காதல்போர் 02

eiOOLW357649-4aa99bbd

காதல்போர் 02

தன் முன் ஒருவன் வலியில் கதறுவதையும், அவன் கையை சற்றும் நெஞ்சில் ஈரமின்றி வெட்டிய ராவணையும் வேதா அதிர்ந்துப்போய் பார்த்துக்கொண்டிருக்க, ஏளனச் சிரிப்புடன் அவனை நோக்கிய ராவண், “முன்னாடியே யோசிச்சிருக்கணும். ஊருக்கு புதுசு, எங்கள பத்தி சரியா தெரியல உனக்கு. அதான், போலிஸ்ல கம்ப்ளைன்ட் எழுதி கொடுத்த கைய மட்டும் வெட்டினேன். இல்லைன்னா…” மிரட்டலாகவே இழுக்க,

சுற்றியிருந்தவர்களே அவனின் கர்ஜிக்கும் குரலில் உண்டான பயத்தில் இரண்டடி பின்னால் நகர்ந்தனர். கத்தியிலிருந்து சொட்டு சொட்டாக இரத்தம் தரையில் சொட்ட, ஆறடி ஆஜானுபாகுவான தோற்றத்தில் நின்றிருந்தவனை பார்த்த வேதாவின் கண்களுக்கோ நிஜமாகவே அவன் ராவணன் போல்தான் காட்சியளித்தான்.

ஆனால், வேதாவின் மனமோ கோபத்தில் கொழுந்துவிட்டு எரிந்தது . சற்றும் பயமின்றி ஒவ்வொரு அடியாக அழுத்தமாக வைத்து ராவண் பின்னால் அவள் சென்று நிற்க, ராவணின் அடியாற்கள், “அரே…” என்றவாறு அவளை பிடிக்க வரும் முன் அவளை நோக்கி திரும்பி நின்றான் ராவண்.

சந்தீப்போ வேதா செய்யும் காரியத்தில் பயந்து வேகமாக காரிலிருந்து இறங்கி, “அக்கா என்ன பண்றீங்க?” என்று கேட்டவாறு அவர்களை நோக்கிச் செல்ல, அதற்குள், “நீ இப்போ பண்ண காரியத்துக்கு நான் உனக்கு தண்டனை வாங்கித் தருவேன். அவன் என்ன பண்ணான், ஏது பண்ணான்னு தெரியல. அவன் பண்ணது உன் பார்வையில தப்பாவே தெரிஞ்சாலும் அதுக்கு தண்டனை கொடுக்க நீ யாரு?” வேதா பேசிக்கொண்டே போக, ஆடிப்போய்விட்டனர் சுற்றியிருந்தவர்கள்.

கூடவே, “யார் இவள்?” என்ற ஆர்வம் கலந்த கேள்வியும் அவர்களுக்குள்.

இதில் ராவணின் முகபாவனையை சொல்லவா வேண்டும்? ‘இதுவரை எந்த ஆண்மகனுமே என் முன் நின்று எதிர்த்து பேசியது கிடையாது. இதில் ஒரு பெண் என்னையே எதிர்த்து பேசுகிறாள்’ ராவண் யோசித்தவாறு சிகரெட் புகையை ஊதி அவளையே கூர்ந்து நோக்க, புகை முகத்தில் பட்டதில் எரிச்சலானவள் மேலும் ஒற்றை விரலை நீட்டி ஏதோ பேச வர, அதற்குள் ராவணிடம் ஓடி வந்தான் சந்தீப்.

“பையா, மன்னிச்சிருங்க. இவங்க ஊருக்கு புதுசு. சுஜீப் ஐயாவோட வீட்டுப்பொண்ணு. நான் இவங்ககிட்ட உங்கள பத்தி சொல்றேன். தயவு செஞ்சி அவங்கள மன்னிச்சிருங்க” கைகளை கூப்பி கெஞ்சிய சந்தீப்பின் குரலில் அத்தனை பயம்! வேதாவிற்கோ எதுவுமே புரியவில்லை.

சிகரெட்டை கீழே போட்டு காலால் மிதித்தவன், மீண்டும் புது சிகரெட்டை உதடுகளுக்கிடையில் வைத்து பற்ற வைத்தவாறு, “பொண்ணுக்கு எந்த ஊரு?” வேதாவை மேலிருந்து கீழ் நோக்கியவாறுக் கேட்க, “தமிழ்நாடு” சந்தீப் சொன்னதுமே, “அரே தமிழ் லட்கீ(ஏய் தமிழ்ப்பொண்ணு)…” என்று புருவங்களை உயர்த்தி ஏளனமாக வளைந்து அசைந்தன அவனின் இறுகிய இதழ்கள்.

“சந்தீப், இத்தனை பேருக்கு நடுவுல ஒருத்தரை வெட்டியிருக்கான். போலிஸ்ல சொல்லாம என்னை பத்தி சொல்லிக்கிட்டு இருக்கீங்க? நானே இவன…” வேதா படபடவென பொரிய, அதை கேட்டு “ஹாஹாஹா…” என்று சிரித்த ராவணின் சிரிப்பில் சுற்றியிருந்தவர்களே பயத்தில் எச்சிலை விழுங்கினர்.

சந்தீப்பிற்கோ ‘இவங்க சாவ தேடி போறது மட்டுமில்லாம நம்மளையும் துணைக்கு அழைக்கிறாங்க’ என்றுதான் இருந்தது. “தீ, மொதல்ல வாங்க. இதுல தலையிட்டா உங்களுக்குதான் ஆபத்து” என்று சொன்னவாறு அவன் வேதாவை காருக்கு இழுத்துச்செல்ல, “சந்தீப், விடுங்க என்னை” என்று கையை உறுவ முயற்சித்தவள், ராவணை முறைக்க மட்டும் தவறவில்லை.

காரின்  பின்சீட்டில் வேதா அமர்ந்ததுமே கொஞ்சமும் நேரத்தை தாமதிக்காது சந்தீப் அத்தனை பயபக்தியோடு வண்டியை வேகமெடுத்துச் செலுத்த, வேதாவையே ஒற்றை புருவத்தை உயர்த்தி இறுகிய முகமாக பார்த்திருந்தான் ராவண்.

காரில் அமர்ந்திருந்தவளுக்கோ ஆத்திரம் அடங்கவில்லை. ‘இத்தனை பேர் மத்தியில் கொஞ்சமும் பயமின்றி அவன் செய்ய, வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது சமூகம்’ என்று அவளுக்கு ஆதங்கம்! எதேர்ச்சையாக அவள் திரும்ப, தன் பக்கத்தில் மூச்சு பேச்சின்றி அமர்ந்திருந்த விக்ரமை அப்போதுதான் கவனித்தாள் வேதா.

“விக்கி… விக்ரம்…” அவள் அவனை உலுக்கவும் மயக்கத்திலிருந்து தெளிந்தவன் போல் ‘ஆங்…’ என்று மலங்க மலங்க விழித்தவன், “இப்போ நாம பார்த்தது மொத்தமும் கனவு தானே?” என்று கேட்டு எச்சிலை விழுங்க, இருபக்கமும் சலிப்பாக தலையாட்டிக் கொண்டவளுக்கு சந்தீப் சொன்ன “இங்க இதெல்லாம் சகஜம். நீங்க வந்த வேலை முடிஞ்சதும் இங்கயிருந்து கிளம்பிருங்க. இந்த ஊர் உங்களுக்கு பொருத்தமில்லை” என்ற வார்த்தைகளில் பல கேள்விகள் மனதில் எழுந்தன.

அடுத்த சிலநிமிடங்களில் அந்த பெரிய வீட்டின் முன் கார் நிற்க, வாசலில் ஆரத்தி தட்டுடன் நின்றிருந்த வேதாவின் அத்தை சீதாவும் அங்கு சுற்றியிருந்த பெண் வேலையாட்களும் காரிலிருந்து இறங்கிய வேதாவை பார்த்து அதிர்ந்துத்தான் போனர்.

ஆண்கள் அணியும் சட்டை, பேன்ட்டுடன் வேதா நிற்க, அவளை மேலிருந்து கீழ் பார்த்து சீதா முகத்தை சுழித்தார் என்றால், அவளுடன் உரசிக்கொண்டு வந்து நின்ற விக்ரமை பார்த்து, ‘என்ன பழக்கம் இது?’ என்றுதான் அவருக்கு இருந்தது.

ஆனால், வேதாவிற்கும் விக்ரமிற்கும் சுற்றியிருந்தவர்களை பார்க்க ஏதோ ஏலியன் உயிரினத்தை பார்ப்பது போல்தான் இருந்தது.

“ஆமா… ஏன் முகத்தை மூடியிருக்காங்க வேதா?” தன்னை கண்டதுமே சேலை முந்தானையால் முகத்தை மூடியிருந்த பெண்களை புரியாது பார்த்து விக்ரம் கேட்க, விக்ரமின் தோளை சுற்றி கைபோட்டு, “வூ க்னோஸ்? புது ட்ரென்ட் ஆ இருக்குமோ, என்னவோ?” என்றவாறு சீதாவின் முன் சென்று நின்றாள் வேதா.

ஏற்கனவே, அவருக்கு அவள் மேல் தன் மகனுடனான திருமணத்தை மறுத்த கோபம்! இதில் அவர் பிறந்து வளர்ந்த சூழலிற்கு சற்றும் பொருத்தமில்லாத வேதாவின்  நடை, உடை, அவள் விக்ரமுடன் உரசிக்கொண்டு நிற்பது என்பன அவருக்கு அருவருப்பை உண்டாக்க, முயன்று கோபத்தை அடக்கிக்கொண்டார் அவர்.

வேதாவிற்கு ஆரத்தி எடுத்து, அவள் நெற்றியில் குங்குமத்தை வைத்த சீதா, விக்ரமின் நெற்றிக்கு அருகில் கையை கொண்டு சென்று சட்டென்று இழுத்துக்கொள்ள, “ஆன்ட்டி, எனக்கும் வச்சி விடுங்க” என்று விக்ரம் சொல்லவும், மொழி புரியாது மலங்க மலங்க விழித்தார்.

முகத்தை மூடியிருந்த முந்தானையை பிடித்திருந்த தன் அத்தையின் கையில் தெரிந்த பதட்டத்தை புரியாது பார்த்த வேதா, தானே தட்டிலிருந்த குங்குமத்தை எடுத்து விக்ரமின் நெற்றியில் வைத்துவிட்டு, “ரிலாக்ஸ் அத்தை” என்று சொல்ல, அவரோ விறுவிறுவென உள்ளேயே ஓடிவிட்டார்.

சுற்றியிருந்தவர்களோ தங்களுக்குள்ளே பேசி கிசுகிசுத்துக்கொள்ள, இதையெல்லாம் சற்றும் கண்டுக்கொள்ளவில்லை இருவரும்.

வீட்டிற்குள் நுழைந்த வேதா, சோஃபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்த சுஜீப்பை, “இவர்தான் என் மாமா” என்று விக்ரமிடம் சொல்லி கிசுகிசுக்க, வேதாவை மேலிருந்து கீழ் பார்த்த சுஜீப்பிற்கும் முகத்தில் அதே அருவருப்புதான்.

“உன் அம்மா உனக்கு இதைதான் கத்து தந்தாளா? என்ன உடை இது? பார்க்கவே அருவருப்பா இருக்கு” சுஜீப் பற்களை கடித்துக்கொண்டு கடுகடுக்க, அவரை கூர்ந்து நோக்கியவாறு மார்புக்கு குறுக்கே கைகளை கட்டியவள், “உடல் வளைவு நெளிவுகளை காட்டுற சேலை ஒழுக்கம். இது அசிங்கமா?  இது உங்க கண்ணை உறுத்துதுன்னா தப்பு என் ட்ரெஸ்ல இல்லை. உங்க கண்ணுல இருக்கு, பார்க்குற பார்வையில இருக்கு”

அழுத்தமாக வந்த வேதாவின் வார்த்தைகளில், சுஜீப்பே ஒருநிமிடம் ஆடிப்போய் நிற்க, திகைத்துவிட்டனர் மொத்தப்பேரும்.

ஆண்கள் முன் முகத்தை காட்டுவது, ஆண்களை நிமிர்ந்து பார்த்து பேசுவதற்கே தயங்கும் சமூகத்தில் வாழும் இப்பெண்களுக்கு வேதாவின் நிமிர்ந்த நடை, பேச்சு அதிர்ச்சியைதான் கொடுத்தது. ஆனால், மாடியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒருவரின் இதழில் மட்டும் மெல்லிய சிரிப்பு.

“ஊருக்குள்ள வரும் போதே உனக்கு தேவையில்லாத பிரச்சினைக்குள்ள தலையிட்டிருக்க. இந்த ஊருக்குன்னு சில கட்டுப்பாடுகள் இருக்கு. இங்கயிருந்து போற வரைக்கும் அதுக்கேத்த மாதிரி இருக்க பழகு!” சுஜீப் அடக்கப்பட்ட கோபத்துடன் சொல்லி, பக்கத்திலிருந்த விக்ரமை புருவத்தைச் சுருக்கிப் பார்க்க, “ஃப்ரென்ட்” என்ற வேதாவின் பதிலில் அவருக்கோ கோபம் ஏகத்துக்கும் எகிறியது.

“கண்டகண்ட தெருநாய்கள தூக்கிட்டு வந்து சோறுபோட்டு வளர்த்தா இப்படிதான் வாய் நீளும்” வாய்விட்டு முணுமுணுத்தவாறு விறுவிறுவென்று அவளை கடந்து சுஜீப் வெளியேற, அந்த வார்த்தைகள் வேதாவின் காதில் தெளிவாகவே விழுந்தன. ஆனால், அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை அவள்.

“மாடியில உன்னோட அறை இருக்கு” சீதா சொன்னதுமே அறைக்கு ஓய்வெடுக்க செல்லப்போன விக்ரமின் சட்டைக்கோலரை இழுத்துக்கொண்டு வேதா மாடிக்கு ஓட, “அய்யோ! அந்த பையனுக்கு…” என்று பதறிய சீதாவிற்கு வேதாவை பார்த்ததிலிருந்து அவளின் நடவடிக்கைகளில் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சிதான்.

மாடியில் ஒரு அறையை கடந்து செல்லப்போனவளின் விழிகளில் சரியாக சிக்கினாள் அம்ரிதா.  வெள்ளைநிற சேலையில் ஜன்னல்வழியே வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த தன் மாமா மகளை பார்த்தவளுக்கு ஊரிலிருக்கும் போது நடந்த அசம்பாவிதத்தை சொல்லி வைஷாலி புலம்பியதுதான் நியாபகத்திற்கு வந்தது. கூடவே, அம்ரிதாவின் மேல் ஒரு பரிதாபமும்.

பதினெட்டு வயதில் திருமணம்.  ஒரேமாதத்தில் அம்ரிதாவின் கணவன் விபத்தில் இறந்திருக்க, ராசியில்லாதவள் என்ற பெயருடன் சேர்த்து அவளுக்கு காலம் முழுக்க வெள்ளைச்சேலை.

“நீதானே அம்ரிதா?” என்று கேட்டவாறு வேதா அறைக்குள் நுழைய, திடுக்கிட்டு திரும்பிய அம்ரிதா முதலில் வேதாவை புரியாது பார்த்து பின் அவளின் வருகையை பற்றி சீதா சொன்னதை நியாபகப்படுத்தி புன்னகைத்தாள் என்றால், சட்டென உள்ளே வந்த விக்ரமை பார்த்து அதிர்ந்தேவிட்டாள்.

பதறியபடி அவள் திரும்பி நின்றுக்கொள்ள, வந்ததிலிருந்து தான் பார்க்கும் ஒவ்வொரு பெண்களும் தன்னை பார்த்ததுமே நடந்துக்கொள்ளும் விசித்திரமான செய்கையில் கடுப்பாகிவிட்டான் விக்ரம்.

“இனாஃப்! என்னை பார்த்தா உங்களுக்கெல்லாம் எப்படி தெரியுது?பார்க்க அம்புட்டு கர்ணகொடூரமாவா இருக்கேன்? நோர்த் ஹிந்தியன் பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி செட்ல் ஆகலாம்னு பல கனவோட வாழுற ஒரு பையன ரொம்பதான் நோகடிக்கிறீங்க. திஸ் இஸ் டூ மச். டூ டூ மச்” விக்ரம் வராத கண்ணீரை துடைத்து மூக்கை உறிஞ்சியவாறு பேச, அம்ரிதாவோ மெல்ல திரும்பி அவன் கத்தலில் பெக்கபெக்கவென விழிக்க, சத்தமாகவே சிரித்துவிட்டாள் வேதா.

“எனக்கும் சுத்தமா புரியல. நானும் வந்ததுலயிருந்து பார்த்துக்கிட்டுதான் இருக்கேன். எல்லாரும் ஏன் முந்தானையால முகத்தை மூடிக்கிட்டு இருக்காங்க? அத்தை கூட. ஏன் நீயும் ஏதோ அசிங்கத்தை பார்த்த மாதிரி திரும்பி நின்னுக்கிட்ட. ஏதோ பையன் பார்க்க அப்படிதான் இருக்கான். அதுக்காக இப்படிதான் முகத்துக்கு நேரா நடந்துப்பீங்களா?” வேதா கடைசி வசனத்தை அடக்கப்பட்ட சிரிப்புடன் கேட்டு வாயைப்பொத்தி சிரிக்க, ‘கன்ஃபார்ம் நம்மளதான் ஹிந்தியில அசிங்கப்படுத்துறா’ தன் தோழி கூறியது புரியாவிடினும் அவளின் முகபாவனைகளை வைத்து கண்டுபிடித்து ஒற்றைபுருவத்தை உயர்த்தி முறைத்துப் பார்த்தான் விக்ரம்.

வேதாவின் வார்த்தைகளில் பதறிய அம்ரிதா, “தீ, அப்படி எல்லாம்… ” என்று பேச வர, “வந்ததுமே அத்தனை பேரையும் கலங்க வச்சிட்ட வேதஷ்வினி நரேந்திரன்” என்ற தமிழில் வந்த புதுக்குரலில் சட்டென திரும்பினாள் வேதா. அவள் கண்களில் ஆச்சரியம்!

“நீங்க பத்மாவதி பாட்டி, ரைட்? உங்களுக்கு தமிழ் தெரியுமா?” தன்னெதிரே நின்றிருந்தவரை பார்த்து வேதா ஆச்சரியக்குரலில் கேட்க, “நல்லாவே” என்று புன்னகையுடன் சொன்னார் பத்மாவதி. வேதாவின் பாட்டி.

“அப்பாடா! உங்களுக்காச்சும் தமிழ் தெரிஞ்சதே” விக்ரம் நிம்மதி பெருமூச்சுவிட்டுக்கொள்ள, “உங்களுக்கு எப்படி?” என்று நாடியை நீவிவிட்டவாறு வேதா கேட்டதில், “உன் வயசுல நான் இருக்கும் போது இந்த ஊருல தங்கியிருந்த ஒரு தமிழ்குடும்பத்துக்கிட்ட கத்துக்கிட்டேன். அப்போ கத்துக்கிட்டது இப்போ உன்கூட பேச ரொம்ப உதவியா இருக்கு” என்று வேதாவின் தலையை வருடியபடி சொன்னார் பத்மாவதி.

“இன்ட்ரஸ்டிங்” சிரிப்புடன் சொன்னபடி ஜன்னல்வழியே தோட்டத்தை பார்த்தவளின் புன்னகை, “ஊர் பிடிச்சிருக்கா?” என்ற பத்மாவதியின் கேள்வியில் மாயமாக, அவள் முகமோ இறுகித்தான் போனது.

“ஷீட்! அவன சும்மா விட்டுட்டே வந்திருக்க கூடாது விக்ரம். ஹவ் டேர் இஸ் ஹீ?” வேதாவின் கோபமான வார்த்தைகளை புரியாது பார்த்த பத்மாவதி, “என்னாச்சு?” என்று கேட்க, நடந்ததை வேதா சொல்லி முடித்ததும் அவருக்கோ பக்கென்றானது.

“வேதா, அந்த பையன் பெயரு…” பத்மாவதி ஒருவித பதட்டத்துடன் இழுக்க, “ஏதோ ரா… ஆங் ராவண் அது தான் அவனோட பெயர். சொல்லப்போன அவன் இந்த கலியுக ராவணேதான். அத்தனைபேர் முன்னாடி ஒருத்தனை வெட்டுறான். எவனும் ஒரு கேள்வி கேக்கல. பட், இந்த வேதா அதை விட மாட்டா” பேசிக்கொண்டே சென்றவள் இருவரின் முகபாவனைகளை கவனிக்கவில்லை.

ஆனால், பதட்டம் நிறைந்த இருவரின் முகங்களையும் புரியாது மாறி மாறி பார்த்துக்கொண்டுத்தான் இருந்தான் விக்ரம்.

“வேதா, நீ ஆழம் தெரியாம கால விட போறேன்னு நினைக்கிறேன்” விக்ரம் இருவரின் முகங்களையும் பார்த்தவாறே சொல்ல, அப்போதுதான் இருவரையும் கவனித்தாள் வேதா.

ஆரம்பத்தில் புரியாது விழித்த அம்ரிதா கூட வேதா சொன்ன பெயரில் சற்று அதிர்ச்சியாகி பதட்டமாக, வேதா இறுதியாக சொன்ன வார்த்தைகளில் அதிர்ந்துவிட்டார் அந்த பெரியவர்.

Leave a Reply

error: Content is protected !!