KE💘🚆 – 2(1)
KE💘🚆 – 2(1)
எக்ஸ்பிரஸ் 💘🚆- 02
மகேஸ்வரியின் வரவேற்பை கண்டு இளசுகளின் பார்வை அங்கு செல்ல, “அடேய் விருமாண்டி வந்து இருக்கார் டா…” என்று ஜிவி கூற,
“அவரு மட்டும் இல்லை.. அங்கு பாரு கஞ்சி போட்ட காக்கி சட்டையும் கூட வந்திருக்கு” என்று நிகிலும் கிசுகிசுக்க, மானஸ்வி மட்டும் மௌனமாய் நின்றிருந்தாள்.
அவள் எப்போதும் அப்படி தான். அவளுக்கு தோன்றினால் மட்டுமே பேசுவாள். இல்லை என்றால் அவளிடம் இருந்து வெளிப்படுவது சிறு புன்னகை மட்டுமே. அது தான் அவளின் சுபாவமே.
கமலினியோ அதி தீவிரமாக முகத்தை சிந்திக்கும் பாவனையில் வைத்தபடி,
‘இப்போ எதுக்கு இந்த ஹிட்லரும் கூட அந்த முரட்டு பீஸூம் வந்திருக்காங்க.. ஒருவேளை நேத்து வெளியே சுத்துனது தெரிஞ்சிடுச்சா? என்னங்கடா டேய் ஆல் இந்தியா ரேடியோவை விட பாஸ்டா இருக்கிங்க’ என்று மனதிலே பட்டிமன்றம் நடத்திக் கொண்டு இருக்க, அவளை பார்த்தபடியே உள்ளே நுழைந்தார் அவளின் தந்நை சந்தனபாண்டியும்… அண்ணன் விக்ரமனும்…
“இங்க என்ன செஞ்சிட்டு இருக்க பாப்பா” என்று அதட்டலாக கேட்ட தன் தந்தையை பார்த்தவளுக்கோ உள்ளுக்குள் பகிரென்று இருந்தது.
‘அய்யயோ அப்போ இன்னைக்கு டெத் கன்பார்ம்’ என்று சிந்தனையிலே பார்வையை சுழலவிட, அவள் கண்களில் விழுந்தான் ராகவேந்திரன்.
அதுவரை யாரோ எவரோ என்ற ரீதியில் நின்று இருந்தவன், சந்தனபாண்டி கேள்வியில் அவளை சுவராசியமாக பார்த்தவன், ‘பதிலை சொல்லுடி’ என்று கேலியாக அவளை பார்க்க,
அதை உணர்ந்தவளோ “டேய் ராகவேந்திரா.. உன்னை இன்னைக்கு சபரி மலைக்கு ஏத்தாமா விடமாட்டேன் டா” என்று மனதுக்குள்ளே சபதமிட்டபடி,
“அது வந்துங்க ப்பாஆ… நான் வரமாட்டேனு தானுங்க சொன்னேன்.. ஆனா மாமா தான் அத்தைக்கு என்னை பார்க்கனும் போல இருக்குதுனு சொல்லி இங்க கூட்டிட்டு வந்தாருங்க” என்றதும் யோசனையாக கண்ணை சுருக்கியவர்,
“ஏம்மா மகேஷ் உன் வீட்டுக்காரர் இங்கேவா இருக்காரு.. ஏதோ வெளியூர் போய் இருக்கிறதா செல்போன்ல சொன்ன” என்றதும் அவசரமாக,
“நான் அவங்களை சொல்லலைங்க ப்பா.. இதோ இங்க நிக்குறாரே ராகவேந்திரன் மாமா அவரை சொன்னேங்க” என்றதும் சிறியவர்கள் அனைவரும் வந்த சிரிப்பை அடக்க பெரிதும் பாடுப்பட்டனர்.
ஏன் விருமாண்டியின் கத்தை மீசை அடியில் கீழ் தெரியும் உதட்டிலும் சிறு புன்னகை உதிர்த்தது.
அனைவரின் முகமும் சிரிப்பை ஏந்தியபடி இருக்க, இருவரின் முகம் மட்டும் கோபத்தின் காரணமாக சிவப்பு சாயம் பூசியப்படி இருந்தது. அதில் ஒருவன் ராகவன் என்றால் மற்றொருவன் விக்ரமன்.
தன் தங்கையை அழைத்து வந்தது ராகவன் என்ற வார்த்தைகளே அவனை கோபத்தில் ஆழ்த்தியது. உர்ரென்று விரைப்புடன் நின்றிருந்தவன் தோற்றமே அவன் காவல் துறையில் பணிபுரிபவன் என்று சொல்லாமல் சொல்லியது.
“வாங்கணே மொத சாப்பிடலாம்… அப்புறம் மத்தது பேசிப்போம். விக்ரம் தம்பி நீயும் வாப்பா” என்று அவர்களை சாப்பிட அழைக்க, உள் நுழைந்தார் ராகவேந்தனின் தந்தையும் மகேஸ்வரியின் கணவனும் ஆகிய தேவராஜ்.
தன் வீட்டின் உள்ளே இருக்கும் சந்தனபாண்டியை இகழ்ச்சியாக ஓர் பார்வை பார்த்தவர் பின் தன் அறைக்கு நடைப் போட்டார் தேவராஜ். வீட்டிற்கு வந்தவரை சம்பிரதாயமாக கூட உபசரிக்காது செல்லும் கணவனை கண்டு மகேஸ்வரியின் முகம் சுருங்கியது.
அதை கண்ட ராகவ்வோ யாருக்கும் கேட்காத வண்ணம் மெல்லிய குரலில்,
“அம்மா… அவரு இப்படி செய்றது என்ன புதுசா. ஊருக்கு தான் பெரிய மனுஷன். ஆனா அது அவரு செயலில் இருக்காது. எல்லாத்துக்கும் நீ தான் மா காரணம். அவரு என்ன சொன்னாலும் மண்டையை ஆட்டுற பார்த்தியா அது தான் அந்த மனுஷன் உன் தலை மேல உட்கார்ந்துக்கிட்டு ஜிங் ஜிங்குனு குதிக்கிறாரு” என்று தன் தந்தையின் செயலால் மூண்ட கோபத்தை தாயிடம் கொட்டினான்.
தன் மகன் சொல்வதில் இருக்கும் உண்மை சுட, அமைதியாய் நின்று இருந்தார் மகேஸ்வரி.
“ஏத்தா மகேஸூ நாங்க கிளம்புறோம்டா. விக்ரம்க்கு இங்கே தான் இப்போ போஸ்டிங் கிடைச்சு இருக்கு. அதுக்கு தான் சென்னைக்கு வந்தோம். சரி வந்தாச்சு உன்னையும் பார்த்துப் போட்டு போவோம்னு தான் வந்தேன். உன்னை பார்த்தாச்சு நாங்க கிளம்புறோம். பாப்பா வா கிளம்புவோம்” என்று கமலினியை அழைத்துக் கொண்டு விக்ரமோடு கிளம்பிவிட்டார் சந்தனபாண்டி.
வீட்டிற்கு வந்து ஒரு வாய் தண்ணீர் கூட குடிக்காது செல்லும் அண்ணனை கண்டு மனது துவண்டு போனார் மகேஸ்வரி. இது அவருக்கு ஒன்றும் புதிதல்ல. திருமணம் செய்துக் கொண்டதில் இருந்தே பிறந்தகம் பக்கமும் இருக்க முடியாது புகுந்தகம் பக்கமும் நிற்க இயலாது தவித்துக் கொண்டு இருக்கும் பல பெண்களுள் இவரும் ஒருவர்.
“ம்மா இன்னும் இரண்டு பூரி எடுத்திட்டு வா. நான் சீக்கிரம் சாப்பிட்டு கிளம்பனும். இன்னைக்கு எனக்கு நிறைய வேலை இருக்கு. அப்புறம் நீ உட்கார்ந்து உன் சோகத்தை பிழிஞ்சிட்டு இரு” என்று கிண்டலாக கூறியவன்,
“நீங்க எல்லாரும் சாப்பிட்டாச்சா” என்று இளையவர்களை பார்த்து கேட்க தலையை ஆட்டியவர்கள் வேகமாக அங்கிருந்து நகர்ந்து விட்டனர். விட்டால் போதும் என்று ஓடுபவர்களை கண்டு அவனுக்கு சிரிப்பு தான் வந்தது.
தேவராஜ்- மகேஸ்வரியின் மூத்த புதல்வன் தான் ராகவேந்திரன். அவனுக்கு அடுத்து பிறந்தவள் ஜிவிதா. ராகவ்வை காண்போர் யாராக இருந்தாலும் அவன் மீது தன் பார்வையை ஒரு நிமிடமாவது நிறுத்தாமல் செல்ல மாட்டார். அவனின் கம்பீரமும் அழகும் அப்படிபட்டது.
இறுக்கமான முகத்தோடு இருப்பவன் முகத்தில் எப்போதும் சிறு புன்னகை இழையோடி இருக்கும். அதுவும் அவனுக்கு தனி சோபையை கொடுத்தது. ரியல் எஸ்டேட் பிஸ்னஸின் முடிச்சூட மன்னாக திகழ்வபவன், தற்போது பைனன்ஸ பிஸ்னஸிலும் ஈடுப்பட்டு இருக்கிறான்.
மற்றவர்கள் பணத்தை சம்பாரிப்பதற்கு வேலை செய்தால் இவனோ புகழை சம்பாரிக்க வேலை செய்வான். இதில் வரும் சுகம் அவனுக்கு அலாதியான போதை போன்று.
எப்போதும் நெஞ்சை நிமிர்த்தி கொண்டு நான் இப்படி தான் என்று இருப்பவன், கட்டுபடுவது தாயின் வார்த்தைக்கு மட்டுமே. அதுவும் அவன் மனது வைத்தால் மட்டும் நிகழும். இல்லையெனில் கட்டு அவிழ்ந்த காளை தான் நம் நாயகன்.
தேவராஜ் தம்பி தான் சசிதரன். அண்ணன் சொல்லை தட்டாது இருப்பவர். ‘டேய் தம்பி எலி தான்டா ஏரோபிளைன் ஓட்டது’ என்று சொன்னால், ‘அட ஆமாணே எப்படி வேகமா ஓட்டுது பாருங்களேன்’ என்று ஒத்து பாடுபவர் சசிதரன்.
இவரின் குணத்துக்கு மாறாக அமைந்தவர் தான் சுசீலா, சசிதரனின் மனைவி. தன் கணவனின் அறியாமையை உணர்ந்தே தன்னையும் தொழிலில் ஈடுபடுத்திக் கொண்டவர்.
இவர்களின் செல்வங்கள் தான் நிகிலன் மற்றும் மானஸ்வி. நிகில் கலகலப்பானவன் என்றால் மானஸ்வி அமைதியானவள். இருவரும் இருவேறு துருவங்கள் தான். அதனால் தான் என்னவோ மானஸ்வியை விட தன்னை போன்று கலகலப்பாக பேசும் ஜீவிதாவிடம் அதிக ஒட்டுதல் நிகிலுக்கு.
என்ன தான் வேறு வேறு வயிற்றில் பிறந்து இருந்தாலும் ஒருவர் மற்றொரை எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டனர். இவர்களின் தகடுதனங்கள் அனைத்தும் ராகவ்வின் செவிக்கு வந்துவிடும். அதன் காரணமே அவனிடம் மூவருக்குமே சிறிது பயம் இருக்கும்.
இவ்வாறு ஒரு கூட்டு குயிலாக எந்த சச்சரவும் இன்றி வாழ்ந்து வருகிறது இந்த குடும்பம். இது இவ்வாறே நிலைக்குமா என்பதற்கான விடை காலத்திடமே உள்ளது…