கனவு 20

கனவு 20

அத்தியாயம்-20

முருகானந்தம் குடும்பம் சென்ற பின் சுதாகரனும் எதுவும் சொல்லாமல் சென்று விட்டான். பின் அனைவரும் உள்ளே
செல்ல மதி அழுது கொண்டிருந்த வியாஹாவைச் சமாதானம் செய்து தூங்க வைத்திருந்தாள். உள்ளே
நுழைந்தவுடன் “ஜீ நாளைக்கே
மருதமலைல கல்யாணம்” என்றான்.

“நாளைக்கே வா” – வாயைப் பிளந்தான் ஜீவா. “நிறைய வேலை இருக்கே விக்கி”
என்றான் ஜீவா.

“எதுவும் இல்லை.. எனக்கு ஒரு வேஷ்டி சட்டை.. கௌசிக்கு ஒரு புடவை.. உங்க எல்லாருக்கும் ட்ரெஸ்.. அப்புறம் தாலி.. ஐயர் ” என்றான் தெளிவாக.

“பணம் இருக்கா டா” – ஜீவா.

“அதெல்லாம் இருக்கு ஜீ.. தேவைக்கு அதிகமாவே இருக்கு” – விக்னேஷ்.

“சரி இப்பவே கிளம்பலாம்” என்று ஜீவா சொல்ல “ஒரு நிமிஷம்” என்றாள் கௌசிகா.

எல்லோரும் அவளைப் பார்க்க “அப்பா…” என்று இழுத்தாள் கௌசிகா. அப்போது தான் வரதராஜன் நியாபகமே வந்தது
அனைவருக்கும்.

மகாலிங்கம் அய்யா உள்ளே புகுந்தார் “விக்கா.. நீ இதைப் பத்தி வரதராஜன் கிட்ட பேசிவிடு.. ஹாஸ்பிடல்ல இருந்து வந்தாலும் அவனால் கல்யாணத்திற்கு வர முடியாதேப்பா..” என்று அவரும்
குழம்பி எல்லோரையும் குழப்பினார்.

போன் போட்டு சுமதியிடம் விஷயத்தைக் கேட்டான் விக்னேஷ். “அம்மா.. கல்யாணத்தை எப்போ வைக்கலாம்” என்று கேட்டான்.

“இப்போ என்னடா அவசரம்.. ஒரு மாசம் போகட்டும்” என்று சுமதி சொல்ல விக்னேஷ் பிடிவாதமாக நின்றான்.

“எதுக்கு உனக்கு அவசரம்?” – சுமதி.

முதலில் சொல்ல வேண்டாம் என்று நினைத்தவன்.. சொல்ல வேண்டிய கட்டாயத்தில் சொன்னான். பரமேஸ்வரியின் பேச்சையும் கூறினான்.
சுமதியிடம் இருந்து அந்த நிமிடம் போனை வாங்கிய வரதராஜன் அனைத்தையும் கேட்டுவிட்டார். போனில் எந்த பதிலும் இல்லாததை உணர்ந்ந
விக்னேஷ் “அம்மா… ஹலோ.. அம்மா கேக்குதா” என்றான்.

“கேக்குது விக்னேஷ்.. நீங்க நாளைக்குக் கல்யாணத்தை முடிச்சிட்டு என்ன வந்து
பாருங்க” என்று வைத்துவிட்டார்.

நடந்ததை விக்னேஷ் அனைவரிடமும் சொல்ல எல்லோரும் அமோதித்தனர்.
முதலில் தயங்கிய கௌசியும் அந்தக் கல்யாணத்தில் அப்பா இருந்து என்ன ஆனது.. எல்லாம் விதிப்படி தானே
நடந்தது.. என்று யோசித்து சமாதானம் ஆனாள்.

பின் எல்லோரும் சென்று புடவை.. துணி தாலி என அனைத்தும் எடுத்தனர்.
ஐயருக்கும் விக்னேஷே சொல்லிவிட்டான். பின் மதிக்குப் பல நாளாகத் தெரிந்த
டைலரிடமே ஜாக்கெட்டைக் கொடுத்தனர். பின் அதையும் அங்கிருந்தே வாங்க “உனக்கு வேறு ஏதாவது வேணுமா?”
என்று கேட்டான் விக்னேஷ் கௌசியிடம்.

“இல்லையே.. அதான் எல்லாம்
வாங்கியாச்சே” என்று சொல்ல மறுபடியும் “நல்லா நியாபகப்படுத்திப் பார்” என்றான் விக்னேஷ்.

“இல்ல…” என்றாள் கௌசி.

“சரி நீ என்கூட வா” என்று கௌசியின் கையைப் பிடித்த விக்னேஷ் “ஜீவா.. நீங்க
சாப்பிடப் போறன்னு சொன்னீங்கள.. நீங்க போய் சாப்பிட்டுட்டு இருங்க.. நாங்க
வந்திடறோம்” என்று சொல்ல
அனைவரும் அவர்களை விட்டுவிட்டு அகன்றனர்.

கௌசியை அவன் கூட்டிச் சென்ற இடம் “லாக்மீ காஸ்மெட்டிக்ஸ்” (Lakme
cosmetics).. அவனும் கம்பத்திலிருந்தே கவனித்துக் கொண்டிருந்து தான்
இருக்கிறான்.. அத்தனை காஸ்மெட்டிக்ஸ் ஆசை ஆசையாக வாங்குபவள் இப்போது ஒன்றுமே இல்லாமல் இருப்பது அவனை
உறுத்தியது.

“ஏன் இங்கே” என்று தாங்கியபடியே கேட்டாள் கௌசி.

“இதெல்லாம் நீ யூஸ் பண்றது தானே.. வா வாங்கலாம்” என்று அவளை அழைக்க அவளோ நகராமல் நின்றான்.

“இல்லடா.. நான் இதெல்லாம் இப்போ யூஸ் பண்றது இல்லை” என்றாள் எங்கோ
பார்த்தபடி.

“ஏன்” எனக் கேட்டான் விகனேஷ்.

“….” – என்ன சொல்லுவது என்று தெரியாமல் நின்றாள்.

“இதெல்லாம் நீ எவ்ளோ ஆசையா வாங்குவனு எனக்குத் தெரியதா?” சொல்லு ஏன் வேண்டாம்” என்று
வினவினான்.

“இல்லடா.. அந்த இன்சிடென்ட் அப்புறம் எதுவும் இதப்பத்தி எல்லாம் தோணல அதான்” என்றாள் கௌசி சின்னக்குரலில்.

அவளைக் கூர்ந்து பார்த்தவன் “இங்க பாருடி.. நீ நாளைல இருந்து வெறும் கௌசிகா இல்ல.. கௌசிகா
விக்னேஷ்வரன்..” என்று அழுத்தமாகக் கூறியவன் “நீ நாளைல இருந்து பழைய
மாதிரி இரு” என்று உள்ளே அழைத்துச் சென்றான். அவள் வேண்டாம் வேண்டாம் என்று சொல்ல அவள்
உபயோகப்படுத்தும் ஒவ்வொன்றையும் வாங்கிக் குவித்தான் விக்னேஷ்.

பின் இருவரும் சாப்பிட வர எல்லோரும் சாப்பிட்டு விட்டு அவரவர் வீடு திரும்பினர்.
மகாலிங்கம் அய்யாவை இறக்கிவிட்டு விக்னேஷும் கௌசியும் வீட்டிற்குள்
நுழைந்தனர்.

“விக்னேஷ்..” என்று அழைத்தாள் கௌசி.

“என்ன” என்பது போலத் திரும்பிப் பார்த்தான் விக்னேஷ்.

“எதுக்கு டா.. என்னை கல்யாணம் பண்ற.. திடீர்னு ஏன் இந்த முடிவு” என்று
கேட்டாள் கௌசிகா. அந்தக் கேள்வியில் ஒரு நிமிடம் தடுமாறித்தான் போனான்
விக்னேஷ்.

என்ன என்று சொல்லுவான்? உனக்கு அன்று கல்யாணம் ஆன அன்று உன் மேல் காதல் வந்தது என்றா.. (அவனைப்
பொறுத்த வரை அவள் குருவை ஏற்று வாழ்ந்தாள் தானே). இப்போது அதைச்
சொல்லி இவள் நம்மைத் தப்பாக நினைத்து விட்டால்? என்று நினைத்தான். ஆனால் உண்மையை மறுக்கவும் அவன் விரும்பவில்லை.

“உன்னை எனக்குப் புடிச்சிருக்கு கௌசி” என்று மொட்டையாகச் சொல்லிவிட்டான்.

“உனக்கு என்னை எப்பவுமே புடிக்கும் டா.. அது தெரியும்.. நான் கல்யாணத்தைப்
பத்திக் கேட்கிறேன்” என்று விடாமல் கேட்டாள்.

“ஏன் கௌசி.. அது போதாதா நான் உன்னைக் கல்யாணம் பண்ண” என்று கேட்டான்.

“நம்ம குடும்பத்துக்காகத் தானே என்னை நீ கல்யாணம் பண்ற?” என்று மனதில்
நினைத்ததைத் கேட்டு விட்டாள்.

“இல்ல டி.. உனக்காக” – விக்னேஷ்.

“என்ன வாழ்க்கை குடுக்கிறியா?” – கௌசிகா.

“இல்லவே இல்லை டி.. உன்கூட
இருக்கணும்ன்னு தோணுச்சு.. உன்ன விட எனக்கு மனசு இல்ல” என்று சொல்லாமல் தன் காதலை சொன்னான்.
ஆனால் கௌசிக்குத் தான் அது புரியவில்லை. (எப்படிப் புரியும்.. இந்த விக்னேஷ் வாயைத் திறந்து சொன்னால்
தானே.. எஸ் ஜே சூரியா மாதிரி பேசிட்டு இருக்கான் மாங்கா).

கௌசி மறுபடியும் ஏதோ கேட்க வர விக்னேஷிற்கு ஜீவா போன் செய்தான். போனை எடுத்துக் கொண்டு அவனிடம்
பேசச் சென்று விட்டான் விக்னேஷ். பின் அவன் திரும்பி உள்ளே வர கௌசி ஹாலில் நேற்றுப் போலவே பெட்டை
எடுத்துப் போட்டுக் கொண்டு இருந்தாள்.

“கௌசி.. ” – விக்னேஷ் அழைத்தான்.

“ம்ம்” – என்றாள் பெட்ஷீட்டை
விரித்தபடியே.

“நாளைக்கு காலைல 6.30 டூ 7.30 முகூர்த்தம்” என்று சொன்னான்.

“ம்ம் சரி…” என்றுவிட்டுப் படுத்தாள்.

ஒரு நிமிடம் அவளை முறைத்தவனுக்கு சிரிப்பே வந்தது. ‘டேய் விக்னேஷ்.. உன்ன மாதிரி பொண்ணு எவனுக்கும் கிடைக்க மாட்டான் டா.. நீ தான் வெக்கப்படணும் போல.. இவட்ட அதெல்லாம் எதிர்ப்பார்க்க முடியாது” என்று தனக்குத்தானே நினைத்துச் சிரித்தான்.

அடுத்தநாள் காலை எழுந்த இருவரும் பரபரப்பாக கிளம்பினர். மகாலிங்கம் அய்யா வீட்டிற்கு வர விக்னெஷும் வர இருவரும் பேசிக்கொண்டிருந்த போது
கௌசியும் வெளியே வந்தாள். நேற்று எடுத்த சிவப்பு பட்டுப் புடவை அவளைத் தழுவி இருக்க கையில் வளையல்..
காதில் ஒரு சின்ன ஜிமிக்கி.. மற்றும் கழுத்தில் ஒரு ஒற்றைச் செயின் என் அணிந்திருந்தாள். அவன் வாங்கித் தந்த
காஸ்மெட்டிக்ஸையும் அவள் லைட்டாகப் போட்டிருக்க அவள் தேவைதையாகத் தெரிந்தாள்.

வாயைத் திறந்து பார்த்துக்
கொண்டிருந்தவனிடம் மகாலிங்கம் அய்யா கிசுகிசத்தார். “போதும் விக்கா..
தண்ணி டேன்க்க க்ளோஸ் பண்ணு” என்று சொல்ல சுயநினைவிற்குத் திரும்பினான். நல்லவேளை சேலை சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருந்த கௌசி இதை கவனிக்கவில்லை.

மூவரும் மருதமலை செல்ல அங்கு ஜெயா, சதாசிவம், ஜீவா, முருகானந்தம், மதி, வியாஹா, சுமதி, சந்தியா அவளின்
கணவன் ரமேஷ் .. என அனைவரும் நின்றிருந்தனர். விக்ரமும் (அதான்
போட்டோகிராஃபிஸ்ல இருக்கிறவன்).

கௌசி அக்னியை வெறித்தபடியே உட்கார்ந்திருந்தாள். முதலில் நடந்தது எல்லாம் அவள் கண் முன் வந்து சென்றது. உதட்டின் மேலும் நெற்றியிலும் விடாமல்
வியர்த்துக் கொட்டியது. அவளைப் பார்த்த மதி அவளின் அருகில் சென்று
கர்ச்சிப்பால் நெற்றியிலும் உதட்டிலும் ஒற்றி எடுத்து கௌசியின் கையிலேயே
கர்ச்சிப்பைக் கொடுத்தாள்.

பின் ஐயர் தாலியை எடுத்துத் தர தன் மாமன் மகள் கௌசியின் கழுத்தில் மங்கல நாண் பூட்டி விக்னேஷ்வரன்
அவளைத் தன் மனைவியாக்கிக் கொண்டான். மூன்றரை வருடங்களுக்கு
பின் விக்னேஷின் மனதில் எழுந்த நிம்மதியையும் நிறைவையும் சொல்ல அவனுக்கு வார்த்தைகள் கிடையாது. சூழ இருந்த அனைவரின் முகத்திலும்
அதே நிறைவு தெரிந்தது.

பின் அனைவரும் கடவுளை தரிசித்து விட்டு கீழே இறங்கி நேராக சென்ற இடம் வரதராஜன் இருந்த ஹாஸ்பிடல். மகளையும் மருமகனையும் மணக்கோலத்தில் பார்த்த
வரதராஜனிற்கு மனம் நிறைந்தது. இருவரும் அவரது காலைத் தொட்டு வணங்கிக் கொள்ள தனது ஆசிர்வாதத்தைத் தந்தார்.

பின் ஜெயாவும் சுமதியும் ஏதோ
பேசிக்கொள்ள மதியும் அவர்களுடன் சேர்ந்து கொண்டாள். “ரைட்ரா.. ப்ளான்
ஏதோ பண்றாங்க. நாம் இதுக்குள்ள போகமா இருக்கிறது நல்லது” என்று
தனக்குள் பேசிக் கொண்டான் ஜீவா அவர்களை கவனித்துவிட்டு.

“அண்ணா.. இன்னிக்கு நான் உங்க கூட இருக்கேன்” என்றார் ஜெயா தாமாக.

“சரிம்மா..” என்றவர் அயர்வாக கண்களை மூடிக் கொண்டாள்.

எல்லோரும் சொல்லிவிட்டுக் கிளம்பி கீழே வந்தனர். நேராக ஜீவா வீட்டிற்குப் போகலாம் என்று சொல்ல “ஏன்” எனக்
கேட்டான் விக்னேஷ். எதையோ சொல்லி சமாளித்தார் சுமதி. பின் ஜீவாவின் வீட்டை அடைய சுமதி ஜீவாவைத் தனியாக அழைத்து.. ஜீவாவிடம்
பணத்தைக் கொடுத்து “போ” என்றார்.

“சித்தி…” என்று ஜீவா இழுத்தான்.

“புரியுது ஜீவா.. ஆனா சம்பிரதாயங்களை செய்து தான் ஆக வேண்டும்.. விக்னேஷிடம் கேட்டால் வேண்டாம்ன்னு சொல்லுவான்.. நீ மதியையும் கூட்டிட்டுப் போய் நான் சொன்ன மாதிரி செய்” என்றார் சுமதி.

“சரி சித்தி” என்று அவன் கிளம்பிவிட்டான் மதியைக் கூட்டிக்கொண்டு.

சந்தியாவின் கணவரிடம் நன்கு பேசிய கௌசி சந்தியாவிடம் திரும்பவில்லை.
கௌசிக்கு அந்த அளவு அன்று சந்நியா பேசியதில் கோபமும் ஏமாற்றமும் இருந்தது. “கௌசி.. சாரி கௌசி.. அன்னிக்கு நான் பண்ணியது தப்பு தான்.. அன்னிக்கு பரமேஸ்வரி அத்தை என்னிடம் ஏத்தி விட்டது உன்கிட்ட அப்படி
பேச வைத்துவிட்டது. இருந்தாலும் சுயபுத்தி இல்லாம நான் பேசுனது தப்பு தான் கௌசி. சாரி.. என்கிட்ட பேசு” என்று தப்பை உணர்ந்து நிறை மாத கர்ப்பிணியாக சந்தியா பேச கௌசிக்கு மனம் கரைந்தது.

“சரி விடு சந்தியா.. அதை எல்லாம் மறந்திடு..” என்ற கௌசி கொஞ்சம் இயல்பாகப் பேசினாள் சந்தியாவிடம்.

மூன்று மணி நேரம் கழித்து ஜீவாவும் மதியும் வர விக்னேஷோ அலுப்பில்
ஷோபாவிலே படுத்துத் தூங்கிக் கொண்டு இருந்தான். கௌசி சுமதி.. சதாசிவம்.. சந்தியா.. ரமேஷ்.. மகாலிங்கம் அய்யாவுடனும் ஏதோ பேசிக்
கொண்டு இருந்தாள்.

பிறகு விக்னேஷை சுமதி எழுப்ப எழுந்தவன் தூக்கக் கலக்கத்திலே எழுந்து சென்று முகத்தைக் கழுவிக் கொண்டு
வந்தான். பின் எல்லோரும் அமர சுமதியும் மதியும் பரிமாறினர். பின் அவர்கள்
இருவரும் அமர சுமதிக்கும் மதிக்கும் கௌசியும் சந்தியாவும் பரிமாறினாள்.
வியாஹாவுடன் விக்னேஷ் விளையாட ஜீவா ஏதோ யோசனையிலேயே
இருந்தான். “ஏன்டா.. என்ன யோசனை?” என்று விக்னேஷ் தோளில் அடித்து வினவ
“இல்லடா.. ஆபிஸ் யோசனை” என்று சமாளித்தான் ஜீவா.

பின் வளைகாப்பு முடிந்து விட்டதால் சந்தியா இங்கேயே தங்க.. எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினான் சந்தியாவின் கணவன் ரமேஷ். பின் மதி
ஏதோ கண்களால் ஜாடை செய்ய சுமதி நான் பாத்துக்கறேன் என்பது போலக் கண்களை மூடித் திறந்தார்.

“சரி கிளம்பலாம் டைம் ஆச்சு” என்று விக்னேஷ் எழுந்தான்.

“இல்லை விக்னேஷ்.. நான் வரல.. சந்தியா வந்திருக்கால.. அவ என்னை இருக்க சொன்னா” என்று சொல்ல “நான் எப்போ?” என்பதைப் போலப் பார்த்தாள் சந்தியா.

சந்தியா தனியா இருக்க வேண்டாம் என்று எண்ணிய விக்னேஷும் “சரி நீங்க காலைல முடிஞ்சா வாங்க.. இல்லைனா இங்கியே தங்கிட்டு காலைல அப்படியே
ஹாஸ்பிடல் போறேன்னாலும் போங்க.. உங்களுக்கு எது சவுகரியம்ன்னு பாத்துக்கங்க” என்று சொல்லிக் கொண்டு
கௌசியையும் மகாலிங்கம்
அய்யாவையும் கூட்டிக் கொண்டுக் கிளம்பினான்.

மகாலிங்கம் அய்யாவை இறக்கிவிட்டு இருவரும் வீட்டை அடைந்தனர். ப்ரௌனி வந்து இருவரின் காலையும் சுற்ற கௌசி ப்ரௌனியைத் தூக்கிக் கொஞ்சினாள்.
“தங்கக்குட்டி” என்று ப்ரௌனியைக் கொஞ்சி முத்தமிட்டவள் கழுத்தை நீவி
விட்டுச் செல்லம் கொஞ்சினாள்.

கௌசி நிமிர விக்னேஷ் அவளைத் தான் கையைக் கட்டிக் கொண்டு பார்த்துக்
கொண்டு இருந்தான். “என்னடா.. உள்ள போகலையா” என்று கேட்டாள்.

“சாவி வாங்குனையா?” என்று கேட்டான் குறுஞ்சிரிப்புடன்.

“அப்போ நீ வாங்கலையா?” என்று கேட்க விக்னேஷ் தலையில் கை வைத்தபடி
நின்றான்.

தன் அன்னைக்குப் போன் போட்டவன் “அம்மா.. சாவி உங்க கிட்டையா?” என்று
வினவினான்

“அட ஆமாம்..” என்றவர் “சரி விக்னேஷ்.. மணி எட்டாச்சு.. இனி நீ கிணத்துக்கடவுல
இருந்து இங்க வர வேணாம்.. பேசாம நம்ம மாடி அறைக்கு போய் தங்கிக்கோங்க” என்று சுமதி சொல்ல விக்னேஷிற்கு ஏதோ இடிப்பது போல
இருந்தது.

“சரிம்மா” என்றவன் போனை
அணைத்தான்.

“என்ன சொல்றாங்க” என வினவினாள் கௌசி.

“சாவி இனி வந்து வாங்கிட்டு வர வேண்டாம் ன்னு சொல்டாங்க டி.. மேல இருக்க ரூம்க்கு போக சொல்டாங்க”
என்றான்.

“மேல ரூம் இருக்கா என்ன?” என்று கேட்டாள் புருவமுடிச்சுடன்.

“ஆமா டி.. சின்ன ரூம் தான்.. வா” என்று அழைக்க கௌசி அப்படியே தயங்கி நிற்பதைக் கண்டான். அவள் தயங்கி நிற்பதைக் கண்டவனுக்கு
முதலில் புரியவில்லை.. சில நொடிக்குப் பிறகே புரிந்தது. அன்றைய இரவு அவர்களுக்கு என்ன இரவு என்று. இருவரும் அதைப் பத்தி அவ்வளவாக
எண்ணவில்லை. சில நொடிகள் இருவருமே சங்கடமாக உணர “கௌசி
வா.. மேல இ.. இரு.. இருக்க கட்டில் கொஞ்சம் பெருசு தான்” என்று சின்னக் குரலில் அழைத்தான்.

“ம்ம்” என்று கௌசி சொல்ல.. இருவரும் வீட்டிற்கு வெளியில் இருந்த படியிலேயே ஏறி மாடிக்குச் சென்றனர். மேலே
இருவரும் வர விக்னேஷ் சென்று கதவைத் திறந்தான். கௌசியும் பின்னோடு வந்து நின்றாள். விக்னேஷ் இருட்டில் தேடிச் சென்று லைட்டைப் போட..வந்த வெளிச்சத்தில் அறையைக் கண்ட இருவருமே அதிர்ந்தனர்.

Leave a Reply

error: Content is protected !!