பிருந்தாவனத்தின் மணம் 2

eiIVUXD60677-40868341

பிருந்தாவனத்தின் மணம் 2

 

பிருந்தாவனத்தின் மணம் – 2

 

வெறுமையாக இருந்த வாழ்க்கையை

வளமையாக மாற்றியது 

உன் காதல்!

நிம்மதியாக வாழ்ந்த வாழ்க்கையை

நரகமாய் மாற்றியது

என் காதல்!

நம்மிருவரின் அன்றாட நிலையை எண்ணி

வருந்திக் கொண்டிருக்கிறது

நம் காதல்!

 

 

அப்போது விஹானின் எண்ணுக்கு ஓர் அழைப்பு வர… அவனின் முகத்தில் இருந்த இறுக்கம் மறைந்து சற்றே இலகுவாக மாறியது.

 

அந்த அழைப்பை ஏற்க… அவனுக்கு ஓயாமல் கேட்டது என்னவோ, “ப்பா… ப்பா…. ப்பா…” என்று தான்.

 

“பாப்பு… தேனுமா… என்ன பண்றீங்கமா…” என்று சொன்னவனின் முகம் முழுமையான புன்னகையை தழுவி இருந்தது.

 

அதற்குள், “சார் பாப்பா நீங்க இல்லாம ரொம்ப அழறா…” என்று குழந்தை பார்த்துக் கொள்ளும் ஷாலினி சொல்ல…

 

“வாட்? ஏன் எனக்கு முன்னமே ஃபோன் பண்ணல…” என்று சீற்றத்துடன் கேட்டான் அவன்.

 

“இல்ல சார்… ஃபோன் ரீச் ஆகல…” என்றாள் பயத்துடன்.

 

“டேமிட்! அவளுக்கு ஏதாவது கொடுத்தீங்களா சாப்பிட?”

 

“கொடுத்தேன் சார்… ஆனா…”

 

“ஆனா….”

 

“பாப்பா அழுது அழுது வாமிட் பண்ணிட்டா சார்… உங்க ஃபோட்டோ பார்த்து அப்பா அப்பான்னு அழுதுட்டு இருக்கா… விளையாட்டு காட்டினாலும் சமாதானம் ஆக மாட்றா…” என்று மறுமுனையில் சொல்லும் போதே அவன் காரில் பயணித்துக் கொண்டிருந்தான்.

 

“புல்ஷிட்… இப்படி சொல்லவா உங்களுக்கு சம்பளம் குடுத்து என் பொண்ணை பார்த்துக்க சொன்னேன்…” என்று கத்திவிட்டு… மறுகணமே, “விடியோ கால் அக்செப்ட் பண்ணுங்க…” என்று கோபத்தை அடங்கிய குரலில் சொல்ல… அந்த பெண்ணும் சொன்னதை செய்து குழந்தையிடம் காண்பித்தாள்.

 

அவனது குழந்தை திரையில் கண்டதும் முகம் மென்மையாகி சிரிப்புடன் பார்த்தான்.

 

“தேனுமா…” என்று இவன் அழைக்க…

 

குழந்தையோ தந்தையிடம் கண்டதும் அழுகையுடன் சிரித்து திரையை தொட்டு தொட்டு பார்த்து வராமல் போனதால் இன்னும் அழுகை.

 

“பாப்பு அப்பா வரேன்… பாப்பா அழவே கூடாது… வந்ததும் நான் மம்மு ஊட்டுவேனாம்… தேனுமா அழகா சாப்பிடுவீங்களா… தேனுமா என்னோட தங்கப்பிள்ள தானே… அப்பா இதோ வந்துரேன்… எனக்கு சிரிச்சி காமிங்க…” என்று விஹான் பேச பேச அவனுடைய எட்டு மாதங்கள் நிறைவடைந்த செல்ல மகள் தேனிசை அழுகையை நிறுத்தி சிரிக்க ஆரம்பித்தாள்.

 

அதே சமயம்… ப்பா ப்பா என்று கூப்பிடவும் தவறவில்லை குழந்தை.

 

விஹானோ வீடியோ காலை வீடு வந்தும் கூட அணைக்காமலே வைத்திருந்தான். 

 

தேனின் அறை வாசலுக்கு வந்து பின்னரே அதனை துண்டிக்க… அதற்குள் பாப்பா உதட்டை பிதுங்க துவங்க… விரைந்து சென்று அள்ளி அணைத்து கொண்டான் தன் உதிரத்தை!

 

தந்தையின் ஸ்பரிசத்தில் அவளும் கழுத்தோடும் அணைத்துக் கொண்டாள். 

 

“என் பாப்பு அப்பா இல்லாம அழுதீங்களா? நான் உங்க கிட்ட என்ன சொல்லி இருக்கேன்!” என்று இவன் கேட்க…

 

தேனுக்கு புரிந்ததோ புரியவில்லயோ ஆனால் தந்தையை பார்த்து மட்டும் இருக்கும் இரண்டே பற்கள் தெரியும்படி சிரித்தாள். அதிலேயே அவனை கரைத்து விட்டாள் கள்ளி.

 

பின்னர்… விஹானோ, “கஞ்சி கொண்டு வா!” என்று ஷாலினியிடம் கட்டளையாக சொல்ல… அவளும் தன்னிச்சையாக தலையசைத்து விட்டு வெளியேறினாள்.

 

அதன் பிறகென்ன தந்தையும் மகளும் அவர்களுக்கான உலகில் சஞ்சரித்துத் கொண்டு இருந்தனர்.

 

ஷாலினியும் குழந்தைக்கு சத்துமாவு கஞ்சி எடுத்து வர… விஹானே அவளுக்கு விளையாட்டு காட்டியபடி ஊட்டி முடித்தான். அந்த அழகு செல்லமும் அடம் பிடிக்காமல் வாங்கிக் கொண்டு… அவன் தோள் மீதே தூங்கி விட… மகளை அலுங்காமல் குலுங்காமல் மெத்தையில் படுக்க வைத்துவிட்டு… அவளையே சில நிமிடங்கள் கண் மூடாமல் பார்த்தபின் வெளியே போனான் விஹான் ப்ரசாத். 

 

தன் உதிரத்தை கையில் வைத்திருக்கும் வரையில் உறைந்திருக்கும் புன்னகை… அவள் கைவளைவில் இருந்து அகன்ற பின்னர் புன்னகையும் கலைந்து இறுகி போய்விடும்.

 

அவன் மகள் தேனிசை மூலமே அவனுக்கு புன்னகை எனும் வரம் கிடைக்கிறது. அவளே அவன் ஜீவன். அவனின் உறையும் சிரிப்புக்கும் மகிழ்ச்சிக்கும் காரணமாவள். அவனுடைய வாழ்வை மீட்டு தந்த தேவதைவள்.

 

அவன் அறைக்குள் சென்று கட்டிலில் அமர்ந்து கொண்டு… விட்டத்தை வெறித்தபடி இருந்தான் விஹான்.

 

அவனின் கடந்த கால நினைவுகள் எல்லாம் கேட்பாரற்று, தடுக்க யாருமின்றி உள்ளுக்குள் பேரலையாக சுழன்று கொண்டிருந்தது. 

 

இரண்டு வருடங்களுக்கு முன்பு…….

 

விஹான் ப்ரசாத் அவனுடைய மருத்துவமனைக்கு முழுமையாக பொறுப்பேற்ற டீன் (Dean) ஆன சமயம் அது… 

 

அதற்கு முன்பெல்லாம் அந்த மருத்துவமனையில் வெறும் மருத்துவனாக மட்டுமே இருந்தான்… தலைமை பொறுப்பு மொத்தமும் பூங்குழலியிடம் தான் இருந்தது. அவருக்கும் வயது ஏற ஏற உடல்

உபாதைகள் வந்து சீராக பார்த்துக் கொள்ள முடியாத நிலையில் தான் பொறுப்பு இவன் கைகளுக்கு மாற்றப்பட்டது. 

 

அதுவரையில் எந்த ஒரு முடிவிலும் பங்கேற்காமல் ஒதுங்கியே இருந்த விஹான் தாயின் உடல்நிலையை கருத்தில் கொண்டு மருத்துவமனையை தனதாக்கிக் கொண்டு சீராய் வழிநடத்திக் வந்தான்.

 

என்னதான் இப்போது பொறுப்பு கூடி விட்டாலும் ஞாயிற்றுக்கிழமை மாத்திரம் அவனுடைய தினம்… அன்று மட்டும் அவனென்ன நினைக்கிறானோ அதை மட்டுமே செய்யும் பிடிவாதக்காரன். 

 

அன்றும் ஞாயிற்றுக் கிழமையாக இருக்க… தனது நண்பர்களை பார்க்க அவனுக்கு மிகவும் பிடித்த யமஹா YZF – R15 பைக்கில் பறந்தான்.

 

அவனுடைய பழக்க வழக்கங்கள் சிலவற்றை மட்டும் மாற்றிக்கொள்ள என்றும் விருப்பமில்லை. அவன் வைத்தது தான் சட்டம் என்று நினைப்பவன். பெண்களின் விஷயத்தில் அப்படியே அந்த மாயகண்ணன் தான்! காதலிலோ திருமணத்திலோ நாட்டம் இருந்ததில்லை. ஆனால் பெண்களின் மேலோ நாட்டம் அதிகம். ஆனால் அதிலும் விருப்பமில்லாத பெண்களை நிமிர்ந்து கூட பார்க்காத நல்லவனும் இவன். அவர்களின் சம்மதம் இருந்தாலோ லீலைகளின் மன்னவனும் இவனே.

 

சென்னையில் போக்குவரத்து நெரிசலில் முட்டி மோதி… அவன் நண்பர்கள் ஒன்றாய் குழுமியிருந்த… ஆட்கள் யாரும் இல்லாத சாலையோரத்தில் சென்று வண்டியை நிறுத்தினான். அங்கே ஒரு வேப்பமரம் இருக்க அதன் கீழே தான் பைக்கில் அமர்ந்தபடி கதைத்துக் கொண்டிருந்தனர்.

 

அவர்கள் பைக்கில் பறந்து வெட்டியாக ஊர் சுற்றுவது எல்லாம் செய்தார்கள் தான்… ஆனால், அரட்டை அடிக்க எப்போதுமே இந்த இடத்தை தான் தேர்ந்தெடுப்பார்கள்.  

 

“டேய் வாடா விஹா!” என்றனர் அவனது மூன்று நண்பர்கள். அதன் பிறகு அவர்கள் அனைவரும் சுவாரஸ்யமான விஷயங்களை பற்றி பேசிக் கொண்டு இருக்க… நேரம் போனதே தெரியவில்லை.

 

கடைசியாக அவர்களின் பேச்சு வந்து நின்றது என்னவோ விஹானிடமே!

 

“விஹா… நீ ஏன் ஒரு பொண்ணை லவ் பண்ண கூடாது… உன் அழகுக்கும் பணத்துக்கும்… உனக்காக எத்தனை பொண்ணுங்க லைன்ல நின்னுட்டு இருக்காங்க… நீ ஏன் லவ்வே பண்ண மாட்டுங்குற…” என்று அவனை உசுப்பி விட்டான் விஹானின் நண்பர்களில் ஒருவனான நிதீஷ்.

 

‘இப்ப நீ அவன் கிட்ட வாங்கி கட்ட போற பாரு…’ என்று கேள்வி கேட்டவனின் காதில் சிசுசிசுத்தான் பவன்.

 

‘ஒருவேளை அடிச்சிடுவானோ…’ என்று எண்ணிய படி பயத்துடனே பார்த்துக் கொண்டு இருந்தான் நிதிஷ்.

 

‘இவனுங்களுக்கு இதெல்லாம் தேவையா… அடுத்தவனுங்க வாழ்க்கையில புகுந்து கும்மி அடிப்பதே இவனுங்களுக்கு வேலையா போச்சு… ஒருத்தன் கிட்ட எது இல்லையே அத பத்தி தான் பேசி எரிச்சல் மூட்டிட்டு இருப்பாங்க… அய்யோ நம்ம விஹா வேற எந்த மூடில் இருக்கான்னு தெரியலையே…’ என்று தனக்குள் நினைத்து கொண்டு இருந்தான் விஹானின் உயிர்த்தோழன் சர்வேஷ்.

 

“எனக்கு லவ் பிடிக்கல…” என்று கூலாக சொல்லி தோளை குலுக்கினான் விஹான் பிரசாத்.

 

நிதீஷோ… வாயை வைத்து கொண்டு சும்மா இல்லாமல்… “லவ் பிடிக்காது ஆனா பொண்ணுங்க மட்டும் பிடிக்குமா…” என்று முழுமையாக கேட்ட பிறகே வாயை பொத்தினான்.

 

விஹானோ அவனை அனலாய் முறைத்து பார்க்க… பவனோ அவனுடைய பைக்கை ஏற்கனவே ஸ்டார்ட் செய்து வைத்திருந்தான்.

 

“டேய் பவன் எனக்கும் ஒரு வேலை இருக்கு…” என்று கத்தி வண்டியில் ஏறிக் கொள்ள உயிர் பயத்துடன் இருவரும் அங்கிருந்து புறப்பட்டனர்.

 

அவர்கள் இருவரும் சென்றதும்… விஹான் சர்வாவை பார்க்க… அவனோ அவனை முறைத்து கொண்டு இருந்தான்.

 

“நானும் அதே தான் கேட்க போறேன் விஹா… காதல் வேணாம்… கல்யாணம் வேணாம்… பட் பொண்ணுங்க கூட மட்டும்… ச்சேய் என்ன டா இது… கேள்வி கேட்டா முறைச்சி வச்சி எனக்கு அதெல்லாம் பிடிக்கல னு சொல்வ… என்ன தான் விஹா நினைச்சிட்டு இருக்க… ஆன்டி ரொம்ப பாவம் டா… உன்னை நினைச்சி நினைச்சி ஆன்டி அப்படி இருக்காங்க… அவங்களுக்கு ஹெல்த் இஸ்யூ வரதே உன்னால மட்டும் தான்… நீயும் ஒரு டாக்டர் தானே ஏன்டா இப்படி இருக்க…” என்று கோபத்துடனும் அதே சமயம் நண்பனின் மேலுள்ள அக்கறையிலும் கத்தினான் சர்வேஷ்.

 

“ஏன் டாக்டரா இருந்தா இதெல்லாம் பண்ண கூடாதா? புத்தரை போல மரத்தடியில் உட்கார்ந்து போதனை பண்ணுமா” என்று எரிச்சலாக சொன்னான் அவன்.

 

“உன்னை ஒன்னும் போதனை பண்ண சொல்லல… தேவை இல்லாம பொண்ணுங்க கிட்ட போய் கீர்த்தனை பாடாதன்னு தான் சொல்றேன்…” என்று அவனுமே எரிச்சலாக…

 

“சர்வா… இங்க பாரு நான் ஒன்னும் நல்லவன் கிடையாது… கெட்டவன் தான்னு பல முறை சொல்லியாச்சு… என்கிட்ட வந்து இப்படி இரு அப்படி இருன்னு சொன்னா நான் அப்படி இருக்க மாட்டேன்… அம்மா வேற எப்ப பார்த்தாலும் கல்யாணத்தைப் பற்றியே பேசிட்டு இருக்காங்க… எனக்கு டாப்பிக் கொஞ்சமும் பிடிக்கல.‌‌.‌. லவ் மேல நம்பிக்கையே வர மாட்டேங்குது… நானும் எத்தனை பொண்ணுங்களை பார்த்து இருக்கேன்… அதனால கூட இருக்கலாம்… நான் எப்படி இருந்தாலும் என் ப்ரோஃபஷன்ல சரியா தானே இருக்கேன்… அப்பறம் என்ன? என்னை என்னோட போக்குல விட்ருங்க..‌. அவ்வாறு தான் சொல்லுவேன்… நீயும் அம்மாவும் சேர்ந்து தான் என்னை ரொம்ப டார்ச்சர் பண்றீங்க சர்வா…” என்று உஷ்ணமாக பொரிந்தான் ப்ரசாத்.

 

அவனை முறைத்துக் கொண்டிருந்த சர்வேஷ், “டேய் நீ நல்லா தானேடா இருந்தேன்… எதுக்குடா இப்படி மாறி போன… பழைய வனமாறன் எங்கடா போனான்!” என்று கேட்டுக் கொண்டிருக்க…

 

அப்போது டொய்ங் என்று விஹானின் கைபேசிக்கு ஒரு மெசேஜ் வர… அதை நக்கல் புன்னகையுடன் பார்த்தவன்… அதை இப்படியும் அப்படியும் காட்டி ஆட்டியவன்… “ஐட்டம் ரெடி மச்சான்… டாடா… பைபை…” என்று சொல்லி விட்டு… மேலும் அங்கே நிற்காமல் காரை கிளம்பி கொண்டு போனான் விஹான் பிரசாத்.

 

‘ச்சேய்… என்ன டிஸைன் இவன்… நான் பேசிட்டு இருப்பத கூட கேட்காம அவன் ஃபோனை ஆட்டி டாட்டா காமிச்சிட்டு போறான்… இவன் எல்லாம் எதிர் காலத்தில என்ன பண்ண போறானோ… இவனுக்கு வரப் போற பொண்ணு என்னவெல்லாம் அனுபவிக்க போகுது தெரியல…’ என்று நண்பனை மனதிற்குள் திட்ட தவறவில்லை சர்வேஷ்.

 

*********

மணக்கும் 🥀🥀🥀

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!