கனவு 8
கனவு 8
அத்தியாயம்-8
அனல் பறக்கும் பார்வையோடு தன்னை நோக்கிக் கொண்டிருந்தவனை கௌசிகா நிமிர்ந்தும் பார்க்கவில்லை. ஜீவாவிற்குத்
தன் அருகில் உட்கார்ந்திருந்த
விக்னேஷின் உஷ்ண மூச்சை உணர முடிந்தது. உள்ளங்கையை இறுக மூடிக்
தன் கோபத்தை அடக்கிக்
கொண்டிருந்தவனை கவனித்தவன் கௌசிகாவிடம் பேச ஆரம்பித்தான்.
“ஏன் கௌசி.. வரதற்கு என்ன?” ஜீவா சற்று கோபமான குரலில் வினவினான்.
“வேண்டாம்ன்னா வேண்டாம் ஜீ.. நான் வந்தா எனக்கு பழைய நியாபகம் மறுபடியும் வரும்.. அதுவும் இல்லாம நான் வந்து என்ன செய்யப் போறேன்?” என்று கத்தியையும் வெங்காயத்தையும் எடுத்துக் கொண்டு சமையல் அறைக்குள் புகுந்தாள் கௌசிகா.
ஆனால் விக்னேஷ் விடவில்லை. தானும் எழுந்து ஜீவாவை எழுப்பி “போ அவளிடம் போய் பேசி சம்மதிக்க வை” என்று
மிரட்டியபடி சைகை காட்டி அனுப்பினான்.
சமையல் அறைக்குள் புகுந்த ஜீவா சமையல் மேடையின் அருகில் நின்றான். விக்னேஷ் சமையல் அறை வாயிலிலேயே நின்றான். கௌசிகா
அவர்கள் வந்ததைப் பார்த்தும் சமையல் வேலையில் குறியாய் இருந்தாள்.
“கௌசி நீ வந்து தான் ஆக வேண்டும்” என்றான் ஜீவா கட்டளையிடுவது போல.
ஆனால் இந்த மாதிரி குரலுக்கு அவள் பயப்படவும் தணியவும் மாட்டாள். அது அவளுடன் இருந்த எல்லோருக்கும்
தெரியும்.
“முடியாது ஜீவா” – கௌசிகா
பிடிவாதமானக் குரலில்.
“உனக்கு என்னதான் பிரச்சினை கௌசி.
எங்க கூட வரதுக்கு என்ன? ஏன் இப்படிப் பிடிவாதம் பிடிக்கறே?” – ஜீவாவிற்கும் கோபம் ஏறியது.
“எனக்கு அங்க வரவே பயமா இருக்கு ஜீ. அங்க வந்தா பழைய நியாபகம் எல்லாம் வந்து மறுபடியும் என்னப்
போட்டு அமுக்கிடும்” என்று உதட்டைக் கடித்தபடி சொன்னாள் கௌசி.
“இப்போ யாருமே சென்னையில் இல்ல கௌசி. எல்லாருமே கோயம்பத்தூர் மாறிட்டோம்” என்று ஜீவா சொல்ல கௌசியிடம் “ம்ம்” என்று தக்காளியை நறுக்கியபடியே பதில் வந்தது.
“நீ ம்ம்-ன்னு சொல்லவா நான் பேசிட்டு இருக்கேன்?” என்று ஜீவா அவள் தக்காளி நறுக்கிக் கொண்டிருந்த கத்தியைப் பிடுங்கினான்.
“என்ன சொல்லணும்-ன்னு எதிர்ப்பாக்கற ஜீ” – என்று தட்டில் இருந்த தக்காளிளை
வெறித்த படியே கௌசி கேட்டாள். அவளுக்கு மூச்சு வாங்கியது. கோபத்தில்
அல்ல பதட்டத்தில்.
“நீ நாளைக்கு எங்க கூட வரணும் கௌசி” – ஜீவா அழுத்தமானக் குரலில்.
“சும்மா சும்மா அதையே சொல்லாதே ஜீ.. நான் இங்க இருந்தா கூட நிம்மதியா
இருப்பேன். அங்க வந்தா என் நிம்மதியும் போய் உங்க நிம்மதியும் போயிடும்” என்று எரிச்சலானக் குரலில் கூறினாள்.
“நிம்மதி போக அப்படி என்ன நடக்க போது கௌசி.. அதான் நாங்க எல்லாரும் இருக்கோம்-ல கௌசி.. அப்புறம் என்ன?” – ஜீவா விடமால் அவளிடம் வாதடினான்.
சமையல் அறை வாயிலில் சாய்ந்து நின்றிருந்த விக்னேஷை ஒரு நிமிடம்
பார்த்தவள் “ஆமா நல்லா இருந்தீங்க எல்லாரும்.. அவரவர் வாழ்க்கைன்னு வந்த அப்புறம் யாரும் கண்டுக்கல..
அனுபவிச்ச எனக்குத் தான் தெரியும் எவ்வளவு வலின்னு” என்றவளுக்கு கண்ணீர் வர வேறு புறம் திரும்பி இருவரிடமும் கண்ணீரை மறைத்தாள்.
கௌசி எதைச் சொல்லுகிறாள் என்று விக்னேஷிற்குப் புரியாமல் இல்லை. முகம் இறுகி பாறை போல ஆக பல்லைக் கடித்துக் கொண்டு நின்றான்.
“கௌசி… அதெல்லாம் சந்தர்ப்ப சூழ்நிலையால் நடந்தது. அவன் அப்போது கனடா-ல இருந்தான்.. நான்
கம்பெனி விஷயமாக சுற்றிக்
கொண்டிருந்தேன். அதெல்லாம் இப்போது எதுக்கு கௌசி?” என்றவன் கௌசியின் முதுகு அழுகையில் குலுங்குவதைக் காண்கையில் “சரி எங்க மேல தான் தப்பு.. அழாதே” என்று
ஜீவா அவளை சமாதானம் செய்தபடி அருகில் சென்றான். விக்னேஷ் சுவற்றில் ஒரு காலை மடக்கி சாய்ந்து கையைக் கட்டியபடி நின்றிருந்தான்.
“அதான் ஜீ சொல்றேன்.. அப்போது நடந்த எதையும் என்னால மறக்க முடியாது.
அவரவர் வேலையைப் பாத்துட்டுஇருப்போம்.. நீங்க நாளைக்கு கிளம்புங்க..
நான் வரல” என்றாள் கௌசி கண்ணீர் சிந்தியபடி.
அதுவரை அமைதி காத்த விக்னேஷ் வெடித்தான். “ஜீ உன்ன பேச்சு வார்த்தை
நடத்த சொல்லல நான். நாளைக்கு கிளம்பி தயாராக இருக்கச் சொல்லு.. அவ்வளவு தான்” என்றான் இடுங்கிய
கண்களுடன் கௌசிகாவைப் பார்த்தபடி.
“நான் எங்க இருக்கணும்-ன்னு எனக்குத் தெரியும்.. நீ முடிவு பண்ணாதே” என்று
விக்னேஷைப் பார்த்து வெடுக்கென பதில் சொன்னாள். ஏற்கனவே விக்னேஷ் அவளை சட்டையே செய்யாமல் இருந்ததில் கோபமும் வருத்தமுமாக
இருந்தவள் விக்னேஷ் ஆர்டர் போடுவது போல பேசவும் கோபம் பொங்கியது.
“ஏதோ இவ எடுத்த முடிவு எல்லாம் சரியா இருந்த மாதிரி பேசறா.. இவ இங்க ஓடி வந்து மட்டும் என்னத்த சாதிச்சுட்டா..” என்று காய்ந்தவனிடம்
கௌசிகா பாய்ந்தாள்.
“ஆமா நான் எதுவும் சாதிக்கல தான்.. ஆனா கொஞ்சம் நிம்மதியா இருந்தேன்” என்று கோபத்தில் கண்களில் கண்ணீர் வந்து மூக்கு விடைக்கச் சொன்னாள் கௌசிகா.
“வாயை கொஞ்சம் அடக்கச் சொல் ஜீ.. ஏதோ எல்லாரும் இவள கொடுமை பண்ண மாதிரி பேசறா” என்றான்
ஜீவாவைப் பார்த்து விக்னேஷ்.
“அப்போ நீங்க எல்லாரும் எனக்கு எடுத்த முடிவுகள் எல்லாம் நல்லாவா இருந்தச்சு?
என் முடிவைப் பத்திச் சொல்ற”
என்று எதிர்க்கேள்வி விக்னேஷைப் பார்த்துக் கேட்டாள் கௌசி.
“கௌசி ப்ளீஸ் பழசையே பேசாதே” என்று சலித்தான் ஜீவா.
“சலிப்பாக இருக்கா ஜீ நான் பேசறது. என் இடத்தில் இருந்து பார்த்திருந்தால் தெரிந்திருக்கும் ஜீ. நீ விக்னேஷ் எல்லாம் அவங்கவங்க வாழ்க்கை-ன்னு
போயிட்டீங்க.. ஆனால் நான் தானே அந்தக் கொடுமையை அனுபவிச்சேன். உங்க யாருக்கும் எதுவும் தெரியாது..
யார்யாரோ எல்லாம்…” என்று
ஆரம்பித்தவள் எதுவும் பேசாமல் கண்களை இறுக மூடிக் கண்ணீர் விட்டாள்.
அவளின் கண்ணீரைக் கண்டதில் ஜீவாவின் மனம் இளகத் தான் செய்தது.
ஆனால் விக்னேஷிற்கு இல்லை. ஏனெனில் அவளை விட்டுவிட்டுச் செல்ல
முடியாதே… இதை விட்டால் அடுத்த சான்ஸ் அமையவே அமையாது.
“கௌசி நீ இல்லாம நாங்கள் எல்லாம் சந்தோஷமாக வாழ்ந்துட்டு இருக்கோம்ன்னு நினைக்காத.. நாங்க யாரும் முழுமையான சந்தோஷத்தில்
இல்ல.. ஒவ்வொரு நல்ல தருணத்திலும் உன்னை ரொம்ப மிஸ் பண்ணியிருக்கோம் கௌசி. நீ என்னடா-ன்னா அங்க வந்தா நிம்மதியே போயிரும்-ன்னு சொல்லறயே” என்று ஜீவா
ஆதங்கத்துடன் பேச கௌசி அப்படியே நிற்பதைக் கண்டு “அட்லீஸ்ட் நீ ஒரு தடவை வந்துவிட்டுப் போ” என்று ஜீவா
ஆரம்பிக்க “ஜீ…” என்று விக்னேஷ் அதட்டினான்.
“எதுக்காக இங்க வந்தோம்ன்னு மறந்துட்டையா” என்றவன் “இவள நிரந்தரமாகக் கூட்டிட்டு வறோம்ன்னு அங்க சொல்லிட்டு வந்தது இவளோட
கண்ணீரப் பாத்தோன மறந்திருச்சா” என்று ஜீவாவிற்கு கோயம்பத்தூரில்
உள்ள நிலைமையை நினைவூட்டினான் விக்னேஷ்.
“நான் அங்க வந்தா ஸ்டெரஸ் தாங்காம செத்திருவேன் ஜீ” என்று தன் இரண்டு கைகளாலும் தலையைப் பிடித்தபடிக் கெஞ்சும் குரலில் கௌசிகா மன்றாடினாள்.
அவள் பேசியதைக் கேட்ட இருவருக்குமே திகைப்பு.. ஏன் இந்த அளவிற்கு பிடிவாதம் பிடிக்கிறாள் இவள்? இவள்
இப்படி சொல் பேச்சு கேட்காதவளும் அல்லவே? என்று இருவரின் மனதிலும்
கேள்வி எழுந்தது.
டக்கென்று சுதாரித்த விக்னேஷ் “சரி ஜீ.. இவ வரவேண்டாம்.. இங்கேயே கிடந்து நிம்மதியாக வாழட்டும்.. ஆனா அங்க உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கும் ஜீவன் கண்டிப்பாகச் சீக்கிரம் உயிரை விட்டுவிடும். அப்போது மொத்தமா வரட்டும்” பல்லைக் கடித்தபடி பேசியவன் கௌசியை நேராக அப்போது தான் பார்த்தான்.. இரண்டு
நொடிப் பார்த்தவன் “சரியான
சுயநலவாதி” என்று பற்களுக்கு இடையில் வார்த்தைகளைத் துப்பியவன்
விறுவிறுவென்று சென்றுவிட்டான்.
அவன் தன்னை சுயநலவாதி என்று சொல்ல கௌசிகாவிற்கு மனம் அடித்தது.. ‘நானா விக்கா சுயநலவாதி.. உங்கள்
அனைவரின் சந்தோஷத்திற்காக உன்னை விட்டுக்கொடுத்து என் நிம்மதி
சந்தோஷம் என அனைத்தையும் விட்டுக்
கொடுத்தேனே.. அதற்கு நீ பேசும் பேச்சு இதுதானா.. எவ்வளவு எளிதாய் சொல்லிவிட்டுப் போகிறாய்.. நான் அடைந்த வலி யாருக்கும் சொல்லாமல் போனதால் தானே சுயநலவாதி ஆகிப்
போனேன்..’ என்று கண்ணீர் சிந்தி மனதிற்குள் பேசியபடி நின்றவளுக்கு அப்போது தான் அவனது பேச்சு நினைவு
வந்தது..
உயிருக்கு போராடும் ஜீவனா? யார் அது? ஒரு நிமிடம் அவனது பேச்சை நினைவிற்கு கொண்டு வந்து திகைத்து
நின்றவள் ஜீவாவிடம் திரும்பி “என்ன ஜீ சொல்றான் அவன்.. யாருக்கு என்ன?” என்று அதிர்ச்சியைத் தாங்கிய
விழிகளுடன் கேட்டாள் கௌசிகா.
“கௌசி மாமா…” என்று ஆரம்பித்தவன் வரதராஜனிற்கு நெஞ்சுவலி வந்தது.. சர்ஜரி செய்தது.. அதற்கான டாக்டர் சொன்ன காரணம்.. என்று கடைசி மூன்று நாட்களாக நடந்தததை எல்லாம் சொல்லி முடித்தான்.
எல்லாவற்றையும் கேட்டவள் “அப்பா..” என்று வாய்பொத்தி அப்படியே தரையில்
மடிந்து உட்கார்ந்து அழுக ஆரம்பித்து விட்டாள். தன்னை சிறுவயதில் இருந்தே
ஒரு குறையும் இல்லாமல்
வளர்த்தவருக்கு இப்படியா ஆக
வேண்டும் என்று கௌசிகாவின் மனம் விம்மியது. எப்படி எல்லாம் பாசத்தைக் கொட்டி வளர்த்தார்.. நெஞ்சு வலி வரும்
அளவிற்கு காரணம் ஆகிவிட்டேனே.. என்று நினைத்தவளுக்கு கண்ணீர்
நிற்கவில்லை. மூச்சுக் கூட விடாமல் அழுதவளைக் கண்ட ஜீவாவிற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.
என்னதான் கௌசி முறைப்பெண் என்றாலும் அவன் அவளை அப்படிப்
பார்த்ததே இல்லை. எப்போதும் நல்ல தோழியாக.. சகோதரியாகவே பார்த்தான்.
சின்ன வயதில் இருந்து அவளை மடியில் தூக்கி சிரிக்க வைத்துப் பார்த்தவனுக்கு
அவள் இப்படி அழுவதைக் காணச் சகிக்கவில்லை.
அவள் அருகில் சென்று இரண்டு கால்களையும் மண்டியிட்டு தரையில்
அமர்ந்தவன் “கௌசி.. இங்க பாரு..” என்று அவளின் கையைப் பற்றினான்.
ஆனால் ஒன்றும் பிரயோஜனம் இல்லை. அதிகாம அழ ஆரம்பித்துவிட்டாள்.
ஜீவாவின் தோளில் தன் நெற்றியை வைத்துச் தலை சாய்த்தவள் “எ…எ.. என்னால்.. என்னால தானே ஜீ எல்லாம்..
அப்பாவிற்கு இப்படி ஆயிடுச்சு” என்று அழுகையில் குரல் வெளியே வராமல் தொண்டைக் குழியில் சிக்கி சிக்கி வந்தது.
“கௌசி.. பர்ஸ்ட் அழாதே.. மாமாக்கு சுகரும் அதிகம்.. அதனால கூட வந்திருக்கலாம்.. சும்மா நீயாக கற்பனைப்
பண்ணாதே” என்று அவளைத் தேற்ற முயன்றான்.
“ஆனா மன அழுத்தம்ன்னு டாக்டர் சொன்னதா சொன்னல்ல நீ.. அது என்னாலதானே?” என்று சமாதானம் ஆகதவளாய்க் கேட்டாள் கௌசிகா.
கேவிக் கொண்டு அழுபவளை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியவில்லை ஜீவாவிற்கு. “ஆமாம்
கௌசி உன்னால் தான் மன அழுத்தம்” என்று அழுத்தமானக் குரலில் ஜீவா
சொல்ல கௌசி மேலும் உதடுகள் துடித்தன.
“ஆனால் நீ வந்தா எல்லாம் போயிடும் கௌசி” – அமைதியான தெளிவான
குரலில் ஜீவா.
கௌசி அவனை நிமிர்ந்து பார்க்க “சூழ்நிலை எல்லாவற்றையும்
மாற்றிவிட்டது கௌசி.. நாம
நினைச்சாலும் அத மாத்த முடியாது.. ஆனா மாற ட்ரை செய்யலாம் கௌசி..
நீ எங்க கூட கிளம்பி வா கௌசி.. ப்ளீஸ்” என்றான் அவளை நேராகப் பார்த்து.
“சரி ஜீ” என்று கண்களைத் துடைத்தபடி கௌசிகா தலையை ஆட்டினாள். ஜீவா
சொன்னதற்காக அவள் சரி என்று சொல்லவில்லை. அவளிற்கு அவள் அப்பா முக்கியம். சின்ன வயதில் இருந்து அதட்டியது கூட இல்லை. ஒரு வேலை கூட
வாங்கியது இல்லை.. தானாக சென்று அவரை தொந்தரவு செய்து ஆட்டம் கட்டுவாள்.. அதற்கும் சிரிப்புதான்..
அப்படிப் பட்டவர் கடைசியாக ஏதோ ஒரு சூழ்நிலையில் எடுத்த முடிவில் இப்படித்
தனியாகத் தவிக்க விட்டு
வந்துவிட்டோமே என்று கௌசியின் மனம் அவளை குத்தியது. “சரி கௌசி.. எந்திரி.. எந்திரிச்சு முகத்தைக் கழுவு.. பாரு அழுதா நல்லாவே இல்ல..” என்று ஜீவா சொல்ல
கண்களைத் முந்தானையால்
துடைத்தவள் எழுந்து சென்று
மூகத்தைக் கழுவினாள்.
முஞ்சியைக் கழுவிக்கொண்டு வர ஜீவா தன் போனை கௌசியிடம் கையில் தந்து
“மதி பேசனுமாம்” என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டான். கௌசி ஏதோ
சங்கடமாக உணர்ந்தாள். எந்த மூஞ்சியை வைத்துக் கொண்டு பேசுவது என்று இருந்தது.
“ஹலோ….” என்று எப்படியோ
பேசிவிட்டாள் கௌசிகா.
“கௌசி….” என்ற மதிக்கு தொண்டை அடைத்தது.
இருவருக்குமே கண்களில் நீர்க் கோர்த்தது. என்னதான் அன்னியமாக இருந்து உறவானாலும் இருவரின் நட்பும் அதற்கு ஒரு படி மேல்தான். இருவரும்
ஒருவருக்கொருவர் எதையுமே மறைத்தது இல்லை.. கௌசி விக்னேஷைக் காதலித்ததைத் தவிர.. கௌசி வீட்டைவிட்டு கிளம்பிய அன்று அந்தக்
குடும்பத்தில் ஒருத்தியாகவே
கலங்கிப்போனாள் மதி. வியாஹா அப்போது கருவில் இரண்டரை மாதம்.
குழந்தையை வயிற்றில் வைத்துக் கொண்டு கௌசியைப் பற்றி நினைத்து..
தனிமையிலும் ஜீவாவிடம் வருந்திப் பேசியதால் என்னவோ வியாஹா சில
சமயம் வாலுத்தனம் பண்ணும் போது அப்படியே கௌசியின் அச்சாக இருப்பாள். கௌசி இல்லை என்றாலும்
வியாஹாவின் சேட்டையில்
எல்லோருக்கும் கௌசியின் நியாபகம் வந்து வாட்டியது என்னமோ உண்மைதான்.
“கௌசி கேட்டகுதா” – மதி இன்னும் அதே குரலில்.
அதற்குள் படுக்கை அறைக்குள் நுழைந்து பெட்டில் உட்கார்ந்தவளுக்கு மதியின்
குரல் கண்ணீரை வர வைத்தது.
“கேட்குது மதி.. எப்படி இருக்க?” – கௌசிகா.
“நல்லாயிருக்கேன் கௌசி… நீ?” என்று வினவினாள். அதற்குப் பிறகு இருவருக்கும் என்ன பேசுவது என்று
தெரியவில்லை.
“எல்லோ… எல்லோரும் எப்படி
இருக்காங்க மதி..?” என்று திக்கித் திக்கிக் கேட்டாள் கௌசி.
“ம்ம்.. ஆல் குட்.. நீ இங்க வரன்னு ஜீவா சொன்னாரு.. ரொம்ப சந்தோஷமா இருக்கு கௌசி.. We missed you these
days” என்று பேசிய மதிக்கும் சரி கேட்டுக் கொண்டிருந்த கௌசிக்கும் சரி கண்களில் இருந்து நீர் வழிந்தது.
பிறகு இருவரும் சுமார் பத்து நிமிடம் தான் பேசினர். மதியிடம் பேசி முடித்துவிட்டு
கண்ணைத் துடைத்துக் கொண்டு கௌசி பெட்ரூமில் இருந்து வெளியே வர, ஜீவா
விக்னேஷுடன் உள்ளே நுழைந்தான்.
ஜீவாவிடம் போனைத் தந்தவள் “ஒரு half an hour ஜீ.. சீக்கரம் டிபன் ரெடி பண்ணிறேன்..” என்று கௌசிகா சொல்ல
விக்னேஷிடம் இருந்து “உச்” என்று வந்தது.
கௌசிகாவிற்கு கோபம் வந்துவிட்டது. “இப்போ உனக்கு என்ன பிரச்சினை.. என்னிடம் பேச புடிக்கலனா விட்டிடு டா..
சும்மா இந்த உச் கொட்றது எல்லாம் வேண்டாம்” என்று கௌசிகா முறைத்தபடி
பேச விக்னேஷ் எகிறினான்.
“இந்த டா போட்டு பேசறதுலாம் என்கிட்ட வேண்டாம்-ன்னு சொல்லு ஜீ.. இவளுக்கு
எல்லாம் எதற்கு இவ்வளவு கோபம் வருகிறது” என்று எகத்தாளமாகக் கேட்டான். ஜீவாவும் கௌசிகாவும்
புரியாமல் நிற்க விக்னேஷ் “ஓடி வந்தவளுக்கு கோபம் வேற” என்று கோபமாக அழுத்தமானக் குரலில்
சொன்னான்.
கௌசிகா பொறுமையை இழந்தாள். “ஜீ… போதும் அவன நிறுத்த சொல்லு..” என்று
கௌசிகா குரலை உயர்த்த
“உண்மையைச் சொன்னால் கோபம் வேற வருதா?” என்றான் விக்னேஷ் விடாமல்.
“எல்லாம் மாமாவிற்காகப் பார்க்க வேண்டியதா இருக்கு” என்று விக்னேஷ்
முணுமுணுக்க கௌசிக்கு அழுகை வந்துவிடுவது போல இருந்தது. இவனுக்கு ஏன் நம் மேல் இவ்வளவு கோபம்? இவனிற்கு நல்லது தானே
செய்துவிட்டு வந்தேன்? ஏன் இப்படி வெறுப்பாகவே பார்க்கிறான்? குத்தல்
பேச்சுகள் வேறு.. அவள் பார்த்த
விக்னேஷ் இவன் அல்லவே.. இப்போது ஆளே வேறு மாதிரித் தெரிகிறானே..
பேச்சும் வெறுப்பின் அலைகளாக வருகின்றன.. என்று பல எண்ணங்கள்
கௌசிகாவிற்கு.
“இவ்வளவு வெறுப்புல இருக்கவன் என்னை ஏன் கூட்டிட்டுப் போக வந்தாய்?
ஜீவாவை மட்டும் அனுப்பி வச்சிருக்க வேண்டியதுதானே? உன்ன யார் வர சொன்னது ” என்று அழுகையை அடக்கியபடி கண்ணீர் வெளியே வராமல் சிரமப்பட்டு சிவந்த விழிகளுடன் கௌசிகா கேட்டாள்.
“நானாக ஒன்னும் வரல.. அப்படி ஏதாவது தேவையில்லாத கற்பனையை
ஏத்தி வைத்துக் கொள்ளாதே.. இதோ இவனிலிருந்து எல்லாரும் என்கிட்ட கேட்டாங்க.. அதுவும் இல்லாம
மாமாவுக்காக மட்டும் தான் வந்தேன். இல்லையென்றால் அப்படியே தொலையட்டும்ன்னு விட்டிருப்பேன்” என்று விக்னேஷ் தன் நாக்கை தேள்
போல வைத்துக் கொட்டினான்
கௌசிகாவை.
அவ்வளவு தான் கௌசிகாவிற்கு கண்களில் இருந்து கண்ணீர் பொங்கி
வர சமையல் அறைக்குள் புகுந்து விட்டாள். ஜீவா விக்னேஷின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு வீட்டின் பின்னால் கூட்டிச் சென்றான்.
“என்னடா விக்கி.. என்னாச்சு உனக்கு… ஏன் இப்படி பேசற.. எல்லாருக்கும் தான் அவள் மேல கோபம் இருக்கு.. ஆனா
என்ன இருந்தாலும் அவ நம்ம கூட வளர்ந்தவ டா.. அவ எவ்ளோ பெரியவ ஆனாலும் நம்ம கௌசி தான் விக்கி..
இப்படி திட்டற அவளை” என்று
கடுமையானக் குரலில் கேட்டவன் “அதுவும் இல்லாம நீ ஏன் இப்படி பேசற.. அவ உனக்கு அப்படி என்ன பண்ணிட்டா சொல்லு.. எனக்கு தெரிஞ்சு அவ வரும்போதும் கூட உனக்கு நல்லது பண்ணிட்டு தான் வந்தா.. ஆனா உன் விதி அதுல வேறு மாதிரி இருந்திருச்சு..அதுக்கு இவ மேல கோபப்பட்டு என்ன
பண்ண முடியும்” என்று ஜீவா பேசப்பேச விக்னேஷின் முகம் கறுத்தது. அதுவும் உன் விதி விளையாடிவிட்டது என்று
சொல்லும் போது அந்தக் கருமம் வேறு கண் முன்னாடி நிழலாடியது.
“அவ அழறதைப் பார்த்தா பாவமா இருக்கு டா.. அதான் கொஞ்சம் கத்திப் பேசிட்டேன்..
ஸாரிடா விக்கி” என்றுவிட்டு ஜீவா உள்ளே செல்லத் திரும்பினான்.
“ஜீ…” என்று அழைத்தான் விக்னேஷ். “ஸாரிடா..” என்ற விக்னேஷிற்கு தன் போக்கு அவனுக்கே புரியவில்லை.
“சரி வாடா.. உள்ளே போலாம்” – ஜீவா.
“நீ போடா நான் வரேன்” – என்றவன் அப்படியே அங்கு தண்ணீர் தொட்டியின்
திண்டில் ஏறி அமர்ந்தான்.
விக்னேஷின் பேச்சுக்கள் தாங்காமல் சமையல் அறைக்குள் நுழைந்தவள்
கண்ணீர் விட்டபடியே சமையலை செய்து கொண்டு இருந்தாள். அவன் பேசிய
ஒவ்வொரு வார்த்தையும் மனதில் குத்தியது கௌசிகாவிற்கு. ஏற்கனவே
தன்னால் தான் தந்தைக்கு இப்படி என்ற குற்ற உணர்வில் இருந்தவள் விக்னேஷ்
பேசிய வார்த்தைகள் வேறு மனதை அறுப்பது போல இருந்தது.
தன்னிடம் எப்படி இருந்தவன்.. இப்போது அதில் ஒரு சதவீதம் கூட இல்லையே.. “ஓடி வந்தவள்” என்று அவன் அழுத்தமும் வெறுப்புமாக குற்றம் சாட்டும் பார்வையில் சொன்னது கண் முன்
நின்றது.
“நான் எதற்காக வீட்டை விட்டு வெளியே வந்தேன் என்று தெரியாமல் இப்படி என்னை வதைக்கிறானே?” என்று
நினைத்துக் கண்ணீர் விட்டவள் ஜீவா உள்ளே நுழைவதைக் கண்டு கண்களை அவசரமாகத் துடைத்தாள்.
“இங்க வேர்க்குது பாரு ஜீ.. நீ வேணும்னா ஹால்-ல உட்காரு..” என்றாள் கரகரத்த
குரலுடன் கௌசிகா.
“………” – ஜீவா.
“பசிக்குதா ஜீ… இன்னும் ஒரு 15 மினிட்ஸ் தான்..” என்று பம்பரமாய்ச் சுற்றி வேலை
செய்தவளைப் பார்க்க ஜீவாவிற்கு புதியாய் இருந்தது.
“இதே பழைய கௌசியாய்
இருந்திருந்தால் அவனைப் போட்டு புரட்டியிருப்பாள்.. ஆனால் இன்று அவன்
பேசியதற்கு உட்கார்ந்து அழுகிறாளே.. விதி இப்படி மாற்றிவிடுமா ஒரு பெண்ணை?” என்று கௌசியைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தவன் இப்போது
விக்னேஷைப் பற்றி சிந்தித்தான்.
“அப்படி இவள் மீது என்னதான் கோபம் அவனுக்கு.. ஏன் இவ்வளவு வெறுப்பு.. வம்பிற்கு இழுத்து சண்டை செய்வானே
தவிர அவ்வளவு சீக்கிரம் அவனும் திட்டமாட்டன் யாரையும் அவளைத் திட்டவும் விடமாட்டான். அப்படி
இருந்தவனுக்கு இப்போ என்ன?” என்று சமையல் அறையின் சுவற்றில் சாய்ந்து மேலே பார்த்தபடியே யோசித்துக் கொண்டிருந்தான்.
“ஜீ சமையல் ஆச்சு… போய் கையைக் கழுவிட்டு வா..” என்று அடுப்பில் இருந்த
வடச்சட்டியை எடுத்தபடியே கௌசி சொல்ல “ம்ம்” என்றான் ஜீவா.
“அப்படியே அவனையும் வரச்சொல்லு” – என்று சிரத்தை இல்லாதக் குரலில்
சொன்னாள் கௌசி.
வெளியே வந்தவன் தொட்டியின் திண்டில் காலைத் தொங்கப் போட்டு இரு பக்கமும்
கையை ஊன்றி புருவ முடிச்சிடன் உட்கார்ந்த விக்னேஷை அழைத்துக்
கொண்டு உள்ளே வந்தான்.
உள்ளே இருவரும் நுழைய கௌசிகா மூவருக்கும் தட்டில் சேமியாவையும் இட்லி
உப்புமாவையும் வைத்துக்
கொண்டிருந்தாள். வந்து அமைதியாக அமர்ந்த இருவருக்கும் தட்டில் தேங்காய்
சட்னியை வைத்து முடிக்க மூவரும் ஒரு பேச்சு பேசாமல் உண்டு முடித்தனர்.
சாப்பிட்டுவிட்டு எழுந்த கௌசி
பாத்திரங்களை கழுவ ஆரம்பித்தாள். “கௌசி எவ்ளோ வேலை செய்வ.. குடு
நான் செய்றேன்” என்று கையில் சோப்பு நுரையுடன் இருந்த நாரை வாங்க வந்தான் ஜீவா.
“ஏஏஏஏ.. நோ..” என்று கையை இழுத்துக் கொண்டவள் “எல்லாம் டெய்லியும் நான்
செய்றது தான் ஜீ.. நீ பேசாமப் போய் ரெஸ்ட் எடு.. நேத்து பஸ்-ல சரியா தூங்கிருக்க மாட்ட நீ.. நாளைக்கு வேண்டுமானால் பேக்கிங்-க்கு ஹெல்ப் பண்ணு” என்று பாத்திரத்தை
கழுவியபடியே சொன்னாள் கௌசிகா.
“நல்லாப் பேசக் கத்துக்கிட்டே கௌசி..” என்று கிண்டல் செய்தான் ஜீவா.
பின் வேலையை முடித்துக் கொண்டு வந்தவள் ஜீவாவிற்கும் விக்னேஷிற்கும்
பாயை விரித்தாள் கௌசிகா. பாயை விரித்து தலையணை போர்வை எல்லாவற்றையும் எடுத்துப் போட்டவள் ஜீவாவிடம் திரும்பி “ஜீ… எல்லாம் போட்டுட்டேன்.. எக்ஸ்ட்ரா ஃபேன் வேணும்னா டேபிள் ஃபேன் போட்டுக்கங்க.. தண்ணீர் இங்கையே ஒரு
ஜக்குல வச்சுட்டேன்..” என்றவள் விக்னேஷை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு “அப்புறம் நைட் வெளியிலகீது போயிராதீங்க.. பனி ஓவரா இருக்கும்..” என்றுவிட்டு தனக்கும் ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு அறைக்குள் புகுந்துவிட்டாள்.
உள்ளே வந்தவள் சத்தம் வராதவாறு அவளுடைய டைரி இருந்த மஞ்சள் ட்ராலியை ஒருமுறை ஓப்பன் செய்து
பார்த்தாள். உள்ளே டைரியையும் சில சார்ட் பேப்பரையும் பார்த்தவள் அதன்
மேல் பத்திரமாகக் காட்டன் துணியைப் போட்டு மூடியவள் அந்த ட்ராலியை எடுத்துத் தனியாக வைத்தாள்.
வந்து பெட்டில் படுத்தவளுக்கு அசதியாக இருந்தாலும் தூக்கம் வரவில்லை. “இதுக்குத் தானா இந்த இரண்டு நாளா இப்படி
அடிச்சுக்கிட்டே இருந்த?” என்று
இதயத்தின் மேல் கை வைத்துக் கேட்டாள்.
வெளியில் படுத்திருந்த விக்னேஷ், ஜீவாவிற்கும் தூக்கம் வரவில்லை.
அவர்களுக்கும் பல சிந்தனைகள். கௌசி அவ்வளவு சீக்கிரம் அழாத பெண்.. இப்படி சண்டை வருவதற்கெல்லாம் அழுகிறாளே..” என்ன நினைத்த ஜீவாவிற்கு “பின் இவன் பேசியதற்கு யாராக இருந்தாலும் அழத்தானே
செய்வார்கள்” என்று தன் மனதில் எழுந்த கேள்விக்கு அவனே பதில் சொல்லிக்
கொண்டு இருந்தான்.
கழுத்தைத் திருப்பி விக்னேஷைப் பார்க்க அவனோ விட்டத்தை வெறித்துக் கொண்டு இருந்தான். “விக்கி…” என்று
அழைத்தான்.
“ம்ம்” – விக்னேஷ்.
“தூங்கிட்டயா?” – ஜீவா.
“இல்ல.. சொல்லு” – விக்னேஷ்
விட்டத்தை வெறித்த படியே.
“நீயும் அப்படியே ஒரு கல்யாணத்தைப்
பண்ணிக்கலாம்ல டா” என்றவன் “உன் பிரச்சினையும் முடிஞ்சா எல்லாரும் ஹாப்பி ஆயிருவாங்க டா” என்றான்
ஜீவா விக்னேஷிற்கு மட்டும் கேட்கும் குரலில்.
“இப்போ உன்ன அறைர அறைல உள்ள இருக்கவ எந்திரிச்சு வெளில வந்திருவா-
ன்னு எனக்கு தோணுது டா ஜீ” –
விக்னேஷ்.
“போங்கடா.. எப்படியோ போங்க.. எனக்கென்ன.. சொன்னேன் பாரு வந்து”
என்று முதுகைக் காட்டித் திரும்பிப் படுக்க “ஏய் என்ன பிகர் மாதிரி திருப்பிக்கறே”
என நக்கலாய்க் கேட்டு விக்னேஷ் சிரிக்க ஜீவா “பாரு கல்யாணமே ஆகாம இருந்து
கடைசில என்ன பாத்தே நீ பிகர்-ன்னு சொல்ற.. நீ எதுக்கு தள்ளியே படுறா சாமி” என்று ஜீவா சொல்ல விக்னேஷ்
அவன் முதுகிலேயே உதைத்தான்.
அன்று இரவு மூவருக்குமே அவரவர் பழைய நினைவுகள் நியாபகம் வந்தன. அந்த இரவில்… இரவில் உலவும்
நிலவைப் போல அவரவர் நினைவுகளில் உலவ ஆரம்பித்தனர் மூவரும்.