💙இருளை ஈர்க்கும் ஒளி 32💙

Screenshot_2022-12-26-14-13-56-38_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12

💙இருளை ஈர்க்கும் ஒளி 32💙

ஈர்ப்பு 32

காதலில் மட்டும் யார் முதல் என்ற கண்ணாமூச்சி ஆட்டம் வேண்டாம். பிறகு இடையில் மற்றொருவர் வந்து விட்டால் கஷ்டம் தான்…

ராஜிற்கும் வர்ஷாவுக்கும் திருமணம் முடிந்து இரண்டு மாதமாகி இருந்தது.

தியாவும், மித்துவும் தங்களின் மேல் படிப்புக்குள் கால் எடுத்து வைத்தார்கள். அவர்களுடனே வர்ஷாவும் சேர்ந்து கொண்டாள்.

அவள் முதலில் மிகவும் தயங்கினாள், ‘திருமணமான பின் எப்படி படிப்பது’ என்று,

ஆனால் ராஜ் அவளை விடவில்லை, “கல்யாணமானா என்ன? எத்தனை பேர் கல்யாணம் பண்ணிட்டு படிக்கிறாங்க இது ஒரு விஷயமா” என்று கேட்டு, அவளை விடாப்பிடியாக தியா மற்றும் மித்துவுடன் கல்லூரியில் சேர்த்து இருந்தான்.

வர்ஷாவின் படிப்புக்கு அவளின் மாமியாரான லட்சுமியும் ஒரு காரணம்.

ராஜின் வீடு வந்த ஆரம்ப நாட்களில் அவள் மிகவும் சோர்ந்து போயிருந்தாள் .

 இத்தனைக்கும், ராஜ் அவளை அடிக்கடி அவள் வீட்டுக்கு அழைத்து தான் சென்றான். இருந்தும் புது இடம், புது சூழல் என்று இங்கே ஒன்ற அவள் மிகவும் கஷ்டப்பட்டாள், அந்த நாட்களில் லட்சுமி மற்றும் தியா தான் அவளுக்கு உதவினர்.

வர்ஷாவிற்கு அவர் மிகவும் துணையாக இருந்தார். அவருக்கு புரிந்தது அவரும் தன் தாய் வீட்டை விட்டு இங்கே வந்தவர் தானே.

‘படிப்பு அது இது என்று நாட்கள் சென்றால் இவளும் அதில் ஒன்றி உற்சாகமாய் இருப்பாள்’ என்று தியாதான் இவரிடத்தில் கூறியிருந்தாள்.

 எனவே மகனின் இந்த பேச்சுக்கு அவரும் வழிமொழிந்து, வர்ஷாவை கல்லூரிக்கு அனுப்பினார்.

ஒரு பெண்ணுக்கு கணவன், மாமியார், மாமனார் மற்றும் நாத்தனார் போன்ற உறவுகள் நன்றாக அமைந்து விட்டால், அதைவிட வேறு பெரிய வரம் தேவையில்லை.

அதேபோல்தான் வர்ஷாவுக்கு ராஜ், லட்சுமி, தியா அமைந்தார்கள்.

ராஜ் வர்ஷாவை கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொண்டான். ராமச்சந்திரன் லக்ஷ்மி தம்பதியரும் அவளை தங்கள் இன்னொரு மகளாய் தான் பார்த்துக் கொண்டார்கள்.

தியாக்கு கேட்கவே வேண்டாம் அவளை ஒரு தோழியாய் உடன் பிறந்தவள் போல் பார்த்துக்கொண்டாள். மித்துவும் அருகிலேயே இருப்பதினால் பெண்கள் மூவரும் ஒன்று கூடி ஷாப்பிங், அவுட்டிங் என்று வெளியில் செல்வதும் வாடிக்கையாய் இருந்தது.

கிருஷ்ணன் ராதா தம்பதியினரும் ஷ்யாமும் அடிக்கடி வந்து வர்ஷாவை பார்த்துவிட்டு தான் செல்வர்.

*******

ராஜ், வர்ஷா திருமணம் செய்து ஒரு வருடம் வேகமாய் முடிந்தது.

இப்பொழுது இன்னும் அந்த வீட்டில் வர்ஷா நன்றாக ஒன்றியிருந்தாள். வர்ஷா படித்துக் கொண்டிருப்பதால் ‘அதற்கு இடையூறு நேராமல் இருக்கட்டும்’ என்று ராஜ் குழந்தை பிறப்பை தள்ளிப் போட்டிருந்தான்.

முதல் வருட திருமண நாளை அனைவருடனும் சேர்ந்து விமர்சியாக கொண்டாடினர் இருவரும்.

ஒரு வருடம் முடியவும், அக்கம் பக்கத்தினர் மெதுவாக ‘ஏதாவது பிரச்சனையோ’ என்று லட்சுமியை நச்சிருக்க ஆரம்பிக்க,

லட்சுமியோ தேவை இல்லாமல் என் மருமகளை பற்றி யாரும் பேச வேண்டாம் என்று அவர்களின் வாயடைத்து விட்டார்.

இவை அனைத்தையும் கேட்ட, வர்ஷாவிற்கு தான் மனம் கனத்து போனது, அன்றெல்லாம் ஒரு மாதிரி அமர்ந்திருந்தாள். அவளுக்கு என்ன பிரச்சனை என்று அனைவரும் கேட்டுப் பார்த்தும் அவள் வாய் திறக்கவில்லை.

“என்னம்மா என்ன ஆச்சுன்னு தெரியலையே? எதுக்கு இப்படி இருக்கா, உன் கிட்ட ஏதாவது சொன்னாளா?”, என்று லட்சுமி தியாவை விசாரித்துக் கொண்டிருந்தார்.

“எவ்வளவு கேட்டாலும் எதுவும் சொல்ல மாட்டேங்கறமா. ஏதோ ஒரு விஷயத்தை நினைச்சு மனச போட்டு குழப்பிட்டு இருக்கா, இது சரிப்பட்டு வராது பேசாம அண்ணாக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லுவோம்”.

அதுவும் சரிதான் என்று ராஜை அழைத்து வர்ஷாவின் நிலையை பற்றி கூறினர். அவர்கள் கூறியது தான் தாமதம் ராஜ் வீட்டை நோக்கி வந்து,

தங்கள் அறை சென்று பார்க்க, அங்கே சோகத்தின் மறு உருவாய் சோபாவில் அமர்ந்திருந்தாள் வர்ஷா.

“என்னடா ஆச்சு ஏன் இப்படி இருக்க”.

அவ்வளவு நேரம் தனக்குள்ளே உழன்று கொண்டிருந்தவள் அவனிடம் விஷயத்தை கூறினாள்.

“லூசு மத்தவங்க இப்படித்தான் ஏதாவது பேசுவாங்க அதுக்கெல்லாமா இப்படி இருக்குறது. அதுதான் அம்மாவே அவங்க வாய அடச்சிட்டாங்கல்ல அப்புறம் என்ன”.

“இல்ல நம்மளால அத்தைக்கு தான் கஷ்டம்”.

“உனக்கு அம்மாவ பத்தி நல்லா தெரியும், நான் சொல்ல வேண்டியதில்லை அப்புறம் என்ன”

“நாம பேசாம குழந்தை பெத்துக்கலாமா”.

“வர்ஷுமா எனக்கு இருபத்தைந்து வயசு தான் ஆகுது, உனக்கு இருபத்திரண்டு வயசு தான் ஆகுது, இன்னும் நமக்கு டைம் இருக்கு உன்னோட ஹெல்த் இன்னும் பெட்டர் ஆகணும்”. அவன் இதைக் கூற காரணம் தாம்பத்தியத்திற்கு பின் அவள் மிகவும் சோர்ந்து போய் விடுகிறாள்.

அப்பொழுதெல்லாம் இவனுக்கு ‘ஏனடா இவ்வாறு நடந்து கொள்கிறோம்’ என்று கூட தோன்றியுள்ளது. எனவே தான் அவன் இவ்வாறு கூறியது.

இவ்வாறு அவளிடம் அவன் என்னென்ன நினைக்கிறானோ அதை அனைத்துமே கூறி, அவளை இந்த குற்ற உணர்விலிருந்து வெளி கொண்டு வந்தான்.

************

அருணின் வியாபாரம் மிகவும் நன்றாக சென்று கொண்டிருந்தது.

முன்பே அவன் முடிவெடுத்தார் போன்று, இப்பொழுது இன்டிரியர் டிசைன்ஸ் செய்து கொடுத்துக் கொண்டிருந்தான். இப்பொழுது அவனுக்கு இருக்கும் ஒரே குறை தான் ஏன் இரண்டு வருடம் திருமணத்தை தள்ளி போட்டேன் என்பதுதான்.

இந்த ஒரு வருடத்தில் அவனின் உழைப்பும் அதற்கு ஏற்றார் போன்ற, அவனின் வியாபார வளர்ச்சியும் மலையளவு இருந்தது.

மித்துவுமே ‘வர்ஷா திருமணமாகி கல்லூரிக்கு வருவது போல் தானும் திருமணம் முடித்து படித்திருக்கலாமோ’ என்று தோன்றியது.

திருமணத்தை தள்ளிப்போட்ட அருணின் காரணமும் இப்பொழுது இல்லாமல் போக, இருவருமே திருமணத்தை எண்ணி நிறைய கனவுக்காண தொடங்கினார்கள்.

அவர்களின் கனவு நிறைவேறும் நாளும் வந்தது மித்து மற்றும் அருணின் பாட்டிக்கு உடம்பு சரியில்லாமல் போக, அவர் தன் ‘பேரன் பேத்தியின் திருமணத்தை பார்க்க வேண்டும்’ என்றார்.

எனவே பெரியவர்களும் சிறியவர்களிடம் பேசி இன்னும் மூன்று மாதத்தில் அவளுக்கு செமஸ்டர் தேர்வுகள் இருப்பதனால், ‘அது முடியவும் திருமணம் வைத்துக் கொள்ளலாம்’ என்று முடிவெடுத்தனர்.

விரைவிலேயே அனைத்து ஏற்பாடுகளும் நடத்தப்பட, அவர்களின் திருமணமும் நல்லபடியாக முடிந்தது.

இரண்டாவது ஜோடியும் தங்கள் தாம்பத்ய வாழ்க்கையில் இனிமையாக காலடி எடுத்து வைத்தனர்.

***

ஷ்யாம் தியாவை பார்க்கும் பொழுதெல்லாம் இத்தனை நாட்களில் அவளை இன்னுமே சீண்ட தொடங்கி இருந்தான.

ஆனால் யார் காதலை சொல்வது என்ற கண்ணாமூச்சி ஆட்டமும் அவர்களுக்குள் நடந்து கொண்டே தான் இருந்தது.

தியாவை தவிர மற்ற இருவருமே, திருமணமாகி கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தார்கள் அல்லவா,

எனவே, அவர்கள் இருவருக்கும் பேசிக் கொள்ளவும், தெரிந்து கொள்ளவும் தாம்பத்தியத்தை பத்தின பல விஷயங்கள் இருந்ததினால், அடிக்கடி இருவரும் தனிமையை நாடி சென்று பேசிக் கொண்டிருந்தனர்.

தியாக்கு சிறிது தனிமை உணர்வு தோன்றியது. வீட்டிலும் சரி வர்ஷாவுக்கும் நேரம் ஒதுக்க வேண்டும் என்று ராஜ் வீட்டுக்கு சீக்கிரம் வர, அவன் வந்த பின் வர்ஷாவை தொந்தரவு செய்ய மாட்டாள். கல்லூரியிலும் வர்ஷாவும் மித்துவம் தனிமை நாடி செல்லவும் இவளுக்கு மிகவும் வெறுமையாக இருந்தது.

இப்பொழுதெல்லாம் அவளின் மனம் அதிகமாகவே ஷ்யாமை தேடியது, சாப்பிடும் பொழுது தியா இருப்பதையும் மறந்து இருவரும் சுவாரசியமாக ‘திருமண விஷயங்கள்’ பற்றி பேச, இவளுக்குத்தான் ஷ்யாமை எண்ணி மனம் ஏங்கும்.

ஷ்யாமுடனான தன் திருமண வாழ்க்கையை, பற்றிய கனவுகள் கண்களில் ஓடும்.

இவ்வாறு அவளின் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கும் பொழுது தான் அதற்கு கடிவாளம் இடுவது போல், ‘இன்னும் தாங்கள் காதலியே பரிமாறக் கொள்ளவில்லை’ என்பது அவள் மண்டையில் ஆணி அடித்தார் போல, நினைவு வந்தது.

இப்பொழுதெல்லாம் ஷ்யாம் தியாவை எப்பொழுதெல்லாம் பார்க்கும் நேரம் கிடைக்கிறதோ, அப்பொழுதெல்லாம் சீண்டி, கேலி செய்து விளையாடி என காதலை பரிமாறிக் கொண்ட, காதலர்கள் போல் தான் இருவரும் நடந்து கொண்டார்கள்.

எனவே தியாவிற்கு காதலை சொல்லவில்லை என்ற எண்ணம் கூட வராமல் இருந்தது.

இது இப்படி இருக்க, ஒரு நாள் அவள் அன்னை அந்த வார இறுதியில் அவளை பெண் பார்க்க வருகிறார்கள் என்று கூறினார்.

இவள் தலையில் இடியை தூக்கி இறக்கியது போல் இருந்தது அவர்களின் வார்த்தை. இதுவரை அவர்களை எதிர்த்து எதுவும் பேசியதில்லை.

ஆனால் இந்த விஷயத்தில் அவளால் வாயை மூடிக்கொண்டு சும்மா இருக்கவும் முடியவில்லை.

“இப்ப எதுக்கு மா மேரேஜ்? இன்னும் ஸ்டடிஸ் கூட முடியல” என்றாள் தன் மனதை மறைத்து.

“இப்ப எதுக்கா இன்னும் ஆறு மாசம் தான் இருக்கு அதுக்குள்ள உன்னோட படிப்பு முடிஞ்சுரும் ஆல்ரெடி நம்ப மித்துவும் வர்ஷுமாவும் உன் கூட படிச்சவங்க தானே, இப்ப மேரேஜாகி நல்லா தானே படிச்சிட்டு இருக்காங்க” என அவர் கேள்வி மேல் கேள்வி கேட்க.

“அவங்களுக்கு என்ன, அவங்க அவங்க விருப்பப்பட்டவங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க”, என்று முணுமுணுத்தாள்.

மற்ற அனைவருக்குமே இந்த விஷயம் பெரிய ஷாக் தான்.

வர்ஷா ராஜிடம் புலம்பி தள்ளிவிட்டாள், “என்னதான் நினைச்சுட்டு இருக்கீங்க உங்களுக்கு தெரியும் தானே அண்ணாவும் தியாவும் லவ் பண்றாங்கனு அப்படி இருக்கும்போது யார் பொண்ணு பாக்க வர சொல்றீங்க நீங்க” என்றாள் கோபமாக.

“இந்த விஷயத்துல நீ தலையிட்டுக்காத வர்ஷுமா, ஏன்னா நானும் அம்மா, அப்பா கிட்ட பேசி பாத்துட்டேன் அவங்க யாரோ அப்பாவோட ஃ பிரண்டாம் ரொம்ப பிடிவாதமா இருக்காங்க” என்றால் தான் ஆல்ரெடி முயற்சி செய்து விட்டேன் என்பது போல.

“எப்படியாவது பேசி புரிய வைங்க” என்றாள் மன்றாடாலுடன்.

“நான்தான் ட்ரை பண்ணிட்டேனு சொல்றேனே, சரி போகுது விடு பொண்ணு பாக்க தானே வராங்க கல்யாணமாக விட்டமா எதாச்சும் பண்ணுவோம் இரு.” என்றான் தீவிரமாக.

“நம்ம ரெண்டு பேரும் எப்படி ஆசைப்பட்டு ஒன்னா சேர்ந்தோம். அது மாதிரி, அண்ணாவும் தியாவும் கண்டிப்பா ஒன்று சேரனும். அப்படி மட்டும் நடக்காம போச்சு, நான் பாட்டுக்கு கிளம்பி என் அம்மா வீட்டுக்கு போயிடுவேன் சொல்லிட்டேன்.” என்றால் இயலாமையோடு.

“என்னடி இப்படி பயத்தை கிளப்புற” என்றான் உண்மையில் முகத்தில் பயத்தை தேக்கி.

“பின்ன என் அண்ணாவும் தியாவும் பிரிஞ்சிடுவாங்க, நம்ம ரெண்டு பேர் மட்டும் ஒட்டிட்டு ஜாலியா இருக்கணும்னு நினைக்கிறீங்களா? அதெல்லாம் என்கிட்ட நடக்காது, ஒழுங்கு மரியாதையா கல்யாணத்தை நிறுத்துற வழிய பாருங்க, இல்ல…. அவ்வளவு தான் பாத்துக்கோங்க.” என்றாள் மிரட்டளாக.

அவளை சமாதானப்படுத்த அவளை நெருங்க, அவளோ “ஹலோ ஏ.சி.பி சார் ஒழுங்கா பத்தடி தள்ளியே நில்லுங்க, முதல்ல கல்யாணத்தை நிறுத்துங்க. அப்புறமா என் பக்கத்துல வாங்க, அதுக்கு முன்னாடி வந்தீங்க…நான் பத்ரகாளிய மாறிடுவேன் சொல்லிட்டேன்”, என உண்மையாகவே பத்திரகாளியாய் மாறி நின்றாள் வர்ஷா.

“அடப்பாவிங்களா, என்னடா கடைசில இப்படி என் பொழப்புல மண்ணள்ளி போட்டீங்க”, என்று முகம் தெரியாத அந்த மாப்பிள்ளை வீட்டாரை திட்டி தீர்த்தான் ராஜ்.

பிறகு தன் நண்பனுக்கு அழைத்து ‘விஷயம் அவனுக்கு தெரியுமா’ என்பதை கேட்க,

அவனும் கூலாக “ம்… ம்… கேள்விப்பட்டேன்” என்றான்.

“அடேய் என்னடா இப்படி பேசிகிட்டு இருக்க, முதல்ல இதை தடுத்து நிறுத்த ஏதாவது வழிய பாரு.” என்றான் எதுவும் செய்யாமல் இருக்கிறானே என்று ஆதங்கத்துடன்.

“இந்த விஷயத்துல உன் தங்கச்சி தான் முடிவு எடுக்கணும். உன் தங்கச்சி எனக்கு கால் பண்ணி, இது மாதிரி ஒரு சம்பவம் இருக்குனு சொன்னா நான் வருவேன் அப்படி இல்லன்னா, நான் எதுவும் பண்ண மாட்டேன்.”

“என்னடா இப்படி சொல்ற” என்றான் கடுப்புடன்.

“பின்ன எவ்ளோ நாள் தான் மச்சி கண்ணாமூச்சி ஆட்டத்திலேயே போயிட்டு இருக்கறது வாய தொறந்து அவளா எதுவும் சொல்ற வழியக் காணும், உனக்கு இருக்குற அக்கறை கூட அவளுக்கு இல்ல பாரு, எனக்கு ஒரு கால் பண்ணி இப்படி ஒரு விஷயம் சொல்ல எவளோ நேரம் ஆகும்.”

“அவளே பாவம் கஷ்டத்துல இருக்காடா” என்றான் தங்கைக்கு பரிந்து.

“இதுல கஷ்டப்பட என்ன இருக்கு சொல்லு, போன் பண்ணி எனக்கு ஒரு வார்த்தை சொன்னால் நான் எல்லாத்தையும் பாத்துக்க போறேன்” என்றான் அவள் தன்னிடம் நம்பிக்கை வைக்கவில்லையா என்ற தோணியில்.

எதேர்ச்சியா எந்த பக்கம் வந்த தியா, தன் அண்ணன் ஷ்யாமிடம் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து ஸ்பீக்கரில் போட சொல்ல, அப்போதான் ஷ்யாம் மேற்கூறியவற்றை சொன்னது.

அவன் இவ்வாறு கூறவும் தியா மிகவும் கடுப்பாகினாள்.

 உன்மையில் அவள் ஷ்யாமிடம் கால் செய்து பேச தான் எண்ணி இருந்தாள். அதற்கு தான் மாடி நோக்கி சென்றது, வழியில் ராஜ் பேசிக் கொண்டிருக்கவே என்ன பேசுகிறான் என்று கேட்டுக் கொண்டிருக்க, பேச்சு இவ்வாறு முடிந்து இருந்தது.

“அண்ணா அவ்ளோ அக்கறை பட்டலாம் யாரும் இங்க வந்து காப்பாத்த தேவையில்ல அவங்க பொருள் மேல அவங்களுக்கே அக்கறை இல்லன்னும் போது, நான் என்னத்த சொல்றதுக்கு இருக்கு. அந்த மாப்பிள்ளை வீட்டுக்காரங்களை வர சொல்லுண்ணா”, என அவள் சென்று விட,

ஷ்யாமும் அவள் பேசியதில் கடுப்பாகி “ஆமா வர சொல்லு மச்சான் எனக்கு ஒன்னும் பிரச்சனை கிடையாது”, என பேசியை வைத்து விட்டான்.

ராஜன் பாடுதான் திண்டாட்டமானது, ஏற்கனவே அவன் மனைவி இந்த விஷயத்திற்காக அவனை பட்டினி போட்டுயிருக்கிறாள. இவர்கள் இருவரின் சண்டையில் தான் தான் ‘பலியாடு’ என்பது சந்தேகமே இல்லாமல் புரிந்தது இவனுக்கு.

********

இவ்வாறு இருவரும் பிகு கொண்டு இருக்க, அந்த பெண் பார்க்கும் படலம் நடக்கும் நாளும் வந்தது.

வழக்கம்போல பஜ்ஜி, சொஜ்ஜி என்று அனைத்தையும் ரெடி பண்ணி வைத்திருந்தார் லட்சுமி.

தியாக்கு தான் வீ ம்புக்கு இப்படி செய்கிறோமோ’என்று தான் செய்து கொண்டிருப்பது தவறு என்பது கடைசி நிமிடத்தில் மனதை பாதித்து.

வர்ஷாவோ ராஜை காணும் போதெல்லாம் கண்களாலே பஸ்பமாக்கி கொண்டிருந்தாள்.

இங்கே என்னதான் நடந்து கொண்டிருக்கிறது என்பது புரியாமல் தலையை பிடித்துக் கொண்டிருந்தாள் மித்து.

அனைத்திற்கும் பதில் தெரியும் நேரமும் வந்தது, கிருஷ்ணன், ராதா மற்றும் ஷ்யாமுடன் சேர்ந்து இன்னொரு புது குடும்பமும் உள்ளே வந்தது.

அவர்கள் தான் மாப்பிள்ளை வீட்டினர் என்று அனுமானித்த மித்து உள்ளே ஓடி சென்று தியாவிடம் கூறனாள்.

“வெளியே என்ன நடக்கிறது யார் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள், இது எதுவுமே தியா காதில் விழவில்லை, விழும் இடத்தில் அவள் இல்லவும் இல்லை, அனைவரும் கீழே இருக்க இவள் அவள் அறையில் மேலே இருந்தாள்.”

“மாப்பிள்ளை பெண்ணிடம் தனியாக பேச வேண்டும்” என்று கூற, தியாவிடம் விரைந்து சென்று இந்த விஷயத்தை கூறினர்.

தியா “முடியவே முடியாது” என்றாள்.

“இங்க பாரு, இதை நீ முன்னாடியே முடிவு பண்ணி ஒழுங்கா இதை வேணாம்னு சொல்லி இருந்திருக்கணும். இவ்வளவு தூரம் எடுத்துட்டு வந்த பிறகு,இப்படி பண்ண மாட்டேன் அப்படி பண்ண மாட்டேன்னு சொன்னா என்ன அர்த்தம்” என்றாள் வர்ஷா சற்று கோபமாக.

மேலும் தொடர்ந்து, “தேவையில்லாம அத்தை மாமாவுக்கு ஒரு தலைகுனிவு ஏற்படுத்திடாத, மாப்பிள்ளை மேல அனுப்பி வைக்கிறேன் உனக்கு என்ன பிரச்சனையோ பேசாம அதை டைரக்டா அவர்கிட்டயே சொல்லிடு” என்றாள் தோழியின் அவஸ்தை புரிந்து இப்பொழுது கனிவாக.

“வர்ஷா சொல்றதும் கரெக்ட் தானேடி பேசாம அப்படியே பண்ணிட்டேன்”, என்றாள் மித்து.

இருவரும் இப்படியே பேசி பேசி அவளை சம்மதிக்க வைத்திருந்தனர்.

சிறிது நேரத்தில் அறை கதவு தட்டப்பட்டது.

போய் கதவை திறக்க, அங்கே ஒரு புதியவன் நின்றிருந்தான்.

அவனை அறைக்குள் அழைக்க அவளுக்கு மனம் வரவில்லை. எனவே, அவனை மாடிக்கு வர சொல்லிவிட்டு, முன்னே சென்றாள்.

அவனும் பின்னே சென்றான். “நான் என்னோட பேரு”, என்று அந்த புதியவன் பேச ஆரம்பிக்கவும், அவனை கைநீட்டி தடுத்தாள்.

“உங்கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியல, பட் ஐ அம் ரியலி சாரி. இவ்வளவு தூரம் உங்களை வரவேச்சி இருக்க கூடாது. அது என்னோட தப்பு தான். ஏன் முட்டாள்தனம்னு கூட சொல்வேன்.”

“புரியல நீங்க என்ன சொல்றீங்க”

“எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்ல.”

“வாட்ட்டட்…! நீங்களும் விருப்பப்பட்டு தான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டீங்கன்றா மாதிரி சொன்னாங்க”.

ஏதோ விளையாட்டுக்காய் அவனிடம் கோபித்துக் கொண்டு ‘பெண் பார்க்க ஏன் ஒத்துக் கொண்டோம்’ என்று தன்னையே நிமிடத்திற்கு நிமிடம் நொந்து கொண்டிருந்தாள் தியா…, இதை எப்படி சமாளிக்க போகிறாள்? ஷ்யாம் அவன் காதலை வெளிப்படுத்துவானா?

(அவ்ளோதான் கதை முடிவை நோக்கி வந்துவிட்டது. போன எபிக்கு லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் போட்ட அன்பு உள்ளங்களுக்கு நன்றி🙏 அடுத்த எபில சந்திக்கலாம் பை….. பை….)

 

error: Content is protected !!