அன்புடைய ஆதிக்கமே24

அன்புடைய ஆதிக்கமே24

அத்தியாயம் 24:

                 பிசுபிசுத்த விழிகளை பிரிக்க முயன்ற சுருதிக்கோ இமைகளை பிரிக்க முடியவில்லை. கண்கள் மிகவும் வலித்தது. சரி கைகால்களையாச்சும் அசைத்து பார்ப்போம் என்று முயன்றவளுக்கு அதுவும் முடியவில்லை. சுருதிக்கு ஒன்றுமே புரியவில்லை. தனக்கு என்னமோ ஆகிவிட்டது என்று அலற தயாரனவளுக்கு அப்பொழுது தான் மெல்ல மெல்ல புரிய ஆரம்பித்து இருந்தது.

               அந்த ரவுடிகள் தங்களை கடத்தி வந்திருப்பதும் அவர்கள் தங்களை நாற்காலியில் கட்டி போட்டு கண்களை அடைத்திருப்பதும், அனைத்தும் புரிய ஆரம்பிக்க அவர்களை திட்ட வாய் திறந்தாள் சுருதி.

                “டேய் பரதேசி நாய்களா… யாரு டா நீங்கள் எல்லாம்? எதுக்கு டா இப்படி லூசு தனமா கைகாலை  கட்டி போட்டது பத்தாதுன்னு கண்ணயும் கட்டி போட்டு வைச்சு இருக்கீங்க… லூசு பசங்களா… அவுத்து விடுங்கடா… ” என்று கத்த… அவளது கத்தலில் கொஞ்சம் கொஞ்சமாக மீத ஐவரும் கண் விழித்தனர். அவர்களும் அந்நிலை தான். கண்கள் கைகால்கள் கட்டப்பட்டிருந்தன.

            அவந்திகா, செல்வா, ஹரி, ராமா ஆகிய மூவரும் “சுருதி…சுருதி…” என்று ஒரே நேரத்தில் கூப்பாடு போட அமைதியாக இருந்த அந்த பெரிய குடோனே எதிரொலிக்க, அதில் அந்த ரவுடிகளின் தலைவன் பீம்பாய் கடுப்பாகிவிட்டான்.

                      “டேய் எவனாச்சும் கத்துனிங்க… அவ்வளவு தான் போட்டு தள்ளிட்டு போய்கிட்டே இருப்பேன் டா…” என்று கர்ஜிக்க, மற்ற ஐவரும் பயந்து அமைதியாகிவிட,

                   “டேய் நீதானே டா… என் போனை உடைச்ச பீம்பாய்… நாயே… பேயே… பிசாசே… என் செல்போனை உடைச்சது பத்தாதுன்னு இப்ப என் கையும் காலையும் வேற உடைக்க போறீயா? ஆளு நல்லா பேத்து எடுத்த டைனாசரஸ் மாதிரி தானே டா இருக்க.. உழைச்சு சம்பாரிக்க என்ன கேடு? இப்படி ஒரு பிழைப்பு பிழைக்க நீ தும்பை பூவில தூக்கு மாட்டிட்டு சாவலாம்.”  என்று தீட்டிக்கொண்டே இருக்க,

                     “பாவமே… போனா போகுதுன்னு பார்த்தா ஒவ்ரா வாய் பேசுற நீ…” என்று கோவமாக கர்ஜித்தப்படி வந்தவன் அந்த நிமிடம் ஒன்றை மறந்துப்போனான். தன்னை கடத்த சொன்ன முதலாளி இவளது முகத்தை வீடியோ காலில் பார்த்துவிட்டு இவள் மீது துரும்பு பட்டால்கூட அவனை கொன்றுவிடுவேன் என்று கூறியதை…

                 கர்ஜித்தப்படி சென்ற பீம்பாய் சுருதியை ஒங்கியறைய அவள் அமர்ந்திருந்த நாற்காலி ஆட்டம் கொண்டு இயல்பு நிலைக்கு திரும்புவதற்குள் அந்த பீம்பாயின் வலதுபுற காலில் புல்லட் பாய்ந்தது.

            அந்த சத்தத்தை கேட்டு கட்டப்பட்டிருந்த அனைவரும் சுருதிக்கு எதுவும் ஆகிவிட்டதோ என்று அலற, சுருதியோ மீதமிருந்தவர்களுக்கு எதுவும் ஆகிவிட்டதோ என்று அலறி தடுமாற, சட்டென்று ஒரு கரம் அவளது நாற்காலியை தாங்கி பிடித்தது.

                   “ஓன்னுமில்லை… யாருக்கும் ஒன்னுமில்லை… ரிலாக்ஸ்…” என்று அவளிடம் கூறியவாறு அவளது கண்கட்டை அவிழ்த்துவிட மிகவும் கஷ்டப்பட்டு இமைகளை பிரித்தவளுக்கு தனக்கு எதிரிலிருந்த ஆறடிக்கும் மேலான உருவம் மங்கலாக தெரிய கண்களை மூடி மூடி திறந்து இயல்பு நிலைக்கு கொண்டு வந்தவளுக்கு தனது எதிரிலிருப்பவன் இப்பொழுது நன்றாக தெரிந்தான்.

                      அவனை பார்த்தவளுக்கு அவனை எங்கோ பார்த்ததுப் போன்று இருந்தது. ஆனால் யாரென்று சரியாக தெரியவில்லை.

              “சார்… சார்… எங்களை காப்பாத்துங்க சார். இவங்க எல்லாம் யாருனே தெரியல்லை. எங்களை கடத்திட்டு வந்துருக்காங்க சார்… காப்பாத்துங்க சார்… ” என்று தங்களை காப்பாற்ற வந்திருக்கிறான் என்று நினைத்துக்கொண்டு கெஞ்ச,

              அந்த எதிரிலிருந்தவனோ இதழ் பிரிக்காமல் சிரித்தான். அவனது சிரிப்பில் முழித்தவள் அப்பொழுது தான் சுற்றி இருப்பவையை பார்த்தாள்.

              அவனுக்கு அருகில் இன்னொருவன் நின்றுக்கொண்டிருந்தான். அந்த பீம்பாய் இரத்த வெள்ளத்தில்  கீழே கிடந்தான். தங்களை கடத்தி வந்தவர்கள் மரண பயத்துடன் கொஞ்சம் தள்ளிநின்றவாறு கீழே கிடந்த பீம்பாயை பார்த்தவாறு நின்றிருந்தனர்.

         அந்த இரத்த வெள்ளத்தை பார்க்க பார்க்க தனது எதிரிலிருப்பவன் யாரென்று சுருதிக்கு ஞாபகம் வர ஆரம்பித்தது.

                   “நீ அந்த கார்காரன் தானே?” என்று மாறனை பார்த்து கேட்க, மாறன் இப்பொழுது சத்தமாக சிரித்தான்.

                      “ஹா ஹா ஹா… நான் கூட நீ என்னை மறந்துட்டியோன்னு நினைச்சேன் இல்லை மறக்கலை. யெஸ் நானே தான். நான் மாறன்…” என்று தன்னை அவன் அறிமுகப்படுத்திக்கொள்ள சுருதியின் முகம் வெளுக்க ஆரம்பித்தது. அந்த கார்கண்ணாடியை உடைத்தற்காகவா இவன் தங்களை எல்லாம் கடத்தி வைத்திருக்கிறான் என்று நினைத்தவள் மாறனிடம் கேட்கவும் செய்ய,

                      அவனோ குக் வித் கோமாளி நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருப்பவன் போன்று தன்னருகில் இருந்த வசந்தின் மீது விழுந்து சிரித்தவன் , “என் நுனிப்பார்வை கூட உன்மேல படக்கூடாதுன்னு நான் நினைக்குறேன். பட் கடவுள் பிளான் வேறதா இருக்கும் போலயே… ” என்று மாறன் கூற, சுருதி பதில் பேசுவதற்குள் இடைப்புகுந்த செல்வா “டேய் நீங்களாம் யாரு டா? விடுங்க டா… இந்த பொண்ணுங்களை மட்டும் விடுங்க டா…”

           “டேய் அத்தான் நாங்க என்ன டா உனக்கு பாவம் பண்ணோம். ஆம்பளையா பிறந்தது அதுவும் உனக்கு மாமன் மகன்களா பிறந்தது தப்பா டா… இப்படி இரண்டு பச்சைமண்ணுங்களை சர்வதேச கிறுக்கனுக கூட மாட்டி விடுறீயே டா எடுவட்ட பயலே….” என்று ராமா கத்த, ஹரியும் சேர்ந்து பேச

          “டேய் இங்கே வாங்க டா…இவனுங்க வாயை கட்டுங்க டா…” என்று வசந்த் கட்டளையிட இருவர் வந்து சுருதி மற்றும் பாரதியை தவிர மற்ற அனைவரின் முகத்திலும் மயக்கமருந்தை  வைத்து மயக்கமுற செய்தனர்.

                அந்த பீம்பாய் இன்னும் வலியிலும் வாயை திறக்கமால் அங்கு தான் அமர்ந்திருந்தான்.

                  மாறன் தனக்கும் சுருதிக்குமிடையை இருந்த இடைவேளியை குறைத்து அவளை நெருங்க அவளோ இவனை கண்டு பயந்து தலையை திருப்ப, மாறனுக்கு அந்த பீம்பாய் அடித்ததால் கன்றி சிவந்து போயிருந்த கன்னமும் அதில் பதிந்திருந்த விரல் தடமும் தெரிய மிகவும் கோபமாகிவிட்டான்.

                  அதைப் பார்க்க பார்க்க தனது கன்னங்கள் எறிவது போன்ற ஒரு உணர்வு, அவனால் தாங்க முடியவில்லை. சட்டென்று அந்த பீம்பாய் அருகில் சென்றவன் அவனது குண்டுப்பட்ட கரத்தில் தனது சூ அணிந்த காலால் ஓங்கி ஒரு உதைவிட அந்த பீம்பாய் அலறினான்.

               மீண்டும் மீண்டும் அவனை உதைத்துக்கொண்டே “உங்கிட்ட என்ன டா சொன்னேன்? அவ மேலே உன் நுனிப்பார்வை கூட படக்கூடாது சொன்னேன்ல டா… நீ என்ன டா பண்ணி வைச்சுருக்க? எனக்கு எறியுது டா ****** நாயே… ச்சீ இவனை தூக்கிட்டு போங்க டா போட்ற போறேன்…” என்று கத்தியவன் அங்கு போடப்பட்டிருந்த நாற்காலியில் தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்தான் மாறன்.

                      சுருதிக்கு ஒன்றுமே புரியவில்லை. அவளுக்கு மாறனின் நடவடிக்கைகளை பார்க்க மிகவும் பயமாக இருந்தது. அழுகை வரும் போன்று வேற இருந்து தொலைத்தது. தனது கழுத்தை திருப்பி அந்த இடத்தை சுற்றிப்பார்த்தாள். தப்பிக்க எதாவது வழி கிடைக்குமா? என்று பார்க்க அது ஒரு பெரிய குடோன். பல பழைய சாமான்கள் கிடந்தன. இவர்கள் இருந்த இடத்தில் மட்டுமே மின்விளக்கும் ஒரு மின்விசிறியும் சிறிய சத்தத்தை ஏற்படுத்திக்கொண்டு இயங்கிக் கொண்டிருந்தது.

                      மாறனின் அருகில் சென்ற வசந்த் மாறனின் தோள்மீது கைவைக்க அவனை நிமிர்ந்துப் பார்த்த மாறன் அவனை கூர்மையாக பார்த்தவாறு, “எனக்கு தெரியாம எதாவது பிளான் பண்றீயா வசந்த்?”

         “டேய் மாறா… என்ன டா சொல்ற?”

          “அப்புறம் எப்படி சுருதி இங்கே வந்தா…”

         “மாறா சத்தியமா எனக்கு எதுவும் தெரியாது டா. அந்த பொண்ணை தூக்க போன இடத்துல தான் இதுங்க எல்லாத்தையும் தூக்கிட்டு வந்துருக்காங்க மாறா. எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உனக்கு தெரியாம என்ன பண்ணிருக்கேன் மாறா?” என்று கேட்க,

                 சட்டென்று எழுந்து வசந்தின் முகத்தில் ஓங்கி குத்துவிட்டவன் “எனக்கு தெரியாம எதுவும் பண்ணதில்லையா? நாலு வருசமா எனக்கு தெரியாம நம்ம காலேஜ்ல படிக்குற பொண்ணுங்களை பலபேருக்கு அனுப்பி மாமா வேலை பார்த்துட்டு இருந்து இருக்க டா…த்தூ..”

                தனது உதட்டில் வடிந்த இரத்தத்தை துடைத்த வசந்த் “ஏய்தவன் இருக்க அம்பை நோகி என்ன பயன் மாறா?” என்று வசந்த் மாறனை பார்த்து கேட்க, மாறனால் பதில் பேச முடியவில்லை.

                       அவன் கூறுவதும் சரிதானே தனது தந்தை சொன்னதை தானே இவன் செய்து இருக்கிறான். ஆழ்ந்த மூச்சுகளை எடுத்து தன்னை நிலைப்படுத்தியவன் வசந்தை தனது தோளோடு அணைத்தவன் பார்வையோ சுருதியையே வெறித்து இருந்தது.

                சுற்றுபயணமாக வெளிநாடு சென்றிருக்கும் தனது தந்தை வருவதற்குள் இங்கு அனைத்தையும் சரிசெய்ய வேண்டும். தான் உள்நுழையாவிடில் இங்கு இருக்கும் யாரும் உயிருடன் வெளியே செல்ல முடியாது.

         இந்த பெண் சுருதி மட்டும் இதில் சம்மந்தம்படாவிடில் இவன் இதிலெல்லாம் கண்டுகொள்ளாமல் கடந்திருப்பான். எப்படியென்றெ தெரியமால் அவனது உயிரானவள் இதில் இருக்கிறாளே…

          இவ்வளவும் சுருதியின் முகத்தை பார்த்தவாறே நினைத்திருந்தான் மாறன். அவளது அழுது வடிந்த முகத்தை பார்த்தவனுக்கு அவளை முதன்முதலாக பார்த்த நாள் ஞாபகம் வந்தது.

            ஒரு ஆறுமாதங்களுக்கு முன்பு மிகச்சிறந்த கல்லூரியின் உரிமையாளர் என்ற முறையில் ஜெயராம் பள்ளியில் நடந்த ஒரு விளையாட்டு போட்டியில் தலைமை தாங்க ஜெயராம் ட்ரஸ்ட் மூலமாக அழைத்திருக்க மாறன் அங்கு சென்றிருந்தான்.

                   அன்று அந்தப் போட்டியின் இறுதிகட்டம் சிறுகதை எழுதும் போட்டியின் முடிவு அறிவிக்கும் போது தான் அங்கு சென்றிருந்தான். ‘ஸ்பரிசம் இல்லா தீண்டல் நீ…’ என்ற கதை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட கரகோசம் வானை பிளந்தது.

         அடுத்து இவனை பொன்னாடை போர்த்தி வரவேற்று என்று சம்பிரதாய நிகழ்ச்சிகள் நடந்துமுடிந்து அவன் இருக்கையில் அமர்ந்து கண்களை சுழலவிட அரங்கத்தின் மூலையில் இருந்த ஒருசிறு கூட்டம் அவனது கவனத்தை கவர்ந்தது.

             நான்கைந்து மாணவர்கள் ஒரு ஆசிரியை சுற்றி நின்றிருக்க அவளோ தனது கரங்களிலிருந்த பேப்பரில் கவனமாக இருந்தாள். எதுவோ மிகவும் உணர்ச்சிகரமான ஒன்றை தான் அந்த காகிதம் தாங்கியிருக்க வேண்டும் என்று மாறனுக்கு நன்றாக தெரிந்தது.

            ஏனெனில் அந்த ஆசிரியை முகத்தில் தெரிந்த வர்ணஜாலங்கள் அப்படிபட்டது. மாறனுக்கு இன்னும் சுவாரசியமாகிவிட அவளது முகத்தை கூர்ந்து பார்த்தவாறு இருந்தான். அவளது வலக்கண்ணிலிருந்து மட்டும் கண்ணீர் வடிய ஆரம்பித்தது. அதற்கு முரணாய் அவளது முகமும் இதழ்களும் மகிழ்ச்சி, பெருமை, கர்வம் என்று கலவையான உணர்வுகளால் விகசித்துக்கொண்டிருந்தது.

                    அவனது முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த மாணவனுக்கு நெற்றியில் முத்தமிட்டு தன்னுடன் சேர்த்து அணைத்துக்கொண்டாள். சில நொடிகளில் அவர்களது அருகில் நின்றிருந்த உயரமானவன் அவளை தோளோடு அணைத்துக்கொண்டு எதையோ அவளது செவிகளில் ஒதிக்கொண்டிருந்தான்.

               அடுத்து அருகிலிருந்தவர் எதுவோ கேட்க அப்படியே மாறனது கவனம் திசைதிரும்பியது. அவளை மறந்தும் விட்டான். அதற்கு பின்பு எப்பொழுதாவது குட்டையான… சேலை கட்டிய பெண்களையும்,  முகம் முழுவதும் விகசித்த புன்னகையுடன் இருக்கும் பெண்களை பார்க்கும் போது தன்னாலே மாறனுக்கு சுருதியின் ஞாபகம் வரும். அவளை நினைத்து புன்னகை பூத்துக்கொள்வான்.

         இப்படியே சென்று கொண்டிருந்த போது தான் முதல் நாள் இரவு அளவுக்குமீறி குடித்துவிட்டு தங்களது கெஸ்ட் ஹவுசில்  உறங்கிகொண்டிருந்தவனை தங்களது கல்லூரியில் படிக்கும் பெண் இறந்துவிட்டாள் என்ற செய்தி கிடைக்க வேகமாக தனது வீட்டிற்கு சென்று தந்தையுடன் பேசிவிட்டு கல்லூரிக்கு செல்லவேண்டும் என்று சென்றுக்கொண்டிருந்த போது மீண்டும் அவளை சந்தித்தான்.

              ஒரு விபத்து நடக்கவிருப்பதை தவிர்த்து ஒடித்து திரும்ப ஒரு பெண் மீது இடிக்கபோய் ஒரு ஆடு இடையில் வந்து விழ அதை தட்டிவிட்டு அவனுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச போதையும் துரத்தி அடித்தது. மாறனும் ஆடு தானே என்று நினைத்து காரை சீராக செலுத்த, அவனது கார் கண்ணாடி கல்லெறிந்து உடைக்க, மிதமீஞ்சிய கோவத்தில் வளைத்து எறிந்தவளுக்கு அருகில் வந்து நிற்ப்பாட்டிருந்தான்.

            வண்டியை விட்டு வேகமாக இறங்கி முன்னே வந்தவன் அந்தப்பெண் யாரென்றே தெரியமாலே “யூ ப்ளடி சீப். ஹவ் டேர் யூ? எவ்வளவு தைரியமிருந்தா என் கார் மேலேயே கல் தூக்கி எறிவ? ” என்று சீறியவனுக்கு அப்பொழுது தான் அவளை நன்றாக பார்த்தான். இளக துடித்த மனம் அவளது பேச்சில் இன்னும் கடினமாக அவளிடம் பணத்தை கொடுத்துவிட்டு அந்த இடத்தை விட்டு அகர்ந்தான்.

             அவள் பயந்தாலும் தன்னை சமாளித்து கண்ணை உருட்டி மிரட்டியது என்று அனைத்தும் அடுத்து வந்த நாட்களில் அவனது உறக்கத்தை கலைத்தன. தன் வாழ்க்கையில் யாரையுமே இணைக்க அவன் எப்பொழுதும்விரும்பியதே இல்லை.

            முயன்று அந்த பெயர் தெரியாத பெண்ணை அதாவது சுருதியை மறக்க முயற்சி செய்து அதில் வெற்றியும் கண்டான். அவனின் அமைதியில்லா மனதில் அவளது சிரித்த முகம் அமைதியை விளைத்தது. அவனுக்கே ஒரு மாதிரி வித்தியசாமாக தோன்றியது.

                    அந்த பெண்னை மிகவும் பிடித்திருந்தது. அவளை கூடவே வைத்துக்கொள்ள வேண்டும் என்றேல்லாம் தோணவில்லை. அவள் மீது எந்த தப்பான எண்ணங்களும் அவனது மனதில் உருவாகவேயில்லை.

                     எதுவோ ஒரு அமைதியை அவள் கொடுத்தாள் மாறனுக்கு. இப்படி சென்று கொண்டிருந்த போது தான் அவளை ஜெயக்குமாரின் மனைவியாக அறிந்தது. அவள் இன்னொருவனின் மனைவி என்று தெரிந்ததுமே நெஞ்சில் சுருக்கென்று வலி. ஆனால் அவனுடன் அவள் முகம் முழுக்க விகசித்த புன்னகையுடன் இருப்பவளை பார்த்தவுடனே அந்த வலியும் மறைகிறது.

               அந்த ஜெயக்குமாரின் மீது கோவம் வரவில்லை. அவளின் சிரிப்பிற்கு காரணமென்று அவன் மீதும் ஒருவிதமான பாசம் தான் வருகிறது.

                 என்ன எழவு விதமான உணர்வு தனக்கு சுருதி மீது என்று அவனுக்கு புரியவேவில்லை. ஆனால் தான் அவளால் சந்தோசமாக உணர்கிறோம் என்பது மட்டும் புரிந்தது. எனவேதான் அவளை தனது கண்ணருகில் வைத்துக்கொள்ளவே அனைத்தும் செய்தான். ஜெயக்குமாரை பெர்மனன்ட் ஸ்டாப் ஆக்கியது. ஜெயராம் பள்ளியில் ஒரு பங்குதாரராக மாறியது என்று அனைத்தும்.

               கடைசியில் பார்த்தால் இவர்கள் சுருதியைவே மிகப்பெரிய சிக்கலில் மாட்டிவைத்திருக்கிறார்கள். அவனுக்கு தன் மீதே கோவமாக வந்தது. வெளியே சென்றுக்கொண்டிருக்கும் நிலைமையை பார்த்தால் கண்டிப்பாக இவர்களின் கதையை முடிக்க வேண்டும். பாரதிக்கும் சுருதி அவளது உறவுகளுக்கும்  எந்தவிதமான சம்மந்தமும் இல்லையென்றாலும் இங்கு வந்து அனைத்தையும் தெரிந்து கொண்டார்களே.

                     இவர்களை வெளியில் விட்டால் கண்டிப்பாக இவனும் வசந்தும் உள்ளே செல்ல வேண்டும். அப்படி உள்ளே சென்று விட்டாலும் இவனது தந்தை இவர்களை உயிரோடு விடுவாரா என்பது சந்தேகம் தான். கண்டிப்பாக கொன்று விடுவார்.

                    என்று பல யோசனைகள் ஓட சுருதியின் அருகில் சென்றான். அவளும் அவனை தான் அழுகை நிறைந்த கண்களூடன் பார்த்திருந்தாள். அவளது கண்களை பார்த்தான். இந்த கண்கள், இந்த முகம், இவளின் சிரிப்பு இதை நிலைப்பெற செய்ய என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்று தோன்றியது.

                  அடுத்து செய்ய ஆரம்பித்தான்.

                    சுருதியை பார்த்து சிரித்துவிட்டு பாரதியிடம் சென்றான். அவளது கண்களில் மரணபயம் தெரிந்தது.

             “சார் எனக்கு எதுவும் தெரியாது சார்…” என்று அழுதாள்.

            “அப்புறம் எப்படி உங்கிட்ட வனிதா தேவி பேசுன ஆடியோ வெளிய வந்தது. இப்ப எல்லா நியூஸ் சேனலயும் ஒடிக்கிட்டு இருக்கு.” என்று கேட்க,

               அவளோ பதில் பேசாமல் எச்சிலைகூட்டி விழுங்கினாள்.

              “நீ இதுவரை என்ன என்ன கலெக்ட் பண்ணி வைச்சு இருக்கியோ அதெல்லாம் கொடுத்துட்டு கிளம்பு. உன்னை உயிரோட விடுறேன்.” என்று கூற,

              “சார் எனக்கு எதுவுமே தெரியாது சார்…” என்று கூற, மாறன் வசந்தை பார்த்து கண்களை அசைக்க அவன் வந்து அவளது கன்னத்தில் ஒங்கி ஒரு அறைவிட்டான்.

                        அதில் அவளது உதட்டிலிருந்து இரத்தம் வடிய ஆரம்பித்திருந்தது. அதை கண்ட சுருதி “டேய் ஏன் டா அநியாயம் பண்றீங்க.” என்று கத்த,

                  “ஆமாம் அப்படி தான் பண்ணுவோம்.” என்று கூறிய மாறன் மீண்டும் வசந்தை நோக்கி கண்ணை காட்ட பாரதிக்கு இன்னொரு அடிவிழுந்தது.

              “சொல்லிறேன் சார். எல்லாமே ஜெ.கே சார்கிட்ட தான் இருக்கு. ”

               “ஜெ. கேன்னா உன் புருசன் தானே…” என்று வேகமாக திரும்பி சுருதியிடம் கேட்க அவள் தலை ஆமாம் என்று மிகப்பெரும் அதிர்ச்சியுடன் அசைந்தது.                            

             மாறனுக்கு எங்காவது போய் மூட்டிகொள்ளலாம் போன்று இருந்தது. இந்த சுருதியை இதிலிருந்து காப்பாத்தலாம் என்று பார்த்தால் அவள் இன்னும் இன்னும் சிக்கலுக்குள் சென்று கொண்டிருக்கிறாள்.

              “உன் புருசனுக்கு எதுக்கு இந்த புடுங்குற வேலை? மனசுல பெரிய ஹீரோன்னு நினைப்பா அவனுக்கு… புடுங்கி… ######” இன்னும் என்னேன்னவோ காதில் வாங்க முடியா வார்த்தைகளில் அர்சித்துக்கொண்டிருந்தான்.

             வசந்த்துக்கு மாறன் எதனால் இவ்வளவு பதட்டப்படுகிறான் என்று புரிந்தது. மாறனை நம்பினால் தான் ஜெயிலிற்குள் கலி தான் திங்கவேண்டும் என்று புரிந்துக்கொண்ட வசந்த் தன்னை பாதுகாத்துக்கொள்ள காயை நகர்த்த ஆரம்பித்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!