Rose – 18

8e13ab6a69323bedd73c37d0b2cabf61-57421846

Rose – 18

அத்தியாயம் – 18

அமெரிக்காவில் குளிர்காலம் தொடங்கி இருந்தது. தரையில் ஒரு அடிக்கும் குறையாத உறைபனியில் மூடப்பட்டிருந்தது. பசுமையான மரங்களில் வெள்ளை நிற பனிபடர்ந்து அழகாக காட்சியளித்தது. வீட்டின் முன்பு சின்ன தொட்டிகளில் வளர்க்கப்பட்ட ரோஜாக்கள் காற்றில் அசைந்தாடி தன இருப்பை யாழினிக்கு உணர்த்தியது.

வெள்ளை நிற உறைபனியின் நடுவே ரோஜாவின் சிவந்த பூவிதழ்களைப் பார்க்கும்போது, அவள் உள்ளத்தில் சிலிர்ப்பு ஓடி மறைந்தது. தன மனதினுள் பூவின் அழகினை அணு அணுவாக ரசித்தாள். தன்னவனின் நினைவுகளை மனம் மீட்டிட்டும் வேளையில், சட்டென்று தலையை உதறி தன்னிலைக்கு மீண்டாள்.

வீட்டின் காலிங்பேல் அடிக்கும் சத்தம்கேட்டு, ‘இந்த நேரத்தில் யாராக இருக்கும்?!’ யோசனையுடன் வந்து கதவைத்திறந்த மிருதுளாவின் முகம் மலர்ந்தது.

ப்ளூ ஜீன்ஸ், பிளாக் கலர் லெதர் ஜாக்கெட் அணிந்து ஸ்டைலாக நின்றிருந்தாள் யாழினி. நேற்று பேசும்போது கூட வேலையை முடித்துவிட்டு வருவதாக சொன்னவளை, திடீரென்று நேரில் பார்த்த சந்தோஷத்தில் மிருதுளாவிற்கு பேச்சுவர மறுத்தது.

எந்தவிதமான முன்னறிவுப்பும் இல்லாமல் நேரில் வந்து நின்றவளைக் கண்டு மிருதுளா சிலையாக உறைந்து நிற்க, அவளின் முகத்திற்கு நேராக சொடக்குப் போட்டு, “என்னடி ஃப்ரீஸாகி நிக்கிற?” யாழினியின் குரலில் பழைய துள்ளல்.

சட்டென்று தன்னிலைக்கு மீண்ட மிருதுளா, “உன்னைப் பார்த்த சந்தோசத்தில் எனக்கு பேச்சே வரல. நான் முக்கியமான வேலையை முடிச்சிட்டு வருவேன்னு யாரோ சொன்னாங்களே, அவங்களை உனக்கு தெரியுமா யாழினி?” என்றவளின் பார்வை அவளின் பின்னோடு சென்றது.

தன்னைக் கிண்டல் செய்யும் தோழியின் முதுகில் செல்லமாக ஒரு அடிபோட்ட யாழினி “உனக்கு ஒரு சர்பிரைஸ் ஷாக் கொடுக்கலாமேன்னு கிளம்பி வந்தேன் பாரு, நான் திரும்ப இந்தியாவே போறேன்” வீம்பாக தன் பேக்கை எடுத்துகொண்டு வாசல் நோக்கிச் சென்றாள்.

இரவு நேரம் பனிமழை பூந்தூறல் போட, “அதுதான் இவ்வளவு தூரம் வந்துட்டே இல்ல, இரண்டு நாள் இருந்துட்டு போ” யாழினியின் கையிலிருந்த டிராவல் பேக்கை வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டு வீட்டிற்குள் சென்றாள் மிருதுளா.

அவளைப் பின்தொடர்ந்து சென்ற யாழினியிடம், “நிஜமாவே நீ திடீர்ன்னு வந்து நினைப்பேன்னு எதிர்பார்க்கல! நீ முதலில் போய் குளிச்சிட்டு வா” பெட்ரூமில் அவளின் பேக்கை வைத்துவிட்டு சமையலறை நோக்கிச் சென்றாள்.

அவள் தலை மறையும் வரை மெளனமாக நின்றிருந்த யாழினி, தன் உடையை எடுத்துகொண்டு குளியலறைக்குள் சென்று மறைந்தாள். பயணக் களைப்புத்தீர வெந்நீரில் குளியல் போட்டுவிட்டு வந்தவளின் நாசியைத் துளைத்தது பிரியாணியின் மணம்!

டைனிங் டேபிளில் சாப்பாடு தயாராக இருக்க, “இந்நேரத்தில் எதுக்காக கஷ்டப்பட்டு சமைச்சே மிரு! காலையில் செய்த உணவோடு அப்படியே விட்டிருக்கலாமே” தோழிக்கு கஷ்டம் தருவதாக நினைத்துக் கூறினாள் யாழினி.

அவள் சொன்னதைக் காதிலேயே வாங்காமல், “இன்னைக்கு நீ வந்ததால் தான் சமைச்சேன், இல்லன்னா சாப்பாடு ஹோட்டலில் தான். அப்பா – அம்மா இரண்டு பேரும் அங்கே தனியாக இருக்காங்க. எனக்கு இங்கே இருந்தால் தான் வேலைக்கு போகவும் சவுகரியமாக இருக்கு. மேக்ஸிமம் வீட்டில் சமைப்பதே இல்லடி!” வருத்தமாக கூறிய மிருதுளாவின் முகத்தில் சோர்வைக் கண்டாள்.

ஒரு சேரை இழுத்துப்போட்டு அவளின் எதிரே அமர்ந்து, “நானும் இந்தியாவில் அப்படித்தான் மிரு! ஒருத்திக்கு என்னன்னு சமைக்கறது?! தனியாக உட்கார்ந்து சாப்பிடும்போது ஒரு பிடி சாப்பாடுகூட உள்ளே  இறங்காது” வெறுப்புடன் கூறிய யாழினிக்கு சமைத்த உணவை சூடாக பரிமாற நினைத்தாள்.

அவளின் கரம்பிடித்து தடுத்த யாழினியோ, “உன் முகத்தில் இருக்கும் களைப்பே சொல்லுது, இப்போதான் வீட்டுக்கே வந்தேன்னு. நீ போய் குளிச்சிட்டு வா, நம்ம இருவரும் சேர்ந்து சாப்பிடலாம்” என்றாள்.

உடனே எழுந்து சென்ற மிருதுளா குளியல் போட்டு ஓடிவர, “இவ்வளவு பெரிய வீட்டில் தனியாக இருக்கிறாயே, உனக்கு பயமாகவே இல்லையா?” யாழினி கிண்டலாகக் கேட்க, இவளோ மறுப்பாகத் தலையசைத்தாள்.

“இவளே ஒரு மார்டன் பிசாசு மாதிரிதான் இருக்கிறா? இவளை எந்த பேய் பயமுறுத்தப் போகுது?!” சிரிக்காமல் யாழினி கிண்டலடித்தாள்.

அந்த வாக்கியத்தின் முழு அர்த்தம் புரிந்து மிருதுளா, “ஏய் என்னைப் பார்த்தால் எப்படி தெரியுது! இங்கிருந்து நீ இந்தியா போய் நல்லாவே பேச கத்துகிட்டே” இருவருக்கும் உணவைப் பரிமாறிவிட்டு, மற்றொரு இருக்கையில் அமர்ந்தாள்.

“அங்கே உனக்கு வேலையெல்லாம் எப்படி போகுது?! இந்தியா வாழ்க்கை உனக்கு பிடிச்சிருக்கிறதா? எஸ்டேட் நிர்வாகத்தைக் கற்றுக் கொண்டாயா?” விசாரணையில் இறங்கினாள் மிருதுளா.

தன் உணவின் மீது கவனத்தை வைத்திருந்த யாழினியோ, “அமெரிக்காவில் படிச்சிட்டு அங்கே போனதால், சீக்கிரமே நிர்வாகம் செய்ய கத்துகிட்டேன். இதுக்கெல்லாம் காரணமே சௌந்தர்யா அம்மாதான்” இடைவெளிவிட்டு இந்தியா போனபிறகு நடந்ததை ஒன்றுவிடாமல் தோழியிடம் பகிர்ந்தாள்.

யாதவை நேரில் சந்தித்த விஷயத்தை மட்டும் மிருதுளாவிடம் மூச்சுவிடவில்லை. உயிர் தோழியாக இருந்தாலும், அவளிடம் தங்களின் சண்டையைப் பகிர மனம் வரவில்லை. அவளின் வாழ்க்கையில் யாதவ் வந்தது ஒரு விபத்து!

தன்னை வேண்டாமென்று உதறிவிட்டு விலகி சென்றவனை தொந்தரவு செய்ய பிடிக்கவில்லை. தனக்கொரு வாழ்க்கையைத் தருமாறு கேட்கவும், அவளால் முடியாது. முடிந்தவரை அவனைவிட்டு விலகி இருப்பதே, இருவரின் வாழ்க்கைக்கும் நல்லது என்ற முடிவில் தெளிவாக இருந்தாள்.

ஒருவர் தன்னைவிட்டு விலகிவிட்டால், வெட்கமே இல்லாமல் அவரிடம் சென்று மன்றாடும் ரகம் யாழினி கிடையாது. அவனால் கெடுக்கப்பட்ட வாழ்க்கைக்கு நியாயம் கேட்டு, யாரிடமும் போய் நிற்க மாட்டாள். சொந்த காலில் நிற்க தனக்கொரு பாதையை வகுத்துக்கொண்டு, தன் இலக்கை நிர்ணயம் செய்து அதன் வழியே பயணிக்கிறாள்.

அவளின் முகத்தில் வந்துபோகும் உணர்வுகளை உன்னிப்பாகக் கவனித்த மிருதுளா, ‘இந்தியாவில் என்னவோ நடந்திருக்கு. அதை வெளிப்படையாக சொல்ல மனசு வராமல், உள்ளுக்குள் போட்டு புழுங்கிட்டு இருக்கிறா’ மனதினுள் நினைத்தாள்.

மிருதுளாவின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, “நாளைக்கு அப்பாவோட நினைவுநாள் மிரு! அதுதான் உடனே கிளம்பி வந்துட்டேன்” யாழினி சொன்னபிறகே, அவளது வருகைக்கான உண்மையான காரணத்தை அறிந்தாள்.

இரு தோழிகளும் தங்களுக்குள் பேசியபடியே உணவை முடித்துக்கொண்டு, படுக்கையில் போய் விழுந்தனர். அன்று முழுவதும் ஓய்வில்லாமல் ஓடிய மிருதுளாவிற்கு தூக்கம் கண்ணைச் சுழற்றியது. மற்றொரு பக்கம் யாழினிக்கு பயணக்களைப்பில் தன்னையும் மறந்து உறங்கிப் போனாள்.

மறுநாள் காலைப்பொழுதுஅழகாக புலர்ந்தது. ஜன்னலின் வழியாக வெளியே பார்க்கும்போது, சூரியனைவிட பனிபடர்ந்த தரை தான் மனத்தைக் குளிர்வித்தது.

வழக்கம்போலவே சீக்கிரம் கண்விழித்த யாழினி குளித்துவிட்டு வெளியே வர, மற்றொரு அறையில் மிருதுளா தயாராகி வந்தாள். மிருதுளா காரை சீரான வேகத்தில் செலுத்த, யாழினி மெளனமாக வெளிப்புறம் வேடிக்கைப் பார்த்தாள்.

பலரின் கல்லறைக்கு நடுவே ரவீந்தர் – அகல்யாவின் கல்லறைக்கு மலர்ச்செண்டு வைத்துவிட்டு, சிலநொடிகள் அங்கேயே விழிமூடி நின்றனர். அதுவரை மனதை அழுத்திய பாரம் மெல்ல குறைய, தந்தையின் நினைவலைகள் ஆழ்மனதில் ஆர்பரிக்க எழுந்தது.

யாழினியின் விழியோரம் கண்ணீர் கசிந்திட, அதைக் கவனித்த மிருதுளா அவளை அங்கிருந்து அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள். அன்றைய நாள் முழுக்க இருவரும் வெளியே சுற்றிவிட்டு, இரவு எட்டு மணியளவில் உணவை ஹோட்டலில் முடித்துக்கொண்டு வீடு திரும்பினர்.

“மிரு எங்க வீட்டுக்கு வண்டியை விடு! இன்னைக்கு ஒருநாள் அங்கே தங்கிட்டு காலை ஊருக்குக் கிளம்பறேன்” கரகரப்பான குரலைச் சரிசெய்து யாழினி கூற, மிருதுளாவும் மறுப்பு சொல்லவில்லை.

அமெரிக்காவில் இருக்கும் அத்தனை சொத்தையும் விற்ற யாழினி, அந்த வீட்டை மட்டும் விற்காமல் வைத்திருந்தாள். யாரையும் குடிவைக்காத போதும், வாரம் ஒருமுறை வேலையாளை வைத்து, வீட்டை சுத்தம் செய்துவிடுவாள் மிருதுளா.

இந்நிலையில்  தந்தையின் நினைவாக இருக்கும் தோழியை அழைத்துக்கொண்டு, அவர்களின் வீட்டிற்கு சென்றாள். அந்த வீட்டினுள் அடியெடுத்து வைத்த யாழினியின் பார்வை வீட்டை வலம் வந்தது. மிருதுளா மெளனமாக சோபாவில் சென்று அமர்ந்துவிட்டாள்.

தன் தந்தையின் அறையை நோக்கி சென்ற யாழினி, “மிரு நீ உன் ரூமில் போய் தூங்கு! நான் கொஞ்சநேரம் இங்கே இருந்துட்டு வருகிறேன்” என்று கூற, அவளும் சரியென்று தலையாட்டினாள்.

இரண்டாவது மாடியில் தந்தையின் அறைக்குள் நுழைந்த யாழினியின் பார்வை நாலாபுறமும் இருந்த சுவரின் மீது படிந்தது. அவளின் நினைவலைகள் பின்னோக்கிச் செல்ல, ‘என்னை விட்டுட்டு ஏன் போனீங்க? நீங்க இறக்காமல் இருந்திருந்தால், என் வாழ்க்கையை நன்றாக இருந்திருக்குமோ?!’ சட்டென்று தலையை உதறி தன்னிலைக்கு மீண்டாள்.

அந்த அறையைவிட்டு வெளியே வரும்போது, எதிரே இருந்த அறையின் மீது அவளது பார்வைப் படிந்தது. மீண்டும் அவன் நினைவு நெஞ்சினில் எழவே, ‘என்னை படிச்ச முட்டாள்னு நினைச்சிருப்பான். நான்தான் கண்மூடித்தனமாக இருந்து, என் வாழ்க்கையைக் கேள்விக்குறியாகிட்டேன்’ இகழ்ச்சியாக நினைத்தாள்.

அரைமணி நேரம் சென்றபிறகு அறைக்குள் நுழைந்த யாழினியிடம், “உங்கப்பா இறக்காமல் இருந்திருந்தால், இன்னைக்கு நீ இப்படி நிர்கதியாக நிற்கவே வேண்டிய நிலையே வந்திருக்காது. விதி வலியது!” என்ற தோழிக்கு பதில் சொல்லாமல் படுக்கையில் சரிந்தாள்.

அந்த வீட்டில் இருந்த ஒவ்வொரு இடமும் யாதவ் பற்றிய நினைவுகளைத் தூண்டிவிட, “நான் மனசளவில் ரொம்பவே நொந்து போயிருக்கேன் மிரு! ப்ளீஸ் நீயும் நடந்து முடிந்ததைப் பேசாதே! என் வாழ்க்கையில் எல்லாமே நடந்து முடிஞ்சிடுச்சு” விழிமூடிய யாழினி தன்னையும் அறியாமல் உறங்கிப் போனாள்.

அவளைப் பார்த்தபடியே வெகுநேரம் நின்றிருந்த மிருதுளா, ‘கடவுளே! இவளை இன்னும் ஏன் சோதிக்கிற? இனியாவது இவளுக்கொரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடு’ மனதிற்குள் வேண்டிக் கொண்டு யாழினியின் அருகே படுத்து உறங்கினாள்.

அங்கிருந்த ஒரு திரையை யாழினி விளக்கிப் பார்க்க, ரவீந்தர் படுக்கையில் படுத்திருந்தார். அவரின் மூக்கில் சுவாசக்கருவிகள், அவரைச் சுற்றி பல கருவிகள் இருந்தது. மெல்ல பார்வையால் அவர் தன்னை அருகே அழைப்பதை உணர்ந்து யாழினி பயந்து அவரின் அருகே செல்ல, அவளின் கரத்தைப் பிடித்து அருகே இருந்த ஆடவனின் கையில் கொடுக்கிறார்.

யாழினி கண்ணீரோடு நிமிர்ந்து பார்க்க யாதவ் முகமே தெரிந்தது. ரவீந்தர் சிலநொடி அவனையே இமைக்காமல் நோக்கி, கடைசியாக கையில் ஒரு அழுத்தம் தந்து விழிமூட, “அப்பா!” என்ற அலறலோடு எழுந்து அமர்ந்தாள்.

அவளின் நெற்றியில் வியர்வைப் பூக்கள் பூத்திருக்க, அன்று முழுவதும் வெளியே சுற்றிய அசதியில் மிருதுளா அசந்து தூங்கிக் கொண்டிருந்தாள். தான் கண்டது கனவு என்ற உண்மைப் புரிய, பக்கத்தில் இருந்த தண்ணீர் பாட்டிலைக் கையில் எடுத்தாள்.

அதை தொண்டையில் சரித்துகொண்ட யாழினி, ‘அப்பாவின் பார்வைக்கு என்ன அர்த்தம்?’  தூக்கம் வராமல் மீண்டும் எழுந்து அறைக்குள் நடக்க பயின்றாள். தான் இழந்த அமைதி கிட்டியதாக நினைத்தவளுக்கு, மீண்டும் நிம்மதி தொலைந்தது.

அன்று ரவீந்தர் இறப்பு நிகழும்போது யாதவ் அருகே இருந்தது நிஜம். அவன் தந்தையைக் காப்பாற்ற முயற்சி செய்தான், ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் முன்பே, அவரின் உயிர் உடலைவிட்டு பிரிந்தது.

அதுவரை தான் இழந்ததை மீண்டெடுக்க முடியாது என்றவள் நினைத்திருக்க, தந்தையின் பார்வைக்கு ஏதோவொரு அர்த்தம் இருப்பதாக உணர்ந்தாள்.

‘நான் நினைத்திருந்தால் சொத்தை விற்ற கையோடு, வேற நாட்டிற்கு போயிருக்கலாம். ஆனால் எந்த தைரியத்தில் இந்தியா போனேன். அங்கே யாதவ் இருப்பான், என்றோ ஒருநாள் அவனை நேரில் சந்திக்கும் நிலை வரும்னு தெரியும். அப்புறம் எப்படி?!’ அடிக்கடி மனதிடம் கேட்கும் கேள்வியை இன்றும் கேட்டாள்.

இந்நாள்வரை மௌனமாக இருந்த அவளின் மனமோ, ‘எந்தவொரு பொருளையும் தொலைத்த இடத்தில் தான் தேடணும். உன் மனதைத் தொலைத்தது அவனிடம் தானே? அதைத் தேடி மீட்டெடுக்க, அவன் எங்கே இருக்கும் இடத்திற்கு தானே செல்லணும்?’ உண்மையைப் போட்டு உடைக்க, யாழினி சிலையாக உறைந்து நின்றாள்.

சிலநொடிகளில் தன்னை மீட்டுக்கொண்டு அவள் சிந்திக்க, ‘காயம் தந்தவனே, அதற்கு மருந்துமாக வேண்டும் என மனம் எதிர்பார்க்கிறது. அவனால் இழந்ததை அவனால் மட்டுமே பெற முடியும்’ மூளை உரைக்க, சட்டென்று ரவீந்தரின் பார்வை நினைவிற்கு வந்தது.

அதுக்குமேல் யோசிக்க முடியாமல் படுக்கையில் பொத்தென்று அமர்ந்து, ‘நான் வாழ்க்கை கொடுன்னு அவனிடம் போய் நிற்க மாட்டேன். இன்னொரு ஏமாற்றத்தை தாங்க மனசில் தெம்பு இல்ல, என் உடலிலும் வலு இல்ல’ தன் முடிவில் தெளிவாக இருந்தாள்.

யாதவ் மீது அவள் கொண்ட காதல் உண்மை. தன்னை வேண்டாமென்று உதறிவிட்டு சென்றவனிடம், வாழ்க்கைத் தரும்படி கேட்பது தன்மானத்திற்கு இழுக்கு. பெண்ணுக்கு சுயமரியாதை ரொம்ப முக்கியம். காதலனே ஆனபோதும் அவனிடம் அடிபணிந்து போக முடியாது என்று உணர்ந்தாள்.

‘வாழ்க்கை நமக்கு என்ன வச்சிருக்குன்னு இன்னைக்கு வரை தெரியாது. அது எந்த பாதையில் பயணிக்குதோ, அதை பின்தொடர்ந்து தானும் செல்ல வேண்டியது தான்!’ தீர்க்கமான முடிவை எடுத்துவிட்டு, படுக்கையில் சரிந்தவளின் விழிகளில் உறக்கம் தழுவியது.

இரண்டு நாட்கள் அமெரிக்காவில் இருந்த யாழினி, மூன்றாம் நாள் அதிகாலை இந்தியாவை நோக்கி பயணித்தாள். தன் தோழியை வழியனுப்பிவிட்டு, ஏர்போர்ட் விட்டு வெளியே வந்தவளின் செல்போன் சிணுங்கியது.

திரையில் ஒளிர்ந்த இந்திய இலக்கத்தைக் கண்டவுடன், மிருதுளாவின் முகம் பூவாக மலர்ந்தது. அவள் போனை எடுத்து காதில் வைக்க, “யாழினி அங்கே வந்தாளா?!” எடுத்த எடுப்பில் கேட்டான் ராம்குமார்.

“ரவீந்தர் அப்பா நினைவுநாள்டா. அதுதான் இரண்டு நாள் என்னுடன் தங்கியிருந்தாள். இதோ இப்போதான் இந்தியாவிற்கு பிளைட் ஏற்றி விட்டேன்” அவள் உண்மையை மறைக்காமல் கூற, ராம்குமாரின் பதட்டம் மெல்ல குறைந்தது.

“தேங்க்ஸ் மிரு! எங்களிடம் ஒரு வார்த்தைகூட சொல்லாமல் கிளம்பி வந்துட்டா. அதுதான் ஒரு நிமிஷம் பயந்துட்டேன்” பெருமூச்சுவிட, மிருதுளாவிற்கு சிரிப்புதான் வந்தது.

மறுப்பக்கம் நிம்மதி பெருமூச்சு விட்ட ராம், “எனக்காக நிறைய நாள் வெயிட் பண்ணிட்டே! சீக்கிரமே அப்பா அம்மாவுடன் வந்து உன்னைப் பெண் கேட்கிறேன். அதனால் இந்தியா வருவதற்கு தயாராக இரு” அவளின் பதிலை எதிர்பார்க்காமல் அழைப்பைத் துண்டித்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!