உனக்காக ஏதும் செய்வேன்

உனக்காக ஏதும் செய்வேன்
அத்தியாயம் – 1
“என்ன இது?”
“அட இது என்னனு தெரியல பேப்பர் மா.” என…
அவனை முறைத்தவள், “அது தெரியுதுங்க. அதுல என்ன எழுதியிருக்குனு கேட்டேன்?” என்றவள் தொடர்ந்து,
“வார்த்தை, தமிழ்னு மொக்கையா எதுனா சொன்னீங்கனா கடுப்பாயிருவேன் சூர்யா.” என்றாள் கண்டிப்பான குரலில்.
அவனோ, ‘நாம நினச்சதையே சொல்லிட்டாளே, இப்ப என்னத்த சொல்லி சமாளிக்க? பேர் சொல்ற தொணியே சரியில்ல. ரொம்ப கோபமா இருக்கா போல…’ என திருதிருவென விழித்தான்.
“கேள்விக்கு பதில்.”
“பதில்… ஹான்… ஆமால…இப்போவாச்சம் நியாபகப் படுத்தினியே. நேத்தே ஒரு க்வெஸ்டின்க்கு பதில் ரிஃபர் பண்ணனும்னு நியாபகப்படுத்த சொன்னேன். நீ மறந்துட்ட. சரி விடு. நான் உன்ன மன்னிச்சுட்டேன். இப்போவாது போய் பார்க்குறேன்.” என நகரப் பார்க்க,
அவன் வழியை மறித்தவள், “பேச்ச மாத்தி எஸ்கேப் ஆகாதீங்க.” என,
“மகா…” என்றான் சலித்தவாறு, அவன் அப்படி சொல்லவும் அவள் முகம் வாடியது.
“எனக்கு பதில் சொல்ல உங்களுக்கு இவ்வளவு சலிப்பா இருக்காங்க? நான் உங்கள ரொம்ப டார்ச்சர் பண்றனா? இத பார்த்து விளக்கம் கேட்க எனக்கு உரிமை இல்லயா?” என்று அடுத்த அட்டெக் செய்தாள்.
‘ஒரு முடிவாதான் இருக்கா. விளக்கம் கொடுக்காம நகர மாட்டா.’ என புரிந்து கொண்டவன்… விளையாட்டை விடுத்து,
“அதான் பார்த்து நீயே கண்டுபிடிச்சுடுப்பியே. ஸோ கேக்க வந்தத நேரா கேளு.” என்றான் கோபக்குரலில்…
“இப்போ எதுக்கு கோபப்படுறீங்க? இத நான் பார்த்துட்டேன்னா? இல்ல பார்த்துட்டு கேள்வி கேட்கறேன்னா?” அவளும் காட்டமாக வினவினாள்.
“பைத்தியம் மாதிரி பேசாதடி. நான் அப்படி நினைச்சுதான் கோபப்பட்டனா? அத பார்த்துட்டு நான் என்னவோ தப்பு செஞ்சிட்டு வந்த மாதிரி, மூஞ்ச வச்சிக்கிட்டு கேட்டதாலதான் நான் கோபப்பட்டேன்னு உனக்கு தெரியும்.”
“நான் எப்ப நீங்க தப்பு செஞ்சீங்கனு சொன்னேன்?”
“சொல்லலனாலும் உன் முகத்தை பார்த்தாலே தெரியுது.” என்றதும் அவள் முகத்தை திருப்ப,
சற்று நிதானித்தவன், “என் மேல அவ்வளவு நம்பிக்கை உனக்கு! இப்பலாம் நீ ஏன் இப்படி மாறிட்ட?” வருத்தமாக வினவினான்.
“நான்லாம் மாறலங்க. நீங்கதான் மாறிட்டீங்க. முன்ன நான் இப்படி கேள்வி கேட்டா, பொசஸீவ்நெஸ்னு சொல்வீங்க. இப்போ சந்தேகம்னு சொல்றீங்க. அவ்வளவுதான் வித்தியாசம்.”
“நீ சந்தேக படறனு நான் சொல்லல மகா. ஏன் இத இவ்வளவு சீரியஸ்ஸா கேட்கற?”
“அப்போ எப்படி கேட்க?”
“சரி அப்படி கூட கேட்கலாம். அதுல ஒரு நியாயம் இருக்கு. அது என்ன பார்வை? அதே சொல்லுது நீ என்ன நினைக்கறனு.”
“என்ன சொல்லுது? இவ்வளவு சொன்னீங்களே அதையும் சேர்த்து சொல்லிடுங்க.” என்ற கேள்விக்கு,
“நீதான பார்க்கற உனக்கு தெரியாதா? வேணும்னா அடுத்த டைம் அப்படி பாரு நான் போட்டோ எடுத்து காட்றேன். நீயே கண்டுபுடிச்சிக்க.” என காட்டமாக பதில் வந்தது.
பின், “சரி சரி விடு எதுக்கு இதெல்லாம் பேசிக்கிட்டு. ஸ்ட்ரெய்ட்டா கேட்க வந்தத கேளு.” அவளை உற்று நோக்கியவாறே சொன்னான்.
அவளோ ‘நான் தேவையில்லாதத பேசற மாதியே சொல்ல வேண்டியது.’ என சினம் கொண்டாலும் அதை புறம் தள்ளியவள் ‘ஸ்ட்ரெய்ட்டா தான கேட்கிறேன்.’ என,
“யார் இந்த லவ் லெட்டர உங்களுக்கு கொடுத்தா? அதை ஏன் இன்னும் தூக்கிப் போடாம உங்க பேக்ல வச்சிருக்கீங்க? ஏன் இத எங்கிட்ட சொல்லல?” ஒவ்வொரு கேள்விக்கு அழுத்தம் கூடியது.
“காலேஜ்ல ஒரு பொண்ணுதான் தந்துச்சு மகா. தூக்கிப் போட மறந்துட்டேன். இதலாம் ஒரு விஷயமானு நெனச்சுதான் உங்கிட்ட சொல்லல. போதுமா உன் எல்லா கேள்விக்கும் பதில் சொல்லிட்டேன்.” கூறிவிட்டு திரும்ப,
அவள் தேம்பும் சத்தம் கேட்கவும் வேகமாக அவளருகே வந்தான்.
“எதுக்குடி இப்ப அழுவுற? உன் கேள்விக்குதான் பதில் சொல்லிட்டேன்ல அப்புறம் என்ன?” பல்லைக் கடித்து கொண்டு வினவினான்.
‘காலங்காத்தால அழுதுகிட்டு. என்னமோ இவள நான் கொடுமை பண்ற மாதிரி. ச்சே… சின்னப்புள்ளத்தனமாவே இருக்காளே.’ உள்ளே நொந்து கொண்டான்.
“என்ன இப்படி பொறுப்பே இல்லாம பதில் சொல்றீங்க?” மூக்கை உறிஞ்சியவாறே வினவினாள்.
“அழுவாத மகா குழந்த மாதிரி. எனக்கு செம்மையா டென்சன் ஆகுது.” அவன் கோபமாக சொல்லவும்,
கண்ணீரை வேகமாக துடைத்தவள், தன்னை அமைதிபடுத்திக் கொண்டு,
“சரி இப்போ சொல்லுங்க… ஏன் இப்படி பொறுப்பே இல்லாம பேசறீங்க?”
“என்னத்தடி இப்ப நான் பொறுப்பில்லாம பேசனேன். நேராதான் சொல்லித் தொலையேன்.” அவள் நிற்காமல் கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பதில் சூடாக கேட்டான்.
‘எல்லாத்தையும் பண்ணிட்டு ஒன்னுமே தெரியாத மாதிரி நேரா சொல்லு நேரா சொல்லுனு சொல்ல வேண்டியது.’ மனதுக்குள் நொடித்தவள்,
“உங்க பேக்ல யா…ரோ ஒரு பொண்ணு கொடுத்த லவ் லெட்டர பார்த்துட்டு உங்க பொண்டாட்டி… வந்து கேள்வி கேட்டா, நீங்க தூக்கிப்போட மறந்துட்டேன். இதலாம் ஒரு விஷயமானுதான் சொல்லலனு அசால்ட்டா பதில் சொன்னா… அது பொறுப்பா பேசற மாதிரியா இருக்கு?” ஆதங்கமாக வினவினாள்.
அந்த ‘யாரே’ விலும் ‘பொண்டாட்டி’ யிலும் அவள் அழுத்தம் கொடுத்து பேசியதைக் கண்டு, சினத்தை விடுத்து மனதுக்குள் சிரித்துக் கொண்டிருந்தவன், அவள் கேட்ட கேள்வியின் நியாயத்தை அப்போதுதான் உணர்ந்தான்.
‘அதான அவள் கோபமாதான கேட்பா. அத தூக்கி போடாம இருந்தது உன் தப்புடா. இதுல அசால்ட்டா வேற பதில் சொல்லியிருக்க. நம்ம மேல தான் தப்பு.’ என புரிந்து சமாதனமாக பேச ஆரம்பித்தான்.
“நான் பொறுப்பில்லாம பேசல மகா. ஏதோ சாதாரணமா சொன்னேன். சரி விடு தப்புதான். நீ அப்படி பார்த்தியா அதான்… அசால்ட்டா பேசி உன்ன கடுப்பேத்திட்டேன்.” என சரணடைந்தான்.
“கல்யாணம் ஆனவங்களுக்கு யாராச்சும் லவ் லெட்டர் கொடுப்பாங்களா?” என கடுங்கோபமாக வினவ,
“இங்க பாரு நமக்கு கல்யாணம் ஆன விஷயம் அந்த பொண்ணுக்கு எப்படி தெரியும் சொல்லு? அது பக்கமா தான நடந்துச்சு.”
“…”
“மேலும் நானே அந்த பொண்ணுக்கிட்ட, இப்படிதான் உன் க்லாஸ்க்கு பாடம் நடத்த வர லெக்சர் கிட்ட பேசுவியா? ஒழுங்கா படிக்கற வேலைய பாரு. மோர் ஓவர் ஐ அம் மேரீட். ஸோ இந்த மாதிரி மறுபடி எங்கிட்ட பேசனா எச்.ஓ.டி கிட்ட சொல்லிடுவேன்னு வார்ன் பண்ணிட்டேன்.”
“அந்த பொண்ணும் சாரி சொல்லி, இனிமேல் இப்படி பண்ண மாட்டேன் சார்னு சொல்லிடுச்சு. அப்போ அந்த வழியா ஒரு ஸ்டாஃப் வரவும், கைல இருக்க லெட்டரையும் அந்த பொண்ணையும் பார்த்து எதாவது தப்பா நினச்சிக்க போறாங்கனுதான் பேக்ல போட்டேன். அப்புறம் ஏதோ டென்ஷன்ல மறந்துட்டேன். இத சொன்னா நீ கோபப்படுவியோனுதான், பிரச்சனையே முடிஞ்ச அப்புறம் ஏன் சொல்லிகிட்டுனு விட்டுட்டேன்.” நீளமாக விளக்கத்தை கூறி முடித்தான்.
அவன் கூறியதை கேட்டதும் அவன் பக்க நியாயம் உணர்ந்தவள், “ஓ… அதான் எங்கிட்ட சொல்லலையா?” என இழுத்து,
“சாரிங்க… நீங்க என்கிட்ட மறைக்கறீங்கனு தான் கோபப்பட்டு பேசிட்டேன்.” முகத்தை சோகமாக வைத்து கொண்டு கூற,
“இல்ல மகா என் மேலயும் தப்பிருக்கு. நீ கேட்ட உடனே நான் எக்ஸ்பிளெய்ன் பண்ணிருக்கனும். நான் பாரு ஏதோ டென்ஷன்ல அசால்ட்டா பதில் சொல்லிட்டேன் சாரி.” என,
“விடுங்கள்…. பரவாலாம்.” என்றாள் பதிலுக்கு.
“ம்ம்…” என்றவன் கடிகாரத்தை பார்க்க, “டைம் ஆச்சு பாரு. நான் போய் புறப்படுறேன். நீயும் போய் வேலைய கவனி. இன்னைக்கு உனக்கு ஸ்கூல் லீவ்தான? அதான் சாவகாசமா நான் காலேஜ் லேட்டா போயி அங்க திட்டு வாங்கனும்னு பிளான் பண்ணி சண்டைக்கு வந்தியா?” குறும்புடன் வினவ,
“அப்படிலாம் இல்லங்க…” என பாவமாக சொன்னாள்.
“சும்மா சொன்னேன்டி.” எனக்கூறி கண்ணடித்தவன், அவள் தலையை வருடிவிட்டு குளிக்கச் சென்றான்.
அவளும் அவளவனின் செயலில் புன்னகையுடன் சமையலை கவனிக்கச் சென்றாள்.
சாப்பிட்டுவிட்டு புறப்பட்டு வெளியே கிளம்பியவன், “அந்த லெட்டர கொடு இப்பவே கிழிச்சு போட்டறேன். நீ அத வச்சு இன்னொரு டைம் சண்டைக்கு வந்ததாலும் வருவ. ஏன் அத வச்சிக்கிட்டு கொடு.” என ஷூ போட்டவாறே கேட்க,
“அதுலாம் ஒன்னும் வேணாம். நான் அத கிழிச்சு குப்பைல போட்டறேன். குப்பத்தொட்டி அங்க இருக்கு. டைம் ஆகும் நீங்க கிளம்புங்க.” என்றாள்.
அவளை புரியாமல் பார்த்தான். ‘இங்க இருக்க குப்ப தொட்டியில போடறத எதோ பக்கத்து தெருவில இருக்க கணக்கா பேசறாளே.என்னவா இருக்கும்?’ யோசித்தவனுக்கு டக்கென்று விஷயம் ஸ்ட்ரைக்காக, அவளை கேலியாக நோக்கினான்.
அவன் பார்வையிலேயே அவன் விஷயத்தை கண்டுபிடித்துவிட்டான் என்பதை உணர்ந்தவள், அசடு வழிய ஈ என சிரித்து வைத்தாள்.
சற்று நேரத்திற்கு முன்…
குளித்து விட்டு வந்தவன், “என்ன மகா எதோ கருகின வாசன வருது. எப்பவும் போல தோசை சுடறியா?” குறும்பாக கேட்க,
அவனை முறைத்தவள், “உங்களுக்கு என் சமையல கிண்டல் பண்ணலனா தூக்கமே வராதே. அதெல்லாம் ஒன்னும் கருகல. டைம் ஆச்சு சீக்கிரம் கிளம்பற வழிய பாருங்க.” என மனையாள் நகர்ந்து சென்றதன் நோக்கம் புரிந்தது.
ஏதோ ஒரு நினைப்பில் சமைத்தவள், பின் அந்த லெட்டரை உடனே அழிக்க நினைக்க அதை கொளுத்தி விட்டாள். அந்த வாசனையைதான் அவன் என்ன என கேட்கவும் ஒன்றுமில்லையென சமாளித்தாள்.
அவளை காதலுடன் நோக்கியவன்… அவள் தோளில் கை போட்டு கொண்டு, “ஏன் இப்படி?” என சிரித்து கொண்டே கேட்டான்.
“பின்ன… உங்களுக்கு நான் மட்டும்தான் லவ் லெட்டர்லாம் கொடுப்பேன். உங்கள முதல்ல ஒன் சைடா லவ் பண்ணப்பவே உங்ககிட்ட யாராச்சும் தேவையில்லாம பேசனாவே எனக்கு பிடிக்காது. இப்போ நான் உங்க பொண்டாட்டியாக்கும்!” குழந்தை போல முகத்தை வைத்துக் கொண்டு கூற,
அதை இரசித்தவன், “உனக்கு ஏன் என்ன இவ்வளவு பிடிக்குதுடி என் பொண்டாட்டி?”
அவனுக்கு நிகராக காதலாக அவனை பார்த்தவள், “பிடிக்காததுக்குதான் காரணம் இருக்கும். பிடிக்கறத்துக்கு காரணமே பிடிக்குதுங்கறது மட்டும் தான் ங்க.” என்றாள் மென்மையான குரலில் வழக்கம் போல…
புன்சிரிப்புடன் தலையசைத்து நடந்தவன், எப்போதும்போல அந்த பதிலை மனதுக்குள் இரசித்தவாறு சென்றான்.
அவளும் அவனின் கம்பீரமான நடையை இரசித்தவாறு பார்த்துக் கொண்டிருந்தாள்.
காலையில் போட்ட சண்டை, ‘இவங்களுக்கு இதே வேலையா போச்சு.’ என தலையில் அடித்துக் கொண்டு, தேனோஸ் போட்ட ஸ்னாப்பில் வேனிஷ் ஆனவர்களை போல கரைந்து மறைந்து போனது.
தொடரும்…