உயிரோடு விளையாடு 25

உயிரோடு விளையாடு 25
(கற்பழிப்பு என்பது இந்தியாவில் பெண்களுக்கு எதிரான நான்காவது பொதுவான குற்றமாகும். தேசிய குற்ற பதிவு பணியகத்தின் (என்.சி.ஆர்.பி) 2018 ஆண்டு அறிக்கையின்படி, நாடு முழுவதும் 33,356 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன. தினமும் சராசரியாக 91 பெண்கள் இந்தக் கொடுமைக்கு ஆளாகிறார்கள் என்கிறது. பாலியல் வன்முறையைச் சுற்றியுள்ள பயம் மற்றும் களங்கம் காரணமாக இந்தக் குற்றங்கள் கணிசமான சதவீதம் பதிவு செய்யப்படாததால் உண்மையான புள்ளிவிவரங்கள் மிக அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது
இதை மாற்றுவதற்கான முயற்சியைத் தொடங்குவதற்கு, ஆண்களைச் சுற்றி ஒரு வலுவான உரையாடல் நமக்குத் தேவை, இது பள்ளிகள், பொது அரங்குகள் ,அலுவலகங்களில் தொடங்க வேண்டும். பெண்களைப் பற்றி இழிவாகப் பேசுவது, சிறுமிகளை மறைமுகமாக உணருவது, மோசமான கருத்துக்களைச் சொல்வது மற்றும் அவர்களைப் பற்றிக் கூறுவது தவறு என்று சிறுவர்களுக்குக் கற்பிக்கப்பட வேண்டும். இதைப் பெற்றோருக்கு மட்டும் விட முடியாது.
இது தொடக்கப்பள்ளி முதல் பள்ளி பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும், மாணவர்களுக்கு, பாலின உணர்திறன் வகுப்புகள் கட்டாயமாக இருக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்முறை இந்தியாவில் மிகவும் ஆழமாக வேரூன்றியுள்ளது, இந்த உணர்திறன் அடிப்படை வாசிப்பு மற்றும் எழுதும் திறன்களைப் போலவே முன்னுரிமை பெற வேண்டும்.
சிறுமிகள் எவ்வளவு சிறியவர்களாக இருந்தாலும், வலுவானவர்களாகவும், ‘no means நோ என்று குரல் கொடுப்பவர்களாகவும், பாலியல் மீறல்களுக்குச் சகிப்புத்தன்மையற்றவர்களாகவும் இருக்க ஊக்குவிக்கப்பட வேண்டும்.
‘வாட்டர் கூலர்’ வகையில்கூட, பாலியல் ரீதியான நகைச்சுவைகளைச் செய்யும் ஆண்களைப் பணியிடங்கள் உடைக்க வேண்டும். பாலியல் ரீதியான தாக்குதலை லேசாக எடுத்துக்கொள்வதை நாம் நிறுத்த வேண்டும், ஏனென்றால் இது சமூகத்தின் ஆணிவேரினை அழித்து விடுகிறது. இது சாதாரணமாகத் தொடங்கி இறுதியில் பாலியல் வன்முறையை இயல்பானது என்று கொண்டு வந்து நிறுத்துகிறது.
CHANGE MUST START FROM FAMILY/ மாற்றம் ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் தொடங்க வேண்டும்)
அத்தியாயம் 25
ஓட்டம்!…
பஞ்ச பூதங்களின் தொடர் ஓட்டமே, கோடி அண்டங்களில், பூமியில் மட்டுமே உயிர் வாழ்வை உறுதி செய்கிறது.
கோடிக்கணக்கான விந்தணுக்கள், புனிதமான தாயின் கருவறையையை அடையும் ஓட்டத்தில், ஜெயிப்பதால் தான், நம் ஜனனம் உருவாகிறது. நம் பிறப்பையே உறுதி செய்ய இந்த ஓட்டம் தான் காரணமாய் அமைகிறது.
காற்றானது நுரையீரலுக்கு செல்வதும், ரத்தம் உடல் முழுவதும் பாய்வதும், ஆயிரம் வாசல் கொண்ட இதயத்தில், லட்சம் கோடி எண்ணங்கள் நொடிதோறும் ஓடும் ஓட்டமானது, நமது உயிர்ப்பை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. குடும்பத்தின் நலனை மனதில் கொண்டு, பெண்கள் ஓடும் ஓட்டமும், படிப்பு, வேலை என்று நம் ஓட்டம் தினம் தினம் நடந்து கொண்டே தான் இருக்கிறது.
‘எத்தனை கோடி சம்பாதித்தாலும், எத்தனை பட்டம், பதவி, பேர் புகழ் வந்தாலும் கடைசியில் ஆறடி நிலம் கூட நமக்குச் சொந்தமில்லாதபோது, காரணமே இல்லாமல் எதற்காக ஓடிக் கொண்டு இருக்கிறோம்?…’ என்று ஒரு நொடி நம் ஓட்டத்தை நிறுத்தி, கேள்வியினை கேட்டதால் தான், ‘சித்தார்த்தன் புத்தன்’ ஆனது.
இதே கேள்வியை நாம் நம்மையே கேட்டுக் கொண்டால் அந்த நொடி, மனிதன் என்ற நிலையைத் தாண்டி யோகி, ஞானி, சித்த புருஷர் என்ற உயர்ந்த நிலையை அடைகிறோம்.
இது எல்லாம் ஏதோ ஒரு வகையில் ஆற்றல் சக்திக்கான ஓட்டம். இந்த வரைமுறைக்குள் அடங்காத இன்னொரு ஓட்டம் இருக்கிறது. நீதி, நேர்மை, நியாயம், உண்மை, தர்மம் என்ற இந்தச் சக்திக்கு உருவமில்லை என்றாலும், மனித வாழ்வின் ஆணி வேர் இவையே.எப்படி இயற்கையை வென்று விட்டதாய் மனிதன் தன்னை தானே ஏமாற்றி கொள்கிறானோ, அதே போல் இந்தப் பிரபஞ்ச உண்மைக்குண்டான சக்தியை மனிதன் உணர்வதில்லை. படைத்தவனும் நம்மை ஆட விட்டுச் சாட்டையை கையில் எடுக்கும்போது நமது சாயம் வெளுத்துத் தான் விடுகிறது.
இந்த ஆற்றல் சக்திக்கு எதிராக அழிவுச் சக்தி ஓடும் ஓட்டமும் உலகில் உண்டு. எண்ணம், சொல், செயல் என்று அனைத்திலும் தீமை மட்டுமே நிறைந்த பலரின் ஓட்டம், எத்தனையோ கொடூரங்களுக்கு வழி வகுத்து இருக்கிறது.
அப்படியொரு ஓட்டம் தான் அந்த முன்னிரவு வேளையில், யாரும் அற்ற கடற்கரையில் நடந்து கொண்டிருந்தது. காட்டினில் மானைத் துரத்தும் சிங்கத்தின் ஓட்டத்தினை கூட நம்மால் நியாய படுத்த முடியும். ஆனால் இங்கே நடக்கும் இந்த ஓட்டமானது மானத்தை காக்க ஒரு பெண் ஓடும் ஓட்டம்.
இப்படியொரு நிலையில் ஒரு பெண் எதிர்கொள்ள நேருகிறது என்றால் யாரை குறை சொல்வது? எது நீதி, தர்மம் என்று சரியாகப் போதிக்காத குடும்பங்களையா, இப்படி கொடுமைகள் நடந்தாலும் என் வீட்டினர் அப்படி இல்லை என்று கோரத்திற்கு துணையாக நிற்பவர்களையா, அந்த நேரத்தில் அந்த இடத்தில் இவளுக்கு என்ன வேலை என்று கேட்பவர்களையா, என்ன உடை உடுத்தி இருந்தாள் என்று குற்றத்தைப் பாதிக்கப்பட்ட பெண்ணின் மேலேயே திருப்புபவர்களையா, ‘எங்கே, எப்படி தொட்டான், எத்தனை முறை?…’ என்று கேள்விகளைக் கேட்டு மீண்டும் மீண்டும் அந்தப் பெண்மையை கொல்பவர்களையா, இல்லை சுதந்திரம் என்ற பெயரில் பணம், பெயர், பட்டம், பதவி கிடைக்கிறது என்று கேவலமான காரணங்களுக்காகச் சமூகத்தைத் தங்கள் பேச்சு, எழுத்தால் தவறான வழியில் மக்களைக் கொண்டு செல்பவர்களையா, இல்லை தங்கள் TRP ரேட்டிங் எகிற அந்தப் பெண்மையை அடுத்த செய்தி கிடைக்கும் வரை அணுஅணுவாய் சிதைக்கும் ஊடகங்களையா, நாங்களும் காவலர்கள் தான் என்று சமூக வலைத்தளத்தில் அர்த்தமற்ற விவாதத்தில் ஈடுபடுபவர்களையா யாரை என்று சொல்வது?.
சமூகம் என்ற மிகப் பெரிய வலையில் நாமும் ஒரு இழை என்பதை உணர தவறியது யார் குற்றம்?
‘ஓடினாள்… ஓடினாள்… வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்…. ‘என்று இன்னமும் ஓடிக் கொண்டிருக்கும் பெண்கள் எத்தனையோ? இன்று சம்யுக்தா… இதுவரை எத்தனை பேரோ.
ஆசை வார்த்தைகள் பேசி, ஒரு பக்கம் அந்தப் பெண்மை திருடப்படுகிறது என்றால் இன்னொரு புறம் இப்படி கொடூரங்களில் ஈடுபட்டாவது தாங்கள் நினைத்துக் கிடைத்தால் போதும் என்று, கால்களுக்கு இடையே மட்டும் சிந்திக்கும் புழுக்கள்.
இப்படிப்பட்ட புழுக்கள் பெண்கள் வீட்டிற்குள் இருந்தாலும் சரி, படிப்பு, வேலை என்று வெளியே வந்தாலும் சரி, பள்ளி, கல்லூரி, அலுவகம் என்று எந்த நேரம் சென்றாலும் சரி, எந்த வயதாய் இருந்தாலும் சரி, எப்படி உடை உடுத்தி இருந்தாலும் சரி தங்கள் காமத்தை தீர்த்துக் கொள்ள தக்க சமயம் பார்த்துக் காத்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
சூழ்நிலை கிடைக்காததால் பலரும் உத்தமர் என்ற வேடம் தருகிறார்கள் என்பதே நிதர்சனம். உண்மை அருவருக்க தக்க விதமாய் தானே இருக்கிறது.
இந்த ஆறு பேருக்கும் சூழ்நிலை சாதகமாய் அமைய சம்யுக்தாவை துரத்துகிறார்கள். கிடைக்காதவர்கள் நான்கு சுவற்றுக்குள் ஏதாவது ஒரு வகையில் தங்கள் தேவையைத் தீர்த்துக் கொள்கிறார்கள்.
இவர்கள் பிறந்ததும் ஒரு பெண்ணின் வயற்றிலிருந்து தான் என்பதை ஜீரணிப்பதே கடினமாய் தான் இருக்கிறது.
ஆணையே உலகிற்கு ஈன்று தரும் பெண்ணின் உடலில் வேண்டும் என்றால், போதிய வலிமை இல்லாமல் இருக்கலாம்.
ஆனால், மாதாமாதம் கருப்பையின் வலிகளைத் தாங்கி, பிரசவம் என்னும் மரண வலியையே பொறுத்து கொண்டு, இன்னொரு உயிரை இந்த உலகிற்கு கொண்டு வரும் அந்த மனவைராக்கியத்தின் முன், உலகின் எல்லாமே அடிபட்டுத் தான் போகும்.
அந்த மன வைராக்கியம், சம்யுக்தாவை இயக்கிக் கொண்டிருந்தது.
நடக்கும் அவலத்தைக் காண சகியாத நிலா மேக போர்வைக்குள் மறைய, மெலிதாய் வீசிக் கொண்டிருந்த காற்று தன் இயக்கத்தை நிறுத்திக் கொள்ள, கடல் அன்னை தன் மடியில் இப்படியொரு கொடுமை நடக்கிறதே என்று தன் அலை என்னும் கரத்தால் பூமியின் மீது அடித்துத் தன்னால் எதையும் செய்ய முடியவில்லையே என்று நீர்திவலைகளை கண்ணீர் துளிகளாய் சிதற விட, அக்னியின் சொரூபமாய் தன்னை காக்க ஓடிக்கொண்டிருந்தாள் சம்யுக்தா.
அந்தத் தீ இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு பெண்ணின் உள்ளும் அணையாமல் எரியும் ஆத்ம சக்தியின் தீ. உயிர்களை உலகிற்கு கொண்டு வரவும், தேவையென்றால் உயிரை எடுக்கவும் தயங்காத மன வைராக்கிய தீ.
தீமைகளைப் பொசுக்கும் ஆற்றலுள்ள எத்தனை கோடி சூரியன் வந்தாலும், அந்த வெப்பத்தின் அருகே கூடச் செல்ல முடியாத தன்னம்பிக்கை என்ற தீ.
உலக இயக்கத்தின் ஆதி சக்தியாய் இருக்கும் பெண்ணின் உள்ளே அவளே அறியாமல் அவளை இயக்கிக் கொண்டிருக்கும் தீ.
‘விசையுறும் பந்தினை போல்…’ எத்தனை முறை அடக்க நினைத்தாலும், சுற்றி கட்டப்படும் வேலிகளை எல்லாம் உடைத்து, வெற்றி திருமகள்களாய் ஜொலிக்கும் ஒவ்வொரு பெண்ணின் உள்ளும் இருக்கும் தீ.
குடும்பமாய் இருந்தாலும், வேலையாக இருந்தாலும், எந்த இடத்தில் இருந்தாலும், செய்யும் ஒவ்வொரு வேலையிலும் தனக்கெனத் தனி முத்திரை படைக்கும் பெண்ணின் ஆற்றல் என்னும் தீ.
இந்தத் தீயின் கனலால் தான் அன்று மதுரை பற்றி எரிந்தது.
பெண்மையே, ஒரு தீ!…
அந்தக் காமுகர்கள் சுற்றி வளைத்தபோது, சம்யுக்தா அப்படி நிற்கக் காரணம் பயத்தால், திகைப்பால் அல்ல.
தன்னுள் இருந்து இயக்கும் தீயானது உக்கிர சொரூபமாய் வெளிப்பட, அந்தச் சூழ்நிலையைக் கணித்துவாறு நின்றாள்.
இப்படி சூழ்நிலையை ஆராயும் சமயம் பல பெண்களுக்குக் கிடைக்காமல் போவது துரதிருஷ்டமே!… பெண்மை எதிர்த்துப் போராட தயார் ஆவதற்குள் கொடூரங்கள் பல சமயம் அரங்கேறி தான் விடுகிறது.
மனதைரியம் என்பது பயம் இல்லாத நிலை இல்லை. பயத்தை, தயக்கத்தை, நம்மால் முடியுமா என்ற நடுக்கத்தை வென்ற நிலை.
அந்த ஆத்ம தீக்கொழுந்து விட்டு எரிய, அதில் பயம் என்னும் தளையிலிருந்து தன்னை தானே மீட்டு கொண்டாள். நம்மை நாம் வென்று விட்டால், வேறு எவனால் நம்மை வெல்ல முடியும்?… அங்கே சம்யுக்தா தனக்குள் இருந்த பயம் என்ற அரக்கனை முதலில் வதம் செய்து, நிமிர்ந்து நின்றாள்.
எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்க பெண்களுக்கு முதலில் தேவை மன தைரியம் தான். அந்தத் துணிவு வந்து விட்டால், சாம்ராஜ்யங்களை மண்ணோடு மண்ணாக்கவும், வெற்று களி மண்ணில் கோயில் சிற்பத்தையும் செய்து விடுவார்கள் பெண்கள்.
மனிதனை ஆக்குவதும், அழிப்பதும், உயர்த்துவதும், தாழ்த்துவதும், பக்க துணையாய் நிற்பதும் பெண்மையே!.
இவர்கள் அழிவு சக்தியாகப் பெண்ணை இவர்கள் துரத்திக் கொண்டிருக்க, ஆக்க சக்தியாகப் பெண்ணைக் காப்பவன் என்று ஒருவன் இருப்பான் தானே!.
வெயிட்டர் பெண் காட்டிய வழியில் நடக்கும் போதே, சோர்வு தெரியாமல் இருக்க, தன் காதில் ப்ளூ டூத் ஹெட் செட் மூலமாக ஒற்றை காதில் பாடலைக் கேட்டுக் கொண்டு, மொபைல் இயக்கியவாறே நடந்து கொண்டிருந்தது தற்பொழுது அவளுக்கு மிகப் பயன் உள்ளதாகத் தான் இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.
அவர்கள் முதல் வரியைப் பாட ஆரம்பித்த போதே ஆபத்து என்பதை கணித்து விட்ட சம்யுக்தா, தன் உடை மறைவில் சுற்றி நின்றிருந்த கயவர்களுக்கு தெரியாமல் ‘பெண்கள் பாதுக்காப்பு செயலியை/women safety app’ இயக்கி இருந்தாள்.
அரண்!…
பெண்கள் பாதுக்காப்பு செயலி.
அந்தச் செயலி, ஆட்டோமேட்டிக் முறையில் சம்யுக்தா ஆபத்தில் இருப்பதை, காவல் துறைக்கும், அவள் நண்பர்களுக்கும், குடும்பத்திற்கும், GPS கோ ஆர்டினேஷன்/co ordination உடன், சுற்றி நின்றவர்களைப் போட்டோ, வீடியோ ரெக்கார்ட் எடுத்து அனுப்பி கொண்டிருந்தது.
‘sos- save our souls’ என்ற அபாய அறிவிப்பு, விக்ரம், ஹேமாவை சேர்ந்தபோது, அவர்கள் இருவரும் பயத்துடனும், பதட்டத்துடன் சம்யுக்தாவிற்கு அழைப்பு விடுத்த நேரம், ஓட ஆரம்பித்து இருந்தாள் சம்யுக்தா.
இது போன்ற செயலிகள், பல்வேறு வகையான பாதுகாப்பு அம்சங்களை உள்ளடிக்கியது.
‘என்னைப் பின்தொடர்’ ஜி.பி.எஸ் கண்காணிப்பு வழியாகப் பயனரின் மெய்நிகர் கண்காணிப்பை செயல்படுத்துகிறது. இந்தப் பயன்பாட்டில் உள்ள போலி அழைப்பு அம்சம்/FAKE CALL , சில விரும்பத் தகாத சூழ்நிலையிலிருந்து தப்பிக்க போலி அழைப்பை அனுமதிக்கிறது.
சம்யுக்தா பயன்படுத்திய அந்தக் குறிப்பிட்ட பெண்கள் செயலி, தமிழகம் முழுவதும் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை என்றாலும், சோதனை ஓட்ட முறையில் ஒரு பெண்ணாய், மருத்துவராய் அதன் பயன்பாடுபற்றி அறிக்கை கொடுக்கும் படி, அந்தச் செயலி உருவாக்கிய நிறுவனம் சம்யுக்தாவை அணுகி இருந்தது.
அது செல்வத்தின் பாதுக்காப்பு நிறுவனம் உருவாக்கி இருந்த செயலி.
எமியை பார்க்கக் கூடாத எந்த நிலையில் சிறு வயதில் காப்பாற்றினானோ, அன்றிலிருந்து பெண்கள் பாதுகாப்பிற்காகப் பல்வேறு திட்டங்களைச் செயல் படுத்தி வருகிறான் செல்வம். அதில் ஒன்று தான் அவன் செக்யூரிட்டி நிறுவனம் உருவாக்கி, எப்படி பயன்படுகிறது என்பதை சோதனை ஓட்டமாய், நகரின் பல்வேறு வகையான பெண்களிடம் எப்படியெல்லாம் இன்னும் மேம்படுத்தலாம் என்று கருத்து கேட்க அணுகி இருந்தார்கள்.
அது இப்பொழுது சம்யுக்தாவை காக்கும் கவசமாய், அரணாய் தன் வேலையைச் சிறப்பாகச் செய்து கொண்டிருந்தது.
மற்ற செயலிகளில் இல்லாத புது வடிவமாக, ஆபத்தில் இருப்பவர்களின் சுற்றுப்புறத்தில் யாரெல்லாம் இருக்கிறார்களோ, யார் எல்லாம் எங்களால் உதவ முடியும் என்று கம்யூனிட்டி போலீசிங்/community policing செய்ய முன் வந்து இருக்கும் பொது மக்களுக்கு, அவர்கள் மொபைலுக்கு, ம்யுக்தாவின் ‘ஆபத்து, என்னைக் காப்பாற்றுங்கள்’ என்ற அறிவிப்பு சென்று சேர்ந்து இருந்தது இருந்தது.
இவர்கள், ‘womens defence shield’ என்று அழைக்கப்படுவார்கள். ஆபத்தில் இருப்பவர் எந்த இடத்தில் இருக்கிறார், உதவி செய்ய வரும் பொது மக்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதை, ‘லைவ் gps ட்ரெக்கிங்/live gps tracking மூலம் கண்டு கொள்ள முடியும்.
‘உதவ பக்கத்தில் சிலர் இருக்கிறார்கள், அவர்கள் உடனே வந்து விடுவார்கள். அதுவரை சமாளிக்க வேண்டும்.’ என்ற நினைவே ஒரு பெண்ணிற்கு இன்னும், மனதைரியத்தை கொடுத்து விடும் அல்லவா!
அந்த வேலையை, அந்தச் செயலி மிகச் சிறப்பாகச் செய்து கொண்டு இருந்தது.
அந்தப் பகுதியில், அந்தச் செயலியைப் பயன்படுத்தி கொண்டு இருப்பவர்கள், பெண்கள் கேடயத்தின் மெம்பர்கள், சம்யுக்தா உதவிக்கு, அவள் இருக்கும் பகுதியை நோக்கி நெருங்கி வருவதை, மொபைல் டிஸ்பிலேவில் இருந்த மேப்பில், சுட்டி காட்டி கொண்டிருக்க, சம்யுதாவிற்கு புது பலம் கிடைத்தது போல், ஓட ஆரம்பித்தாள்.
இந்தப் பெண்கள் கேடயம் என்ற கான்செப்ட் மூலம், நாம் வசிக்கும் தெருவில், அல்லது நாம் இருக்கும் இடத்தில் ஒரு பெண் ஆபத்தில் இருக்கிறாள் என்றால், அந்தப் பெண்ணைத் தேடி நாம், நம் குடும்பத்துடன் சென்று, காவல் துறையும், அவள் குடும்பமும் வரும் வரை துணை நிற்கவோ, நமது வீட்டிற்கோ அழைத்து வர முடியும்.
இப்படி உதவ முன் வருபவர்களின் வீட்டு அட்ரஸ், ஆதார், வோட்டர் id, work id எல்லாம் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டு இருப்பதால், காப்பாற்ற வருபவர்கள் நல்லவர்களா, கெட்டவர்களா என்ற தயக்கம் தேவையில்லை…” செயலிபற்றி விளக்கம் அளித்த அந்தச் செயலியை உருவாக்கியவரின் கனவு, அங்கே வடிவம் கொள்ள ஆரம்பித்தது.
ஓடிக்கொண்டிருந்த சம்யுக்தாவின் மொபைலுக்கு விக்ரமிடமிருந்து அழைப்பு வந்தது. இரவு பன்னிரண்டு மணிக்கு, ‘ஆபத்தில் இருக்கிறேன்’ காப்பாற்று என்ற மெசேஜ் சம்யுக்தாவிடமிருந்து வர விக்ரம் திகைத்துப் போய், அழைக்க ஆரம்பித்து இருந்தான்.
வந்த அழைப்பை ப்ளூடூத் வழியாக ஏற்றவள், “விக்ரம்!….” என்று ஆரம்பித்து, சம்யுக்தா பேசுவதற்குள் பொரிய ஆரம்பித்தான் விக்ரம்.
“அறிவு கெட்டவளே!… எதில் எதில் விளையாடுவது என்று இல்லையா உனக்கு?…. திஸ் ஐஸ் தி லிமிட் சம்யு… தொலைவில் இருப்பவனுக்கு இப்படியொரு மெசேஜ் இரவில் வந்தால் எப்படி இருக்கும் என்று கொஞ்சமாவது யோசி. டோன்ட் பிளே வித் மை எமோஷன்ஸ்…” என்றான் கோபத்துடன்.
சம்யுக்தா ஆபத்தில் இருப்பதை விக்ரம் நம்பவில்லை என்று தான் சொல்ல வேண்டும். உலகத்தில் மிகப் பிரசித்தி பெற்ற மாபியா குழுவின் தளபதிகளில் ஒருவனின் மகள். சுற்றி அத்தனை ஆட்கள் பாதுகாப்பிற்க்கு இருக்கும் பெண்ணிற்கு ஆபத்து, அதுவும் தன் பாதுகாப்பை மீறி ஆபத்து என்பதை எப்படி நம்புவான் அவன்?
அந்த நொடி சம்யுக்தா, ஹேமாவுடன் சேர்ந்து ஏதோ prank, விளையாடுகிறாள் என்றே அவன் நினைத்தான். தங்கள் சொந்த பெண்ணையே பார்த்துக் கொள்ள முடியவில்லை என்றா,ல் பிறகு டான்னாய் இருந்து என்ன பயன்?
அதே சமயம், ஹேமாவும் கான்பரென்ஸ் அழைப்பில் இணைய, “தோ வந்துட்டாங்க மேடம்… அடியேய்!… உனக்கு என்னைக் காபரா படுத்தி பார்ப்பதில் அப்படி என்னடீ சந்தோசம்?…நடுராத்திரியில் இப்படியொரு விளையாட்டு என்ன வேண்டிக் கிடக்கு? அதிலும் பாதுக்காப்பு செயலியைப் பயன்படுத்தி…” என்று ஹேமாவிற்கு பொங்கல் வைத்தான் விக்ரம்.
ஹேமாவும், சம்யுக்தாவும் சொல்ல வந்த எந்தச் சமாதானமும் அவன் காதில் ஏறவில்லை.
“அடேய்!…சொறி வந்த சிம்பன்சி!…. மூளை இல்லாத உரங்கோட்டான்!… நிறுத்துடா பக்கி… சத்தியமாய் என்னைச் சில பொறுக்கிங்க துரத்திட்டு தான்டா வந்துட்டு இருக்காங்க… போட்டோ, வீடியோவைப் பாருடா வெண்ணை!… என்னைக் காப்பாத்த கிருஷ்ண பரமாத்மா மாதிரி பாய்ஞ்சி வரச் சொல்லவில்லை… அட்லீஸ்ட் ஓடிட்டு இருக்கும்போது இப்படி கடுப்பு ஏத்தாதே!…” என்றாள் சம்யுக்தா.
அப்பொழுது தான் தனக்கு வந்திருந்த போட்டோ, வீடீயோவை பார்த்த விக்ரம் திகைத்து ஸ்தம்பித்து போனான். தன் கட்டு காவலை மீறி எப்படி சம்யுக்தா ஆபத்தில் சிக்கினால் என்ற ஒற்றை கேள்வி அவனை எதையுமே சிந்திக்க விடாமல் கட்டி போட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
‘எங்கே, எந்த இடத்தில் தன் பாதுகாப்பில் ஓட்டை விழுந்தது?…’ என்று விக்ரம் சிந்தித்து கொண்டிருக்க, பல்தேவ் அழைப்பில் இணைந்தார்.
பல்தேவும், விக்ரம் மனநிலையில் தான் இருந்தார் என்பதை அவர் பேசிய விதமே சொல்லாமல் சொன்னது.
“சம்யுக்தா!… வாட் கைன்ட் சிக் கேம் ஐஸ் திஸ்?… பொறுப்புள்ள டாக்டர் நீ… உன் கிட்டே இருந்து இப்படியொரு சில்லி பெஹேவியர் எதிர்பார்கலை.” என்றார்.
அத்தனை நம்பகம் தன் கட்டு காவல் மீது.
“அப்பா!… ப்ளீஸ்ப்பா நீங்களும் அந்த விக்ரம் எருமை மாதிரி பேசாதீங்க. என்னை ஆறு பொறுக்கிங்க துரத்திட்டு தான் வராங்க …” என்ற சம்யுக்தா, தான் தோழியின் வரவேற்ப்பு வந்தது முதல், இப்பொழுது ஓடிக்கொண்டிருப்பது வரை சொல்லி முடிக்க, விக்ரம், பல்தேவ் இருவரும் ஸ்தம்பித்து போனார்கள்.
இருவரின் ஈகோவிற்கு மிகப் பெரிய அடி. தங்களை வெல்ல யாருமே இல்லை என்ற மமதைக்கு கிடைத்த அடி. ஒரு பின்புலமே இல்லாத தெருப் பொறுக்கிகள், தங்கள் வீட்டு பெண்ணைத் துரத்த முடிகிறது என்றால் எந்த லட்சணத்தில் தங்கள் பாதுக்காப்பு இருக்கிறது என்று அதிர்ந்து போனார்கள்.
“அறிவு கெட்டவளே!… சம்யுவை தனியாக விட்டுட்டு எங்கே தொலஞ்சி போனே நீ?… எங்கே போவதாய் இருந்தாலும், ஒன்றாகத் தானேடி போவீங்க!… என்ன இழவு வந்தது உனக்கு இந்த முறை?…” என்று ஹேமாவை காய்ச்சி எடுத்தான் விக்ரம்.
ஏற்கெனவே, ‘தன்னால் தான், தான் விட்டு வந்ததால் தான், சம்யு இப்படி ஆபத்தில் சிக்கி இருக்கிறாளோ!….’ என்று குற்ற உணர்வில் தவித்து, துடித்துக் கொண்டிருந்த ஹேமா, விக்ரம் சரமாரியாகத் திட்ட ஆரம்பிக்க, கண்களிலிருந்து தாரைத் தாரையாகக் கண்ணீர் வழிந்தது.
“டேய் பக்கி!… ஹேமா என் தோழி. எனக்குப் பர்சனல் பாடிகார்ட் இல்லை… அவளை ஏன்டா குதறி வைக்குறே மலை குரங்கே!… கையில் கிடைச்ச உன்னைப் பொலி போட்டுடுவேன்… ஹேமா டார்லி!… அவன் கிடக்காரன் கீழ்ப்பாக்கதிலிருந்து தப்பி வந்த முழு கிறுக்கு…. நீ இதுக்கெல்லாம் கவலை படாதே செல்லம்… எனக்கு ஒன்றும் ஆகாது. உதவி வரும் வரை இப்படியே கடல் ஓரமாய் ஜாகிங் போய்ட்டு இருக்கேன்…” என்றாள் ஹேமாவை சமாதானம் செய்யும் பொருட்டு.
“இல்லை சம்யு… நீ என்னைச் சமாதானம் செய்யத் தான் சொல்றே!… உன்னை மட்டும் தனியே விட்டு வரலை என்றால், நீ இப்படி சிக்கி இருக்க மாட்டே தானே!… சாரி டீ… ப்ளீஸ் பத்திரமாய் வந்துடு செல்லம்… நானும் அங்கே தான் வந்துட்டு இருக்கேன்… உனக்கு ஏதாவது நடந்தால் நான் உயிரோடவே இருக்க மாட்டேன் சம்யு…” என்று ஹேமா கதறி அழ,
“அட எவடி இவ!… நானே ஓட முடியாமல் ஓடிட்டு இருக்கேன்… இதுல இவளைச் சமாதானம் செய்தே, என் ஸ்டாமினா குறைச்சிடுவா போலிருக்கே!… ஹேய் லூசு ஹேமா!… கண்ணைத் துடைச்சிட்டு… எனக்குத் தைரியம் கொடுப்பது போல் பேசு… எனக்கு உதவ ஆட்கள் வந்துட்டு தான் இருக்காங்க… இப்போ நீ அழறதை நிறுத்தலை, வீட்டுக்கு வந்தபிறகு வெங்காயத்தை ஜுஸ் போட்டுக் கண்ணில் ஊத்திடுவேன்… நிறுத்துடீ உன் ஒப்பாரியை…” என்று சம்யுக்தா அதட்ட, காரில் தன் பெற்றோர்களுடன், சம்யுக்தா இருக்கும் இடத்திற்கு காரில் விரைந்து வந்து கொண்டிருந்த ஹேமாவின் கண்ணீர் நின்றது.
‘அடக்கடவுளே!… உலகத்தில் ஆபத்தில் இருக்கிறேன் என்று சொல்வதை கூட நம்ப மாட்டேங்கிறாங்க… HEY i am in danger…i am in dangerன்னு வடிவேலு ரேஞ்சுக்கு புலம்ப விடுறாங்களே!…. அந்த அளவுக்கு நம்ம என்ன ஸ்பெஷல்?.. என்னைக் காப்பாத்த வருவதை விட்டுட்டு இந்தப் பக்கியில் ஒன்று நம்மைக் கடிச்சி குதறி வைக்குது… இன்னொரு அழுது வைக்குது… இதுங்களை வச்சிட்டு ஒரு ஆபத்தில் கூடச் சிக்க முடியாது போலிருக்கே!…’ என்று சம்யுக்தா நொந்தே போனாள் என்று தான் சொல்ல வேண்டும்.
அது வீடியோ அழைப்பு என்பதால், மற்றவர்களால் சம்யுக்தாவை பார்க்க முடியவில்லை. ஆனால், மற்றவர்கள் ஒருவரையொருவர் கவனிக்க முடிந்தது.
விக்ரம் இன்னொரு போனில் யாரிடமோ கோபத்தில் கர்ஜித்து கொண்டிருந்தான். எல்லாம் சம்யுக்தாவின் பாதுகாப்பிற்க்கு என்று இருக்கும் ஜெவியரிடமும் அவன் குழுவிடமும் தான்.
“சம்யுவை தனியாக விட்டு, நீங்க என்னத்தை ரோட்டில் கழற்றிட்டு இருக்கீங்க?….” என்று பச்சை, மஞ்சள், என்று வர்ண வர்ணாமாய் விக்ரம் திட்டித் தீர்த்தான்.
“சார்!… அவங்க கடல் முத்து என்ற அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு உள்ளே போய்ட்டாங்க சார்… நாங்க எப்படி சார் உள்ளே போக முடியும்?… தூதரகத்தை விட அங்கே காவல் அதிகம். ஏற்கனவே ரெஜிஸ்டர் செய்தவங்க தான் பாஸ் உள்ளேயே போக முடியும்.
புது புக்கிங் என்றாலும் ஆதி முதல் அந்தம் வரை செக்கிங் செய்துட்டு தான் உள்ளே விடுவாங்க. கையில் பாம் டாப் வச்சிட்டு நம் மேல் கிரிமினல் வழக்கு எல்லாம் இருக்கான்னு செக் வேற செய்வாங்க.எங்க ஒவ்வொருத்தன் மேலேயும் எத்தனை வழக்கு இருக்குன்னு எங்களுக்கே தெரியாது… இதில் நாங்க எப்படி சார் உள்ளே போக முடியும்?… அந்த நரி அதை ராணுவ மையம் போல் அத்தனை பாதுகாப்பாய் வைத்திருக்கிறான்…” என்றான் ஜெவியர் அழாத குறையாய்.
NRI என்பதை தான் அவன் அந்த லட்சணத்தில் நரி என்று சொல்லியிருந்தான். அந்த ஹோட்டலின் அதிபர் ஒரு NRI/ வெளிநாடு வாழ் இந்தியர். அவர் முரளிதரன் என்பதுஅந்த ஹோட்டல் வலைத்தளதின் விவரம் சொன்னது.
பதினைந்து வருடங்களுக்கு ஆரம்பித்த ஹோட்டல் அது. அவர் யார், என்ன எங்கிருக்கிறார் என்ற மற்ற விவரமோ, அவரின் புகைப்படமோ, அவரை எப்படி தொடர்பு கொள்வது என்ற மற்ற எந்த விவரம் எதுவுமே இல்லை. தேஜ்ஜின் தந்தை, அந்த முரளிதரன் என்பதோ, அவரின் பெயரின் பின்னால் தேஜ், ஜாக்கெல் மறைந்திருக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாமல் தான போனது.
ஜெவியர் சொல்வதில் உள்ள உண்மை விக்ரமும் அறிந்தே இருந்தான். ஒரு மீட்டிங் கலந்து கொள்ள அந்த ஹோட்டலுக்கு அவனின் சென்று இருக்கிறான். அத்தனை கட்டுப்பாடு, கெடுபிடி என்று அவனையே ஒரு வழி ஆக்கிய அந்த ஹோட்டலுக்குள் ஜெவியர் போன்றவன் எல்லாம் நுழையக் கூட முடியாது தான்.
“சரி… சரி… சம்யுக்தாவை துரத்திட்டு போறாங்க பாரு… லொகேஷன் ஷேர் செய்து இருக்கேன்… அவனுங்க ஒருத்தன் கூட உயிரோடு இருக்க கூடாது. நான் வரும் வரை அவனுங்களை உயிரோட வை…” என்றான் விக்ரம் கண்கள் கோபத்தில் சிவக்க.
அதே சமயம் அழுகையை கட்டு படுத்தி கொண்ட ஹேமாவின் கண்கள் பல்தேவை பார்த்து அகல விரிந்தது.
இதயத்தைப் பிடித்துக் கொண்டு முகம் வெளுத்து அமர்ந்திருந்தார் பல்தேவ்.
“அங்கிள்!… ஆர் யு ஆல்ரைட் அங்கிள்?.. அங்கிள்!…” என்ற ஹேமாவின் குரலோ,
“அப்பா!… அப்பா!… என்ன ஆச்சுப்பா?… ஹேமா அப்பாவுக்கு என்ன ஆச்சு?…” என்ற சம்யுக்தாவின் குரலோ பல்தேவை எட்டவில்லை.
உறைந்து போயிருந்தார் பல்தேவ்.
‘அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்‘ என்ற முன்னோர் நம்பிக்கையின் படி, தான் செய்தது எல்லாம் வட்டியும் முதலுமாய் சம்யுக்தாவின் தலையில் விடிந்ததை கண்டு, அந்த மிருகம் ஆடி போயிருந்தது.
‘பெற்றோரின் சொத்தில் மட்டும் அல்ல, அவர்கள் செய்யும் ஒவ்வொரு பாவ புண்ணியத்திலும் பிள்ளைகளுக்கு பங்கு உண்டு என்பது இது தானோ!.
எத்தனை பெண்களை சிதைத்து இருப்பார்!… இன்று அவர் கண் முன்னே, அவர் மகள் தன் மானத்தை காப்பாற்றி கொள்ள ஓடிக்கொண்டிருக்கிறாள்.
ஆள் பலம், படை பலம், எல்லாம் இருந்து என்ன!… எங்கோ கண் காணாத தொலைவிலிருந்து தன் மகளைக் காக்க முடியாமல் தந்தையாய் அவர் துடிக்கும் நிலை.
பெண்மை எந்தளவிற்கு கொடுமை செய்யலாம் என்று அணுஅணுவாய் அறிந்த மிருகம் இல்லையா!… அதே வன்கொடுமைகளை பல பெண்களுக்கு நடத்தியவர் என்பதால், துரத்தி வரும் அந்த ஆறு மிருகங்கள் என்னவெல்லாம்
சம்யுக்தாவிற்கு செய்ய முடியும் என்ற கற்பனையே அவர் இதயத்தின் துடிப்பை நிறுத்தியது.
இதயமே இல்லாத மனித மிருகத்திற்கு தான், இதயம் துடிப்பதை நிறுத்தி, ‘உனக்கும் முடிவு என்ற ஒன்று இருக்கிறது…’ என்பதை நினைவு படுத்த, வலியை வரவழைத்தது .
அது நாள் வரை பல்தேவ் ஆடிக்கொண்டிருந்தார். படைத்தவன் அவரை அட வைத்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். இன்று சாட்டை சுழற்றப்பட அதன் வலி தாங்க முடியாமல் திணற ஆரம்பித்தார் பல்தேவ்.
பிராரப்த கர்மம் என்று வடமொழியில் சொல்லப்படும் ஊழ்வினை பல்தேவிடம் வசூலிக்க ஆரம்பித்திருந்தது. தொல்வினை, நுகர்வினை, ஊழ்வினை, என்று நாம் செய்யும் எந்தச் செயலின் வினை மூவகைப்பட்டது. இம்மூன்றும் சேர்ந்து ஒன்றாகப் பேசப்படும்பொழுது மூவினைத் தத்துவம். எல்லா பிறப்புகளிலும் நாம் செய்த, செய்ய நினைத்த, செய்ய விரும்பிய செயல்களின் மூட்டைத் தான் கருமம் அல்லது வினைப்பயன்.
வில்லிலிருந்து புறப்பட்டுவிட்ட அம்பை அம்பு எய்தியவனே எப்படி எதுவும் செய்யமுடியாதோ அப்படிப்பட்டது நாம் செய்யும் பாவம் ஒவ்வொன்றிற்கும் கணக்கு உண்டு. குடும்பத்தினர் தெரிந்தே பாவம் செய்யும்போது அதைத் தீர்க்க நாம் கோயில், குளம், வேண்டுதல் வைத்தால் மட்டும் எல்லாம் எல்லாம் சரியாகி விடுமா என்ன?
ஒரு நபருக்கு வாய்க்கும் பெற்றோர், வாய்த்திருக்கும் அல்லது வாய்க்கப்போகும் கணவன்/மனைவி, வாய்க்கப்போகும் வாழ்க்கைச் சூழ்நிலை, பொதுவாகக் கஷ்ட வாழ்க்கையா சுக வாழ்க்கையா, மற்றும் ஆயுள், இதெல்லாம் ஊழ்வினையைப் பொறுத்தது.
பல்தேவ் செய்த பாவங்களின் மொத்த கணக்கு சம்யுக்தாவிடம் தீர்க்கப் பட்டுக் கொண்டிருந்தது.
ஆகாமிய கருமம் எனப்படும் வரும் வினை முழுவதும் மனிதன் கையில்தான் இருக்கிறது. ஏனென்றால் இது நாம் இப்பிறவியில் இனி செய்யப்போகும் செயல்கள். பாவத்தைச் செய்யும்போது அதற்காகக் கலங்காத பல்தேவ் கலங்கி போய் நிற்கத் தான், எந்தப் பெண்மையை அவர் தூசாக மிதித்தாரோ அதே பெண்மையின் சொரூபமாய் தான் அவருக்கு மகளைக் கொடுத்து, அந்த மகளை அவர் கண் முன்னே மானத்திற்கு பயந்து ஓட விட்டுக் கொண்டு இருக்கிறதோ விதி.?
poetic justice என்பார்களே அதுவா?
‘போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்’ என்ற திருப்பாவை வரிகளில் தொல்வினையோ!…
இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில்,’ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்‘என்ற சொல்லும் கோட்பாடோ இது?
திருவள்ளுவர் சொல்லிய ,
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான் முந்துறும்…’
ஊழைப் போல மிகுந்த வலிமையுள்ளவை எவை? ஊழ்வினையிலிருந்து தப்ப வேறு வழியை நாடிச் சென்றாலும் ஊழானது முற்பட்டு வந்து முதலில் நிற்கும்.’ என்பது இது தானோ!
தினை விதைத்தவன்,தினை அறுக்கிறான்; வினை விதைத்தவன் வினை அறுப்பான்” இது பழமொழி அங்கே உண்மையாகி கொண்டிருந்தது.
பல்தேவ் தான் பாவம் செய்தார். மாலினியும், சம்யுக்தாவும் என்ன பாவம் செய்தார்கள்?..அவர்கள் செய்த பூஜை, காப்பாற்றிய உயிர்கள் எல்லாம் கணக்கில் இல்லையா என்றால் இறைவன் நியாயவாதி என்பதால், சம்யுக்தாவை காக்க உதவிகள் வந்து கொண்டே தான் இருந்தது பல பக்கத்திலிருந்து.
‘தர்மோ ராக்ஷதி ரக்ஷித்தஹ!...’ தர்மத்தை நாம் காப்பாற்றினால், தர்மம் நம்மைக் காப்பாற்றும் என்பது இது தான்
சம்யுக்தா பக்கம் நியாயம், தர்மம் இருந்ததால், தன்னை காத்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாகச் செயல்பட்டு கொண்டிருந்தாள்.
தவிர சம்யுக்தாவை துரத்தி வந்தவர்களின் மூளை சிந்திக்கும் திறனை இழந்து இருந்ததால், எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்று எண்ணி எல்லாம் அவர்கள் செயல்படவில்லை.
கடற்கரை மணலில் அவர்கள் கால்கள் புதைய தள்ளாடி ஓடி வர, சம்யுக்தாவோ அறிவுடன் ஈர மணலில் ஓடிக்கொண்டிருந்தாள்.
கடற்கரை மணலில் ஓடுவது எளிதானது அல்ல.
கடினமான மேற்பரப்பில் இயங்குவதை விட மணலில் ஓடுவதற்கு 1.6 மடங்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக நீங்கள் மணலில் உங்களை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய கூடுதல் வேலை செய்ய வேண்டும் . அதில் முன்னோக்கி வேகத்தைப் பெறவில்லை, ஏனென்றால் உங்கள் கால் மணலுக்குள் மூழ்கி, எளிதாக முன்னோக்கி நகர்த்தாது. அந்தக் கஷ்டம் ஈர மணலில் ஓடிக் கொண்டிருந்த சம்யுக்தாவிற்கு இல்லை என்பதால், அவள் ஓட்டத்தின் வேகம் மிக அதிகமாய் தான் இருந்தது.
மணலில் தான் ஓடுவதற்கு கடினமாக இருக்கிறதே, சம்யுக்தா மாதிரி ஈரமணலில் இறங்கி ஓடலாமே அவளைச் சுலபமாய் பிடிக்க என்ற அடிப்படை அறிவு கூட அங்கே அவர்களுக்கு வேலை செய்யவில்லை அந்த அறுவரில் ஒருவனை தவிர.
விளைவு மற்ற ஐவரும் வெகுவாய் பின் தங்கி விட, அந்த ஒற்றை மிருகம் மட்டும் சம்யுக்தாவை தாவிப் பிடித்தது.
பின் திரும்பிப் பார்த்துக் கொண்டே ஓடிக் கொண்டிருந்த சம்யுக்தா இதனால் கலங்க எல்லாம் இல்லை. ஒருவன் மட்டும் தன்னை நோக்கி முன்னேறுவதை கவனித்து கொண்டே தான் ஓடிக்கொண்டிருந்தாள்.
ஏறக்குறைய ஓநாய் தனி தனி ஆடுகளை அடித்த கதைபற்றிப் படித்து இருப்போம். அதே தான் அங்கு நடந்தது.
தனியாகச் சம்யுக்தா என்ற பெண் சிங்கத்திடம் மாட்டிய, சிறு முயலாகி போனான் அவளைத் தொட்டவன்.
வேட்டையாடப் படும் புள்ளி மானாய் அங்கே சம்யுக்தா ஓடிக் கொண்டிருக்கவில்லை, வேட்டையாட ஓடிக்கொண்டிருந்தாள்.
துரத்தினால் மட்டுமே வேட்டை என்பதில்லை. துரத்த வைத்தும் வேட்டை ஆட முடியும். எத்தனை நேரம் அவர்கள் சம்யுக்தாவை துரத்தவில்லை, அவர்களைப் பிரிக்க, அவர்களைச் சோர்வு படுத்த சம்யுக்தா தான் ஓட வைத்துக் கொண்டிருந்தாள் என்ற உண்மை தெரியாத அந்த முதல் பலியாடு சம்யுக்தாவின் மீது கை வைக்க அடுத்த நொடி அலறலுடன் அவன் கடற்கரை மணலில் விழுந்து கிடந்தான்.
‘நம் பிள்ளைகளுக்கு எதைக் கற்று கொடுக்கிறோமோ இல்லையோ, ஏதாவது ஒரு விதமான தற்காப்பு காலை நிச்சயம் கற்று கொடுத்தே இருக்க வேண்டும். இது அவர்கள் பறந்து பறந்து சண்டை போடவில்லை. ஆபத்தான சூழ்நிலையிலிருந்து தங்களை மீட்டு கொள்ள…’ என்று மாலினி அன்று சொன்னது எத்தனை உண்மை.
‘உங்கள் தாக்குபவர் எவ்வளவு பெரியவர் அல்லது கனமானவர் என்பது முக்கியமல்ல, ஏனென்றால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய இடங்கள் எங்கே என்று உங்களுக்குத் தெரிந்தால் நீங்கள் யாரையும் வெல்ல முடியும். கண்கள், மூக்கு, தொண்டை, மார்பு, முழங்கால்கள் மற்றும் இடுப்பு ஆகியவை அவற்றில் முக்கியமானவை.
நீங்கள் விரும்பும் எந்த வகையிலும் நீங்கள் தாக்கலாம், ஆனால் பாதுகாப்பான பக்கத்தில் இருக்க, மிகவும் பயனுள்ள நகர்வுகள் இந்தப் பகுதிகளை இலக்காகக் கொண்டவை என்பது நினைவில் இருக்க வேண்டும்.’ என்று தற்காப்பு வகுப்பில் கற்று கொடுக்கப்பட்டது அங்கே லைவ் ஷோவாகச் சம்யுக்தா செயல்படுத்தி கொண்டிருந்தாள்.
எந்தவொரு மாமிச மலையையும் சாய்க்கும் ஆற்றல் சிறந்த நகர்வுகளில் ஒன்று மணிக்கட்டைப் பிடுங்குவது.
தன்னை துரத்திப் பிடித்தவனின் சிறிய விரலையும் மோதிர விரலையும் ஒரு கையால் பிடுங்கி, நடுத்தர, ஆள்காட்டி விரலை மற்றொரு கையால் பிடித்து மணிக்கட்டை முன்னோக்கி வளைத்தாள் சம்யுக்தா.
‘கையைப் பிடிக்க முடியாவிட்டால், முஷ்டியால் காலர்போன்களுக்கு இடையில், ஆதாமின் ஆப்பிளில்/adams apple எனப்படும் தொண்டை குழியில் ஓங்கி ஒரு குத்து. இது எதிரியைத் திசைதிருப்பி விடும். அவரது நினைவுக்கு வருவதற்கு நீண்ட நேரம் எடுக்கும்.’
இந்த ரெண்டு இடங்களையும் தன் தாக்குதலால் குறி வைத்த சம்யுக்தா அதற்கும் அவன் கீழே சாயவில்லை என்பதை தெரிந்து அடுத்த நொடி அவன் உயிர் நாடியில் தாக்குதலை நடத்தினாள்.
‘தாக்குதலுக்கான மிகத் தெளிவான பகுதி ஒரு ஆணின் பிறப்புறுப்பு. உடல் வலிமை மிக்க ஆணின், ‘acheeles ஹீல்’ இது தான். ஒரு carrom coin அடிக்கும் அளவிற்கு தேவையான ஆற்றல் கொடுத்து அடிக்கும் அடிக்கே, உயிர் போய் விடும் அளவிற்கு மிகவும் பலவீனமான பகுதி. அனைத்து தற்காப்பு படிப்புகளும் இந்தப் பகுதியை இலக்காகக் கொள்ள அறிவுறுத்துகின்றன.
நீங்கள் முன்னால் இருந்து பிடிக்கப்பட்டு, உங்கள் கைகளை உயர்த்த முடியாவிட்டால், உங்கள் கைகளை முன்னோக்கி நகர்த்தி, உங்கள் இடுப்புக்கு முன்னால் ஒரு முஷ்டியை உருவாக்கவும். இது உங்களுக்கும் தாக்குபவருக்கும் இடையில் போதுமான இடத்தை உருவாக்கும்.
அதன் பிறகு, தாக்குபவரின் மூக்கை உங்கள் நெற்றியால் அடியுங்கள். இது தாக்குபவர் உங்களிடமிருந்து விலகிச் செல்லும். இப்போது அவரை உங்கள் முழங்காலால் இடுப்பில் அடியுங்கள்.
“கட்டைவிரல் விதி” நினைவில் இருந்தால் நீங்கள் எளிதாக ஒரு எதிராளியின் பிடியிலிருந்து தப்பிக்கலாம்: உங்கள் கையைத் தாக்குபவரின் கட்டைவிரலின் பக்கமாகச் சுழற்றுங்கள்.அவர் உங்கள் கையை இறுக்கமாகப் பிடித்திருந்தால், உங்கள் மணிக்கட்டை கட்டைவிரலை நோக்கிச் சுழற்றுங்கள். உங்கள் கைத்தாக்குபவரின் கீழ் இருக்கும்போது, உங்கள் கையை உங்களால் முடிந்தவரை வலுவாக இழுக்கவும்.
தாக்குதல் நடத்துபவர்கள் பெரும்பாலும் பின்னால் இருந்து வருகிறார்கள், ஏனென்றால் பெண்களைச் சுலபமாய் பிடிக்க இது சிறந்த வழி.
உங்களை விடுவிக்க, விரைவாகப் பின்னால் வளைந்து, தாக்குபவரை உங்கள் தலையின் பின்புறத்தால் அடிக்க முயற்சிக்கவும். உங்களால் அதைச் செய்ய முடியாவிட்டால் தாக்குபவர் தனது கால்களில் ஒன்றை முன்னோக்கி வைப்பதே முக்கியம்.
இப்போது விரைவாகக் கீழே குனிந்து, அவரது காலைப் பிடித்து உங்களுடன் இழுக்கவும். இப்போது தாக்குபவர் சமநிலையை இழக்க நேரிடும், மேலும் நீங்கள் மிகப்பெரிய எதிரியைக் கீழே விழ வைக்க முடியும்.
ஒரு முழங்கை மூலம் கொடுக்கப்படும் அடி என்பது அனைத்து வகையான தற்காப்புக் கலைகளிலும் மிகவும் ஆபத்தான ஒன்று நீங்கள் பக்கத்திலிருந்து அணுகப்பட்டால் இது உங்களுக்குத் தேவையான வழி.
வளைந்த நகர்வுமூலம் தாக்குபவரின் கோயில், தாடை அல்லது மூக்கைத் தாக்கவும். இதற்குப் பிறகு, தாக்குபவர் சில படிகள் பின்வாங்குவார். இப்போது அவனது வயிற்றில் அல்லது மார்பில் அடித்தான். முழங்கை வெற்றிகள் மிகவும் வலுவானவை, அவை எந்த எதிரியையும் திசைதிருப்பிவிடும்.” என்று தற்காப்பு கலை வகுப்பில் மாஸ்டர் கற்பித்தவற்றை, ஹேமாவுடன் அடிக்கடி பழகிப் பார்த்த முறைகளைச் சம்யுக்தா தன்னை தொட்டவனிடம் பிரயோகிக்க, ஆரோக்கியமான உடலையும், உடைக்க முடியாத மன துணிவினையும் கொண்ட சம்யுக்தாவின் தாக்குதலைச் சமாளிக்கே முடியாமல் சுருண்டு விழுந்தான் தொட்டவன்.
சம்யுக்தாவின் இந்தத் தாக்குதல் ஒருவனை வீழ்த்தி இருந்தாலும், அதற்கு அவள் எடுத்துக் கொண்ட நேரம் குறைவாக இருந்தாலும், பின்னல் மெல்ல ஓடி வந்து கொண்டிருந்தவர்களுக்குச் சம்யுக்தாவை நெருங்கப் போதிய அவகாசத்தை கொடுத்திருக்க, அதுவரை இருந்த தூரம் குறைந்து வெகுவாய் சம்யுக்தாவை நெருங்கி விட, இவர்கள்மேல் ஒரு கண் வைத்துக் கொண்டே இருந்த சம்யுக்தா மீண்டும் எடுத்தாள் ஓட்டம்.
இந்த முறை அவர்களும் ஈர மணலில் ஓடி வர ஆரம்பித்தார்கள்.
பின்னால் பார்த்துக் கொண்டே ஓடி வந்து கொண்டிருந்த சம்யுக்தாவிற்கு, திடீர் என்று நெஞ்சு அடைப்பது போலவும், பாறாங்கல்லை நெஞ்சில் வைத்தது போலவும் தோன்ற, ஓட்டத்தை நிறுத்தினாள்.
சம்யுக்தாவாக ஓட்டத்தை நிறுத்தவில்லை.
சம்யுக்தாவின் ஓட்டம் நிறுத்தப்பட்டது.
தன் நெஞ்சு அடைக்கக் காரணம், பாறாங்கல்லை போல், தான் ஓடி வந்த வழியில் நின்ற ஒரு மனிதனின் மேல், தான் முழு வேகத்தில் மோதியதே காரணம் என்பதை உணர்ந்து திகைத்து விழித்தாள்.
அவள் கன்னம், எதிரே நின்ற சீன பெருசுவரின் தாடை வரை மட்டுமே இருப்பதையும், அண்ணாந்து பார்க்கும் உயரத்தில் நெடுநெடுவெனத் தூரத்தில் காற்றில் ஆடிக் கொண்டிருக்கும் தென்னை மரத்தின், ‘கசின் பிரதர்’ என்று சொல்லும் படி நின்றவனை கண்டு திகைத்து நின்றாள்.
அவன் மார்பில் மோதிய வேகத்தில், சம்யு தான் விசையின் காரணமாய் பின் நகர்ந்தாள். அவன் ஏதோ தன் மேல் இறகு தான் மோதியது என்ற தொனியில் அசையாமல், அய்யனார் சிலைபோல் நின்றான்.
யார் அவன்?
அ(ஓ) ட்டம் தொடரும்…
(இங்கே கொடுக்கப்பட்டுள்ள அரண் என்ற செயலி என் கற்பனையே!… ஆப் டவுன்லோட் பக்கத்தில் தேட வேண்டாம். வேறு பாதுக்காப்பு விழிகளுடன் கூடிய பெண்கள் பாதுக்காப்பு செயலிகள் இருக்கின்றன. அதைப் பற்றித் தனி பதிவு கொடுத்திருக்கிறேன். படித்துப் பாருங்கள். அரண் செயலியில் சொல்லப்பட்டு இருக்கும் கம்யூனிட்டி போலீசிங் தேடி பார்த்த வரை எந்தச் செயலியிலும் இல்லை)