அன்புடைய ஆதிக்கமே 26

அன்புடைய ஆதிக்கமே 26

அத்தியாயம் 26:

           தங்களது குடும்ப உறுப்பினர்களின் இடைவிடா குரல்களில் சிறிதுசிறிதாக மயக்கம் தெளிந்து எழுந்தான் செல்வா. தான் இருக்கும் இடத்தை சுற்றிப்பார்த்தான் அது அவனது அறைதான். அவனுக்கு அருகில் ஹரி, ராமா மற்றும் அவந்திகா மூவரும் இன்னும் மயக்கத்தில் தான் இருந்தனர்.

              கண்ணைக் கட்டிக்கொண்டு வந்த  உணர்வை சிரமப்பட்டு ஒதுக்கி வைத்துவிட்டு குளியலறைக்குள் சென்று குளித்துவிட்டு உடைமாற்றிவிட்டு பேச்சுகுரல்கள் கேட்ட இடத்தை  நோக்கி சென்றான்.

            அவனை முதலில் கண்டுவிட்ட சுருதி வேகமாக அவனை நெருங்கி அணைத்துக்கொள்ள செல்வாவும் அணைத்துக்கொண்டான். அடுத்து அவன் மயக்கத்திலிருந்த போது நடந்தது அனைத்தையும் சுருதி ஒலிப்பரப்பு செய்ய மொத்த குடும்பமும் இரண்டாவது தடவையாக இந்த விசயத்தை கேட்டுக்கொண்டிருந்தது.

               கதையை கேட்டவன் இதற்கெல்லாம் மூல காரணம் தனது அண்ணன் என்பதை புரிந்துக்கொண்டவன், தனக்கெதிரே நின்றவாறு தங்களை பார்த்துக்கொண்டிருந்த ஜெயக்குமாரின் சட்டையை பிடித்திருந்தான்.

                “இவ்வளவு பெரிய ரிஸ்க் ஜாப் எல்லாம் உனக்கு தேவையா? அங்கே எதுக்கு போனீயோ அதை மட்டும் பார்த்துட்டு வர தெரியாதா? வேற எதாவது தப்பா நடந்திருந்தா என்ன டா பண்ண முடியும்? ” என்று முழங்க,

                  அதில் பதட்டமான அனைவரும் செல்வாவை ஜெயக்குமாரிடமிருந்து பிரித்தனர்.

              ஜெயக்குமாரோ அதற்கெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் “நான் போனதே அதுக்கு தானே டா…” என்று கூற, மொத்த குடும்பமும் அதிர்ந்து பார்த்தது.

         எதோ வேலைப் பார்க்க போன இடத்தில் நடந்த கொடுமையை காண சகிக்காமல் இதெல்லாம் பண்ணினான் என்று நினைத்தால், இவன் என்னமோ தான் சென்றதே இதை கண்டுபிடிக்க தான் என்பது மாதிரி சொல்ல அவர்களும் பாவம் என்ன செய்வார்கள்…

           செல்வா வாயை திறப்பதற்குள் முந்திய அவர்களின் தாயார் லெட்சுமி “என்ன சொல்லுற நீ? புரியலை…” என்று கேட்க, அவன் தனக்கு வலப்புறமிருந்த சோபாவில் அமர்ந்திருந்து தன்னை கூர்மையாக பார்த்துக்கொண்டிருந்த முத்துவேலுவை நோக்கி ஒரு பார்வையை செலுத்தியவன் கூற ஆரம்பித்திருந்தான்.

                “நான் நீங்க நினைக்குற மாதிரி புரொபஸர் மட்டும் கிடையாது. நான் ஒரு போதைப்பொருள் தடுப்பு பிரிவுல இருக்க ஒரு சீக்ரெட் ஆபிஸர். நான் அசைன் ஆகியிருக்க வேலை வந்து தமிழ்நாடு முழுக்க இருக்க காலேஜஸ் எல்லாத்துலயும் நடக்குற போதைப்பொருள் பரிமாற்றத்துக்கான வேர் எங்கேயிருக்குன்னு கண்டுபிடிக்கிறதுக்கு…  சென்னையில வேலைப்பார்த்த இரண்டு வருசத்துல கண்டுபிடிச்சது தான் இங்கே நடக்குற எல்லாத்துக்கும் மூளையா செயல்படுறவன் மாறன் அப்படின்றது. ஆனால் அதை நீருபிக்க எங்கிட்ட போதுமான ஆதாரங்கள் இல்லை. அதுனால தான் அவனை பக்கத்திலிருந்து கவனிக்க அவன் காலேஜ்லயே வந்து சேர்ந்தேன்.”

              “அப்படி நான் இங்கே அதைப்பத்தின டீட்டைல்ஸ் கலெக்ட் பண்ணிட்டு இருந்தப்ப தான் அந்த பொண்ணு மாலா இறந்தது. அந்த பொண்ணு இறந்ததுக்கு முதல் நாள் காலேஜ்க்கு வரல. ஆனால் அவளை சாயந்தரம் பிரின்ஸ்பால் ரூம்ல பார்த்தேன். அதை அங்கிருந்த யாருமே போலீஸ் என்குயரி அப்ப சொல்லலை. அதுல எனக்கு சந்தேகம் வந்தது. அந்த இறப்புக்கும் போதைபொருளுக்கும் எதாவது தொடர்பு இருக்கும்னு நினைச்சு நான் இன்னும் உள்ளே இறங்கி அலசுனப்ப தெரிஞ்ச விசயம் என்னை பயப்பட வைச்சிருச்சு. இப்படி வசதியில்லாத பொண்ணுங்களை ஆசைக்காட்டி தன்னோட அரசியல் லாபம் மற்றும் தங்களோட இல்லீகல் விசயங்களுல இருந்து காப்பாத்திக்க இந்த பொண்ணுங்களை பகடை காயா பயன்படுத்தி இருக்காங்க அப்படின்றது. அந்த பொண்ணு இறந்ததுக்கு காரணம் ரொம்ப வைலண்ட்டா அந்த பொண்னை கொடுமைப்படுத்தி கொன்னுட்டு அதை தற்கொலைன்னு பிரேம் பண்ணி இருக்காங்க. இதுக்கு அரசு மருத்துவமனை டாக்டர்ஸும் உடந்தை…”

           “இன்னும் நிறைய ஆதாரம் வேனும்னு நான் காலேஜ்ல அலைஞ்சிட்டு இருந்தப்ப தான் என் ஸ்டூடன்ட் பாரதியே எய்ம் பண்ணி இருக்காங்கன்னு அந்த பொண்ணு சொல்ல அவளை வைச்சு எல்லாம் பண்ணிட்டேன்.”

         “அதில் கிடைச்ச எல்லா ஆதாரத்தையும் என்னோட சீனியர்க்கிட்ட கொடுக்க தான் சென்னைக்கு போனது. அங்கே எல்லா ஆதாரத்தையும் ஒப்படைச்சுட்டு அவங்களை கைது செய்ய ஆர்டர் வாங்கிட்டு வந்தப்ப தான் எல்லாம் இப்படி ஆனது. பாரதியோட ஜிபிஎஸ் எடுக்காம போய் பயத்துல இருக்க அடுத்து மாமாவும் கால் பண்ணி உங்களையும் காணோம்ன்னு சொல்ல அப்ப என்ன பண்றதுனே தெரியலை. ரொம்ப குழப்பத்துல இருந்தப்ப தான் மாறன் போன் பண்ணி பேச அது மூலமா ட்ரேஸ் பண்ணி நீங்க இருந்த இடத்துக்கு வந்தது.” என்று மிக நீண்ட வரலாறை ஜெயக்குமார் கூறிமுடிக்க அங்கு சிறு ஊசி விழுந்தாலே சத்தம் கேட்கும் வகையில் அமைதியாக இருந்தது.

            அந்த மௌனத்தை முதலில் உடைத்த செல்வா “நீ இந்த வேலை தான் பாக்குறன்னு சுருதிக்கு தெரியுமா?” என்று கேட்க, அப்பொழுது தான் அனைவரது கவனமும் சுருதியை நோக்கி திரும்பியது.

              சுருதி கண்களில் வழிந்த காதலுக்கு போட்டியாக  கன்னம் வருடிய கண்ணீருடன் முகமெல்லாம் சந்தோசத்தில் விகசிக்க ஜெயக்குமாரையே பார்த்தவாறு நின்றிருந்தாள்.

                       அவன் மேலுள்ள காதல் தனது கரைகளை உடைத்து பொங்கி பிரவாகம் எடுப்பது போல் தோன்றியது சுருதிக்கு… இவன் இந்த வேலையை தேர்ந்தெடுத்தற்கு தான் தானே காரணம். தன்னைப் போல் வேறு எந்த ஒரு பெண்ணும் இதில் சிக்கிற கூடாது என்பதாற்காகவே இந்த வேலை என்று அவளுக்கு புரிந்தது.

              ஜெயக்குமார் இல்லை என்ற தலையாட்டலுடன் “ஆனால் மாமாக்கு தெரியும்…” என்று கூற இப்பொழுது அனைவரது பார்வையும் முத்துவேலுவை மொய்த்தது.

               தனது தொண்டையை செருமியவர், “ம்ம்… இவன் இந்த எக்ஸாம் அட்டெண்ட் பண்ணி வேலையில சேர்ந்த பின்னாடி தான் எங்கிட்டயே சொன்னான். இதுல தடுக்க எதுவும் இருக்க மாதிரி எனக்கு தோணல அதுனால நான் ஒன்னும் சொல்லலை. அவன் ஒரு சீக்ரெட் எஜெண்ட் சோ யாருக்கும் எதுவும் தெரியக்கூடாது அப்படின்னு நினைச்சதுல எந்த தப்பும் இல்லை.”  என்று கூறியவர்,

          சிறிது இடைவேளை விட்டுவிட்டு “காலையில மணி பத்து ஆச்சு… இன்னும் சாப்பிடலை. பிள்ளைங்க பாவம் சாப்பாடு என்னன்னு பாருங்க…”  என்றவர் இத்துடன் இப்பேச்சை பேசவேண்டாம் என்று மறைமுகமாக கூறிவிட, அண்ணன் கூறிவிட்டதால் அவனை முறைத்துக்கொண்டே சென்றார் லெட்சுமி.

                 ‘நல்லவேளை காப்பாத்திட்டீங்க மாமா’ என்று ஜெயக்குமார் கண்களால் நன்றிசொல்ல அதை புரிந்ததைப்போன்று அவனைப்பார்த்து சிரித்துவிட்டு கண்ணடித்தார் முத்துவேல்.

             இவர்கள் இருவரையும் பார்த்திருந்த ஜெயக்குமாரின் தந்தையும், தமயனும் தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர்.

               அனைவரும் ஆளுக்கு ஒரு வேலையை பார்க்க சென்று விட சுருதி மட்டும் ஜெயக்குமாரையே பார்த்தவாறு நின்றிருந்தாள். அவளை நெருங்கிய ஜெயக்குமார் “என் மேல கோவமா பேபி மா?” என்று கேட்க,

             இல்லை என்பதைபோன்று தலையசைத்தவள் ஐ லவ் யூ சோ மச்…” என்று கூறிக்கொண்டிருக்க அடுத்து அவந்தி தலையில் கைவைத்தவாறு அறையிலிருந்து வெளியே வந்தாள்.

         அதில் ஜெயக்குமாரை டீலில் விட்டுவிட்டு அவந்திகாவை நெருங்கியவள் அங்கு நடந்த அனைத்தையும் மீண்டும் மறுமறு ஒளிபரப்பு பண்ண ஆரம்பித்திருந்தாள் சுருதி.

          சுருதியிடமிருந்த பார்வையை திருப்பிய ஜெயக்குமார் தனக்கு அருகிலிருந்து இருவரையும் கோபமாக பார்த்துக்கொண்டிருந்த செல்வாவை பார்த்தவனது புருவம் சுருங்கியது. அவனிடம் என்னவென்று கேட்க வேண்டும் என்று குறித்துகொண்டான்…  

            அதை அவனிடம் விசாரித்தப்போது செல்வா கூறியதைக் கேட்டு அதிர்ச்சியாகியவன் அன்று திருமண மண்டபத்தில் நடந்த அனைத்தையும் கூறி தனக்கும் அவந்திகாவிற்கும் ஒன்றுமில்லை என்பதை செல்வாவிற்கு புரியவைத்தான். அதில் தனது பலமாத பாரம் நீங்க அண்ணனை சந்தோசத்துடன் அணைத்துக்கொண்டான் செல்வா…

                   அன்று மாலையே அந்த வழக்கு சம்பந்தமான அனைத்து விவரங்களும் எல்லா செய்தி தொலைக்காட்சிகளிலும் ஒளிப்பரப்ப பட இந்தியாவே இந்த வழக்கில் ஆடி அடங்கியது.

             வெளிநாடு சுற்றுப்பயணம் சென்றிருந்த மத்திய அமைச்சர் மாறனின் தந்தை அங்கு நடந்த சாலை விபத்தில் சம்பவம் நடந்த இடத்திலே உயிரை துறக்க, முதன்மை குற்றவாளிகளாக மாறன் மற்றும் வசந்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அது நீருபிக்கப்பட்டு இருவருக்கும் ஒற்றை ஆயுள் தண்டனை மற்றும் பல இலட்சங்கள் அபராதம் விதிக்கப்பட்டது. அவர்களது கல்லூரி தமிழக அரசின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் கொண்டு வரப்பட்டது.

                    மிக துணிச்சலாக செயல்பட்டு குற்றத்தை கண்டுபிடிக்க உதவியதால் பாரதிக்கு தமிழக அரசு மற்றும் மத்திய அரசு விருது வழங்கி கௌரவித்தது. ஜெயக்குமார்  பதவி உயர்வு பெற்றான்.

                    இதற்கு இடையில் அதில் சம்பந்தப்பட்டிருந்த பல அதிகாரிகள் இடைநீக்கம் மற்றும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

           இந்த இடைப்பட்ட காலத்தில்  ஜெயக்குமாருக்கு மாறன் மீது ஒரு நன்மதிப்பு உருவாகியிருந்தது. சுருதியை பொறுத்தவரை தனது உயிரை காப்பாற்றியவன் அவனது உயிரையே பணயமாக வைத்து, மாறன் மற்றும் வசந்தின் பேச்சு வார்த்தையின் மூலம் எதோ ஒரு கண்மூடித்தனமான அன்பை தன்மீது மாறன் வைத்திருக்கிறான் என்று புரிந்துகொண்ட சுருதி எப்பொழுதும் போல் தன்னுடைய அன்பால் அவனையும் வாரிக்கொண்டாள்.

      ஐந்து வருடங்களுக்கு பிறகு…

                    “குமார் உங்கிட்ட கொஞ்சம் பேசனும்…” என்றவாறு அப்பொழுது தான் வீட்டிற்குள் நுழைந்தவனை தனது நிறைமாத வயிற்றால் வழியை மறைத்துக்கொண்டு கேட்டாள் சுருதி.

                “ம்ம்… பேசலாமே…” என்றவன் அவளது தோளோடு அணைத்தவாறு தங்களது வீட்டினுள்ளே அழைத்துசென்று கட்டிலில் அமரவைத்துவிட்டு தனது சட்டையை கழட்டினான்.

                  “உங்கிட்ட முக்கியமான விசயம் பேசனும்.”

                   “ஏன்னது மாறனை போய் பார்க்கனுமா? இந்த மாதிரி நேரத்துல வாய்ப்பே இல்லை. சொல்லிட்டேன்.”

                      “இல்லை இது வேற”

                       “உங்க ஸ்கூல் இப்ப சென்ரல் கவர்மெண்ட் நடத்துற போட்டியில கலந்துகொள்ள போகுதே அதுக்கு இன்சார்ஜ் போகனுமா? சத்தியமா வாய்ப்பே இல்லை. நானே அனுப்புனாலும் கேகே அடிச்சு பத்தி விட்டுவிடுவார்.”

                         “டேய் என்னை பேச விடுவியா மாட்டியா?” என்று அவள் கோவத்துடன் கேட்க, சிரிப்புடனே அவளது அருகில் அமர்ந்து என்னவென்று கேட்டான்.

                  “எங்கிட்ட இருந்து நீ ஏதாவது மறைக்கீறியா?”

                    “நானா? யாரைப்பார்த்து என்ன வார்த்தை கேட்டுட்ட? உங்கிட்ட போய் நான் எதாவது மறைப்பேனா?”

                     “ஹே.. ஹே நடிக்காதே டா. பிராடு கார நாயே. நீ ஒரு சீக்ரெட் ஏஜென்ட் அப்படின்றதை மறைச்சு வாத்தின்னு சொல்லி என்னை கல்யாணம் பண்ணிருக்க அதுக்கே உன்னை நான் டிவோர்ஸ் பண்ணிருக்கனும் பாவமேன்னு விட்டா இப்ப எவ்வளவு பெரிய விசயத்தை மறைச்சு என்னை கல்யாணம் பண்ணிருக்க இடியட்.”

           தனது நிறைமாத வயிற்றை வைத்துக்கொண்டு மிகவும் சிரமப்பட்டு எட்டி தலையணைக்கு கீழ் இருந்த டைரியை எடுத்து அவனது மடியில் போட்டாள்.

             அதனை பார்த்தவனுக்கு இதயம் நின்று துடித்தது. இது எப்படி இவள் கையில் தான் தங்களது வீட்டில் தனதறையில் தானே வைத்திருந்தேன். இங்கு எப்படி என்று யோசித்தவனுக்கு இன்று காலையில் சுருதியை லெட்சுமியிடம் விட்டு சென்றது ஞாபகம் வந்தது.

                    “சொல்லுங்க சார்.”

                     “அது வந்து…”

                     “ஏது வந்து…”

                     “அவந்தி தான்…”

                     “அவந்தி தானா அவளோட டைரி சார்க்கிட்ட எப்படி? அதுவும் இத்தனை வருசம் பத்திரப்படுத்தி வைக்குற அளவுக்கு…”

                       “ஹே அப்படிலாம் இல்லை டி. இதை நான் லாஸ்ட்டா பார்த்தது நம்ம கல்யாணத்தப்ப அப்படியே கபோர்டுக்குள்ள தூக்கி எறிஞ்சது.”

                       “கிளம்பு நீ உங்க அம்மா வீட்டுக்கு கிளம்பு. உனக்கும் எனக்கும் ஒத்துவராது. ” என்று ஆரம்பித்தாள் சுருதி…

   ஹா ஹா ஹா… இந்த ஐந்து வருசத்தில் இது மாதிரி பல போர்கால விசயங்களை கையாண்டு இருந்ததால் ஜெயக்குமார் அவனது பேபிமாவை எப்படியாவது கெஞ்சி, கொஞ்சி சமாளித்துக்கொள்வான்…

 

வாழ்க்கையை சுவாரசியமாக்க அன்பு சிலநேரங்களில் ஆதிக்கமாகவும் நம்மீது படரலாம்… ஏற்றுக்கொண்டு கொண்டாடுங்கள் கண்மணீஸ்…

 

முற்றும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!