MMM–EPI 2

122620776_740997409820929_9109553537495410146_n-a7bb66de

MMM–EPI 2

அத்தியாயம் 2

‘உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது?

நிலைக்கெட்டுப் போன நயவஞ்சகரின் நாக்கு தான் அது!’ என பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எம்.ஜி.ஆர் நடித்த படத்துக்கு பாடல் வரி எழுதியிருப்பார்.

அலெக்ஸை கேட்டால், உலகத்தில் பயங்கரமான ஆயுதம் பெண்களின் கண்ணீர்தான் என்பான். அந்தக் கண்ணீர் தானே அவனை ப்ளைட் ஏற்றி இருந்தது.

ஒரு வாரமாய் அவன் கூடவே இருந்து, பேசி, அழுது, அரற்றி கரையாய் கரைத்திருந்தார் மகனை. தன்னை தானே செதுக்கிக் கொண்டவனுக்கு பிடிவாதம் மிக மிக அதிகமாக இருந்தது. இந்தியாவுக்கு போகவே மாட்டேன் என ஒற்றைக் காலில் நின்றவனை,

“நிரந்தரமா உன்னைப் போக சொல்லல அலேக்ஸ்! ஒரு ஹோலிடேவா நினைச்சிக்கோ! எத்தனை தடவை தான் ரீஹேபிலிட்டேஷன் செண்டர்ல(குடி, போதை இப்படிப்பட்ட விஷயங்களுக்கு அடிமையானவர்களை இங்கே கொண்டு சேர்ப்பார்கள். ட்ரைனிங், தெரெப்பி, மருந்து மாத்திரை என இவர்களை திருத்தி அனுப்புவார்கள். பிரபலங்கள் மிக ரகசியமாக அங்கே தங்கி இருந்து தங்களை குணப்படுத்திக் கொள்வார்கள்) அட்மிட் ஆகுவ நீ! புது இடம், புது சூழ்நிலை, புது மக்கள் இப்படின்னு இந்தப் பயணம் உன் ஸ்ட்ரெசை குறைக்கலாம். மைண்ட் ஃப்ரீயாகலாம்! மீண்டும் பாட்டு எழுத தூண்டலாம்! இவ்ளோ நன்மைகள் இருக்கு அலேக்ஸ்! ப்ளிஸ், எனக்காக! டேக் அ பிரேக் மை சன்” என சொன்னவர் மகனைக் கட்டிக் கொண்டார்.

“என்னை மன்னிச்சிடு அலேக்ஸ்! என்னாலதான் இப்படி ஆகிட்டியோன்னு ரொம்ப கில்ட்டியா இருக்கு!” என அழுது கரைந்தவரை இவன் தான் தேற்றும் படி ஆனது.

ஜெய்க்குமார் கேட்டிருந்ததைப் போல படத்தில் நடிப்பதைப் பற்றி இவனால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. பாடுவதில் இருந்த ஈடுபாடு, தன் பாடல் வீடீயோ க்ளிப்பில் நடிப்பதில் இருந்ததில்லை இவனுக்கு. அப்படிப்பட்டவனை முழு நடிகனாக சொன்னால், ஒத்துக் கொள்வானா! அரைகுறை ஆடையில் வரும் பெண்களை தொட்டுத் தடவி முத்தமிட்டு, ஆடி, வாயசைத்து, கடனே என நடித்துக் கொடுப்பான். இண்ட்ரேஸ்ட் இல்லாமல் நடிக்கும் க்ளிப்பிங்கே சக்கைப் போடு போடும். மில்லியன் கணக்கில் வியூஸ் அள்ளும். அதனால் தான் இவனை நடிக்க வைத்து மீண்டும் தன் இடத்தை கோலிவூட்டில் தக்க வைத்துக் கொள்ள முடிவெடுத்தார் ஜெய்.  

“போறேன் மாம்! நீங்க சொன்ன மத்த காரணத்துக்காக போறேன்! ஆனா என்னால படத்துல எல்லாம் நடிக்க முடியாது! இத அந்த ஸ்பெர்ம் டொனெர் கிட்ட சொல்லிடுங்க”

அவன் வருகிறேன் என ஒத்துக் கொண்டதே பெரிய விஷயம். இங்கு வந்தவுடன் எப்படியாவது படம் நடிக்க ஒத்துக் கொள்ள வைத்து விடலாம் என நினைத்த ஜெய் சந்தோஷமாக அவனை வரவேற்க ரெடியானார். அப்படி இப்படி என அங்கே எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு அலேக்ஸ் இந்தியா வர ஒரு மாதம் பிடித்தது.

அவன் வருகிறேன் என ஒத்துக் கொண்ட நொடியே, கிழக்கு கடற்கரை சாலையில் இருந்த அவரது விருந்தினர் மாளிகையை இவனுக்காக ரெடி செய்ய ஆரம்பித்திருந்தார் ஜெய். தன் ரகசிய மகனை எப்படியும் தனது வீட்டில் கொண்டு போய் தங்க வைக்க முடியாது. அதை ஈடுகட்ட பணத்தை வாரி இறைத்து அந்த மாளிகையை சொர்க்கபுரியாக மாற்றி இருந்தார் ஜெய்.

அவன் வருவதற்குள் தற்பொழுது எடுத்துக் கொண்டிருக்கும் பட ஷூட்டைங்கை முடித்து விடலாம் என கேரளாவுக்குப் பயணப்பட்டிருந்தார் அவர். ஒரு வார ஸ்கேடியூல், ஹீரோவின் சொதப்பலால் இரு வாரமாக இழுத்தடித்திருந்தது. அதனால் அவரது அசிஸ்டெண்டை அரேஞ் செய்திருந்தார் அவனை பிக் அப் செய்து நல்ல படி கவனித்துக் கொள்ள.  

தமிழ்நாட்டு மண்ணில் இவன் காலடி வைத்த நேரம், மழை கொட்டோ கொட்டு என கொட்டியது! மழை மகள் வாழ்த்தி ஆசிர்வதித்து வரவேற்றாளோ! கண்ணுக்கு கூலர்ஸ் அணிந்துக் கொண்டவன், தொப்பியையும் மாட்டிக் கொண்டான். தனது லக்கேஜை கலேக்ட் செய்து கொண்டவன் தந்தை அனுப்பி வைக்கிறேன் என சொன்ன மனிதரை தேடி கண்களை சுழற்றினான்.

அவன் பின்னால் இருந்து தோளைத் தொட்டது ஒரு கரம். மெல்ல திரும்பிப் பார்த்தான் அலெக்ஸ்.

“ஹாய் மிஸ்டர் ஜோனா, ஐம் தீரன். மிஸ்டர் ஜெய் கிட்ட அசிஸ்டண்ட் டைரக்டரா இருக்கேன்!” என சிரித்த முகமாக கை குலுக்குவதற்காக தன் கையை நீட்டியபடி நின்றிருந்தான் ஓர் ஆடவன்.

“ஹாய்!” என்றவன் தன் கையை மடக்கிக் காட்டினான்.

“ஓ அமெரிக்கன் ஸ்டைல்!” என சொல்லி சிரித்தப்படியே தீரனும் தன் கையை மடக்கி அவன் கையோடு இடித்து ஃபிஸ்ட் பம்ப் செய்து கொண்டான்.

“சாரி மிஸ்டர் ஜோனா! டைரக்டர் சார் இன்னிக்கு சென்னை வரதா இருந்தாங்க! ஆனா அங்க வேலை இழுத்தடிச்சிருச்சு! அவர் வர வரைக்கும் உங்கள நான் ரொம்ப நல்லா பார்த்துப்பேன்! கம், லெட்ஸ் கோ” என அழைத்தவன், அலெக்ஸின் லக்கேஜை வாங்கிக் கொண்டான்.

ஏற்கனவே இவன் ப்ளைட் எடுக்கும் முன்னே, தனது அசிஸ்டெண்ட் தீரன் வந்து அழைத்துக் கொள்வார் என தனது பிசி வேலைகளின் நடுவே மேசேஜ் செய்திருந்தார் ஜெய்.

“பை தி வே, நேர்ல பார்க்க நீங்க இன்னும் ரொம்ப ஹெண்ட்சமா இருக்கீங்க! நீங்க மட்டும் எங்க படத்துல நடிச்சீங்க, பொண்ணுங்க விடப் போற ஜொள்ளுல நீர் மட்டம் உயர்ந்து எங்க ஊரு வெள்ளக்காடு ஆகிடும்” என ஆங்கிலத்தில் உரையாடியபடியே வந்தான் தீரன்.

பல நாள் பழகியவன் போல சரளமாக தீரன் பேசினாலும், இவன் அமைதியாகவே அவனைப் பின் தொடர்ந்தான். முகமும் இறுக்கமாகவே இருந்தது.

“ஜோனா சார், இங்க உட்காருங்க! நான் வந்துடறேன்” என ஒரு இருக்கையைக் காட்டி விட்டு சென்றான் தீரன்.

‘எங்க போறான் இவன்’ என சலித்தப்படியே அவ்விருக்கையில் அமர்ந்தவன் சுற்றும் முற்றும் வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தான். முன்பொரு காலமென்றால் இவனைப் போல ஆங்கிலேயனைக் கண்டுவிட்டால் அப்படியே நின்று பேரதிசயத்தைப் பார்ப்பது போல பார்ப்பார்கள் ஆசிய மக்கள்.(சின்னப்புள்ளைல நான் அப்படித்தான் பேன்னு பார்ப்பேன். ஒரு வெள்ளைக்காரனை கட்டிக்கனும்னு தான் லட்சியம் வச்சிருந்தேன்! ஆசை தோசை அப்பளவடையாகிருச்சு. ஜோ ஜேட்!) இப்பொழுது தான் இவர்கள் வருகை சர்வ சாதாரணமாகி விட்டதே! அதனால் யாரும் இவனைக் கண்டு கொள்ளவில்லை.

அவன் முன்னே டேக் அவே காபி கப் ஒன்று நீட்டப்பட்டது.

“ஃபிஸ்ட் பம்ப் செய்யறப்பவே கை ஜில்லுன்னு இருந்தது. அதான் சூடா காபி வாங்கி வந்தேன்! குடிங்க” என உபசரித்தான் தீரன்.

இவ்வளவு நேரம் தீரன் பேசிய எதற்கும் ஒப்புக்குக் கூட ஹ்ம்ம் கொட்டாதவன் முகத்தில், மெல்லிய புன்னகை வந்தது.

“தேங்க்ஸ் டூட்(dude)” என்றவன் காபியை வாங்கிக் கொண்டான்.

‘அப்பாடா புன் சிரிப்ப சிந்திட்டான். புன்னகைக்க ஒரு கப் காபின்னா, மலர்ந்து சிரிக்கனும்னா காபி கடையே வாங்கி குடுக்கனுமோ’ என ஏதேதோ யோசித்தப்படியே அலெக்ஸை பார்த்திருந்தான் தீரன்.

அவன் காபி அருந்தி முடித்ததும், ஏர்போர்ட்டில் இருந்து கிளம்பினார்கள் இருவரும். தீரன் காரை சென்னையில் மிக பிரபலமான ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் கொண்டு போய் நிறுத்தினான். காரை வேலட் பார்க்கிங்குக்கு கொடுத்து விட்டு, லக்கேஜை ஹோட்டல் பணியாளர்களிடம் ஒப்படைத்தான் தீரன்.

“ஏற்கனவே ரூம் புக் பண்ணி கார்ட் எடுத்துட்டேன்! வாங்க சார்” என தீரன் முன்னே நடக்க, அவனைப் பின் தொடர்ந்தான் அலேக்ஸ்.

ஹோட்டல் ரூமை திறந்து அலேக்ஸை உள்ளே விட்டவன்,

“நீங்க ரிப்ரேஷ் ஆகிட்டு கொஞ்ச நேரம் தூங்கி எழுங்க சார். இப்ப பசிக்குதா? ரூம் சர்வீஸ்க்கு சொல்லவா?” என கேட்டான்.

“இல்ல, பசிக்கல!”

“சரி! நான் ஒரு த்ரீ ஹவர் கழிச்சு வரேன்! சாப்பிட வெளிய போகலாம். அப்படியே எங்க சிங்கார சென்னைய கொஞ்சமா சுத்திப் பார்க்கலாம். நீங்க ரெஸ்ட் எடுக்கற வரைக்கும் நான் கீழ லோபில இருக்கேன்” என்றான் தீரன்.

தீரனின் கைப் பிடித்து உள்ளே இழுத்த அலேக்ஸ்,

“யூ கேன் ச்சில் ஹியர் டூட் அண்ட்டில் ஐ டேக் அ நேப்! ஐ டோண்ட் மைண்ட்” என்றான்.

அதற்குள் லக்கேஜ் வந்திருக்க, பெல்பாய்க்கு டிப்ஸ் கொடுத்து அனுப்பி விட்டு உள்ளே வந்தான் தீரன். அங்கே ஏற்கனவே உடைகளை களைந்து இடுப்பில் துண்டுடன் நின்றிருந்தான் அலேக்ஸ்.

“தீரன், என் லக்கேஜ்ல இருந்து பாக்ஸர்(ஆங்கில பட்டாபட்டி ஜட்டி) ஒன்னு எடுத்து வைங்க! நான் குளிச்சிட்டு வந்துடறேன்” என சொல்லியபடியே பாத்ரூம் போனான்.

‘ஜிம் பாடிடா இவனுக்கு! வயித்துல இருந்து நெஞ்சு வரைக்கும் அடுக்கடுக்கா படிக்கட்டு கட்டிருக்கான். இவனுக்கு வாய்த்த கொத்தனார்(ஜிம் ட்ரைனர்) மிக்க திறமைசாலி!’ என நினைத்துக் கொண்டே அவன் பேக்கைத் திறந்து பாக்ஸரை வெளியே எடுத்து வைத்தான்.

அவன் கொண்டு வந்திருந்த கிட்டாரை மெல்லத் தடவிப் பார்த்து பத்திரமாக அலமாரியின் உள்ளே எடுத்து வைத்தான் தீரன். பெட்சைட் லைட் ஒன்றை மட்டும் எரிய வைத்தவன், மற்ற விளக்குகளை அடைத்துவிட்டு, தொலைக்காட்சி முன்னே இருந்த சோபாவில் அமர்ந்துக் கொண்டான்.

குளித்து விட்டு வந்தவன், பாக்ஸரை அணிந்துக் கொண்டு அப்படியே கட்டிலில் விழுந்தான். சற்று நேரத்திலேயே, ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தான் அவன். அருகே எழுந்து வந்த தீரன், கம்போர்டரை இழுத்து குளிருக்கு இதமாக போர்த்தி விட்டான்.

தூக்கக் கலக்கத்திலேயே,

“தேங்க்ஸ் டூட்” என்றவனைப் பார்த்து தீரனுக்கு புன்னகை வந்தது.

நன்றாக தூங்கட்டும் என அவன் போனை எடுத்து அடைத்து வைத்தான். ஏற்கனவே அந்தப் போன் ரோமிங்கால் லைன் இல்லாமல் கிடந்தது. அலெக்ஸின் லக்கேஜை திறந்து ஜீன்ஸ் ஒன்றை எடுத்து வெளியே வைத்தவன், டீ ஷர்ட் ஒன்றை எடுத்து அயர்ன் செய்து வைத்தான். எல்லா வேலைகளையும் தூங்குபவனை டிஸ்டர்ப் செய்யாதபடி சத்தமில்லாமல் செய்தான்.

மூன்று மணி நேரமாகியும் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தான் அலேக்ஸ்.

“ஜோனா! ஜோனா!”

அந்தக் குரலில் மெல்ல அசைந்தான் அலேக்ஸ்.

“வேக் அப் ஜோனா சார்! சாப்பிட போகலாம்” என அவன் தோள் தொட்டு அசைத்து எழுப்பினான் தீரன்.

“ஹ்ம்ம்!” என்றவன் கஸ்டப்பட்டு கண்ணைத் திறந்தான்.

தூங்கி எழுந்ததும் தான் எங்கே இருக்கிறோம் என புரியாமல் மலங்க மலங்க விழித்தவனை புன்னகையுடன் பார்த்தான் தீரன்.

“நம்ம வோர்ல்ட்ல ஏழு கண்டங்கள் இருக்காம்! அதுல நார்த் அமெரிக்காவுல இருந்த ஜோனாவாகிய நீங்க, ஆசிய கண்டத்துல இருக்கற இந்தியாவுக்கு இன்னைக்கு காலைல தான் வந்து இறங்கிருக்கீங்க! கண்டம் விட்டு கண்டம் வந்த ஜோனாவுக்கு அடிமையா அதாவது அசிஸ்டண்டா இருக்க இந்த ஆள நேர்ந்து விட்டுருக்காங்க” என இடுப்பை வளைத்து வணங்கினான் தீரன்.

அவன் செயலில் சிரித்து விட்டான் அலேக்ஸ்.

அதன் பிறகு முகம் கழுவி வந்தவன், தீரன் எடுத்து வைத்திருந்த உடைகளை தேங்க்ஸ் சொல்லி, அணிந்துக் கொண்டான்.

ரூமை பூட்டி விட்டு இருவரும் காரில் கிளம்பினார்கள்.

“வெஸ்டர்ன் வேணுமா? இல்ல இந்தியன் ஃபுட் ட்ரை செய்றீங்களா?”

“வந்த முத நாளே என் வயித்துக்கு அதிர்ச்சி குடுக்க வேணா தீரன். லெட்ஸ் கோ வெஸ்டர்ன். கொஞ்சம் கொஞ்சமா இங்க உள்ள உணவை சாப்பிட கத்துக்கறேன்” கொஞ்சும் தமிழ், கொஞ்சம் ஆங்கிலம் கலந்து பேசினான்.

“நீங்க தமிழ்ல பேசறது ரொம்ப கியூட்ட இருக்கு. கேட்டுட்டே இருக்கலாம் போல இருக்கு”

தீரன் வளவள என பேச அலேக்ஸும் சகஜமாக பேசத் தொடங்கி இருந்தான்.

உணவை உண்டுக் கொண்டே,

“எப்ப வருவாரு மிஸ்டர் ஜெய்?” என கேட்டான் அலேக்ஸ்.

“ஹ்ம்ம்… இன்னும் ஒரு டூ டேய்ஸ்ல வந்துடுவாரு! போன் பண்ணனுமா? உங்க போன்ல லைன் இல்லன்னதும் அடைச்சிப் போட்டுருக்கேன். அப்புறம் லோல்லல் சிம் கார்ட் ஒன்னு வாங்கி தந்துடறேன்”

“இல்ல பரவாயில்ல! நீயே மிஸ்டர் ஜெய் கிட்ட சொல்லிடு தீரன், நான் வந்துட்டேன்னு! அங்க இப்போ நைட், மாம் தூங்கிட்டு இருப்பாங்க. லேட்டர் பேசிக்கறேன் அவங்க கிட்ட”

உணவை முடித்ததும், காரிலேயே ஊரை சுற்றிக் காட்டினான் தீரன். மழை நின்று வெயில் எட்டிப் பார்க்க ஆரம்பித்திருந்தது.

“நீங்க கூலர்ஸ் போட்டு கேப் போட்டிருக்கவும் உங்கள அடையாளம் தெரியல மக்களுக்கு. இருந்தாலும் ஏன் ரிஸ்க்னு தான் காரிலேயே உக்கார வச்சி சுத்திக் காட்டுறேன்.”

“நோ ப்ராப்ளம்! அண்ட் தேங்க்ஸ் தீரன்”

“எ..எதுக்கு தேங்க்ஸ்?”

“நான் சட்டுன்னு யார் கிட்டயும் பழகிட மாட்டேன். ஆனா உன் கிட்ட பேச, பழக ரொம்ப கம்பர்டபளா இருக்கு! யூ மேக் மீ ஃபீல் வெல்கம்” என சொன்னவன் கைகளை கிட்டார் வாசிப்பது போல செய்து கொண்டே பாட ஆரம்பித்தான்.

“You make me feel

You make me real

For the rest of my days, in so many ways

You make me feel”

அவனோடு தீரனும் சேர்ந்துக் கொண்டான். பாட்டு முடியும் போது இருவருமே,

“வெஸ்ட்லைப்!”(வெஸ்ட்லைப் 1990-2000 ஆண்டுகளில் பேமசான பேண்ட்) என சொல்லி புன்னகைத்துக் கொண்டார்கள்.

“இங்லிஸ் பாட்டுலாம் கேப்பியா நீ?” என வியந்தான் அலேக்ஸ்.

“நீங்க பறவையே எங்கு இருக்கிறாய்னு பாடறப்போ நாங்க இங்லிஸ்ல பாட மாட்டோமா!” என கேட்டு சிரித்தான் தீரன்.

அந்தி சாயும் நேரம், கேப், கூலர்ஸ், ஜேக்கேட் என எல்லாம் போட சொல்லி அலேக்ஸை பெசண்ட் நகர் பீச்சுக்கு அழைத்துப் போனான் தீரன். அங்கே கடல் காற்றை அனுபவித்தப்படி இருவரும் இசை, பாட்டு, ஜோனாவின் ஆல்பம், என நிறைய பேசினார்கள்.

பேச்சு வாக்கில்,

“நிம்மதி தேடி இங்க வந்திருக்கேன் தீரன் ! ஐ வாண்ட் பீஸ் ஆப் மைண்ட்!” என சொன்னான் அலேக்ஸ். அந்தக் குரலில் இழையோடிய சோகத்தை உள்வாங்கிக் கொண்டான் தீரன்.

“நீ பழைய தமிழ் பாட்டுலாம் கேட்டுருக்கியா ஜோனா?”

“இல்ல தீரன். கேட்டது இல்ல”

“சரி வா! கார்ல ஏறனதும் அந்த பாட்ட போட்டு விடறேன்” என அவனை காருக்கு அழைத்துப் போனான் தீரன்.

“எல்லோருக்கும் நீ தானே பாடுவ! உனக்காக இப்போ ஒரு பாட்டு நான் டெடிகேட் செய்யறேன் ஜோனா!”

“கோ ஆன்”

தன் போனில் இருந்து ப்ளூதூத் கனேக்ட் செய்து பாட்டை போட்டு விட்டு சேர்ந்து பாடினான் தீரன்.

“என்ன நினைத்து என்னைப் படைத்தான்

இறைவன் என்பவனே!”

என பாடியபடியே தன் பாக்கேட்டிலிருந்து கைக்குட்டையை எடுத்து அலேக்ஸின் முகத்தை துடைப்பது போல மூக்கில் அழுத்தினான். என்ன நடக்கிறது என உணர்ந்து தடுப்பதற்குள், அவன் தலையை இறுக்கிப் பிடித்து அசைய முடியாதபடி செய்தான் தீரன். மெல்ல மயங்கி அப்படியே தீரன் மேல் சாய்ந்தான் அலேக்ஸ். சீட்டை நன்றாக கீழிறக்கி, அவனை படுக்க வைத்து குளிராமல் இருக்க போர்த்தி விட்டான் தீரன்.

மறுநாள் வந்த சுவடு தெரியாமல் காணாமல் போயிருந்தான் அலெக்சாண்டர் ஜோனா!

{மயங்குவா(ன்/ள்)}

(நிறைய பேர் மழை புயல்னு பயத்துல இருப்பீங்க. எந்த சேதாரமும் இல்லாம எல்லோரும் நல்லா இருக்கனும்னு வேண்டிக்கறேன். உங்க மைண்ட் கொஞ்சம் டைவேர்ட் பண்ணறதுக்காக எபி போட்டுருக்கேன். படிங்க. இருக்கற நிலையில கமேண்ட் போட முடியலைனாலும் நான் புரிஞ்சுப்பேன். டேக் கேர் டியர்ஸ்.. லவ் யூ ஆல்)

Leave a Reply

error: Content is protected !!