காதல்போர் 24
காதல்போர் 24
அடுத்த இரண்டுநாட்கள் எப்போதும் போல் இருவருக்குமிடையில் மோதலிலே நகர்ந்தன. வேதாவின் மேல் கோபத்தில் இருப்பவனுக்கு ஏனோ அவள் எது செய்தாலும் குற்றமாகவே தெரிய, அர்ச்சனைகளை வழங்கிக்கொண்டே ராவண் இருக்க, அதையெல்லாம் கண்டுக்கொள்ளாது அவனுடைய காதலை ஒப்புக்கொள்ள வைப்பதிலேயே குறியாக இருந்தாள் வேதா.
ஆனால், அவனின் காதலை வெளிக்கொண்டு வர அவள் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியே!
அன்றிரவு,
வேலை முடிந்து சற்று தாமதமாகவே வீட்டிற்கு வந்த ராவண், விடாத மழையில் தொப்பலாக நனைந்துப் போயிருந்தான். வந்ததுமே அவனுக்கு பிபி எகிறத் தொடங்கிவிட்டது.
கதவு திறந்திருக்க, வீட்டிலோ வேதா இல்லை. பையை சோஃபாவில் தூக்கிப் போட்டவன், “ஏய் மிர்ச்சி! மிர்ச்சி…” என்று சட்டை கையை தூக்கிவிட்டவாறு வீடு முழுக்க அவளை தேடி கத்திக்கொண்டு இருக்கும் போதே, சரியாக “டேய் அறிவுகெட்ட விக்கி, முதல்ல ஃபோன வைடா” என்று கத்திக்கொண்டே மழையில் நனைந்து உடலோடு ஒட்டிய ஆடையுடன் வீட்டிற்குள் நுழைந்தாள் வேதா.
மறுமுனையில் விக்ரமோ, “நாங்க வச்சிட்டா மட்டும் மேடம் அப்படி என்ன கிழிக்க போறீங்க? ராத்திரியெல்லாம் வெளியில தூங்குறதா உழவுத்துறறை தகவல் வந்திச்சு. மெய்யாலுமா?” என்று கேலியாக கேட்டுச் சிரிக்க, “அடிங்க…” என்று வேதா எகிறும் போதே மறுமுனையில் அழைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.
‘ச்சே! எவன் என்னை வேவு பார்க்குறான்னே தெரிய மாட்டேங்குது. எல்லாம் அந்த மினிஸ்டர் வேலையாதான் இருக்கும்’ வாய்விட்டே முணங்கியவாறு நிமிர்ந்தவள், நனைந்த ஆடையை கூட மாற்றாது, மார்புக்கு குறுக்கே கைகளை கட்டி ஒற்றை புருவத்தை தூக்கிய தோரணையில் நின்றிருந்த ராவணைப் புரியாது பார்த்தாள்.
‘என்ன வரும்போதே சேவேஜ் உக்கிரமா இருக்கான்? நிக்குற தோரணைய பார்த்தா அடிச்சிருவானோ?’ தனக்குத்தானே நினைத்து பதறி, கன்னத்தில் கை வைத்துக்கொள்ள, அவனுடைய பார்வையோ அவளை மேலிருந்து கீழ் அளவிட்டது. அவள் அணிந்திருந்த வெள்ளை ஷர்ட் மழையில் நனைந்து, உடலோடு ஒட்டி, அவள் அங்க வளைவுகளை வெளிச்சம் போட்டுக் காட்ட, பார்வை திருப்ப சிரமப்பட்டுத்தான் போனான் ராவண்.
வேகமாக சென்று துவாலையை எடுத்து வந்தவன், அதை அவள் முகத்தில் எறிந்து “சீக்கிரம் போய் ட்ரெஸ் சேன்ஜ் பண்ணு” என்றுவிட்டு, “மனுஷன ட்டிக்கர் பண்றதுலயே குறியா இருக்கா” என்று மெதுவாக வாயுக்குள் முணுமுணுத்தவாறு ஜன்னலருகே சென்று நின்றுக்கொள்ள, அவள் விட்டால் தானே!
“நீயும்தான் ரொம்ப நனைஞ்சி போயிருக்க, இரு வர்றேன்” என்றுவிட்டு சற்றும் அவன் உணர்வுகளின் பேயாட்டங்களை புரிந்துக்கொள்ளாது அவனருகே சென்றவள், அவனை தொடப் போக, “ஓ கோட்! என்னை விடுடி” அவளை உதறித்தள்ள முயற்சித்தான் அவன்.
அவன் கையை தட்டி விட்டவள், “ச்சே! சும்மா இரு! இப்படியே இருந்தா அப்றம் உடம்பு முடியாம போகும். அப்போ யாரு எனக்கு சமைச்சி தருவா?” என்று கேலியாக சொன்னவாறு அவன் தலையை துவட்ட ஆரம்பிக்க, ராவணுக்கு என்ன உணர்வென்றே தெரியவில்லை. அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் அவன்.
அவனுக்கு துவட்டிவிட்டவாறு, “நிஜமாவே நீ என்னை காதலிக்கலன்னு சொல்றதை என்னால ஏத்துக்கவே முடியல. அந்த பெயர் தெரியாத உணர்வு காமம்னு சொல்லுற. சொல்லப்போனா, மாஹி சொன்ன மாதிரி நிஜமாவே அன்பை வெளிக்காட்ட தெரியாம தடுமாறித்தான் போற சேவேஜ்” வேதா ஒருமாதிரிக் குரலில் சொல்ல, ராவணோ விழிகளை சுருக்கி அவளை கேள்வியாக நோக்கினான்.
அவளுக்கும் ஊரிலிருந்து வரும் போது மாஹி தன்னுடன் பேசிய வார்த்தைகள்தான் நியாபகத்திற்கு வந்தன.
“தீ, உள்ள வரலாமா?” தயக்கமாக கேட்டவாறு தனதறைக்குள் நுழைந்த மாஹியை உடைகளை அடுக்கியவாறு வேதா கேள்வியாக நோக்க, “அது… அது வந்து நீங்களும் பையாவும் காதலிக்கிறீங்களா?” சட்டென்று மாஹி கேட்டதில் முதலில் அதிர்ந்து பின் குறும்பாக சிரித்தாள் அவள்.
“நான் காதலிக்கிறேன். ஆனா, உன் பையா என்ன நினைக்கிறான்னு அவனுக்கு மட்டும்தான் தெரியும். சரியான அழுத்தக்காரன்” வேதா கடைசி வார்த்தைகளை சற்று கடுப்பாகவே சொல்ல, அவள் காதலிப்பதாக சொன்னதிலேயே மாஹிக்கு அத்தனை சந்தோஷம்!
ராவணை நோக்கிய வேதாவின் பார்வையை வைத்து அவள் மனதை இனங்கண்டுக்கொண்டது நரேந்திரன் மட்டுமல்ல மாஹியும்தான்.
“நிஜமாவா தீ? ச்சீ ச்சீ… இல்லை அன்னி…” மாஹி சொல்லி கிளுக்கி சிரிக்க, வேதாவுக்கே அந்த புது உறவு முறை அழைப்பில் வெட்கம் வந்துவிட்டது.
“தேங்க்ஸ் மாஹி” வேதா மெல்லிய சிரிப்புடன் சொல்ல, “நான்தான் அன்னி உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும். பையா கோபக்காரர் ஆனா, ரொம்ப நல்லவரு அப்படின்னு எல்லாம் நான் பொய் சொல்ல மாட்டேன். அவருக்கு பாசத்தை வெளிப்படையா காட்ட தெரியாது தீ. கண்டிப்பா மனசுல எதுவும் இல்லாம உங்களுக்கு பாதுகாப்பா இருந்திருக்க மாட்டாரு. அதை அவர் வாய் வார்த்தையால சொல்ல வைக்கிறது உங்க சாமர்த்தியம்” என்ற மாஹியின் வார்த்தைகளை நினைத்துப் பார்த்து குறும்புச் சிரிப்பு சிரித்தாள் வேதா.
அவனோ அவள் விழிகளை பார்க்க முடியாது முகத்தைத் திருப்பி விறைப்பாக நின்றிருக்க, கிட்டதட்ட அவனிதழோடு இதழை உரசும் தூரத்திற்கு நெருங்கி நின்றவாறு, “ஊருல உன்னை ரொம்ப படுத்தினதுக்கு இப்போ காதலை ஒத்துக்காம என்னை பழிவாங்குறியாடா?” ஹஸ்கி குரலில் வேதா கேட்கவும், சட்டென திரும்பி அவள் விழிகளை நேருக்கு நேர் பார்த்தவனிடம் அப்போதும் பதிலில்லை.
அவனை ஆழ்ந்துப் பார்த்தவளுக்கு அவன் பதில் பேசாதது மேலும் கோபத்தை உண்டாக்க, ‘ச்சே!’ என்று சலித்தவாறு விலகப் போனவளின் கரத்தை போக விடாது பிடித்திழுத்திழுத்தான் ராவண். வேதாவோ அதிர்ந்து விழிக்க, அதற்குள் அவள் சட்டையினூடே கையை நுழைத்து வெற்றிடையை தன்னிரு வலிய கரங்களால் வளைத்துப் பிடித்தவாறு அவள் நெற்றியோடு நெற்றி முட்டி ராவண் அப்படியே நிற்க, சிலையாக சமைந்தாள் அவள்.
சரியாக அதேநேரம், மெல்லிய தென்றல் இருவரின் தேகத்தை ஜன்னலினூடே உரசிச் செல்ல, ஏற்கனவே மழைநீரில் நனைந்திருந்த தேகம் தென்றலின் சாகசத்தால் சிலிர்த்துக் கூசிப் போன. ஹார்மோன்கள் தாறுமாறாக சுரக்க, உணர்ச்சியின் பிடியில் அவளிடையை அவன் பிடித்திருந்த உடும்புப் பிடியில் அவளுக்கே வலிக்க ஆரம்பித்துவிட்டது.
அவனின் விழிகளை பார்த்தவளுக்கு தன் தேகத்தில் அவன் பார்வை செல்லும் திசைகளை பார்த்ததுமே சற்று பதட்டம் சூடிக்கொண்டது. “இது தப்புன்னு…” திக்கித்திணறி கேட்டவாறு அவனை விட்டு அவள் விலக முயற்சிக்க, அந்த முரட்டு ஆண்மகன் அவளை விட்டால்தானே!
அவனின் பிடியில் அவள் காதல் கொண்ட மனம் அதற்குமேல் அவனை விட்டு விலக முயற்சிக்கவில்லை. மேலும் மேலும் தனக்குள் புதைத்திட வேண்டுமென்று அவன் அணைத்த இறுகிய அணைப்பில் அவளுக்கு உடல் சிலிர்த்து அடங்கியது. அடுத்தநொடி அவளிதழை அவன் தன்னிதழால் சிறைப்பிடித்திருக்க, அவனின் வேகத்திற்கு ஈடுகொடுக்கவே திணறிவிட்டாள் அவள்.
பிடிமானமின்றி நின்றவளின் கரங்கள் தானாக எழுந்து அவனின் சட்டைக்கோலரையும் அவனின் பின்னந்தலை முடியையும் இறுக பற்றிக்கொள்ள, அதுவே அவனுக்கு தூண்டுதலாக அமைய, மூச்சுக்காக கூட விடாது அவளிதழ் தேனை அருந்தினான் ராவண். விழிகளை இறுக மூடி நின்ற வேதா, கிட்டதட்ட அவன் மேலேயே சரிந்திருந்தாள்.
இதழை விடாது சுவைத்துக்கொண்டே அவளை தன் கைகளில் ஏந்தியவன், நேராக சென்றது தன் படுக்கையறைக்குதான். அவளை மஞ்சத்தில் சரித்து அவள் மேல் படர்ந்தவன், மெல்ல அவளிதழிலிருந்து தன்னிதழை பிரித்து அவள் விழிகளை நோக்க, அவளும் மூச்சு வாங்கியவாறு அவனையேதான் பார்த்திருந்தாள்.
விழிகளாலே அவன் சம்மதத்தை எதிர்ப்பார்க்க, அதைப் புரிந்துக்கொண்டவளுக்கு ஒருபக்கம் திருமணத்திற்கு முன் இது தவறு என மூளை எச்சரித்தாலும் காதல் மனம் தன்னவனின் நெருக்கத்தில் உருகித்தான் போனது. ஏனோ அவனை காக்க வைக்கவும் அவளுக்கு மனமில்லை. விழிகளை அவள் மூடிக்கொண்டதிலேயே அவளின் சம்மதம் அவனுக்கு அப்பட்டமாகத் தெரிய, புன்னகைத்தவன், அவள் கழுத்து வளைவில் முகத்தை புதைத்துக்கொண்டான்.
இருவருக்குமிடையில் காற்று கூட புக முடியாத அளவிற்கு நெருக்கம். முதலில் ஒரு வேகத்துடன் ஆரம்பித்தாலும், நேரம் செல்லச் செல்ல அவளை அவன் கையாண்ட மென்மையில் அவளே வியந்துத்தான் போனாள். கூடவே, உணர்ச்சியின் பிடியில் தன்னவளிடத்தில் உண்டாகும் வேகத்தில் அவனும் திணறித்தான் போனான்.
ஊரிலிருக்கும் போதும் சரி, அவன் வேலைப் பார்த்த இடங்களிலும் சரி எந்த பெண்ணையும் ஏறெடுத்துப் பார்க்காத ராமன் இந்த ராவண். அவனின் ஆளுமையிலும் கம்பீரத்திலும் பல பெண்கள் அவனை நெருங்க முயற்சித்திருக்கின்றனர். ஆனால், ஒற்றைப் பார்வையில் அனைவரையும் தள்ளி நிறுத்தியவனுக்கு, வேதாவின் அருகாமையில் மட்டும் உணர்வுகளை கட்டுப்பத்தவே முடியவில்லை. முழுமையாக அவளிடம் சரணடைந்துவிட்டான் ராவண்.
அவனின் மீசை முடி குறுகுறுப்பில் அவள் நெளிய, அதில் உண்டாகும் ஆர்வத்தில் அவளை மீண்டும் மீண்டும் அவன் ஆட்கொள்ள, அவன் கைகளில் வெட்கத்தால் நெளிந்து குழைபவளை விடுவதற்கு எண்ணமேயில்லை அவனுக்கு. விடாத முத்தப் பரிமாற்றங்கள், சில முணங்கல்கள், சிணுங்கல்கள், கொஞ்சம் வலி, சுகம் என விடியும் வரை அவளை ஒருவழிப்படுத்திவிட்டே விலகிப் படுத்தான் ராவண்.
மூச்சுவாங்கியவாறு பக்கவாட்டாகத் திரும்பி வேதா அவனைப் பார்க்க, மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க தான் பார்த்த பார்வையில் கன்னங்கள் சிவந்து வெட்கப்பட்டவளை பார்த்த ராவணுக்கு மேலும் போதை ஏறத்தான் செய்தது. அவன் பார்வையில் வெட்கி அவன் மார்பில் சாய்ந்து அவனை அணைத்தவாறு வேதா தூங்கிப் போக, தன்னுள் அவளை புதைத்தவாறு விழிகளை மூடிக்கொண்டான் அவன்.
மதியம் தாண்டியே வேதாவுக்கு முழிப்புத் தட்ட, விழிகளை கசக்கியவாறு எழுந்தமர்ந்தவளுக்கு தன்னைப் பார்த்ததுமே நேற்றிரவு நடந்த அனைத்தும் நியாபகத்திற்கு வந்தது. வெட்கப்பட்டுச் சிரித்துக்கொண்டவள் குளியலறைக்குள் புகுந்து கண்ணாடியில் தன்னை பார்க்க, இருவருக்குமிடையே நடந்த உறவின் விளைவாக அவள் தேகத்தில் ஏகப்பட்ட தடையங்கள். ஏனோ முதல்தடவை அவளுக்கே அவள் கொள்ளை அழகாகத்தான் தெரிந்தாள்.
ஆனால், இந்த சந்தோஷமும் சிரிப்பும் சற்று நேரம்தான் என்பதை அவள் அப்போது உணர்ந்திருக்கவில்லை.
குளித்து உடை மாற்றி ஹோலுக்கு வந்தவளின் கண்களில் சரியாக சிக்கியது ஜன்னலருகே நின்று, இறுகிய முகமாக ராவண் புகைப்பிடித்தவாறு நிற்கும் காட்சிதான்.
வேகமாக அவனருகில் சென்ற வேதா, அவன் கையிலிருந்த சிகரெட்டை பறித்தெடுத்து வெளியில் எறிந்துவிட்டு தன்னவனை அணைத்துக்கொள்ள, “ச்சே! ஏன்டி சிகரெட்டை வீசின?” சலித்தவாறு கடுப்பாக கேட்டவன், பதிலுக்கு அவளை அணைக்கவில்லை.
“எப்போ பாரு கால்ல சுடுதண்ணிய ஊத்தின மாதிரிதான் பிஹேவ் பண்ணுவியா? எனக்கு பிடிக்கல. அதுவும், இதையே நீ தொடர்ந்துக்கிட்டு இருந்த அப்றம் சீக்கிரமா பரலோகத்துக்கு போய் சேர வேண்டியதுதான். நானும் நீயும் ரொம்பநாள் வாழ வேண்டாமா?” வேதா அவன் வெற்று மார்பில் முத்தமிட்டு காதலோடுக் கேட்க, அவனிடமோ எந்த பதிலும் இல்லை. அவனின் முகத்தை அவளும் கவனிக்கவில்லை.
மார்பில் நாடியை குற்றி அவனை நிமிர்ந்துப் பார்த்தவள், “சீக்கிரம் அப்பாக்கிட்ட நம்ம கல்யாணத்தை பத்தி சொல்றேன். மினிஸ்டரோட மருமகன்னா சும்மாவா?” அத்தனை உற்சாகத்தோடு சொல்ல, “வாட், கல்யாணமா?” அதிர்ந்த குரலில் கத்தினான் அவன்.
“நீ இன்னும் இந்த உளறலை விடல்லையா? எப்போ பாரு காதல் கல்யாணம்னு… லுக், எனக்கு அதுலயெல்லாம் சுத்தமா நம்பிக்கையில்லை. இன்ட்ரெஸ்டும் கிடையாது. சும்மா உளறிக்கிட்டு இருக்காத!” ராவண் கடுகடுவென பொரிய, அதிர்ந்து அவனை நோக்கியவள், “என்ன பேசுற நீ? கல்யாணம் பண்ணாம எப்படி சேர்ந்து இருக்க முடியும்? நீ விளை..விளையாடாத ராவண்” என்றாள் திக்கித்திணறி.
“ஓ கோட் மிர்ச்சி! உனக்கென்ன பைத்தியமா? எத்தனை தடவை சொல்றேன். அறிவில்லையா உனக்கு?” அவன் திட்ட, “எனக்கு எதுவும் புரியல. நான் உன்கிட்ட காதல உணர்ந்திருக்கேன். அப்போவும் இல்லைன்னு சொல்ற. ஜஸ்ட் ஸ்டாப் தட்! அப்போ நேத்து நமக்குள்ள நடந்தது…” அதற்குமேல் பேச முடியாது வேதா நிறுத்த, பார்வையை வேறுபுறம் திருப்பிக்கொண்டான் ராவண்.
“அது உன்மேல எனக்கிருக்குற வெறும் ஈர்ப்புதான். கண்டிப்பா காதல் கிடையாது. நான் உன்னை காதலிக்கிறேன்னு எப்போவாச்சும் சொன்னேனா என்ன? நீ அமைதியா இருந்த, சோ நானும்…” அலட்சியமாக வந்த அவனின் வார்த்தைகளில் அவளுக்கு விழிகள் கலங்கிவிட, ஒருவித பயத்துடன் அவன் ஷர்ட்டை இறுகப் பற்றிக்கொண்டாள் வேதா.
“இல்லை, நீ பொய் சொல்ற. நான் உன்கிட்ட காதல ஃபீல் பண்றேன்டா. ப்ளீஸ், என்னை கொல்லாத! இட்ஸ் ஹர்ட்டிங்” வேதாவின் வார்த்தைகள் திக்கித்திணறி வர, “ஷட் அப் யூ ப்ளடி…” என்று கத்தி அவளைப் பிடித்து உதறிவிட்டவன், “எத்தனை தடவைடி சொல்றது? எதுக்கு பைத்தியக்காரத்தனமா உளறிக்கிட்டு என் பின்னாடி திரியுற? அதான் சொல்றேன்ல, ச்சே! மனுஷனை பலவீனப்படுத்துற அந்த காதல் எனக்கு வேணாம். இங்கயிருந்து முதல்ல கிளம்பு! வெறுப்பா இருக்கு” என்று கத்திவிட்டான்.
அவனுடைய வார்த்தைகளில் நொறுங்கிப் போனது என்னவோ வேதாதான்.
“அப்போ உனக்கு இந்த காதல், கல்யாணம் எதுவும் வேணாம்தானே? என் காதல் கூட உனக்கு புரியலல்ல? சரி அதை விடு! நேத்து என் கூட இருந்தல்ல, அது வெறும் காமத்தாம மட்டும்தானா? என்னோட இடத்துல வேற எந்த பொண்ணு இருந்திருந்தாலும் இப்படிதான் நடந்துருப்பியா?” நூலிடைவெளி அளவில் ராவணை நெருங்கி தழுதழுத்த குரலில் விழிநீர் ததும்ப அவள் கேட்க, சட்டென்று வந்தன அவனுடைய வார்த்தைகள்.
வேறு எங்கோ பார்வையை பதித்து, “ஆமா, இதே இடத்துல வேற எந்த பொண்ணு இருந்திருந்தாலும், இப்படிதான் நடந்திருப்பேன். வெறும் காமம் மட்டும்தான்” இறுகிய குரலில் அழுத்தமாக ராவண் சொல்ல, வேதாவுக்கோ உயிருடன் மரித்த உணர்வு!
தீச்சுட்டாற் போன்று அவனை விட்டு விலகி நின்றுக்கொண்டவள், தன்னையும் மீறி வழியும் கண்ணீரை கட்டுப்படுத்த நினைக்க, அதுவோ நின்றபாடில்லை. ராவணோ அவளையேதான் பார்த்திருந்தான். ஆனால், உணர்ச்சிகள் துடைக்கப்பட்ட முகத்துடன்.
“ச்சே! இந்த காதல் கன்றாவி பக்கவே போகாம நான் பாட்டுக்கு சிவனேன்னு இருந்தேன். போயும் போயும் இவன் மேல வந்து தொலைஞ்சி, இந்த வலிய கூட தாங்க முடியல. காதல் இவ்வளவு வலிய கொடுக்கும்னு தெரியல. வலிக்குதுடா” என்றவாறு இடதுபக்க நெஞ்சை தடவி விட்டுக்கொண்டவள், “இது என்னோட இயல்பே கிடையாது. இது வேதா கிடையாது. எனக்கே என்னை பிடிக்கல. இந்த ஃபீலிங் எனக்கு பிடிக்கல. போதும். எல்லாம் போதும். ஐ அம் டன்” என்றுவிட்டு நிமிர்ந்து நின்று விழிநீரை அழுந்து துடைத்தெறிந்தாள்.
சிவந்து விழிகளுடன் அவனை ஒரு பார்வைப் பார்த்த வேதா, அதற்குமேல் அங்கு நிற்க விரும்பாது விறுவிறுவென அறைக்குள் புகுந்து உடைப்பெட்டிகளை எடுத்துக்கொண்டு வெளியேற வாசலை நோக்கிச் சென்றாள். ஆனால், காதல் மனம் தடுக்க, ஒருதரம் தன்னவனை திரும்பிப் பார்த்தவளுக்கு வெறுத்துப்போய் விட்டது.
அவன் கொஞ்சமும் அவளை கண்டுக்கொள்ளவில்லை. அவனின் முகத்தில் வெறும் அலட்சியம் மட்டுமே நிறைந்திருந்தது. அவள் மனதை கொஞ்சமும் புரிந்துக்கொள்ளாது அவன் பாட்டிற்கு சிகரெட்டை பற்ற வைத்து புகைப்பிடிக்க ஆரம்பிக்க, வேதாவால் சற்றும் ஜீரணிக்க முடியவில்லை.
‘இவனெல்லாம் மனுஷன் தானா?’ என்ற கேள்வி அவளுக்.குள் எழ, வாய்விட்டே “சேவேஜ்” என்று முணுமுணுத்தவள், அவனை நோக்கி வேகமாக வந்து, “நமக்குள்ள காதல் இல்லை. வெறும் காமம்தான். சோ, ஃப்ரீயா எதையும் எனக்கு எடுத்து பழக்கமில்லை. நேத்து நடந்ததுக்கு…” என்றவாறு பாக்கெட்டிலிருந்த பணத்தை எடுத்து அவன் முகத்தில் விட்டெறிய, அதிர்ந்துவிட்டான் ராவண்.
அடுத்தநொடி அவனுக்கோ ஆத்திரம் பெருக, நரம்புகள் புடைத்து பற்களை கடித்தவாறு அவன் அவளை நோக்க, அவனை வலி நிறைந்த ஒரு பார்வைப் பார்த்தவள், அங்கிருந்து வேகமாக வெளியேறியிருந்தாள்.
இரவோடு இரவாக வீடு வந்த சேர்ந்தவளை பார்த்த வம்சிக்கும் மாஹிக்கும் ஒன்றுமே புரியவில்லை.
‘என்னாச்சு? இவ மட்டும் வந்திருக்கா. அப்போ பையா எங்க? ஒருவேள, ஏதாச்சும் பிரச்சினையா?’ யாருடைய அழைப்புக்களையும் கண்டுக்கொள்ளாது அறைக்குச் சென்றவளைப் பார்த்து தனக்குள்ளேயே யோசித்துக்கொண்டிருந்தான் வம்சி.
கூடவே, அவளின் காதலைப் பற்றி அறிந்திருந்த நரேந்திரனும்தான்.