மனதோடு மனதாக- 9

cute-couple-images-dipak-studios-wedding-photography-happily-ever-after

மனதோடு மனதாக- 9

9          

திருமண வரவேற்பு சிறப்பாக முடிந்து, நண்பர்கள் அனைவரும் விடைப்பெற்று கிளம்பி இருந்தனர். உறவினர்கள் பலரும் விடைப்பெற்றிருக்க, நெருங்கிய உறவினர்களில் வெகுசிலர் மட்டுமே அவர்களுடன் தங்கி இருந்தனர்.. சுபத்ராவும், பூரணியும் மண்டபத்தை காலி செய்து அனைத்து பொருட்களையும் எடுத்து வைத்து, வீட்டிற்குச் செல்ல தயாராக இருந்தனர்.. அவர்கள் எடுத்து வைத்த பொருட்களை பார்த்திபனின் உதவியாளர்களும் திலீபனும் வண்டியில் ஏற்றிக் கொண்டிருந்தனர்..

எதிர்பாராமல் நடந்த நிகழ்வுகளில், மணப்பெண் காணாமல் போய், திடீர் மணப்பெண்ணாக வெண்ணிலாவை அமர வைக்க வேண்டிய நிலைமை.. தனது பெண் காணாமல் போன சோகத்தைக் கூட வெளிக்காட்டிக் கொள்ளாமல், வெண்ணிலாவின் திருமணத்தை சிறப்பாக செய்ய வேண்டிய கடமையும் சேர்ந்துக் கொள்ள, தனது உணர்ச்சிகளைக் கட்டிப் போட்டு, அந்தத் திருமணத்தை சுபத்ராவும் பார்த்திபனும் நடத்தி முடித்திருந்தனர்..

தங்களின் வீட்டில் செல்லக் குழந்தை போல சுற்றிக் கொண்டிருந்தவள், திருமணத்திற்கு சற்றும் மனதளவில் தயாராகாமல், கண் மூடித் திறப்பதற்குள் திருமணம் நடந்து, உடனேயே புகுந்த வீட்டிற்கு இடம் பெயர்ந்து செல்வது, அனைவருக்குமே பதட்டத்தையும் வருத்தத்தையும் கொடுத்தது.. அதுவும் சிறு குழந்தையென எந்தக் கவலையும் இன்றித் துள்ளித் திரிந்தவள், இப்பொழுது ஒரு குடும்பப் பொறுப்பை ஏற்று செய்ய வேண்டுமே என்ற கவலை எழ, பூரணிக்கு கண்கள் கரித்துக் கொண்டு வந்தது.  

மணமக்களை அழைத்துக்  கொண்டு கிளம்பும் நேரம் வந்த பொழுது, அந்தத் திருமண மண்டபமே அமைதியைத் தத்தெடுத்தது.. அவர்கள் கிளம்புவதற்கு ஏதுவாக கார்கள் அனைத்தும் தயாராக இருக்க, தங்கள் வீட்டின் செல்லப் பிள்ளை வேறு ஒருவரின் மனைவியாக, புகுந்த வீட்டிற்கு செல்லும் பிரிவு, அனைவரின் கண்களையும் நிரப்பியது..

வெண்ணிலா பூரணியின் கையைப் பிடித்துக் கொண்டு, உதடு துடிக்க கண்ணீருடன் நின்றுக் கொண்டிருந்தாள்.. அவளது முகத்தைப் பார்த்த பூரணியின் கண்களும் கலங்க, அதை அடக்கிக் கொண்டவர், வெண்ணிலாவின் கன்னத்தில் முத்தமிட்டார்..

“அவங்க வீட்ல போய் சமத்தா இருக்கணும்.. நீ இன்னும் சின்னப்பிள்ளை இல்ல.. உனக்கு கல்யாணம் ஆகிருச்சு.. இனிமே பொறுப்பா நடந்துக்கணும் என்ன?” கண்களில் கண்ணீர் வழிய பூரணி சொல்லவும், அவரை அணைத்துக் கொண்டவள், அவரது தோளில் முகத்தைப் புதைத்துக் கொண்டு அழ, ஆர்யன் சேகரின் அருகில் நின்று அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தான்..

“அவ பாவம் மாமா.. இதை கொஞ்சம் கூட எக்ஸ்பெக்ட் பண்ணி இருக்க மாட்டா இல்ல..” ஆர்யன் வருந்த,

“ஆமா மாப்பிள்ளை.. கல்யாணத்துக்கு கிளம்பவே இஷ்டமில்லாம  கிளம்பி வந்தவன், அவ தான் பொண்ணுன்ன உடனே ஓகேன்னு வேற சொல்லி டைம் வேஸ்ட் பண்ணாம தாலியை கட்டிட்ட. உன் கூட இருக்கற நானே இதை எக்ஸ்பெக்ட் பண்ணல.. அவ மட்டும் இதை எதிர்பார்த்து இருப்பாளா என்ன?” சேகர் கேலியாக ஆர்யனின் காலை வாரினான்.. 

ஆர்யன் அவனை முறைக்க, “ஒருவேளை கல்யாணத்தை அவங்க நிறுத்தி இருந்தா என்ன செய்திருப்ப? ஏதோ எங்க அக்கா செண்டிமென்ட்டா பேசி உன் கல்யாணத்தை முடிச்சிட்டா.. இல்ல இத்தனை நேரம் வீட்டுல அழுகாச்சி காவியம் தான் நடந்துட்டு இருந்திருக்கும்..” சேகர் அவனை சீண்ட,

“ஒரு வாரம் ஆபீஸ்க்கு லீவ் போட்டு இருக்கேன் இல்ல.. ரெண்டு நாள் கழிச்சு எதர்ச்சையா போறா மாதிரி அவ காலேஜ்க்கு போய், பேசி.. பழகி.. கரக்ட் பண்ணி, கல்யாணம் பண்ணி இருப்பேன்.. சிம்பிள்..” அலட்டிக் கொள்ளாமல் சொல்லிவிட்டு, இப்பொழுது திலீபனிடம் அழுதுக் கொண்டிருந்த வெண்ணிலாவைப் பார்த்தான்..       

அவளை அணைத்துக் கொண்ட திலீப், “நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன் நிலாக்குட்டி.. இனிமே காலேஜ்க்கு என்கூட பைக்ல யாரு வருவா? நினைச்ச நேரதுக்கு உன் கூட பேச முடியாதுல.. நீ இனிமே குடும்ப இஸ்த்ரி ஆகிடுவ.. நான் பேசினா கூட வேலை இருக்குன்னு சொல்லுவ.. ‘மாமா வந்துட்டாங்க அவருக்கு காபி தரணும்.. நான் அப்பறம் பேசறேன்’னு வச்சிடுவ..” அவன் ஒரு பக்கம் புலம்ப,

“அண்ணா.. அப்படி எல்லாம் சொல்லாதேண்ணா.. நான் உங்க கூடவே இருக்கேன்.. நீ எப்போ பேசினாலும் பேசறேண்ணா..” வெண்ணிலா அவனது தோளில் சாய்ந்து அழ, சேகர் ஆர்யனின் தோளைச் சுரண்டினான்..

வெண்ணிலா அழுவதையே எதுவும் செய்ய முடியாமல் பார்த்துக் கொண்டிருந்த ஆர்யன், சேகர் சுரண்டவும், அவனை திரும்பிப் பார்க்க, “மாப்ள.. நீ ஒரு குழந்தையை கல்யாணம் செய்து கூட்டிட்டு போறன்னு உனக்குத் புரியுதா? உன் கண்ணு முன்னால எதிர்காலம் நல்லா தெரியுதா?” சேகர் கேலி செய்ய, அவனைப் பார்த்து கண் சிமிட்டிய ஆர்யன்,

“அவங்க வீட்டுல அவளை குழந்தையா பார்த்தா.. நானும் அப்படி பார்க்க முடியுமா என்ன? அவ என்னோட பொண்டாட்டி..” எனவும்,

“அப்பறம் என்னத்துக்கு உன் பொண்டாட்டி அழறதை வேடிக்கைப் பார்த்துட்டு நிக்கற? வாய் மட்டும் தானோ? போய் சமாதானப்படுத்தி கூட்டிட்டு வரலாம்ல.. நைட் எல்லாம் தூக்கமே இல்ல.. நேரத்தோட வீட்டுக்கு போய் தூங்கணும்..” சேகர் மேலும் சீண்டவும், அவனுக்கு அழகுக் காட்டியவன், அவளது அருகில் சென்றான்..

ஆர்யன் அருகில் வரவும், அவனைப் பார்த்த திலீப், “வெண்ணிலா மாமா வந்திருக்கார் பாரு..” என்றபடி அவளது முகத்தை நிமிர்த்த,

“ஓண்ணும் வேண்டாம் போ..” ஆர்யனுக்கு முகத்தைக் காட்டாமல் அவனது தோளிலேயே புதைந்துக் கொள்ள, ஆர்யன் வெண்ணிலாவின் முகத்தைத் தன் பக்கம் திருப்பினான்..

உதடு துடிக்க, அவனது முகத்தை பார்க்காமல் கண்களைத் தழைத்துக் கொள்ள, “வெண்ணிலா.. இங்க என்னைப் பாரு..” அவளது நாடியைப் பிடித்து அவளது முகத்தை நிமிர்த்த, கண்ணீர் நிரம்பிய விழிகளுடன் அவனை ஏறிட்டு பார்த்தவளிடம்,

“வெண்ணிலா நாம வேற ஊருக்கா போகப் போறோம்? இதே ஊருல தானே இருக்கப் போறோம்? உனக்கு எப்போ உங்க வீட்டுக்கு போகணும்னு தோணுதோ என்கிட்டே சொல்லு.. நான் உன்னைக் கூட்டிட்டு போறேன் என்ன? இப்போ அழக் கூடாது.. பாரு நீ அழறதுனால உங்க அம்மா, பெரியம்மா எல்லாரும் அழறாங்க. நீ இன்னும் கொஞ்ச நேரம் அழுதன்ன அப்பறம் திலீபனும் அழுதிடுவான்.. அவன் மட்டும் தான் இன்னும் அழல..” ஆர்யன் அவளிடம் மென்மையாகக் கேட்டுக் கொண்டே, தனது கைக் குட்டையை எடுத்து அவளது கண்களைத் துடைக்க, வெண்ணிலா விசும்பிக் கொண்டே அவனைப் பார்த்தாள்.. 

“எனக்கு அழுக வருது.. நான் என்ன செய்யறது?” சிறு குழந்தையென வந்த வெண்ணிலாவின் பதிலில், அவளை அணைத்துக் கொண்டு ஆறுதல் சொல்ல வேணுமாய் எழுந்த எண்ணத்தில் தடுமாறியவன், செய்வதறியாது அவளையே பார்த்துக் கொண்டு நின்றான்..  

“உன் தம்பி இப்படியே அவளைப் பார்த்துக்கிட்டு இருக்கப் போறானா? அவளை அப்படியே தோளோட பிடிச்சி கூட்டிட்டு வராம.. மக்கு மங்குனி அப்படியே சிலை மாதிரி நிக்கறான்.. இதுல வாய் கிழிய பேச்சு வேற.” விஷ்ணுப்ரியாவிடம் சேகர் கிண்டலடிக்க,

“இப்போ அவனை என்ன செய்யச் சொல்றீங்க? அவனுக்கு அவ இன்னும் பழக்கமே ஆகலையே.. ஏதோ அவ அழறதைப் பார்த்து மனசு கேட்காம அவ கண்ணைத் துடைச்சு விட்டான். அதுக்கும் மேல அவன் என்ன செய்யணும்ன்னு சொல்றீங்க?” அப்பாவியாக வந்த விஷ்ணுப்ரியாவின் கேள்விக்கு,

“ஹான்.. அவளை அப்படியே கட்டிப்பிடிச்சு ஆறுதல் சொல்லி கூட்டிட்டு வரணும்ன்னு சொல்றேன்.. எவடி இவ? இன்னும் இவ தம்பியை நம்பிக்கிட்டு இருக்கா?” என்று ஏளனமாகக் கேட்டவன், வேகமாக ஆரியனிடம் சென்றான்..

ஆர்யன் செய்வதறியாது பார்த்துக் கொண்டு நிற்க, “வெண்ணிலா.. ஆரி.. டைம் ஆச்சு.. நல்ல நேரத்துல வீட்டுக்கு போகணும்..” சேகர் சொல்லவும் வெண்ணிலா திகைப்புடன் அவனைப் பார்க்க,

“நீயும் என்னடா பார்த்துக்கிட்டு இருக்க.. அவளைக் கூட்டிட்டு வா.. மணியாகுது..” சேகர் அவனது காதில் சொல்லவும்,

“வா வெண்ணிலா.. நம்ம வீட்டுக்கு போகலாமா?” என்ற ஆர்யன், அனைவரிடமும் விடைப்பெற்று, அவளது தோளில் கை வைத்து,

“வெண்ணிலா.. அவங்களும் இப்போ நம்மக் கூட தான் வரப் போறாங்க.. அழக் கூடாதும்மா.. முதல்முறை நம்ம வீட்டுக்கு வரும்போது அழுதுட்டு வரலாமா?” என்று ஆறுதல் கூறி, அவளைத் தன்னுடன் நடத்தியபடி,

“போகலாமா?” என்று கேட்கவும், வெண்ணிலா சுபத்ராவைத் திரும்பிப் பார்க்க, 

“வா நிலாக்குட்டி நானும் பெரியப்பாவும் கூட வரோம்..” என்ற சுபத்ரா அவர்களுடன் இணைந்துக் கொண்டு, மணமக்களுக்காக அலங்கரிக்கப்பட்டிருந்த காரில் ஏற்ற, வெண்ணிலா பூரணியின் கையைப் பிடித்துக் கொண்டாள்.  

“நீங்களும் உட்காருங்க மாப்பிள்ளை.. நாங்க பின்னாலையே எங்க கார்ல வரோம்..” பார்த்திபன் சொல்லிவிட்டு தங்களது காரில் ஏறிக் கொள்ள, அவளது கையைத் தட்டிக் கொடுத்து தனது கையை எடுத்துக் கொண்டு காரின் கதவை சாத்திய பூரணி, அவளைப் பார்த்து கையசைக்க, சேகர் மெல்ல காரை எடுத்தான்.

கண்ணீருடன் பூரணி கையை அசைக்க, கண்ணுக்கு மறையும் வரையும் வெண்ணிலா கை அசைத்துக் கொண்டு வர, கார் சாலையில் வேகமெடுத்தது.

அப்பொழுதும் வெண்ணிலா அழுதுக் கொண்டிருக்கவும், அதற்கு மேல் பொறுக்க முடியாதவன், “வெண்ணிலா.. அழாதம்மா.. உனக்கு எப்போ அம்மாவை பார்க்கணும்ன்னு தோணுதோ சொல்லு கூட்டிட்டு போறேன்.. அம்மாவை விட்டுட்டு வரோம்ன்னு இப்படி எல்லாம் அழாதே.. பாரு கண்ணு எல்லாம் வீங்கி இருக்கு..” என்றபடி, அவளது கண்ணைத் துடைத்தவன், தனது தோளில் சாய்த்துக் கொண்டான்.

இயல்பாக அவனது கையை அவள் பிடித்துக் கொள்ள, அவளைப் பார்த்து புன்னகைத்தவன், அவளது தலையை மென்மையாக வருடிக் கொடுத்தான்..

வெண்ணிலாவின் அழுகை மெல்ல மட்டுப்பட, “ஆல் ஓகே??” என்று கேட்டு, அவளைப் பார்த்து புன்னகைக்க, அவனது புன்னகை வெண்ணிலாவின் முகத்திலும் பிரதிபலித்தது. அவளது இதழ்களில் புன்னகையைப் பார்த்தவன், அவளது கையை தனது கைக்குள் பொத்திக் கொள்ள, பின் பக்க கண்ணாடி வழியாக அதைப் பார்த்த சேகர், கண் ஜாடையில் தனது அருகே இருந்த விஷ்ணுப்ரியாவிடம் அதைக் காட்டி, மனதில் எழுந்த நிம்மதியுடன் ஆர்யனின் வீட்டில் சென்று காரை நிறுத்தினான்..  

முதலில் ஆர்யன் இறங்கி, அவள் இறங்குவதற்காக கதவைப் பிடித்துக் கொண்டு, தனது வலது கையை நீட்டி அவளை வெளியில் அழைக்க, அவனது கையை பிடித்துக் கொண்டே மெல்ல இறங்கி நின்றவள், அந்த இடத்தைச் சுற்றிப் பார்வையைச் சுழற்றினாள்.

அமைதியாக இருந்த அந்த ப்ளாட்டின் சிறிய பூங்காவில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்க, “மாமா இங்க தான் உங்க வீடு இருக்கா? இந்த இடம் அழகா இருக்கு.. அங்க பார்க் எல்லாம் இருக்கு..” வெண்ணிலா உற்சாகமாகக் கேட்கவும்,

“ஆமா வெண்ணிலா.. நம்ம வீடு இங்க தான் இருக்கு.. நம்ம வீட்டுல இருந்து இங்க இந்த பார்க்கை வேடிக்கைப் பார்க்கலாம்.. அதோ அது தான் நம்ம வீடு..” இரண்டாவது தளத்தில் இருந்த ஒரு வீட்டின் பால்கனியை அவன் காட்டவும், ஆர்யனை ஆச்சரியமாகப் பார்த்தாள்.

பால்கனியில் அழகாக தொங்கிக் கொண்டிருந்த காற்றில் அசைந்து ஓசை எழுப்பும், மண்ணில் செய்யப்பட்டிருந்த கலைநயம் மிக்க மணியை பார்த்தவள், ‘வாவ்’ என்று கண்களை விரித்தாள்..

“என்ன வாவ்?” ஆர்யன் கேட்க,  

“மாமா.. அந்த சைம்ஸ் ரொம்ப அழகா இருக்கு.. சவுண்ட் எப்படி இருக்கும்?” ஆவலாக அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்..   

“உள்ள வந்து நீயே கேளு..” என்றவன், சேகருக்கு உதவியாக சில பையை எடுத்துக் கொண்டு, ஓரு கையில் வெண்ணிலாவின் கைப் பற்றி, தங்களது வீட்டிற்கு அழைத்துச் சென்றான்..

வீடு வரும் வழியை அவளுக்கு சொல்லிக் கொண்டே, தனது வீட்டின் முன்பு அவளை நிறுத்தியவன், “வாங்க மகாராணியாரே.. வாங்க.. உங்கள் வரவு நல்வரவாகுக..” கையை உள் பக்கம் காட்டி, வசனம் பேசவும், வெண்ணிலா கலுக்கென்று சிரிக்க,

“குட்.. இப்படியே சிரிச்சிட்டு நம்ம வீட்டுக்குள்ள வா.. அப்போ தான் நானும் ஹாப்பி..” எனவும் அவள் தலையைக்க, சுபத்ராவும் விஷ்ணுப்ரியாவும் தட்டில் ஆரத்தியை எடுத்துக் கொண்டு வந்தனர்..

புன்னகை முகத்துடன் நின்றிருந்தவளைப் பார்த்த சுபத்ரா, அவளது கன்னத்தில் தட்டி, “மாப்பிள்ளை பக்கத்துல நில்லு..” என்று சொல்லவும், ஆர்யன் அவளைத் தனது அருகில் நிறுத்திக் கொண்டான்..   

ஹாரத்தி எடுத்து மணமக்களை வீட்டிற்குள் அழைக்க, ஆர்யனின் மனைவியாக, அவனது கையைக் கோர்த்துக் கொண்டு வெண்ணிலா வீட்டினுள் அடியெடுத்து வைத்தாள்..  

“வாடாம்மா.. வாடா ராஜாத்தி..” பிருந்தா அவளை அழைத்து,

“ப்ரியா.. வெண்ணிலாவை சாமிக்கிட்ட விளக்கை ஏத்த சொல்லு..” ஹாலிலேயே தங்கிக் கொண்ட பிருந்தா சொல்லவும்,

“வா வெண்ணிலா..” ப்ரியா அவளை அழைத்துச் செல்ல, சுபத்ராவும் அவளுடன் பூஜை அறைக்குச் சென்றார்..

“சாமியை நல்லா வேண்டிக்கிட்டு விளக்கை ஏத்து வெண்ணிலா..” சுபத்ரா சொல்லவும், சமையலறையில் சிறிதாக பொருத்தப்பட்டிருந்த சாமி அலமாரியில் இருந்த விளக்கை ஏற்றிய வெண்ணிலா, கண்களை மூடி எப்பொழுதும் போல வேண்டிக் கொள்ள, அதைப் பார்த்த ப்ரியாவின் இதழ்களில் புன்னகை அரும்பியது..

அருகில் இருந்த ஆர்யனோ, “இந்த தடவ எக்ஸாம் எல்லாம் ஈசியா வரணும்ன்னு தானே வேண்டிக்கிட்ட வெண்ணிலா?” அவன் சிரிக்காமல் கேட்க, அவனை விழிகள் விரியப் பார்த்தவள்,

“ஆமா மாமா.. உங்களுக்கு எப்படித் தெரியும்? கூடவே நல்ல கம்பனில இருந்து கேம்பஸ் வரணும்ன்னு வேண்டிக்கிட்டேன்..” என்றவளைப் பார்த்து சிரித்த ஆர்யன்,

“எல்லாம் ஒரு கெஸ் தான்..” தனது சட்டைக் காலரைத் தூக்கி விட, இருவரையும் பார்த்து சிரித்த ப்ரியா,

“ஹால்ல போய் உட்காருங்க.. பாலும் பழமும் சாப்பிட்ட அப்பறம் டிரஸ் மாத்திட்டு ரெஸ்ட் எடுக்கலாம்..” என்றவள்,

“ஆரி.. சக்கரை வேற எங்கயாவது வச்சிருக்கியா? இதுல கொஞ்சம் தான் இருக்கு.. அப்படியே காபி பொடியையும் எடுத்துக் கொடு.. எல்லாத்தையும் உன் ஹைட்டுக்கு மேல தூக்கி வச்சா நாங்க என்ன செய்யறது?” என்று கேட்க, அதை எடுத்துக் கொடுத்துவிட்டு, அவளது தலையைத் தட்ட,

“போடா ஒட்டகச்சிவிங்கி.. ஓவரா வளர்ந்துட்டு என்னைப் பேசற? போ.. உன் பொண்டாட்டி வெயிட் பண்றா.. அவளை வம்பு வளர்த்துக்கிட்டு நில்லு.. எனக்கு வேலை இருக்கு..” அவனைப் பிடித்துத் தள்ள,

“போடி குட்ட கத்திரிக்கா..” ப்ரியாவை வம்பு வளர்த்துக் கொண்டே, வெண்ணிலாவை இழுத்துக் கொண்டு ஹாலிற்கு வந்தவனை பார்த்து சிரித்தவள்,

“அப்போ என்னையும் அப்படித் தான் சொல்லுவீங்களா?” என்று கேட்க, மறுப்பாக தலையசைத்து, குறும்பாகச் சிரிக்க, அதற்குள், 

“ரெண்டு பேரும் உட்காருங்க.. பாலும் பழமும் தரலாம்..” சுபத்ரா சொல்லவும், வெண்ணிலாவும் ஆர்யனும் அங்கிருந்த சோபாவில் அமர்ந்தனர்.. பார்த்திபன் இருவரையும் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார்..  அனைவரும் கொடுத்து முடித்த நேரம், பூரணியும் திலீப்பனுடன் வந்து சேர்ந்தார்.

“அம்மா வந்துட்டாங்க..” பூரணியைப் பார்த்த வெண்ணிலா எழ முயல, அவளது கையைப் பிடித்துத் தடுத்தவன்,

“ஒரு நிமிஷம் வெண்ணிலா.. இன்னும் எங்க அம்மாவும் உங்க அம்மாவும் தரணும் இல்ல..” ஆர்யன் சொல்லவும், பூரணி தயங்கி,

“இல்ல தம்பி அதெல்லாம் வேண்டாம்.. நான் எதுக்கு?” எனவும்,

“ஏண்டா?” பிருந்தா அவனைக் கெஞ்சலுடன் பார்க்க,   

“நாங்க நல்லா இருக்கணும்ன்னு ஒவ்வொரு நிமிஷமும் நினைக்கிற நீங்க ரெண்டு பேருமே தரதுல என்ன இருக்கு சொல்லுங்க? நீங்க தான் முதல்ல தந்திருக்கணும். ஏன் தான் இப்படி ஒதுங்கியே நின்னுட்டு இருக்கீங்களோ? அதெல்லாம் சும்மா வெத்து ஃபார்மாலிட்டி.. வந்து எங்களுக்குக் கொடுங்க..” ஆர்யன் கறாராகச் சொல்லவும், வெண்ணிலா அவனை மனநிறைவுடன் பார்க்க,

“அதானே.. யாராவது ஏதாவது சொல்லுவாங்கன்னு இத்தனை நேரம் ஒதுங்கி இருந்தது போதும். இந்தாங்க வந்து கொடுங்க..” மகிழ்ச்சியுடன் சுபத்ரா பூரணியின் கையில் பால் கிண்ணத்தைக் கொடுக்க, உடனே ஆர்யனும் கையை நீட்ட, கண்கள் கலங்க இருவருமே தந்தனர்.

சடங்குகள் முடியவும், “வெண்ணிலாவுக்கு டிரஸ் மாத்திக்க இடத்தைக் காட்டு ஆரி. அப்படியே வீட்டைச் சுத்திக் காட்டு..” அவர்கள் பழக சந்தர்பத்தை ஏற்படுத்திக் கொடுத்த பிருந்தா, வந்தவர்களை கவனிக்கச் செல்ல, பூரணி அவளது கையில் தான் கொண்டு வந்திருந்த பையைக் கொடுத்து, அவளது காதில் எதுவோ சொல்ல, வெண்ணிலா தலையை அசைத்துவிட்டு அவனைப் பார்த்தாள்..

கண்களால் ‘வா..’ என்று அழைத்த ஆர்யனின் பின்னால் அவள் எழுந்துச் செல்ல, அவளது கையில் இருந்த பெட்டியை வாங்கிக் கொண்டவன், அதைத் தனது அறையில் கொண்டு வைத்து,

“முதல்ல டிரஸ் மாத்திட்டு வா..”  எனவும், சரி என்று தலையசைத்தபடி, உடையை மாற்றிக் கொண்டு வரவும், அவளுக்கு வீட்டைச் சுற்றிக் காட்டினான்..

வீட்டில் இருந்த மற்றொரு அறைக்குள் அவளை அழைத்துச் சென்றவன், “உன்னோட புக்ஸ்.. காலேஜ்க்கு போற டிரஸ் எல்லாம் இங்க வச்சிக்கோ.. நான் அந்த ரூம்ல இருக்கற என்னோட டிரஸ் எடுத்து இங்க வைக்கிறேன்.. அப்பறம் நாம அடுக்கிக்கலாம்.  போதலைன்னா ஒரு புது வார்ட்ரோப் வாங்கிக்கலாம்.. அம்மா அக்கா எல்லாம் வரும்போது மட்டும் இந்த ரூம்மை யூஸ் பண்ணிப்பாங்க.. அப்போ மட்டும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ.. உனக்கு என்ன வேணுமோ என்கிட்டே தயங்காம கேளு.. என்ன?” என்று கேட்கவும், அவள் தலையை அசைக்க,  மீண்டும் தங்களது அறைக்கு அழைத்துச் சென்றான்..

அவள் கேள்வியாகப் பார்க்கவும், “இது தான் நம்ம ரூம்..” அவன் சொல்லவுமே, அவளது மனது படபடவென்று அடித்துக் கொள்ளத் துவங்கியது. ஆர்யனின் பார்வையை தவிர்தவள், அங்கிருந்த டேபிளில் இருந்த அவனது லேப்டாப், நோட்டுகள், அழகான பேனா ஸ்டாண்ட் அனைத்தையும் பார்க்க, வந்த சிரிப்பை ஆர்யன் தனது உதட்டிற்குள் புதைத்துக் கொண்டான்.  

“ரூம் நல்லா இருக்கா..” கேட்டுக் கொண்டே பால்கனியின் கதவை அவன் திறக்கவுமே, அங்கிருந்த காற்றில் ஒலியெழுப்பும் மணியைப் பார்த்தவள் கண்களை விரித்தாள்.

“மாமா ரூம் ரொம்ப அழகா இருக்கு.. இங்க ஊஞ்சல் போட்டா நல்லா இருக்கும்.. அப்படியே ஊஞ்சல் ஆடிக்கிட்டே இங்க உட்கார்ந்து படிச்சா நல்லா இருக்கும்..” அவள் சொல்லவுமே, அவளது கன்னத்தைத் தட்டியவன்,

“சரி.. நான் ஆர்டர் பண்ணிடறேன்.. ஆஸ் யு விஷ் மேடம்..” என்றவன்,

“அப்புறம் ரெண்டு பேருமா செலெக்ட் பண்ணலாம்.. இப்போ நீ ரெஸ்ட் எடு.. நீ இங்க படுத்துக்கோ.. நைட் நீ சரியா தூங்கவே இல்லயே..” என்றவன், அங்கிருந்த கப்போர்டில் இருந்து, தனது மாற்றுடையை எடுத்துக் கொண்டு, வெளியில் சென்று பூரணியை உள்ளே அனுப்பி விட்டு, அவன் மற்றொரு அறையில் புகுந்துக் கொண்டான்..

பூரணி உள்ளே வரவும், “என்னை மாமா தூங்க சொன்னாங்க.. நான் கொஞ்சம் படுத்துக்கவா? தலை எல்லாம் வலிக்குதும்மா.. நான் தூங்கற வரை இங்க இருக்கியா?” சிறுகுழந்தையென அவள் கேட்கவும், அவளது தலை அலங்காரத்தை தளர்த்தி, முடியை விரித்து விட்டு,

“சரி படுத்துக்கோ.. இப்போதைக்கு நான் கொஞ்சம் துணிமணி எல்லாம் எடுத்துட்டு வந்திருக்கேன்.. அப்பறமா நீ வீட்டுக்கு வரும்போது வேணுங்கறது எடுத்துக்கோ..” பூரணி சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே உள்ளே வந்த சுபத்ராவும் பார்த்திபனும், அவளது தலையை வருடி,

“நாங்க கிளம்பறோம்டா குட்டி.. சமத்தா இருக்கணும்.” கண்கள் கலங்க இருவரும் விடைப்பெற, அவர்களை வழியனுப்பிவிட்டு வந்து படுத்த அடுத்த சில நிமிடங்களில் உறங்கியும் போனாள்..

வீட்டிற்கு வந்திருந்த சில உறவினர்களும் விடைப்பெற்றுக் கிளம்ப, பூரணியை இரவு வந்து அழைத்துக் கொள்வதாக திலீபன் ஏற்பாடானது..

அங்கிருந்து கிளம்பியதுமே அதுவரை அடக்கி வைத்திருந்த சுபத்ராவின் கண்கள் கசியத் துவங்கியது.. “யாரு என்னன்னே நமக்குத் தெரியாதவனை இப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டு அவ கண் காணாம போயிட்டாளேங்க.. எவ்வளவு ஆசையா அவளுக்கு கல்யாண ஏற்பாடு எல்லாம் செய்தோம்? அவ மனசுல இருக்கறதை ஒரு வார்த்தை கூட நம்மக்கிட்ட சொல்லவே இல்லையே.. எதுவுமே சொல்லாம இப்படி கடைசி நேரத்துல நம்ம கழுத்தை அறுத்து சந்தியில நிக்க வச்சிட்டாளே. இதுக்குத் தான் அவளை அவ்வளவு செல்லம் கொடுத்து வளர்த்தோமா? ஏன் அவ நம்மளைப் பத்தி கொஞ்சம் கூட நினைச்சுப் பார்க்கல?” அவர் புலம்பிக் கொண்டே வர, பார்த்திபனின் கண்களும் கலங்கியது.

அவர் அமைதியாக தனது கண்களைத் துடைத்துக் கொள்ள, “இவ செஞ்ச கூத்துக்கு நம்ம நிலாக்குட்டி வேற மாட்டிக்கிச்சு.. பாவம் அந்தக் குழந்தை நமக்காக சரின்னு ஒத்துக்கிட்டா.. அவ என்ன மனநிலையில இருக்கான்னே புரியல.. நாம சொல்றதை எல்லாமே பொம்மை மாதிரி செய்யறா… அவளோட இயல்புல அவளையே அறியாம அவ சிரிக்கவும் செய்யறா.. மாப்பிள்ளையும் பாவம்.. அவருக்கு அவளை பிடிச்சிருக்கான்னே புரியல.. என்னவோ அவங்க அம்மா சொன்னதுக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டார் போல இருக்கு.. இப்படி போனா ரெண்டு பேரோட வாழ்க்கை என்ன ஆகுமோ? நாம கொஞ்சம் அவசரப்பட்டு இந்த கல்யாணத்தை நடத்திட்டோமா?” சுபத்ராவின் புலம்பல் தொடர்ந்துக் கொண்டிருக்க, பார்த்திபன் அவரது கையைத் தட்டிக் கொடுத்தார்.

“என்ன செய்யறது சொல்லு? எல்லாம் நம்ம விதி.. மாப்பிள்ளையைப் பத்தி நாம கவலைப்பட வேண்டாம்.. அவருக்கு நம்ம வெண்ணிலாவைப் பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன்.. நிலாக் குட்டியும் கொஞ்ச நாள்ல அவரோட நல்லா பழகிப்பா.. மாப்பிள்ளை அவளை நல்லா பார்த்துப்பார்ன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.. அவ அழுத பொழுது கண்ணைத் துடைச்சு அவளை ஆறுதல் படுத்தினார் இல்ல… கொஞ்ச நாள்ல ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கப் போறாங்க பாரு.. எப்படியோ நல்லபடியா கல்யாணம் முடிஞ்சது.. ஆனா.. பூரணிக்கு தான் இப்போ தனியா ரொம்ப கஷ்டமா இருக்கும்.” பார்த்திபன் சொல்லிக் கொண்டே வந்தவர், திலீபன் ரிசப்ஷனின் போது, ஆர்யன் வெண்ணிலாவின் மனநிலை குறிந்து கூறியதைக் கூற, கெட்டதிலும் நல்லதிலுமாக வெண்ணிலாவின் வாழ்க்கை நல்லபடியாக அமைந்ததில் நிம்மதி கொண்டனர்..

error: Content is protected !!