இரட்டை நிலவு – 5

இரட்டை நிலவு – 5

இருக்கையை விட்டு எழுந்த ஷ்ரவன், “அமீக்கா, என்ன திடீர்னு மும்பை??” என வினவ, “ப்ச்.. நான் போகணும்.. தன்விய மீட் பண்ணனும்..” என்ற அமீக்காவின் வார்த்தையில் ஏதோ ஒரு உணர்வினை படித்துவிட அவனும் சம்மதித்தான்.. விருப்பத்தினை தெரிவிக்கும் முன்னரே விழுந்து விழுந்து கவனித்தவன், கிட்டத்தட்ட சரியென்ற நிலைக்கு வந்திருக்க சதிராட்டம் ஆடாத குறை மட்டுமே..

சில நிமிடங்களுக்கு முன்,

“ஹாய் என் செல்ல ராணியே..” என உற்சாகத்தோடு தொடங்கிய அமீக்காவிற்கு எதிர்புறத்தில் எந்த பதிலும் கிடைக்க பெறவில்லை..

“தனு.. தனு..” என்றவளின் பதட்டகுரலின் பின்னே, “சொல்லு…” என்ற உணர்சிகளற்ற வார்த்தைகளே வெளிவந்தது தன்வியினிடம் இருந்து

“என்னாச்சு?? ஏதும் பிரச்சினையா??” என அக்கறையாக வினவியவளின் மீதுள்ள கோபத்தினை தன்வியால் ஒரு நிமிடத்திற்கும் அதிகமாக தாக்கு பிடிக்கவில்லை..

“பேசாத மீகா.. நான் கோபமா இருக்குறேன்.. என்னை இங்க அனுப்பி வச்சதோட சரி.. உன் கடமை முடிஞ்சிதில்ல.. நான் ஒரு பைத்தியக்காரி.. அதானே.. என் போனை கூட அட்டென்ட் பண்ண டைம் இல்லாத உன்கிட்ட போய் வந்த அலையன்ஸ் பத்தி பர்ஸ்ட் ஷேர் பண்ணுவன்னு எக்ஸ்பெக்ட் பண்ணினேன் பாரு..” என பொசுபொசுவென முட்டி வந்த ஆத்திரத்தை மென்மையாக கான்பித்தவள் அடுத்த நொடியே, “நான் அவ்ளோ தூரமா போயிட்டேனா மீகா…” என்ற தன்வியின் குரல் உடைந்து அழுகையே கலந்திருந்தது.. தன்வியின் கவலையை கண்டப்பின்னும் இங்கேயே பொறுமையாக அமர்ந்திருந்தால் அவள் அமீக்காவே இல்லையே..

அரைமணி நேரமாகியும் வெளியே செல்லாவிடில் ஸ்ரீகாவுடன் இணைந்து மொத்த குடும்பமும் கேலி கிண்டலில் இறங்கி விடுவனரே என தலையில் அடித்து கொண்டே வெளியே வந்தாள் அமீக்கா.. அப்பொழுது, குகனின் போன் வாசுகியின் கரங்களில் பகுமானமாய் அமர்ந்திருக்க, தீயாய் முறைத்த அமீக்கா, “ஷ்ஷ்.. பேசக்கூடாது..” என அழுத்தமான சுட்டுவிரலை இதழ்களுக்கு மேலாக வைத்து சைகை காண்பித்தாள்..

குகனோ மனைவியா?? மகளா?? என்ற சங்கடமான நிலையில் மாட்டிக்கொண்டு திருதிருவென விழிக்க, “சரி.. சரி.. பிழைச்சு போகட்டும்..” என பாவம் பார்த்து மன்னித்து விட்டாள் அமீக்கா.. மகளும் மனைவியும் மோதி கொள்ளும் டப்ளியூ டப்ளியூ மேட்சில் அம்பயராக இருக்கும் குகனே பெரும்பகுதி அடிகளை வாங்கி தட்டுவார்.. க்ளைமாக்ஸ் பகுதியில் சரியாக அமீக்கா கேடுகெட்ட வில்லன் போல நடித்து தந்தையை பத்திரமாக தாயிடம் ஒப்படைத்து விடுவது வாடிக்கையான ஒன்று தான்..

“நாங்க மும்பை போறோம்..” என ஷ்ரவன் அனைவருக்கும் கூற, அமீக்கா உட்பட அனைவரும் அதிர்ச்சியில் நோக்க, “ஏன்??” என கேட்டாள் ஸ்ரீகா.. “ஒரு லவ் ட்ரிப்..” என ஷ்ரவனும் “தன்விய மீட் பண்ண…” என அமீக்காவும் ஒரு சேர கூற சந்தேகமாய் நோக்கினர்..

“தன்வி மும்பையில சோலே பூரி சாப்பிடலையாம்.. சோ நாங்க போய் ஸ்ட்ரீட் பூட் சாப்பிட்டு எப்படி சொத்தை அழிக்குறதுன்னு கத்து கொடுக்க போறேன்..” என்று விளக்கமளிக்க, காதை செல்லமாக திருகினார் நிர்மலா..

“விடுங்க அக்கா.. தாத்தா சேர்த்த சொத்த இவங்க ரெண்டு பேருமாவது அழிக்கட்டுமே..” என பெருமையாக சிரித்த குகன் வாசுகியின் ஒற்றை புருவமேற்றலில் கப்சிப் என்றானார்.. “வெயிட்.. இப்போ லவ் ட்ரிப்பா?? இல்லை போன் கிப்ட்டா??” என இடைநுழைந்தாள் ஸ்ரீகா.

“கண்டிப்பா இது மாமா மாதிரி சேனல் லான்ச்னு சொல்லிட்டு மால்தீவ்ஸ்ல கட்டிக்க போற பொண்ணோட பேச்சுலர் பார்ட்டி கொண்டாடுற ப்ளான் இல்லை..” என குறும்பாக கூறிய ஷ்ரவனின் குருத்தெலும்பை உடைக்க திட்டம் போட்டு துரத்த துவங்கினாள் ஸ்ரீக்கா..

பெட்டிகளை தயார் செய்து கொண்டு கிளம்பிய இருவரும் மும்பையை அடைந்ததும் அங்கே இங்கே என்று ஒவ்வொரு நிறுத்தத்திலும் இறங்கி காலாற நடந்து அங்கே சிறப்பற்ற பலவற்றையும் பார்த்து ரசித்து பார்த்தனர்.. ஷ்ரவனிற்கு அங்கே நல்ல பழக்கம் என்பதால் க்ளப்பிங், பார்டி ஹவுஸ் என மேற்கத்திய கலாசாரத்தை அனுபவிக்கும் வாய்ப்பளித்து கொடுக்க, அமீக்காவோ வந்த வேலையை முற்றிலுமாக மறந்துவிட்டிருந்தாள்..

சரியாக 2.12 மணிக்கு சிணுங்கிய போனை ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த தன்வி துழாவ, படுக்கையில் இருந்து கீழே விழுந்து வாழ்க்கையை முடித்திருந்தது.. “போச்சு..” என அதர பதற எழுந்து அமர, சுக்கு நூறாக நொறுங்கியிருந்த போன் கைகளில் பாவமாக விழித்து கொண்டிருந்தது..

“ச்சே.. இப்போ வீட்டுக்கு எப்படி கால் பண்ணி இன்பார்ம் பண்ணுவேன்.. வாழ்க்கையே ரணகொடுரமா போகுது.. காலையில மீகா கிட்ட கோபமா பேசியிருக்க கூடாது..” என தலையிலடித்து கொண்டிருக்கும் போது காலிங் பெல் அலற திடுக்கிட்டாள்..

மும்பை என்பது தொழில்களுக்கு பெயர் போன நகரம் என்பது போல ‘தொழில்’களுக்கும் பெயர் போன நரகம் தான்.. என்றாலும் பெண்களுக்கு பாதுகாப்பு என்று வரும் பொழுது, இன்றளவும் கேள்விக்குறியாக தொக்கி நிற்க, அர்த்த இராத்திரியில் அனர்த்தமாக ஒலிக்கும் மணியை என்னவென்று எடுத்து கொள்வது.. ஒற்றை கரத்தில் ‘பெப்பர் ஸ்ப்ரே’ மற்றொரு கரமோ கதவை திறப்பதற்கு என உபயோகம் செய்ய, பாதி திறக்கப்பட்ட கதவின் வழியே அமீக்கா பேய் போல பாய்ந்தாள்..

அமீக்காவை அங்கு எதிரபார்த்திராத தன்வி சிலையாக சமைந்திருந்தாள். தான் உள்ளே நுழைந்த பின்னும் தன்வியின் கைகளில் இருந்த ‘பெப்பர் ஸ்ப்ரே’ பாட்டில் பொம்மையாகவே இருக்க, “தனு.. திருடன் உள்ள வந்ததுக்கு அப்புறம் ஜாதகம் கேட்டுட்டு வடது கண்ணுல அடிக்கவா இடது கண்ணுல அடிக்கவான்னு கான்பெரென்ஸ் மீட்டிங்கே நடத்துவ போல இருக்கே..” என கேலி செய்தாள் அமீக்கா..

“உன்ன..” என பற்களை கடித்து கொண்ட தன்வி, கோபத்தை இறக்கி வைக்கும் பொருட்டு அடிக்க துவங்கினாள்.. “ஹே.. நீ அடிக்குற அடி ஏதோ மசாஜ் பண்றது மாதிரி இருக்குது.. சோ டைம் வேஸ்ட் பண்ணாம ஒரு ஹக் குடு பாப்போம்..” என கைகளை விரிக்க, வேகமாக கட்டியணைத்தவளின் ஏக்கம் அணைப்பின் இறுக்கத்தில் தளர்ந்திருந்தது..

“நான் இங்க இருக்குறேன்னு உனக்கு எப்படி தெரியும்??” என்ற தன்வி மூக்கை உறிஞ்ச, “இன்ஸ்டாகிராம் இஸ்திரி மாடல் லில்லி போஸ்ட்ல பார்த்தேன்.. நீ இன்னும் என்ஜாய் பண்ணவே தொடங்கலை போல.. அதான் டைம் எடுத்து ரூம் சூப்பரா அரேன்ஜ் பண்ணி வச்சிருக்குற…” என்ற அமீக்கா தனது பெட்டிகளை ஷோபாவின் மீது போட்டாள்..

வேலை கிடைத்த கையோடு தனக்கென ஒரு அறையை வாடகைக்கு எடுத்து கொண்டாள் தன்வி.. எங்கே தனது குணம் லில்லியின் வாழ்க்கையில் பிரச்சினையை ஏற்படுத்தி விடுமோ?? என்று பயந்தவள் தனக்கிருக்கும் சிறப்பினை வெளிப்படுத்த பயம் கொண்டாள்..

உண்மை தெரிந்ததும் அறைக்கு வரும் அமீக்கா, “எதுக்காக தனி ரூம்க்கு வந்து கஷ்டப்படுற??” என கேட்டு சண்டையிடுவாள் என்று நினைத்திருக்க, அவளோ எவ்வித கேள்வியும் எழுப்பாமல் இருந்தது விசித்திரமாக இருந்தது..

“ஏன்னு தெரியுமா??” என தயங்கியபடி தன்வியே தொடங்க, “இது நல்ல விஷயம் தானே.. ஒரு கிராமத்துல பொறந்து வளர்ந்த பொண்ணு இவ்ளோ பெரிய சிட்டியில தனியா ஸ்டே பண்ற அளவுக்கு போல்டா மாறிட்டு வர்றா.. இது ரொம்ப நல்ல விஷயம் தனு..” என்ற அமீக்கா வாய் நிறைய சிப்சை அரைத்து கொண்டிருந்தாள்.. அமீக்காவை குறித்தது கூறவேண்டுமானால் தன்வியை தோள்கள் நிறைய தழுவிய பின்னரே முழுமையாக உணர்கிறாள்.. அந்த உணர்வை அனுபவிக்காமல் ஏன்?? எதற்கு?? என்ற கேள்வியை எழுப்பும் புரட்சியாளராய் அல்லாமல் தன்வியின் ராங்கியாகவே இருக்க ஆசை கொண்டாள்..

அப்பொழுது படிகளில் ஷ்ரவன் பெரிய சைஸ் பெட்டியை உருட்டி வர, அமீக்காவை குண்டு விழிகளை உருட்டி முறைத்தாள் தன்வி.. “ஏண்டி, அப்படி பாக்குற.. அவனும் கூட தான் வந்துருக்குறான்.. வழிய விடு..” என அவளை விலக்க, “நோ.. இங்க ஜென்ட்ஸ் நாட் அலவுட்..” என கண்டிப்பாய் கூறிய தன்வி, “சார்.. சோ ப்ளீஸ்..” என வாசலை நோக்கி கைகாட்டினாள்..

மேலும் கீழுமாய் பார்த்து வைத்த அமீக்கா, “என் ஹாஸ்டல் வார்டனுக்கு மருமகளா போக வேண்டியவ..” என சலித்து கொண்டு, “ஹோட்டல்ல தங்கிக்கலாமா??” என வினவினாள்.. “யா ஷ்யூர்..” என ஷ்ரவன் தோள்களை குலுக்க, அமீக்காவின் தோள்பையினை பிடித்து பின்னாக தள்ளிய தன்வி, “அவ என்னோட தான் இருப்பா.. நீ வேணும்னா கிளம்பு..” என மிரட்டி விரட்ட, பக்கவாட்டில் பாய் காண்பித்து விட்டு பஞ்சாய் பறந்திருந்தான் பையன்..

“ஹே.. உனக்கு இன்னும் அந்த ஷைனஸ் போகலியா?? சீக்கிரம் ரெக்கவர் ஆய்டு.. இல்லைன்னா பின்னாடி பிரச்சினை ஆகிடும்..” என கேலிக்காக உரைத்த அமீக்கா சோர்வாக அப்படியே படுக்கையில் சாய்ந்தாள்.. 

“ராங்கி..” என பின்னால் தட்டிய தன்வி பெட்ஷீட்டை எடுத்து போர்த்தி விட்டு, அவளின் கைகளை விரித்து அதனுள் தஞ்சம் புகுந்து கொள்ள, அவளின் இடையை வளைத்து அணைத்தவாறு தூங்கி போனாள் அமீக்கா

மறுநாள் காலை,

ஒரு பிரபலமான ஹோட்டலில் முன்பக்க பகுதியில் ஏன் என்றே தெரியாமல் அமர்ந்திருந்தாள் தன்வி.. “என்ன சாப்பிடுற??” என அமீக்கா கேட்க, “வழக்கமா என்ன சாப்பிடலாம்னு தானே கேப்ப??” என்ற குழந்தையாக சிணுங்க, “ஒரு நான்வெஜ் ஹோட்டல்னா கம்பெனி கொடுக்கலாம்.. ரெசார்ட்ல நோ வே.. சரி.. சொல்லு.. என்ன வேணும்..” என கன்னத்தில் தட்டினாள் அமீக்கா.. உதட்டை வளைத்து பாவம் காண்பித்த தன்வி “மோக்டெயில் ஓகே..” என தலையசைத்தாள்..

“ஓகே.. வெயிட்.. நான் இப்போ வந்துடுறேன்..” என்று விட்டு கிளம்பிய அமீக்கா “யா.. நாங்க லாபில வெயிட் பண்றோம்..” என போனில் யாருடனோ பேசி கொண்டே சென்றாள்.. இங்கேயும் நண்பர் பட்டாளத்தை உருவாக்கி விட்டாள் போல என புன்னகைத்த தன்விக்கு, “அவர்களுக்கு நடுவே நான் அவளுக்கு முக்கியமாக படுவேனா??” என்ற கேள்வி எழுந்து அதே வேகத்தில் தோய்ந்தது..

“ஒரு முறை அழுததிற்காக பல மைல் தாண்டி வந்திருக்கிறாள்.. இது போதாதா?? போதாது.. கூட அந்த பல்லி மிட்டாயையும் கூட்டிட்டு வந்துருக்குறாளே..” என உதட்டை சுழித்து கொண்டாள்.. 

ஆர்டர் செய்த மோக்டெயில் வந்துவிட, ஒரு மிடறு குடித்த தன்வி ஊரில் இருக்கும் பொழுது அமீக்காவின் வருகைக்காக விடுமுறை அளி(ழி)க்கும் அதே சம்பிரதாயத்தினை அலுவலகத்திலும் தொடர்ந்தாள்.. சற்று நேரத்தில் திரும்பி வந்த அமீக்காவுடன் ஷ்ரவனை கண்ட தன்வி பற்களை நறநறவென கடித்து கொள்ள ‘பழைய குருடி கதவை திறடி..’ என்றானது..

“ஹாய் தன்வி..” என கரம் நீட்டியவனை பகைத்து கொள்ள மனமின்றி “ஹாய் பல்லி மிட்டாய்..” என முறுவலித்து கொண்டாள்.. இயல்பாகவே எதையும் பெரிதாய் அலட்டிகொள்ளாத தன்மை கொண்ட ஷ்ரவன் அது பாசம் என்று எடுத்து கொள்ள பாவம் அது பகையல்லவா..

உரையாடல்கள் தொடர்ந்து கொண்டிருக்க, சிலநேரங்களில் எதார்த்தமாக அமீக்காவின் தோள்களை உரசும் ஷ்ரவனின் விரல்கள் மீது தன்விக்கு தீயாய் கோபம் எழுந்தது.. ஒவ்வொரு முறையும் அவன் மிஸ்.மாஸ் வுமன் என கூறும் பொழுதும், “டேய்.. அவ வொண்டர் வுமனாவே இருந்தாலும் நீ ஸ்டீவா இருக்க முடியாது..” என்று அவனுடைய சப்பை மூக்கிலேயே குத்திவிட வேண்டும் போலிருந்தது..

இயற்கையாகவே ஆணழகனாக இருக்கும் ஷ்ரவனின் பின் ஆயிரம் அழகிகள் சுற்றி வந்தாலும் தன்வி அவனை மதியாமல் பங்கமாக கலாய்த்து வைத்தாள்.. மாலை முழுவதும் தெருவீதிகளில் உலாவர, இரவில் ஒரு ஹோட்டலில் சென்று அமர்ந்தனர்..

அங்கும் தனது தர்ணா போராட்டத்தை தன்வி தொடங்க, அதனை அடக்குவதாக எண்ணி கொண்ட அமீக்கா, “தனு.. நீ ஆர்டர் வாங்கிட்டு வா.. ப்ளீஸ் ஸீ பூட் இல்லாம பார்த்துக்கோ.. ஷ்ரவனுக்கு அலர்ஜி இருக்குது..” என கூறி அனுப்பிட, மனதிற்குள் திட்டி தீர்த்து கொண்டே நடந்தாள் தன்வி.. அமீக்காவிற்கும் சில நேரங்களில் ஷ்ரவன் இல்லாமல் இருந்தால் தன்வியோடு இன்னமும் நேரம் செலவிட்டிருக்கலாமோ என்ற கேள்வி தோன்றி மறைந்தது..

பூட் கோர்ட்டில் நின்றவள் என்ன வாங்கலாம்?? என குழம்பி கொண்டே தங்கள் இருவருக்கும் “மட்டன் கட்லட் கிரேவி” வாங்கி விட்டு “இந்த அரிய வகை ஜந்து என்ன சாப்பிடும்??” என யோசிக்கலானாள்..

அடுத்த ஆப்பை அழகாய் எடுத்து கொடுப்பதற்காக பக்கத்து டேபிளில் ஒருவன், “பிரெண்ட்ஸ், ****ல இருக்குற ஒரு ரெஸ்டாரென்ட்ல செஸ்வான் சூப் குடிச்சு பாருங்க.. செம டேஸ்ட்.. வேற லெவல்.. முக்கியமா இவங்க கடையோட ஸ்பெஷலான கார்லிக் கூட ப்ரை பண்ணின இந்த பிரான் தான் ஹைலைட்.. நாம சாப்பிடுறது கார்லிக்கா பிரானான்னு கூட தெரியல..” என்று தனது பூட் வ்லாகிற்கு பேசி கொண்டிருக்க மூளையில் பொறி தட்டியது..

அவள் வாங்கி வந்த உணவினை மூவருமே பகிர்ந்துண்ண, ஷ்ரவன் தங்கியிருக்கும் ஹோட்டலிற்கு வந்து சேர்ந்தனர்.. “தனு.. நீயும் ஷ்ரவனும் தான் நல்ல பழகிட்டீங்களே.. அப்புறம் என்ன?? நம்ம ரூம்ல ஸ்டே பண்ணிக்கட்டும்.. நமக்காக கூட வந்தவனை நாடோடியா விடலாமா??” என அமீக்கா நயமாக பேசிகொண்டிருக்க, ஷ்ரவனின் உடலில் நத்தை ஊறுவது போல அரிப்பெடுக்க துவங்கியது..

“ஒ.. காட்..” என தன்வி பதற, “இட்ஸ் ஓகே.. ஷ்ரவன்.. ஜஸ்ட் காம் டவுன்.. இது அலர்ஜி தான்.. மூச்சை மேல இழுத்து விடு.. எதையும் யோசிக்காத.. ப்லசன்ட்டான திங்ஸ நினைச்சு பாரு..” என ஒவ்வொரு படிநிலைகளாக கூற, அரிப்பு கட்டுக்குள் வராவிடினும் வேதனை குறைந்திருந்தது..

“ஓகே.. ஐ பீல் பெட்டர்.. பர்ஸ்ட் நீங்க ரெண்டு பேரும் ரூம்க்கு கிளம்புங்க.. நான் பார்த்துக்குறேன்..” என அக்கறையாய் கூறியவன், “நாளைக்கு என்னால ஜாயின் பண்ண முடியலன்னாலும் நீங்க கண்டினியூ பண்ணுங்க..” என தனது பெருந்தன்மையை காண்பித்தான்.. தன்வியை அழைத்து கொண்டு அமீக்கா நடக்க, பின்னால் திரும்பி அவனுடைய பின்னுருவத்தினை நோக்கி பழிப்பு காட்டி விட்டு, “எனக்கும் மீகாவுக்கும் நடுவுல வந்தா இப்படி தான் நடக்கும்.. யாரும் எங்களுக்கு நடுவுல வரவே கூடாது.. பல்லி மிட்டாய் உன்னை விட்டுடுவேனா?? நாளைக்கு தான் நாங்க என்ஜாய் பன்னுவோமே..” என கூறிய தன்வி இயல்பிலேயே நல்லவள் தான்.. ஆனால் அவள் கொண்ட அதீத அன்பு அப்படியாக ஆட்டுவித்தது..

வல்லவனுக்கு வல்லவன் வந்து தானே சேருவான் என்பது போல மறுநாள் காலை இதை விட பெரியதொரு நந்தி வரபோகிறது என்பதை முன்னமே அவள் அறியவில்லை..

பெண்ஓரினசேர்க்கையாளர்களை பொறுத்தவரையில் ஆண்கள் என்பவர்கள் அவர்களின் வாழ்வில் பழகவும் நட்பு பாராட்டவும் செய்யலாமே தவிர வாழ்வின் முக்கியமான அங்கமாக இயலாது.. சிலரால் இவர்களை அடையாளங்காண இயலும் என்பதால் தங்களை மறைத்து கொள்வதற்கு மிகவும் பிரயத்தனப்படுகிறார்கள்.. தங்களின் உணர்வுகள் எல்லை மீறாது கட்டுப்படுத்தி கொள்கின்றனர்.. தங்களுக்கான துணையை காணும்பொழுது அவர்களுக்குள்ளாகவே காதல் அரும்புகிறது..

ஓரினசேர்க்கையாளர்கள் உடல்உறவில் ஈடுபடும் பொழுது பாலியல் ரீதியாக பல நோய்கள் வர வாய்ப்புள்ளது.. உலக சுகாதார அமைப்பின் ஆராய்ச்சி படி ஓரினசேர்க்கயாளர்களின் உறவு நிலை சுகாதாரமானது அல்ல என்ற கூற்றை வெளியிட்டது.. அதன்படி பல நாடுகளில் இது போன்ற உறவு நிலைகள் தடைசெய்யப்பட்டுள்ளது..

ஓரினசேர்க்கையை மையப்படுத்தி மருத்துவ ரீதியாக மிகபெரும் கொடிய செயல்களும் அரங்கேற்றப்பட்டு வருகிறது.. சமீபத்தில் ஒரு பெண்ஓரினசேர்க்கையாளரின் நேர்காணல் ஒன்றை காண நேரிட்டது.. அதில் அவர் கூறியிருந்தததாவது..

உலக போரினை அடுத்து பாலினசேர்க்கை பற்றி வெளிவரதுவங்கியது: அதில் இருந்து சில மருத்துவ முகாம்களும் செயல்பட்டு வந்தது.. அது எங்களை போன்ற ஓரினசேர்க்கையாளர்களை மாற்றும் முயற்சி.. ஒரு இருட்டறையில் அடைத்து ஆண்களின் படங்கள் மட்டுமே காட்டப்பட்டு அவர்களின் மீதான ஈர்ப்பை தூண்டமுயற்சிப்பதும்.. பெண்களின் நிர்வாண படங்களை காணும்பொழுது ஏற்படும் உணர்வுகளை கட்டுப்படுத்த மின்சாரஅதிர்வுகள் கொடுப்பதும் என்று பல்வேறு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது.. அதில் இறந்தவர்களும் தப்பி சென்றவர்களும் பிழைத்தவர்களும் உண்டு.. மாற்றம் அடைந்தவர்களின் ஆயுள்காலம் சில நாட்காளாக மாறிவிட்டது… என்கிறார்..      

 -அமீக்கா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!