siraku05

siraku cp-1711b2cd

siraku05

சிகு 05

அலைபேசியை உயிர்ப்பித்து அந்த நபரை அழைத்துவிட்டுச் சிறிது நேரம் காத்திருந்தான் ஷியாம். நான்கைந்து ரிங் போன பிற்பாடும் அழைப்பு ஏற்கப்படவில்லை. அவர் எத்தனை பிஸி என்பது இவன் அறிந்த விடயம் என்பதால் அழைப்பைத் துண்டித்துவிட்டுக் காத்திருந்தான். பத்து நிமிடங்கள் கழிந்த பிற்பாடு இவன் அலைபேசி இப்போது அலறியது.
 
“ஹாய் மேடம்.”
 
“ஹல்லோ யங் மேன்! என்னடாப்பா, திடீர்னு மேடமோட ஞாபகம் வந்திருக்கு உனக்கு! என்ன சமாச்சாரம்?”
 
“ரொம்ப பிஸியா மேடம்? டிஸ்டர்ப் பண்ணுறேனா?”
 
“இல்லை ஷியாம், சொல்லு சொல்லு, எப்பிடி இருக்கே? லைஃப் எப்பிடிப் போகுது?”
 
“ம்… போகுது மேடம், சார் எப்பிடி இருக்காங்க?”
 
“சாரு மோரு எல்லாரும் நல்லா இருக்காங்க, ஓல்டு பீசுங்களை விட்டுட்டு நீ உன்னோட மேட்டருக்கு வா யங் மேன், எப்போக் கல்யாணம்? எப்போ விருந்து போடப்போறே?” கலாட்டாவாகப் பேசும் இவரும் ஒரு பிரபல மருத்துவர். ஷியாம் முதல்முதலாகப் பணியில் சேர்ந்த ஹாஸ்பிடலின் சீஃப் டாக்டராக இருந்தவர் இவர்தான். துடிதுடிப்பான இந்த இளம் டாக்டரை அவருக்கு மிகவும் பிடித்துப் போனது. பிற்பாடு குடும்ப நண்பர்களாக ஆகிப்போனார்கள். அவன் அம்மா கண்மணிக்கு தெரியாத அவன் ரகசியங்கள் கூட இந்த லதாவிற்கும் அவர் கணவரிற்கும் தெரியும். அத்தனை ஆழமான நட்பு அவர்களுக்குள்.
 
“என்ன அவசரம் மேடம்? ஆறுதலாப் போடலாம்.”
 
“என்னது?! ஆறுதலாப் போடப்போறியா? இப்பவே வயசு முப்பத்தைஞ்சு ஆகுதுப்பா!”
 
“இப்பதான் யங் மேன்னு சொன்னீங்க?”
 
“பார்க்க அப்பிடித்தானே இருக்கே! அதுக்காக வயசு குறைஞ்சு போயிடுமா?”
 
“மேடம், எனக்கு உங்க அப்பாயின்மென்ட் ஒன்னு வேணும்.” சட்டென்று விஷயத்திற்கு வந்தான் ஷியாம்.
 
“யாருக்கு?”
 
“ரொம்ப வேண்டியவங்க மேடம்.”
 
“சரி, அதை நீயே பார்க்க வேண்டியதுதானே?”
 
“இல்லை மேடம், அது சரிவராது.”
 
“ஏன் ஷியாம்?” அந்தக் குரல் அவனைக் கேள்வி கேட்டது. ஷியாம் சில நொடிகள் மௌனம் சாதித்தான். அவர் என்னப் புரிந்து கொண்டாரோ, சட்டென்று பேச்சை மாற்றினார்.
 
“சரி, என்ன ப்ராப்ளமா இருக்கும்னு நீ எதிர்பார்க்கிறே?”
 
“யங் லேடி, தெர்ட்டி இயர்ஸ்தான் ஆகுது, ப்ராப்ளம் என்னன்னு நீங்கதான் சொல்லணும்.”
 
“ஓ…”
 
“கல்யாணம் ஆகி அஞ்சு வருஷம் ஆகுது.”
 
“நல்ல ரிலேஷன்ஷிப்லதானே இருக்காங்க?” லதா இதைக் கேட்கும் போது ஷியாமின் முகம் வேதனையைச் சுமந்தது.
 
“தெரியாது மேடம்.”
 
“ம்…” அந்த முதியவரின் முகம் சிந்தனையைக் காட்டியது. ரொம்பவும் வேண்டப்பட்டவர்கள் என்று சற்றுமுன் அவன் சொன்னதை அவர் மனம் குறித்துக் கொண்டது.
 
“எல்லாம் ஓகேன்னா அவகிட்டயே சொல்லிடுங்க, ஏதாவது ப்ராப்ளம்னா… அவகிட்டச் சொல்ல வேணாம், முதல்ல எங்கிட்டச் சொல்லுங்க மேடம்.” அந்த உரிமையான பேச்சு முதியவரை இன்னும் வியப்பில் ஆழ்த்தியது.
 
“நீ என்னப் பண்ணப் போறே?!”
 
“அதுக்கப்புறமா பேஷன்ட்டுக்கு நான் ரிப்போர்ட் குடுக்கிறேன்.”
 
“மண்ணாங்கட்டி! ஏய் அறிவுகெட்ட முண்டம்! நீ என்னதான் பண்ணப் போறேன்னு உனக்குப் புரியுதா மேன்?!”
 
“…”
 
“இதால உன்னோட கேரியருக்கு எவ்வளவு கெட்டப் பெயர் வரும்னு யோசிச்சுப் பார்த்தியா? செகன்ட் ஒப்பீனியனுக்கு போனா உன்னோட நிலைமை என்னாகிறது? உன்னைக் காறித்துப்ப மாட்டாங்க?” கோபத்தில் சத்தம் போட்டார் லதா.
 
“எனக்கு அதைப்பத்திக் கவலை இல்லை மேடம்.” அமைதியாக வந்தது அவன் பதில்.
 
“ஆனா எனக்கு இருக்கு முட்டாள்! எங்க உங்கம்மா? கூப்பிடு அந்தக் கண்மணியை! வீட்டுக்குள்ள என்ன நடக்குதுன்னு தெரியாம அந்தம்மா அங்க உட்கார்ந்துகிட்டு என்னப் பண்ணுது?”
 
“மேடம், ப்ளீஸ்…” ஷியாம் கெஞ்சினான். சிறிது நேரம் லதா எதுவுமே பேசவில்லை.
 
“பேஷன்ட் யாரு ஷியாம்?”
 
“…”
 
“பேஷன்ட்டோட பெயரை அஞ்சனான்னு நான் போட்டுக்கலாமா?” அவர் சரியான இடத்தில் அடிக்க இவன் துடித்துப் போனான். அவன் மௌனமே அவளை யாரென்று உலகிற்குக் காட்டிக் கொடுத்துவிடும். லதா அத்தனை முட்டாளா என்ன?!
 
“நினைச்சேன்! என்னவோ பண்ணித்தொலை! இந்த எழவெடுத்த லவ்வால நீதான் எல்லாத்தையும் தொலைச்சுட்டு நிற்கிறே, அவ அவளோட வாழ்க்கையை வாழ்ந்துக்கிட்டுத்தான் இருக்கா.” குறைப்பட்டார் லதா.
 
“யாரும் சந்தோஷமா வாழ்ந்திடலை மேடம்.”
 
“கொழந்தை ஒன்னுப் பொறக்கலைன்னா ஒரு பொண்ணு சந்தோஷமா வாழலைன்னு அர்த்தமில்லை ஷியாம்.”
 
“இல்லை மேடம், இது உங்களுக்குப் புரியாது.”
 
“எனக்குப் புரியாமலேயே இருக்கட்டும், ஆனா நீ என்னப் பண்ணுறதா இருந்தாலும் எங்கிட்டச் சொல்லிட்டுத்தான் பண்ணணும், புரியுதா?”
 
“ஓகே மேடம்.”
 
“எங்கிட்டச் சொல்றதுக்கு உனக்குத் தயக்கமா இருந்தா சார்கிட்டச் சொல்லணும்.” உத்தரவே போட்டார் லதா.
 
“சரி மேடம்.”
 
“இப்போ மண்டையை மண்டையை ஆட்டிட்டு அப்புறமா ஏதாவது ஏடாகூடமாப் பண்ணி வெச்சே!”
 
“இல்லை மேடம், உங்களுக்குத் தெரியாம எதுவும் பண்ண மாட்டேன்.”
 
“தட்ஸ் குட், வெச்சிடட்டுமா?”
 
“சரி மேடம்.”
 
“வீட்டுல எல்லாரையும் கேட்டதாச் சொல்லு, பை.”
 
“பை மேடம்.” அழைப்பைத் துண்டித்துவிட்டு சோஃபாவில் கால்நீட்டிப் படுத்துக் கொண்டான் ஷியாம். கண்ணுக்குள் ஏதேதோ நினைவுகள் வந்து போயின. ரெட்டை ஜடையில் அன்றைக்கு உலா வந்த பெண் இப்போதும் அவனைத் தொந்தரவு செய்தாள். மரித்துப்போன உறவு என்று அவன் நினைத்து மனதின் மூலையில் போட்ட விஷயம். இப்போது மீண்டும் உயிர்த்தெழுவேன் என்று அடம் பிடிக்கிறது. முடிந்து போன காவியம் என்று அவன் நினைத்தது. என்னை மீட்டுவிடு என்று அவனை இப்போது உதவிக்கழைக்கிறது.
 
“ஷியாமா!” கண்களை மூடிப் படுத்திருந்தவன் அண்ணார்ந்து பார்த்தான். அருகே அம்மா நின்றிருந்தார்.
 
“அம்மா.”
 
“ஃபோன்ல யாரு?”
 
“லதா மேடம்.”
 
“ஓ… எப்பிடி இருக்காங்களாம்?” 
 
“ம்… நல்லா இருக்காங்க.” மீண்டும் கண்மூடிப் படுத்துக்கொண்டான் மகன். அம்மா அவனருகே அமர்ந்து கொள்ள என்ன வரப்போகிறது என்று ஷியாமிற்கு புரிந்தது.
 
“தம்பி… என்ன முடிவெடுத்திருக்கே?”
 
“எதைப்பத்திம்மா?” கண்களைத் திறவாமலேயே கேட்டான்.
 
“அதான்… அன்னைக்குப் பொண்ணு பார்க்கப் போனமே? அபியை உனக்குப் பிடிச்சிருக்கா?” இதற்கு மேலும் அமைதிகாப்பது சரியென்று படாததால் ஷியாம் இப்போது எழுந்து உட்கார்ந்தான். முகத்தைத் தன்னிரு கைகளாலும் அழுந்தத் துடைத்துக் கொண்டான்.
 
“தம்பி! என்னாச்சு? ஏன் ஒரு மாதிரியா இருக்கே?”
 
“அம்மா…”
 
“சொல்லுப்பா.”
 
“இவ்வளவு நாளும் கல்யாணம் பண்ணிக்கோ கல்யாணம் பண்ணிக்கோன்னு என்னை நீ கெஞ்சியிருக்கே.”
 
“ம்… ஆமா.” அம்மாவின் குரலில் அவ்வளவு ஆர்வம்.
 
“எனக்காக இல்லைன்னாலும் உனக்காகவாவது நான் இப்போக் கல்யாணம் பண்ணிக்கிறேன்.”
 
“சரிப்பா! சரிப்பா!” அம்மா சந்தோஷத்தில் பூரித்துப் போனார். 
 
“பொறுத்ததுதான் பொறுத்தே, எனக்கு இன்னும் ஒரேயொரு மாசம் டைம் குடு.”
 
“எதுக்கு ஷியாமா?!”
 
“என்னை இப்போதைக்கு எந்தக் கேள்வியும் கேட்காதேம்மா, உன்னை சந்தோஷப்படுத்தத்தான் அன்னைக்கு நான் பொண்ணு பார்க்க வந்தேன்.”
 
“…”
 
“ஆனா என்னையும் மீறி இப்போ சில காரியங்கள் நடக்குதும்மா.”
 
“புரியலை தம்பி!”
 
“புரியாத வரைக்கும்தான் உன்னால நிம்மதியாத் தூங்க முடியும்மா.” என்றவன் சில நொடிகள் சிந்தனை வயப்பட்டான்.
 
“அம்மா… நான் உன்னை ஒன்னு கேட்கட்டுமா?”
 
“கேளுப்பா.”
 
“உன்னோட மருமகள் எப்பிடி இருக்கணும்னு நீ எதிர்பார்க்கிறே?”
 
“அழகா, அறிவா, பொறுமையா…” அம்மா அடுக்கிக்கொண்டே போக மகன் சிரித்தான்.
 
“நீ இப்போ மூனு பொண்ணுங்க கேட்கிறே.” என்றான் தமாஷாக.
 
“அடப்போடா! ஏன்? அந்த அபி இல்லை?” அம்மா ஆர்வமாகச் சொல்ல ஷியாம் அவரை ஆழமாகப் பார்த்தான்.
 
“என்னப்பா?”
 
“அபிதான் உன்னோட மருமகளா வரணும்னு எதிர்பார்க்கிறியாம்மா?”
 
“சேச்சே! அப்பிடியெல்லாம் இல்லை, அன்னைக்கு அவ்வளவு அன்னியோன்யமா ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருந்தீங்களே, உனக்கு ஒருவேளை‌ அந்தப் பொண்ணைப் புடிச்சிருக்குமோன்னு நான் நினைச்சேன்.” 
 
“அபிக்கு என்னைப் புடிச்சிருந்தாக் கண்டிப்பா அவளை நான் கட்டிக்குவேன்…”
 
“அப்பிடியா?! அப்போ இப்பவே அவங்…”
 
“அம்மா… கொஞ்சம் பொறும்மா.” அவசர அவசரமாக எழுந்த தன் அன்னையை மீண்டும் உட்கார வைத்தான் ஷியாம்.
 
“நான் சொன்னதை நீ சரியாக் கவனிக்கலை, அபிக்கு என்னைப் புடிக்கணும்.”
 
“ஏன்? உனக்கென்னக் குறைச்சல்னு அந்தப் பொண்ணு உன்னை வேணாம்னு சொல்லப் போகுது?!”
 
“அம்மா, அந்தப் பொண்ணுக்கு என்னை என்னோட‌ ஸ்கூல் காலத்துல இருந்து தெரியும்.”
 
“அதுக்கு?!” அம்மாவின் நெற்றியில் இப்போது சிந்தனை முடிச்சுகள்.
 
“அதுக்குத்தான் சொல்றேன், எனக்கு ஒரு மாசம் டைம் குடு, அவசரப்படாதே.”
 
“ஷியாமா, உன்னோட பேச்சு எதுவும் எனக்குச் சரியாப் படலைப்பா, நீ தப்பா எதுவும் பண்ணலையே?”
 
“இதுவரைக்கும் எல்லாம் தப்பாத்தான் நடந்துக்கிட்டு இருந்துது, என்னால முடிஞ்ச வரைக்கும் சரிசெய்யப் பார்க்கிறேன், என்னால எதையும் சரிசெய்ய முடியலைன்னா உன்னோட வழிக்கே நான் வந்தர்றேன்.” குழப்ப விதைகளை அதற்கு மேலும் தன் அன்னைக்குள் விதைக்க விரும்பாத ஷியாம் அத்தோடு எழுந்து உள்ளே போய்விட்டான்.
 
***
இராப்போஜனத்திற்கான நேரம். குடும்பத்தினர் அனைவரும் டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தார்கள். மகனுக்கும் கணவருக்கும் உணவு பரிமாறிவிட்டுத் தானும் ஒரு தட்டோடு அமர்ந்துவிட்டார் மதிவதனி. 
 
“அம்மா அஞ்சனா, எனக்கும் ஒரு தோசை குடும்மா.” மதிவதனிக்கு இரவில் தோசையே உண்ணப் பிடிக்கும் என்பதால் அஞ்சனா அவருக்குத் தோசை வார்த்துக் கொண்டிருந்தாள்.
 
“சரி மாமா.” தோசையோடு வந்த பெண் அத்தைக்கும் மாமாவிற்கும் பரிமாறிவிட்டுக் கணவன் முகத்தைப் பார்த்தது.
 
“தருண்.”
 
“ம்…” உண்டு கொண்டிருந்தவன் நிமிர்ந்து பார்த்தான். 
 
“நாளைக்கு டாக்டர்கிட்டப் போகணும், அப்பாயின்மென்ட் கிடைச்சிருக்கு.”
 
“சரி, போயிட்டு வா.”
 
“இல்லை, நீங்களும் கூட வர்றது நல்லதுன்னு அபி சொல்றா.”
 
“எதுக்கு?”
 
“ரெண்டு பேரையும் செக் பண்ணுவாங்களாம், டாக்டர் உங்களையும் எங்கேன்னு கேட்பாங்களாம், அதால நீங்களும் வந்தா நல்லாருக்கும்.”
 
“எனக்கு நாளைக்கு டைமில்லை.”
 
“அப்போ அப்பாயின்மென்ட் டேட்டை நீங்க ஃப்ரீயா இருக்கிற ஒருநாளைக்கு மாத்திக்கலாமா?”
 
“தேவையில்லை, நீ போயிட்டு வா, அது போதும்.” அதற்கு மேல் பேச வேறு ஒன்றுமில்லை என்பது போல உணவில் அவன் கவனமாகிவிட அஞ்சனா ஒரு பெருமூச்சோடு உள்ளே போய்விட்டாள்.
 
“தருணையும் கூட்டிட்டு வா பேபி, கண்டிப்பா டாக்டர் உங்க ஹஸ்பென்ட் எங்கம்மான்னு கேட்பாங்க.” படித்துப் படித்து அபிநயா சொல்லியனுப்பி இருந்தாள். இப்படிப் பேசுபவனிடம் அவள் என்ன சொல்வது?
 
“ஏன் தருண், கூட நீயும் போலாமே? அந்தப் பொண்ணுக்கு ஒரு ஆறுதலா இருக்குமில்லை?”
 
“எனக்கு நாளைக்கு நிறைய வேலை இருக்குப்பா, என்னால அசைய முடியாது.”
 
“வேலை எப்பவும் இருக்கிறதுதான், அதுக்காக இப்பிடியே இருக்க முடியுமா?”
 
“அதான் அவன் முடியாதுன்னு சொல்றானில்லை, விடுங்களேன்.” அப்பாவும் மகனும் பேசிக்கொண்டிருக்க நடுவில் புகுந்தார் அம்மா.
 
“இங்கப்பாரு தருண், நாளைக்கு நீ பிஸின்னா இன்னொரு நாளை ஃப்ரீ பண்ணிக்கோ, அன்னைக்கு மருமகள் கூட நீயும் போ.” இலகுவாக வழி சொன்னார் முருகானந்தன்.
 
“இல்லைப்பா, அது கஷ்டம்.”
 
“எல்லாத்துக்கும் இப்பிடியே சொன்னா எப்பிடி தருண்?”
 
“அப்பா, இந்த வீட்டோட…”
 
“போதும் நிறுத்துப்பா!” மகனை மேலே பேசவிடாமல் தடுத்தார் அப்பா.
 
“இப்ப என்ன சொல்லப் போறே? இந்த வீட்டுல இருக்கிற எல்லாமே நான் கஷ்டப்பட்டுச் சம்பாதிச்சது, பரம்பரையா வரலை… இதைத்தானே சொல்லப் போறே? இதைக் கேட்டுக் கேட்டு எனக்கு மனப்பாடம் ஆகிடுச்சுப்பா.”
 
“…” 
 
“ஆமா, நான் உனக்கு எதையும் சேர்த்து வெக்கலைதான், இதெல்லாமே நீ கஷ்டப்பட்டுச் சம்பாதிச்சதுதான், இல்லேங்கலை, அதுக்காக நான் சொல்ற எதையும் கேட்கக் கூடாதுன்னு நினைக்காதப்பா.”
 
“இப்ப எதுக்கு இந்தத் தேவையில்லாத பேச்சு, நிம்மதியா அவனைச் சாப்பிட விட்றீங்களா!”
 
“நீ வாயை மூடு வதனி! நீ சரியா இருந்திருந்தா இங்க எல்லாம் சரியா இருந்திருக்கும்.”
 
“இப்போ எதுக்கு எம்மேல பாய்றீங்க?”
 
“இங்கப்பாரு தருண், நீ ரொம்பத் தப்புப் பண்ணுறே, அம்மா முக்கியந்தான், ஆனா அம்மா மட்டும் முக்கியமில்லை.”
 
“எனக்கு அம்மா மட்டுந்தான் முக்கியம் ப்பா.” எந்தப் பிசிறும் இல்லாமல் அந்தக் குரல் தெளிவாக பதில் சொன்னது. மகனின் பதிலில் அத்தனைக் கர்வம் அந்த அம்மாவின் முகத்தில்.
 
“நீங்க வாங்கி வெச்சிருந்த கடன், என்னோட படிப்பு, எதிர்காலம்… இப்பிடி எல்லாமே கண்ணைக் கட்டினப்போ எனக்குத் துணையா நின்னது எங்கம்மா மட்டுந்தான், எனக்கு எங்கம்மா சொல்றதுதான் வேதவாக்கு.”
 
“அப்போ எதுக்குக் கல்யாணம் பண்ணிக்கிட்டே?”
 
“எங்கம்மா சொன்னதாலதான் பண்ணிக்கிட்டேன்.” அழகாக வந்தது பதில்.
 
“உன்னோட வாழ்க்கையை நீயே சிக்கலாக்கிக்கப் போறே தருண், அப்பா சொல்றது உனக்கு இப்போ புரியலைன்னாலும் காலம் கடந்து புரியும், அப்போ உன்னை விட்டு எல்லாமே போயிருக்கும்.”
 
“எனக்கு என்னோட அம்மா மட்டும் போதும்.” சொன்னது சொல்லும் கிளிப்பிள்ளை அவன்!
 
“எத்தனை நாளைக்குப்பா? எத்தனை நாளைக்கு இந்தக் கிழவியை நம்பி நீ வாழப்போறே?” கையைக் கழுவிவிட்டு முருகானந்தன் எழுந்து போய்விட்டார். 
 
“அவருக்கு வேற வேலையில்லை, நீ சாப்பிடுப்பா.”‌ மகனுக்கு மேலும் பரிமாறினார் மதிவதனி. அதேவேளை தனது அப்பாவை அலைபேசியில் அழைத்துக் கொண்டிருந்தாள் அஞ்சனா.
 
“சொல்லும்மா அஞ்சனா.” சட்டென்று லைனுக்கு வந்தார் கோவிந்தராஜன்.
 
“அப்பா… நாளைக்கு டாக்டரை பார்க்கப் போகணும், அபி அப்பாயின்மென்ட் வாங்கி இருக்கா.”
 
“சரிம்மா.”
 
“அவரையும் கூட்டிக்கிட்டு வரச்சொன்னா.”
 
“ம்…”
 
“ஆனா அவரால வர முடியாதாம்.”
 
“ம்…”
 
“நாளைக்கு நீங்களும் அம்மாவும் எங்கூட வந்தா எனக்குக் கொஞ்சம் தெம்பா இருக்கும்.”
 
“அதைவிட எங்களுக்கு வேற என்ன வேலையிருக்கு? இதை நீ சொல்லணுமாம்மா? நீ சொல்லலைன்னாலும் நாங்க வந்திருப்போம்மா.”
 
“அப்பா…”
 
“சொல்லும்மா.”
 
“என்னோட வாழ்க்கையைப் பத்தி ஒருசில முடிவுகள் நான் எடுத்திருக்கேன், நாளைக்கு டாக்டரை பார்த்துட்டு நேரா நான் நம்ம வீட்டுக்குத்தான் வருவேன்.”
 
“வாம்மா.”
 
“நான் எடுத்திருக்கிற முடிவுகள் சரியா தவறான்னெல்லாம் எனக்குத் தெரியாது, ஆனா இனி என்னோட வாழ்க்கை என்னிஷ்டப்படிதான் இருக்கும் ப்பா.” 
 
“நீ என்ன முடிவெடுத்தாலும் இனி அப்பா உங்கூட நிற்பேன் ம்மா.” உறுதியாக வந்தது பதில்.
 
“அண்ணன்கிட்டயும் சொல்லி வைங்க, அவரோட சண்டைப்போட்டு விவாதம் பண்ணவெல்லாம் எங்கிட்டத் தெம்பில்லை, என்னோட முடிவுகள் உங்களையெல்லாம் பாதிக்குமாக இருந்தா அதைத் தாராளமா நீங்க எங்கிட்டச் சொல்லலாம்.” 
 
“யாரும் எதுவும் சொல்லப் போறதில்லை, உனக்கு இப்போ வயசு முப்பது, நல்லது கெட்டது தெரிஞ்ச வயசுதான், உனக்கு எது சரின்னு படுதோ அதை நீ தாராளமாச் செய்யலாம்.”
 
“ரொம்ப தேங்க்ஸ் ப்பா, நான் வெச்சிடுறேன்.” அப்பாவிடம் பேசியது கொஞ்சம் நிம்மதியைக் கொடுக்க அஞ்சனா தூங்கிவிட்டாள். அன்றைக்கு அவளுக்கு நிம்மதியான தூக்கம் கிட்டியது.

Leave a Reply

error: Content is protected !!