கனவு 13

கனவு 13

அத்தியாயம்-13

குரு கேட்ட கேள்வியில் கௌசியின் மனம் அதிர்ந்து நிற்க முடியாமல் கால்கள்
தள்ளாடி அறையில் இருந்த மெத்தையில் அப்படியே உட்கார்ந்தாள் கௌசிகா.
அவன் கேட்ட வார்த்தைகள் அவள் காதில் நங்கூரம் போலக் கேட்டது.

திருமணத்திற்கு முன்பு விக்னேஷுடன் பழகியது உண்டு.. அவன் அவள் தோளில்
கை போட்டதும் உண்டு. சிறிய வயதில் இருந்து ஒன்றாக வளர்ந்ததால் அது இருவருக்குமே பெரிதாகத்
தெரியவில்லை. விக்னேஷும் தோளில் கை போடுவானேத் தவிர எல்லை மீறியது
இல்லை. அவனிடம் அப்படி எண்ணமும் கடுகு அளவிற்குக் கூட இருந்ததில்லை.அப்படி இருக்க குரு வக்கிரப் புத்தியுடன் கேட்டக் கேள்வி..
அவனின் மீதான வெருப்பைக் காட்டியது.

மனதில் தோன்றிய வெறுப்புடன் அதைக்
கண்களால் காட்டி அவனை நிமிர்ந்து பார்க்க அவனோ சளைக்காமல் அவளைப்
பார்த்தபடி நின்றிருந்தான். “என்னப் பாக்கற அவன் உன் தோளில் கை போட்றதும்.. நீ அவனிடம் ஒட்டி உட்காறதும்.. ஏன்… அவனின் தட்டுல
இருந்து எடுத்து நீ சாப்பிடறதுன்னு
எல்லாத்தையும் பாத்திருக்கேன்.. அப்புறம்
உன்னை ஒருத்தன் கையைப்
புடிச்சதுக்கு ஹீரோவுக்கு கோபம் வந்துச்சு பார்.. ப்பா.. ” என்று சொல்லக் கௌசி அவனையே பார்த்திருந்தாள்
அகல விரித்த பார்வையுடன்.

மின்னல் வேகத்தில் எழுந்தவள் “உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்” என்று
ஆட்காட்டி விரலை நீட்டிக் கேட்டாள். அவளிடம் அவன் நடந்த விதமே அவளை
மரியாதை இல்லாமல் ஒருமையில் அழைக்க வைத்தது.

“ஏய்ய்ய்… என்ன இதெல்லாம் கை நீட்டிட்டு.. உன் வீட்டுல இப்படி எல்லாம் பண்ணக் கூடாதுன்னு சொல்லித்
தரலையா” என்று கேட்டபடியே அவளின் ஆட்காட்டி விரலைப் பிடித்தவன்.. விரலை
அப்படியேத் திருகி அவளின் கையை கீழே இறக்கக் கௌசி வலி தாங்க முடியாமல்
துடித்தாள். ஆனால் அவனிடம்
பலவீனத்தைக் காட்டக் கூடாது என்று எண்ணி கண்ணை வலியால் இறுக மூடினாளே தவிர கண்ணீரை வெளியே
விடவில்லை.

பின் அவள் கையை விட்டான். “நான் கேட்டக் கேள்விக்கு நீ பதில் சொல்லலைனாலும் நீ கேட்டதுக்கு நான் சொல்லியே ஆகனுமே” என்றவன்.. “ம்ம்..
என்னக் கேட்ட எனக்கு எப்படி எல்லாம் தெரியும்ன்னு தானே” என்று கேட்டு குரோதமாக வாய்விட்டுச் சிரித்தான்.

அவன் சிரிப்பதைப் பார்த்தே கௌசிக்கு வயிறு பிசைந்தது. “எங்க இருந்து சொல்லலாம்” என்றவன்.. ஸ்கூல் படிக்கும் போதே நான் உன்னை
பார்த்திருக்கேன். உன் பேச்சும்
திமிரும்..” என்று கண்கள் இடுங்க அவளைப் பார்த்தவன் “என்னைத் திரும்பிப் பாக்காத பொண்ணுகளே இல்ல டி.. ஆனால் உன் முன்னாடி நான்
பலமுறை வந்தும் நீ என்னைப் பாத்ததே இல்ல.. நல்லத் திமிர் தான்” என்றான். அவள் தன்னைக் கண்டு கொள்ளாமல் இருந்ததில் அவளின் ஒவ்வொரு
செய்கையும் அவனுக்குத் திமிராகத் தெரிந்தது. அவள் அடிக்கடி ஒரு புருவத்தைத் தூக்கிப் பேசுவது.. கண்களைச் சுருக்கி யாரையாவது
பார்ப்பது என்பதை அவன் திமிர் என்று எண்ணிக் கொண்டு இருந்தான் அந்த
அடிமுட்டாள். அதுவும் இல்லாமல் சிறுவயதில் இருந்து தனது தோற்றத்திற்காகவும் பணத்திற்காகவும் பழகிய பலரைக் கண்டவனுக்கு இவளது தன்மை எரிச்சலை உண்டு பண்ணியது.

“அப்புறம் நீ பேசினாயே.. நான்சியிடம்.. பேசினாயா.. இல்ல இல்ல மிரட்டுனே..
அந்த வயசிலேயே சீனியரை மிரட்டும் அளவிக்குத் திமிர்.. அப்போதே எனக்கு
தெரிஞ்சிருச்சு உனக்கு விக்னேஷ் மேல க்ரஷ்ன்னு..”

“அதுக்கு அப்புறம் நான் ஸ்கூல் முடிச்சு காலேஜ் படிக்க யூ.எஸ் போயிட்டேன்.. உன்னப் பத்தியும் உன் மூஞ்சியைப்
பத்தியும் நான் மறக்கும் அளவிற்கு என் அழகில் மயங்கிக் கிடந்த கேர்ள்ஸ்
அதிகம்” என்று அவன் அழகைப் பற்றி அவன் புராணம் அடித்துப் பேச கௌசிக்கு அவனை முறைத்தபடியே உட்கார்ந்திருக்க.. அவன் அவளைக் கண்டுகொள்ளவில்லை..

அவன் என்ன அழகு.. வெறும் வெள்ளை நிறம்.. மற்றும் பணக்காரத் தோற்றம்
அவ்வளவே.. மற்றபடி விக்னேஷின் கம்பீரத்தின் கால் தூசிற்கு வரமாட்டான்.

“அப்புறம் உன்னை அடையார் தக்சினில் தான் மறுபடியும் பார்த்தேன். ஸ்கூல்ல
இருந்ததுக்கு ஆளையே அசரடிக்கும் அழகுதான்.. உன்னைப் பார்த்துக் கொண்டு தான் இருந்தேன். நீ உன்
அத்தை மகனோடு உட்கார்ந்து அடித்த கூத்தை..”

“அப்போ கை கழுவ எந்திரிச்சு வந்த போது தான்.. நீயும் அங்க வந்த.. நான் லெஃப்ட் கார்னர்ல நின்னதால நீ என்னை கவனிக்கல.. ஆனா நீ அந்தப்
பொண்ணுங்ககிட்ட பேசுனது அவங்களை பதற அடிச்சு ஓட வச்சதுன்னு எல்லாத்தையும் கவனிச்சேன்.. அப்பவும்
உன் திமிர் அடங்கலை.. ஏனோ உன் அழகையும் திமிரையும் அடக்கி ஆள அன்னிக்கு தான் தோனுச்சு.. அதுக்கு அப்புறம் தான் உன்னை முழுசா ஃபாலோ பண்ணேன். அப்பப்பா உன் அத்தை
மகனுடன் ரொம்ப நெருக்கம் தான். அப்போ தான் அவன் நான்சியை காதலிச்சது தெரிஞ்சது.. உனக்கு ரொம்ப
ஏமாற்றமா இருந்திருக்குமே டி… ச்சு ச்சு… பாவம் தான்ல நீ.. அதான் உனக்கு வாழ்க்கைத் தந்து அப்படியே என்
எண்ணத்தை நிறைவேத்திக்கலாம்ன்னு
நினைச்சேன்.. அப்புறம் உனக்கு போன் பண்ணி ஐ லவ் யூ சொன்னதும் நான் தான்.. என்ன சொன்ன செருப்பால
அடிப்பியா? ஆனால் இப்போ என் ப்ளான் தான் எல்லாமே சக்ஸஸ்” என்றபடி அவளின் தோளைத் தொட வந்தவனை விட்டு விலகி நகர்ந்தாள்.

“என் திமிரை அடக்க நீ யார்டா?” என்று தாங்க முடியாத ஆத்திரத்தில் கத்தினாள்
கௌசி. மற்ற வேளையாக
இருந்திருந்தால் அவளின் சத்தத்திற்கு அனைவரும் முழித்திருப்பார்கள். கல்யாண அசதியில் தூங்கிக் கொண்டு
இருந்ததால் எவரும் அவள் சத்தத்தை உணரவில்லை.

“நானா… உன் கழுத்தில் தொங்கறதே சொல்லும் நான் யார்ன்னு” என்று பதில்
சொல்ல கௌசி அருவருப்பாக அவனைப் பார்த்தாள்.

“அந்தத் தகுதியும் உரிமையும் உனக்கு இதைக் கட்டி விட்டால் வந்துவிடுமா? ச்சி நீ பேசிய பேச்சிற்கு எப்போதோ அதை
இழந்துட்ட” என்று கோபமாகப்
பேசியவளின் கண்கள் தீப் பிளம்பாய் ஜொலித்தது.

“நான் இங்கே ஒரு நிமிஷம் கூட இருக்கப் போறதில்லை…” என்று விறுவிறுவென்று
நடந்து கதவைத் திறக்கப் போனவளை அவனின் சிரிப்பு தடுத்து நிறுத்தியது.

திரும்பி அவனை முறைக்க “இப்போ போய் என்னன்னு சொல்லப் போற.. சரி இப்போ நீ போனவுடனே என்னாகும்ன்னு
சொல்லட்டா.. நீ மாலை வரும்போது எல்லார் கண்லையும் கண்ணீர் கட்டுச்சே.. அது இப்போ டேம் கணக்குல வரும்.. அப்புறம் உன் அப்பன் சுகர் பேஷன்ட்ல..
ச்சு ச்சு.. முக்கியமா இந்த விஷயம் தெரிஞ்சோன போன ப்ளைட்ளயே வேலையைத் தூக்கி எறிந்து விட்டுத்
திரும்பி வந்திடுவான் உன் அருமை அத்தை மகன் விக்னேஷ்..” என்று சொல்லிச் சிரிக்க சற்று முன்பு தோன்றிய
ஆத்திரம், தைரியம் எல்லாம் வடிந்து அப்பா.. விக்னேஷிடம் சென்றது.

அவளின் பலவீனத்தை நன்கு அறிந்து வைத்திருந்தவன் மேலே பேசினான். “உன்னால போக முடியாது டி. என்ன
முறைக்கற.. ம்ம்.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்ன சொன்னே.. தகுதி இல்லை.. உரிமை இல்லைனா..
எல்லாத்தையும் இப்போ என்னன்னு தெரிஞ்சிக்கப் போற” என்று மதுவின்
போதையோடு சேர்ந்து மாதுவின் போதையும் அவனை ஆட்கொள்ள அவளை வெறி பிடித்தவன் போலப் பிடித்து அருகில் இழுத்தான்.

அவன் கை பட்டதில் துள்ளி விலகியவள் தீச்சுட்டார் போல விலகி அறைக்குள் ஓட அந்த வெறிபிடித்த நாயோ அவளை
பிடித்துவிட்டது. கத்தத் தொடங்கியவளின் வாயைப் பொத்தியவன் அவளை
கட்டிலில் சாய்த்து தானும் கட்டிலில் ஏறினான். அதுவரை இருந்த சுயமரியாதையைக் கூட விட்டவள் “என்னை விட்டுவிடு ப்ளீஸ்…” என்று
இருகைகளையும் கூப்பிக் கதறத் தொடங்க அவனுக்கு அவளின் பார்த்து மனம் இறங்கவில்லை.. மாறாக அவளின் திமிர் அடங்கி தன்னிடம் கெஞ்சுகிறாள்
என்று எண்ணியவன் மேலும் அவளைத் துன்புறுத்த எண்ணியவன் அவளின் மேல்
படர அவளுக்கு உடல் எல்லாம் திகில் பரவியது.

அவனை எதிர்த்துத் திமிறிப்
போராடியவளை அவனின் செயல்கள் தோற்கடிக்க அவளது அச்சம்.. அழுகை..
பயம்.. கதறல் என எல்லாம் அந்த அறையில் எதிரொழித்தது. ஆனால்
அவளின் உணர்ச்சிகள் எதற்கும் செவி சாய்க்காமல் அவனின் வெற்றியை நிலை
நாட்டி… அவளை போதும் போதுமெனத் துன்புறுத்திவிட்டே அவளை விட்டான் அந்தக் காமூகன்.

அவனின் காரியத்தை முடித்துக் கொண்டு அவன் உறக்கத்திற்குச் செல்ல கௌசிகா தான் உணர்விருந்தும் ஜடமாய்க்
கிடந்தாள். கண்ணீர் மட்டும் கண்களில் இருந்து வழிந்து தலையணையை நனைத்தது. போர்வையை எடுத்துத் தன்
மேல் சுற்றியவள் குளியலறைக்குள் புகுந்தாள். சவரைத் திறந்து நின்றவளின்
கண்ணீர் சவரின் தண்ணீரை மீறியும் பெரிய மணிகளாய் கன்னங்களில் வழிந்தோடியது. தன்னால் அவனை எதிர்த்து எதுவும் செய்ய முடியவில்லையே என்ற இயலாமையில் கையை சுவற்றில் நன்கு குத்திக்
கோபத்தைக் காட்டினாள். உடல் வலித் தாக்க அப்படியே குளியல் அறையில் இருந்த ஸ்டூலில் உட்கார்ந்தவள் அழத்
துடங்கினாள்.

கடவுளே முதல் நாளே இப்படி என்றால்? வரப்போகிற நாட்கள் எப்படி இருக்கும் என்று எண்ணியவளுக்கு அச்சம் வந்து உடலைத் தின்றது. மனிதத்தன்மையே இல்லாமல் இருப்பவனிடம் என்ன சொல்லிப் புரிய வைக்க முடியும். இன்று நடந்த பேச்சுவார்த்தைகளும் செயலுமே போதும் அவனின் குணத்தைச் சொல்ல.. இனிக்க இனிக்கப் பேசி எல்லாரையும்
எப்படி நம்ப வைத்துவிட்டான் பாவி.. என்று மனதிற்குள் அவனை சாபமிடாமல் இருக்க முடியவில்லை அவளால்.

அழுதழுது இருந்தவளுக்கு உடல் தண்ணீரில் நனைந்து இருந்ததால் நடுக்கம் எடுக்க பாத்ரூமில் இருந்து ட்ரெஸிங் ரூமிற்கு வந்தவள் ட்ரெஸிங்
ரூமிற்கும் பெட்ரூமிற்கும் இடையில் இருந்த கதவைத் தாழிட்டாள். அப்போது தான் கண்ணாடியைப் ஏதேச்சையாகப் பார்த்தவள் அதிர்ந்து விட்டாள். கன்றியிருந்த கன்னமும்.. சுற்றியிருந்த போர்வைக்கு மேல் தெரிந்த வெற்றுத்
தோளிலும் கழுத்திலும் இருந்த ரத்தக் காயங்களும் அவளை அதிர வைத்தது கூடவே தன்னிரக்கத்தில் கண்ணீரும்
வழிய தன் பெண்மை இப்படி ஒரு நாயிடம் பறிபோனதை நினைத்து உதட்டைக் கடித்து அழுதாள். சிறிது நேரம் அழுதபடி நின்றவள் கண்களைத் துடைத்துக்
கொண்டு தன் தலை விதியை
நொந்தபடியே அங்கிருந்த ட்ராலியில் இருந்த தன் துணி ஒன்றை எடுத்து உடுத்தினாள். ட்ராலியை மூடும் போது
தான் தன் டைரியைப் பார்த்தாள் கௌசிகா. கண்ணீருடன் அதை எடுத்தவள் ட்ராலியின் அருகிலேயே சம்மனமிட்டு அமர்ந்து டைரியை எடுத்து
மடியில் வைத்து அதைப் பார்த்து குமுறி அழுதாள். திறந்து பார்க்க அதில் ஒரு
பேனா இருப்பதை கண்டவள் தன் மனதில் தோன்றியதை எழுதினாள்.

மிருகமாய்ப் பிறந்திருந்தால்
காட்டில் என் இஷ்டத்திற்கு
வாழ்ந்திருப்பேன்..
ஆமையாய்ப் பிறந்திருந்தால்
என்னைக் காத்துக் கொண்டாவது
வாழ்ந்திருப்பேன்..
ஆணாகப் பிறந்திருந்தால்
வீட்டினரை அடக்கியாவது
வாழ்ந்திருப்பேன்..
பிறக்காமலே இருந்திருந்தால்
நிம்மதியான ஆன்மாவாகத்
திரிந்திருப்பேன்…
பெண்ணாய்ப் பிறந்ததால் தான்
என்னவோ
உரிமம் என்ற பெயரில்
பெரியவர்களின் ஆசியோடு
ஒருவனின் காமத்திற்கு கல்யாணம்
என்ற பெயரில்
இறையாகிக் கொண்டிருக்கிறேன்.
என்று மனம் உடைந்து கண்ணீர்கள் சிதற எழுதியவள் முதலில் எழுதியக் கவிதையை திருப்பிப் பார்க்க எத்தனித்த
மனதை அடக்கி டைரியை மூடி ட்ராலியில் வைத்தாள்.

பின் எழ நினைத்தவளுக்கு அப்போது தான் உடம்பு வலி அவளுக்கு மயக்கத்தைத் தருவது தெரிந்தது. செவி
எல்லாம் அடைப்பது போல உணர்ந்தவள் மெல்லமாகத் தள்ளாடியபடியே வந்து
படுக்கையில் ஓரத்தில் படுத்தாள். அடுத்து அவளைச் சிந்திக்க விடாமல் ஆட்கொண்டது தூக்கமா மயக்கமா என்று அவளுக்கேத் தெரியவில்லை.

அடுத்த நாள் காலை எழும்போதும் கௌசிக்கு முடியவில்லை.. பயத்திலும்
உடல் வேதனையோடு சேர்ந்து மன வேதனையிலும் காய்ச்சல் வந்து அவளைப் பிடித்திருந்தது. எழுந்து
உட்கார்ந்தவள் குளியல் அறைக்குள் புகுந்து முகத்தைக் கழுவி பல் துலக்கி விட்டு வெளியே வர அப்போது தான் குரு உள்ளே நுழைந்தான். காலை எழுந்தவள் அவன் இருக்கிறானா இல்லையா என்று கூடப் பார்க்கவில்லை.. பார்க்கவும் அவள்
விரும்பவில்லை.

அவளைப் பார்த்தவன் ஒரு ஏளனப் பார்வையோடு அவளைப் பார்த்துவிட்டு
குளியல் அறைக்குள் புகுந்து விட்டான். கௌசிக்குத் தான் காய்ச்சல் அதிகம் போல இருந்தது. உடலில் காய்ச்சலின்
சூடு ஏறுவதை அவளால் உணர முடிந்தது.

ட்ரெஸிங் ரூமிலிருந்து வெளியே வந்தவனிடம் வாய் விட்டுக் கேட்டேவிட்டாள். “எனக்கு காய்ச்சல் அடிக்குது.. என..” என்று அவள் சொல்லி
முடிப்பதற்குள் அவன் ஆரம்பித்தான்.

“அதுக்கு நான் என்ன பண்ணனும்” என்று
இளக்காரமாகச் சிரித்தபடிக்
கேட்டவனிடம் அவள் பதில் பேசவில்லை. மனதில் வந்த கெட்ட வார்த்தைகளால்
அவனை உள்ளேயே திட்டித் தீர்த்தவள் குளியல் அறைக்குள் புகுந்து விட்டாள்.

குளித்து முடித்து அவள் ட்ரெஸிங் ரூமிலிருந்து வெளியே வந்த போது அவள் செல்போன் அடிக்க அதைச்
சென்று அவள் எடுப்பதற்குள் குரு எடுத்துவிட்டான். எடுத்தவன் “ஆங்.. சொல்லுங்க பெரியம்மா” – குரு.

போனில் பேசிய ஜெயாவின் குரல் நன்கு கேட்டது கௌசிக்கு.. அத்தையின் குரல்
கண்ணீரை வரவழைக்க அதை
அடக்கியபடி நின்றவள் அவனிடம் இருந்து போனைப் பறிக்க முயற்சி செய்தாள்.
ஆனால் அவளை ஒரே பிடியில்
அடக்கியவன் அவளைப் பேசாமல் நிற்க வைத்தான். காய்ச்சல் உடலில் அவளாலும் எதுவும் போராட முடியவில்லை.

“கௌசி இருக்காளாபா” – போனின் வழியாக ஜெயாவின் குரல்.

“அவள் குளிச்சிட்டு இருக்காளே பெரியம்மா” என்று தேன் ஒழுகப் பேசினான்.

“ஓ…. இல்லை நாங்க அங்க வரோம்.. அதான்..” என்று அவர் சொல்லி முடிப்பதற்குள் அவன் பேசினான்.. “பெரியம்மா.. நாங்க வெளியில போறோம் பெரியம்மா.. அப்புறம் பிசினஸ்
சைட்ல விருந்து அதுஇதுன்னு நிறைய இருக்கு” என்றவன் “நீங்கள் இப்போது வந்தாலும் சரியா பேச முடியாது..
பேசாமல் ஒரு நான்கு நாள் கழித்து வாங்க” என்று சொல்ல ஜெயாவின் குரலே கம்மி ஆகிவிட்டது.

பிறகு என்னப் பேசினாரோ சிரித்தபடி போனை வைத்தவன் அதைத் தன்
பாக்கெட்டில் போட்டுக் கொண்டான். போனைக் கௌசி கேட்கவும் இல்லை.
வீட்டினர் யாரிடமாவது பேசினால் அல்லது யாராவது இங்கு வந்தால் தன் நிலை அறிந்து கொள்வார்கள் என்று
எண்ணியவள் எதுவும் பேசவில்லை. “கீழே போலாம்” என்றவன் அவள் கையைப் பிடித்து தரதரவென்று
இழுத்துப் போகாத குறையாக இழுத்துக் கொண்டு போனான்.

கீழே வந்தவர்களிடம் நீலவேணி “குரு வாப்பா சாப்பிடலாம்” என்று அழைக்க
கௌசியை அவர் நிமிர்ந்தும்
பார்க்கவில்லை. குருவும் அவளின் கையை விட்டுவிட்டு போய் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தான்.

சாப்பாட்டை செய்து விட்டு ஓயாமல் கூப்பிடும் அப்பா அத்தைகளின் முகம் நியாபகம் வர உதடு துடித்தது கௌசிக்கு.
கௌசி பசி தாங்க மாட்டாள் என்று சொல்லும் மாமாக்களின் முகமும்
நியாபகம் வந்தது. தன் சுயமரியாதையை அந்த அம்மாளிடம் விடவும் அவளுக்கு மனம் இல்லை.

பேசாமல் சென்று சோபாவில் அமர்ந்து நியூஸ் பேப்பர் ஒன்றை கையில் எடுத்துக்
கொண்டாள். ஆனால் ஒரு எழுத்தைக் கூடப் படிக்கவில்லை. கண்களில் நீர்
திரையிட்டு பேப்பரில் இருந்த
எழுத்துக்களை மறைத்தது.

“ஏம்மாமா… நீ சாப்பிடவில்லையா?” என்றபடி பூஜை அறையில் இருந்து வந்த
குருவின் அப்பா தேவராஜ் கேட்டார்.

ஏதோ தனித்து விடப்பட்டது போல இருந்தவளுக்கு அவரின் பரிவான குரல் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.
“இல்லை அங்கிள்… நான்” என்று அவள் சமாளித்து முடிப்பதற்குள் அவர்
முகத்தைக் கவனித்தவர் அவளிடம் கேள்வியை தொடுத்தார்.

“ஏன் மா மூஞ்சி லாம் சிவந்திருக்கு?” என்று வினவ குருவும் அவன் அன்னையும் அப்போது தான் டைனிங்
ஹாலில் இருந்து அவளைத் திரும்பிப் பார்த்தனர்.

“அது.. அதுவந்து அங்கிள் ரொம்ப ஃபீவரிஸ்-அ இருக்கு” – கௌசி.

“சரி.. வாம்மா.. வந்து சாப்பிடு.. அப்புறம் நான் மாத்திரை தரேன்.. சாப்பிட்டு ரெஸ்ட்
எடுத்துக்கோ” என்று கூறியவர்
அவளையும் சாப்பிட அழைத்தார்.

“கௌசி இங்க உட்காரு” என்று உரிமை நிலைநாட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் அவள் கையைப் பற்றி குரு அவளை அவன் பக்கத்தில் உட்கார
வைத்தான். பெரியவர்கள்
முன்னிலையில் எதுவும் காட்ட
மனமில்லாமல் உட்கார்ந்தாள். அவன் சாப்பிட்டு விட்டு எழுந்து கை கழுவச் செல்ல.. அப்போது தான் ஒரு வாயை எடுத்து வாயில் வைத்தாள்.

திரும்பி வந்து அவள் பக்கத்திலேயே உட்கார்ந்தவன் “ஹே.. இதையும் சாப்பிடு
உடம்புக்கு நல்லது” என்று அவுலை எடுத்து அவள் தட்டில் வைத்தான். வந்தக்
கோபத்தைக் கட்டுப்படுத்தியவள் எதுவும் பேசாமல் உண்ண “இந்தா.. பாயில்ட் எக்.. இதையும் சாப்பிடு.. உடம்புக்கு நல்லது”
என்று அவள் உடம்பையே அவன் குத்திக் காட்டிச் சொல்ல கௌசிக்குப் புரிந்துவிட்டது.

அவனை ஏறிட்டுப் பார்க்க “புரிந்ததா? நீ சாப்பிட்டு நல்லா உடம்ப வச்சு இருந்தா தானே எனக்கு நல்லது” என்று சொல்ல வாயில் போன அவன் வீட்டுச் சாப்பாடு உமட்டலைத் தர எழப்போனவளை கையால் பற்றி பார்வையாலேயே மிரட்டி
அமர வைத்துவிட்டான்.

ஒவ்வொரு வாயும் சாப்பிடும் போது விஷத்தைப் போல இருந்தது அவளுக்கு. அவள் அனைத்தையும் சாப்பிட்டு முடித்த பின்னரே அவளை விட்டான் அவன். அவன் சென்ற பின் அறைக்கு வந்தவள்
ஓங்கரித்துக் கொண்டு பாத்ரூமை நோக்கி ஓடினாள். சாப்பிட்டது எல்லாம் வந்துவிட வலிமையில்லா உடலையும்
மனதையும் வைத்திருந்தவளுக்கு கண்ணீர் வந்தது.

யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்டு கண்களைத் துடைத்துக் கொண்டு வெளியே வந்து கதவைத் திறந்தவள்
பணிப் பெண் நிற்பதைப் பார்த்து “என்ன?” என்று வினவினாள்.

“பெரியய்யா உங்க கிட்ட இந்த
மாத்திரையைத் தர சொன்னாங்க” என்று
காய்ச்சலுக்கு உண்டான மாத்திரையுடன் தண்ணீர் பாட்டிலையும் எடுத்து வந்தாள்.

“ம்ம்” – என்ற தலை அசைப்போடு மட்டும் வாங்கிக் கொண்டவள் அந்தப்
பெண்ணைத் திருப்பி அனுப்பிவிட்டு கதவைச் சாத்திட்டு… மாத்திரையைப்
போட்டு தண்ணீரை ஊற்றி முழுங்கினாள்.

மாத்திரையைப் போட்டிவிட்டுப் படுத்தவள் மதியம் 3 மணிக்கே எந்திரித்தாள். பசி வயிற்றைக் கிள்ள போய் சாப்பிடவும்
அவளுக்குப் பிடிக்கவில்லை.. இந்த வீடே மூச்சை முட்டுவது போல இருந்தது அவளுக்கு. தன்னுடைய லேப்டாப்பை
எடுக்க நினைத்து ட்ரெஸிங் ரூமிற்குச் சென்றவள்.. ட்ராலியில் இருந்த தன்
லேப்டாப்பை எடுத்தாள்.

எடுத்துவிட்டுத் திரும்ப எத்தனித்தவள் ஏதோ நெருட திரும்பி குருவின் துணிகள்
இருந்த வார்ட்ரோபைப் பார்த்தாள். அது திறந்து கிடக்க அங்கு வைக்க
சம்மந்தமில்லாத டப்பாக்கள் மற்றும் சில பேப்பர்ஸைப் பார்த்தவள் லேப்டாப்பை
ட்ராலியின் மேல் வைத்துவிட்டு அந்த வார்ட்ரோபைச் சோதித்தாள். அதில் இருந்த மாத்திரைகளைப் பார்த்தவளுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் அங்கு இருந்த சில ரிப்போர்ட்ஸை எடுத்துப் பார்த்தவள் அதிர்ச்சியின் உச்சிக்கே
சென்று விட்டாள். என் திமிர் செயலுக்கா இவன் இப்படி நடக்கிறான் என்று
தெரிந்தவளுக்கு அவனின் உண்மைகள் அவனது இடத்தில் பல்லைக் காட்டிக்
கிடந்தன.

ஆம் அது குருவின் ரிப்போர்ட் தான்.

அவன் சைக்காட்ரி டாக்டரிடம்
ஒருவருடமாக எடுத்து வரும்
சிகிச்சைக்கான ரிப்போர்ட். மாதாமாதம் போய் வந்த ஒவ்வொரு ரிப்போர்ட்ஸையும் பார்த்தவளுக்கு அவன்
இன்னும் குணமாகவில்லை என்று மட்டும் தெளிவாகத் தெரிந்தது. தலையில் கை
வைத்து நின்ற இடத்திலிருந்து அப்படியே மடங்கி உட்கார்ந்து விட்டாள்.

அவள் ஒன்றும் குருவைப் பற்றி
யோசிக்கவில்லை. சினிமாக்களில் வருவது போல அவனைத் திருத்திவிடும்
எண்ணமும் அவளுக்கு இல்லை.. ஆசைப்பட்டு மணந்து வந்தவனாக இருந்தாள் திருத்தலாம்.. அல்லது
அவளின் உணர்வுகளின் எண்ணத்தைப் புரிந்து நடந்தவனாக இருந்திருந்தால்
உறுதுணையாக நிற்கலாம்.

ஆனால் இவனோ?

அவளின் உணர்வுகளைச் சாகடித்து மிருகமாய் அல்லவா நேற்று நடந்து கொண்டான். அவனிடம் எப்படி அவளுக்குக் கழிவிரக்கம் தோன்றும். ஒரு
வருடமாய் சிகிச்சை பெற்றும் இப்படி இருப்பவனை யார் திருத்த முடியும். இப்போது கௌசி யோசித்துக் கொண்டு
இருந்தது அவள் வாழ்க்கையைப் பற்றி
தான். இனி என்ன செய்வது என்பதை விட இனி என்ன செய்ய முடியும் என்று
யோசித்தவளுக்கு தன் வாழ்க்கை இனி அவ்வளவு தான் என்று முடிவு செய்தாள்.

சைக்கோ என்று தெரிந்தும் அவனிற்குத் திருமண ஏற்பாடு செய்த அவனின் பெற்றோரின் மீது அவள் கோபம் திரும்பியது. நேராக அதை எடுத்துக்
கொண்டு கீழே வந்தாள். குருவின் அப்பா மட்டுமே அங்கு இருக்க அவரின் முன்னால் வந்து நின்றவள் அந்தப்
பேப்பர்ஸை அவரிடம் நீட்டி “என்ன அங்கிள் இது?” என்று வினவினாள்.

அவளைப் பார்க்க முடியாமல் முகம் அவமானத்தில் கன்றி தலைக் குனிந்திருந்தவரிடம் “உங்க பெண்ணுக்கு இப்படி ஒரு மாப்பிள்ளை
பாத்திருப்பீங்களா? இல்லை
தெரிந்திருந்தால் கட்டித் தான்
கொடுத்திருப்பீங்களா?” என்று அவரிடம் கோபமாகக் கேட்டாள்.

“உங்கிட்ட கொஞ்சம் பேசணும்மா.. அந்த ஆபிஸ் அறைக்கு வா” என்றுவிட்டுப்
போக கௌசி அவரின் பின் சென்றாள்.

உள்ளே சென்று அவருக்கு எதிராக உட்கார்ந்தவள் “சொல்லுங்க அங்கிள்.. என்ன சொல்லி சமாளிக்கப் போறீங்க?” என்று விரக்தியுடன் வந்த நக்கலில்
கேட்டாள்.

“அது பொய் என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் இது எனக்கே கல்யாணத்திற்கு ஒரு வாரம் முன் தான் தெரியும்.. நீ சந்தேகமாகப் பார்த்தாலும்
அது தான் உண்மை.. என் மனைவி மகள் யாருக்குமே தெரியாது.. நான் சுயநலமாக
நடந்து கொண்டேன் தான்.. ஆனால் நீ இதை திருத்திவிடுவாய் என
நினைத்தேன் மா” என்றவரின் குரல் கரகரத்தது.

“உங்க மகன்.. குடிகாரனோ ஊதரியோ இல்லை திருத்த.. ஹீ இஸ் எ பேஷன்ட்.. அதுவும் இன்னும் ட்ரீட்மெண்ட் முடிஞ்சு
குணமாகத பேஷன்ட்.. என்
வாழ்க்கையையே நீங்க அழிச்சுட்டீங்க” என்று கோபமாகப் பேசியவளிடம் எழுந்து வந்தவர்.. அவள் எதிர்பாராத சமயம் காலில் விழுந்து விட்டார்.

இதை எதிர்ப்பார்க்காத கௌசியும் எழுந்து பின்னால் நகர்ந்து விட்டாள். “உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன்மா.
தயவு செய்து வெளியில் சொல்லி விடாதே” என்று கெஞ்ச கௌசி அவருக்கே திருப்பி அடித்தாள்.

“அதை நான் தான் சொல்ல வேண்டும்.. தயவு செய்து நீங்கள் இந்த உண்மை என்
வீட்டில் தெரியாமல் பார்த்துக்
கொள்ளுங்கள்..” என்றவள் கண்ணீரை விட்டபடி அந்த அறையை விட்டு வெறியேறி மேலே குருவின் அறைக்குள்
புகுந்துவிட்டாள்.

எவ்வளவு அதிர்ச்சியையும் வலிகளையும் தான் ஒருத்தி தாங்குவாள்?

அன்று வந்த இரவிலும் முந்தைய இரவைப் போலத் தொடர கௌசி கதிகலங்கிப் போனாள். ஒரு பெண்ணை
எப்படி எல்லாம் உடலாலும் மனதாலும் நோகடிக்க வேண்டுமோ அதைச் செய்தான் குரு.. கிட்டத்தட்ட டார்ச்சர் செய்தான் அவளை.. மேலும் தொடர்ந்த இரண்டு நாட்களில் உடலும் மனமும்
ஓய்ந்து சோர்ந்தது. ஒரு நாள் மாலை வந்தவனைப் பார்க்க அஞ்சி அவள் முகத்தைத் திருப்ப “நான் இரண்டு நாள்
பிசினஸ் மீட்டா வெளில போறேன்.. பார்ராரா.. ரொம்ப சந்தோஷமா.. மூஞ்சியெல்லாம் ப்ரைட் ஆகிற மாதிரி இருக்கு..” என்றவன் ஒரு மர்மப்
புன்னகையுடன் தொடர்ந்தான். “நான் இரண்டு நாள் அப்புறம் வந்திருவேன்.. நம்ம ஹனிமூன் போகப் போறோம்.. புதுசா கல்யாணம் ஆயிருக்குல” என்று சிரித்தவனைப் பார்க்கச் சகிக்கவில்லை  கௌசிகாவிற்கு.

பிறகு கிளம்பிச் சென்று விட்டான்.. வீட்டினரின் நியாபகம் வந்து அவளின்
இதயத்தைத் துளைத்து எடுத்தது. அப்பாவிடமே சென்று வாழ்நாள் முழுதும்
அவர் பாதுகாப்பிலேயே வாழ மனம் துடித்தது. மேலும் இந்த மூன்று நாட்களில் குரு அவளின் உடம்பிற்கு அழைந்ததும் அவளின் அழகைப் பற்றி பேசிப்பேசி
அவளை விக்னேஷுடன் சேர்த்தி வைத்து இழிவாகப் பேசியதும் காதைப் புளிக்க
வைத்ததும் அவளால் வாழ்க்கையில் மறக்க முடியாத நரக வேதனை. கல்யாண
வாழ்க்கையில் எவ்வளவு கனவுகளைச் சுமந்து கட்டியவளுக்கு இப்போது அந்த
வாழ்க்கையே கசந்தது. மேலும் அவன் ஹனிமூன் என்று சொல்லிவிட்டுப் போக
அவளுக்கு உயிரையே மாய்த்துக் கொள்ளலாம் என்று இருந்தது. போகிற இடத்தில் பேசாமல் செத்துவிடலாம்
என்று எல்லாம் தோன்றியது.

யோசித்துக் கொண்டு இருந்தவள் அப்போது தான் மணியைப் பார்த்தாள்.. நைட் பதினொன்றரை ஆகி இருந்தது. படுத்தவளுக்கு வழக்கம் போலத் தூக்கம்
வராமல் பல நியாபகங்கள் வந்து தொண்டையை அடைத்தது. தான் யார் கட்டுப்பாட்டிலும் இல்லாமல் தன் வாழ்வில் சுதந்திரமாய்த் திரிந்ததை எண்ணியவளுக்கு கண்களில் இருந்துக்
கண்ணீர் வழிந்தது. யோசித்து
யோசித்தே காலை ஏழு மணி ஆகிவிட்டது அவள் தூங்கவும் இல்லை.

தன் சிந்தனைகளில் இருந்தவளை ஓஓஓஓ வென்று நீலவேணி (குருவின் அம்மா) கத்திய கதறல் பதறி அடித்து எழ வைத்தது. பயந்து எழுந்தவளை மேலும் அவர் கத்திய கத்தல்கள் காதில் விழ
அவசரமாக எழுந்து கீழே சென்றாள். கீழே அவசரமாக வந்தவள் தன்னை நீலவேணி ஆத்திரமாக முறைப்பதைக்
கண்டு அப்படியே நின்றாள்.

எதற்கு இந்த முறைப்பு? இப்படி ஒரு கோபம்?

Leave a Reply

error: Content is protected !!