ்டேஜிற்கு அழைத்தாள்.
“உன் பேர் என்ன?” வந்தவுடன் முந்திக்கொண்டு, சிவா கேட்டான்.
“கீ…னி” அப்பெண் வாய்குள்ளேயே சொன்னது யாருக்கும் எதுவும் கேட்கவில்லை. அதாவது அவளுக்கு பயமென்று இல்லை. வேண்டா வெறுப்பாக நின்றிருந்தாள்.
“சத்தமா பேசத் தெரியாதா?” ராஷ்மி அதட்ட அவளின் குரல் வெளி வந்தது.
“கீர்த்தனா ஆதர்ஷினி” என்றாள் கடினமானக் குரலில். யாரென்றே தெரியாதவர்கள் அழைத்து கேள்வி கேட்க அவளுக்கு சுறுசுறுவென கோபம் ஏறியது.
அவளை அப்படி யாரும் இதுவரை நிற்க வைத்து கேள்வி கேட்டதில்லை.
“ஸ்கூலிங் எங்க பண்ண?” சரண் ஒரு டேபிளின் மேல் ஏறியமர்ந்து கால்களை தொங்கப் போட்டபடியே கேட்டான்.
“செட்டிநாடு வித்யாஷ்ரம்” என்றாள். வெறும் பதில்தான்.
“உன் ஹைட், வெயிட் என்ன?” சிவா கேட்க அனைவருமே அதிர்ந்தனர்.
“டேய்!” சரண் அவன் தோளைப் பிடித்துக் காதைக் கடிக்க, சிவாவோ ஹீரோ பாவனையோடு நின்றிருந்தான்.
“சரி, வீடு எங்க இருக்கு?” பேச்சை மாற்றி விட்டாள் ராஷ்மிகா. அவளிற்குமே சிவாவின் கேள்வி பிடிக்கவில்லை. இருந்தாலும் அன்னியப் பெண் முன் நண்பனைக் கடியவும் மனமில்லை.
“நீலாங்கரை” கீர்த்தனா ஆதர்ஷினி சொல்ல சரணிற்கு எங்கேயோ இடித்தது.
“என்ன? உனக்கு சீனியரை எப்படி கூப்பிடனும்னு தெரியாதா? என்ன கேட்டாலும் அப்படியே ஒன்வோர்ட் ஆன்சர் பண்ற. ஒழுங்கா ஸார், மேம்ன்னு கூப்பிடு” ராஷ்மிகா அதட்டினாள்.
“ம்ம்” தலையை மட்டும் ஆட்ட, ராஷ்மிகாவிற்கு எரிச்சல்தான் வந்தது. ‘இப்போ என்ன பண்ணிட்டோம்னு இவ இப்படி நிக்கறா. இவ எல்லாம் மெடிக்கல் காலேஜ்ல சேர்ந்திருக்கனும். ராகிங்னா என்னன்னு தெரிஞ்சு இருக்கும்’ என்று மனதில் நினைத்தவள் எதுவும் பேசாமல் நின்று விட்டாள்.
“சரி டிக்டாக் பண்ணுவியா? நான் ஒரு டயலாக் எடுத்துத்தரேன். என்
ஃபோன்ல பண்றியா?” என்ற ராஷ்மிகா, “இல்ல எடுத்துத் தரேன். நீ பண்ணிட்டுதான் போகணும்” என்று சீனியருக்கே உண்டான கட்டளை போலச் சொல்ல, கீர்த்தி ராஷ்மிகாவை வெட்டவா குத்தவா என்பது போல முறைத்தாள்.
“ஏய், என்ன முறைக்கற? இப்ப உன்னை என்ன பண்ணாங்க. என்ன சீன் போடறியா?” என்று குரலை சற்று உயர்த்த , சரணிற்கு உள்ளுக்குள், ‘அய்யோ இவ என்ன டென்ஷன் ஆகறா’ என்றிருந்தது.
“சரி விடு ராஷ்மிகா. அவ போகட்டும். சரி நீ போ!” என்ற சரண், கீர்த்தனா ஆதர்ஷினியை அனுப்ப ராஷ்மிகா, சரணிடம் திரும்பினாள்.
“டேய்! இவ என்ன ஊமக்கொட்டான் மாதிரி நிக்கறா. கூப்பிட்டு பேர் தானே கேட்டோம். சீன் சரியான சீன்” ராஷ்மி பொரிய,
“கூல் டி. அவளே காலேஜ்ல ஃபர்ஸ்ட்டே. அதான் பயந்திருப்பா” சரண், ராஷ்மியிடம் சமாதானத்திற்கு சொன்னாலும் அவனிற்குத் தெரியும் கீர்த்தி பயப்படவில்லை என்று.
“சரி வா.. கிளம்பலாம்” ராஷ்மிகா சொல்ல, மான்சியிடமும் சிவாவிடமும் சொல்லிக்கொண்டு சரணும் ராஷ்மிகாவும் கிளம்பினர்.
வருகிற வழியில், “பசிக்குது டா!” என்றாள் ராஷ்மிகா.
‘ஆரம்பிச்சுட்டா டா’ மனதுக்குள் நினைத்த சரண், ஒரு சின்ன சந்திற்குள் வண்டியை விட்டான்.
அவர்கள் எப்போதுமே சாப்பிடும் ஆங்கிலோ இந்தியன் கடைதான். சாண்ட்விச் வகைகள், சவர்மா, பர்கர்ஸ் என அனைத்தும் இருக்கும் ஒரு குட்டி சைஸ் கடை. ஆனால் கூட்டமோ தள்ளுமுள்ளுதான். இன்று அவர்கள் சீக்கிரமே வந்து விட்டதால் ஒன்று இரண்டு பேர்தான் இருந்தனர். அடிக்கடி வரும் கடை என்பதால், கடையின் முதலாளி இருவரையும் பார்த்து புன்னகைத்துவிட்டு, ஆர்டரைக் கேட்டுக்கொண்டு சென்றார்.
இருவரும் அங்கிருந்த இரண்டு பேர் நிற்கக் கூடிய நிழற்குடை அடியில் நின்று கதை பேச ஆரம்பித்தனர். திடீரென அங்கு வந்த பி.எம்.டபிள்யூ கார் ஒன்று சரணுடைய வோக்ஸ்வேஜன் வெண்டோவை உரச, “கீர்ர்ர்ர்” என்று வந்த சத்தத்தில் அனைவரும் திரும்ப, அந்தக் காரும் சிறிது தூரம் சென்று நின்றது.
சரணும் ராஷ்மியும் ஓடிவந்து காரைப் பார்க்க, அது ஒருபக்கம் முழுதாக கீறி இருந்தது. ராஷ்மிக்குத் தெரியும் சரண் கல்லூரியில் ராங்க் ஹோல்டர் வாங்கியதிற்கு அவனுடைய தந்தையிடம் கேட்டு வாங்கிக் கொண்டது என்று.
காரில் இருந்த கீறலைப் பார்த்த சரணின் கண்களில் கண்ணீர் கீற்று உருவாக, கீறல் விழுந்த இடத்தைத் தடவியனுக்கு இதயம் வலித்தது.
ராஷ்மிகாவின் கத்தலைக் கேட்டவன் என்னவோ என்று திரும்ப, அவள் உள்ளே உட்கார்ந்திருந்த கார்காரனிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தது மட்டும் தெரிந்தது. உள்ளே உட்கார்ந்தவன் ஏதோ வெளியே கையை நீட்டி எச்சரித்து பணத்தை எடுத்துத்தர, ராஷ்மிகாவும் சத்தமாக ஏதோ பதிலைத் தந்து விட்டு பணத்தை உள்ளே வீசிறிவிட்டு எறிந்துவிட்டுத் திரும்பி நடந்தாள்.
அவனும் அதே வேகத்தோடு காரை எடுத்துவிட்டு கிளம்பிவிட்டான்.
இதெல்லாம் சரண் சுதாரித்து அருகே செல்வதற்குள் நடந்து விட்டது. “ராஷ்மி எதுக்கு அவன்கிட்ட சண்டைக்கு போன?” சரண் கண்டித்தான்.
“பின்ன ஒரு ஸாரி கூட சொல்லாம போறான். கேட்டா திமிரு வேற. ஊமக்கொட்டான் மூஞ்சி. மூஞ்சியும் அவனும்” பொரிந்தவள் கடுகடுவெனவே இருந்தாள்.
“சரி வா. வந்து சாப்பிடு!” சரண் அழைக்க,
“பர்ஸ்ட் நாம காரை எடுத்திட்டுப் போய் காமிக்கலாம் வா. எனக்கு சாப்பிடற மூடே இல்ல” என்றாள் ராஷ்மி. ஏனோ சரணின் கார் இப்படி ஆனதிற்கு தானும் ஒரு காரணமோ. பேசாமல் வாயை மூடிக்கொண்டு வீட்டிற்கே நேராக சென்றிருக்கலாமோ என்று தோன்றியது அவளுக்கு.
“ராஷ்மி, ப்ளீஸ் வந்து சாப்பிடு. இதை நான் பாத்துக்கறேன்” வற்புறுத்தி அவளை அழைத்துச்சென்று சாப்பிட வைத்தான்.
அடுத்தநாள் தங்களுக்காக காத்திருந்ததைப் பற்றியும், நடக்கப் போவதையும் இருவருமே அறியவில்லை.
அது தன் வாழ்வையே திருப்பிப் போடக் காத்திருக்கிறது என்பதை அறியாத ராஷ்மிகா சாண்ட்விச்சை கபளீகரம் செய்து கொண்டிருந்தாள்.