யாழ்-2

IMG-20210214-WA0021-db6c35da

யாழ்-2

யாழ் -2

சென்னை.

ஏர்ப்போர்ட் வந்ததிலிருந்து நூறாவது முறையாகத் தன் வாட்ச்ஐப் பார்த்தான் அஷ்வின்குமார். இன்று அவனின் அருமைதங்கை தர்ஷினி, முழுதாக இரண்டு வருடம் ஜெர்மனியில் பிஸினஸ் மேனேஜ்மெண்ட் படித்து முடித்துவிட்டு இன்றுதான் வருகிறாள்.

தங்கை வரும்நேரம் தெரிந்தாலும், இரண்டு மணிநேரத்திற்கு முன்னமே சென்று, அவனின் பிசினஸையும் தள்ளி வைத்துவிட்டு அவளுக்காகக் காத்திருந்தான் அஷ்வின்குமார். ப்ளைட் சொன்ன நேரத்திற்கு லேண்டாக தங்கையை எதிர்நோக்கிக் காத்திருந்தான்.

அவன் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் வந்து கொண்டிருந்தாள் தர்ஷினி. ஐந்தரையடி உயரத்தில் படிப்பிற்கேற்ற கம்பீரத்துடனும், அழகுடனும் வந்தவளை காணச் சகோதரனுக்கே உண்டான பெருமை வந்தது அஷ்வினிற்கு.

வந்து நின்று தன் அண்ணனைத் தேடியவள், அவன், அவளைப் பார்த்து பல்வரிசைத் தெரிய சிரித்துக்கொண்டிருப்பதைக் கண்டு, “அண்ணா!” கையைத் தூக்கி ஆட்டியபடி ஓடிவந்தாள்.

“வெல்கம்பேக் தர்ஷு” கையை முன்வைத்து குனிந்து தங்கையை கேலியாக அஷ்வின் வரவேற்க,

“அண்ணா” என்று பல்லைக் காட்டியவள், “என்ன அண்ணா. நான் வர்றேன். நீங்க கூப்பிடாம நின்னுட்டே இருக்கீங்க?” குறையாகக் கேட்க,

“இல்ல தங்கச்சி மேடம். ரொம்பநாள் அப்புறம் வந்திருக்கீங்க. அதான் அண்ணனை அடையாளம் தெரியுதா என்னன்னு பார்த்துட்டே இருந்தேன்” இதழ் விரியாமல் புன்னகைத்தபடி நக்கலடிக்க,

“நான் படிக்கணும்ல. அதான் அண்ணா இங்க வரவே முடியல” சிரித்தபடியே சொன்னவளை, பொய்யாய் முறைத்துச் சிரித்தான் அஷ்வின்.

“அதான் பாத்தானே. எல்லாத்துலயும் ஜஸ்ட்பாஸ், அப்புறம் எங்காச்சு ஊர் சுத்திட்டு பேஸ்புக், இன்ஸ்டாகிராம்ல போட்டோ போட்டுட்டு இருக்கிறது” என்று சிரிக்க தர்ஷினியின் முகம், பொய்யாய் முறைத்து வேறுபக்கம் திரும்பியது.

“சரி.. சரி! செல்லகுட்டில.. சிரிப்பியாம்!” அவளின் தோளில் கை வைத்து அவன் சமாதானம் செய்ய, இரண்டு வருடம் பிரிந்த அண்ணனை அவளால் பொய்யாய்கூட கோபித்துக்கொள்ள முடியவில்லை.

“சரி போகலாம்” என்றிட, அஷ்வினுடைய கார்டு ரிஷி வந்து லக்கேஜை எடுத்துக்கொண்டான். அண்ணனும் தங்கையும் கார் பார்க்கிங் வந்து தங்களது ஆடிஏ சிக்ஸ் காரில் ஏற, கார் தீயாய் வேகமெடுத்தது.

வரும்வழி முழுவதும் வளவளத்துக்கொண்டே வந்தவளிடம் சலிக்காமல் பேசிக்கொண்டு வந்தான் அஷ்வின்குமார். பொதுவாக அதிகம் பேசுபவன் கிடையாது. அதற்கென்று பேசாதவனும் கிடையாது.

ஆனால், தங்கையைப் பார்த்த பூரிப்பில் அவனின் நிலையும் இன்று மாறியது.

“அண்ணா! நான், நாளைல இருந்தே நம்ம ஆபிஸ்க்கு வரலாம்னு இருக்கேன்”

“ஏன்மா? ஒன்மந்த் சில் பண்ணிக்கோ!”

“இல்லண்ணா… போரடிக்கும். நானும் வரேண்ணா ப்ளீஸ்!” தங்கை
குரலை இழுத்துக் கெஞ்ச,

“சரி சரி! வந்து ஆபிஸை இரண்டு பண்ணப்போற. பாவம் என் ஸ்டாஃப்ஸ் எல்லாம்.” அஷ்வின் வம்பிழுக்க,

“போண்ணா! எப்பவுமே ஜோக்தான் உங்களுக்கு” முறுக்கிக்கொள்ளும் நேரத்தில், நீலாங்கரை கடற்கரை பக்கமிருந்த அவர்கள் வீடும் வந்தது. வீடு என்று சொல்வதைவிட, மாளிகை என்றுதான் சொல்ல வேண்டும்.
மகளும் மகனும் இறங்க, இவர்களை வரவேற்கவென தாய் செல்வமணி ஆரத்தியோடு நிற்க, உடன் தந்தை நாகேஷ்வரனும் நின்றிருந்தார்.

அஷ்வினும், தர்ஷினியும் இறங்கிவர, அன்னை தந்தையைக் கண்டு ஓடிவந்த தர்ஷினியை, “நில்லு தர்ஷு… ஆரத்தி எடுத்துக்கறேன்” செல்வமணி சொல்லிவிட்டு, ஆரத்தி சுற்ற, சிரித்தபடி நின்றிருந்தாள்.

“நில்லு குமரா! உனக்கும் எடுத்தறேன்” அஷ்வினையும் நிற்க வைத்து அவனுக்கும் சுற்றினார். அஷ்வின்குமார் எப்போதுமே வீட்டில் ‘குமரா’, வெளியில் ‘அஷ்வின்’.

ஆரத்தியை சுற்றிமுடித்த செல்வமணி, வேலைக்கார பெண்மணியிடம் ஆரத்தித் தட்டைக் கொடுத்துவிட்டு உள்ளே சென்றுவிட்டார். எதுவும் பேசாமல் உள்ளே சென்ற அன்னையைப் பார்த்த, இருபிள்ளைகளும் ஒருவரையொருவர் ‘என்ன?’ என்பதைப்போல பார்த்துக்கொண்டனர்.

பிள்ளைகளின் முகத்தைக் கண்ட நாகேஷ்வரன், இருவரின் அருகில் வந்து, “உங்க அம்மா கோவமா இருக்காளாம்” அவர்களின் காதில் கிசுகிசுத்தார்.

“அண்ணா இதை இப்படியே விடக்கூடாது!” வீராங்கனையைப்போல கைகள் இரண்டையும் இடையில் வைத்து தர்ஷினி சொல்ல,

“ஆமா, விடக்கூடாது” இரு கைகளையும் கம்பீரமாய் கட்டிக்கொண்டு சொன்னவன், “வா உள்ள போலாம்” தங்கையின் கரத்தை பற்றியவன் உள்ளே அழைத்துச் செல்ல, வளர்ந்த பிள்ளைகளின் சிறுபிள்ளைத் தனத்தை எண்ணி, சிரித்துக்கொண்டே பின்தொடர்ந்தார் நாகேஷ்வரன்.
உள்ளே செல்வமணி, முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு அமர்ந்திருக்க, தன் அன்னையின் இருபக்கமும் சென்றமர்ந்தனர் தர்ஷினியும் அஸ்வினும்.

“அம்மா, சிரிம்மா”அன்னையின் தோளில் சலுகையாய் சாய்ந்தபடி கொஞ்சினாள் தர்ஷினி.

“உனக்கு, இந்த அம்மா இப்போதான் ஞாபகம் வந்தேனா?” முகத்தைத் திருப்பிக்கொண்டு சோகமும்கோபமுமாக செல்வமணி கேட்டார்.

“நான், எப்போம்மா உங்களை மறந்தேன்? ஞாபகம் வர…” தர்ஷினி ஐஸ்மழையை அன்னையின் தலையில் டண் கணக்கில் வைக்க, மகளை முறைத்த செல்வமணி,

“எவ்வளவு நாள் உன்னை வரச்சொல்லி கெஞ்சி இருப்பேன். அப்போ எல்லாம் வர முடியல. இப்பமட்டும் வந்து கொஞ்சறியா?” என்றார்.

நாகேஷ்வரனும் அஷ்வினும் பிசினஸ் என சென்றுவிட்டால் தனியே உட்கார்ந்திருக்கும் கொடுமை அவருக்கு மட்டுமே தெரியும். அதிலும் மகள் மேற்படிப்புக்கு சென்றபிறகு மிகவும் மோசமாகிப் போனது.

“அண்ணா! நீயாவது அம்மாகிட்ட கொஞ்சம் சொல்லேன்” சகோதரனைச் சப்போர்ட்டிற்கு இழுத்தாள் தர்ஷினி.

கால்மேல் காலிட்டு ஷோபாவின் இருபக்கமும் கை வைத்து கம்பீரமாய், ஆணின் இலக்கணமாய் அமர்ந்திருந்த அஷ்வின், தங்கைக்காக “அம்மாமா!” என்றழைக்க,

சட்டென மகனிடம் திரும்பியவர் “சொல்லு குமரா! நீ என்ன சொல்லப் போற? நீயும் காலையில போனா, நைட் வருவ. என்னைப் பத்தி, யாராவது, என்னிக்காவது யோசிச்சு பாத்திருக்கீங்களா. என்கூட இருந்தவளாம் பேரன் பேத்தி எடுத்துட்டா. எனக்குதான் அந்தக் கொடுப்பினை இல்ல” என்றவரிடன் வதனத்தில் சோகத்தின் நிழல் சூழ்ந்தது.

தன் தந்தை நாகேஷ்வரனை பிள்ளைகள் இருவரும் நோக்க, அவரின் முகத்திலும் சிறிது வருத்தமிருந்ததை அறிந்தனர் இருவரும்.

“அட அம்மாவே! இதுக்குதான் இவ்வளவு சோகமா? நான் எல்லாம் கல்யாணத்துக்கு ரெடிப்பா” கண்ணடித்துக் கொண்டே தர்ஷினி, இரு தோள்களையும் குலுக்க அங்கிருந்த மூவரும் சிரித்தனர்.

தங்கையை சந்தேகமாய்ப் பார்த்த அஷ்வின், “என்ன தர்ஷு? ஜெர்மன்ல யாராவது பார்த்து வச்சிட்டுதான் வந்தியா?” வம்பிழுக்க,

“அப்பாஆஆ இங்க பாருங்கப்பா!” சிணுங்கலுடன் கால்களை தரையில் உதைத்து சிணுங்கிக்கொண்டு சென்று, தந்தை நாகேஷ்வரன் அருகில் அவள் அமர்ந்துகொள்ள,

“விடுடாமா!” மகளை தோளில் சாய்த்துக்கொண்டார் அவர்.

“அம்மா பசிக்குது!” சட்டைமேல் வயிற்றை நீவியபடி தர்ஷினி சமையல் அறையில் கண் வைத்தபடி சொல்ல,

“போய்க் குளிச்சிட்டு வா தர்ஷு. எல்லாம் ரெடியா எடுத்து வைக்கிறேன்” மகள் கல்யாணத்திற்கு சம்மதம் சொன்ன சந்தோஷத்தில் தர்ஷினியின் கன்னத்தில் ஒரு முத்தத்தை தந்துவிட்டு, சமையலறைக்குள் சிட்டாய் ஓடினார் செல்வமணி.

தர்ஷினியும் போய் குளித்துவிட்டு வர, டைனிங்ரூமில் தடபுடலாக விருந்தே தயாராகியிருந்தது. மட்டன் பிரியாணி, சிக்கன் சுக்கா, நண்டு மற்றும் இறால்மசால் என அங்கு ஜூனியர் குப்பண்ணா மெஸ்ஸையே மகளுக்காக தயாராக்கி வைத்திருந்தார் செல்வமணி.

சமையலறைக்குள் நுழைந்த தர்ஷினி மூச்சையிழுத்து, இரண்டு வருடத்திற்குப் பிறகு கிடைத்த வீட்டுச் சாப்பாட்டின் மணத்தை நன்கு அனுபவித்தாள். நாசியில் ஏறிய மணத்தை வைத்தே வயிற்றை நிரப்பியவள், தனக்காக காத்திருந்த அண்ணனுடனும் தந்தையுடனும் சென்றமர்ந்தாள்.

அண்ணனுடன் அமர்ந்தவள், “அண்ணா, ஆஆஆஆ” என்று வாயைத் திறந்தாள்.

தங்கையின் செயலில் மனம் நெகிழ்ந்தவன், உதட்டில் மென் புன்னகையை உதிர்த்துவிட்டு, பிரியாணியையும், நண்டு மசாலையும் கலந்து எடுத்து தங்கைக்கு ஊட்டிவிட்டான்.

தந்தை நாகேஷ்வரன் மற்றும் தாய் செல்வமணி என அனைவரும் மாற்றிமாற்றி அவ்வீட்டின் இளவரசிக்கு ஊட்ட, வயிறுமுட்ட உண்டு முடித்தவள், “ஏஏஏஏஏப்ப்ப்ப்ப… போதும்” என்றாள் ஏப்பத்தை விட்டபடி.

“இன்னும் கொஞ்சம் சாப்பிடு தர்ஷு!” அன்னை ஊட்டவர,

“ய்யோ! ம்மா முடிலம்மா. வயிறு ஃபுல்லா இருக்கும்மா” வயிறுமுழுதும் முனியாண்டி விலாஸ் இருக்க, உட்காரமுடியாமல் சிறிது சாய்ந்து அமர்ந்தவளைக் கண்டு மூவரும் சிரித்தனர்.

“சரி தர்ஷூ இந்தா கடைசி வாய்” அஷ்வின், தங்கைக்கு தயிர்சாதத்தை ஊட்ட, அண்ணனுக்காக ஒருவாய் வாங்கியவள், எழுந்து சென்று சாப்பிடாத கையைக் கழுவிக்கொண்டு வாயைத் துடைத்தாள்.

அனைவரும் அமர்ந்து சிறிதுநேரம் பேச, அஷ்வின்குமாரின் செல்போன் அடித்தது. ஃபோனைப் பார்க்க, அவன் பி.ஏ நிரஞ்சன் தான் அழைத்திருந்தான்.

ஃபோனை எடுத்தவன், “யெஸ் நிரஞ்சன்” என்றான்.

“…” நிரஞ்சன் சொல்லியதைக் கேட்டு அஷ்வினின் முகம் இறுகியது.

“அப்பா, நான் கிளம்பறேன். பை ம்மா. பை தர்ஷு!” கார்க்கீயை எடுத்துக்கொண்டு கிளம்பியவனிடம்,

“குமரா.. எப்பப்பா வருவே” செல்வமணி கேட்க, “தெரியாதும்மா” என்றவன் வேகநடையுடன் கிளம்ப செல்வமணி பெருமூச்சு ஒன்றை விட்டார்.

“ஏன்மா? இப்படி ஒரு பெருமூச்சு” தர்ஷினி விளையாட்டாய் வினவ,

“எல்லாம் உன் அண்ணன் வாழ்க்கையை நினச்சுதான் தர்ஷு. பிடியே குடுத்து பேசமாட்டேங்கிறான். எதுவும் சொல்ல மாட்டிறான். 31 முடியப் போகுதுல. மனசுல என்ன நினைக்கறான்னு தெரியலை” ஒரு மகனின் அன்னையாய் அங்கலாய்த்தார் அவர்.

“அம்மா, என் கல்யாணம் முடிஞ்சப்புறம் அண்ணா, தானா வழிக்கு வந்திடுவார்…நோ வொர்ரிஸ்” என்றவள், தான் உறங்கச் செல்வதாகக் கூறிவிட்டு, அவளுடைய அறைக்குள் நுழைந்துவிட்டாள்.

“வேதாந்தம் குரூப்ஸ்” என்றால் தென்னிந்தியாவில் தெரியாதவர் எவருமில்லை. அஷ்வின்குமாரின் கொள்ளுதாத்தா அதாவது நாகேஷ்வரனின் தாத்தா ஆரம்பித்தது.

அஷ்வினின் தாத்தாவும் அஷ்வினின் தந்தை நாகேஷ்வரனும் அதை தமிழ்நாடு முழுதும் கொண்டுவர, அந்த வம்சத்தின் இரத்தமான அஸ்வின், அதை தென்னிந்திய அளவில் கொண்டு வந்துவிட்டான். அவர்கள் இறங்கிக் கால்பதிக்காத தொழில்கள் இல்லை. அவர்கள் சொத்துக்கள் இல்லாத இடங்களில்லை.

மால்கள், ஹாஸ்பிடல்ஸ், மலைபிரதேசங்களில் எஸ்டேட், ரெசார்ட், ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ஸ், கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், பொறியியல் கல்லூரிகள், ஸ்கூல்ஸ், சினிமா தியேட்டர்ஸ், நகைகடைகள், அனைத்தையும் கட்டி அரசனாய் ஆண்டுவந்தான் அஷ்வின்குமார்.
அதில் அவனுக்கு மிகவும் பிடித்தது அவனுடைய கன்ஸ்ட்ரக்ஷன் பீல்ட்தான். அதற்காகவே சிவில் எடுத்துப் படித்தவன். வீட்டில் அவனுடைய அன்பில் அனைவரும் நனைவர், என்றால் வெளியில் அவனை எதிர்த்து கையசைக்க எவருமில்லை.

எதிரிலிருப்பவரை கண்ணசைவில் அடக்கிவிடுவான்.

அரசியல்வாதிகளே அவனிடம் உதவிகேட்டு வருவதும் உண்டு. அவனைப் பிடித்தவர்கள் உண்டு. ஆனால் பிடிக்காதவர்கள் பலருண்டு. அவனைப் பற்றி எல்லாவற்றிலும் திருப்தியடைந்த குடும்பத்தால், அவன் தனிமரமாய் இருப்பதை மட்டும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

தன் மகனிற்காக தினமும் கடவுளிடம் செல்வமணி வேண்டுவதற்கு அவர் செவி சாய்த்தால் சரி.

தனது ஆடிஏ6ஐ சீறிப்பாயும் வேகத்துடன் ஓட்டிச் சென்ற அஷ்வின்குமார் காரை நிறுத்தியது நாவலூரைத் தாண்டி, தான் இப்போது கையில் எடுத்திருக்கும் ஒரு அம்யூஸ்மென்ட் பார்க் கட்டிக்கொண்டிருக்கும் இடத்தில்.

காரிலிருந்து இறங்கியவன் தனது காஸ்ட்லி டியோர் கூலர்ஸை மாட்டியபடி நிலத்தில் காலை வைக்க, அவனுக்காகக் காத்திருந்த நிரஞ்சன் ஓடிவந்தான். கூடவே ஒருவர் வந்து, அவனிற்கு அந்த வெயிலில் குடையைப் பிடித்தபடி நின்றார்.

“ஸார்..” நிரஞ்சன் ராகமிழுக்க, “நான் கேட்டதெல்லாம் ரெடியா?” வளவளவெனப் பேசாமல் நேரடியாக விஷயத்திற்கு வந்தான் அஷ்வின்.
“வந்து.. ஸார்” அவன் இழுக்க,

“ஸீ! இந்த மாதிரி இழுத்து பேசுனா. எனக்கு இரிடேட் ஆகும். டக்குன்னு சொல்லு நிரஞ்சன். வாட்ஸ் வாஸ் தி ப்ராப்ளம்” அஷ்வின் வெட்டு ஒன்று துண்டு இரண்டாகப் பேச,

“நம்ம சாயில் டெஸ்ட்டிங் டாக்குமெண்ட் மட்டும் காணோம் ஸார்” என்ற நிரஞ்சனிடம், முகத்தில் எதையும் காட்டவில்லை அஷ்வின்.

அப்படிக் காட்டிவிட்டால் அவன் அஷ்வின் அல்லவே!

“ஓகே, வேர் ஆர் தெம்?” அஷ்வின் கேட்க,

“அங்க இருக்காங்க ஸார். வாங்க போகலாம்” என்று சொல்ல அல்வினின் அனல் கக்கும் பார்வையைக் கண்ட நிரஞ்சனுக்கு, உள்ளே ஒருநிமிடம் பயத்தில் திகில் பரவியது.

“ஸா.. ஸாரி சார்! நான் அவங்களை இங்க கூட்டிட்டு வரேன்!” என்றபடியே நகர்ந்தான்.

அஷ்வின் கேட்காமலேயே, அவனுக்கு மட்டும் சேர் வர, அதில் அமர்த்தலாய் கால்மேல் கால்போட்டு அமர்ந்திருக்க, அவனது ப்ராஜெக்ட்ஐ குலைக்க வந்திருந்த அரசு அதிகாரிகள் அவன்முன் நிற்க, தன்முன் நின்றிருந்தவர்களை சேரின் பின்னால் சாய்ந்தபடி, கண்கள் இடுங்க திமிரும், இகழ்ச்சியும் கலந்த பார்வையை வீசினான்.

“ஸார், நீங்க இங்க அம்யூஸ்மென்ட் பார்க் கட்ட நாங்க அனுமதிக்கமாட்டோம்!” என்றார் ஒருவர்.

அஷ்வின் நிரஞ்சனைப் பார்க்க, “எங்களுக்கு என்ன ரீசன்னு தெரிஞ்சாகணும் ஸார்” நிரஞ்சன் கேட்டான்.

“இந்த டாக்குமெண்ட்ஸ் எல்லாம் தப்பா இருக்கு. அப்புறம் சாயில் டெஸ்ட் டாக்குமெண்ட் இல்ல” வந்தவர் குற்றம் சாட்டினார்.

நிரஞ்சன் ஏதோ சொல்லப் போகும் முன், “நிரஞ்சன்” என்று அழைத்து, அவனை ஒரே வார்த்தையில் அடக்கியவன், அந்த அதிகாரிகளிடம் திரும்பினான்.

“கவர்ன்மென்ட் பத்தி தப்பா பேசறீங்களே” என்றவன், “அதுவும் ஒரு அமைச்சர் பத்தி தப்பா சொல்றீங்களே” அமர்த்தலாய் அமர்ந்தபடி ஒற்றைப் புருவத்தைத் தூக்கி அஷ்வின்குமார் கேட்க, அவர் புரியாது முழிக்க, ஆறடிக்கும் எழுந்து நின்று அஷ்வின் அவரது தோளில் கையை வைத்து,

“என்ன ஸார் புரியலையா? இந்த டாக்குமெண்ட்ஸ் அப்ரூவ் பண்ணதே, உங்க கவர்ன்மென்ட் அதிகாரிகள்தான். அவங்களையே அப்போ தப்பா சொல்றீங்களா?” கூலர்ஸ் போட்டிருந்த போதும் அவனுடைய கண்களை கவனித்தவருக்கு பயம் எடுத்தது. அதுதான் அஸ்வின். எதிரிலிருப்பவர் எவராக இருந்தாலும், அவனிடம் அவர்கள் பாட்ஷா செல்லாது. அவன் முடிவுவெடுத்தால் எடுத்ததுதான்.

அதைத் தடுக்க எவராலும் முடியாது.

“நிரஞ்சன், என் கார்சீட்ல பேக் கவர்ல ஒரு பேப்பர்ஸ் இருக்கு எடுத்துட்டு வா” கட்டளையிட நிரஞ்சன் மின்னலாய் சென்று எடுத்து வந்தான்.

“ஸார், இது என் ஆபிஸ்ல மிஸ்ஸான சாயில் டெஸ்ட் ரிப்போர்ட். உங்களுக்கு வேணும்ன்னா இன்னும் எத்தனை காப்பிஸ் வேணும்னு சொல்லுங்க” என்றவன் அவர் காதின் அருகில் சென்று, “உங்களுக்கு தெரியாத விஷயம் சொல்லட்டா. இந்த ப்ராஜெக்ட்ல போக்குவரத்து துறைஅமைச்சர் முத்தையாவும் இன்வால்வ்ட். இன்ஃபாக்ட் இட்ஸ் ஹிஸ் ப்ராஜெக்ட்…” அஷ்வின் கூற, அதிகாரிக்கு பகீரென்று இருந்தது.

“உங்களை யார் இங்க அனுப்பிசாங்கன்னு தெரியும். ஐ ஹேவ் எ ப்ராப்பர் டாக்குமெண்ட்ஸ் அன்ட் அப்ரூவல்ஸ். உங்கள அனுப்பிசவங்க கிட்ட நானே பேசிக்கறேன். அப்படி நம்பிலாம் இனி வராதீங்க. ஐ வில் நாட் சேம் ஆல் தி டைம்” கர்ஜிக்கும் தோரணையில் அவன் நிமிர்ந்து நின்று சொல்லி, பயத்தை அவர் தொண்டையிலிறக்க, பயத்தின் உச்சியில் உறைந்து நின்றார் அவர்.

அஷ்வினைப் பற்றித்தெரிந்தும் எவனோ ஒருவன் தந்த தைரியத்தை நம்பி வந்த தன்னைத்தானே நினைத்து நொந்துகொண்டார். அவரின் முகமாறுதலைக் கண்ட அஷ்வின், நிரஞ்சனிடம் திரும்ப அவன் பார்வையை உணர்ந்தவன், “ஸார்.. நீங்க போகலாம்” வந்தவர்களை அழைத்துப்போக தனது கூலர்ஸை எடுத்துமாட்டிய அஷ்வின் தனது காரில் ஏறினான்.

காரில் வரவர ஃபோனை ப்ளூடூத் மூலம் கனெக்ட் செய்தவன், “ஹலோ மிஸ்டர் பொன்னுரங்கம். யார்ன்னு தெரியுதா? பேர் சொல்லணுமா?” கேலிக்குரல் வழிந்தோடக் கேட்டவன்,
“ஸீ! இந்த ஸ்கூல் பசங்க விளையாட்டு எல்லாம் இங்க வேண்டாம். இப்படியெல்லாம் நீங்க பண்ணா சிரிப்பு வருது மிஸ்டர்.எக்ஸ்.மினிஸ்டர்!” என்றவன் கடைசி வார்த்தைக்கு அழுத்தம் கொடுக்க, எதிரில் இருந்தவரின் பிரஷர் எகிறியது.

“எக்ஸ்.மினிஸ்டர்.. எதுக்கும் நைட் பீபி டேப்லெட் போட்டுக்கோங்க!” நக்கலாகப் பேசிவிட்டு வைத்தான் அஷ்வின்.

அன்றைய வேலைகள் இழுத்தடிக்க, அஷ்வின், வேலைகளை முடித்துக்கொண்டு வீடு வந்துசேர மணி ஒன்பதரை ஆகியிருந்தது. வீட்டிற்கு வந்தவனிடம் மதியம் தூங்கியெழுந்ததால் தூக்கம் வராமல் டி.வியைப் பார்த்துக்கொண்டிருந்த தர்ஷினி பேச்சுக்கொடுத்தாள்.

“அண்ணா சாப்பிடலாமா?”

“நீ இன்னும் சாப்பிடலையா?” அஷ்வின் கேட்க, அவள் ‘இல்லை’ என்பதுபோல் தலையாட்டினாள்.

“அம்மா, அப்பா தூங்கிட்டாங்களா?”

“ம்ம்…அப்பவே அண்ணா” இருவரும் பேசியபடியே டைனிங்ஹாலில் அமர்ந்தனர்.

“அண்ணா, நான் ஒரு ஒன்வீக் அப்புறம் ரெஸ்ட் எடுத்துட்டு ஆபிஸ் வர்றேனே” சாப்பிடும்போது கேட்ட தர்ஷினியை, கண்களைச் சுருக்கி ஊடுருவிப் பார்த்தான் அஸ்வின். நாளையே வருகிறேன் என்று
சொன்னவள் இப்போது பேசுவது அவனிற்குள் முரண்டியது.

“அண்ணா, ப்ளீஸ்ண்ணா.. எனக்கு சில்அவுட் பண்ணனும்னு இப்போ தோணுது. பிரண்ட்ஸ் எல்லாம் பார்த்து கொஞ்ச நாள் அப்புறம் வர்றேனே” தர்ஷினி அழகாய் தன் முட்டைக் கண்களைச் சுருக்கிக்கேட்க,

“உனக்கு என்ன இஷ்டமோ அதப் பண்ணுடா” என்றவன் சாப்பிட்டுவிட்டு எழ, தர்ஷினியும் எழ, வேலையாட்கள் வந்து எல்லாவற்றையும் எடுத்து வைக்க ஆரம்பித்தனர்.

“சரிடா, குட்நைட். கண்முழிக்காம தூங்கு”

“ஓகே ண்ணா” என்றபடி அவளும் அறைக்குள் நுழைய அஸ்வினும் தன்னறைக்குள் புகுந்தான்.

விதி அண்ணனையும் தங்கையையும் பார்த்துச் சிரித்தது.

Leave a Reply

error: Content is protected !!