கனலியின் கானல் அவன்(ள்)- 24(final1)

20200724153943

கனலியின் கானல் அவன்(ள்)- 24(final1)

கைகளில் முழங்கை வரை  அலங்கரிக்கப்பட்டு,காலில் முழங்கால்  வரை அலங்காரம் செய்யப்பட்டிருக்க ஆபரண அலங்காரங்களெல்லாம் கலைக்கப்பட்டு உடுத்தியிருந்த உடையை மட்டும் மாற்றாமல் முகத்தில் பூத்திருந்த  ரோஜா வாடி வதங்கியிருக்க தன் அன்னை தோள்களில் சாய்ந்திருந்தாள் கயல்விழி. 

அவள் விழிகளில் வழிந்து கன்னங்களை நனைத்துக்கொண்டு மீனாட்சியின் தோள்  தொட்ட கண்ணீர்,அவளின் நிலை கூற, அன்னையவருக்குமே நெஞ்சில் கடும் வேதனைதான். அவளைப்போல  அழுந்திடவில்லை.திடமாய் தன்னைக் காட்டிக் கொண்டதோடு,அவரழ மகள் இன்னும் பயந்திடுவாள் என்று அவளுக்கு ஆறுதலாய் பேசியவண்ணம் இருந்தார். 

அவளை சுற்றி ருத்ராவின் அன்னை,அக்கா, தங்கை என இன்னும் சில கிட்டிய உறவுகளும் அமர்ந்திருக்க இவர்களைப் பார்த்தவாறே தேனரசு ஜனார்தனனோடு ஏதோ தீவிரமாய் பேசிக்கொண்டிருந்தார்.மாதவனோ யாருடனோ நடை பயின்றவாறு கோபமாய் பேசிக்கொண்டிருந்தான்.

 

நாளை விடிந்தால் திருமணம். மாலை ஆரம்பித்த கொண்டாட்டம்,இரண்டு வீட்டுக்கும் இடையேயான இரண்டு வீடுகளின் இடைவெளிதானே என்ற காரணத்தால் இரு வீட்டுக்கும் இடையே மாதவனின் நண்பர் பட்டாளமும் ருத்ராவின்  ஓரிரு நண்பர்கள் என்றாலும் அவர்களும் இணைய, இவர்களோடு குடும்பத்தாரும் அத்தெருவே கலை கட்டியது.இரவுணவு உண்ணும் வரையிலும் சந்தோஷம் பல்கிப் பெருகியிருக்க இரண்டு மணித்தியாலத்திற்கு முன் நடந்த நிகழ்வில் அனைவருமே தன்னிலை இழந்தே இருக்கின்றனர் எனலாம். 

அனைவரது நிலையையும் பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு அவன்  நினைவோ தன் உயிராய் பிய்த்து தின்றது. 

அவன் இட்ட முத்தத்தின் ஈரம் இன்னும் தன் கன்னத்தை விட்டு நீங்காத உணர்வு.இதழ் ஊடாக  உள்சென்ற திரவம் தன் உடலோடு கலந்திட முன்னமே தன்னை வருந்த வருந்த வைத்துவிட்டான்.அவன் கைகள் கொண்டு தன்னை அணைத்திருந்த விதத்தில் சொன்ன செய்திகள்… 

‘அதனை நினைத்து அனுபவித்திட முடியவில்லையே.அதை சொல்லிச் சொல்லித்தானே ஒவ்வொரு முத்தமாய் இட்டான்.அவனை விளக்கி அனுப்பியிருக்க கூடாதோ! என்னுடனே வைத்திருக்க வேண்டுமோ! ஹ்ம்ம் ஹ்ம்ம்…  அவனை இங்கே அழைத்திருக்கவே கூடாது.நான் அழைத்ததால் தானே வந்தான்.அச்சோ! ‘ 

நினைக்க நினைக்க மனம் தாங்கவில்லை பெண்ணுக்கு. 

நேற்று காலை….  

அவளுக்கும் வான்வெளி பயணத்திற்கும் பொருத்தம் இல்லை போலும்.ஒரு கிழமைக்கு முன் வர இருந்தவள் இதோ நாளை மறுநாள் திருமணம் இன்று வந்திறங்கினாள். அதிகாலை நேரம் கயல் வந்திறங்க அவளை அழைத்து செல்லவென வந்திருந்தவர்களை கண்டவுளுக்கு  அவ்வளவு சந்தோஷம்.மாதவன்,மதுமிதா, ரீதிக்காவின் பிள்ளைகள் என ஒருவண்டியிலும்,அரசு,மீனாட்சி அவர்களது வண்டியிலும் வந்திருந்தனர்.முதல் முறை வரும் போது தனியாக வந்ததென்ன இன்றோ தமக்கென்று ஒரு குடும்பமே இருக்கிறதே.நினைக்கவே மனம் குளிர்ந்தது பெண்ணுக்கு.

வந்ததும் தன் தந்தையையே  அணைத்துக்கொண்டாள்.சிறு குழந்தையென அவர் தோள்களில் தொங்கியவள் விழிகள் கலங்கியிருந்தது. கண்டுகொண்ட தந்தையோ அவளை  ஒருகையால் அணைத்துக்கொண்டு நெற்றியில் இதழ் ஒற்றி எடுக்க, பார்த்திருந்த அன்னைக்கு தானும் அவர்களோடு இணைந்து கொண்டதை நினைத்தவருக்கு தன் வாழ்வு முழுமையான திருப்தி. 

“மீனம்மா…” என அவரையும் அணைத்து நலம் விசாரித்தவள் அனைவரோடும் கதை அளந்துக்கொண்டே வீட்டை அடைந்தாள். அவளுக்காக அனைத்துமே தயார் நிலையில் இருந்தது.துணிக்கடை, நகைக்கடையில் இருந்து அலைபேசி மூலம்  நேரமெடுத்து அவளுக்குப்பிடித்ததை பார்த்து பார்த்து வாங்கியிருந்தார்கள் மீனாட்சி மற்றும் பார்வதி.

மாதவன் ருத்ரா தந்தாக நீட்டிய அலைபேசியை வாங்கிக் கொண்டவள், அதனை கைக்கு எடுக்குவுமே அழைத்திருந்தான். நேற்று இரவே அவன் வர முடியாது எனக் கூறி அதற்கான தண்டனையையும் ஏற்றுக்கொண்டதால் பெண் கோபமின்றி இருந்தாள். இருந்தும் ஏதோ ஓர் சிறு ஆசை இருக்கத்தான் செய்தது. இருந்தும் வர கூடிய சூழல் இல்லை என்பதை உணர்ந்து கொண்டாள். 

இவர்கள் வீடு வர காலை பத்துமணியை  தொட்டுவிட்டது. 

அங்கு என்.சி.பி(NCB)யின் தலைமையகத்தில் காத்திருந்த ருத்ராவுக்கு பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துக் கொண்டே இருந்தது. காலை எட்டு மணிக்கெல்லாம் தன் உயர் அதிகாரியை சந்திக்க வந்தவன் இன்னுமே அவரை சந்திக்க முடியாது பத்து மணியாகியும் அலுவலக அறை முன் நடைபயின்றுக்கொண்டிருந்தான்.அவன் உயர் அதிகாரி எப்போதும் இவ்வாறு செய்பவரல்ல.கடந்த சில மாதங்களாகவே அவர் இப்படித்தான்.உள்ளே அவருடன் பேசிக்கொண்டிருப்பது யாரென்று தெரிய சற்று விடயத்தை ஊகித்தவன் எப்படியும் அவரை சந்தித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருந்தான். 

வெளி வந்தவரோ இவனை அலட்சியமாக ஓர் பார்வை பார்த்துவிட்டு வெளியேற இவனும் அவரைக் கண்டு கொண்டானில்லை.மேலதிகாரிக்கு ஒரு வினாடியேனும் இளைப்பாற நேரம் தராது அடுத்த நொடியே உள்நுழைந்திருந்தான். இவன் சென்றிருப்பான் என்று நினைத்திருந்தவர் ஆசுவாசமாய்  இருக்கையில் அமர இவன் உள்நுழையவும் எதிர் பார்க்காதவர்,அவனது அழைப்பிப்பில் சற்று தடுமாறினாரோ.

இருக்கையில் அமருமாறு சைகை காட்டியவர்,சிறிதுநேரம் இருவரும் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை.

“சாரி mr.ருத்ரா ரொம்ப நேரமா வெய்ட் பண்ணிட்டு இருந்தீங்க போல.முக்கியமான மீட்டிங் ஒன்னுல இருந்தேன்.ரெண்டு நாளைல கல்யாணத்த வெச்சிட்டு இப்போ அவசரமா இங்க வந்திருக்க வேணாமே. அந்தளவுக்கு அவசியமான எதுவுமே இல்லை.எதுன்னாலும் நானே உங்களை பேசுறேன். 0கொஞ்சநாளைக்கு இந்தப்பக்கம் உறவை குறைச்சிக்கலாம்.”

“ஓஹ் !”…

‘மேலதிகாரி தன்னிடம் எதுவோ மறைப்பதாகவே சில நாட்கள் நினைத்திருந்தவனுக்கு இன்று அவர் பேச்சு அதை உறுதி செய்தது.’

“ஜஸ்ட் உங்களை பார்த்துட்டு போகலாம்னு தான் வந்தேன்.எனக்குமே இந்த லீவ் கண்டிப்பா தேவைதான்’ என்று இன்முகமாகவே கூறியவன்,

‘கண்டிப்பா கல்யாணத்துக்கு வந்துரனும் சார்.ரொம்ப நாளா பார்க்க முடியலைல. அதான் வெய்ட் பண்ணி பார்த்துட்டே போகலாம்னு இருந்தேன்.”

எழுந்துக்கொண்ட ருத்ரா விடைபெறும் விதமாய் அவருக்கு கை கொடுக்க அவரும் கைகொடுத்து விடைக் கொடுத்தார். 

வண்டிக்கு வந்தவன் தன் கையில வைக்கப்பட்ட சிப்பை (chip)பார்த்தவனுக்கு விடயம் சற்று பெரிதுதான் என்றே தோன்றியது.அதை தன் மடிக்கணினிக்கு  தொடர்பு படுத்தி பார்த்தவனுக்கு யோசனை.  

கயலின் அன்றாட செயல்கள் அதுவும் கனடாவில் அவள் வீடு,அவள் வீட்டை விட்டு வெளியேறியது முதல் அவள் செல்லுமிடங்களில் என பல புகைப்படங்கள்.

படத்தோடு உயரதிகாரியின் சிறு தகவல்  அடங்கிய ஓர் வாசகம்.

“இது ஓர் திசை மாற்றும் கருவி.அம்பு இருக்கும் திசை என்னவோ உன்னை நோக்கியே.வேலி உனக்கு மட்டுமே தேவை.”

அன்று அமைச்சரின் மகன் அலைபேசியிலும் கயல் பற்றியே பேசியிருக்க இவன் கவனமெல்லாம்  அவளை காப்பதாகவே இருந்தது.தன்னை சுற்றி நடப்பதை கவனிக்க மறந்தான் என்பதை விட அவன் கவனத்தில் அவன் இல்லை.

கயலை கனடாவிலும் அதிகம் எங்கும் வெளியில் செல்ல வேண்டாம் என்று கூறியிருந்தவன்,அவள் இங்கு வந்து இறங்கிய இன்றைய காலை பொழுதிலேயே அவளுக்காக ஓர் புது அலைபேசியை மாதவனிடம் அனுப்பியிருந்தான்.அவன் வந்திருக்கவில்லை.அவனைக்கொண்டே அவளை ஆபத்து நெருங்க வாய்ப்பிருப்பதால் தவிர்த்தான்.வீட்டுக்கு வந்து விட்டால்,வீட்டில் பாதுக்காப்புக்கு பயமில்லை.

அவன் அனுப்பிய அலைபேசியில் அவனின் எண்ணாக புதிதொன்றை பதிந்திருந்தான். அவள் கைக்கு கிடைத்த அடுத்த நொடியே  அழைத்தவன்,இவ்வெண் யாருடனும் எக்காரணத்திற்க்காகவும் பகிர வேண்டாம் எனவும் நம் இவருக்காக மட்டுமே என்றும் கூறியிருந்தான்.மற்றவர்களுக்கு  நாம் பயன்படுத்துவது வேறு என் என்பதையும் சொல்லிக்கொள்ள வேண்டாம் என்றிருந்தான். எதற்க்காக இப்போ இதெல்லாம் என கயல் கேட்க பிறகு சொல்வதாக கூறியிருந்தான். 

அதில் இருவரது அலைபேசிகளும் ஒன்றோடு ஒன்று எந்நேரமும் தொடர்பில் இருந்தது.அது மட்டும் அவலறியாள். இவர்கள் இருவரதும் அலைபேசி இன்னொருவருடன் தொடர்பில்.  

அமைச்சரோ அவரது மகனை ஜாமினில் எடுத்திருந்தாலும் அடுத்த வழக்கின் போது  சாட்சிகள் சரிவர நிரூபனம் ஆகும் பட்சத்தில் மீண்டும் தண்டனை பெரிதாக கிடைக்கும்.ருத்ரவினால் பல கோடி நட்டத்தை எதிர்கொண்டவர் நட்டம் என்னவோ அமைச்சருக்கு மட்டும் தான் என்ற நிலை.மகனைக் கொண்டு இனி ஆவதற்கு எதுவுமில்லை என்றுணர்ந்த அமைச்சர் அவனைக் கொண்டே தன் நட்டத்தை ஈடு செய்ய நினைத்தார்.

இதில் மகன் என்றும் பார்க்காதவன் மற்றவனையா பார்ப்பான்.

இழந்த இலாபத்தோடு அவர் முதலையும் பெறவேண்டி ருத்ராவை குறி வைத்திருந்தார்.மகனும் கோபத்தில் இருக்க மகனைக்கொண்டே ருத்ரவைக் வைத்து அவன் தந்தை ஜனார்த்தனன் மூலம் தன் பணத்தை மீள பெற நினைத்தார். 

இதுவரை எந்த எதிரிக்கும் தன்னை காட்டிக்கொள்ளாதவன் இவர் கண்களுக்கு மாட்டினான். 

அதோடு மகனுக்கு துணையாக இல்லாவிட்டாலும் கண்டுகொள்ளாது  இருக்குமாறு கேட்டு பலமுறையிலும் ருத்ராவின் உயரதிகாரியை அமைச்சர் மிரட்டிக்கொண்டிருக்க,ருத்ராவை சில நாட்களுக்கு எந்த வேலையிலும் ஈடுபடுத்தாமல் இருந்தார் அதிகாரி. 

இன்றோ அவனுக்கு அவனைக் காத்துக்கொள்ள எச்சரிக்கையாக இருக்க  மறைமுகமாக தகவல் கொடுத்தவர் அமைச்சருக்கு சார்பாக இருப்பது போலவே நடந்துகொண்டார்.அலுவலகத்திலும் கறுப்பு ஆடுகள் கண்ணுக்கு தெரியாமல் இருக்கத்தானே செய்யும்.  

ருத்ராவோ கயலுக்கு ஆபத்தில்லை தனக்கே என்பதை அறிந்த பின்னர்  எதுவானாலும் சமாளித்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டான். 

அன்று மாலையே தன் கணவனின் தங்கை மகளுக்காக அத்தை முறையில் குடும்பமாக வந்து நலங்கு வைத்துவிட்டு செல்ல பெண்ணின் முகத்தில் மஞ்சளோடு கலந்த  நலங்கு மாங்கல்யத்தை ஏற்க தயாராகும் பெண்ணுக்கே உரிய நாணமும் அதனோடே உடலில் ஏற்பட்ட படப்படப்போடு சிறு நடுக்கமும் வந்து சேர்ந்து கொள்ள இன்ப அவஸ்தையை அனுபவித்தாள்.

மீனாட்சியும் தன் வளர்ப்பு பிள்ளைக்கு,தன்  ஆனந்த கண்ணீர் கண்களில் நிரம்ப அவன் கண்ணம் தொட்டுநலங்கு வைக்க,மஞ்சள் அவன் கன்னத்தை விட்டு கை எடுக்கும் முன்னமே தன் அத்தைக்கும் பூசிவிட்டிருந்தான்.

“வரு என்னப்பண்ற?”

அவர் துடைத்துக் கொள்ளப்பபோக, அருகே இருந்த அரசு, 

“மீனா இருக்கட்டும் நல்லாத்தான் இருக்கு”  என்றிட,ருத்ராவோ அத்தையை பார்த்து கண்சிமிட்ட அவன் தோள்களில் தட்டியவர் கனவனோடு நின்றுக்கொண்டார்.

மீனாட்சியின்  அண்ணனும் அவரது பிள்ளைகளோடு  ருத்ரவின் ருமணத்திற்காக வந்திருந்தனர்.வந்தவர்கள் உறவினர்கள் எனும் வட்டத்துக்குள்ளேயே தம்மை நிறுத்திக்கொண்டனர்.அவர்கள் இவ்வாறு குடும்பம் முக்கிய  நிகழ்வுகளில் மட்டுமே ஒன்று சேருகின்றனர் என்பதால் ஜனார்த்தனன் அழைத்திருந்தார். 

அரசு மற்றும் மீனாட்சி நீண்ட நேரம் தாமதிக்காது வீடு சென்றிருந்தனர்.அங்கு கயலுக்கு துணையாக மதுவையும் அவள் நட்புகளையுமே விட்டு வந்திருந்தனர்.

ருத்ரவை எங்கும் செல்ல வேண்டாம் என்று  கூறிவிட்டே மீனாட்சி சென்றிருந்தார்.   

கயலுமே பயணக்கலைப் போடு நலங்கு உபசரிப்புகளும் சேர்ந்திட ருத்ராவிடமும் கூறிக்கொண்டு பெண் நேரமாகவே உறங்கிவிட்டாள்.

நிட்ச்சயமன்று காலை முதல் ஆரம்பித்த ருத்ராவின் ரகளை கயலை திக்கு முக்காடவைத்தது. மீனாட்சி அவளை ஏதும் செய்ய வேண்டாம் என ஓரிடத்தில் அமர்த்தி விட, 

“அச்சோ மீனம்மா ஈவினிங் மெஹெந்தி  வச்சுட்டேன்னா ஒரே இடமா உட்கார்ந்து தானே இருக்கபோறேன்.இப்போவும்  இப்பிடி இருன்னா? “

“கயல்,டையர்ட் ஆகிட்டேன்னா ஈவினிங்  உனக்குதான் கஷ்டமா இருக்கும் டா அதான். அலைபேசியில்.காதலனாக காதல் காரணன் காதல் பேசி அவளை இம்சை செய்ய அவனை பார்க்கவேண்டும் என்று  கயல் கூறிவிட்டாள்.அவள் கேட்டு அவன் மறுப்பானா… மாலை வீட்டிலிருந்து நலங்கு வைக்க வரும்போது எப்படியும் வருவதாக கூறினான். 

மாலையும் வந்தது ருத்ராவின் வீட்டிலிருந்து அனைவரும் வந்திருந்தனர்.கயலுக்கு பார்வதியை தொடர்ந்து குடும்பத்தார் சிலர் நலங்கு வைத்துவிட அதன் பின்னர் பெரியவர்கள் ஒதுங்கிக்கொள்ள கயலை  சூழ்ந்துக்கொண்டு மருதாணி இட்டனர். எப்படியும் வருவான் என்று எதிர் பார்த்திருக்க,பார்வதியோ, 

“வரு வரணும்னு ரொம்ப அடம்,கஷ்டப்பட்டு விட்டுட்டு வந்திருக்கோம்.வெளில போகக்கூடாது,பொண்ணும் பையனும் பார்த்துக்க கூடாதுன்னா கேட்குறானா முடில”

என்று கூறி அலுத்துக்கொள்ள, அனைவரும் கயலை கேலி செய்து சிரித்தனர். பெண்ணுக்கு வெட்கமாகி விட அதோடு அவன் வரமாட்டான் என்ற செய்தியும் கிடைக்க யேனோ மனம் அவனை ஒருமுறையாவது பார்த்திட வேண்டும் என்று ஏங்கியது. 

கை இரண்டிலும் காலிலும் மருதாணியிட்டு முடிய மாலை ஆறுமணியை தொட்டிருந்தது. இவளை தொடர்ந்து மது,ரித்திகா என  அனைவரும் கைகளுக்கு போட்டுக்கொள்ள, இவ்வளவு நேரம் உட்கார்திருந்தவளுக்கு கால்கள் மறுத்திருக்க சற்று நடந்தால் நன்றாக இருக்கும் என மெதுவாக எழுந்துக்கொண்டாள்.இவள் எழவும் அருகே வந்த மீனட்சி என்னவென்று கேட்க இவள் கால் வலி என்றதும் அவலறைக்கு போகுமாறு கூறினார்.அவரை இடைமறித்த  மதுமிதாவோ, 

“அண்ணி மாடிக்கு போங்க, கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும் அதோட  மருதாணியும் சீக்கிரமா காஞ்சிரும்,நானும் முடிஞ்சதும் அங்கேயே வந்துர்றேன் வெய்ட் பண்ணுங்க”  என்றாள். 

‘சரி அப்போ அங்க போ’ என அவளை மாடிக்கு அனுப்பிய மீனாட்சி தன் அன்னியோடு ஐக்கியமாகிவிட்டார். மதுமிதாவோ தன் ஒட்டிப்பிறந்த அண்ணனுக்கு ஒரு குறுந்தகவலை அனுப்பிவிட்டு அவள் கைக்கு மருதாணி இடும் வேலைக்குள் முழ்கிவிட்டாள்.

தான் அணிந்திருந்த உடையை சற்றே  உயர்த்தி கால்களில் படாதவாறு வைத்துக்கொண்டு படியேறி சென்றவள்  மாடியில் ஒரு பக்கமாக போடப்பட்டிருந்த ஊஞ்சலில் அமரச் செல்ல அவ்வூஞ்சல்  அருகே நின்றிருந்தவனைக் கண்டவள் இமைக்க மறந்து பார்த்திருந்தாள். 

கன்னங்களில் தடவியிருந்த மஞ்சள் நெற்றியில் நீண்டிருந்த குங்குமம் அவன் முகத்திற்கு இன்னும் அழகு சேர்க்க அதோடு அவன் இதழ்கள் புன்னகைக்க அதற்கு ஈடாக புன்னகைக்கும் கண்கள் அவளை காந்தம் என ஈர்த்தது.ஒரு காலை ஊஞ்சலை தாங்கிய தூணில் ஊன்றி கைகளை மார்புக்கு கட்டியிருந்தவன் இவளை கண்களாலேயே அழைப்பு விட்டிருக்க தன்னிடம் ஓடி வந்தவளை இறுக அணைத்திருந்தான். 

தன்னால் முழுமையாக அவனை தன் கைக்கொண்டு அணைக்க முடியாமல் அவன் அணைப்புக்குள் தன்னை புகுத்திக்கொண்டு அவனுள் நுழைந்திட துடித்தாள் பெண்ணிவள். 

அலைபேசியில் பேசிக்கொண்டாலும்,காதல் சொல்லிக்கொண்டு சென்ற நாளைக்கு பிறகு இன்றே சந்தித்துக்கொள்ள,அதோடு இருவருக்குமே நேற்றே கயல் வந்திருந்தாலும் சந்திக்க முடியாமை சேர்த்து இருவரும் ஒருவரை ஒருவர் கண்ட நொடி சொல்லவும் வேண்டுமா? 

சில நிமிடங்கள் அணைப்பிலேயே இருக்க தன்னிலை வந்த கயல், 

“எப்டி வந்தீங்க? யாரும் பார்க்கலயா?அத்தைமீனம்மா எல்லோருமே உங்களை பார்க்க கூடாது சொல்லிட்டாங்க. ஆனாலும் யேனோ முடில என்னால.”

அவன் மேல் தன் முழு உடல் பாரத்தையும் கொடுத்திருந்தவள் தலை மட்டும் உயர்த்தி கேட்டிருந்தாள். 

“அதான் வந்துட்டேனே… எதுக்கிப்போ  என்னை வர சொன்ன? என்னலன்னா திரும்ப உன்னை விட்டு போக முடியும்னு தோணலை.”  

ஒரு கையால் அவள் இடையோடு கையிட்டு மறுகையால் கன்னத்தில் காய்ந்து கன்னத்தோடு ஒட்டியிருந்த மஞ்சளை வருடியவாறு சொல்ல,பெண்ணவளுக்கு காய்ந்திருந்த மஞ்சளோ மீண்டுமாய் குளிர்மை அளித்தது. 

“கண்மூடி அதை உணர்த்தவளுக்கு அடுத்து அவனிட்ட இதழ் ஒற்றல் கண்களை திறக்க செய்ததோடு, 

“இன்னும் முழுசா ஒருநாள் இருக்கு கவி நாளைக்கு இந்நேரம் மிஸஸ் ருத்ரவர்மனா என் கைக்குள்ள இருப்ப. ‘

பெண்ணவள் நாணி அவன் கண்கள் காணும் திறன் இன்றி தலைக் கவிழ,

‘அன்னைக்கு என்னை பார்குறப்ப என்ன சொல்ல சொன்னேன்,அதை சொல்லிட்டேன்னா கிளம்பிருவேன்.ரொம்ப நேரம் என்னால இருக்கமுடியாது. யாரும் பார்த்துட்டாங்கன்னா என் கெத்து  என்னாவுறது.அதோட இன்னும் ரொம்ப நேரத்துக்கு இருந்தேன்னா உன்னை விட்டுட்டு போவேன்னு தோணல.”

‘என்னது? ‘ என மறந்தவளாய் அவனை ஏறிட,

“சொல்லலன்னா என் பனிஷ்மென்ட் ஏத்துப்பன்னு சொல்லிருக்க கவி”என்றவன்  அவளை தன்னோடு நெறுக்கிக்கொள்ள , 

“வரு என்ன பண்றீங்க? “

யாரும் வந்திடக்கூடும் என்பதை அப்போது தான் உணர்ந்தவள் அவனை தன்னை விட்டு விலக்க முனைந்தவளாய், 

 

“வரு மீனம்மாக்கிட்ட சொல்லிட்டு தான் வந்திருக்கேன்.எப்போ வேணா மாடிக்கு வந்துருவாங்க. “

 

“படில மாதவா நின்னிருப்பான்.உன்னை பார்க்கணும்னு அவனோட தான் வந்தேன். யாரும் வந்தா சிக்னல் தரேன்னு சொல்லிருக்கான்.’

‘எதுக்கு கவி என்னை வர சொன்ன? என்னால முடிலடி “

 

அவளை இறுக்கி அணைத்தவன் அதே அணைப்பை அவன் இதழூடாக அவள் இதழுக்கு மீண்டுமாய் கொடுத்தான்.அவன் தவிப்பை அவளுக்கு கடத்தினான்.கைகள் அத்துமீற துடிக்க அவன் நிலை உணர்ந்தவள்,அவனை தன்னை விட்டு பிரித்தெடுத்து மீண்டுமாய் இதமாய் இதழொற்றியவள்,

 

“ஐ லவ் யூ வரு” என்றிட அவள்  நிலையையும் புரிந்துக் கொண்டவன் அவள் நெற்றியில் இதழ் பதித்து, நெற்றியும் மூக்கும்  ஒன்றோடு ஒன்று உறவாட விட்டு சில நொடி காத்தவன் அவளை கீழே செல்லுமாறு கூறினான்.  மனமே இல்லாது செல்ல திரும்பியவளை மீண்டும் அழைத்தவன்,அவளை பின் புறமாய் அணைத்துக் கொண்டான்.அவள் கன்னத்தோடு கன்னம் உரசியவன், 

“அப்டி ஏக்கமா பார்த்துட்டு போகாத கவி,கஷ்டமா இருக்கு’என்றவன் கன்னத்தில் இதழ் பதித்து

‘குட் நைட் பொண்டாட்டி ” என்று கூறி அவளுக்கும் மனமே இல்லாது விடைக்கொடுத்தான். 

அவள் கீழே செல்லும் வரை பார்த்திருந்தவனுக்கு ஏனோ அவ்விடம் விட்டு செல்ல மனமில்லை.இதற்கு மேலும் தாமதித்தால் தமையனிடம் அடி விழும் என்றுணர்ந்து கிளம்பினான். 

 

கிளம்பாமலே இருந்திருக்கலாமோ!

இன்னும் சற்று தாமதித்திருக்கலாமோ !

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!