அனல் 4.1

அனல் 4.1

அனல் 4.1

 

வழுக்கு மரம் வெங்கடேசன் சார் வீட்டிலிருந்து கிளம்பி தென்றலின் வீடு வந்து சேர்ந்தவர்கள், வீட்டின் கதவு திறந்திருக்க உள்ளே சென்று பார்க்கையில் வீட்டினுள் அக்ஷாவுடன் பேசிக்கொண்டிருந்தான் அவன்.

 

அவனை பார்த்த மூவர் மனதிலும் வெவ்வேறு எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தது.

 

‘யார் இவன் நம்ம வீட்டுல புதுசா இருக்கான் ஆனா எங்கேயோ பார்த்த மாதிரியே இருக்கான் எங்கனுதான் தெரியலையே?’ என விவேகனும்.

 

‘இது யாரு புது வரவு நம்மள வெச்சு கதை எழுதுறவ நம்மள வெச்சே மேய்க்க முடியலன்னு ராத்திரியும் பகலும் பொலம்பி தள்ளிட்டு இருக்கா இதுல புதுசா ஒன்னு கொண்டுவர அளவுக்கு அவளுக்கு அறிவு இல்லையே?’ என மித்ரனும் சிந்தித்துக் கொண்டிருக்க.

 

தென்றலின் என்னமோ வேறொன்றாக இருந்தது.

 

‘ஐயோ என்ன இது வீட்டுக்கு கெஸ்ட் வந்திருக்காங்களா! இந்த அம்மா வேற வீட்டுக்கு யார் வந்தாலும் முதல்ல ஒரு டீ போட்டு என் பட்டர் பிஸ்கெட்ட தானே எடுத்துக் கொடுப்பாங்க என்‌ பிஸ்கெட் போச்சா’ என இவள் அவளின் கஷ்டத்தில் இருக்க.

 

இவர்களைத் தொடர்ந்து தென்றலின் வீட்டிற்கு வந்த தமிழும் புதிய நபரை கண்டு அதிர்ந்து நின்றான்.

 

‘இவன் எங்க இங்க வந்தான்? எப்படி வந்தான்? நம்ம எங்க போனாலும் மோப்பம் பிடிச்சிட்டு வந்திட்றானே என்னதான் பண்ணலாம் இவன.’ என நினைத்துக் கொண்டிருக்கும் போதே,

 

கையில் டீயுடன் கிச்சனில் இருந்த தேவகி வாசலில் நிற்பவர்களை பார்த்தவர், “நாலு பேரும் எப்ப வந்தீங்க உள்ள வராம வாசல்ல நின்னு என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என்றவாறு வர,

 

“நாலு பேரா…” என்றவாறு விவேகனும் மித்ரனும் திரும்பி பார்க்க தென்றல் பிஸ்கட் டப்பாவை தேடி ஓடினாள்.

 

வாசலில் தமிழ் நிற்பதைப் பார்த்த விவேகன் புருவங்கள் யோசனையில் முடிச்சிட, “எப்ப வந்த தமிழ் உன்ன நான் நாளைக்கு காலேஜ்ல பாக்கலாம் இன்னைக்கு வீட்டுக்கு வர வேண்டாம்னு சொன்ன மாதிரி ஞாபகம்…” என மித்ரன் இழுக்க.

 

“புரியுது மித்ரன் ஏன் வந்தன்னு கேட்கிற? உங்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டாம்னு சொன்ன ஆனா அக்ஷா? அவளுக்கு சொல்லிக் கொடுக்கணும்ல அதான் வந்தேன்” என தமிழ் பதிலுரைக்க.

 

மூவரின் பார்வையும் புதியவன் மீது திரும்ப தென்றலும் பிஸ்கெட் டப்பாவுடன் வெளியே வந்தவள்,  “யாருமா இவங்க புதுசா இருக்காங்க?” என தேவகியிடம் கேட்க.

 

விவேகனைக்கண்டு முறைத்த தேவகி, “எவ்வளவோ சொல்லியும் கேட்காம அவளுக்கு டூ வீலர் ஓட்ட சொல்லிக்கொடுத்தான்ல, அவளால வந்ததுதான். வண்டி ஓட்டத் தெரியாம ஓட்டிட்டு போய் இவரை இடிச்சு தள்ளிட்டு அவளும் கீழே விழுந்து வச்சிருக்கா. இந்த தம்பிதான் அவளையும் கூட்டிட்டு வந்துச்சி அதான் மருந்து போட்டு கொஞ்ச நேரம் வீட்டிலே ரெஸ்ட் எடுத்துட்டு போக சொன்னேன்.” என்றார் கவலையாய்.

 

விவேகன், “உன் வீடு எங்க இருக்கு தம்பி நீ என்ன பண்ற உன்னை இதுக்கு முன்னாடி பார்த்த மாதிரி இருக்கே?” என வினவ அதற்கு தமிழ் பதில் வழங்கினான்.

 

“இவன் என் தம்பி விவேக். பேரு அபிநவ் பார்க்க கொஞ்சம் என்னை மாதிரியே இருப்பான் அதான் உனக்கு அவனை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு.” என கூற அப்போதுதான் விவேகனுக்கும் உரைத்தது அவன் சாயல் சற்று தமிழ் போலவே இருக்கவும் எங்கோ பார்த்தது போல் இருந்திருக்கிறது என.

 

அனைவரும் தேனீர் அருந்திவிட்டு அமர்ந்திருக்க பிறகு தமிழிடம் தேவகி, “அக்ஷாவுக்கு இப்போ அடிபட்டிருக்கு அதனால நாளைக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் வேலையை பார்க்கலாம்” என கூறவும் அனைவரிடமும் சொல்லிக்கொண்டு தமிழும் அவன் தம்பியும் வீட்டில் இருந்து கிளம்ப.

 

“நிலவன் கொஞ்சம் நில்லுங்க…” என்ற தென்றலின் குரலில் உருகி நின்றான் தமிழ்நிலவன்.

 

தென்றல் அவனை இவ்வாறாக அழைத்தது அங்கிருந்த ஒருவரை தவிர்த்து வேறு யாருக்கும் வித்தியாசமாக படவில்லை.

 

“நீங்க இனி அக்ஷாவுக்கு மட்டும் சொல்லிக் கொடுத்தா போதும் எங்களுக்கு நாங்களே பார்த்துக்குவோம்” என்றவளை, இடைமறித்த விவேகனை முறைத்தவள், “நீ என்ன கிழிக்கிறியோ அதையே நாங்களும் கிழிச்சா போதும்.” என்று முறைக்க விவேகன் வாயடைக்க பட்டது.

 

தமிழ் மற்றும் அவன் தம்பியை வழியனுப்பி வைத்துவிட்டு அக்ஷாவை அழைத்துக் கொண்டு அறைக்கு சென்றான் விவேகன்.

 

அவனைப் பின்தொடர்ந்து தென்றலும் சென்றுவிட மித்ரன் தேவகி அம்மாவுக்கு வீடு சுத்தம் செய்ய உதவி கொண்டிருந்தான்.

 

சிறிது நேரம் அக்ஷா உடன் விவேகன் பேசிக்கொண்டிருந்தான், வண்டி ஓட்டும்போது பார்த்து கவனமாய் இருக்க கூறி. அவன் மடியில் தலை வைத்து படுத்த தென்றல் சற்று நேரத்தில் உறங்கி விட அவன் பேசியதை கேட்டவாறு அக்ஷாவும் உறங்கிப் போனாள்.

 

பிறகு தென்றலின் தலையை அவள் எழாதவாறு தலையணைக்கு மாற்றியவன் அவன் டார்லிங்கிடம் கூறிக் கொண்டு மித்ரனுடன் அவர்கள் வீட்டிற்கு கிளம்பினான்.

 

வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் வழியில் தன்னை முறைத்தவாறு வந்த மித்ரனை கண்ட விவேகன்,

 

“உன் பிரச்சினைதான் என்னடா ஏன் இப்படி பழைய பிரியாணி தின்ன பூனை மாதிரி மூஞ்சி வச்சுட்டு வர” என வினவ.

 

விவேகன் கூறிய ஆங்கிளில் அவன் முகத்தை நினைத்து பார்த்த மித்ரனிற்கு பகீரென்று இருந்தது.

 

அவன் முக பாவனைகள் கண்டு விவேகன் சத்தமாக சிரித்து விட, மேலும் கோபமடைந்த மித்ரன் நடுத்தெருவில் இருந்து தெருவோரம் விவேகனை இழுத்து சென்றவன், 

 

“என்ன தான்டா உன் மனசுல நினச்சுட்டு இருக்க? பெரிய ஹீரோனா? இல்ல ரவுடின்னா? பெரிய பணக்காரனா? அன்னிக்கு என்னடானா பஸ்ல தென்றலை இடிச்சவனை அந்த அடி அடிக்கிற நான் மட்டும் தடுக்கலனா அன்னைக்கு அவன் செத்தே போய் இருப்பான். இப்போ ஒரு பொண்ண கடத்தியிருக்க இதையெல்லாம் எந்த தைரியத்தில பண்றடா?” என கோபத்தில் கத்தி கொண்டு இருக்க.

 

ஒரு கை பேண்ட் பாக்கெட்டில் இருக்க மற்றொரு கையால் தலைமுடியை சீவியவன் மிகவும் கூலாக பதில் வழங்கினான்.

 

“யாரும் இல்லன்ற தைரியத்தில தான்டா” என்ற அடுத்த நொடி மித்ரனின் கை விவேகனின் கன்னத்தை பதம் பார்த்திருந்தது.

 

அவன் அடித்த அதிர்ச்சியில் இருந்தே வெளிவராமல் இருந்த விவேகன் தன்னை அடித்து விட்டு அவன் அழுவதை கண்டு மேலும் அதிர்ந்தவன், அவனை இருக்கி அணைத்துக்கொண்டு “சாரிடா மன்னிச்சிடு இனி இப்படி பேச மாட்டேன்” என எவ்வளவு கெஞ்சியும் மித்ரனின் அழுகை நின்றபாடில்லை.

 

“இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு இந்த ஒப்பாரி வச்சுட்டு இருக்கடா நீ கொஞ்சம் சொல்லிட்டு அழு” என்றவாறு மித்ரனின் தலையையும் முதுகையும் தடவி விட சற்று நிதானித்த மித்ரன்.

 

“அப்பா இறந்த அப்புறம் யாரும் இல்லாம தனியா இருந்த அம்மாவுக்கும் எனக்கும் நீயும் தென்றலும் தானடா எல்லாமுமா இருக்கீங்க இன்னைக்கும் நீயோ இல்ல தென்றலோ இல்லன்னா நானும் அம்மாவும் செத்து தான்டா போகணும்” என்று மீண்டும் அழ தயாரானவனை, 

 

அள்ளி அணைத்துக் கொண்டவன்,

“சரி விடுடா இனி இப்படி சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டேன்ல்ல மன்னிச்சுடுடா” என கெஞ்சி கொஞ்சி அவனை அழைத்துக் கொண்டு செல்ல எத்தனிக்க.

 

“அந்தப் பொண்ண எங்கடா வச்சிருக்க?” என மித்ரன் கேட்க “எந்த பொண்ணுடா?” என்றான் விவேகன்.

 

“கடத்துனல அந்த பொண்ணுடா” என்றதும் தான் அவனுக்கு நினைவு வந்தது.

 

பிறகு இதை எப்படி மறந்தேன் என தன்னைத்தானே நொந்துகொண்டவன் மித்ரனை இழுத்துக்கொண்டு அவன் தங்கியிருந்த ஆசிரமத்திற்குச் சென்றான்.

 

ஆசிரமத்திற்குள் இவர்கள் நுழைந்ததும் பிள்ளைகள் அனைத்தும் இவர்களை நோக்கி கட்டியணைக்க கைகளை தூக்கியவாறு ஓடிவந்தவர்கள் இவர்களுக்கு அருகில் வர ஐந்து அடிக்கு முன்னே நின்று கொண்டு அவர்களை சுற்றி முற்றி பார்த்தவர்கள் முகம் வாடி போக,

 

“ஏன்டா நாங்க வந்தது பிடிக்கலையா?” என்று மித்ரன் கேட்க, சற்றும் யோசிக்காத பிள்ளைகள், “பிடிக்கல எங்களுக்கு பட்டர் பிஸ்கட் அக்கா தான் வேணும்” என அடம் பிடிக்க.

 

“டேய் அவ பேரு தென்றல் எவ்வளவு டைம் சொல்லி இருக்கேன் அவள தென்றல் அக்கானு கூப்பிடுங்கனு அது என்ன பட்டர் பிஸ்கட் அக்கா.” என எப்போதும் போல் விவேகன் அவர்களை மிரட்ட.

 

அப்போதும் முடியாது என தலையை ஆட்டிய பிள்ளைகள் “பட்டர் பிஸ்கெட் அக்கா வராம நீங்க ஏன் வந்தீங்க?” என அவர்களை தள்ளிக்கொண்டு வெளியே செல்ல ஆஸ்ரமத்தின் நிர்வாகியான சரஸ்வதி அம்மாள் பிள்ளைகளை மிரட்டி அனுப்பியவர் விவேகனையும் மித்ரனையும் வரவேற்று அவர் அறைக்கு அழைத்துச் சென்றார்.

 

பிறகு இருவரும் அவரின் காலில் விழுந்து வணங்கி சில பல நலவிசாரிப்புகளுக்குப் பிறகு அவர்கள் இருவரும் அவரிடமிருந்து விடைபெற்று கொண்டு வெளியே வந்தார்கள்.

 

பிறகு மித்ரனை விவேகன் வேறு ஒரு அறைக்கு அழைத்துச் செல்ல அங்கு இவர்கள் வயதிற்குரிய ஒரு பெண் மாற்றுத் திறனாளி பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள்.

அவளிடம் சென்ற விவேகன், 

 

“மகா வீட்டுக்கு போகலாம் டா” எனக்கூறவும்,

 

இவர்களின் புறம் திரும்பியவள் விவேகனைக் கண்டு சிநேகமாக புன்னகைத்தவள் மித்ரனைக் கண்டு முழிக்க,

 

மித்ரனுக்கு தான் ஒன்னும் புரியவில்லை, கடத்தி வந்தவனிடம் இயல்பாக அவள் சிரிப்பதும் தன்னைக் கண்டு மிரண்டதும், ‘என்ன தான் நடக்குது இங்க, வீட்ல இருக்க லேடீஸ தவிர்த்து யார பார்த்தாலும் எரிந்து விழுபவன். அவளிடம் மென்மையாக பேசுகிறான் எதோ சரியில்லை’ என்பது மட்டும் புரிந்தது அவனுக்கு.

“இவன் என் ஃப்ரெண்டு மித்ரன் இவ மகா வெங்கடேசன் சார் பொண்ணு” என இருவருக்கும் அறிமுகப்படுத்தியவன், அவளையும் அழைத்துக்கொண்டு பிள்ளைகளிடம் விடைபெற்று கொண்டவன் ஆசிரமத்தில் இருந்து வெளியேறி ஆட்டோ ஒன்றை பிடித்து மகாவை அவள் வீட்டில் இறக்கிவிட்டவன் அவளிடம் நன்றி கூற,

 

“நான் தான் உங்ககிட்ட மன்னிப்பு கேக்கனும் என் அப்பா உங்க ஃப்ரெண்ட் கிட்ட நடந்துகிட்ட முறை ரொம்ப தப்பு ரியலி வெரி சாரி இனி அப்படி ஏதும் நடக்காம நான் பார்த்துக்கிறேன்.” என்ற மகா சிநேகமாக சிரித்துவிட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டாள்.

 

விவேகனை கேலியாக பார்த்த மித்ரன், “அப்போ அந்த பொண்ணு அவ அப்பன பத்தி தெரிஞ்சி அதுவாதான் வந்து இருக்கு, நீயே வீடு புகுந்து கடத்துன மாதிரி சீன் போட்ட” என சிரிக்க,

 

அவனைக் கேவலமான லுக் விட்ட விவேகன், “வீடு புகுந்துலாம் தூக்கலடா அந்த பொண்ணு காலேஜ்ல வச்சு அவ அப்பன பத்தி சொல்லி அவள வெச்சே அவ அப்பன மெறட்டுனேன்டா. அப்புறம் அவள என் ஃப்ரெண்டுனு சொல்லி தான் ஆசிரமத்தில விட்டேன்.உன் கிட்ட சும்மா சொன்னேன்டா என்று கண் சிமிட்டியவன், அதான் அந்த ஆளு பம்புனத பார்த்தல, அவன் அவன் ரத்தம்னா மட்டும் தான் ஒரைக்குது இவன மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் என்ன பண்ண…” என விவேகன் சலிப்பாக கூற அவனை வியந்து பார்த்தான் மித்ரன். இவன் நவயுக கிருஷ்ணன்.

 

வீடு வந்து சேர்ந்தவர்கள் வழக்கம் போல்

மித்துமாவிடம் சிறிது நேரம் பேசிவிட்டு இரவு உணவை முடித்துக் கொண்டு உறங்கச் சென்றனர்.

 

தென்றலின் வீட்டிலோ அனைவரும் இரவு உணவு உண்டு முடித்து விட்டு உறங்க செல்லும் நேரம், அவள் சந்தேகத்தை கேட்டாள் அக்ஷா.

 

“ஏன் தேவகி விவேக் அண்ணா டியூஷன் எடுக்க வந்த அவர தமிழ்னு தானே சொன்னாரு இன்னைக்கு ஏன் இவ அவர நிலவன்னு கூப்பிட்டா?” எனவும், தென்றலுக்கும் அப்போது தான் உறைத்தது தான் அவ்வாறு அவனை அழைத்தது.

 

ஒரு வித சிந்தனையில் தென்றல் உழன்று கொண்டிருப்பதை மகளின் முகத்தை வைத்தே அறிந்த அவரின் தந்தை அவளின் தலை கோதியவாறு “என்னடா மா ஆழ்ந்த யோசனையில இருக்க?” என வினவ.

 

“அது இல்ல நானா அவன் பேரு தமிழ் நிலவன். ஏதோ ஃப்லோல அப்படி கூப்பிட்டேன் போல. அதான் வேற ஒன்னும் இல்ல.” என திக்கி திணறி கூறியவள் தந்தையின் மடியில் தலை வைத்து உறங்கி போக.

 

இந்த குழப்பத்தை உண்டாக்கியவள் அன்னையின் மடியில் தலை வைத்து படுத்து உறங்கி கொண்டிருந்தாள்.

 

இந்த பெயர் சுருக்கத்தை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாத பெற்றவர்களும் உறங்கிவிட.

 

தமிழின் வீட்டிலோ மினி உலகப் போரே நடந்தது.

 

“நீ ஏன்டா அந்த வீட்டுக்கு வந்த என்னை மோப்பம் பிடிக்கிறதே உன் வேலையா?” என தமிழ் அபிநவின் சட்டையை பிடிக்க, 

 

“நீ ஏன் அந்த வீட்டுக்கு போன உனக்கும் அவங்களுக்கும் என்ன இருக்கு?” என இவனும் அவன் சட்டையை பிடிக்க என சண்டை முட்டிக்கொள்ள தமிழின் அன்னை வந்து மிரட்டவும் இருவரும் முறைத்தவாறே உறங்கச் சென்றனர்.

 

அடிபட்ட காயத்தின் வலியில் தூக்கமில்லாமல் அபிநவ் இருக்க,

 

தென்றலின் நிலவன் என்ற அழைப்பு காதில் தேன் ஊற்றாய் இனித்தது தமிழுக்கு. அதை எண்ணி எண்ணி தனக்குள் கரைந்து உருகியவன் உறக்கத்தை அவள் நினைவலைகளில் கைது செய்தான்.

 

இவர்களின் உறக்கத்தை கெடுத்த ஜீவன்கள் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தனர்.

 

Leave a Reply

error: Content is protected !!