நிலா பெண் 15

நிலா பெண் 15

நிலா பெண் 15
 
பொழுது பொல பொலவென்று புலர்ந்தது. சூரியன் தன் பொன் கதிர்களை அந்த ரூமிற்குள் செலுத்த கனமாக இருந்த இமைகளைத் திறந்தாள் துளசி.
 
அருகே… நிதானமான சுவாசத்தோடு உறங்கி கொண்டிருந்தான் ஆதி. நெற்றியில் முன் கேசம் புரள தலையணையை அணைத்தபடி சயனித்திருந்தான்.
 
மெதுவாக எழுந்தவள் தன் தலையை இரு கைகளாலும் தாங்கி கொண்டாள். கொஞ்சம் பாரமாக இருந்தது. நேற்று இரவு என்ன நடந்தது? எவ்வளவோ யோசனைப் பண்ணியும் எதுவும் ஞாபகம் வரவில்லை.
 
ரூமிற்குள் வந்தது நினைவிருந்தது. கணவன் தன் சேலை முந்தானையைச் சரி செய்தது கூட நினைப்பில் இருந்தது. அதன் பிறகு என்ன நடந்தது?!
 
பாத்ரூமிற்குள் நுழைந்தவள் குளியலை முடித்துக்கொண்டு வெளியே வந்தாள். ஆதி இன்னும் உறக்கத்தில்தான் இருந்தான். கீழே இறங்கி வந்தவளை ஷிவானி பிடித்துக்கொண்டாள்.
 
“வாங்க துளசி மேடம்!” விசித்திரமான முறையில் அவள் வரவேற்கவும் துளசிக்கு ஒன்றும் புரியவில்லை. 
 
“நேத்து நைட் என்ன ஆச்சு?” துளசியின் காதோரமாக வந்தவள் கண் சிமிட்டிக் கிசுகிசுக்கவும் துளசிக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. நேற்று இரவு என்ன நடந்ததென்று அவளுக்கே தெரியாதே!
 
“ஹா… ஹா… என்ன புதுப்பொண்ணு இந்த முழி முழிக்குது? எங்க என்னோட யூகே அத்தான்? டபுள் ஸ்ட்ராங்ஙா முன்னேற்பாடெல்லாம் பண்ணினவரு நேத்து நைட் என்ன பண்ணினாராம்?” ஷிவானி மேலே மேலே நேற்றைய இரவைப் பற்றி கேலி பண்ண துளசிக்கு லேசாக நிலைமை புரிந்தது.
 
‘இவள்தான் ஏதோ பண்ணி இருக்க வேண்டும்!’ அதையே பெண்ணும் சொன்னாள்.
 
“தூக்க மாத்திரை நல்லாத்தான் வேலை செஞ்சிருக்குன்னு உங்க‌ முகத்தைப் பார்த்தாலே நல்லா தெரியுது துளசி, ஹா… ஹா…” சத்தமாக அவள் சிரிக்க துளசிக்கு ‘ஐயோ’ என்றிருந்தது.
 
‘ஏன் இந்த பெண் இப்படிப் பண்ணியது? அதனால்தான் தனக்கு அத்தனைத் தூக்கம் வந்ததா?’ தன் இல்லறத்தின் இனிதான ஆரம்பத்தில் விளையாட, அவளுக்கு இடம் கொடுக்க மனம் இல்லாமல்… துளசி வேறொரு பதில் சொன்னாள். அதைக் கேட்ட மாத்திரத்திலேயே ஷிவானியின் முகம் சொத்தென்று ஆகிப்போனது.
 
“இந்த அத்தானை… இருங்க வர்றேன்!” பல்லைக் கடித்தபடி கோபமாக சொல்லிவிட்டு தட்தட்டென்று படிகளில் ஏறி போனாள். துளசி ஒரு புன்னகையோடு காஃபி தயாரிக்கப் போய்விட்டாள்.
 
“அத்தான்!” அதிரடியாக ஆதியின் ரூமிற்குள் வந்த  ஷிவானி சத்தம் போட்டாள். ஆதி அசையவில்லை. தலையணை ஒன்றை எடுத்தவள் அவன் மீது இரண்டடி போட்டாள்.
 
“அத்தான்!” மீண்டும் அதே ஆர்ப்பாட்டமான அழைப்பு. திடுக்கிட்டு விழித்தான் ஆதி.
 
“என்ன பண்ணி வெச்சிருக்கீங்க?” கோபமாக தன் எதிரே நின்ற அத்தை மகளை ஒரு தினுசாக பார்த்தான் ஆதி.
 
இரவு முழுவதும் தூங்கும் தன் மனைவியின் அழகை ரசித்துக்கொண்டே இருந்தவன் தாமதமாகவே உறங்கி இருந்தான். 
 
நியாயமாக பார்த்தால் ஷிவானி மேல் அவன்தான் பாய்ந்திருக்க வேண்டும். இது என்ன இங்கே தலைகீழாக எல்லாம் நடக்கிறது!
 
“உம்மேல கொலை வெறியில இருக்கேன் ஷிவானி, ஓடிடு!”
 
“ரொம்பத்தான்! அப்பிடி என்ன அவசரம் அத்தான் உங்களுக்கு? நான் ஒருத்தி அவ்வளவு தூரம் ப்ளான் பண்ணி எல்லாம் நடத்தியிருக்கேன், அதுக்காகவாவது நீங்க கொஞ்சம் அடக்கி வாசிக்கப்படாதா?” அநியாயமாக எகிறியது பெண்.
 
“இப்போ என்ன ஆகிடுச்சுன்னு நீ குதிக்கிற?”
 
“ஆஹாஹா! என்ன நடிப்புடா சாமி! இப்பதான் உங்க துளசியை கிச்சன்ல பார்த்தேன், அவங்க எங்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டாங்க.”
 
“ஓ…” ஆதிக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்படி எதை துளசி இவளிடம் சொன்னாள்?! இருந்தாலும் பேச்சை நீட்டினான். எதுவாக இருந்தாலும் அவள் வாயிலிருந்தே வரட்டுமே!
 
“எல்லாத்தையும் சொல்லிட்டாளா உங்கிட்ட? இரு, அவ இன்னைக்கு வரட்டும்!”
 
“இங்கப்பாருங்க அத்தான், பாவம் துளசி, உங்களை மாதிரி கிடையாது, ரொம்ப நல்ல டைப், அவங்களை ஏதாவது சொன்னீங்க… அப்புறம் எனக்குக் கெட்ட கோபம் வரும் சொல்லிட்டேன்.”
 
“அப்போ அவ பண்ணினது சரின்னு சொல்றியா?” நடக்கும் நாடகம் என்னவென்று தெரியாமலேயே நடிகனானான் ஆதி.
 
“என்ன தப்புங்கிறேன்? எங்கிட்டதானே சொன்னாங்க, நான் பண்ணின கலாட்டா வொர்க்கவுட் ஆகலைன்னு சொன்னாங்க, அது தப்பா?” 
 
“தப்பில்லையா?” ஆதிக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. ஷிவானியின் கலாட்டா வேலைக்காகாத அளவு அப்படி இங்கே என்ன நடந்துவிட்டதாம்?! உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.
 
“தப்பே இல்லை, ஆனா நைட் விட்டதைக் காலங்காத்தால வெவஸ்தையே இல்லாம புடிச்சீங்க பாருங்க… அதுதான் தப்பு, அதுதான் தப்பு.” மீண்டும் மாறி மாறி கையிலிருந்த தலையணையால் ஷிவானி அடிக்க ஏதோ வானலோகத்தில் மிதப்பவன் போல படுத்திருந்தான் ஆதி.
 
‘அடேயப்பா! துளசியா இந்த போடு போட்டிருக்கிறாள்?! தன்னிடம் மட்டும்தான் அந்த அமைதியும் நாணமுமா? மற்றவர்கள் என்றால் ஒரு கை பார்த்துவிடுவாளா?!’ 
 
ஷிவானி முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு வெளியே போய்விட்டாள். அவள் கலாட்டா நமத்துப்போன கோபம் அவளுக்கு.
 
‘கணக்கு டீச்சர் இன்னைக்கு வரட்டும், அவளா நானான்னு பார்த்திடுறேன்!’ வாய்விட்டு சிரித்த ஆதி குளியலை முடித்துக்கொண்டு வெளியே வந்தான். 
 
துளசி அப்போதுதான் கையில் காஃபியோடு உள்ளே வந்து கொண்டிருந்தாள்.
 
“எந்திரிச்சுட்டீங்களா?” ஏதோ பேச வேண்டும் என்பதற்காக பேசியவள் காஃபியை அவனிடம் நீட்டினாள்.
 
“காஃபி.”
 
“குட்மார்னிங் துளசி.” அவன் பார்வை அவளைத் துளைத்தது.
 
“குட்மார்னிங்.” பெண்ணின் கண் நிலம் பார்த்தது. ஏதோ தவறு செய்த குழந்தைப் போல திருதிருவென விழித்தாள். 
 
காஃபியை அங்கிருந்த டேபிளில் வைத்தவன் அவளைச் சுவரோடு சேர்த்துச் சிறை செய்தான். துளசி இந்த தாக்குதலை எதிர்பார்த்திருந்தாள். 
 
“ஷிவானிக்கிட்ட என்ன சொன்ன?” 
 
“காஃபி சூடா இருக்கும்போதே குடிக்கலாமே.”
 
“ஆமா, இங்க எல்லாமே சூட்டோடதான் நடக்குது பாரு, ஃபர்ஸ்ட் நைட்டே ஆறிப்போச்சு, இதுல காஃபியை இவ சூடா குடுக்குறாளாம்!” 
 
“நான் எதுவும் பண்ணலை, எல்லாம் உங்க அத்தைப் பொண்ணோட வேலை.”
 
“அது எனக்குத் தெரியும், இப்ப என்னோட அத்தைப் பொண்ணுக்கிட்ட என்ன சொன்னே? அதைச் சொல்லு முதல்ல நீ.”
 
“அது… ஷிவானி…”
 
“மேட்டருக்கு வா.”
 
“ரொம்ப கேலி பண்ணினாங்க.” அவள் சிணுங்கினாள்.
 
“அதுக்கு மேடம் என்ன சொன்னீங்க?”
 
“நைட்டை ஷிவானி வீணடிச்சுட்டா… பரவாயில்லை நமக்கு மார்னிங்கும் வசதிதான்னு உங்கத்தான்…” அதற்கு மேல் அவளைப் பேச விடாமல் கட்டிலில் அவளோடு சரிந்தான் ஆதி.
 
“உனக்கு மார்னிங்கும் வசதிதான்னா எனக்கு நோ ப்ராப்ளம் துளசி.” 
 
“ஐயையோ! நான் அந்த அர்த்தத்துல சொல்லலை!”
 
“நீ எந்த அர்த்தத்துல சொல்லி இருந்தாலும் எங்காட்டுல இப்ப மழைதான், அந்த லூசு ஏதோ பண்ணினாளாம், அதுக்கு இந்த லூசு குறட்டை அடிச்சுத் தூங்கினாளாம், என்னடி விளையாடுறீங்களா?” 
கோபத்தோடு கத்தியவன் சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தமே இல்லாமல் அந்த பட்டிதழ்களில் தன் இதழ்களைச் பதித்தான். துளசி செய்வதறியாது மயங்கி கிடந்தது.
 
தொழிலிலும் குடும்பத்திலும் பலதரப்பட்ட நிலைமைகளைச் சமாளித்திருந்த ஆதிக்கு, இப்போது இந்த நிலைமையைச் சமாளிக்க இயலவில்லை, தெரியவும் இல்லை!
மூளை… போதும் நிறுத்து என்று பலமுறைக் கட்டளைப் போட்டது.
 
ஆனால் ஆசைக் கொண்ட மனது அதை அமுல்படுத்த வெகுவாக சிரமப்பட்டது.
 
ஒரு கட்டத்திற்கு மேல் துளசியே அவனை மெதுவாக விலக்க முயன்றாள். ஆனால் ஆதி எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. அவன் பிடி உடும்பாக இருந்தது.
 
“ஆதீ…” வெளியே பாட்டியின் குரல் சத்தமாக கேட்கவும் மனமே இல்லாமல் விலகினான் ஆதி. முகத்தில் அதிருப்தி தெரிந்தது.
 
“தாலி கட்டின பொண்டாட்டிக்கு முழுசா ஒரு முத்தம் குடுக்க முடியுதா!” அவன் புலம்பி கொண்டிருக்கும் போதே பாட்டியின் குரல் மீண்டும் ஒலித்தது.
 
“ஆதீ…”
 
“இதோ வர்றேன் பாட்டி.” கட்டிலில் கிடந்த படியே பாட்டிக்குப் பதில் சொன்னவன் மனைவியைப் பார்த்தான்.
 
“அப்ப இப்போ குடுத்தது முழுசு இல்லையா?” இது துளசி. பெண்ணின் கேள்வியில் ஆதி கடகடவென்று சிரித்தான்.
 
“முழுசு எப்பிடி இருக்கும்னு இன்னைக்கு நைட் காட்டுறேன் டார்லிங்.” சொல்லிவிட்டு எழுந்தவன் காபியை எடுத்துக்கொண்டான்.
 
“உனக்கு?”
 
“ஏற்கனவே ஆச்சு.”
 
“என்னை விட்டுட்டா?” இப்போது அவள் புன்னகைத்தாள்.
 
“வேற கொண்டு வரட்டுமா? ஆறிப்போயிருக்கும்.”
 
“பரவாயில்லை.” காஃபியை குடுத்த படியே அவன் கீழிறங்கி போனான். துளசி அப்படியே கட்டிலில் கொஞ்ச நேரம் படுத்துக் கிடந்தாள். மனது பொங்கி வழிந்தது.
 
***
 
ஆத்ரேயன் கீழே வந்தபோது தாத்தா, பாட்டி இருவரும் சோஃபாவில் அமர்ந்திருந்தார்கள். பாட்டியின் கையில் கவர் ஒன்று இருந்தது.
 
“துளசி எங்க ஆதி? அவளையும் கூப்பிடு.”
 
“இப்போ வருவா பாட்டி, நீங்க சொல்லுங்க.”
 
“ஆதி, நம்பிக்கு ஒரு நல்ல வரன் வந்திருக்கு.”
 
“அப்பிடியா?!”
 
“ஆமா, அந்த பயல்கிட்ட கேட்டா உங்களுக்கெல்லாம் சம்மதம்னா நேக்கும் சம்மதம்தான்னு சொல்றான்.” குறைப்பட்ட படி கையிலிருந்த கவரை ஆதியிடம் நீட்டினார் பாட்டி. 
 
கவரை பிரித்தவன் உள்ளிருந்த ஃபோட்டோவை வெளியே எடுத்துப் பார்த்தான். துளசியும் அப்போது கீழே இறங்கி வர அவளிடம் ஃபோட்டோவை நீட்டினான் ஆதி.
 
துளசியின் முகம் மலர்ந்து போனது. பெண் அழகாக லட்சணமாக இருந்தது. நம்பிக்கு வெகு பொருத்தம்!
 
“நல்ல வளமான குடும்பம், ஆச்சாரமான மனுஷா துளசி.”
 
“நம்பிண்ணாக்கு நல்ல பொருத்தமா இருக்கும் பாட்டி.”
 
“நோக்குப் பிடிச்சிருக்கா துளசி?” ஆர்வமாக கேட்டார் பாட்டி.
 
“ஆமா பாட்டி.”
 
“ஏன்னா? அப்போ அவாளுக்குச் சமாச்சாரம் சொல்ல வேண்டாமோ?” தாத்தாவிடம் கேட்டார் பாட்டி.
 
“மத்தவங்க எல்லாரும் என்ன சொல்றாங்க பாட்டி?”
 
“எல்லாருக்கும் பிடிச்சிருக்கு துளசி, ஏன்னா… நீங்க என்ன சொல்றேள்?”
 
“பேஷா பண்ணிடலாம்மா.” தாத்தாவும் சம்மதம் சொல்லிவிட பாட்டிக்கு அவ்வளவு சந்தோஷம்.
 
“துளசி, இன்னைக்கு உங்க ஆத்துல எல்லாருக்கும் விருந்து, சங்கரபாணி சும்மா சக்கரம் மாதிரி சுழலுறான், நீங்களும் சீக்கிரமா ரெடியாரேளா.”
 
“எதுக்கு பாட்டி இதெல்லாம்?”
 
“இதெல்லாம் சங்கரபாணியோட சம்பிரதாயம் ஆதி, இன்னைக்கு நீயும் துளசியும் முறைப்படி மறுவீட்டு விருந்துக்குன்னு போயி மாமனார் ஆத்துல ரெண்டு மூனு நாள் தங்கணுமாம், அவனோட ஆசை அது, எதுக்குத் தடுக்கிறே?”
 
“பால்கனியில நின்னு பார்த்தா தெரியுற மாமனார் வீட்டுக்கா?”
 
“அதாலதான் அதையெல்லாம் நாங்க பெரிசு பண்ணலைப்பா, இருந்தாலும் ஒரு நடை விருந்துக்குன்னு நீங்க போறதுதான் முறை ஆதி.”
 
“சரி பாட்டி.”
தாத்தாவும் பாட்டியும் அத்தோடு கிளம்பி விட்டார்கள். வீட்டிலிருந்த மற்றவர்களும் துளசியின் வீட்டுக்குப் போயிருந்ததால் வீடு அமைதியாக இருந்தது.
 
“இன்னைக்கு எங்க வீட்டுல தங்கலாமா?” தயங்கியபடியே கேட்டாள் துளசி.
 
“ஏன் துளசி?!” ஆதியின் குரலில் ஆச்சரியம்.
 
“இல்லை… சும்மாதான்…” மனைவியின் முகத்தையே பார்த்திருந்த ஆதி அது எதையோ சொல்லத் தயங்குவதைக் கண்டு எழுந்தான். அவள் பக்கத்தில் வந்தவன் அவளை விசித்திரமாக பார்த்தான்.
 
“எதையோ சொல்லத் தயங்குறே! என்ன துளசி?”
 
“ஒன்னுமில்லை… சும்மாதான்…” திரும்பி மாடிப்படிகளில் கால் வைக்கப் போனவளை ஆதியின் கரம் தடுத்தது.
 
“நீ சும்மா எல்லாம் பேசுற ஆள் கிடையாது, எதுவோ உம்மனசுல இருக்கு, வெளிப்படையா பேசினாத்தானே துளசி என்னன்னு எனக்கும் புரியும்.”
 
“அது…”
 
“சொல்லு… ம்…” 
 
“இது… நம்ம வீடு… இல்லை…”
 
“ம்… ஆமா…”
 
“இங்க…‌ நம்ம வாழ்க்கை…” துளசி வார்த்தைகளை மென்று விழுங்கியது.
 
ஆதி கொஞ்ச நேரம் அமைதியாக நின்றிருந்தான். முதலில் பெண் சொல்ல நினைத்தது அவனுக்குத் தெளிவாக புரியவில்லை. 
 
பிற்பாடே அவள் இன்றைய இரவைப் பற்றிப் பேசுகிறாள் என்று புரிந்து கொண்டான். தங்கள் இல்லறம் விஸ்வநாதன் அங்கிள் வீட்டில் தொடங்குவதை அவள் விரும்பவில்லை. இது ஏன் தனக்குத் தோன்றாமல் போனது!
 
ஃபோனை தேடியவன் அது பாக்கெட்டில் இல்லாமல் போகவும் பெட் ரூமிற்கு வந்தான். துளசியும் பின்னோடே வந்தாள். நேரத்தைப் பார்த்தவன் யாரையோ அலைபேசியில் அழைத்தான்.
 
“அங்கிள், நான் ஆதி பேசுறேன்.” கணவன் பேச்சை ஆரம்பிக்கவும் துளசி திடுக்கிட்டு போனாள். இவன் என்ன செய்கிறான்?!
 
“ஆங்… எல்லாமே நல்லாப் போகுது அங்கிள்.” மறுமுனை அவன் பெற்றோரை விசாரித்திருக்கும் போலும்.
 
“எல்லாரும் துளசி வீட்டுக்குப் போயிருக்காங்க அங்கிள், இன்னைக்கு அங்க ஏதோ லன்ச்சாம், அங்கிள்… நான் வேறொரு விஷயம் பேசத்தான் உங்களை இப்போக் கூப்பிட்டேன்.” துளசி இப்போது சட்டென்று கணவனின் அருகில் சென்று கலவரத்தோடு அவனைப் பார்த்தாள்.
 
லேசாக புன்னகைச் செய்தவன் அவள் கன்னத்தில் தட்டிக் கொடுத்தான். கண்கள் அவளைச் சமாதானம் செய்தது.
 
“அங்கிள், இந்த வீட்டை விக்குற ஐடியா உங்களுக்கு இருக்கா?” ஆதி கேட்டே விட்டான். துளசி பதறிப்போனாள்.
 
அந்த மனிதர் என்ன நினைப்பார்? ஏன் இவன் இப்படி எல்லாவற்றிலும் அவசரப்படுகிறான்?!
 
“ஏன்னா… எனக்குச் சொல்லத் தெரியலை அங்கிள், இன்டியாக்கு வந்ததுல இருந்து இந்த வீடுதான்… இங்கதான் நிறைய விஷயங்கள் நடந்திருக்கு…” இதைச் சொல்லும்போது அவன் சுட்டுவிரல் எதிரே நின்ற மனைவியின் இதழ்களை அளந்தது. 
கண்கள் கனவில் மிதக்க பேச்சைத் தொடர்ந்தான் ஆதி.
 
“இன்னும் எத்தனையோ சந்தோஷங்களை இந்த வீடுதான் எனக்குக் குடுக்கப் போகுது!” இதழை வருடிய விரல் கழுத்தில் இறங்க அதற்குத் தடைப் போட்டாள் துளசி. ஆதி புன்னகைத்தான்.
 
“இல்லையில்லை… எனக்கு இன்னைக்குப் பதில் சொல்லுங்க அங்கிள், ரொம்ப டைம் எடுக்க வேணாம்.” அவன் பிடிவாதம் இப்போதும் தலைத் தூக்கியது.
 
***
 
அந்த ப்ளாக் ஆடி சிதம்பரத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது.
 
ஆதி வெகு உல்லாசமாக காரை ஓட்டிக்கொண்டிருந்தான். பக்கத்தில் அவன் பத்தினிப் பெண் அமர்ந்திருந்தது.
 
இந்த முறை வேறு யாரும் அவர்களோடு வந்திருக்கவில்லை. பகல் விருந்தை சங்கரபாணி வீட்டில் முடித்த கையோடு பயணத்தை ஆரம்பித்திருந்தார்கள்.
 
விஸ்வநாதன் அங்கிளிடம் வீட்டை விலைபேசி இருந்தான் இளையவன். அவர் சட்டென்று முடிவு சொல்லாததால் இதோ… சிதம்பரம் கிளம்பிவிட்டான்.
 
மனைவியின் ஆசையையும் தட்ட இயலவில்லை. அதேநேரம் சங்கரபாணி இருக்கும் அந்த வீட்டில் முதலிரவை நடத்தவும் அவன் மனம் ஏனோ இடம் கொடுக்கவில்லை. 
 
எப்போதும் போல இப்போதும் அதிரடியாக ஒரு முடிவெடுத்துக் கிளம்பிவிட்டான். இவன் வேகத்துக்கு ஈடுகொடுக்க துளசிதான் லேசாக தடுமாறினாள்.
 
கார் சட்டென்று ஓரிடத்தில் நிற்கவும் சிந்தனைக் கலைய திரும்பினாள் பெண். 
 
“என்னாச்சு?”
 
“ஒன்னுமில்லையே!”
 
“அப்போ ஏன் காரை நிறுத்தினீங்க?”
 
“நம்ம கல்யாணத்துக்கு அப்புறமா ஃபர்ஸ்ட் டைம் வெளிய வர்றோம், என்ஜாய் பண்ண வேணாமா துளசி?”
 
“ஓ…” வியப்போடு கேட்ட மனைவியைப் பார்த்துச் சிரித்துவிட்டு காரிலிருந்து இறங்கினான் ஆதி. காரை பின்புறமாக திறந்து அதிலிருந்த ஏதோ பொருட்களை உருட்டினான். 
 
சற்று நேரத்தில் அவன் துளசியிடம் வந்த போது கையில் இரண்டு கப் காஃபி இருந்தது. 
 
“இது ஏதுங்க?”
 
“நான்தான் கொண்டு வந்தேன்.”
 
“எங்கிட்ட சொல்லவே இல்லையே நீங்க?!”
 
“இதுல உங்கிட்டச் சொல்ல என்ன இருக்கு துளசி? எமிலி ஆன்ட்டிக்கிட்ட சொன்னேன், காஃபி போட்டுக் குடுத்தாங்க, காமிலா ஆன்ட்டி நைட்டுக்கு தேவையான ஃபூடை ஹாட் பாக்ஸ்ல போட்டுக் குடுத்தாங்க, தட்ஸ் இட்.” அவன் இலகுவாக சொல்லி முடித்தான்.
 
“……………” அவள் பேச்சற்ற பார்வையின் அர்த்தம் புரிந்தது ஆதிக்கு. இன்னும் கொஞ்சம் இதமாக மனைவிக்கு விளக்கினான்.
 
“இங்கப்பாரு துளசி, அங்கெல்லாம் இன்டியா மாதிரி எல்லாத்துக்கும் வீட்டுல இருக்கிற பொம்பளைங்களை உருட்ட மாட்டாங்க, அவங்களுக்கும் ரெஸ்ட் வேணுங்கிறதால எல்லாரும் எல்லா வேலையும் பண்ணுவாங்கடா.”
 
“……………..” 
 
“நீயும் வேலைக்குப் போறே, சம்பாதிக்குற… அப்பிடி இருக்கும் போது மத்த எல்லா வேலையையும் உன்னோட தலையில கட்டுறது என்ன நியாயம் சொல்லு?”
 
“அதுக்காக… ஆசிரமம் போனதைக் கூட எங்கிட்டச் சொல்ல மாட்டீங்களா நீங்க?”
 
“நான் எப்போ போனேன் அங்க?”
 
“என்னோட பெர்த் டே அன்னைக்குப் போயிருக்கீங்க, ஆனா எங்கிட்டச் சொல்லலை.” அவள் குரல் குற்றம் சாட்டியது.
 
“ஓ… அதுவா…” அதற்கு மேல் பதில் சொல்லாமல் அவள் குடித்து முடித்திருந்த காலி கப்பை வாங்கியவன் அதைப் பின்னால் வைத்துவிட்டு வந்தான்.
 
“அன்னைக்கு யாமினி அக்கா ஆசிரமத்துல இருந்து கால் பண்ணினாங்க, விஷ் பண்ணிட்டு நீங்க வாஷிங் மெஷின் வாங்கி குடுத்ததைச் சொன்னாங்க.”
 
“இப்போ அந்த பேச்சு எதுக்கு துளசி?”
 
“ஏன் எங்கிட்ட மறைக்குறீங்க?”
 
“மறைக்கல்லைடா… வலது கை குடுக்கிறது இடது கைக்குத் தெரியக்கூடாது, அவ்வளவுதான்.”
 
“நீங்க என்னைக் கொஞ்சம் தூரமா நிறுத்துறீங்களோன்னு தோணுது!” துளசி சொன்ன மறு நிமிடம் அவன் அணைப்பில் இருந்தாள்.
 
“என்ன வார்த்தை துளசி இது? எதுக்கு உன்னை நான் தள்ளி நிறுத்தணும்?”
 
“உங்க செய்கைகள் எல்லாமே அப்பிடித்தானே இருக்கு! சட்டு சட்டுன்னு முடிவெடுக்குறீங்க, தடாலடியா வேலை பண்ணுறீங்க!”
 
“ஓ…”
 
“ஒரு பெரிய அலை வந்து என்னை அள்ளிக்கிட்டுப் போற மாதிரி இருக்கு.”
 
“ஹா… ஹா… பெரிய அலைன்னா… சுனாமி மாதிரியா?”
 
“சிரிக்காதீங்க!”
 
“சரி சிரிக்கலை, கல்யாணம் ஆச்சு, இனி வைஃபுக்கு எல்லாத்துக்கும் விளக்கம் சொல்லணும் ஆதி.” தனக்குத்தானே கற்றுக் கொடுப்பவன் போல பேசினான் ஆத்ரேயன்.
 
“இனி ஞாபகத்துல வெச்சுக்கிறேன் துளசி, இனிமேல் உங்கிட்டச் சொல்லாம எதுவும் பண்ணுறதில்லை, ஓகேவா?”
 
“எல்லாத்தையும் சொல்லணும்னு இல்லைங்க, முக்கியமான விஷயங்களைச் சொல்லலாம் இல்லை… மத்தவங்க சொல்லித் தெரிய வரும்போது கொஞ்சம் கஷ்டமா இருக்கு.”
 
“அது சரி… என்ன எப்பப் பார்த்தாலும் என்னை ‘ங்க ங்க’ எங்கிற? ஆதின்னு கூப்பிடு துளசி.” இப்போது துளசி அவனிடமிருந்து மெதுவாக விலக எத்தனித்தாள்.
 
“கூப்பிடுன்னு சொன்னேன்!” அவள் முயற்சியை முறையடித்தபடி அவன் மல்லுக்கு நின்றான்.
 
“ம்ஹூம்…”
 
“என்ன ம்ஹூம்? கூப்பிடுன்னா கூப்பிடு துளசி!” இப்போது அவன் அதிகாரம் பண்ணினான்.
 
“கிளம்பலாமே…? லேட் ஆகுது.”
 
“நீ கூப்பிட்டாத்தான் இன்னைக்கு கார் நகரும்.” அவன் பிடிவாதம் இப்போது துளசிக்கும் ரசித்ததோ என்னவோ! வாகாக அவன் மார்பில் சாய்ந்து கொண்டு, அண்ணார்ந்து முகம் பார்த்துச் சிரித்தாள். ஆதி இப்போது ரசிகனாகி போனான்.
 
சாலையில் நிற்பதை மறந்து அந்த இதழ்களைத் தனதாக்கிக் கொண்டான். துளசியும் இசைந்து கொடுத்தது. 
 
நீண்டு வளர்ந்து கொண்டே போன முத்தம்… சாலையின் எதிர்ப்புறமாக வந்த இன்னொரு காரின் ஹார்ன் சத்தத்தில் சட்டென்று தடைப்பட்டது.
 
யாரோ இரு வாலிபர்கள் ஹார்ன் அடித்து இவர்களைக் கலாட்டா செய்தார்கள். சத்தமாக சிரிக்கும் சத்தமும் கேட்கவும் துளசிக்கு மானம் போனது. ஆனால் அவன் அதையும் ரசித்துச் சிரித்தான்.
 
வீட்டிற்கு வந்து சேர்ந்த போது மாலை ஏழு மணி தாண்டி விட்டது. காரிலிருந்த பொருட்களை ஆதி எடுத்துக் கொண்டிருக்க‌ துளசி வீட்டைத் திறந்தாள். ஆச்சரியங்கள் அங்கும் அவளுக்காகக் காத்திருந்தன!
 
“சாரி துளசி… இது சர்ப்ரைஸா இருக்கட்டுமேன்னுதான் நான் உங்கிட்டச் சொல்லலை!” அவன் விளக்கம் இப்போது நியாயமாகவே பட்டது துளசிக்கு.
 
முதல் முறை இங்கே வந்திருந்த போது ஆதி அந்த வீட்டில் என்னென்ன மாற்றங்கள் செய்யவேண்டும் என்று சொன்னானோ அத்தனையும் அங்கு நடந்திருந்தது.
 
புதிதாக அவள் அறையோடு சேர்ந்தாற்போல ஒரு பாத்ரூம் கட்டப்பட்டிருந்தது. இன்னும் என்னென்னவோ… அவள் பின்னோடே வந்தவன் அவளைப் பின்புறமாக நின்றபடியே அணைத்துக் கொண்டான். அவன் கன்னம் அவள் கழுத்தில் உரசியது.
 
“ரொம்ப நேரம் என்னைக் காத்திருக்க வெக்காத துளசி… என்னோட பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு டார்லிங்!” அந்த கரகரப்பான குரலில் துளசி சிலிர்த்தது. 
 
அதன்பிறகு நடந்தது எதுவும் அவள் கவனத்தில் பதியவில்லை. ஒருவிதமான பதட்டத்தோடே நடமாடி கொண்டிருந்தாள். 
 
ஆதியும் அவளைப் புரிந்து கொண்டாற்போல நடந்து கொண்டான். வேலைகளில் பங்கெடுத்துக் கொண்டான். கொண்டு வந்திருந்த உணவை உண்டார்கள். உபயோகித்த பாத்திரங்களை துளசி கழுவி வைத்துவிட்டு பாத்ரூமிற்குள் புகுந்து கொண்டாள். 
 
குளியலை முடித்துவிட்டு ஒரு பின்க் நிற காட்டன் புடவையில் வெளியே வந்தபோது… கணவன் அவள் வருகைக்காகக் காத்திருந்தான். 
 
தாளம் தப்பிய இதயத்தோடு வெளியே வந்தவள் தோள் வளைவில் நனைத்திருந்த கூந்தலை மெதுவாக துவட்ட ஆரம்பித்தாள். 
 
என்ன பேசுவது, என்ன செய்வது என்று ஒன்றுமே புரியவில்லை. வைத்த கண் வாங்காமல் தன்னையே பார்த்திருந்தவனின் பார்வை அவளைச் சிலிர்க்கச் செய்தது.
 
கொஞ்ச நேரம் அவள் தவிப்பை வேடிக்கைப் பார்த்தவன் அவளருகே வந்தான். அவள் கையிலிருந்த டவலை வாங்கி அப்பால் போட்டவன்,
 
“துளசி…” என்றான் காதலோடு.
ஆசை… அது எப்போதும் வெட்கம் அறிந்ததில்லை!
 
காதல்… அது எப்போதும் கண்ணியம் பார்ப்பதுமில்லை!
 
ஆதியின் குரலில் ஆசையும் காதலும் கலந்துகட்டிக் கிடந்தது.
 
அந்தக் குரலுக்கு அஞ்சியவள் போல துளசி அவனைப் பார்க்க மறுத்து நிலம் பார்த்திருந்தாள். கைகள் லேசாக சில்லிட்டுப் போயின.
 
“ஹேய்… டார்லிங்!” அவன் குரலில் இருப்பது என்ன?! காதலா… ஆசையா… இல்லையே, ஏதோ இன்னுமொன்றும் இழையோடுகிறதே! அது எதுவென்று புரியாமல் பேதை குழம்பி நின்றாள்.
துளசி புனிதமானது அல்லவா?!
 
அதனாலோ என்னவோ, மேலே முன்னேறாமல் ஆதியும் சற்றுத் தயங்கி நின்றான். ஆனால் எத்தனை நேரம்தான் ஆசைக் கொண்ட மனது அடங்கி நிற்கும்!
 
அவன் கரங்கள் அவள் இடை வளைத்து லேசாக அத்துமீற ஆரம்பித்தது!
 
உயிருக்குயிராய் அவளை நேசித்தது மட்டுமல்ல, அவள் உறவுக்காகவும் காத்திருந்தவன் அவன்! கணவன் என்ற உரிமைக் கிடைத்த போது கோடு தாண்ட எத்தனித்தான்.
 
துளசியின் கரங்கள் அவனுக்குத் தடைப் போட்டன… கெஞ்சினான்!
அவளின் செல்லச் சிணுங்கல்கள் அவன் ஷ்ருங்காரத்திற்குச் சுருதி கூட்டின… கொஞ்சினான்!
 
சில நேரங்களில் அவன் காமம் தலைத் தூக்கிய போது பெண் மருண்டு விழித்தது, அரவணைத்துக் கொண்டான்!
 
காலம் காலமாக அவர்கள் காத்து வந்த கற்பும் கண்ணியமும் அந்த நொடி விடைபெற்றுக் கொண்டன. துளசி ஒரு கட்டத்தில் துவண்டுதான் போனது! 
 
நேரம் நள்ளிரவை நெருங்கி கொண்டிருந்தது. பேச்சற்ற மௌனம் அங்கே. ஆனால் இரு உள்ளங்களும் விழித்துத்தான் கிடந்தன.
 
ஆதி தன் இன்பத்தின் மொத்த உருவைத் திரும்பி பார்த்தான். இவன் முகம் பார்க்க மறுத்து தலையணையில் முகம் புதைத்திருந்தது துளசி!
 
தன் கையை அவள் இடைக்காக கொடுத்தவன் மெதுவாக அவளை இழுத்துத் தன் மீது போட்டுக் கொண்டான்.
 
“துளசி…” அவன் அழைத்த போது,
 
‘இன்னும் என்னவாம்?!’ என்று உச்சுக் கொட்டியது அவள் பெண்மை, களைத்துக் கிடந்த அதன் மென்மை!
பதிலேதும் வராததால் இது வேலைக்காகாது என்று புரிந்த ஆதி இப்போது அவளைக் கட்டிலில் கிடத்திவிட்டு அவள் முகம் பார்த்தான்.
 
“என்னைப் பாரு துளசி… பேசமாட்டியா?” அவன் குரல் இப்போது ஆனந்த கூத்தாடியது.
ஜெயித்த இறுமாப்பு அவன் ஒவ்வொரு அசைவிலும்!
 
“சென்னையில இருந்து ஒரு முக்கியமான ஐட்டம் கொண்டு வந்திருக்கேன்!” அவன் சொல்லவும் அவள் கேள்வியாக பார்த்தாள்.
 
“என்ன அது?”
 
“உனக்கே தெரியும்.”
 
“என்ன அ…” கேள்வியைப் பாதியில் நிறுத்திவிட்டு துளசி அரண்டு போய் அவனைப் பார்த்தாள். இப்போது அவன் பார்வையில் குறும்பு கூத்தாடியது.
 
“ம்ஹூம்… என்னால முடியாது.”
 
“இன்னைக்கு துளசியோட எந்த கெஞ்சலும் கொஞ்சலும் எங்கிட்ட எடுபடாது, ப்ளாக் ட்ரெஸ் இந்த ஸீன்ல இன்னைக்கு நிச்சயம் உண்டு.”
 
“இல்லை… ப்ளீஸ் வேணாமே!”
 
“வேணும்னா வேணும்தான்.” உறுதியாக சொன்னவன் அங்கிருந்த கப்போர்டில் தான் முன்னமே, அவள் குளிக்கும் போது கொண்டு வந்து வைத்திருந்த ஆடையை எடுத்து வந்தான்.
 
“சொன்னாக் கேளுங்க…”
 
“முடியாது!” கலைந்து கிடந்தவளைக் கைகளில் அள்ளிக் கொண்டவன் குளியலறையில் கொண்டு விட்டான்.
 
“ரெண்டு நிமிஷத்துல நீ வெளிய வரலைன்னா… நான் உள்ள வருவேன் துளசி.” அவளை மிரட்டி விட்டு ஒரு புன்னகையோடு காத்திருந்தான் ஆத்ரேயன்.
 
சரியாக இரண்டு நிமிடங்களில் கதவு திறந்தது, ஆனால் அவள் வெளியே வரவில்லை.
 
“ஹேய் துளசி… வெளிய வா!” 
 
“ம்ஹூம்…” குரல் மட்டுமே வந்தது.
 
“அப்போ நான் அங்க வரட்டுமா?” இப்போது அவள் கரம் மட்டும் வெளியே நீண்டு வெளியே இருந்த ஸ்விட்சை தட்டியது. 
 
அறை முழுவதும் இருள் சூழ தயங்கிய படி வெளியே வந்தது அவன் முழு நிலா… பாதி நிர்வாணமாக!
 
ஆதி பிரமித்து நின்றுவிட்டான்!
 
கூந்தல் கலைந்திருக்க, அணிந்திருந்த ஆபரணங்களில் சில காணாமல் போயிருக்க மோகன நிலவாய் நின்றிருந்தது அவன் எழிலோவியம்!
 
அந்த அபரிமிதமான அழகை அண்மிக்கவும் அஞ்சி சிலையென நின்றிருந்தான் ஆதி! 
 
இப்போது அவன் நிலைப் பார்த்து துளசி புன்னகைத்தது. தப்பித்தோம் என்று நினைத்துக் கும்மாளம் போட்டது.
 
ஆனால்… நினைத்ததை நடத்தாவிட்டால் அது ஆத்ரேயன் அல்லவே!
 

Leave a Reply

error: Content is protected !!