யாழ்-11

யாழ்-11
யாழ்-11
“முடிவா நீ என்னதான் சொல்ற?” கல்யாணி மகளிடம் முறையிட்டுக் கொண்டிருந்தார்.
“முடியாது!” ராஷ்மிகா.
“இது யாரோ கல்யாணம் இல்ல ராஷ்மி. உன் தம்பி கல்யாணம். உப்பு சர்க்கரை மாத்திட்டு, துணி எடுத்திட்டு வரதுதானே. இதுக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம் பண்ற!” கல்யாணி திட்ட,
“பாட்டி, அம்மாவத் திட்டாதீங்க” என்று பன்னீர் நிறத்தில் நைட் ட்டெஸில் ரோஜாக் குவியலாய் உள்ளே வந்தாள் யாழ்மொழி.
கல்யாணி பேத்தியைப் பார்க்க, “அம்மா பாவம் பாட்டி. திட்டாதீங்க!” ராஷ்மிகாவின் மடியில் ஏறி உட்கார்ந்தவள் அன்னையின் கன்னத்தில் முத்தமிட்டாள்.
மகளின் கன்னத்தில் திருப்பி முத்தமிட்டவள், “யாழ்.. டெட்டி பாட்டி, உனக்கு ரசகுல்லா வச்சிருக்காங்க. போய் வாங்கிக்க!” சொல்ல சிறியவளோ இனிப்பிற்கு ஆசைப்பட்டு, குட்டி பாதங்களால் தரைக்கு ஒத்தடம் கொடுத்தபடி ஓடினாள்.
“அம்மா என்னால வரமுடியாது. நீங்க போங்க. கல்யாண ஜவுளி எல்லாம் எங்களுக்கு, நீங்களே வாங்கிடுங்க!” தீர்மானமாகச் சொல்ல, கல்யாணியோ முறைத்தார்.
“யாழ் அப்பா வருவாங்க. அதனாலதானே வர மாட்டிக்க நீ?” துளையிடும் பார்வையோடு கேட்டார்.
“ஆமா!” ராஷ்மிகா.
“எத்தனைநாள் மறச்சு வைக்கப்போற யாழை?” நிதானமாக கேட்டார் கல்யாணி.
பிள்ளையின் பிறப்பை பெற்ற தகப்பனிடம் மறைத்ததே தவறு. இதில் இப்படி பிடிவாதமாக மகள் இருப்பது அவருக்கு கோபத்தைக் கிளறியது.
“தெரியாது. கல்யாணத்து அன்னிக்கு வரைக்கும் கூட வைப்பேன். அவ என் பொண்ணு!” ராஷ்மிகா அழுத்தமாக.
“ஏன் ராஷ்மி இப்படி பண்ற?” அவர் ஆதங்கத்தில் கேட்க ராஷ்மிகாவோ வெடித்தாள்.
“என் முடிவு இதான் ம்மா. நானும் வர மாட்டேன். யாழையும் அனுப்ப மாட்டேன்” ராஷ்மிகா கத்த,
“எல்லாம் என் நேரம் ராஷ்மி. உன்னைய, என் பேச்சு கேக்காத மாதிரி வளத்து வச்சிட்டு, உன் அப்பா போயிட்டாரு. இப்ப, நான் எதுக்கும் உதவாம இருக்கேன். உன்னையும், என்னால எதுவும் பண்ண முடியல. பேசாம உன் அப்பாக்கூடவே போயிருக்கலாம் நான்” முழுமூச்சில் பேசியவர் ராஷ்மிகாவின் முகத்தைப் பாராமல் வெளியே சென்று விட்டார்.
கல்யாணி சென்று என்ன சொன்னாரோ ஹர்ஷா உள்ளே வந்து, “அக்கா நீ வரலையா?” வினவ,
தம்பியிடம் மன்னிப்பை கண்களாலேயே யாசித்தவள், “ப்ளீஸ்டா தம்பி. என்னால முடியாது!” ராஷ்மிகா சொல்ல,
“அட அக்கா! எல்லாமே உன் விஷ்தான். சரி, உனக்கு என்ன கலர் சாரி வேணும். யாழுக்கு என்ன எடுக்கணும்?” ஹர்ஷா கேட்க,
“ஏதாவது உங்களுக்குப் பிடிச்சதை எடுங்க ஹர்ஷா. வேணா, கீர்த்தியை செலக்ட் பண்ண சொல்லு” ராஷ்மி சொல்ல,
“நான்தான்அவளுக்கே இன்னிக்கு செலக்ஷன்!” காலரைத் தூக்கி விட்டான் ஹர்ஷா.
“பார்ராரா. அன்னிக்கு ஏதோ மூஞ்சிய உர்ர்ர்னு வச்சிருந்த…” கண்களை சுருக்கி நக்கலாக வினவ,
“அது அன்னிக்கே சரி ஆகிடுச்சுக்கா!” ஹர்ஷா கண்களைச் சிமிட்ட. ராஷ்மிகாவிற்கு நிம்மதியாக இருந்தது. அனைவரும் கிளம்பிச் செல்ல ராஷ்மிகா, யாழ்மொழி தனியே இருந்தனர்.
***
“இந்த சேரி வேணாம்” ஐம்தாவது பட்டுப்புடவையை நிராகரித்தான் ஹர்ஷவர்தன்.
“ஓய்! என்ன இது? எது எடுத்தாலும் வேணாம்னு. நானே இந்நேரம் எடுத்திருப்பேன். செலக்ட் பண்றன்னு சொல்லிட்டு எல்லாத்தையும் ரிஜக்ட் பண்ற ஹர்ஷா. எனக்கே போர் அடிக்குது” அலுத்தாள் கீர்த்தி. வந்ததில் இருந்து எதை எடுத்தாலும் தன்னவள் மேல் வைத்துப் பார்த்துவிட்டு திருப்தி இல்லாமல் அடுத்து அடுத்து என்று சென்று கொண்டிருந்தான் ஹர்ஷா.
“ம்ஹூம். எனக்கு இது எதுவுமே சாட்டிஸ்பைடா இல்ல கீர்த்தி!” அவன் புடவைகளைப் பார்த்தபடியே சொல்ல,
“டேய் எப்பா. என்னாலயே முடியலடா. அங்க பாரு. உங்கம்மா, என் அம்மா எல்லாம் ரிசப்ஷன் செலக்ஷன் அவங்களுக்கே முடிக்கப் போறாங்க. நாம இன்னும் முகூர்த்த புடவையே எடுக்கலை” என்று பின்னால் திரும்பிப் பார்த்தபடிக் கூறினாள் கீர்த்தி.
“அவங்க எல்லாம் எப்படி கட்டுனா என்ன? எல்லாம் ஓல்ட் லேடிஸ். பட், நீ என் பொண்டாட்டியா பக்கத்துல உக்காரப்போற. ஸோ, அவ்வளவு ஈசியா உனக்கு எடுக்கமாட்டேன்” ஹர்ஷா சொல்ல அவனைப் பொய்யாய் முறைத்தவள், ஒரு சேரில் அமர்ந்துகொண்டாள்.
ஒரு சேலையை தேர்வு செய்து ஹர்ஷா அவளிடம் நீட்ட, அந்த சேலையைப் பார்த்தவள் அசந்துதான் போனாள். தங்க நிறத்தில் முழுதாக இருந்த காஞ்சிவரம் பட்டில் ஆங்காங்கே ஒரிஜினல் தங்கஜரிகை வேலைப்பாடிருக்க அவன் இத்தனை நேரம் தேடியதில் தப்பில்லை என்று யோசித்தவள், யாரும் அறியாவண்ணம் உதட்டைக் குவித்து காற்றிலேயே ஒரு முத்தத்தை பதித்தாள் அவளின் வருங்காலக் கணவனுக்கு.
அவள் உதடு குவித்த அழகில் தொலைந்தவன் அவள் அருகில் குனிந்து அவளிற்கு மட்டும் கேட்கும்வண்ணம், “சரி பர்ஸ்ட் நைட் புடவையும் எடுத்திடலாமா?” வினவ கண்களைச் சுருக்கி முறைத்த கீர்த்தி,
“அங்க பாரு. உன் அப்பா! அதாவது என் மாமனார் சிவக்குமார் நிற்கிறார். அவர்கிட்ட சொல்லட்டா” ஹர்ஷாவை மிரட்ட,
“ஆமா, அவ்வளவுதான்! அந்த ஸ்டிரிக்ட் ஆபிஸர். ஏற்கனவே நீ சொன்னதை வச்சு என்னைக் கொஞ்சம் வில்லத்தனமா பாக்கறாரு. இதை மட்டும் நீ சொன்ன. என்னை உள்ள தள்ளிடுவாரு” என்று சொல்ல கீர்த்திக்கு சிரிப்பு வந்துவிட்டது.
“கீர்த்தி. அக்காக்கும் யாழ்க்கும் நீயே செலக்ட் பண்ணிடு” சொல்ல அப்போதுதான் ஞாபகம் வந்தவளாய்,
“ஏன் அவங்க வரலையா?” வினவ,
“இல்ல வரல…” ஹர்ஷா முடித்துக்கொள்ள கீர்த்தியும் மேலே எதுவும் கேட்கவில்லை. தன் அண்ணன் ஹர்ஷா சொன்ன மாதிரி நடந்திருக்க மாட்டான் என்று இன்னும் நம்பிக்கை உள்ளே இருந்தது கீர்த்தனா ஆதர்ஷினிக்கு.
அக்கா, அக்கா மகளுக்கு துணிகளை தனியாக யாருக்கும் தெரியாமல் ஹர்ஷா வாங்க, “இதெல்லாம் தேவையா. எப்படியும் தெரியத்தானே போது ஹர்ஷா” கீர்த்தி.
“தெரியத்தான்போது. ஆனா, அக்கா அதுவரைக்கும் ஜாலியா இருக்கட்டும் உன் அண்ணன் கண்ணில் படாம” ஹர்ஷா இறுகிய குரலில் சொல்ல,
“இவனுக்கு என் அண்ணனை இழுக்கலைனா தூக்கம் வராது” என்று முணுமுணுக்க அது கேட்டாலும் கேட்காததுபோல இருந்துவிட்டான் ஹர்ஷவர்தன்.
ஹர்ஷா வருவான். தான்வந்தாலும் முகத்தைக் காட்டுவான். தங்கைக்கு சங்கடமாக இருக்கும் என்றே அஷ்வின் துணி எடுக்க வரவில்லை.
கீர்த்தியின் ஃபோன் ஒலிக்க அதை எடுத்தவள், திரையில் தன் அண்ணன் அழைப்பதைக் கண்டாள். ஃபோனை அட்டென்ட் செய்து, “ஹலோ” கீர்த்தி பேச, கீர்த்தியோ துணிக்கடையில் இருந்ததால் அஷ்வினிற்கு அவள் பேசுவது கரகரத்தது.
“ஹலோ தர்ஷு.. எங்கடா இருக்கிங்க? புடவை எல்லாம் எடுத்தாச்சா?” அஷ்வின் கேட்க,
“எடுத்தாச்சு ண்ணா.. நீங்க எங்க இருக்கீங்க?” என்று வினவினாள்.
“நான் வொர்க் முடிச்சிட்டேன்டா. நீ எங்க வரணும்னு சொல்லு வரேன்…” அஷ்வின் பேச, அண்ணனிடம் சீரியஸாகப் பேசிக்கொண்டிருந்த கீர்த்தியை ஹர்ஷா பழிப்புக் காட்டினான்.
“ஹர்ஷா!” சிறிது செல்லமாக அதட்டியவள், “வீட்டுக்கு வந்துடு ண்ணா” என்றாள் கீர்த்தி. அங்கேதான் விதி சிரித்தது.
எதிர்பக்கம் என்ன நடந்தது என்று தெரியாத அஷ்வினுக்கு “ஹர்ஷா, வீட்டுக்கு வந்துடு அண்ணா!” என்று கேட்டது. ஒரு நிமிடம் அங்கெதற்கு என்று யோசித்தவன் சரி ஏதாவது இருக்கும் என்று நினைத்து, “சரிடா” என்றான்.
“யாழ் காலைலயும் சரியா சாப்பிடல.. பேசாம வந்து இந்த ஆப்பிள் சாப்பிடு!” என்று ராஷ்மிகா டி.வியில் மூழ்கியிருந்த மகளை அதட்டிக் கொண்டிருந்தாள் சமையல் அறையில் இருந்தபடி.
“முடியாது!” மகளிடம் இருந்து குரல் வர, “இவளை!” என்று சமையல் அயிலிருந்து வெளியே வந்த ராஷ்மிகா டி.விஸ்விட்சை அணைத்தாள்.
“ம்மா!” யாழ் சிணுங்க,
“வந்து சாப்பிட சொன்னா.. என்ன பழக்கம் இது யாழ்? நீ எவ்வளவு குட்கேர்ள் டெல்லில. இப்ப, தாத்தா பாட்டி மாமாகிட்ட வந்தோன்ன மாறிட்ட.” மகளின் வழியிலேயே ராஷ்மிகா செல்ல,
“நோ. நான் குட்கேர்ள்!” பிடிவாதமான குரலில் யாழ் வாதாடினாள்.
“அப்ப வந்து ஆப்பிள் சாப்பிடு!” ராஷ்மிகா சொல்ல, சாப்பிட அமர்ந்தாள் யாழ்மொழி.
சாப்பிட்டு முடித்த யாழ், “அம்மா இட்ஸ் போரிங்.விளையாடலாம்”
“என்ன விளையாடலாம்?” ராஷ்மிகா கேட்க,
“ஒளிஞ்சி விளையாடலாம்மா” தன்னைச் சுற்றி நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டம் தெரியாமல் சொன்னாள் யாழ்மொழி.
“சரி, நீ போய்க் கண்டுபிடி!” ராஷ்மிகா சொல்ல,
“லேசி கூஸ்” அன்னையை திட்டியபடி போனாள் யாழ்மொழி.
“குட்டிக்குரங்கு” முணுமுணுத்தாலும் மகளை அலையவிட எண்ணாமல் கதவின் பின்னேயே ஒளிந்தாள் ராஷ்மிகா.
“அம்மா அவுட். அம்மா அவுட். நீங்க போய் ஃபிப்டி கௌன்ட் பண்ணுங்கம்மா!” என்று ஒளிந்து கொண்டாள்.
ராஷ்மிகா இருபதை மட்டும் எண்ணிவிட்டுவர, அவளின் மகளோ அதை கண்டுகொண்டு சண்டைக்கு வந்தாள்.
“நீங்க சீட் பண்றீங்க! மறுபடியும் அவுட், போங்க…” சிறியவள் விரட்ட பெரியவள் சண்டைக்கு வந்தாள்.
“அதெல்லாம் இல்லை. போய் நீயே கௌன்ட் பண்ணு” ராஷ்மிகா வாதாட,
“யூ ஆர் சீட்டிங். பேட் அம்மா!” தலையை ஆட்டிஆட்டி சொன்னவள், “தாய்க் கிழவி” கடைசியாக யாழ் சொல்ல,
“அடிங்க!” ராஷ்மிகா துரத்த, யாழ்மொழி அன்னையின் கையில் தலை கூரையை நோக்கி சிரித்தபடி சிக்காமல் ஓடினாள்.
“ஏய்! கையில சிக்குனேன்னு வைய்யேன். நில்லுடி” ராஷ்மிகா துரத்த,
“நீ வேணா வந்து புடிச்சுக்கோம்மா…” பின்னால் திரும்பியபடி ஓடிய யாழ்மொழி வாயிலின் உள்ளே நுழைந்த அந்த நீளகால்கள் மீது இடித்துக் கொண்டாள்.
இடித்துத்தடுமாறி விழப்போன சிறியவளை தாங்கிப்பிடித்த வலிய கரங்களை நிமிர்ந்து பார்த்த, யாழ்மொழியின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது.
“ஐஐஐஐ.! அப்பா.. வந்துட்டிங்களா?” அந்தக் கால்களைக் கட்டிக்கொள்ள அஷ்வினின் சர்வமும் ஆடிவிட்டது.
தங்கை சொன்னபின் நேரே ஹர்ஷா வீட்டிற்குள் வந்தவன் மேல்தான் யாழ் வந்து மோதியது. குழந்தையைக் கையில் பிடித்தவன் எதேச்சையாக நேரே பார்க்க, நீண்ட வருடங்களுக்கு பிறகு அவனைப் பார்த்தபடி வேறோடி நின்றிருந்தாள் ராஷ்மிகா.
முழுதாக நான்கைந்து வருடத்திற்குப் பின் சந்தித்த இருவிழிகளிலும் திகைப்பு.. திகைப்பு.. திகைப்பு மட்டுமே! எத்தனை வருடங்கள் கடந்தாலும் வயது ஏறினாலும் இருவருக்குமே மனதில் அழியாத அவரவர் முகங்கள்.
ராஷ்மிகாவைப் பார்த்தவனிற்கு அடுத்த அதிர்ச்சியாக மகளின், ‘ஐ அப்பா வந்துட்டிங்களா’ வாக்கியம். அவனின் இரும்பு இதயத்தையும் ஆட்டம் காண வைத்துவிட்டது. தந்தையைப் பற்றிக் கேட்டுக்கொண்டே இருந்த யாழ்மொழியிடம், விஜயலட்சுமி, அஷ்வின் புகைப்படத்தை காண்பித்தது இங்கே வேலை செய்தது.
ஏதோ புரிய ராஷ்மிகாவைக் குற்றம்சாட்டும் பார்வையோடு அஷ்வின் நிமிர்ந்து பார்க்க, ராஷ்மிகாவோ பார்வையை மகளிடம் பதித்தாள்.
“யாழ் இங்கவா!” அதட்ட, சிறியவளுக்கோ அன்னையின் கோபம் மூளைக்கு ஏறவில்லை.
மாறாக, “ம்மா, அப்பா வந்துட்டாங்கம்மா” தன் லட்டு வாயைத் திறந்து, வாண்டு மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்க அஷ்வினின் கரங்கள் மகளை அள்ளியெடுத்தது.
தந்தை தன்னைத் தூக்க அவனுடைய ஆறடி உயரத்திற்கு தானும் இருந்ததில் குதூகலித்தவள், “அப்பா, நீங்க ரொம்ப ஹைட்டா இருக்கீங்க!” அவனின் உயரத்தில் வாய் பிளந்தவள்,
“அப்பா, நான் உங்களுக்கு கிஸ் தரட்டா?” ஏதோ மகள் அன்னியரிடம் கேட்பது போலக் கேட்க, மகளின் இந்த அன்னியத்தன்மை அவனை வாள்கொண்டு அறுப்பது போலிருந்தது.
பார்வையை ராஷ்மிகாவிடம் திருப்பி அவளை முறைத்தான்.
அவள்தானே இந்த நிலைக்குக் காரணம். மகளென்று தன் வாரிசு என்றிருப்பதே இத்தனைநாள் மறைத்தவளை, என்ன செய்தால் தகுமென்ற அளவிற்கு ஆத்திரம் வந்தது அஷ்வினுக்கு.
“அப்பா இனிமேல் என்கூடயே இருங்கப்பா!” யாழ்மொழி அஷ்வினிடம் பேச ஆரம்பிக்க,
“யாழ்ழ்ழ்ழ்!” என்று இடியாய் முழங்கினாள் ராஷ்மிகா.
“இங்க இறங்கி வா!” மகளிற்கு ஆணையிட, சிறுமியோ தற்செயலாக தந்தையைத் திரும்பிப் புரியாமல் பார்த்தாள். மகளின் செயல் ராஷ்மிகாவின் கோபத்தை கிளறியது.
“யாழ்! உனக்கு நான்தான் அம்மா, அப்பா எல்லாம். அப்புறம் தாத்தா பாட்டி மாமா.. வேற யாருமில்ல” மகளைக் கோபத்தில் அதட்டியவள் அஷ்வினின் கையில் இருந்து யாழைப் பிடுங்கப்போக, அஷ்வினோ ஒரு கையில் மகளை வைத்திருந்தபடியே மற்றொரு கையால் ராஷ்மிகாவை அடக்கிவிட்டான்.
“இப்ப எதுக்கு இப்படி ஆடிட்டு இருக்க?” அஷ்வின் அழுத்தமாகக் கேட்க,
“என் பொண்ண என்கிட்ட குடு!” மறுபடியும் வந்தவளைத் எளிதாகத் தடுத்தவன்,
“உங்க பேர் என்ன?” கனத்த மனதுடன் பிள்ளையிடம் அஷ்வின் கேட்டான். பெற்ற பிள்ளையிடமே பெயரைக் கேட்கும் தன் நிலையை எண்ணி அவனிற்கு குன்றலாக இருந்தது.
“யாழ்மொழி” குழந்தை சொல்ல, ஒரு அர்த்தப் பார்வையோடு அஷ்வின், மனைவியைப் பார்க்க ராஷ்மிகாவோ அவனின் பார்வையின் வீச்சு தாளாமல் தலைகுனிந்தாள்.
“இங்க பாரு. யாழ் எனக்கும்தான் பொண்ணு. இத்தனைநாள் நீ மறச்சதே தப்பு. மேலும்மேலும் எதையாவது பண்ணாதே” அதட்டலும் கோபமுமாகச் சொல்ல ராஷ்மிகாவின் பீபீ எகிறியது.
“இவ, உன் பொண்ணுன்னு உனக்குத் தெரியுமா?” ராஷ்மிகா அவனைக் காயப்படுத்தும் நோக்கத்தோடு பேச,
“ராஷ்மி” அஷ்வின் கர்ஜித்ததில் ராஷ்மிகா மட்டுமில்லை, தன் கையிலிருந்த யாழ்மொழியும் நடுங்கியதை உணர்ந்தான்.
மகளிற்காக, கோபத்தை அடக்கியவன்,“குட்டிம்மா.. நீங்கபோய் டி.வி பாருங்க. அப்பாவும் அம்மாவும் ஒரு வொர்க் பேசிட்டு வர்றோம்!” சொல்ல, மணியாய் தந்தையின் சொல்லைக் கேட்டு கொண்டு இறங்கிச் சென்றாள் யாழ்மொழி.
மகள் சென்ற பின், “குழந்தை முன்னாடி யோசிச்சு பேசணும் அப்படிங்ற அறிவில்லையா உனக்கு?” அடிக்குரலில் சீறினான் அஷ்வின்.
“நான் எப்படி பேசணும்னு சொல்லித்தர நீங்க யாரு?” வெடுக்கென்று ராஷ்மிகா கேட்க, அஸ்வினின் பார்வை அவள் கழுத்திலிருந்த கனமான சங்கிலி மீது அவனையும் அறியாமல் பதிந்தது. அவன் பார்த்த இடத்தில் அவன் போட்ட தாலி இன்னும் இருப்பதை உணர்ந்தவள் எதுவும் பேசமுடியாமல் மௌனமாய் நின்றாள். இனிமேலும் தான் சும்மா இருந்தால் நியாயமில்லை என்பதை உணர்ந்த அஷ்வின், “கிளம்புங்க” என்றான்.
“என்ன?”, “எங்கே?” என்றாள்.
“எங்க வீட்டுக்கு.. இனி என்பொண்ணு அங்கதான் இருக்கணும்” சொல்ல ராஷ்மிகா அதிர்ந்தாள்.
“அவளுக்கு, நீதான் அப்பான்னு நான்தான் சொல்லனும் அவகிட்ட. நீ சொல்லக்கூடாது” பேசியவள், அஸ்வினிடமிருந்து ஏளனப்புன்னகையே வந்தது.
“யாழ், என் பொண்ணு தான்னு சொல்ல, டிஎன்ஏ டெஸ்ட் கூடத் தேவையில்லை. என் மூஞ்சிய பாத்துட்டு, என் பொண்ணு முகத்தைப் பாத்தா சொல்லிடுவாங்க. யாழ் யாரோட பொண்ணுன்னு” கர்வமாக சொல்ல, ராஷ்மிகாவிற்குத் தான் தீயில் நிற்பது போலிருந்தது.
யாழ் அவனின் அச்சாக இருக்க, அதை வைத்து அவன் பேசியது அவளை மேலும் குன்றலுக்கு உண்டாக்கியது.
“இப்ப உனக்கு என்ன வேணும்?” ராஷ்மிகா அடிக்குரலில் அடக்கப்பட்ட கோபத்தோடு கேட்டாள். ஆனால் அதெல்லாம் தி கிரேட் அஷ்வினிடம் எடுபடுமா?
“என் பொண்ணு இனி, என் கூட தான் இருப்பா?” என்றவன், “நீயும்” என்றான்.
“நானும் வரமாட்டேன். என் பொண்ணையும் அனுப்ப மாட்டேன்” ராஷ்மிகா பேச, அத்தனை நேரம் உள்ளே உறங்கிக்கொண்டிருந்த பழைய அஷ்வின்குமார் வெளியே வந்தான்.
“நீ வரலன்னா என்னடி? என் பொண்ணை கூட்டிட்டுப் போக எனக்குத் தெரியும். லீகலாக் கூட என் பொண்ண, என் பக்கம் நிரந்தரமா கூட்டிட்டு போகவும் முடியும் என்னால்” என்றான் தன் முழு உயரத்திற்கும் நின்று.
அவனைப்பற்றி நன்கு அறிந்திருந்ததாலோ என்னவோ ராஷ்மிகாவால் எதுவும் பேசமுடியவில்லை.
அவளின் அமைதியைக் கண்டவன், “நான் இன்னிக்கே யாழைக் கூட்டிட்டுப் போறேன்” என்றவன் டி.வி பார்த்துக்கொண்டிருந்த யாழிடம் சென்றான். தன்னால் அவனைத் தடுத்து எதுவும் செய்ய முடியவில்லையே என்ற இயலாமையில் ராஷ்மிகாவிற்கு தோற்ற உணர்வு எழுந்தது.
மகளின் அருகில் அமர, அவனைக் கண்ட சிறுமியோ தன் பிஞ்சுக் கரத்தால் அஸ்வினின் தோளைப் பிடித்து அவன்மேல் சாய்ந்தது. யாழிற்கு ஏதோ தந்தைக்கும் அன்னைக்கும் சண்டை என்பதைப் புரிந்து கொண்டாள்.
“அம்மாக்கும் உங்களுக்கு சண்டையாப்பா?” யாழ் கேட்க, முகத்தை சிரித்த மாதிரி வைத்தவன், “இல்லடா. அம்மாகிட்ட இனிமேல் யாழ் பாப்பாக்கு என்ன சாக்லேட் வாங்கித் தரணும்னு பேசிட்டு இருந்தேன்” சொல்ல தந்தையின் மடியில் தானாய் ஏறியமர்ந்தாள் யாழ்மொழி.
“நீங்க அப்பாக்கூட வர்றீங்களா? இன்னிக்கு நம்ம வீட்டுக்குப் போலாம்” அஷ்வின் மகளிடம் கேட்க,
“உண்மையாவாப்பா… நம்ம வீட்டுக்கா?” தனது திராட்சைக் கண்களை விரித்துக் கேட்டாள் அஷ்வினின் மகள்.
“ஆமா, நம்ம வீட்டுக்குத்தான்! அங்கேயும் ஒரு பாட்டி தாத்தா. ஒரு அத்தை எல்லோரும் இருக்காங்க…” அவன் சொல்ல,
“ஓகேப்பா, போலாம்.. போலாம்!” குதித்தாள் சிறுமி.
“அப்பா, என் ட்ரெஸ் எல்லாம் என் பேக்ல எடுத்திட்டு வரேன்!” யாழ்மொழி சொல்ல, “நம்ம போறவழியில வாங்கிக்கலாம்டா” என்றான் மகளைத் தூக்கியபடி.
ராஷ்மிகாவை நோக்கி கையில் யாழ்மொழியோடு வந்தவன் “இனி, நீதான் முடிவு பண்ணனும். வர்றதா என்னன்னு” அஷ்வின் சொல்ல அவளோ கற்சிலையாய் நின்றிருந்தாள்.
“அம்மா வரலையா?” குறுக்ககே புகுந்தாள் சிறுமி.
“அம்மா, நாளைக்கு காலைல வந்திடுவாங்கடா” என்றான் அஷ்வின்.
அன்னையிடம் திரும்பிய யாழ், “அம்மா… நாளைக்கு வாங்க. நம்ம நிமிஷா வீட்டுல அவங்க மூணு பேர் இருக்க ஃபோட்டோ மாதிரி நம்ம மூணுபேரும் எடுக்கலாம்” குழந்தை தன் ஏக்கத்தை வெளிப்படுத்த ராஷ்மிகாவிற்கு சங்கடமாக இருந்தது.
அஷ்வினிற்கோ, தான் இத்தனைநாள் இருந்து என்ன பயன் என்று தோன்றியது.
“நாளைக்கு காலைல வரைக்கும்தான் உனக்கு டைம். வீட்டுக்கு வந்து சேரு!” என்றவன் பதிலைக்கூட எதிர்பாராமல் வெளியே யாழைத் தூக்கிக்கொண்டு நடந்தான்.
இத்தனை நாட்கள் கண்ணீர் என்ற ஒன்றை வெளியே காட்டாமல் இருந்த ராஷ்மிகாவிற்கு மகளைத் தூக்கிக்கொண்டு அஷ்வின் செல்ல கண்கள் கலங்கியது. அது யாழிற்காகவா அல்லது அஷ்வினைப் பார்த்ததிலா என்று அவளிற்கே தெரியவில்லை.
அஷ்வின், யாழைத் தூக்கிக்கொண்டு வெளியே வரவும் சிவக்குமார், விஜயலட்சுமி, கல்யாணி, ஹர்ஷா வரவும் சரியாக இருந்தது. அஷ்வினை யாழோடு பார்த்த அனைவருக்குமே அதிர்ச்சிதான்.
எல்லோரையும் கூர்மையுடன் பார்த்தவன், “இந்த விஷயத்தை உங்களால எப்படி மறைக்க முடிஞ்சுது?” என்று இரைய யாரும் எதுவும் பேசவில்லை.
சிவக்குமார் அருகில் வந்தவன், “நான் என் பொண்ணை கூட்டிட்டு போறேன் அங்கிள். இனியாவது உங்க மகளை நல்லமுடிவா எடுக்கச் சொல்லுங்க…” மகளுடன் அஷ்வின் செல்ல யாரும் எதுவும் பேசவில்லை.
பேச விழைந்த ஹர்ஷாவையும் சிவக்குமார் தடுக்க, “அப்பா அக்கா உள்ள அழறா” அக்காவின் கண்ணீரை பார்க்கமுடியாமல் அவன் கர்ஜித்தான்.
“அவங்க பொண்ண அவங்க கூட்டிட்டு போறாங்க.. நம்ம எதுவும் பண்ண முடியாது ஹர்ஷா. நம்ம ராஷ்மி கையிலதான் எல்லா முடிவும் இருக்கு” சொல்ல, பெரியப்பாவின் வார்த்தைகள் ராஷ்மிகாவின் காதில் விழுந்தது.
ஏதோ தனித்து நிற்பதைப் போல உணர்ந்த ராஷ்மிகா கண்ணீரை அடக்க முடியாமல் தன்னுடைய தனியறைக்குச் சென்று தன் விதியின் மேல் வந்த கோபத்தை கதவிடம் காட்டினாள். பெட்டில் அமர்ந்தவளுக்கு கண்களில் கண்ணீர் அருவியாய் வழிந்தது. கடந்தகால ராஷ்மிகாவாக மாறி, அவள் உதடுகள் ‘அஷ்வின்’ என்று முணுமுணுக்க அவளது உடல் ஒரு நொடி சிலிர்த்து அடங்கியது.
மனம் கடந்த காலத்திற்குச் சென்றது.