💋இதழ் சிறையில் உறைந்தேனடி(டா) 13💋

💋இதழ் சிறையில் உறைந்தேனடி(டா) 13💋
அத்தியாயம் 13
ஞாயிற்றுக்கிழமை ஞாலத்தை புதுப்பிக்க ஞாயிறு வந்தான். நாட்கள் நகர்ந்து சென்ற வேகமே தெரியவில்லை. கொரோனா தொற்றிலிருந்து விடுபெறுவதற்கு தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பமாகியிருக்க, தனது அலுவலக பணியாளர்களுக்கு முதலாவது தடுப்பூசி ஏற்றி வீட்டில் ஓய்வெடுக்குமாறு இரண்டு நாட்கள் விடுமுறை அளித்திருந்தார் நிர்வாகி.
“என்ன சார் இப்படி லீவு குடுத்தா வேலை எப்போ முடியும்?” என்று வினவினாள் பியானா.
“இன்ஜக்ஷன் போட்டா ரெஸ்ட்ல இருக்கனும் அதுக்குதான் ரெண்டுநாள் லீவு, வேலை பார்க்குறவங்களோட ஹெல்த் கன்டிஷன் நமக்கு முக்கியம்”
“ஓகே சார், டாடி இதுவரைக்கும் கிடைக்கல சார் இதுக்கு அப்பறம் கிடைப்பாருன்னு நம்பிக்கையும் இல்ல” என்றவள் வதனம் வருத்ததிற்கு புலம்பெயரந்தது.
“ஓ… என் மேல நம்பிக்கை இல்லனு சொல்லு. அப்பாவ தேடித் தாரேனு சொன்னது நான்தானே! எனக்கே நம்பிக்கை இருக்கும் போது உனக்கு ஏன் இல்ல. பூ விழுந்து ஒரு மாசம் தான் ஆகுது அதுக்குள்ள நம்ம அவசரப்பட்டா முடியுமா?” தந்தையை தேடும் படலம் முடியவில்லையே தேடிக்கொண்டு தான் இருக்கிறான் என்பதை விசனத்தோடு விளம்பினான்.
“நீங்க தேடலனு சொல்லல சார். டாடி கிடைக்கலனு தான் சொன்னேன். நீங்க ஏன் சார் கோபப்படுறீங்க. நான் வாங்கிட்டு வந்த வரம் அப்படி இருக்கு. உங்களுக்கென்ன சார் சமச்சி போட அம்மா இருக்காங்க. தோள் தட்டிக்குடுக்க அப்பா இருக்காங்க. உதவினு கேட்டா அக்காவும் தம்பியும் இருக்காங்க. கொஞ்சுறதுக்கு பாட்டி இருக்காங்க. இப்படி எல்லா உறவும் இருக்கும் போது என்னை மாதிரி அநாதையா வளர்ந்த ஃபீலிங்க்ஸ் உங்களுக்கு எப்படி புரியும்” மேலும் நயனங்களில் நதியோட, வார்த்தைகளை சலனமாக செப்பினாள்.
அவள் தன்னைதானே அநாதை என்று கூறியது இவனுக்கு ஆத்திரத்தை கிளறியது. இருப்பிருனும் ஆத்திரத்தை தன்னுள் அடக்கினான். அவள் கன்னங்களை ஒரு கையால் பற்றி,
“ஏன் பியூ வார்த்தைக்கு வார்த்தை அநாதைனு சொல்லுற, நான் கட்டின தாலி உன் கண்ணுக்கு தெரியலையா, கட்டின புருசன் நான் உயிரோட இருக்கும் போது நீ எப்படி அநாதை ஆகலாம். உனக்காக என் மனசு துடிக்கிறது உனக்கு புரியலையா?” தன்னவள் துயரை துடைக்க வன்மையாகவே பதில் கூறினான்.
சக்குகள்(சக்கு – கண்) சுழல நீர் துளிகள் சொட்டிக்கொண்டிருக்க, “சின்னவயசுல வேர்லினுக்கு நான்தான் சாப்பாடு ஊட்டி விடுவேன் ஆனால், எனக்கு யார் சார் ஊட்டிவிட்டா, வேர்லின குளிக்க வப்பேன், தலைசீவி விடுவேன், பாடம் சொல்லிக்குடுப்பேன். எனக்கு இப்டி எல்லாம் செய்றதுக்கு அம்மா இல்ல சார். ஹோம்ல… சில பேரன்ஸ் வாருவாங்க அவங்க பிள்ளைங்கள பார்க்க, வேர்லின் ஓடி வந்து கேப்பா ஏன் நம்ம மம்மி டாடி வரலனு, உனக்கு ம்மமி டாடி எல்லாமே நான்தான்னு சொல்லுவேன்.
உடனே என்னைய கட்டி புடிச்சிட்டு என் மம்மிய கட்டிபுடிச்சேனு சொல்லி சந்தோஷப்படுவா, எனக்கு மீசை வரஞ்சி என்னை டாடினு சொல்லி என் தோள்ல சாய்வா சார். ஒரு நாள் வேர்லினா அடாப்ட் பண்ண ரெண்டு பேர் வந்தாங்க. அவளுக்கு மம்மி டாடி எல்லாமே நான்தானு என்னை விட்டு போகமாட்டேனு கதறி கதறி அழுதா. நைட்ல திடீர்னு எழும்பி மம்மி.. மம்மினு.. அழுவா அவள சமாதனம் பண்ணி நான் தூங்க வைப்பேன்.
அப்போ எனக்கு வயசு எட்டு, தூங்க வச்ச அப்பறம் எங்கம்மாவ நினைச்சி நானும் உட்கார்ந்து அழுவேன். அந்த நேரம் அரவணைக்க அம்மா மடி இல்ல.. தோள்சாய அப்பா இல்ல. வெக்கம் விட்டு சொல்றேன் சார். ஏஜ் அட்டண்ட் பண்ணா என்ன நடக்கும்னு ஒன்னுமே… தெரியாது. எனக்கு ஏதோ பெரிய வியாதி வந்துட்டுனு நினைச்சேன். நான் சீக்கிரமா செத்துருவேன். நானும் இல்லாம போயிட்டா வேர்லின் பாவம் அவ அநாதையா ஃபீல் பண்ணுவானு நினைச்சி.. நினைச்சி ஒரு நாள் ஃபுல்லா அழுதிருக்கேன் சார்.. இதுவே அம்மா இருந்தா எனக்கு எல்லாம் சொல்லிக் குடுத்திருப்பாங்க. எனக்குதான் அம்மா இல்லயே…” என்று அவள் கூறியது தாயை பற்றி மட்டும் தந்தையை பற்றி இன்னும் கூறவில்லை. அதை கேட்கும் மனநிலையிலும் அவன் இல்லை. ஆராத அத்தனை ரணங்களை எண்ணி மனதில் தேக்கி வைத்து ஏங்கி தவித்திட சுவற்றில் சாய்ந்து பெற்றவர்களை நினைத்து குமுறிக் குமுறி அழுதாள்.
“போதும் பியூம்மா” என்று அவன் கண்களில் நீரை சிந்தவிடாமல் இறுக்கிகொண்டான். மடவாளை எண்ணி மனதளவில் தவித்து மருகினான்.
அவள் கூறியது நூற்றில் ஒரு பங்கு தான். அதையே அவனால் கேட்க முடியாத நிலையில் சுவற்றில் சாய்ந்து அழுதவளை நிமிர்த்தினான்.
“எனக்கு என் டாடி வேணும் சார். என் டாடி தோள்ல சாயனும். எங்க டாடியும் நாங்க இல்லாம கண்டிப்பா கஷ்டப்படுவாங்க சார்”
குழந்தைத்தனமாய் அவள் தந்தை கேட்டு அழும் போது அவனால் சமாளிக்க முடியவில்லை. கண்களை துடைத்து, “மம்மி, டாடி, அக்கா, தம்பி எல்லாமுமா நான் இருக்கேன். இதுக்கப்றம் இந்த வாயில இருந்து அநாதைங்கற வார்த்தை வரவே கூடாது அப்படி வருமா இருந்தா நான் செத்ததுக்கு அப்பறம்தான் வரனும்” என்று தீவிரமாகவும் தன்மையாகவும் தன்னவளிடம் கூறினான்.
“சார்..!” என்றவள் திகைத்தாள்.
“உண்மையாதான் சொல்லுறேன். நான் செத்தா மட்டும்தான் நீங்க அநாதை. நான் உயிரோட இருக்கும் வரைக்கு உங்கள யாரும் அநாதைனு சொல்ல விட மாட்டேன். நீ வேணும்னா பாரு ஒரு வாரத்துல உங்க அப்பா கிடைப்பாரு. நல்லபிள்ளை மாதிரி முகத்த கழுவிட்டு சிரிச்ச முகத்தோட கீழ வா நான் வெய்ட் பண்றேன்” சிறிது நேரம் தன்னவளுக்கு தனிமையை கொடுத்துவிட்டு கீழே சென்றான்.
‘அவள சமாளிக்கிறேனு அப்பா ஒரு ஒரு வாரத்துல கிடைச்சிருவாருனு சொல்லிட்டேனே, என்ன பண்ண போறேனோ தெரியலயே, கடவுளே நீயே பார்த்துக்கோ’ என்று தன் மனதில் புலம்பிக்கொண்டான்.
இங்கோ ரஞ்சனாவும் செல்வமும் சமையலறையில் சலப்பிக்கொண்டிருந்தனர். கீழே வந்தவன் முகத்தில் தென்பட்ட சலனத்தை பார்த்த பாட்டிக்கோ, ‘புறா ஏன் இப்படி இருக்கான்’ என்று தோன்றியது.
“ஏன்யா உன் முகம் இப்படி வாடியிருக்கு” என்று வினவினார் பாட்டி.
“அது வந்து அப்பாய்.. பியூ அவங்க அப்பாவ நினைச்சி அழுறா மனசே சங்கடமா இருக்கு, அவளுக்கு எப்படி ஆறுதல் சொல்லுறதுன்னு தெரியல” கூனிக்குறுக்கிப்போன குரலில் அவன் கூறினான்.
“பாவம்யா ஆசிரமத்துல வளர்ந்த பொண்ணு. எவ்ளோ கஷ்டப்பட்டுப்பாருப்பா. இன்னும் அவ அம்மாவ அப்பா நினைச்சி அழுறான நீ அவள ஒழுங்கா பார்த்துக்கலனு அர்த்தம்”
“அப்பாய்..!” தன் மனைவியை அவன் நன்றாகத்தானே பார்க்கிறான். பாட்டி அப்படி கூறியதில் அவன் எண்ணம் ஊசலாடியது.
“உண்மையதான் சொல்லுறேன். நீங்க சந்தோசமா இருக்குற மாதிரி எனக்கு தெரியல பேரா, எல்லார் முன்னாடியும் அவள விட்டுக்குடுக்காம பேசுனா மட்டும் போதாது. அந்த காலத்துல உங்க தாத்தாவும் நானும் அவ்ளோ சந்தோசமா இருந்தோம். லீவுநாளு வந்தா போதும் வீட்ல சும்மா இருக்க மாட்டாரு நான் சமைச்சா தாத்தா காய்கறி நறுக்கி தருவாரு, நான் பாத்திரம் விளக்குனா தாத்தா வீட்ட பெருக்குவாரு, எனக்கு உடம்பு சரியில்லனா எல்லா வேலையும் தாத்தாவே பார்த்துபாரு. நாங்க அவ்ளோ அன்யோன்யமா இருந்தோம்.
உங்கள பார்த்தா துளியளவு கூட அப்படி தெரியல. பொண்டாட்டிய கைல வச்சி தாங்குதாங்குன தாங்கனும். இந்த வீட்ல இருக்க வரைக்கும் நீங்க இப்டிதான் இருப்பீங்க. பேசாம உங்க வீட்டுக்கு போயிருங்கயா. இப்போ கூட அவள தனியா ரூம்ல விட்டுட்டு வந்திருக்க கூடாது” என்று பாட்டி பேரப்பிள்ளைகளின் சந்தோசம் எந்த விதத்திலும் பாதித்துவிடக்கூடாதென்று நல்லெண்ணத்தில் கூறினார்.
“நீங்க சொல்லுறது உண்மைதான். அப்பாய். என் பொண்டாட்டிக்கு என் கையால சமைச்சி குடுக்க ஆசைதான். அம்மா பார்த்தா அவளதான் திட்டுவாங்க. என் பையன வேலை வாங்குறானு. அதுமட்டும் இல்ல அப்பாய் அடிக்கடி அநாதைனு ஃபீல் பண்ணுறா கூட்டுக்குடும்பமா இருக்கும் போது அவ சந்தோசமா இருப்பானு நினைச்சேன். ஆனால், எல்லாம் தலைகீழ நடக்குது. கொஞ்சநாள் பார்த்துட்டு சரி வரலன்னா நடையகட்டிடுவேன் அப்பாய்”
“சரிப்பா உன் பொண்டாட்டிய கீழ அழச்சிட்டு வா”
பாட்டியிடம், “சரி” என்று கூறிவிட்டு படிக்கட்டை நோக்கி நகர்ந்தான்.
படிக்கட்டிலிருந்து ரஞ்சனா கீழே இறங்கிக்கொண்டிருந்தாள். அவளது கைபேசியில் பாடல் ஒலித்துக்கொண்டிருக்க, இவன் வருவதை கண்டு வேணும் என்று குதித்துத் குதித்து படியிறங்கினாள். அருகில் வர அவன் மேல் ரஞ்சனா விழுந்தாள்.
நீதான் என் தேசிய கீதம்
ரஞ்சனா ஓ ரஞ்சனா
என் ஒரே பாடலே
உயிர் காதலே
என் மரியாதைக்கு உரியவளே
மனதிற்கு இனியவளே
காலையும் நீயே
மாலையும் நீயே
கனவிலும் நீயே
நனவிலும் நீயே
நீதான் என் தேசிய கீதம்
ரஞ்சனா ஓ ரஞ்சனா
ரஞ்சனா ஓ ரஞ்சனா… என்ற பாடல் ரஞ்சனாவின் கைபேசியில் ஒலித்துக்கொண்டிருந்தது. புறஞ்சேயன் விழுந்தவளை தூக்கிவாறு அல்லாமல் அவளை கைகளால் தாங்கி நிறுத்தியவாறு நின்றான்.
‘டாடி சீக்கிரம் கிடைக்கனும் ஜீசஸ்’ என்று சிலுவை இட்டுக்கொண்டாள்.
புறா கூறிய வாராத்தைகள் பியானாவின் மனதிற்கு தைரியத்தையும் நம்பிக்கையையும் அளிக்க, தன்னவன் கீழே வரச்சொல்லி நேரம் கடந்திருக்க முகத்தை அலசிவிட்டு கீழே இறங்கினாள். இறங்கியவள் கண்ட காட்சி கோலாகலமே!
ரஞ்சனாவை புறஞ்சேயன் மெதுவாக பற்றி “மெதுவா கால கீழ வை” அவன் பரிவோடு கூறினான்.
“முகுது வலிக்குது மாமா முடியல” என்றாள் ரஞ்சனா.
இவற்றை பார்த்தவளுக்கு வயிற்றில் தீ பற்ற இதயம் கருகியதோடு பற்களை கடித்துக்கொண்டு கடகடவென்று படிக்கடிலிருந்து இறங்கி முதலில் ரஞ்சனாவின் கையிலிருக்கும் கைபேசியை பிடுங்கி ஒலித்துக்கொண்டிருந்த பாடலை நிறுத்தினாள்.
பியானாவை பார்த்த ரஞ்சனாவுக்கோ, ‘மூக்கு வேர்த்த மாதிரி வந்துட்டாளே ச்சே’
பியானாவை பார்த்தவன். “படிக்கட்டுல இருந்து விழுந்துட்டா அதான்..” என்று தயக்கத்தோடு கூறினான்.
‘வீட்ல இத்தன பொண்ணுங்க இருக்கும் போது என் புருசன் மேலதான் விழனுமா’ என்று மனதாரக்கருவினாள் பியானா.
“நீங்க கைய எடுங்க நான் கூட்டிட்டு போறேன்” பற்களை கடித்துக்கொண்டு சீற்றத்துடன் சீறினாள் பியானா.
‘ரஞ்சனாவ புடிச்சேனு பியானா என்ன நினைப்பாளோ தெரியலயே’ என்று மனதில் மருகினான்.
மெதுவாக அழைத்து செல்லாமல் வேகமாக அழைத்து வந்து பாட்டி நீள் சாய்வு இருக்கையில் அமர்ந்திருக்க அவர்களது அருகில் அவளை தள்ளிவிட்டு, “உன் நடிப்பெல்லாம் அத்தை நம்பலாம். ஆனால் நாங்க நம்ப மாட்டோம். பீ கேர் ஃபுல்” என்று பியானா ரஞ்சனாவை கண்டித்தாள். நல்ல வேளை செல்வம் கடைதெருவிற்கு சென்றிருந்தார்.
பாட்டியும் பேரனும் ஒருவரை ஒருவர் பார்த்து தலையை அசைத்துக் கொண்டனர். “அவ விழுந்தா பாட்டிய கூப்பிடுங்க நீங்க புடிக்காதீங்க” என்று எச்சரித்தாள் தன் கணவனை.
“நீ திருந்தமாட்டியா” என்று பாட்டியும் பேரனும் ஒரே நேரத்தில் கேட்டனர். ரஞ்சனாவிற்கு பேரவமானமாக இருந்தது. நல்ல மாட்டிற்கு ஒரு சூடு நல்ல மனிதனுக்கு ஒரு சொல். மாட்டின் வர்க்கத்தில் சேர்க்க முடியாதவளை மனித வர்க்கத்தில் எப்படி சேர்ப்பது.
அப்படியே பாட்டி சாய்ந்தவிடத்தில் சாயந்திருக்க ரஞ்சனா உக்ரத்துடன் வெளியே சென்றாள். தம்பதியர் இருவரும் லக்ஷதாவின் அறைக்கு சென்றனர்.
வழக்கம் போல லக்ஷதா சோகத்தில் ஆழ்ந்திருக்க பியானா தன் கணவன் பற்றிய புகாருடன் சென்றாள். “அக்கா நீங்களாவது எதும் கேட்க மாட்டீங்களா?” என்று லக்ஷதாவிடம் கேட்டாள் பியானா.
“ம்ம்.. இவ்ளோ நேரம் கேட்டுட்டுதான் இருந்தேன் உன் சக்களத்தி புராணம்”
“அவள விழுவாலாம்.. இவர் புடிப்பாராம்..” என்று சகித்துக்கொண்டாள் பியானா.
“அந்த இடத்துல யாரா இருந்தாலும் புடிச்சிருப்பேன் பியூ இத பெரிசு பண்ணாத” என்றவன் தன்னவளை சமாளித்தான்.
“தெரியாம விழுந்தா பரவாயில்ல. அவ தெரிஞ்சே தான் விழுந்திருப்பா அப்படி பட்டவதான் அவ” பியானா விடாமல் பொரிந்தாள்.
“விடு பியூ, அவ அப்படிதான்” என்று லக்ஷதா அவளை சமாளித்தாள்.
தனிமையில் இருக்கும் லக்ஷதாவை வெளியே கொண்டுவர முயற்சி எடுத்தாள் பியானா.
“ஏன் கா, இந்த ரூம்முக்குள்ளே இருக்கீங்க. வெளிய வரலாம்தானே”
“நான் வெளிய வந்து என்னம்மா பண்ண, எல்லாரும் குழந்தைய பத்தி கேப்பாங்க. அதான் வெளிய வரதில்ல” குழந்தையில்லா சோகம் அவளை தாக்கியதும் தனியறைக்குள் தன் உடலையும் மனதையும் தள்ளி தாளிட்டுக்கொண்டாள்.
உடனே புறஞ்சேயன் தன்னவளுக்கு இதற்கு மேல் எதுவும் கேட்க வேண்டாம் என்பது போல் கண்ணை காண்பித்தான்.
“அக்கா டாக்டர்க்கிட்ட செக்கப் போனிய என்ன சொன்னாங்க, மாமா மறுபடியும் எப்போ வராங்க?” தமக்கையின் மீது அக்கறையோடு வினவினான்.
“இதுவரைக்கும் எந்த இம்ப்ரூவ்மெண்டும் இல்ல, பட் நிறைய சான்ஸ் இருக்குனு சொல்லிருக்காங்க. மாமா அடுத்த வாரம் வருவாங்க டா”
“சரிக்கா”
சில நிமிடங்கள் லக்ஷதாவை தம்பதியர் சிரிக்க வைத்து அழகு பார்த்தனர். “அக்கி நானும் உங்க கூட சேர்ந்து சிரிக்க வந்துட்டேன்” என்று வேர்லின் கல்லூரி முடிய வந்து இவர்களுடன் இணைந்து கொண்டாள். அவள் வந்து சேர செல்வமும் ரஞ்சனாவும் வந்திருந்தினர்.
“சீக்கிரம் வந்துட்ட குட்டி”
“இன்னைக்கு பிராக்டிகல் மட்டும்தான் அக்கி அதுதான் சீக்கிரம் வந்துட்டேன்”
அவர்கள் பேசிக்கொண்டிருந்ததை தொடர்ந்தனர் வேர்லினை யாவரும் கண்டு கொள்ளவில்லை.
“இங்க ஒருத்தி காலேஜ் போயிட்டு வந்துருக்கேன். ஒரு காஃபி குடுத்தீங்களா யாரவது?” என்று பொய்யாய் கோபித்தாள்.
“இரு குட்டி எடுத்திட்டு வாரேன்” என்று பியானா எழுந்தாள்.
“வேணாம் அக்கி எல்லாருக்குமா சேர்த்து நான் எடுத்துட்டு வாரேன்” அடுக்களைக்குள் நுழைந்தாள் வேர்லின்.
வேர்லின் அடுக்களைக்குள் நுழைய செல்வமும் ரஞ்சனாவும் அங்குதான் இருந்தனர். இவள் குளம்பியை கலக்க ஆயத்தமாக, “யாருக்கு இத்தன காஃபி” என்று எகத்தாளமாக கேட்டார் செல்வம்.
“அக்கி, மாம்ஸ், லக்ஷு அக்கி, எனக்கு, ஏன் உங்களுக்கும் காஃபி வேணுமா?”
“நீ போடுற காஃபிய யாரு கேட்டா?” என்று வேர்லினை ஏளனப் படுத்தினாள் ரஞ்சனா.
“நான் ஒன்னும் உன்கிட்ட கேக்கல, நீ உன் வேலைய பாரு” என்று வேர்லின் பதிலுக்கு அதட்டினாள் ரஞ்சனாவை.
“என் பொண்ணுக்கு மட்டும் காஃபி போட்டாச்சு” என்று கூறிவிட்டு செல்வமும் ரஞ்சனாவும் அடுக்களையை விட்டு நகர்ந்தனர்.
கண்களை விரித்து உதட்டை பிதுக்கியவள். “நமக்கு ஒரு வேலை மிச்சம்” என்று மூவருக்கு மாத்திரம் குளம்பியை கலந்தாள்.
வேர்லின் குளம்பித்தட்டோடு வேகமாக அறைக்குச் சென்றாள்.
“லக்ஷு அக்கி காஃபி குடிச்சிட்டீங்களா?”
“ஆமா டா பாதி குடிச்சிட்டேன்”
“அதக் குடுங்க நான் கலந்த காஃபிய குடிங்க” என்றாள் வேர்லின்.
“ஏன்டா?” என்று வினவினாள் லக்ஷு.
லக்ஷதாவின் கையில் இருக்கும் கோப்பை பிடிங்கினாள் வேர்லின். மூவரும் வேர்லினின் செய்கையில் ஒன்றும் புரியாமல் வியந்தனர்.
“குட்டி, ஏன் இப்படி பண்ற?”
“எல்லா ஒரு காரணமாதான் அக்கி”
“நான் குடிச்சத நீ குடிக்காத வேர்லின்”
“நீங்களும் எனக்கு அக்கிதான் நோ ப்ராப்ளம்”
பெண்கள் மூவருக்கும் இடையில் ஆணவனின் பேச்சு குறுக்கிடவில்லை.
வேர்லின், லக்ஷதா பருகி மீதி வைத்த குளம்பியை பருகினாள். தேக்கரண்டி அளவு குளம்பியை ஒரு குப்பி போத்தலில் சேமித்தாள்.
லக்ஷதா வழக்கம் போல வயிற்றை பிடித்துக்கொண்டு இரும ஆரம்பித்தாள்.
“அக்காக்கு என்னாச்சு, ஏன் இப்படி இருமுறாங்க?” என்று பியானா பதற்றத்துடன் தன்னவனிடம் கேட்டாள்.
“மாசத்துல ரெண்டு வாட்டி இப்படிதான் ஆகும் மாத்திர சாப்பிட்டா சரி ஆகிரும்” என்று விளம்பினான் புறஞ்சேயன்.
லக்ஷதாவை பார்த்து பியானா பரிதாபப்பட்டாள். தமக்கைக்கு வழக்கமாக வரும் இருமல் என்று எண்ணிக்கொண்டான் புறஞ்சேயன்.
லக்ஷதா தனக்கு தேவையான மாத்திரைகளை உண்ட பிறகு பதினைந்து நிமிடத்தில் இருமல் சற்று குறைந்தது.
இப்போது வேர்லினுக்கு தொண்டை எறிய ஆரம்பித்து அவளும் பலமாக இருமத் தொடங்கினாள்.
“வேர்லிமா உனக்கு என்னாச்சு?” என்று பயத்தோடு வினவினாள் பியானா.
“வாமிட்… வர மாதிரி இருக்க.. அக்கி” என்று இருமிக்கொண்டே கூறினாள்.
“எனக்கு பயமா இருக்கு.. என்ன பண்றது தெரியலயே.. ஏன் இப்படி இருமுறா” என்று பியானா பதற்றம் கலந்த பயத்துடன் கூறினாள்.
சில மணிதுளிகளில் வேர்லினின் கண்கள் சிவக்க தொண்டை அடைக்க வாந்தி எடுத்தாள். மூக்கின் வழியில் நீர்துளிகள் வெளியேற சுவாசம் தடையானது. வேகமாக மூச்சை திணற திணற வாயால் இழுத்துவிட்டாள்.
“ஏய் குட்டிமா, குட்டி ஏன்டா, என்னாச்சு?”
“அவ ஏதாவது காலேஜ்ல வாங்கி சாப்பிட்டு இருப்பா, ஹால்பிடல் போய் இன்ஜக்ஷன் போட்டு வரலாம். கிளம்பு” என்று சீருந்தை ஆயத்தப்படுத்தி மருத்துவமனையை நோக்கி வண்டியை செலுத்தினான்.
*****