அனல் 4.2
அனல் 4.2
அனல் 4.2
மறுநாள் காலைப் பொழுது அனைவருக்கும் அழகாக புலர்ந்தது.
எட்டு முப்பது மணிக்கு துவங்கும் கல்லூரிக்கு செல்ல வேண்டியவர்கள் எட்டு மணிக்கு தான் எழுந்தனர்.
கடிகாரத்தில் மணியை கண்டு அடித்துபிடித்து கொண்டு எழுந்த மித்ரன் விவேகன் இருவரின் மனதிலும் ஓடியது ஒரே எண்ணமே.
‘இதுக்கு மேல நாம கிளம்பி தென்றல் வீட்டுக்குப் போய் அவளை அழைத்துக் கொண்டு கல்லூரிக்கு வந்து சேர்வதற்குள் கல்லூரி முடியும் நேரம் ஆகிவிடும்’ என்பதை நினைத்தவர்கள் அவளை அவர்களின் நானாவிடம் கூறி அழைத்து வரச் சொல்லலாம் என அழைக்க எதிர்ப்புறம் இருந்து வந்த செய்தியோ அவர் மிகவும் அசந்து உறங்கிக் கொண்டிருக்கிறார் என்பதுதான்.
என்னதான் அவளைத் தனியாக வர சொல்லிப் பழக்கப்படுத்த நினைத்தாலும், அன்று அந்த பேருந்தில் நடந்த சம்பவத்திற்கு பிறகு அப்படி ஒரு விஷ பரீட்சை வைக்க விவேகன் விரும்பவில்லை. அதனால் தான் மீண்டும் அவர்களே உடன் செல்ல முடிவு செய்திருந்தனர்.
சிறிது நேரம் யோசித்த விவேகன் தமிழின் எண்ணிற்கு அழைக்க அவன் செய்கையை கண்ட மித்ரன் குழம்பினான். அவன் முகத்தில் குழப்ப ரேகைகள் படர்வதை கண்ட விவேகன் “இங்க என்ன லுக்கு கெளம்புடா நான் பேசிட்டு வந்துடுறேன்” எனவும் மித்ரன் கல்லூரிக்கு செல்ல தயாராக தொடங்கினான்.
விவேகனின் இரண்டாம் அழைப்பில் தான் தமிழின் எண் ஏற்கப்பட்டது.
“ஹலோ தமிழ் நான் விவேக் பேசுறேன்.”
“என்ன விவேக் காலையிலேயே எனக்கு கால் பண்ணி இருக்க?” என தமிழ் வினவ
“ஒன்னும் இல்ல தமிழ் உன் வீட்ல இருந்து தென்றல் வீடு பக்கம் தானே அதான் அவளை கொஞ்சம் காலேஜ்க்கு கூட்டிட்டு வர முடியுமா என்று கேட்கலாம்னு.” என்றதும்
“அது சரி விவேக் நானே பஸ்ஸில தான் வருவேன் பஸ்ல தான் தென்றல கூட்டிட்டு வரனுமா” என தமிழ் அவன் சந்தேகத்தை கேட்க.
“இல்ல தமிழ் தென்றல் வீட்டுக்குப் போ அங்க ஸ்கூட்டி இருக்கும் நான் அவங்க கிட்ட சொல்லிடுவேன் இன்னைக்கு ஒரு நாள் நீ அவள ஸ்கூட்டில கூட்டிட்டு வந்துடு” என விவேகன் கூறவும்.
தமிழ் எந்தவித விசையும் இன்றி வானில் பறக்கத் துவங்கி விட்டான். தென்றலை கண்ட நாள் முதல் அவளின் கடைக்கண் பார்வைக்காக ஏங்கி நிற்கும் ஆண்மகனுக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் வாயில் அல்வாவை எடுத்து ஊட்டி விடுவது போல் அல்லவா,
அதற்காக அவன் காதல் என்று எல்லாம் நினைக்கவில்லை குழந்தை குணம் கொண்ட ஒரு தேவதைப் பெண் தோழியாக அமைந்தால் கூட அதுவும் ஒரு விதத்தில் கெத்தாக தானே இருக்கும் அப்படியான ஒரு மனநிலையில் தான் தமிழ் இருந்தான்.
தான் உதவி கேட்டு சில வினாடி எதிர்ப்புறம் இருந்த தமிழிடமிருந்து எந்த பதிலும் இல்லாமல் இருக்க, “உனக்கு டைம் இல்லனா சொல்லு தமிழ் பரவாயில்லை நான் பார்த்துக்கிறேன்” என விவேகன் கூறியதும்.
வானில் இருந்து கீழே இறங்கிய தமிழ் “இல்ல விவேக் எனக்கு வேற வேலை எதுவும் இல்லை டைம் எல்லாம் இருக்கு” என்றவன் தான் அவளை அழைத்து வருவதாக கூறினான்.
“கவனமா தமிழ் அவளுக்கு வண்டியில வேகமா வந்தா பயம் கொஞ்சம் பத்திரமா கூட்டிட்டு வா” என கூறி அவன் அழைப்பை துண்டித்தவன்.
தேவகி எண்ணிற்கு அழைத்து தமிழ் வரும் செய்தியை கூறியவன் அழைப்பை துண்டிக்கவும் மித்ரன் கல்லூரிக்கு தயாராகி வரவும் சரியாக இருந்தது.
விவேகனின் செயலிற்க்கு அர்த்தம் தெரியாதவன் அவனிடம் கேட்க ஆயிரம் கேள்விகள் மனதில் உழன்று கொண்டு இருந்தாலும் அவனிடம் எதுவும் கேட்காமல், “சீக்கிரம் கிளம்பி வாடா டைமாச்சு சாப்பிட்டு போகலாம்” என்றதும்.
மித்ரனிடம் சிறு சிரிப்பை மட்டும் உதிர்த்தவன் சென்று அவனும் கிளம்பி வர இருவரும் சேர்ந்து காலை உணவை வீட்டிலேயே முடித்துக்கொண்டு மித்துமாவிடம் விடை பெற்றுக் கொண்டவர்கள் கல்லூரியை நோக்கி அவர்களின் நடை பயணத்தை துவங்கினர்.
இங்கே தமிழ் தென்றலை காணப்போகும் குஷியில் அலமாரி மொத்தத்தையும் புரட்டிப் போட்டு ஒரு உடையை தேர்ந்தெடுத்தவன் பத்து முறைக்கும் மேல் கண்ணாடியில் தனது பிரதிபலிப்பை சரிபார்த்துக் கொண்டு தென்றலின் வீட்டு வாசலில் அவளுக்காக காத்துக் கொண்டிருக்கிறான்.
அவனை மேலும் இம்சிக்காமல் தென்றல் தேவதைப் போல படி இறங்கி வர அவனுக்கு வானிலிருந்து இறங்கி வருவதை போன்றதொரு கற்பனை மனதில் ஓடியது.
தென்றல் அவனருகில் வந்து சொடக்கிட நிகழ் உலகம் வந்தவன், “போலாமா தென்றல்” எனவும்.
அவன் கையில் ஸ்கூட்டி சாவியை திணித்தவள் “போலாம்” என்றாள்.
வண்டியில் ஏறி அமர்ந்தவன் வண்டியை ஸ்டார்ட் செய்ய இவளும் இருபுறமும் கால்போட்டவாறு ஏறி அமர்ந்து கொண்டாள்.
அவன் காதருகே சென்று, “தப்பா நினைச்சுக்காதீங்க எனக்கு ஒரு பக்கமா உட்கார்ந்து வர பயம் அதான்” என அவள் தயக்கமாய் விளக்கம் கூறவும்.
அவள் மூச்சுக்காற்று அவனிற்கு உள்ளுக்குள் ஏதோ குறுகுறுப்பை ஏற்படுத்த தன்னிலை மறந்தவன் ஸ்தம்பித்து நிற்க,
அவள் ஏறி அமர்ந்து இவ்வளவு நேரம் ஆகியும் அவன் வண்டியை செலுத்தாமல் இருப்பதை கண்டு தென்றல் “தமிழ் போகலாம்” என்றாள். அவளின் தமிழ் என்ற அழைப்பு அவனை இதுவரை பெற்ற
இன்பதிலிருந்து தூக்கி எறிந்தது.
பிறகு இருவரும் கல்லூரி நோக்கி தங்களின் பயணத்தை துவங்கினர் நடக்கப்போகும் விபரீதம் அறியாமல்.
வீட்டிலிருந்து கிளம்பியதிலிருந்து எதுவும் பேசாமல் தன் முகத்தை கூட பார்க்காமல் வெறும் ரோட்டை வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டு வந்த மித்ரன் விவேகனிற்கு மிகவும் புதிது.
கல்லூரிக்கு சென்று பொறுமையாக என்ன என்று விசாரித்துக் கொள்ளலாம் என நினைத்த விவேகன் அவனும் அமைதி காத்தான்.
அவர்களின் அமைதி வீதிஉலா ஒருவழியாக கல்லூரியில் முடிவடைய அவர்கள் வழக்கமாக அமரும் மரத்தடிகல் பென்ஞ்சில் அமர்ந்ததும் விவேகன் பேச வாய் எடுக்கும் முன் மித்ரன் பேசிவிட்டான்.
“நான் யாருடா உனக்கு” அவனின் இந்த கேள்வியில் விவேகன் ஆடித்தான் போனான். அவனின் கேள்விக்கு பதில் கூற வந்த விவேகனை இடைமறித்த மித்ரன் மீண்டும் அவனே பேசினான்.
“தமிழ் யாரு என்னனு எதுமே தெரியாது. ஆனா பழகுன ஒரு வாரத்துல தென்றல அவன் கூட டூவீலர்ல கூட்டிட்டு வர சொல்ற. எனக்கு தெரியும் காரணம் இல்லாம நீ எதும் செய்ய மாட்டனு ஆனாலும் என் கிட்டயும் ஒரு வார்த்தை இது இப்படி இதுனாலனு ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்டா. நீ சொல்லல அதுக்கும் ஒரு காரணம் இருக்கும் நீயா எப்போ சொல்றியோ சொல்லு.” என்றவன் அதன் பிறகு விவேகன் கூற வந்த எந்த விளக்கத்தையும் கேட்க தயாராக இல்லை.
பிறகு இருவரும் ஊர் கதை பேசியவாறு தென்றல் மற்றும் தமிழுக்காக காத்திருந்தனர்.
சிறிது நேரத்தில் தமிழ் பின் தொடர்ந்து வர, உடல் நடுக்கத்துடன் நடக்க முடியாமல் நடந்து வரும் தென்றலை கண்ட இருவரும் என்ன நேர்ந்தது என அறியாமல் அவர்களை நோக்கி விரைந்து ஓடினர்.
விவேகன் தன் அருகில் வருவதைக் கண்ட தென்றல் விரைந்து சென்று விவேகனின் கை அணைப்புக்குள் தஞ்சம் புகுந்தாள்.
இதனை கண்ட தமிழுக்கு நெருப்பில்லாமலே புகைந்தது.
அவளை அணைத்தவாறே அழைத்து சென்றவன் அருகில் இருந்த கல் பெஞ்சில் அமர செய்து, “என்னாச்சுடா என்னை பாரு” என கூறியும் நடுங்கியவளின் உடல் நடுக்கம் விவேகனின் பொறுமையை அசைத்து தான் பார்த்தது.
“வ…ண்…டி வே…க…மா ப…யந்துட்டேன்.” என பேச முடியாமல் திணறியவளை கண்டு தான் செய்த தவறை எண்ணி தன்னையே நொந்து கொண்டவன். தமிழை பார்த்த பார்வையில் அப்படி ஒரு அனல் அவன் கோபத்தை கட்டுப்படுத்த பற்களை நறநறவென கடிப்பது வெளியே தெளிவாக கேட்க.
தமிழை பாவமாக பார்த்த மித்ரன் ‘அவன் ஒரு அடிக்கு கூட இவன் உடம்பு தாங்காது’ என நினைத்து அவனை இழுத்துக்கொண்டு விவேகனின் பார்வையில் படாத இடத்திற்கு அழைத்துச் சென்றான்.
“ஏன்டா தமிழ் வேகமா வந்த? அவளுக்கு பயம்னு விவேகன் உன்கிட்ட சொல்லலையா? அவன் சொல்லாமல் இருக்க மாட்டான். அவன் சொல்லியும் ஏன்டா வேகமாக வந்த, ஏதோ எனக்கு ஒரு நாள் நீ குருவாயிருந்த அதனால சும்மா இருக்கேன் இல்லன்னா அவ்வளவுதான்” என மிரட்டியவனை கண்டவன்.
“ஏன்டா நான் எங்க ஸ்பீடா வந்தேன் இருவது கிலோமீட்டர் ஸ்பீட தாண்டினாலே அவதான் தெளிவா பொறுமையா போங்க பயமா இருக்குன்னு சொல்றாளே, அவ சொல்றதை மீறி நான் ஏன்டா வேகமா வரப்போறேன்” என்றவனை பாவமாக பார்த்த மித்ரன்.
“அப்புறம் ஏன் அப்படி பயப்படுறா?” என வினவ.
“நம்ம காலேஜ் கிட்ட டர்னீங்ள ஒருத்தன் வேகமா மோதுர மாதிரி வந்து டர்ன் பண்ணிட்டு போயிட்டான் அதை பார்த்து தான் இவ இந்த பயம் பயப்படுறா, ஆனாலும் விவேக் அவளுக்கு இவ்வளவு செல்லம் கொடுத்து கெடுத்து வைக்கக் கூடாதுடா நாளைக்கு அவளுக்கு கல்யாணம் ஆனா இப்படி கூடவே திரிவானா?” என அவனுள் இருந்த ஆதங்கத்தை கொட்டித் தீர்த்து விட்டான் தமிழ்.
அவன் கூறியதைக் கேட்ட மித்ரன்,
“அவன் போலனாலும் அவ இழுத்துட்டு போவாடா” என்றான் தென்றலை தெரிந்தவனாய்.
தமிழ் மிரண்டுதான் போனான் ‘அப்படி என்ன உறவு அவர்களுக்குள் இது எப்படி சாத்தியம்’ என அவனுக்கு சந்தேகம் எழ மித்ரனிடமே அதைக் கேட்டு விட்டான்.
அவன் அவர்களின் உறவை பற்றிக் கேட்கவும் சிரித்த மித்ரன் அவனை அழைத்து சென்று ஒரு மர நிழலில் சாவகாசமாக அமர்ந்து கொண்டு, அவர்கள் மூவரின் கடந்த காலம் குறித்து கூறத் துவங்கினான்.
தென்றலும் மித்ரனும் எல்.கே.ஜி இலிருந்து ஒன்றாகப் படித்தவர்கள்.
அவர்கள் மூன்றாம் வகுப்பு பயிலும் போது பள்ளி ஆண்டு விழாவினை அவர்கள் பள்ளி வளாகத்தின் அருகில் உள்ள ஆசிரமத்தில் உள்ள பிள்ளைகளுடன் கொண்டாட முடிவு எடுக்கப்பட்டது.
எட்டு வயதே நிரம்பிய தென்றல் அந்த ஆண்டுவிழாவில் கிருஷ்ணன் வேடம் பூண்டு வந்த விவேகனிர்க்கு வளர்ப்பு அன்னை யசோதாவாக நடித்தாள்.
அன்றைய ஆண்டுவிழாவில் அவர்களின் நாடகமே அனைவராலும் பாராட்டப்பட்டு அந்த பள்ளி முழுவதும் பேசவும் பட்டது.
அதன் பிறகு தென்றலும் விவேகனும் சந்தித்துக் கொள்ளவில்லை.
மூன்று மாதங்கள் கடந்த நிலையில் தென்றலின் பிறந்தநாளை அந்த ஆசிரமத்தில் கொண்டாட விரும்பினாள் தென்றல். மகளின் ஆசையை நிறைவேற்றினர் தென்றலின் பெற்றோர்கள். அங்கு சென்றதும் அங்கு இருந்த பிள்ளைகளுக்கு இனிப்புகள் வழங்கிய தென்றல் ஒரு சிறுவன் மட்டும் மரத்தினடியில் தனிமையில் அமர்ந்து இருப்பது தெரிய அவனிடம் ஓடி சென்றாள்.
தன் அருகில் யாரோ வந்து நிற்பதை உணர்ந்த அந்த சிறுவன் நிமிர்ந்து பார்க்க அங்கு தென்றல் நிற்பதை கண்டதும் எழுந்து அவளை நெருங்கி வர தென்றல் பயத்துடன் விலகி போனாள்.
அவள் பயத்தை அறிந்து கொண்டவன்
அன்று நாடகத்தில், தவறு செய்த கிருஷ்ணர் தன் அன்னையாகி போன யசோதையிடம் மன்னிப்பு கேட்கும் படியாக ஒரு காட்சி இடம் பெற்றிருந்தது.
அன்று செய்தது போல இன்றும் தன் இரு கைகளையும் மேலே தூக்கி, காதுகளைப் பிடித்துக் கொண்டு “அன்னையே” என்று அழைக்க தென்றலுக்கு உள்ளுக்குள் என்ன உணர்வு ஏற்பட்டதோ…
அவளை அன்னையே என்று அழைத்த விவேகனின் கையை பற்றி தன் பெற்றோரிடம் அழைத்து வந்தவள்.
“நானா, ம்மா இது கிருஷ்ணா என் பாப்பா” என அறிமுகப்படுத்தினாள்.
தன் சிறு குழந்தை மற்றொரு குழந்தைக்கு அன்னையாகிய தருணத்தை எண்ணி மனதினுள் அந்த பெற்றோர்கள் நெகிழ்ந்து போயினர்.
அன்று அவள் அவனை தன்னுடன் அழைத்துச் செல்ல அடம்பிடிக்கவும், விவேகனை தத்தெடுத்துக்கொண்டனர் தர்மராஜ் மற்றும் தேவகி தம்பதியினர் அவனை தங்களுடன் அழைத்து செல்ல விருப்பப்பட,
அந்த வயதிலும் யாருக்கும் பாரமாக இருக்க கூடாது என எண்ணிய அவன், அவளிடம் தன் நண்பர்களைப் பிரிய மனமில்லை அவர்களுடனே இருந்து கொள்வதாக கூறினான்.
பிறகு அவனை தென்றல் பயிலும் பள்ளியில் சேர்த்து விட்டனர்.
பிறகு விவேகன் மூச்சு விடவும் தென்றலின் தேவையை வேண்டி நின்றான்.
பிறகு விவேகன் மித்ரன் இருவருக்கும் நட்பு ஏற்பட தென்றலும் அவனை அவர்கள் அணியில் இணைத்துக் கொண்டாள்.
அவர்களின் பள்ளிப் பருவம் மிகவும் மென்மையாகவும் சந்தோஷமாகவும் சென்று கொண்டிருந்தது.
விவேகன் தென்றலை அம்மா என அழைப்பதை மற்ற மாணவர்கள் கேலி செய்வதை பொறுக்க முடியாமல் அவளை அம்மா என அழைப்பதை தவிர்த்தான் விவேகன்.
அதன் பிறகு அவன் யாரையும் அம்மா என அழைத்ததே இல்லை.
முதலில் இந்த மாற்றம் தென்றலுக்கு வருத்தத்தை ஏற்படுத்தினாலும் நாட்கள் செல்ல செல்ல அவளும் அதற்கு பழகிக் கொண்டாள்.
வருடங்கள் உருண்டோட அவர்களின் பதிநான்காம் வயதில் மித்ரனின் அப்பா இறந்து விட மித்ரன் மற்றும் மித்ராவதியை தேற்றுவதற்குள் தென்றல் மற்றும் விவேகன் பெரும் பாடுபட்டனர்.
மித்ராவதி தன் பிள்ளையின் படிப்பிற்காக தான் சிறுவயதில் பயின்ற தையல் கலையை கையில் எடுத்தவர் இன்றுவரை உழைத்துக் கொண்டிருக்கிறார்.
தென்றலின் பெற்றோரும் அவ்வப்போது மித்ரனின் குடும்ப செலவுகளை அவர்களின் பொறுப்பில் எடுத்துக் கொண்டனர்.
அதன் பிறகுதான் விவேகன் தர்மராஜ் கடையில் வேலை செய்யத் தொடங்கினான். முதலில் சிறு பிள்ளை ஏதேனும் விளையாடுவான் என நினைத்தவர் அவன் அதில் காட்டும் தீவிரத்தை கண்டு, “வேலை செய்வதாய் இருந்தால் இங்கே வராதே” என எவ்வளவு மிரட்டியும், “உங்கள் மகன் என்றால் இவ்வாறு சொல்லுவீர்களா” என அவரிடமே எதிர் வாதம் செய்து ஜெயித்து விடுவான்.
முதலில் தென்றலின் மகனான விவேகன் காலப்போக்கில் அவளின் பயந்த சுபாவத்தினால் அவளிற்கு அன்னையாகி போனான்.
எவ்வளவு அன்பாக பாசமாக கூறினாலும் அவளின் பயம் அவளை விட்டு அகலவில்லை.
மீறி கேட்டால் என் கூடவே பிறந்தது எப்போதும் போகாது என வசனம் வேறு பேசுவாள்.
கிளிப்பிள்ளையை கெஞ்சி கொஞ்சி அது அடங்காமல் போக விவேகன் அதிரடியை கையில் எடுத்தான்.
பன்னிரண்டாம் வகுப்பு முடிவுகள் வர அவளுக்கு தெரியாமல் மகளிர் கல்லூரியில் அவளிற்கு இடத்தை வாங்கி அவளை அதட்டி அதில் சேர்த்து விட்டவன், அவளுக்கு ஏதும் சிக்கல் எனில் உடனே செல்லும் அளவிற்கு அவள் கல்லூரிக்கு அருகில் இருந்த கல்லூரியில் அவனும் சேர்ந்து கொண்டான் மித்ரனையும் இணைத்துக் கொண்டான்.
“எல்லாம் சரியாத்தான் போய்ட்டு இருந்துச்சு அவன் வரதுக்கு முன்னாடி வரைக்கும்” என மித்ரன் கூறவும்.
முதல் வகுப்பிற்கான அழைப்பு மணி ஒலிக்கவும் சரியாக இருந்தது.
தமிழிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டு வகுப்பிற்கு கிளம்பியவனை தடுத்து நிறுத்தியவன், “தென்றலுக்கும்,விவேகனுக்கு நடுவுல இருக்க ரிலேஷன்ஷிப் என்ன?” என கேட்க.
“அதைத் தீர்மானிக்க வேண்டியது நீயோ நானோ இல்ல தமிழ்.” என்றவன்,
விவேகன் மற்றும் தென்றல் இருக்குமிடம் சென்று பார்க்க தென்றல் சற்று தெளிந்திருந்தாள்.
பிறகு மூவரும் சேர்ந்து வகுப்பிற்கு செல்ல தமிழ் குழப்பத்துடனே அவன் வகுப்பிற்கு சென்றான்.
தென்றல் பேசும்…