Sontham – 11

images (66)

Sontham – 11

காலமும் நேரமும் யாருக்கும் நிற்காமல் சென்றது. பதினெட்டு ஆண்டுகளுக்கு பிறகு..

தேனி மாவட்டத்தின் பிரதான சாலையில் அமைந்திருக்கும் பிரமாண்டமான வீட்டின் பெயர்தான் ஸ்ரீ இல்லம். கேட்டைத் திறந்து உள்ளே நுழைந்தால் பெரிய போர்ட்டிகோ. அதற்கு அருகே தோட்டமும், தோட்டத்தின் நடுவே இருவர் அமரும் வண்ணம் ஊஞ்சலும் அமைக்கப்பட்டிருந்தது

வீட்டின் உள்ளே நுழைந்தவுடன்  பெரிய ஹால், பக்கத்தில் டைனிங் ஹால், சமையல் அறை, ஸ்டோர் ரூம், பூஜை அறை, விருந்துனர் தங்க தனியாக இரண்டு அறைகள்.

மகன் – மருமகள் அறைக்கு அருகிலே ராஜலட்சுமியின் படுக்கையறையும் இருந்தது.  பால்கனியுடன் கூடிய இரண்டு பெரிய அறைகளை மகள்களுக்கு என்று ஒதுக்கி இருந்தார்.

விடியற்காலை பொழுதில் மெல்ல கண்விழித்த மது அருகில் இருந்த மதியின் முகத்தை பார்க்க, அவளோ எப்பொழுதும் போல ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளுக்கு போர்வையை போர்த்திவிட்டு எழுந்து ஏ.சி.யைக் குறைத்தாள். பால்கனிக்கு சென்று வானம் விடியாமல் இருளில் இருப்பதைப் பார்த்தபடியே அமைதியாக நின்றவள் பிறகு குளிக்க சென்றாள்.

அவள் குளித்துவிட்டு வெளியே வந்தவள் நேராக தோட்டத்திற்கு சென்றாள். காலைநேரத்தில் குளிரில் மலர்ந்து இருந்த பூக்களை பறிக்கத் தொடங்கினாள்.

காற்றில் மிதந்து வந்த ஜாதிமல்லி பூவின் வாசனை அவளின் கவனத்தை ஈர்க்க, ‘இந்த பூ நம்ம தோட்டத்திலேயே இல்லயே! ஆனால் வாசனை மனசை பறிக்குதே!’ என்ற நினைவுடன் பூக்களைப் பறித்தவளுக்கு செடியே இல்லாமல் மணம் மட்டும் எப்படி வரும் என்ற சிந்தனை வரவில்லை.

அந்த வாசனை அவளையே சுற்றி வரவே காற்றை ஆழ்ந்து சுவாசித்து உள்வாங்கிய மதுவின் கரங்கள் அவளின் வேலையில் மட்டும் கவனமாக  இருந்தாள். சில நிமிடங்களில் அந்த பூவின் வாசனை மறந்துவிடவே இது வழக்கமாக நடக்கும் செயல் என்பதால் சிரித்தாள். அங்கிருந்த சிமிண்ட் பெஞ்சில் அமர்ந்து பூவை கட்டிவிட்டு பூஜை அறையை நோக்கி சென்றாள்.

அப்போது குளித்துவிட்டு வெளியே வந்த ராஜலட்சுமி,“எழுந்திட்டியா மது?” என்றார்

“ம்ம் இப்போதான் பாட்டி” என்று பதில் கொடுத்துவிட்டு பூக்களுடன் பூஜை அறைக்கு சென்றவள் கண்ணனின் திருவத்திற்கு புது மாலையை அணிவித்து இறைவனின் முன்னே கண்மூடி அமர்ந்தாள்.

கண்ணன் முகத்தோற்றம் கண்டேன்..

கண்டவுடன் மாற்றம் கொண்டேன்..

கண் மயங்கி ஏங்கி நின்றேன்..

கன்னி சிலையாகி நின்றேன்..”  பூஜை அறையில் அமர்ந்து தூக்கும் கண்ணனை துயில் எழுப்பிக் கொண்டிருந்தாள் மதுஸ்ரீ.

மகளின் குரல்கேட்டு எழுத தாமோதரம் குளியலறைக்குள் புகுந்துவிடவே, தமயந்தி சமையலறையில் கவனித்துக் கொண்டு இருந்தார்.

அதை கவனித்த ராஜலட்சுமி,  “என்ன தமயந்தி காலையில் சீக்கிரம் எழுந்துவிட்டாயா?” என்று கேட்டார்.

அத்தையின் குரல்கேட்டு திரும்பியவர், “வீட்டில் இருக்கும் பொண்ணு சீக்கிரம் எழுந்து பூஜை அறையில் இருக்கும்போது நான் மட்டும் எழுந்திருக்காமல் இருந்தால் நல்ல இருக்குமாங்கத்தை..” என்றதும் டைனிங் டேபிளில் ஒரு சேரை இழுத்துபோட்டு அமர்ந்தவரின் மனத்தைக் கவர்ந்தது மதுவின் குரல்.

மதுவின் குரல்கேட்டு கண்விழித்த மதியின் பார்வை கடிகாரத்தின் மீது பதிந்தது. மணி ஆறு என்றவுடன், ‘இவ மட்டும் எப்படித்தான் சீக்கிரம் எழுந்திருக்கிறாளோ?’ படுக்கையில் புரண்டுவிட்டு எழுந்து அமர்ந்தாள்.

மதுவின் பாடல்தான் மதிக்கு சுப்ரபாதம். காலையில் தங்கையின் குரல் கேட்டால்தான் மதிக்கு விழிப்பே வரும்.

மதுவின் கண்ணன் கானம் கேட்டபடியே ஜன்னலின் அருகே சென்று திரையை விலக்கிவிட்டு சிவந்த வானத்தைப் பார்த்தாள். கிழக்கில் இருக்கும் கீழ் வானம் நன்றாக சிவக்க அவளின் மனதில் ஒரு சந்தோஷம் பரவியதை உணர்ந்தாள் ஸ்ரீமதி. பறவைகள்  இரைதேடி பறந்து செல்ல அந்த காலைபொழுது எப்பொழுதும் போலவே ரம்மியமாக இருந்தது.

அவளின் பார்வை மெல்ல தோட்டத்திற்கு சென்றது. காலையில் பூத்த மலர்கள் எல்லாம் பனியில் குளித்து புத்துணர்வுடன் காட்சியளிக்க அதில் அவளின் உள்ளம் கொள்ளைபோக அவளின் உதட்டில் அழகாக மலர்ந்த புன்னகையுடன் கண்ணாடியில் தன்னுடைய முகம் பார்த்தவள், “குட் மார்னிங் மது” என்று சொல்லிவிட்டு குளிக்க சென்றாள்.

ஸ்ரீமதியும், மதுஸ்ரீ இருவரும் அச்சில் வார்த்தது போல ஒரே மாதிரியே உருவத்தில் இருப்பார். இதில் யார் மது, யார் மதி என்று யாராலும் சீக்கிரத்தில் கண்டுபிடிக்கவே முடியாது. அவர்களின் குணங்களை வைத்துக்கூட அவர்களை வேறுபடுத்திச் சொல்ல யாராலும் முடியாது.

பூஜை அறையில் இருக்கும் மதுவிற்கு கண்ணாடியில் முகம் பார்த்தபடியே குட் மார்னிங் சொன்னது உருவத்தில் இருக்கும் ஒற்றுமையால் மட்டுமே!

அதே எண்ணத்துடன் குளியலறைக்குள் புகுந்தவள் சீக்கிரமே குளித்துவிட்டு வெளியே வந்தவளின் உடல் குளிரில் நடுங்க, “வெந்நீரில் குளித்த எனக்கே வேடவேடக்குது. இவ மட்டும் எப்படித்தான் குளிர்ந்த நீரில் குளிக்கிறாளோ?” மதுவை வசைபாடிய கொண்டிருந்தாள் மதி.

குளிர்ந்த நீரில் குளித்தால் குளிர் அடிக்காது என்ற உண்மை அவளுக்கு தெரியவில்லை. சுடுத்தண்ணியில் குளித்துவிட்டு மதுவை குறை சொல்லிக் கொண்டிருந்தவளின் கண்களில் இரவுஉடை கண்ணில்பட்டதும் குறும்புடன் புன்னகைத்தாள்.

அதே குறும்புடன் இரவு உடைய அணிந்துக்கொண்டு, “இன்னைக்கும் எல்லோரும் மாட்டிங்க” என்றவள் கீழிறங்கிச் சென்றாள்.

மதிக்கு காலையில் ஆறுமணிக்குத்தான் விழிப்பே வரும் அதுவும் தங்கையின் குரல் கேட்டால் மட்டுமே. இல்லையென்றால் விடிந்து பத்து மணி ஆனாலும் படுக்கையை விட்டு எழுந்திருக்கவே மாட்டாள்.

அவள் அப்படி என்றால் மதுவிற்கு விடியும் முன்னரே எழுந்து குளித்துவிட வேண்டும். அதை செய்யவில்லை என்றால் இவளுக்கு தலையே வெடித்துவிடும். அவளால் பூஜை செய்ய முடியாத நாளில் கூட சீக்கிரமே எழுந்து குளித்துவிட்டு ஹாலிற்கு வந்து விடுவாள்.

இருவருமே உருவத்தில் ஒருவர் குணத்தில் வேறு வேறு ஆள்தான்.

இருவரும் தமயந்தி – தாமோதரனின் இரட்டை தவப்புதல்விகள் ஸ்ரீமதி, மதுஸ்ரீ. இருவருக்கும் உருவம் மட்டும் ஒற்றுமையே தவிர மற்ற நடவடிக்கைகளில் இருவரும் இரு வேறு துருவங்கள்.

மதுவின் குரலில் மயங்கியவண்ணம் விழிமூடி அமர்ந்திருப்பதை பாட்டியைப் பார்த்த மதி, ‘இவளோட குரலுக்கு கண்ணன் மட்டும் பூலோகத்தில் இருந்தால் இவள்தான் என் ராதை என்று இவளைத் தூக்கிச் சென்றிருப்பான்..’ என்று நினைத்தவள் ராஜலட்சுமியைக் கடந்து சமையலைக்குள் சென்றாள்.

அவளின் நினைவுகள் இவ்வாறு இருக்க மனம் முழுவதையும் இறைவனடியில் வைத்த மது தன்னையும் மறந்து பாடிக்கொண்டிருக்கிறாள் என்று அவளின் பாடலே கூறியது.

“என்ன நினைந்தேனோ தன்னை மறந்தேனோ

கண்ணீர் பெருகியதே ஓ கண்ணீர் பெருகியதே..” என்றவள் பாட தன்னையும் மறந்துவிட்டாள் என்று உணர்ந்த மதிக்கு சிரிப்புதான் வந்தது.

பத்தொன்பது வயதே ஆன மது காலையில் ஐந்து மணிக்கே எழுந்து குளித்துவிட்டு பூக்களைப்பறித்து கட்டி  பூஜை அறையில் அமர்ந்து பாடல் பாட தன் பேத்தியின் வளர்ப்பை நினைத்து பூரித்தபடியே பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தார் ராஜலட்சுமி.

மதிக்கும் இதே வயதுதான் ஆனால் அவளுக்கு இந்த பூஜை எல்லாம் அறவே பிடிக்காது. அதற்காக வீட்டில் இருக்கும் யாருக்கும் அவள் தடை சொல்லவும் மாட்டாள். தன்னுடைய பாதையில் செல்லும் அவளை யாரும் சீண்டாத வரையில் அவளும் நல்ல பெண்தான். சீண்டிவிட்டால் அவளைவிட மோசமான பெண் இந்த உலகிலேயே இல்லை.

மதுவிற்கு கண்ணன் என்றால் ரொம்ப பிடிக்கும். அதனாலோ என்னவோ காலையில் எழுந்ததும் குளித்து முடித்து பூஜை செய்துவிட்டே மற்ற வேலைகளைக் கவனித்துவிட்டு கல்லூரி கிளம்பிச் செல்வாள்.

தன் மகளின் குரலைக்கேட்டு அறையில் இருந்து வெளியே வந்தவரின் பார்வை ராஜலட்சுமியின் கவனித்துவிட்டு, ‘என் மகளின் பெயர் மட்டும் அது அல்ல. அவளின் பாடல் கூட ஒரு மதுதான்’ மனதிற்குள் பூரித்தவரின் மனமும் அவளின் பாடலில் மயங்கியது.

தாமோதரன் ஓசை எழுப்பாமல் சோபாவில் அமர்ந்து அன்றைய தினநாளிதழைப் புரட்டிக்கொண்டு கொண்டு இருக்க சமையல் வேலைகளைக் கவனித்துக்கொண்டே மகளின் பாடலில் மதிமயங்கிய தமயந்தி.

கண்ணனின் குழலோசைக்கு கட்டுப்பட்ட கோபியர்களைப் போலவே மதுவின் கானத்திற்கு மயங்கியிருந்த மூவரையும் பார்த்த மதி மெல்ல அடிமேல் அடியெடுத்து வைத்து தமயந்தியின் பின்னோடு இருந்து கட்டியணைத்து “அம்மா குட் மார்னிங்..” என்று கன்னத்தில் முத்தமிட்டாள் ஸ்ரீமதி.

“மதி என்ன இது காலையில் எழுந்து வந்து இப்படி அலம்பல் பண்ற.?” என்றவர் கன்னத்தைத் துடைக்க மறு கன்னத்தை எச்சில் செய்தாள. அவளின் குறும்புத்தனம் கண்ட தமயந்திக்கு கோபம் வந்தாலும் அவளின் இந்த சேட்டைகளை எல்லாம் மனதிற்குள் ரசிப்பாள்.

அவளின் இந்த சேட்டையை ஹாலில் இருந்து பார்த்த தாமோதரன், “மதி அப்பாவுக்கும் சேர்த்து அம்மாவை இன்னும் இரண்டு முத்தம் கொடுடா” குறும்புடன் கூறிய கணவனை தமயந்தி முறைக்க அவரின் இரண்டு கன்னத்திலும் முத்தம் கொடுத்து, “கூல் பேபி” என்றவள் ஹாலிற்கு சென்றாள்.

“இவரு வேற அவளை ஏத்தி விட்டுட்டு இருக்காரு. பிரஸ் பண்ணிட்டு கிஸ் கொடுத்தியா?” தமயந்தி சத்தமாகக் கேட்க எதையோ நினைத்து வாய்விட்டுச் சிரித்தார் தாமோதரன்.

 ‘பிள்ளைகள் வளர்ந்த பிறகு இவருக்கு புத்தி போகிறது பாரு’ என்று மனதிற்குள் கணவனின் திட்டித்தீர்த்த தமயந்தியின் முகம் மெல்ல சிவந்தது.

அதைக் கண்டு குறும்புடன் கண்சிமிட்டிய கணவனை முறைத்தவர், “என்னங்க நீங்க காலையில் அவளோட சேர்ந்து அலம்பல் பண்ணிட்டு இருக்கீங்க” என்று சிணுங்கலுடன் கேட்டார்.

இவர்களின் குரலில் சட்டென்று கண்ணை திறந்த ராஜலட்சுமி,  “ஒரு நல்ல பாட்டை நிம்மதியாக கேட்க விடுறீங்களா?” பொறுமை இழந்தபடி கேட்ட பாட்டியின் அருகே அமர்ந்தாள் மதி.

 அவரை சீண்டிப் பார்க்கும் எண்ணத்தில்,“நல்ல பாட்டுதானே பாட்டி ஹிந்தி சேனலில் நியூ சாங் போடுவாங்க கேட்போமா?” என்று கேட்டவளை முறைத்தார் ராஜலட்சுமி.

அவளின் சேட்டைகளை கவனித்தபடி பூஜையறையிலிருந்து வெளியே வந்த மது அவளைப் பார்த்தவுடன் உண்மையைப் புரிந்துகொண்டு,  “இன்னைக்கும் நீ குளிக்கலையா?” என்றவள் மதியின் நெற்றியில் குங்குமம் வைத்துவிடவே, ‘உண்மையைக் கண்டுபிடிச்சிட்ட’ அவளின் கன்னத்தில் முத்தமிட்டாள்.

“நல்ல புத்தியைக் கொடு கண்ணா”  என்றாள் மது சிரிப்புடன்.

“எந்த கண்ணன் வந்து எனக்கு நல்ல புத்தியைக் கொடுப்பான்?” என்ற மதியின் தலையில் நறுக்கென்று கொட்டினார் ராஜலட்சுமி.

அதெல்லாம் கண்டு கொள்ளாமல், “என்னம்மா மது உன் கண்ணன் துயில் கலைந்து எழுந்தாரா இல்லையா?” என்று நக்கலுடன் கேட்டவளின் தலையில் நறுக்கென்று கொட்டிவிட்டு சிரிப்புடன் நகர்ந்தாள்.

அதற்குள் அங்கு காபியுடன் வந்த தமயந்தி, “உநக்கு ஒரு நிமிஷம் பின்னாடி பிறந்தவ எழுந்து குளித்து பூஜையை முடிச்சிட்டு வந்து நிற்கிறா.. நீ என்னடான்னா இன்னும் குளிக்காமல் அப்படியே வந்து உட்காந்திருக்க” என்றவர் அவளின் நெற்றியிலிருந்த குங்குமம் பார்த்தும் கடுப்பானார்.

“மது அவள் இன்னும் குளிக்கவே இல்ல” என்று தலையில் அடித்துக்கொண்ட தாயைப் பார்த்து வாய்விட்டுச் சிரித்த மது, “மதி பிரஸ் பண்ணிட்டியா?” என்று குறும்புடன் கேட்டாள்.

அவளின் கேள்விக்கான அர்த்தம் புரியவே, “நீயே சொல்லு மது அம்மாவைக் கிஸ் பண்றதுக்கு நான் எதுக்கு பிரஸ் பண்ணணும்?” என்று கேட்டபடியே அம்மாவின் கையில் இருந்த காபி கப்பை வாங்கி காபியை ரசித்துக் குடித்தாள்.

அவளின் முகத்தைப் பார்த்த ராஜலட்சுமி, “நீ திருந்தவே மாட்ட..” என்றவர் தீபராதனையை தொட்டு கும்பிட, தமயந்தி குங்குமம் எடுத்துக்கொண்டு சமையலறைக்கு சென்றார்.

மது ஹாலிற்கு செல்ல, “நீயே அப்பாவுக்கு வைத்துவிடு மது..” என்றதும் சரியென்று தலையசைத்தவள் அவரின் நெற்றியில் விபூதி வைத்துவிட்டு பூஜையறைக்கு சென்று தட்டை வைத்துவிட்டு வெளியே வந்து பாடியின் அருகே அமர்ந்தாள்.

“என்ன பாட்டி யார் மேல் இந்தளவுக்கு கோபம்?” அவள் உண்மை தெரிந்துகொண்டே கேட்டாள்.

அவரின் மறுபுறம் அமர்ந்திருந்த மதி, “ஹிட்லருக்கு என் மேல்தான் மது சரியான கோபம்.. அக்காவுக்கு சப்போர்ட் பண்ணி நாலு வார்த்தை பேசுடி” முகத்தை பாவமாக வைத்துகொண்டு கூறினாள்.

மதியின் இரவு உடையைப் பார்த்தும், ‘இவள் பண்ற சேட்டைக்கு கோபம் வராமல் இருந்தால்தான் அதிசயம்..’ என்று நினைத்தாள் மது.

அவளின் மனதில் நினைத்ததை மறுநொடியேசொல்லிவிட்டு கலகலவென்று சிரித்த மதியின் முகத்தையும், அமைதியாக புன்னகைத்த மதுவின் முகத்தையும் கவனித்த ராஜலட்சுமி, ‘இவங்க இருவரும் இதே சந்தோஷத்துடன் என்று இருக்க வேண்டும் கண்ணா’ என்று மனதிற்குள் வேண்டிக்கொள்ள மது எழுந்து சமையலறைக்குள் சென்றாள்.

அவள் செல்வதைப் பார்த்த மதி, “இன்னைக்கும் என் தங்கை சமையல்தான்” என்று எழுந்து சென்று தந்தையின் கையிலிருந்த பேப்பரை வாங்கினாள்.

“அப்பா ஷேர் மார்க்கெட்டில் எந்த கம்பெனி ஷேர் முன்னிலையில் இருக்கு..” என்று கேட்டபடியே சோபாவில் அமர்ந்து பேப்பரை புரட்டினாள் மதி

“நாம் வாங்கிய ஷேர் எல்லாமே நல்ல வளர்ச்சியில் இருக்கு மதி” என்றார் தாமோதரன் பெருமையாக.

அவரைக் கண்டுகொள்ளாமல், “வாவ் இன்னைக்கு நியூ மூவி ரீலிஸ்” என்ற மகளை முறைத்தவர்,  “கொஞ்சநேரத்தில் ஏமாந்தே போனேன்.. அப்பாவின் தொழில் மகளுக்கு இவ்வளவு ஆர்வமான்னு?” என்று ஆதங்கபட்டார்.

அவரின் குரல்கேட்டு,“மதி எதுக்கு பேப்பர் வாங்கினான்னு அவருக்கு தெரியாது மாதிரியே பேசுவாரு” கணவரை வறுத்தேடுத்த தாயை பார்த்து சிரித்தபடி தன் வேலையைக் கவனித்தாள்.

ராஜலட்சுமிக்கும், தாமோதரனுக்கு காலையில் அருகம்புல் ஜூஸ் போட்டு எடுத்துச் சென்றாள். அவளைப் பார்த்தும், “மது நீ மூவி வரீயா?” என்றாள்.

அவள் மறுப்பாக தலையசைக்கவே, “சரி அப்போ நான் போய் கிளம்பறேன்..” என்று வேகமாகப் படியேறி அறைக்குள் சென்றாள் மதி..

தன்னுடைய மகளின் இந்த வேகத்தைப் பார்த்த தாமோதரன், “அம்மா இவ அப்படியே என் ஜெராக்ஸ்” என்று சிரித்த மகனை முறைத்தார் ராஜலட்சுமி.

“அவ உருவத்தில் உன்னை மாதிரி இருந்தாலும் வளர்ப்பு என்னவோ என் மருமகள் தானே? அதுதான் அவனை மாதிரியே இருக்கிற. யாருக்கும்  பயப்படுவது கிடையாது. எதுக்காகவும் கவலைப்படுவது கிடையாது” என்று சொல்ல சமையலறையில் இருந்தபடியே இதைக் கேட்டுக் கொண்டிருந்தாள் மது.

அவளின் சிந்தனையைக் கண்டு, “என்னம்மா யோசனை?” என்றார் தமயந்தி.

 “இல்லம்மா இந்த பாட்டிக்கு அவளை வம்புக்கு இழுக்காமல் இருந்தா போகாது போல. ஆனா அவங்க ஜெராக்ஸ் காபிதான் மதின்னு சொன்னால் பாட்டி நம்புவாங்களா?” குறும்புடன் கண்சிமிட்டினாள் மது.

“அத்தை உங்க செல்ல பேத்தி என்ன சொல்றான்னு கேளுங்க” என்றார் தமயந்தி சிரித்தபடி.

 “மதி அப்படியே என் ஜெராக்ஸ் காபி என்று சொல்லிருப்பா. அவ என்னை மாதிரி, நீ அப்படியே உன் அம்மா மாதிரி மது” என்றார் ராஜலட்சுமி.

“இதெல்லாம் சொல்லும் நீங்களே அவளை கிண்டலடித்தால் என்ன அர்த்தம்?” என்று மது அவரை மடக்கி கேள்வி கேட்க வாய்விட்டு சிரித்தார் தாமோதரன்.

இமைக்கும் நொடியில் கேரட் சீவி கேரட் சாப்பாடு செய்து டிப்பனில் போட்டு எடுத்துகொண்டு, “அம்மா என்னோட வேலை முடிந்தது” என்று அங்கிருந்து நகர்ந்தாள்.

 “இவளோட பொறுமை மதிக்கு வாராது” என்ற ராஜலட்சுமியின் கருத்தை மற்ற இருவரும் ஒப்புக்கொண்டனர்.

தன் அறைக்குள் நுழைந்தவள் கண்ணிமைக்கும் நொடியில் உடையை மாறிக்கொண்டு  தலையைவிரித்து பின்னலிட்டு முடித்து நெற்றியில் போட்டு வைத்துவிட்டு கண்ணாடியை பார்த்தாள். லைட் புளூ நிறத்தில் டாப்பும், ஒயிட் கலர் பேண்டும் அவளுக்கு தனி அழகை சேர்த்தது.

அதற்குள் தயாராகி வந்த மதி, “நீ காரில் வருகிறாயா மது?” குரல்கேட்டு திரும்பிப் பார்த்தாள். சிவப்பு நிறத்தில் சல்வாரில் மதி புது பொலிவுடன் அழகாக இருந்தாள்.

அவள் பதிலை எதிர்பார்த்து கேள்வியாக புருவம் உயர்த்தவே, “நான் பஸில் வரேன் மதி” என்றாள். இருவரும் டைனிங் ஹாலில் வந்து சாப்பிட்டுவிட்டு மதி கார் சாவியை சுற்றியபடியே செல்ல மதுவோ நடந்து சென்றாள்.

தாமோதரனின் மகள் ஒருத்தி எளிமையாகவும், ஒருத்தி பணக்கார விதத்தில் வளர்ந்திருந்தனர்.

அவர்கள் செல்வதை கவனித்தபடி மாடியிலிருந்து இறங்கி வந்தவர், ‘இருவரின் குணத்தை அறிந்த ஒருவன் மணவாளனாக அமைவானா?’ என்ற சந்தேகம் எழுந்தது. கணவனின் முகத்தைப் பார்த்த தமயந்தியின் மனதிலும் அதே கேள்வி எழுந்தது.

Leave a Reply

error: Content is protected !!