யாழ்-8

யாழ்-8
யாழ்-8
அஷ்வின் சொன்னதைக் கேட்ட ராஷ்மிகாவின் மனம், விட்டுவிட்டுத் துடித்தது. அஷ்வின் அவளது சல்வாரின் முடிச்சை விட, அவனை விட்டு அவசரமாக விலகியவள், அவனை குழப்பமாகப் பார்க்க, ராஷ்மியைப் பார்த்து கண்ணை அடித்து வசீகரமாய் ஏளனப் புன்னகையை வீசினான் அஷ்வின்.
அவள் பயப்படுவாள் அல்லது கண்ணீரை சிந்துவாள் என்று நினைத்த அஷ்வினிற்கு அவள் தந்த வெளிப்படையான பேச்சு கோபத்தைக் கிளப்பியது.
ஏற்கனவே எப்போது வெடிக்கலாம் என்று காத்திருக்கும் எரிமலை அவன். இதில் அவள் வேறு அவனை இன்னும் சீற்றம் காணச் செய்கிறாள்.
அவனைவிட்டு விலகி நின்றிருந்தவள், அவன் முகத்திற்கு நேராகவே, அவனைப் பார்வையால் பொசுக்கி, “பொறுக்கி!” என்றாள் பல்லைக் கடித்தபடி.
அவளின் அருகில் அவன் அழுத்தமானக் காலடி ஓசையோடு வர, அவள் நகராமல் அவனை எரித்த பார்வையோடு தைரியமாய் நின்றிருந்தாள்.
“உனக்கு இந்த பயம், அழுகை இதெல்லாம் வரவே வராதா?” என்று வினவினான்.
ராஷ்மிகாவிற்கோ ,‘இவன பொறுக்கினு திட்டுனா, இவன் என்ன கேக்கறான் லூசு’ என்று மனதில் எழாமல் இல்லை.
“நான் கேட்டதுக்கு பதில்?” அவன் விடாமல் கேட்க, “நான், ஏன் உன்னைப் பாத்து பயப்படணும்?” என்றாள் நிமிர்வுடன்.
அவளின் பதிலில் அவனிற்கு, ‘எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோல’ இருந்தது. இத்தனை பிசினஸைக் கட்டி ஆண்டு எதிரிகளை பார்வையாலே நடுங்கச் செய்பவன், சிறு பெண்ணிடம் தோற்பதைப் போல உணர்ந்தான்.
“உன்ன ஒரு நாள் அழ வைக்காம விடமாட்டேன்” அழுத்தமான பார்வையோடு அவளின் உயிரையே அசைத்துப் பார்க்கும் ஊடுருவும் குரலில், ராஷ்மிகாவிடம் சபதமிட்டான். அவனின் சொற்கள் ராஷ்மிகாவின் மனதில் கல்வெட்டில் பதிவது போலப் பதியத்தான் செய்தது.
ஆனால், அவனின் முன் தன் மனதில் இருப்பதை காட்டிக் கொடுப்பாளா அவள்?
“முடிஞ்சா பண்ணுடா பாக்கலாம்” கோபத்தீயாய் அவள் குரல் எதிரொலிக்க, அந்த ஏசி அறையிலும் அதன் சூட்டை அஷ்வினால் உணர முடிந்தது.
“அதையும் பாக்கதான போற” என்றவன் அந்த அறையை விட்டு கூலாக எதுவும் நடவாதது போல வெளியே சென்றுவிட்டான்.
அவன் வெளியே சென்றுவிட்டான். ராஷ்மிகா தான் அங்கிருந்த ஷோபாவில் தலையைப் பிடித்து அமர்ந்துவிட்டாள். அவன் சொன்னதே மண்டைக்குள் மீண்டும் மீண்டும் ஓடியது. இரு கைகளால் காதைப் பொத்தி உட்கார மீண்டும் அதே வார்த்தைகள்.
‘டவல் மட்டும் கட்டியிருந்த ஃபோட்டோல ஹாட் அண்ட் செக்ஸியா இருந்த’ என்பதே அவன் சொன்ன வார்த்தைகள்.
ஆம்! ராஷ்மிகாவின் ஃபோனில் அஷ்வின் பார்த்தது.
ராஷ்மிகா கொஞ்சம் பூசினாற் போன்ற உடல்வாகுதான். அதாவது சப்பி கேர்ள்.
உடம்பைக் குறைக்கிறேன் என்ற பேர் வழியில் ஒரு ஃபோட்டோவை எடுப்போம், ஒரு மாதம் கழித்து வித்தியாசம் இருக்கிறதா என்று பார்ப்போம் என்று லூசுத் தனமாக எடுத்த ஃபோட்டோ அது.
மார்பிற்குக் குறுக்காக ஒரு நீளமானத் துண்டைக் கட்டிக்கொண்டவள் கண்ணாடியின் முன் நின்று அதை ஃபோட்டோ எடுத்திருந்தாள். மார்பிலிருந்து தொடங்கி முட்டிக்கு கொஞ்சம் மேல் வரையிருக்கும் அந்த போட்டோவைத்தான் அஷ்வின் பார்த்திருந்தான்.
இப்போதும் அதை நினைத்து இந்தப் பெண்ணிற்கு தன்னுடைய முட்டாள் தனம் இதில் சிறிதிருப்பது தெரியவில்லை. ஒரு பெண்ணிடம் வந்து எப்படி பேசுகிறான் என்ற எண்ணமே எழுந்தது.
மணியைப் பார்த்தவள் வெளியே வர, மோதிரம் மாற்றிக்கொண்டு இருந்தனர். அமைதியாக சென்று தன் அன்னை அருகே ராஷ்மிகா நிற்க, மேடையின் அருகில் யாருடனோ பேசிக்கொண்டிருந்த அஷ்வின், இவளைத்தான் கவனித்துக்கொண்டிருந்தான்.
அவன் கவனிப்பதைப் பார்த்த ராஷ்மிகாவிற்கு, முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. முகத்தை வேறு பக்கம் திருப்பியவள் அன்னையிடம் சாதாரணமாகப் பேசுவதைப்போல, எதையெதையோ பேசினாள். இங்கே இப்படியிருக்க இன்னொரு பக்கம் வேறொரு கூத்து
நடக்க ஆரம்பித்தது.
நிச்சயத்திற்கு வந்த ஹர்ஷவர்தன், நண்பன் ஒருவன் ஃபோன் செய்ய கூட்டமான இடத்தைவிட்டு நகர்ந்து டைனிங்ஹால் உள்ளே சென்றான். சென்றவன் ஏதேதோ பேசியபடி நகர, பின்னால் யாருமில்லை என்று நினைத்து நகர்ந்தவன், தண்ணீர் க்ளாஸில் தண்ணீரைக் குடித்துக் கொண்டே நடந்து வந்தவள் மீது இடித்துவிட்டான்.
“ஸாரி!” என்றபடி திரும்பியவன், கீர்த்தனா ஆதர்ஷினியின் அழகில் மனதை பறக்கவிட்டது உண்மைதான். அவளின் சந்தன நிறத்திற்கு ரத்தநிற, லாங் ட்ரெடிஷனல் மேக்ஸி ட்ரெஸை உடுத்தியிருந்தாள். அந்த ட்ரெஸிற்கும் அவள் இடை வரையிருந்த கூந்தலை சின்னதாகக் க்ளிப் போட்டு, மீத முடியை அவள் விட்டிருந்த விதத்திலேயே மனதை மட்டுமல்ல, நம்ம ஆளு உடல் பொருள் ஆவி என அனைத்தையும் பறக்க விட்டிருந்தான்.
தண்ணீரெல்லாம் உடையில் கொஞ்சம் சிந்திவிட, உடையை சரி செய்தவள் ஹர்ஷவர்தனின், “ஸாரி!” என்ற வார்த்தையில் நிமிர்ந்தாள்.
“இல்ல பரவாயில்லை விடுங்க. தெரியாமதானே பண்ணிங்க!” பெருந்தன்மையாகக் கூற அதிலும் விழுந்தான் நம் ஆள்.
“நீங்க இங்க எங்கேஜ்மன்டுக்கு வந்திருக்கிங்களா?” பேச்சை வளர்க்க நினைத்துக் கேட்க, கீர்த்தியோ கண்டுகொண்டாள்.
“இல்ல. இங்க ரயில் ஒன்னு வந்து நின்னிருச்சுனு சொன்னாங்க. அதான் தள்ளிவிடலாம்னு வந்தேன்” ஒற்றைப் புருவத்தைத் தூக்கியபடி
கீர்த்தனா ஆதர்ஷினி சொல்ல சிரித்தேவிட்டான் ஹர்ஷா.
“குட் ஜோக்! உங்கபேர் என்ன?” என்று கேட்க அதற்கும் தலையை சாய்த்து ஒரு நக்கல் சிரிப்பே வந்தது அவளிடம்.
“சரி விடுங்க. ஐயம் ஹர்ஷவர்தன்” என்று கையை நீட்ட, அப்பா அண்ணன் தவிர எல்லா ஆண்களிடம் தள்ளி நிற்பவள் அவனிடம் யோசிக்காமல் கையைக் குடுத்தாள். கை கொடுப்பது என்பது சாதாரண விஷயம்தான்.
ஆனால், எல்லோரும் நல்ல எண்ணத்தில் பழகுவதில்லை என்பதை அறிந்த அஷ்வின் தங்கையை நல்ல புத்திக் கூர்மையோடே பழக்கப் படுத்தி இருந்தான். ஆனால், அவளுக்கும் ஹர்ஷாவிடம் அந்த நொடி தன்னை அறியாமல் கையைக்கொடுக்க ஏதோ ஒன்று உந்தியது உண்மைதான்.
“ஐயம், கீர்த்தனா ஆதர்ஷினி” என்றவள் கை இன்னமும் அவனிடமே இருப்பதை உணர்ந்து நேக்காய் அவனிடமிருந்து கையைப் பிரித்தாள்.
“அதென்ன இரண்டு நேம் உங்களுக்கு. நான் எப்படி கூப்பிடட்டும்?” தலையை ஆட்டிஆட்டி பேச, அவனது கேசம் ஆணின் லட்சனமாய் காற்றில் அசைந்தது.
“உங்களுக்கு எப்படி தோணுதோ அப்படியே கூப்பிடுங்க” கீர்த்தனா சொல்ல, தாடையை நிமிர்த்தி அழகாய் சிரித்தவன்,
“ஐ வில் கால் யூ கீர்த்தி!”
“ஓகே ஹர்ஷா!”
“உன் நம்பர் கேக்கலாமா” உடனே ஒரு பிட்டை போட்டான் ஹர்ஷவர்தன்.
“அதான் கேட்டுடிங்களே?” கீர்த்தி காலை வார,
“இல்ல, இல்ல கீர்த்தி. இஷ்டமிருந்தா தா. இல்லனா வேணாம். ஜஸ்ட் ப்ரண்ட்லியாதான் கேட்டேன்” ஹர்ஷா அடுத்த டயலாக்கை வீச, இதுவரை யாரிடமோ பேசாத கீர்த்திக்கோ, ‘ச்ச! எவ்ளோ ஜென்ட்டில்’என்று மனது சொல்ல, அவனுக்குத் தன்னுடைய எண்ணைத் தந்தாள்.
காலங்காலமாக சில சினிமாக்களில் ஹீரோஸ், ஹீரோயினிடம் நம்பரைப் பறிப்பதைப் பார்த்த பதினெட்டுவயதுப் பெண்ணிற்கோ ஹர்ஷவர்தன் பயங்கர ஜென்டிலாகத் தெரிந்தான்.
“நீ எந்த காலேஜ்? என்ன இயர்?” விசாரிக்க ஆரம்பித்தான் ஹர்ஷா. அவள் காலேஜ் பெயரைச் சொல்லவும் ஹர்ஷா, “என் அக்காவும் அந்த காலேஜ்தான்” குஷியாகச் சொல்ல,
“அப்படியா எந்த டிபார்ட்மெண்ட்?” ஆர்வமாகக் கீர்த்தி கேட்ட நேரம், அவளுடைய அன்னை செல்வமணி அவளைத் தேடிக்கொண்டு வருவது தெரிந்தது.
“அம்மா வர்றாராங்க. பை ஹர்ஷா” ஓடியவளைக்கண்டு அவனுக்கு சிரிப்புதான் வந்தது.
“அம்மா வீட்டுக்கு போலாம்” அன்னையிடம் இங்கே நச்சிக்கொண்டு இருந்தாள் ராஷ்மிகா.
“என்னடி இப்பதான நிச்சயம் முடிஞ்சுது. இரு, ஒரு அரை மணிநேரம் இருந்துட்டுப் போலாம்” கல்யாணி சொல்ல ராஷ்மிகாவால் எதுவும் பேசமுடியவில்லை.
“எங்கடா போயிருந்த?” அருகில் வந்து உட்கார்ந்த தம்பியிடம் ராஷ்மிகா வினவ,
“ப்ரண்ட் கால் பண்ணிட்டான் அதான்” ஹர்ஷா சொல்ல,
“பண்ணிட்டானா இல்ல பண்ணிட்டாளா?” ராஷ்மிகா நக்கலாகக் கேட்க, “நான் ஒரு ஸ்ரீராமன் அக்கா” என்று கண்களைச் சிமிட்டினான் ஹர்ஷவர்தன்.
“யாரு நீ? நீ வெண்ணைத் திருடனாதான் இருப்படா!” ராஷ்மிகா கொட்ட,
“வாங்க. ஃபோட்டோ போய் எடுக்கலாம்” சரணின் அன்னை அழைக்க ராஷ்மிகா, ஹர்ஷா, கல்யாணி எல்லோரும் சரணின் அன்னையோடு ஸ்டேஜிற்கு சென்றனர்.
அவர்கள் ஸ்டேஜை ஏறும்போது அஷ்வினின் குடும்பம் ஸ்டேஜில் இருந்து இறங்கிக்கொண்டிருந்தது. அஷ்வினின் கோபப் பார்வையும் ராஷ்மிகாவின் வெறுப்பை உமிழும் பார்வையும் சந்திக்க, ஹர்ஷாவின் குறும்புப் பார்வையும் கீர்த்தனா ஆதர்ஷினியின் சிநேகப் பார்வையும் சந்தித்துக் கொண்டது.
“குமரா, நான் பேக்டரி கிளம்பறேன். நீ இருந்து பாத்துட்டு மதியத்துக்கு மேல கன்ஸ்ட்ரக்ஷன் போ” அஷ்வினிடம் சொல்லிவிட்டு நாகேஷ்வரன் கிளம்பிவிட்டார்.
“அம்மா கேசரி வேணும்” காதைக் கடித்த ராஷ்மிகாவை முறைத்தார் கல்யாணி.
“வீட்டுல வாய் கிழிய பேசுறீல. நீயே கேட்டு வாங்கி சாப்பிடு” என்று சொன்னார். எப்போது பார்த்தாலும் இந்த மாதிரி விஷயங்களில் மகள் தனது முந்தானைக்குள் இருப்பது அவருக்குப் பிடிக்காத ஒன்று.
தம்பியிடம் கேட்கலாமா என்று நினைத்தவள், ‘வேணாம் ராஷ்மி. இவனும் இப்பன்னு பாத்து, நீ பத்து வருசத்துக்கு முன்னாடி தண்ணி கேட்டு கொண்டு வராதது எல்லாம் சொல்லுவான். வேண்டவே வேண்டாம்’ தனக்குள்ளேயே முணுமுணுத்தவள் நிமிர கரெக்டாக சரண் பரிமாறிக்கொண்டே வந்தான்.
ஆனால், அவனோ வேறு ஒரு ஐட்டத்தைப் பரிமாறிக்கொண்டு வர, ராஷ்மிக்கு புஸ்ஸென்றானது.
“சரண், கேசரி எடுத்துட்டு வாடா” என்று கேட்க,
“இரு, இரு. கொண்டு வர சொல்றேன்” என்றவன் யாரோ ஒருவனை அழைத்துக் கேசரியை எடுத்து வரச் சொல்லிவிட்டு சென்றான்.
தம்பியிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தவள் தன் இலையில் விழுந்த கேசரியைப் பார்த்துவிட்டு நிமிர அஷ்வின்தான் அவளுக்குப் பரிமாறியிருந்தான்.
நெய் மணத்தோடும் பளபளப்போடும் இருக்கும் கேசரியைப் பார்த்தால் எல்லோருக்கும் எச்சில் ஊறும். ஆனால், ராஷ்மிகாவிற்கோ அது வேப்பங்கொழுந்தாய் கசந்தது. ராஷ்மிகாவைப் பார்த்து ஒரு ஏளனச் சிரிப்பு சிரித்தவன் நகர்ந்துவிட்டான். ராஷ்மிகாவும் எழுந்துவிட்டாள்.
தனது மொபைலில் வந்திருந்த மெசேஜைப் பார்த்தாள் கீர்த்தி. “பை கீர்த்தி” என்று வந்திருக்க, யார் அனுப்பியது என்று, “கீர்த்தி” என்ற அழைப்பிலே தெரிந்துவிட்டது கீர்த்தனா ஆதர்ஷினிக்கு.
அவள் கூட்டத்தில் நடுவில் இருந்தபடி நிமிர, ஹர்ஷாதான் தன் குடும்பத்தோடு போய்க்கொண்டு இருந்தான் என்று அவன் சட்டையை வைத்தே தெரிந்தது. அவர்களுடைய முதுகுப்புறம் மட்டும் தெரிய ஹர்ஷாவையே பார்த்துக்கொண்டு இருந்தாள் கீர்த்தி.
அவளது பார்வை உணர்ந்தோ இல்லை தனக்கு தோன்றியதாலோ என்னவோ, ஹர்ஷா திரும்பி கீர்த்தியைப் பார்த்து ஒற்றைப் புருவத்தைத் தூக்கி புன்னகைத்ததில் கீர்த்தி அப்படியே உறைந்தாள் அவனது செயலில்.
அவனது புற அழகைவிட இந்தமாதிரி சின்னசின்ன சேட்டை செயல்களே அவளை அவன் பால் சாய்த்தது. பதிலுக்கு புன்னகைத்தவளுக்கு கூச்சமா வெட்கமா என்று தெரியவில்லை.
முகத்தை வேறுபக்கம் திருப்பினாள். ஆனால், அவளது கண்களை வைத்தே அவளது குணத்தைக் கண்டுகொண்டான்.அதாவது சிரிப்பு,நக்கல், படபடப்பு, என அனைத்தையும் வெளிப்படுத்துபவள், அவன் மனதில் காலைப் பதித்தாள்.
அவன் பெண்களிடம் வழிபவன்தான். ஆனால், இந்த மாதிரி உணர்வை யாரும் அவனுக்கு ஏற்படுத்தியதில்லை. அவளை மனதில் நிறைத்துக் கொண்டே கல்யாண மண்டபத்தில் இருந்து வெளியே வந்து காரை எடுத்தான் ஹர்ஷா.
ஒவ்வொரு காதலும் ஒவ்வொரு வகை. சிலது ஹர்ஷா-கீர்த்தி மாதிரி ஆரம்பிக்கும். சிலது மோதலில் ஆரம்பிக்கும். ஆனால், ஒரு சிலருக்கு மட்டுமே வெறுப்பின் உச்சத்தில் ஆரம்பிக்கும். அதுதான் மற்ற ஒரு ஜோடிக்கு அவர்களை அறியாமல் நடந்து கொண்டிருந்தது.
நிச்சயம் முடிந்து ஒரு சிலரே மீதம் இருக்கும்போது தேவாவிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினர் அஷ்வினும், செல்வமணியும், கீர்த்தியும்.
வீடு வந்து சேர மூன்று மணி ஆகிவிட, “குமரா, அப்பா மதியம் சாப்பிட்டாரானு கேளுப்பா. நான் ஃபோன் பண்ணா எடுக்கமாட்டாரு. நீ பண்ணா ஏதாவது பிசினஸ் விஷயமா இருக்கும்னு எடுப்பாரு” செல்வமணி சொல்ல, அஷ்வின் அலைபேசியை எடுத்தான்.
சரியாக நாகேஷ்வரனின் பி.ஏ அழைக்க, “இதோ அப்பாவோட பி.ஏவே
கூப்பிடறாரு” என்றவன் ஃபோனை எடுத்தான்.
ஃபோனை எடுத்தவுடன், “ஸார், அப்பா மயக்கம் போட்டு விழுந்துட்டாரு. நம்ம ஹாஸ்பிடல் தான் கூட்டிட்டு போயிட்டு இருக்கோம். நீங்களும் வந்திடுங்க” என்று சொல்ல,
“வாட்” அதிர்ந்து எழுந்தே விட்டான் அஷ்வின்குமார்.
“என்ன ஆச்சு குமரா?” மகனின் குரலில் பதட்டமடைந்து செல்வமணி பதறினார்.
“ம்மா, ஹாஸ்பிடல் கிளம்புங்க. தர்ஷு நீயும்” என்றவன் முன்னே நடக்க, அவன் பின்னேயே ஓடினர் இரு பெண்களும். வரும்வழி முழுவதும் அழுத செல்வமணியை ,யாராலும் சமாதானம் செய்ய முடியவில்லை.
அஷ்வினுக்குமே என்ன சொல்வது என்று தெரியவில்லை. திடீரென மயக்கமென்று சொன்னதால் அவனிற்கு என்ன ஏது என்றே புரியவில்லை.
அஷ்வின் அன்னை தங்கையோடு ஹாஸ்பிடலை அடைய, அவனுக்காகவே காத்திருந்த ரிஷி, வந்து கார்கீயை வாங்கிக்கொண்டு பார்க் செய்யப்போக அஷ்வினிடம் வந்தார் நாகேஷ்வரன் பி.ஏ.
“இப்படி வாங்க ஸார்” என்று அவர் அழைக்க, அஷ்வின் தந்தை எமெர்ஜென்ஸி வார்ட்டில் இருப்பதைத் தெரிந்து கொண்டான். அன்னைத் தங்கையை சமாதானம் செய்தவனுக்கு கொஞ்சம் உள்ளுக்குள் படபடத்தது. எதையும் காட்டாமல் அங்கிருந்த சுவற்றில் சாய்ந்து, கையை நெற்றிக்கு இடையில் வைத்து யோசித்தபடி நின்றிருந்தான் அஷ்வின்.
சிறிதுநேரத்தில் வெளியே வந்த டாக்டர், அஷ்வினோடு பள்ளியில் படித்தவன்தான்.
“டேய் ரஞ்சித் என்னடா ஆச்சு” அஸ்வின் வினவ,
“ஹை ப்ரெஷர்டா. திடீர்னு வந்த ஹை பீப்பி. நல்லவேளை சீக்கிரம் கூட்டிட்டு வந்தாங்க. இல்லனா ஹார்ட் அட்டாக் வந்திருக்கும்” என்றவன்,
“இப்ப எந்தப் ப்ராளமும் இல்ல. அவரு ரெஸ்ட்ல இருக்காரு. ஒருமணி நேரம் கழிச்சு போய்ப் பாருங்க”,
“கூலா இருடா. இப்போ எந்தப் பிரச்சினையும் இல்ல. அம்மாவையும் தங்கச்சியையும் சமாதானம் செய்” என்று நண்பனாய் சொல்லிவிட்டுச் சென்றான் ரஞ்சித்.
அன்னையிடமும் தங்கையிடமும் தந்தையின் உடல்நலம் பற்றிக்கூறி தேற்றியவன், “அம்மா, இப்ப ஒரு பிரச்சனையும் இல்ல. ஒரு மணிநேரம் கழிச்சு பாக்கலாம்னு சொல்லிடாங்க” ஆறுதல் சொன்னவன் நேரே எழுந்து சென்றது அவனுடைய கார்ட் ரிஷியிடம்.
அஷ்வின் நடந்து வந்த விதத்திலேயே புரிந்துகொண்ட ரிஷி அவன் அருகில் ஓடினான். அஷ்வின் சொன்னதைக் காதில் வாங்கிக் கொண்டவன், வெளியே சென்று சிலரை அழைக்க எல்லோரும் அடுத்த ஐந்து நிமிடத்தில் மருத்துவமனையின் மொட்டை மாடியில் இருந்தனர்.
அஷ்வின் நின்றிருந்த விதமே அனைவருக்கும் தொண்டை கவ்வியது. அஷ்வின் நிமிர்ந்து பார்த்த விதத்திலேயே நாகேஷ்வரனின் பி.ஏ அப்படியே நடந்ததை அங்கு ஒப்பிக்க ஆரம்பித்தார்.
“ஸார், அந்த ராஜபாண்டிதான் ஸார். ஐயா கிட்ட பிரச்சனை பண்ணான் காலையில.. வேணும்னே பேக்டரி மிஷின்ல கோளாறு பண்ணிட்டான் ஸார். நம்ம வொர்கர் சில பேர் வேலை செய்யும் போது ஆக்ஸிடென்ட் ஆகி கலெக்டர் எல்லாம் வந்துட்டார் ஸார். வந்தப்ப ராஜபாண்டி பேக்டரில மெயின்டனன்ஸ் இல்ல, அப்படி இப்படினு சொல்ல கலெக்டர் பேக்டரிய மூடணும்னு சொல்லிட்டாரு” என்றவர் எச்சிலை முழுங்கிய படியே நிற்க,
“முழுசா சொல்லுங்க” ரிஷி.
“அவங்க எல்லாம் போன அப்புறம், நம்ம ஐயா ராஜபாண்டிகிட்ட சத்தம் போட்டாரு. அதுக்கு அவன் ஐயாவ மரியாதை இல்லாம எல்லாரு முன்னாடியும் வாயா போயானு பேசிட்டான் ஸார்” என்று அவர் சொல்லச் சொல்ல அஷ்வினின் பார்வையில் அவர் நடுங்கியேவிட்டார்.
“கிளம்புங்க” ரிஷி சொல்ல அவர் கிளம்பிவிட்டார்.
“ரிஷி!” என்று அழைத்த அஸ்வினின் குரலிலும் சரி முகத்திலும் சரி கோபத்தின் ஜூவாலைகள். ரௌத்திரம் தாண்டவம் ஆடியது.
“ஓகே ஸார். அவனை கூட்டிட்டு வரேன்” என்று சொல்ல,
“நோ, நம்ம அங்க போலாம்” அஷ்வின் நடக்க, அவனிற்கு முன் சென்று காரை எடுத்துக்கொண்டு வந்தான் ரிஷி.
ஸ்டீல் பேக்டரியை அடைய, காரிலிருந்து அனைவரும் இறங்கினர். ரிஷி சென்று ராஜபாண்டியை இழுத்துவந்து தள்ள, அஷ்வினின் காலின் அருகில் பொத்தென்று விழுந்தான் அவன்.
அஷ்வினைப் பற்றி அவனிற்குத் தெரியும். சிறிது பயத்துடன் அவன் எழ அஷ்வின் அடித்த அடியில் அவன் வாயிலிருந்து ரத்தம் தெறித்தது. எத்தனை பேர் முன்னாடி தன் தந்தையை அவன் பேசினானோ அவர்கள் முன்னேயே அதற்கு எல்லாம் அஷ்வின் பதில் கொடுத்தான். அவனின் பதிலில் தெரிந்த ஆக்ரோஷத்தைக் கண்ட அனைவரும் பயத்தில் அடி வயிறு கலக்க நின்றிருந்தனர்.
அஷ்வினிடம் எப்போதுமே மன்னிப்பு என்பது கிட்டாத ஒன்று. பேக்டரியில் இருந்த ஒரு இரும்புக் கம்பியை எடுத்த அஷ்வின் அதை கையில், தன் ஆள்காட்டி விரலால் முடிவில் இருந்து நுனி வரை விரலால் பதம் பார்த்து இழுக்க, அங்கிருந்த அனைவருக்குமே பயம் பிடித்தது.
இரும்புக் கம்பியை வைத்து அஷ்வின், ராஜபாண்டி மேல் வீச அவன் தாடையில் அது பட்டு, அவன் பற்கள் எல்லாம் உள்ளே உடைந்து வெளியே ரத்தமாக சிந்தியது.
“ரிஷி!” உறுமலோடு அஸ்வின் தனது கம்பீரக் குரலில் அழைக்க, ராஜபாண்டியை தனது ஆட்களோடு தூக்கிக் கொண்டு ரிஷி பேக்டரிக்குள் சென்றான். வெளியே இழுத்தும் மூடினர்.
ஒரு மிஷினிற்கு அடியில் அவனது தலையை வைக்க, “வேண்டாம் வேண்டாம்!” என்று அலறினான் ராஜபாண்டி. ஆனால், மிஷின் அருகில் வர, அதன் பளபளத்த கூர்மையைக் கண்டு அவன் அலறிய அலறலில் அங்கிருந்த பறவைகளெல்லாம் பயந்து சிறகடித்து வேறு திசைக்குத் திரும்பின.
மிஷின் அவன் அருகில் வர, “ரிஷி” அஷ்வினின் குரலில் மிஷினை நிறுத்தினான் ரிஷி.
அஷ்வினின் பார்வையை உணர்ந்த ராஜபாண்டியிடம் திரும்பி விவரத்தைக் கேட்க, உயிர் பயத்தில் அனைத்தையும் கொட்டினான். ராஜபாண்டியைத் தூக்கிக்கொண்டு இரண்டுபேர் வெளியில் செல்ல அஷ்வின்குமார் சில முடிவுகளை எடுத்தான். ஆனால், அவன் எடுக்கப் போகும் முடிவில் நிறையபேர் பாதிக்கப்பட்டு வேதனை அடையப் போவதை அவன் கவலைப்படவில்லை.
அஷ்வின் சிலதைச் சொல்ல ரிஷிக்கே அதிர்ச்சி. ஆனால், வெளியே காட்டிக்கொள்ளாமல் தன்னுடைய முதலாளி சொன்ன அனைத்தையும் வாங்கிக்கொண்டான் அவன். இரண்டுபேரும் பேக்டரியில் இருந்து வெளியே வர, ரிஷியின் ஃபோன் அடித்தது.
ஃபோனை எடுத்து காதில் வைத்தவன் எதிர்ப்பக்கம் வந்த தகவலில் உறைந்தேவிட்டான்.
“சரி பாக்கறேன்” என்றவன் தனக்கு வந்த செய்தியை ஆராய, வந்த தகவல் உண்மைதான் என்பதைத் தெரிந்துகொண்டான்.
முதலில் இப்போது சொல்ல வேண்டாமென்று எண்ணியவன் அது சரி வராது என்றெண்ணி, “ஸார்” ரிஷி அழைக்க முன்னே நடந்து கொண்டிருந்த அஷ்வின் திரும்பினான்.
ரிஷி விஷயத்தைச் சொல்ல அஷ்வினின் முகத்தில் கூர்மையைத் தவிர எந்த வெளிப்பாடுகளும் இல்லை. ஆனால், இது அவ்வளவு சாதாரணமான விஷயமா?