Uyir Vangum Rojave–EPI 25

ROSE-c22f31d7

Uyir Vangum Rojave–EPI 25

 

அத்தியாயம் 25

 

“லவ்வுக்கப்புறம் லைப் இல்லன்னா, 25 வயசுக்கப்புறம் எவனுமே வாழ மாட்டான்டா. “

(சந்தானம் – ராஜா ராணி)

 

மீண்டும் சென்னையை நோக்கிப் பயணப்பட்டார்கள் அவர்கள். தான் தாய்மை அடைந்திருக்கும் செய்தி கேட்ட தேவிக்கு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி. அங்கேயே இரவு தங்கி செல்லலாம் என மற்றவர்கள் வற்புறுத்தியும் கிளம்ப வேண்டும் என ஒற்றைக் காலில் நின்றாள். வீரா தான் அலுங்காமல் குலுங்காமல் காரை ஓட்டினான். மற்றவர்களை வீட்டில் இறக்கி விட்டு, வேந்தனும் தேவியும் மட்டும் அவர்கள் இல்லம் நோக்கிப் பயணப்படனர்.

தேவியின் மௌனம் வேந்தனைக் கொல்லாமல் கொன்றது.

“ரோஜா! களைப்பா இருக்கா? கொஞ்சம் நேரம் படுத்துக்கறீயா?”

“பரவாயில்லை மலர். நேரா ஹோஸ்பிட்டல் போ”

“காலையில போய் புல்லா செக் அப் பண்ணிக்கலாம்மா”

“நோ! ஐ வாண்ட் டூ கோ நவ்”

வண்டி நேராக ஹாஸ்பிட்டல் சென்றது. போவதற்குள் அவள் எப்பொழுதும் கன்சல்ட் செய்யும் டாக்டரை போன் செய்து வீட்டிலிருந்து வரவழைத்தாள். தான் மட்டும் டாக்டர் அறைக்கு செல்ல முனைந்தவள் கையைப் பற்றிக் கொண்டு தானும் உள்ளே நுழைந்தான் வேந்தன். அவனை ஆழ்ந்து நோக்கியவள், ஒன்றும் சொல்லாமல் அவனுடன் நுழைந்தாள்.

ரத்தம் எடுத்தவுடன், யுரின் டெஸ்டுக்கு அனுப்பினார் டாக்டர். முடிவுகளும் உடனுக்குடன் வந்தது. பணம் பதினொன்றும் செய்யுமே.

“காங்ராட்ஸ் மேடம். உங்க பிரெக்னசி இஸ் கன்பர்ம். நீங்க கொஞ்சம் அனிமிக்கா இருக்கீங்க. அதுக்கு சில டெப்லட்சும், போலிக் அசிட் டேப்லட்டும் தரோம். கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுத்துட்டு நீங்க தாராளமா நோர்மல் ருட்டினை கண்டினியூ பண்ணலாம். டேக் கேர்” என டாக்டர் முடிக்கவில்லை, அதற்குள் வேந்தன்,

“அனிமிக்கா? டாக்டர் அப்படினா குழந்தைலாம் வேணாம். என் வைப் தான் எனக்கு முக்கியம்” பதறினான் வேந்தன்.

“இதெல்லாம் நார்மலா பிரெக்னட் லேடிஸ்கு வரது தான் சார். சத்தான பழங்கள், பச்சை காய்கறிகள், மீன் இதெல்லாம் சாப்பிட்டாலே போதும். நீங்க பதட்டப்பட வேண்டாம்” ஆறுதல் படுத்தினார் டாக்டர்.

டாக்டர் கர்ப்பத்தை உறுதிபடுத்தியதை கேட்டு முகம் மலர அமர்ந்திருந்தவள், வேந்தனின் பேச்சைக் கேட்டு அவனை ஒரு முறை முறைத்தாள்.

“நாங்க வரோம் டாக்டர்” என அவனின் கையை பிடித்து இழுத்தவள், கோபமாகவே வெளியேறினாள்.

மருந்துகளைப் பெற்றுக் கொண்டு, பணம் செலுத்தி வெளியேறினார்கள. காரில் மீண்டும் மௌனம். பேச வந்தவன் அவள் களைப்பாக வேன் சீட்டில் சாய்ந்திருக்கும் தோற்றத்தில் அமைதியாகி விட்டான். 

வீட்டுக்கு வந்தவள் சாப்பிடாமல் மாடியேறவும்,

“ரோஜா! வந்து சாப்பிடு. இந்த மாதிரி நேரத்துல பட்டினியா இருக்கக் கூடாது” என வற்புறுத்தி இரண்டு இட்லிகளை ஊட்டி விட்டான். ஒரு கிளாஸ் பாலையும் புகட்டி விட்டான். பின் அவள் பின்னோடு வந்தவனை,

“நீ சாப்பிடலயா மலர்?” எனக் கேட்டாள் மனைவி.

“இன்னிக்கு மனசும் வயிறும் நிறைஞ்சு இருக்கு ரோஜா. எனக்கு சாப்பாடு வேணாம்”

முறைத்தவள், கைப் பிடித்து டைனிங் அறைக்கு இழுத்து சென்றாள். இதற்கு பெயர்தான் புருஷனை இழுத்து முடிந்து கொள்வதோ? அவன் செய்த மாதிரியே இரண்டு இட்லிகளை சாம்பாரில் குளிப்பாட்டி அவனுக்கு ஊட்டி விட்டாள். திருமணம் ஆன தினத்திலிருந்து, இன்றுதான் இவள் ஊட்டி விடுகிறாள். வேந்தனுக்கு மனம் குளிர்ந்துவிட்டது.

ஊட்டிய பிறகும் இன்னும் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவனை,

“என்ன இன்னும் பார்வை?” எனக் கேட்டாள் தேவி.

“ரெண்டு இட்லி பத்தல ரோஜா!” ஈ என இளித்தான் வேந்தன். வாய் விட்டு சிரித்தவள்,

“பசிய வச்சிக்கிட்டு எதுக்கு இந்த பில்ட் அப் மலர்? நமக்கே ஒரு பிள்ளை வர போகுது. நீ இன்னும் குழந்தை மாதிரி பிஹேவ் பண்ணுற” என்றாள்.

‘யாரு, நான் குழந்தையா? உனக்கு ஊட்டி விடறதுல இருந்து நான் செய்றேன். பொசுக்குன்னு பிளேட்ட திருப்பிட்டீயே. கேடி’

இருவரும் அசதி தீர குளித்து விட்டு வந்தார்கள். அபார்மென்டுக்கு போகாமல் தன் கூடவே தங்கி இருந்தவளை ஆசையாகப் பார்த்தான் வேந்தன். அந்த நேரத்தில் தலைக்குக் குளித்திருந்தாள்.

“இந்த நேரத்தில ஏன் தலைக்கு குளிச்ச ரோஜா? இங்க வந்து உக்காரு” ஹேர் டிரையர் கொண்டு அவள் தலையை உலர்த்தினான்.

பின் இருவரும் எப்பொழுதும் போல் படுத்துக் கொண்டார்கள். திடீரென வலியில் அலறினான் வேந்தன்.

“ஏன்டி என்னைக் கிள்ளுன?”

“இல்ல மலர், நடக்கறதெல்லாம் நிஜம் தானான்னு சோதிச்சுப் பார்த்தேன். நீ கத்தனவுடன் தான் கன்பர்ம் பண்ணேன்” சிரித்தாள் அவள்.

அவனுக்கும் சிரிப்பு வந்தது. எழுந்து பெட்சைட் விளக்கைப் போட்டவள் கட்டிலில் நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டாள். அவனும் அவளைப் போலவே அமர்ந்து கொண்டான். இருவருக்கும் இடையில் ஒரு தலையணையே வைக்கும் அளவுக்கு இடைவெளி இருந்தது.

“மலர், எப்படி மலர் இது சாத்தியம்? என்னால இன்னும் நம்ப முடியலை. ஓன் நைட்ல எப்படி ஸ்கோர் பண்ண?” முகம் முழுக்க ஆச்சரியமாக கேட்டாள்.

பலமாக சிரித்தான் வேந்தன்.

“நான் ஆம்பிள சிங்கம்டி!” காலரைத் தூக்கினான் வேந்தன்.

“ஏன் ஆம்பள சிங்கம் மட்டும்தான் பிள்ளை குடுக்குமா? ஆம்பள புலி, ஆம்பள எலி, ஆம்பள யானை, பூனை இதெல்லாம் பெத்துக்காதா?”

“இப்படி கேள்வி கேட்டா நான் என்ன்னு பதில் சொல்லுறது. ‘எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே’ அப்படின்னு வேணும்னா பாடலாம். கடவுள் குடுத்த வரம்டா இது”

“செய்யறதெல்லான் நீ செஞ்சிட்டு கடவுள் மேல பழியைப் போடுற. பிராடு நீ!” கொஞ்சினாள் தன் கணவனை.

“எனக்கு நாள் தள்ளனப்ப ஒன்னும் தெரியலை. ஸ்ட்ரெஸ்ல அடிக்கடி இப்படி நடக்கும் மலர். உங்க அத்தை சொன்னப்ப கூட எனக்கு நம்ப முடியலை. அதான் முத வேலையா ஹாஸ்பிட்டல் போய் தெரிஞ்சுகிட்டேன். நான் எவ்வளவு சந்தோசமா இருக்கேன் தெரியுமா மலர்? கடவுள் நேருல வந்தா ஒரு பக்தன் எவ்வளவு சந்தோசப் படுவானோ அதுக்கு மேல நான் ஹேப்பியா இருக்கேன். வானத்துல பறக்குறேன் மலர்.”

“எனக்குப் புரியுதுடா! சில்க் மறுபடியும் பொறந்து வந்தா தமிழ்நாட்டு ஆம்பிள்ளைங்க எப்படி சந்தோஷப் படுவாங்களோ, அதுக்கும் மேல ஹேப்பியான மோமெண்ட் இது”

“சில்க்கா? யாரு அது மலர்”

“அது வந்துமா !” திணறினான் அவன்.

போனை எடுத்துக் கூகள் செய்துப் பார்த்தவள், அவனை மொத்து மொத்தென்று மொத்திவிட்டாள்.

“நான் எவ்வளவு சீரியசா பேசிக்கிட்டு இருக்கேன், உனக்கு கிளுகிளுப்பு கேக்குதா? கார்த்திக் அடிக்கடி சொல்லுவானே, என்னது அது? ஹா, பிரிச்சு மேஞ்சிருவேன்! பீ கேர்புல்”

“ரொம்ப இமோஷனலா பேசுனியா, அதான் உன்னை ரிலாக்ஸ் பண்ணேண்டா. இப்ப கண்டினியூ பண்ணு ரோஜா” சமாளித்தான் அவன்.

“ஒன்னும் வேணாம் போ”

“சொல்லுமா, மை டார்லி இல்ல”

“இந்த பேபி எனக்கு ரொம்ப ப்ரிசியஸ் மலர். மை ஓவ்ன் சைல்ட். நானே பெத்து, முழுக்க முழுக்க என் அன்ப கொட்டி வளர்க்க போற சைல்ட். நீ என் பிள்ளையோட பாசத்துக்கு பங்குக்கு வர மாட்டல்ல மலர்? என் பிள்ளை என் மேல மட்டும் தான் பாசத்தைப் பொழியனும். அம்மா, அம்மான்னு என் பின்னாலயே சுத்தனும். என் பிள்ள அப்பாதான் வேணும்னு சொல்லாது இல்ல?” சிறு பிள்ளையாக கேட்டாள்.

“உன் பிள்ளை முழுக்க முழுக்க உன் கிட்ட தான் பாசமா இருப்பான். நீ கவலைப் படாதடா. நீ வேணும்னா பாரேன், பிள்ளய நெஞ்சுல போட்டுக்கிட்டு ராவும் பகலும்

“பொம்முக்குட்டி அம்மாவுக்கு ஆராரோ… 
தங்கக்கட்டி பாப்பாவுக்கு தாலேலோ… 
வாராமல் வந்த செல்வம் 
வீடேறி வந்த தெய்வம் 
தேடாமல் தேடி வந்த தாழம்பூச்சரம்” அப்படின்னு நீ பாடத்தான் போற. நான் கண்குளிர பார்க்கத்தான் போறேன்” 

அவன் காட்டிய கற்பனை பிம்பத்தில் சுகமாய் கரைந்து போனாள் தேவி. தீடீரென,

“இது ட்வீன்சா இருக்குமா மலர்?”

“இருக்காதுடா. எங்க பேமிலியில யாருக்கும் ட்வீன்ஸ் இல்ல”

‘என் பேமிலியில இருக்கே’ வெளியே சொல்லவில்லை அவள்.

“மலர் இன்னிக்கு டாக்டர் கிட்ட சொன்னீயே, எனக்கு ஏதாவதுனா பேபி வேணாம்னு, ஏன் அப்படி சொன்ன? நானே பிள்ளை வந்ததுல பூரிச்சுப் போய் இருக்கேன். நீ அப்படி சொன்னதும் எனக்கு கோபம் வந்துருச்சு. இன்னும் மேல பேசியிருந்த, டாக்டர் முன்னுக்கே உனக்கு பூஜை நடத்தி இருப்பேன். என் மேல என்ன திடீர்னு பாசம்? என் மேல காதல் இல்லைன்னு சொல்லிக்கிட்டு திரிஞ்சவன் தானே நீ. அன்னிக்கு நான் பைத்தியக்காரி மாதிரி நடந்து கிட்டதுல என் மேல பரிதாபம் வந்துருச்சா?” தன் சந்தேகத்தைக் கேட்டாள் தேவி.

மெல்ல நகர்ந்து அவளை நெருங்கி அமர்ந்தவன், அவள் வெண்பிஞ்சு கரத்தை தன் கைகளுக்குள் அடக்கிக் கொண்டான். சிறிது நேரம் அவனிடம் பதில் இல்லை. பின் தொண்டையை செருமிக் கொண்டு மென்மையாக பேச ஆரம்பித்தான் வேந்தன்.

“உனக்கு என்னோட மாற்றம் அதிசயமாத் தான் இருக்கும் ரோஜா. ஏன், எனக்கே அப்படித்தான் இருக்கு. கொஞ்ச நாளா தனியா பக்கத்து ரூமுல இருந்தேனே, அப்ப இதைப் பற்றி ரொம்ப யோசிச்சுப் பார்த்தேன். எப்படி இந்த மாற்றம், எப்போ இருந்து இந்த மாற்றம், எனக்கே சரியா தெரியலை. முதன் முதலா மீட்டிங் ரூமுல உன்னை பார்த்தப்ப உன் கோபம் என்னைப் பாதிச்சது. என்ன பொண்ணுடா இதுன்னு ஒரு அதிர்ச்சி. என்னையே வைச்சக் கண் எடுக்காம நீ பார்த்தப்ப உள்ளுக்குள்ள ஒரு சலனம் வந்தது உண்மை. ஆனா அதை நான் ஈசியா கடந்து வந்துட்டேன். டிவியில உன்னைப் பார்த்தப்ப இவங்க முகம் சிரிச்சா எப்படி இருக்கும்னு ஒரு ஆசை. அன்னிக்கு நைட் நீ சிரிக்கிற மாதிரி கற்பனை கூட பண்ணி பார்த்தேன்” சொல்லிவிட்டு சிரித்தான்.

அவன் பேசுவதை ஆச்சரியமாக் கேட்டுக் கொண்டிருந்தாள் தேவி.

“அப்புறம், சொல்லு சொல்லு சீக்கிரம் சொல்லு” பிடித்திருந்த அவன் கையை உலுக்கினாள்.

“இரும்மா, சொல்லுறேன். இன்னிக்கு என் மனசுல உள்ளது எல்லாத்தையும் உன் கிட்ட கொட்டப் போறேன். இதுக்கு மேல நீ என்னை விட்டுப் போனா என்னால தாங்க முடியாது. இத்தனை நாளு நீ ஆடுன கண்ணாமூச்சில நான் தவிச்சுப் போய்ட்டேண்டி. உன்னைப் பார்க்காம, நீ கத்துறத கேக்காம, உன் அருகில இருக்கும் போது வரும் ரோஜா வாசத்தை முகர்ந்து பார்க்காம, என்னால முடியலைடி. ப்ளிஸ்டா, என்ன கோபம் இருந்தாலும் என்னை நாலு அடி, இல்ல கடி கூட குடுத்துரு இப்படி விட்டுட்டுப் போகாதேடா.”

“அழகான நேரம் அதை நீ தான் கொடுத்தாய்
அழியாத சோகம் அதையும் நீ தான் கொடுத்தாய்
கண்தூங்கும் நேரம் பார்த்து கடவுள் வந்து போனது போல்
என் வாழ்வில் வந்தே போனாய் ஏமாற்றம் தாங்கேலையே 
பெண்ணே நீ இல்லாமல் பூலோகம் இருட்டிடுதே
போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்”

அவளைத் தன் மடியில் சாய்த்துக் கொண்டு பாடினான் வேந்தன்.

“இறப்பேன் சொல்லாத மலர். யார் இருந்தாலும் இல்லாட்டியும், கடவுள் நமக்குன்னு போட்ட காலம் வரைக்கும் எதையும் தாங்கிக் கிட்டு வாழ்ந்திரனும். எனக்கு சத்தியம் பண்ணு இந்த மாதிரி முட்டாள்தனமா பேசமாட்டேன்னு”

“என் காதல் உனக்கு முட்டாள்தனமா ரோஜா?”

“என்ன பெரிய காதல்? பெத்தவங்க மத்தவங்கள பற்றியும் தன்ன சார்ந்து இருக்கறவங்கள பத்தியும் நினைக்காம சுயநலமா செத்துப் போறது தான் காதலா? நானும் தான் உன்னை உயிருக்கு உயிரா காதலிக்கறேன். நீ இல்லாம போனாலும், நான் உயிரோட இருப்பேன். என் பிள்ளைய உயிருக்கு உயிரா வளர்ப்பேன். உங்க அம்மா மாதிரி. ஐ லவ் ஹேர் அலோட். அவங்க தைரியம். காதல் கணவன் போயிட்டாறேன்னு தப்பா எந்த முடிவும் எடுக்காம பிள்ளைங்களுக்காக வாழ்ந்த அவங்க தான் என் ரோல் மோடல். நீயும் அவங்க மாதிரி தான் இருக்கனும். ப்ராமிஸ் மீ”

“விடும்மா, வாழ வேண்டிய வயசுல எதுக்கு இந்த பேச்சு? சந்தோஷமான விஷயம் பேசலாம்டா.” ப்ராமிஸ் பண்ணாமல் பேச்சை மாற்றினான் வேந்தன்.

“ஓகே, மீதி கதையும் சொல்லு”

“இது கதையில்லமா, காதல் காவியம்”

“அதை நான் சொல்லனும் மலர். இப்ப நீ சொல்ல போற கதைய கேட்டுத்தான் நீ ஹீரோவா இல்ல ஜீரோவான்னு நான் முடிவு பண்ணனும்” சிரித்தாள் தேவி.

‘என் இமேஜ இப்படி டேமேஞ் பண்ணுறாளே!’

“அப்புறம் நீ சைட்டுக்கு வந்த நாள் தான் என் வாழ்க்கையில மறக்க முடியாத நாள். உன் மேல கண்ணாடி விழப் பார்த்தப்ப ஒரு பதட்டம், பயம். என் சேப்டி கூட எனக்கு முக்கியமா படல. பட்டுன்னு உன்னை தள்ளி விட்டேன். அதற்கு பிறகும் நீ அமைதியா இருக்கவும் நான் ரொம்ப பயந்துட்டேன் எங்கயாவது அடி பட்டுருச்சோன்னு. உன் மேல எனக்கு வந்த அக்கறைய பார்த்து எனக்கே பயம் வந்துருச்சு. நீ வேற என்னையே உத்து உத்து பார்த்தியா, இன்னும் பயம் வந்துருச்சு. உனக்கு என் மேல இன்ட்ரெஸ்ட் இருக்குன்னு புரிஞ்சுச்சு, அந்த நினைப்பயே என்னால ஏத்துக்க முடியல. உனக்கும் எனக்கும் எந்தப் பொருத்தமும் இல்ல. நான் கற்பனை பண்ணி வச்சிருந்த பொண்ணு சத்தியமா நீ இல்ல. என் தங்கச்சிங்க வாழ்க்கை ஒரு புறம். மனசுக்குள்ள ஒரே போராட்டம் தான். நீ வலிய வலிய வந்தப்ப எல்லாம் வேணாம் வேணாம்னு உன்னை விலக்கினேன். உங்கிட்ட சாஞ்ச மனச அதட்டி அடக்கி வச்சேன். அப்ப அது காதல்னு எனக்கு புரியல ரோஜா. நீ அழகா, ஆளுமையா இருக்கியா, அதனால உன் மேல எனக்கு வந்த அட்ராக்சன்னு நினைச்சுக்கிட்டேன். ரெண்டு தங்கச்சிகள வச்சிக்கிட்டு இப்படி ஒரு உன் மேல் என் மனசு சாயறத நினைச்சு உள்ளுக்குள்ளயே நிறைய தடவை புழுங்கி இருக்கேன்.” குரலில் வலி இருந்தது.

மடியில் இருந்து எழுந்தவள் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

“எல்லாத்துக்கும் உச்சக்கட்டமா அம்மாவ கடத்தனப்ப ரொம்ப கோபம் வந்தது. உன் கழுத்த நெரிச்சேன் பார்த்தியா, அது தான் நான் செஞ்ச பெரிய தப்பு. முகம், கழுத்து எல்லாம் சிவந்து போய் நீ மூச்சுக் காற்றுக்கு திணறினாலும், கெத்தா நின்ன பாரு, அங்க தான் தொபுகடீர்ன்னு நான் காதலுல விழுந்தேன். நான் அப்படி செஞ்சத என்னாலயே ஏத்துக்க முடியல. உனக்கு என்னால மட்டும் இல்ல வேற யாராலயும் துன்பம் வரக் கூடாதுன்னு அப்ப முடிவெடுத்தேன். ஏன்டி, கல்யாணம் வேணான்னா என்னால தடுத்து நிறுத்தியிருக்க முடியாதா? நான் என்ன அவ்வளவு கேணையனா? அன்னிக்கு உள்ள வந்தப்ப, போன்ல வோய்ஸ் ரெக்கோடர் ஓன் பண்ணிட்டு தான் வந்தேன். நான் நினைச்சிருந்தா போலீஸ் கிட்ட போயிருக்கலாம். ஆனாலும் கல்யாணத்துக்கு சம்மதிச்சேன். உன் கூடவே இருக்கனும்னு பேயாட்டாம் போட்ட என் மனசையும் உடம்பையும் எந்த தங்கச்சி செண்டிமெண்டாலயும் வெல்ல முடியல. அன்னிக்கு அக்ரிமேண்ட்டை ஒரு வார்த்தை கூடப் படிக்காம தான் சைன் போட்டேன். அதோட காப்பி கேட்து கூட, என் புத்திசாலி தங்கச்சிய சமாளிக்கனுமே அதுக்குத்தான். ஆனா வீட்டுக்குப் போய் உடன்பிறப்புங்க முகத்தைப் பார்த்தவுடனே குற்ற உணர்ச்சி வந்து உட்கார்ந்துகிச்சு. “

வலிக்க ஆரம்பித்திருந்த தலையைத் தேய்த்துக் கொண்டான்.

“லட்டும்மா ஒவ்வொரு கண்டிசனையும் விளக்கி சொன்னப்ப, எனக்கு ஒரே கோபம். என் ஈகோவ தட்டி எழுப்புன மாதிரி இருந்தது. உனக்கு நான் வாலண்டியரா அடிமையா இருப்பேன், ஆனா என் குடும்பத்தையும் நீ எப்படி அடிமைப் படுத்தலாம்னு ஒரு கோபம். பிரிஞ்சு போறதப் பத்தி அதுல இருக்கவும் எனக்கு பயமா போச்சு. எப்படியும் உன் ஹை கிளாஸ் வாழ்க்கையோட என்னால சின்க் ஆக முடியாது. நீயே போடான்னு சொல்லுற முன்னுக்கு நானே விலகிறனும்னு நினைச்சேன். அதனால தான் லட்டு சொன்ன ஐடியா எல்லாம் ட்ரை பண்ணேன். எல்லாம் பயங்கர தோல்வி. சரி இது தான் ஊத்திக்கிச்சு பிரம்மச்சரியத்தையாச்சும் கட்டிக் காக்கலாம்னு நினைச்சேன். அதுலயும் தோர்த்துட்டேன்டா. உன் மேல நான் வச்சது காதல் தான்னு புரிஞ்சுக்க எனக்கே இவ்வளவு நாள் ஆச்சு. அப்புறம் உனக்கு எப்படி நான் புரியவைப்பேன் சொல்லு.

ரோஜா ரோஜா ரோஜா ரோஜா

கண்டபின்னே உன்னிடத்தில்

என்னை விட்டு வீடு வந்தேன் “ பாட்டோடு முடித்தான்.

“அப்புறம் எதுக்கு உன் குடும்ப விஷயத்துல என்னை தலையிடாதேன்னு மூஞ்சில அடிச்ச மாதிரி சொன்ன?”

“தப்பு தான். எங்களுக்கு இது வரைக்கும் நீ நன்மைதான் செஞ்சிருக்க. அதை யோசிச்சாச்சும் நான் வாயைக் கப்புன்னு மூடிட்டு இருந்துருக்கலாம். லட்டுன்னா நான் விட்டுருப்பேன்டா. அனு ரொம்ப பயந்த சுபாவம். நான் தான் அவளுக்கு நல்லது செய்யனும். ஒரு அண்ணனா என் கடமைய செய்யும் போது நீ நடுவுல வரவும் கோபம் வந்துருச்சு. என்னை மன்னிசுருடா. இனிமே அவங்க உன் பேமிலி. நான் எதுவும் தலையிட மாட்டேன். ஓகேவா? நானும் ஒன்னு கேக்கனும், எதுக்கு நாம தனியா இருக்கனும்னு சொன்ன? அம்மாவ தான் உனக்குப் பிடிக்குமே. அப்புறம் ஏன்?”

“ரொம்ப பிடிக்கும். ஆனாலும், என் ஹஸ்பனோட கொஞ்ச நாள் தனியா இருந்து லைப்பை அனுபவிக்கனும்னு நினைச்சேன். நீ என்னைப் புரிஞ்சுக்கவும், நான் உன்னைப் புரிஞ்சுக்கவும் இந்த தனிமை வேணும்னு தோனுச்சு. அதனால தான் இந்த கண்டிஷன் போட்டேன். அதோட ஆரம்பக் கட்ட திருமண வாழ்க்கையில நிறைய சண்டை சச்சரவு வரும். அது நமக்குள்ளேயே இருக்கட்டுமேன்னு தான் இந்த ஏற்பாடு”

“என் சமத்து செல்லம்டா! என்னமா யோசிச்சிருக்கே. நான் உன் மேல வச்சது காதலா இல்லையான்னு கண்டுபிடிக்கவே எனக்கு இவ்வளவு நாள் ஆச்சு. அவ்ளோ லேட் பிக்கப்”

“அது தான் ஊரு மக்களுக்கே தெரியுமே” என் குலுங்கி சிரித்தாள் தேவி.

“மத்த விஷயத்துல வேணுன்னா நான் லேட் பிக்கப்பா இருக்கலாம். ஆன இந்த விஷயத்துல நான் கிங்குடி” இறுக்கி அணைத்தான் மனைவியை.

அவன் அணைப்புக்குள் அடங்கியவள்,

“எந்த விஷயத்துல மலர்?” என மையலுடன் கேட்டாள்.

அன்று அவர்கள் வாழ்க்கையில் ஒரு ஆனந்தமான ‘இச்சச்ச கச்சச்ச’ நடந்தேறியது.

அங்கே இந்துவின் இல்லத்தில், மணமக்களை ஆரத்தி கரைத்து வரவேற்றார் இந்து.

“வலது காலை எடுத்து வச்சு வாங்க ரெண்டு பேரும்”

உள்ளே வந்த கார்த்திக்கை சோபாவில் அமர வைத்தார் இந்து.

“லட்டு, நீ போய் குளிச்சு கிளிச்சுட்டு வாம்மா. மாப்பிள்ளை கிட்ட நான் பேசிக்கிட்டு இருக்கேன்” என மகளை அனுப்பினார். வீராவும் அனுவும் குட் நைட் சொல்லிவிட்டு, தங்கள் வாரிசை உருவாக்கும் வேலைக்கு சென்றுவிட்டார்கள்.

“என்னம்மா, என் கிட்ட தனியா பேசனுமா?” கரெக்டாக பாயிண்டைப் பிடித்தான் கார்த்திக்.

“ஆமாப்பா கார்த்திக். வேந்தன் ஏற்கனவே உன் விஷயத்தை என் கிட்ட சொல்லிட்டான். இப்ப இல்ல, பொங்கலுக்கு நீ வந்து போனதுமே சொல்லிட்டான். ரெண்டு பேரும் வாழ்க்கையில செட்டல் ஆனவுடன், உனக்கு அப்பவும் இந்த ஆசை இருந்தா கல்யாணம் பண்ணி வச்சிரலாம்னு சொல்லி வச்சிருந்தான். எனக்கு என் மக முடிவு தான் முக்கியம்னு சொல்லிட்டேன் அவன் கிட்ட. அப்புறம் நீ வேற கொஞ்ச காலமா காணாம போய்ட்ட. வேந்தன் விசாரிச்சிப் பார்த்தான். அப்பவும் ஒன்னும் தெரியல. அப்புறம் பார்த்தா திடீர்னு எண்ட்ரி ஆய்ட்ட. உன்னைப் பத்தி விசாரிக்கலாம்னு பார்த்தா, இவன் கல்யாணம், அனு கல்யாணம் இப்படி பலது நடந்துருச்சி.”

“ஏன்மா, என் குடும்பம் சரியில்லைனா லட்டுவ எனக்கு குடுத்துருக்க மாட்டிங்களா?”

“அப்படி இல்லப்பா. எங்க கூட இருந்த நாளுலயே உன்னைப் பத்தி நான் நல்லா தெரிஞ்சுகிட்டேன். நீ நல்லவன். ஆனா இவள என்னால கணிக்கவே முடியலையே. ஒரு சமயம் உன் மேல பாசம் இருக்கற மாதிரி இருக்கும், ஒரு சமயம் தெரியாத மாதிரி இருப்பா.”

‘பெத்த உங்களுக்கே புரியலைன்னா, என் நிலமைய யோசிச்சுப் பாருங்க.’

“அன்னிக்கு அந்த மதன் உன்னை திட்டனப்ப, அவ குரல் மட்டும் ஆத்திரத்துல தனியா கேட்டது. அப்பத்தான் மேட்டர புடிச்சேன். அதான் வேந்தன் சொன்னவுடனே கல்யாணத்த முடிச்சிட்டேன். நீ எனக்கு மருமகனா வந்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம்பா. ஏன்னு கேளுப்பா?”

“ஏன்மா?”

“நான் புதுசா எந்த பாஷையும் கத்துக்க வேணாம் பாரு” சொல்லிவிட்டு இடி இடியென சிரித்தார் அவர்.

‘ஹ்ம்ம் அவங்க அவங்க பிரச்சனை அவங்களுக்கு. என் பிரச்சனை , வருது பாரு அழகா பூந்தென்றல் மாதிரி கும்முன்னு குளிச்சுட்டு. இன்னிக்கு லக் அடிக்குமா? சான்ஸ் கிடைச்சா பாடி மயக்குவோம். அதெல்லாம் நமக்கு சொல்லியா குடுக்கனும்.’

“மாப்பிள்ளை, லட்டு படிப்பு முடியற வரைக்கும் நீங்க உங்க வீடுலயே தங்கிக்கலாம். இல்ல அவளைப் பார்த்துக்கிட்டு இருக்கனும்னு நினைச்சிங்கன்னா இங்க இருக்கலாம். இந்த சோபா எப்பவும் உங்களுக்குத்தான். இது அவளோட விருப்பம்தான், அவ அண்ணனும் சரின்னு சொல்லிட்டான். அவ மனசு மாறுனா சொல்லுங்க, நான் நல்ல நாள் பார்க்கிறேன். இந்த மாதிரி விஷயங்களில் நான் ரொம்ப திறந்த மூளை. இனிமே என்னை அத்தைன்னு அழகா கூப்புடுங்க மாப்பிள்ளை ” அணுகுண்டை கார்த்திக் தலையில் அலுங்காமல் போட்டார் இந்து. இனிமே அந்த மண்டையில் முடி முளைக்குமா?

‘திறந்த மூளையா? ஓ! ஓபேன் மைண்டட்டா. உங்க ட்ராண்ஸ்லெசனுலுல தீயை வைக்க. என் வாழ்க்கையில அம்மாவும் மகனும் ரொம்ப விளையாடுறீங்க, இது நல்லா இல்ல.’

நமுட்டுச் சிரிப்புடன் இந்துவின் அருகில் அமர்ந்தாள் லட்டு.

‘சிரிடி, சிரி! இன்னும் பத்து மாசத்துல உன்னை பிரசவ வார்டுல அழுவ விடுறேன்’ உறுதிமொழி எடுத்தான் கார்த்திக்.

“சரி, நீங்க பேசிட்டு இருங்க. நான் போய் சாப்பிட என்ன இருக்குன்னு பார்க்கறேன். இந்த ரெண்டு குஜாலு பார்ட்டியும் அப்பீட்டு ஆயிருச்சுங்க. நாம மூனு பேருதானே, பழைய சோத்துல தண்ணி ஊத்தி சாப்பிட்டுக்கலாம்” என்றவாறே சமயலைறைக்கு சென்றார் இந்து.

“ஏண்டி! இளிச்சவாய் மாப்பிள்ளை கிடைச்சா, உங்கம்மா பழைய சோறு போடுவாங்களா? ராங்காயிரும் சொல்லிட்டேன். ச்சேய்! எனக்கும் இந்த பாஷை ஒட்டிக்கிச்சு “

“அடங்குடா! உன்னை கலாய்ச்சிட்டுப் போறாங்க அவங்க. உள்ள தடபுடலா செஞ்சு வைப்பாங்க, கவலைப் படாத.”

அவளை நெருங்கி வந்து அமர்ந்தவன், அவள் தோளைச் சுற்றி கைகளைப் பேட்டுக் கொண்டான்.

“ப்பா! என்ன வாசம்டி உன் மேல. என்ன சோப்பு போட்டுக் குளிக்கற?” என வாசம் பிடித்தான்.

நெளிந்தவள்,

“பாத்திரம் விளக்குற சோப் போட்டுக் குளிச்சேன். அதுல தான் லெமன் சத்து அதிகம் இருக்காம்” என்றவள் அவனை தூரத் தள்ளினாள்.

“ஏன்டி இப்படி தள்ளுற. நான் உன் புருசன்டி. இனிமே ஒட்டித்தான் உட்காருவேன். எனக்கு தேவையானத எல்லாத்தையும் நீ தான் கவனிக்கனும்.” எல்லாத்தையும் அழுத்தி சொன்னான். மீண்டும் நெருங்கி அமர்ந்து கைப் பிடித்துக் கொண்டவன், அவள் காதில் சரசமாக பாடினான்.

“சிக்கு புக்கு சிக்கு ரைலுடா
இவ சேல கட்டி வந்தா மையிலுடா
மோகத்தாலே உள்ளம் நோகுதே
மூங்கில் காடாய் தேகம் வேகுதே
பட்டு சேலை போல் என்னை நீயே
சுத்தி சுத்தி கட்டிக்கடி
அட ஆள் தோட்ட பூபதி நானடா

அந்த அமர தோட்ட பூபதியும் நானடா”

“அடச்சீ! பாட்டு கூட உன் மூட்டுக்கு ஏத்த மாதிரி எங்கத்தான் புடிக்கறீயோ! பொறுக்கி!” மொத்தினாள் அவள்.

உள்ளேயிருந்து இந்து,

“என்னம்மா அங்க சத்தம்?” என கேட்டார்.

“பேசிக்கிட்டு இருக்கோம் அத்தை” என சட்டென கூறினான் கார்த்திக்.

“அந்த பயம் இருக்கட்டும்!” என பளிப்பு காட்டியவள், அவனை உதறிவிட்டு கிச்சனுக்குள் ஓடினாள்.

‘கொல்லுறாளே என்னை! நான் பாட்டுக்கு சிவனேன்னு என் வீட்டுல பேச்சலரா சுத்திக்கிட்டு இருந்திருப்பேன். கல்யாணம் பண்ணி வச்சு, மொத்த குடும்பமும் என்னை வச்சி செய்யுதே!’ புலம்ப மட்டும் தான் அவனால் முடிந்தது.

 

உயிரை வாங்குவாள்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!