உனக்காக ஏதும் செய்வேன் 4

1662455813139-cfdf69f6

உனக்காக ஏதும் செய்வேன் 4

அத்தியாயம் – 4

 

நேற்றிலிருந்து கீர்த்திக்கு தன் வாழ்க்கையே மிகவும் புதிதாகவும் இனிதாகவும் இருந்தது.

நேற்று கணவன் நடந்துகொண்டது, வேலையிலிருந்து வந்த பின் அவளிடம் அக்கறையாக விசாரித்தது என சொல்லிக்கொண்டே போகலாம் அவளுக்கு இவ்வாறு தோன்ற காரணங்களை…

நேற்று அவள் முகத்தில் கண்ட அந்த உணர்வு அவனுக்கு துளியும் உவப்பானதாக இல்லை. அதுபோல அவள் முகத்தை மீண்டும் பார்க்கவே கூடாது என நினைத்தான்.

தான் இனி வீட்டில் புகைப் பிடிக்கவே கூடாது எனவும் முடிவு செய்திருந்தான்.

அவளிடம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு இயல்பாக இருக்க முயன்று கொண்டு இருந்தான்.

தனக்கு கிடைக்க வேண்டிய இயல்பான அன்பை ஏதோ அதிசயம் போல நினைத்து மகிழ்ச்சியுடன் இருந்தாள் அந்த பேதை.

டிவி ஓடி கொண்டிருக்க சோபாவில் அமர்ந்து கொண்டு சமையலுக்கு காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருந்தாள்.

தன் வழக்கமான உடற்பயிற்சியை முடித்தவன் கீழிறங்கி வந்தான்.

அவனைக் கண்டதும், “காபி குடிக்கறீங்களாங்க?” என…

வழக்கத்திற்கு மாறான கேள்வி தான். எப்போதும் கேட்காமலே கொடுத்து விட்டு செல்வாள்.

அன்றாக இருந்தால் ‘ம்’ என்றிருப்பான் இல்லாவிட்டால் ‘தெரியாதா’ என்றிருப்பான் ஆனால் இப்போது….

“அப்பா டீ குடிச்சிட்டாரா?”

“ஆஹ் மாமா டீ குடிச்சிட்டாரு.”

“நீ?”

“இல்லை இனிமேதான். உங்களுக்கு போடவா?”

“இல்லை நானே போட்டுக்கறேன் நீ பாரு.” என்றவன் கிட்சன் நோக்கி செல்ல ‘என்னது?’ என்பது போல பார்த்தாள்.

‘ஒருவேளை போடட்டுமானு கேட்டதால அவரே போட்டுக்கறேன்னு வீம்பா போறாரோ?’ என பயந்தவள் அவன் பின் மெதுவாக செல்ல,

அங்கு அவனோ கிட்சனில் போனை பார்த்தவாறு ஒரு நிமிடம் நின்றான்.

அதன்பின் பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்துவிட்டு, பால் பாக்கெட்டை கட் செய்து அதில் ஊற்றினான்.

மேலும் அடுப்பைப் பற்ற வைத்தான்… தீக்குச்சியால் ஒரே உரசலில்.

அதைக் கண்டு ‘ம் ரொம்ப தான் தீக்குச்சி பத்த வைக்கறதுல எஸ்பெர்ட்டா இருக்காரு.’ என சற்று கடுப்பாக பார்த்தவாறு சத்தமிடாமல் நின்றிருந்தாள்.

பின் காபி தூள், சக்கரையை அளவாக போட்டு காபியை கரெக்டாக வைத்தவன் அது கொதிக்க ஆரம்பிக்க எதையோ தேடினான்.

‘என்ன தேடறாரு?’ என சிறிது நேரம் பார்த்தவாறே நின்றவள், அவன் தேடிக் கொண்டே இருக்கவும் உள்ளே வந்தாள்.

அவளைக் கண்டதும், “நீ ஏன் இங்க வந்த? உன்ன உட்கார தான சொன்னேன். ஏன் நடந்துட்டே இருக்கே?” என கடிய,

“இல்லங்க நீங்களே போட்டுக்கறேன் னு சொன்னீங்களா… அதான் கோபமா போனீங்களோனு வந்தேன்.” என மெதுவாக சொன்னாள்.

“எதுக்கு கோபம்?” புருவம் சுருக்கி கேட்டவன், “அப்படிலாம் ஏதும் இல்லை. இன்னைக்கு நானே காபி போட்டு பார்க்கலாம்னு வந்தேன். அவ்வளோதான்.” எனவும்,

“ஓ… சரிங்க” என இழுத்தவள், “என்னவோ தேடிட்டே இருக்கீங்க?” என கேட்க,

“அது… வடிகட்டி தான் தேடறேன் சிக்கவே மாட்டது.” என்றான் சலிப்பாக. 

“அத எதுக்கு தேடறீங்க?” என்றாள் புரியாமல்,

“காபிய வடிகட்டதான்.” என அவன் கூறி முடிக்க அவளுக்கு சிரிப்பு வந்தது. 

“காபிலாம் வடிகட்ட தேவை இல்லங்க.” சிரிப்பை கட்டுப்படுத்தியவாரு கூறினாள்.

“அப்போ அதுல போட்ட காபி தூள் எங்க போகும்…?” என அவன் டவுட் கேட்க,

‘ம் கல்கத்தாக்கு போகும்.’ என மனதில் கவுண்டர் அடித்தவள்,

“அதுலாம் கரைஞ்சி போயிரும்.” என்றாள்.

“ஓ…” என்றவன்,

‘அப்பறம் ஏன் டீ தூள் கரைய மட்டது?’ என கேட்க நினைத்தான்தான். அவள் டீ வடிகட்டுவதை பார்த்துதானே காபியையும் வடிகட்ட நினைத்தான்.

ஆனால் அவள் முகத்தில் ஏற்கனவே சிரிப்பு இருப்பதை உணர்ந்தவனுக்கு, மேலும் கேள்வி கேட்க ஏனோ தோன்றவில்லை.

அவன் அவளை பார்க்க, அதை புரிந்து கொண்டவள் மெதுவாக தான் உட்கார்ந்திருந்த இடத்திற்கு சென்றுவிட்டாள்.

கொதித்த காபியை இரண்டு கப்பில் ஊற்றியவன், அதை எடுத்துக் கொண்டு தயக்கமாக ஹாலிற்க்கு வந்தான்.

ஒன்றை அவன் வைத்துக் கொண்டு மற்றொன்றை அவள் முன் இருந்த டீபாயில் வைக்க, அவள் அதை ஆச்சரியமாக பார்த்தாள்.

“அது… உனக்கு…கால் வலி… காபி… எக்ஸ்ட்ரா…” என உளறியவன் ‘சை…’ என நினைத்துவிட்டு, “குடி.” என கூறிவிட்டு டக்கென நகர்ந்தான் மற்றொரு சோபாவை நோக்கி.

அவன் பேச ஆரம்பித்ததும் ஆச்சரியம் மறைந்து விசித்திரமாக அவனை பார்க்க, பேசிவிட்டு சென்றதும் அதை மெதுவாக கையில் எடுத்தவள் மனதுக்குக்குள் குத்தாட்டம்தான்.

அவன் அவளுக்கும் சேர்த்து காபி போடுவான் என்றெல்லாம் அவள் நினைக்கவே இல்லை.

இது கனவோ என சந்தேகம் கொண்டு அவளை கிள்ளி பார்க்க, வலித்ததும் நிஜம்தானா என நினைத்தவள், அவனை பார்க்காமல் பார்த்துக்கொண்டு அதை மெதுவாக ரசித்து குடித்தாள்.

அவனோ, ‘பாவம் கால் வலி யோட ஏன் அவள் காபி போட்டுட்டு நின்னுட்டு இருக்கனும். நாம அன்னைக்கு அந்த நாள்ல அவளுக்கு ஞாபகம்படுத்தனதால தான் அப்செட்டா இருந்தா. அதான் ஏதோ யோசனைல கால்ல இடிச்சிக்கிட்டா. நம்ம பண்ணது சின்ன ஹெல்ப் அவ்ளோதான்.’ என நினைத்தவன் அவன் பாட்டுக்கு கையில் நியூஸ் பேப்பரை பார்த்தபடி காபியை குடித்து கொண்டிருந்தான்.

அவளுக்கோ என்றுமில்லாமல் இன்று அந்த காபி மிக தித்திப்பாக இருந்தது.

இதே போல அவள் வாழ்வும் தித்திப்பாக மாறுமா?

»»»»

காலையிலிருந்தே சோர்வாக உள்ள மகாவை கவனித்து கொண்டே இருந்த சூர்யா, ‘என்னாச்சு இவளுக்கு? ஏன் இப்படி டயர்ட்டா இருக்கு பேஸ். உடம்புக்கு முடியலயா?’ நினைத்தவாறே வலம் வந்தான்.

அவளோ, ‘ச்சே… ஏன்தான் இந்த மன்த் இப்படி வயிறு வலிக்குதோ?’ என சலித்தவாறு மெதுவாக வேலைகளை செய்து கொண்டு இருந்தாள்.

பாத்திரங்களை கழுவிக் கொண்டு இருந்தவள் வயிற்று வலி மேலும் அதிகமாக, ‘உஃப்’ என பெருமூச்சுவிட்டு, ‘இதுக்கு மேல முடியாது. அட்லீஸ்ட் ஒரு அஞ்சு நிமிஷம்… இல்ல இல்ல பத்து நிமிஷம் ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறம் வரலாம்.’ என அறைக்குள் சென்று படுத்தாள்.

அதைக் கண்டவனோ அவளிடம் வந்து, “என்னாச்சு மகா? காய்ச்சல் வர மாதிரி இருக்கா?” என அக்கறையாக நெற்றி மற்றும் கழுத்தில் கை வைத்து ஹீட்டாக உள்ளதா என சோதித்தவாறு கேட்டான்.

அவன் அக்கறையாக கேட்டதே அவளின் வலி குறைந்தது போல தோன்ற, “இல்லங்க… வயித்துவலி.” என்றாள் மெதுவாக.

அதை தவறாக புரிந்து கொண்டவன், “நான் அப்பவே சொன்னேன் நேத்து அதிகமா சாப்படாதனு கேட்டியா? இப்ப பாரு நேத்து நல்லா அது இதுனு அளவில்லாம முழுங்கிட்டு இப்ப வயித்த வலிக்குதுன்ற.” என கடிய,

அதுவரை இருந்த வயித்து வலியோடு தலைவலியும் சேர்ந்து கொண்டது போல இருந்தது அவளுக்கு.

நேற்று வேலையிலிருந்து திரும்பியவர்கள் வீட்டிற்கு வந்து சிறிது நேரம் கழித்து மீண்டும் வெளியே சென்றனர்.

ஊர் சுற்றல்… பஸ் பயணம்… என சென்றும், ருசியான பிரியாணி… பாதம் பால்… ஐஸ் கிரீம்… என உண்டும் அரிதாக நிகழ்ந்த காதல் நாட்களை மீண்டும் அனுபவித்து வெகு நாட்களுக்கு பிறகு இனிமையாக அந்த பொழுதை கழித்தனர். 

அப்போது அவள் மூக்கு முட்ட உண்டதை வைத்துதான் சொல்கிறான்.

தலையிலேயே அடித்து கொண்டவள் ‘எப்ப பார்த்தாலும் என்ன விஷயம்னு புரியாம என்ன சோத்து மூட்டனே நினைக்க வேண்டியது.’ என மனதுக்குள் அவனை வறுத்தெடுத்து விட்டு, அவனுக்கு புரியும்படி என்ன என கூறினாள்.

அதைக்கேட்டு, “ஓஹ்…” என்றவன், “எப்ப சரியாகும்?” என கேட்டான்… ஏதோ எப்ப பஸ் வரும் என்பதுபோல.

அவளுக்கு புரிந்தது… தனக்கு வலிப்பது உடனே சரியாக வேண்டும்மென நினைக்கிறான் என… அதை உணர்ந்து லேசாக சிரித்தவள்,

“ரெண்டு மூணு நாள்ல சரியாகிடும்ங்க.” என்றாள்.

“அப்போ லீவ் போட்டு ரெஸ்ட் எடு.” எனக்கூற, 

“அப்படி பார்த்தா மாசம் மாசம் மூணு நாள் லீவ் போடனும். அதுலாம் அவசியம் இல்லங்க. நான் தாங்கிப்பேன். கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டா சரி ஆகிடும். ஒரு பத்து நிமிஷம் படுத்துக்கறேன்.” என்றாள்.

ஆமோதிப்பாக தலையசைத்தவன், அறையைவிட்டு வெளியே வந்தான்.

அவளுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என தோன்ற, சமையலறைக்குச் சென்று மெதுவாக அங்கிருந்த பாத்திரங்களை கழுவினான்.

பின் அவனுக்கு ஓரளவிற்கு சமைக்க தெரியுமென்பதால் ஊற வைத்திருந்த அரிசியை குக்கரில் போட்டு சாப்பாடு வைத்தவன், தக்காளி பச்சி செய்தான்.

விசில் அடங்கிய பின் சோற்றில் போட்டு கிளறினான். இவை அனைத்தும் அவனும் கிளம்பியவாறே செய்தான்.

சாப்பிட்டுவிட்டு தன் லன்ச் பாக்ஸ்க்குள் சாப்பாட்டை போட்டு கொண்டவன், அவள் மொபைலை எடுத்துக் கொண்டு அவளிடம் சென்றான்.

பத்து நிமிஷம் ரெஸ்ட் எடுக்கறேன் என்றவள், ஒரு மணி நேரமாக தூங்கி கொண்டிருக்க, அவளை மெல்ல எழுப்பினான்.

அவளோ எழுந்ததும் டைமை பார்த்துவிட்டு, “நான் பத்து நிமிஷத்துல எந்திரிக்கலனா, எழுப்பிருக்கலாம்ல. இப்போ நான் கிளம்பி போக டைம்மே பத்தாது சூர்யா.” குறையாகவும் கோபமாகவும் சொல்ல… 

“மகா… ஒரு நாள் லீவ் போட்டா ஒன்னும் ஆகாது. பத்து நிமிஷம் தூங்கறன்னு சொல்லிட்டு ஒன் ஹவர் தூங்கற. நீ மாசமாசம் மூணு நாள் லீவ் போடுவியோ மாட்டியோ, இன்னைக்கு ரொம்ப டயர்ட்டா தெரியற அதனால லீவ் போடு. போன் பண்ணி சொல்லிடு.” என அக்கறையும் கண்டிப்புமாக கூறியவன் அவளிடம் போன்னை கொடுத்தான்.

“சாப்பாடு?” என அவள் கேட்க,

“அதுலாம் நான் செஞ்சிட்டேன் மகா. நீ சாப்பிட்டு நல்லா ரெஸ்ட் எடு.”

“நீங்களே செஞ்சீங்களா? ச்சு…. என்னை எழுப்பிருக்கலாம்ல?” என மீண்டும் அதே பல்லவியை பாட,

“இப்பதானடி விளக்கம் சொன்னேன். மறுபடியுமா? ஏன்… நான் நல்லாதான் சமைப்பேன். நீ ஒழுங்கா சாப்பிட்டு நல்லா ரெஸ்ட் எடு. நான் சாப்பிட்டேன். டைம் ஆச்சு கிளம்பறேன்.” என்றவன் அவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டுவிட்டு கிளம்பினான் வேகமாக நேரம் ஆவதை உணர்ந்து.

இதுக்கு மேல பேசினால் காண்டாகிடுவான் என புரிந்து, “ம்… சரி பத்திரமா போய்ட்டு வாங்க.” என அக்கறையாக‌ கூறினாள்.

பேக்கை எடுத்துக் கொண்டு புன்னகையுடன் தலையசைத்து செல்லும் தன்னவனை, தன்மீது அவன் காட்டிய அக்கறையில் நெகிழ்ந்து காதலாக பார்த்தவாறு நின்றாள்.

 

தொடரும்…

Leave a Reply

error: Content is protected !!