வஞ்சம் வைத்து கொ(வெ)ல்வேனடா..!

வஞ்சம் வைத்து கொ(வெ)ல்வேனடா..!

வஞ்சம் – 11

இன்று

கீர்த்தியுடன் இணைந்து வெளியே வந்தான் ரிஷி.  இருவருக்கும் பெரிய சல்யுட் ஒன்றை அடித்து கார் கதவை திறந்து விட்டான் அவன்.

“என்கூட  ஜாயின் பண்ணுறீங்களா மிஸ்டர் ரிஷி?”

“நோ… நோ… உங்களுக்கு வேலை இருக்கிறதா சொன்னீங்களே?” அவன் கூறவே தலையாட்டிக் கொண்டு தன் காரில் ஏறி அதை கிளப்ப, அவளை பின்தொடர்ந்து சென்றான் ரிஷி.

சாலையோரம் இருந்த அந்தப் பிரபல கே.எப். சி. யில் காரை நிறுத்திய கீர்த்தி காரை விட்டு இறங்கிக் நிற்க, பின்னோடு ரிஷியும் இணைந்துக் கொண்டான்.

இருவரும் உள்ளே செல்ல, பலத்த யோசனையுடன் அவள் பின்னே சென்றான் ரிஷி.

அவர்களுக்கு முன்பே அந்த கே.எப். சி. யில் அவளுக்காகக் காத்திருந்தான் விஷ்ணு. அவள் எப்படியும் வருவாள் என்று பலமாக நம்பினான் போலும். அவளுக்கு முன்னே அங்கு வந்து அமர்ந்திருந்தான்.

வாசலையே பார்த்தபடி அமர்ந்திருந்தவன் கண்களில் இருவரும் ஜோடியாக வருவது தெரிய, ஏனென்று தெரியாமலே கோபம் கோபமாக வந்தது.

‘என்ன இவ எப்போப் பார்த்தாலும் பெரிய ஆட்களையேப் பிடிக்கிறா? இன்னைக்கு கேட்குற கேள்வியில் இவ யார்கிட்டயும் பேசுறதையே மறந்திடணும்’ கடுப்பாக எண்ணியவன் அவளை நோக்கி சென்றான்.

இவனை கவனிக்காதவள்,”என்ன சாப்டுறீங்க ரிஷி?”

“அட! விருந்து உபசாரம் எல்லாம் ரொம்ப பலமா இருக்கே?” நக்கலாக கேட்டபடி அவர்கள் முன் இருந்த நாற்காலியில் அமர்ந்தான் விஷ்ணு.

அவனை நிமிர்ந்துப் பார்த்தவள், ரிஷியை நோக்கி திரும்பி, “நீங்க சொல்லுங்க ரிஷி என்ன சாப்டுறீங்க?” என்றாள் மீண்டும்.

‘திமிர் எல்லாம் திமிர்’ பல்லைக் கடித்தவன், அங்கிருந்த பேரரை அழைத்து, அவர்களுக்காக காபியை ஆர்டர் செய்தவன், பேரர் செல்லவும் ரிஷியை நோக்கி திரும்பினான்.

“அப்புறம் ரிஷி, என்கேஜ்மென்ட் வேலை எல்லாம் எப்படி போகுது?” இப்பொழுது இவன், அவளைக் காணாதவன் போல் ரிஷியிடம் பேச்சை ஆரம்பித்தான்.

“இதுவரை நல்லா போயிட்டு இருக்கு மாப்பிள்ளை”  என்றான் எதையோ மனதில் வைத்துக் கொண்டு.

அவனை ஒரு நொடி கூர்மையாகப் பார்த்த விஷ்ணு, “அப்படியா? பக்கத்துல என்கேஜ்மென்ட் வச்சுட்டு இங்க என்ன பண்ணுறீங்க?”

“நான் உங்களை நாளைக்கு ஆபிஸ்ல மீட் பண்ணுறேன் கீர்த்தி” என்றவன் அவளிடம் கூறி, விஷ்ணுவிடம் தலையாட்டி விடைபெற்றான்.

செல்லும் அவனையே முகத்தில் தோன்றிய சிரிப்புடன் பார்த்திருந்தாள் கீர்த்தி.

“எப்படி எப்பவும் பெரிய பெரிய ஆளையா பிடிக்கிற? இவன் எத்தனாவது? எனக்கு முன்னாடியா? இல்லை பின்னாடியா?” என்றான் அவளை ஆழ்ந்துப் பார்த்து. அடர்நிற அனார்கலியில் மிகவும் அட்டகாசமாக இருந்தாள் கீர்த்தி.

அவளும் அவனைத் தான் பார்த்திருந்தாள். ஒட்டு மொத்த முடியையும் ஒரு பாண்டில் அடக்கி இருந்தான். பார்மல் டிரஸில் அவள் கண்களுக்கு அழகனாகத் தெரிந்தான்.

அவன் பின்னே செல்லும் மனதை கஷ்டப்பட்டு அடக்கியவள், “எத்தனாவதா இருந்தா உங்களுக்கு என்ன பாஸ்? இது என் வாழ்க்கை… என் திறமை எத்தனையும் வச்சுகிறேன்” அவனைப் போலவே அவனை ஆழ்ந்துப் பார்த்துக் கூறினாள்.

“அடேங்கப்பா பெரிய திறமைதான்”

“இல்லையா பின்ன. தி கிரேட் விஷ்ணுவையே பதற விடுறேன்ல”

“கடுப்படிக்காத” பல்லைக் கடித்தவன், “இவன் எதுக்கு உன்னைப் பார்க்க வந்தான்?”

“அது உனக்கு தேவை இல்லாத வேலை மிஸ்டர் விஷ்ணு”

“அப்படியா தேவை இல்லாத வேலையா?” ஒரு மார்க்கமாக அவளைப் பார்த்து வைத்தான் அவன்.

இவன் எதுக்கு இப்படி பார்க்கிறான் யோசித்தவள், “சிங்கம் பவ்யமா மானை தனியா சந்திக்க வந்திருக்கே? என்ன விஷயம்? வெள்ளை கொடி காட்டவா?“ போலியாக வினவினாள் கீர்த்தி.

அவள் பேசுவதை சேரில் சாய்ந்திருந்து கேட்டவன், “வெள்ளைக் கொடி? ஹா… ஹா” சிரித்தவன் கையில் வைத்திருந்த பேப்பரை அவள் முன் வைத்தான்.

யோசனையாக, அவனைப் பார்த்தவள், பேப்பரைக் கையில் எடுக்க.  அவள் முகத்தில் தோன்ற போகும் கோபத்தை ரசித்துப் பார்க்க அவளது முகத்தையே பார்த்திருந்தான்.

அந்தப் பேப்பரை எடுத்து பார்த்தவள் முகம் கோபத்தில் சிவந்தது. எப்படி… எப்படி… முடிந்தது அவனால். அவன் ஊரையே அழிக்க அவனால் எப்படி முடிந்தது அவளால் தாங்கமுடியவில்லை.

அவன் மீண்டும் சாயபட்டறையைக் கட்ட. அவன் வாங்கிய ஸ்டே ஆர்டர். இன்னும் ஒரு வாரத்தில் வேலையை ஆரம்பிக்கப் போகிறதாக அதில் குறிப்பிட்டிருந்தான். அதைப் பார்த்ததும் அவளுக்குத் தெரிந்தது இதில் அவன் ஏதோ விளையாடி இருக்கிறான் என்று.

அவனுக்கு நன்கு தெரியும் அவளின் கையெழுத்து இல்லாமல் அவனால் அந்த ஊரில் ஒரு துரும்பை கூட அசைக்க முடியாது என்று. ஆனால் அவன் நண்பனின் உதவியுடன் போலி ஆவணம் ஒன்றை தயாரித்து அவளைத் திகிலடைய வைக்கவே எண்ணினான். அவளிடம் விளையாட தான் அவனுக்கு அத்தனை ஆசை உண்டே!

அவனையே ஒரு நிமிடம் முறைத்துப் பார்த்தவள் அந்தப் பேப்பரை எடுத்துக் கொண்டு அவளின் ஊரை நோக்கி சென்றாள்.

***

“கொஞ்சிப் பேசிட வேணாம்

உன் கண்ணே பேசுதடி

கொஞ்சமாகப் பார்த்தால்

மழச் சாரல் வீசுதடி

நான் நின்னா நடந்தா கண்ணு

உன் முகமே கேக்குதடி

அட தொலைவில இருந்தா தானே

பெரும் காதல் கூடுதடி “ சின்னக்குயில் சித்ரா சின்னக் குரலில் பாடிக் கொண்டிருந்தார்.

காரின் ஏசியை அணைத்துவிட்டு. கண்ணாடியையும் கீழே இறக்கிவிட்டு அந்தக் கிராமத்தின் சுத்தமான காற்றைச் சுகமாக ஆழ்ந்து அனுபவித்தான் அகில் தேவ்.

ஒரு வாகனம் மட்டுமே செல்லக்கூடிய ஒற்றையடிப் பாதை அது. அன்று வெறும் மண் தரையாக இருந்தது. இன்று ஒற்றைத் தார் ரோடாக மாறி இருந்தது. எதிரே வாகனம் வந்தால் கூட விலகி வழிவிடமுடியாது. ஆனால் பெரிய வாகனம் என்று அங்கும் எதுவும் இதுவரை அவன் கண்களுக்குத் தெரியவில்லை.

என்ன தான் பெரிய வண்டி இங்கு இல்லை என்றாலும். நகரத்தில் இல்லாத சுத்தமான காற்றும். அமைதியும் இங்கு இருந்தது. இங்கிருந்த காற்றும். அமைதியும் அவன் மனத்தை வெகுவாக நிறைத்தது…

கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமை. அதனை ஊடுருவி கொண்டு சலசலத்து ஒடும் ஆறு. கரையோரமாக நின்றபடி தலையை அங்கும் இங்கும் ஆட்டியபடி அங்கு வருவோரை வரவேற்றுக்கொண்டிருந்த நெற்கதிர்கள். வார்த்தைகளில் காவியமாக வடிக்க முடியாத ஒரு அழகை அந்த ஊர் பெற்றிருந்தது.

இயற்கையை ரசித்தப்படி காரை மெதுவாக ஒட்டி வந்த அகில் ஒரு இடத்தில் காரை நிறுத்திவிட்டு அமைதியாக அந்த ஊரை ரசிக்க ஆரம்பித்தான்.

அன்று போல் இன்றும் அவன் மனத்தை நிறைத்தது. அவனுக்கு மனதே கேட்கவில்லை இப்படி ஒரு இயற்கைக்கு நடுவே எப்படி விஷ்ணு பட்டறை ஆரம்பிக்க எண்ணினான்.

அழகும் ஆபத்து என்று இந்த ஊரை பட்டறை கட்ட காரிகை தேர்வு செய்த அன்றே அறிந்து கொண்டான். அளவுக்கதிகமான அழகு என்றும் ஆபத்தே!

பச்சையை வாரி வாரி வழங்கிய இயற்கை அன்னை அதே வேகத்தில் ஆபத்தையும் கொண்டு வந்தாள்.

இயற்கையை ரசித்தப்படி காரை ஒட்டி வந்தவன் மனதில் தோஷிகா காரணமே இல்லாமல் வந்து போனாள்.

ஒர் இடத்தில் காரை நிறுத்தி விட்டு அமைதியாக ஒடிக் கொண்டிருந்த ஆற்றை ரசிக்க ஆரம்பித்தான். காரிகை இந்த ஊரை தேர்வு செய்ய இந்த ஆறும் ஒரு காரணமே!

சாயம் தயாரிக்க அளவுக்களதிகமான தண்ணீர் தேவைப்படும். இப்படி வஞ்சகம் இல்லாமல் ஒடும் ஆற்றில் இருந்து தேவைக்கு அதிகமான தண்ணீர் அவர்களுக்குக் கிடைக்கும் என்று தண்ணீர் தரத்தின் அளவை ஆய்வு செய்த அதிகாரிகள் கூற காரிகையால் இதற்கு மேல் இந்த ஊரை மறுக்கக் காரணம் இருக்கவில்லை. உடனே இங்கிருந்த பல மக்களிடம் பவ்யமாகப் பேசி. பாதி இடத்தை அவர்கள் பெயருக்கு வாங்கிவிட்டாள்.

தேவ் எவ்வளவு கூறியும் கேட்காமல் வயல் போக மீதி இருந்த நிலத்தைப் பல இலட்ச லாபத்துக்கு விற்றுவிட்டனர். அதற்கு மேல் அவனை யோசிக்கவிடாமல் சிட்டுகுருவிகளின் சத்தம் காதை நிறைக்க அதன் பக்கம் பார்வையைத் திருப்பினான் அகில்.

ஆற்றின் அருகில் இருந்த ஆலமரத்தில் கூடுகட்டி வாழ்த்துக் கொண்டிருக்கும் சிட்டுக்குருவி தன் குழந்தைகளுக்கு உணவை கொண்டு வர அதைக் கண்ட சின்னச் சிட்டுகள் தன் மகிழ்ச்சியை “கீச். கீச் ” என்று வெளிப்படுத்தின. அதை ரசித்துப் பார்த்தவனின் கண்கள் அப்படியே ஆற்றின் பக்கம் திரும்பியது…

நீரின் மேல் மட்டத்தில் துள்ளி குதித்த மீன் குஞ்சுகளைப் பார்க்க பார்க்க தெவிட்டவில்லை அவனுக்கு. இதே ஊரில் சாயப்பட்டறை வந்தால் மீன்கள் இப்படித் துள்ளி விளையாடுமா? பறவைகள் இந்த ஆலமரத்தை தேடிவருமா? அவனுக்கே தெரியவில்லை. ஒருக்காலும் விஷ்ணுவை அவன் எதிர்த்து நிற்கமாட்டான்.

இந்த மாதிரியான ரம்மியத்துடன் கூடிய இயற்கையை அவன் வாழும் பட்டணத்தில் கிடைக்குமா என்ன? இதுவரை விஷ்ணு இந்த ஊரை நேரில் பார்க்கவில்லை. அவன் தாய் கூறியதை கேட்டு அப்படியே வேலையை ஆரம்பிக்கிறான். முடிந்தால் அவனை இங்கு அழைத்து வந்து இயற்கையின் மகத்துவத்தை அவனுக்கு உணர்த்த வேண்டும் என்று அகில் மனதில் எண்ணிக் கொண்டான்.

காரை விட்டு அந்த ஆற்றின் கரையோரமாக நடக்க ஆரம்பித்தான் அகில். விஷ்ணுவை பற்றி யோசித்துக் கொண்டு அப்படியே நின்றிருந்தான். சிறிதுதூரம் சென்றவன் காதில் சில சிறுவர்களின் கூச்சல் கேட்க. அவன் கால்கள் அவனின் அனுமதியும் இல்லாமல் சத்தம் கேட்ட திசையை நோக்கி சென்றது.

சத்தம் வந்த திசையை நோக்கி சென்றபொழுது அங்கே சிறுவர்கள் விளையாடி கொண்டிருக்க. அவர்களைப் பார்த்துக் கொண்டு ஆற்றின் அருகில் இருந்த சிறு மலை குன்றின் மேல் அவள் அமர்ந்திருந்தாள்.

அவன் கண்கள் அவளைப் பார்த்த மகிழ்ச்சியில் பனிக்க. வாய் தானாக “தேஷிகா” என்று முணுமுணுத்தது.

அன்றும் அவளை இதே ஆற்றங்கரையில் தான் பார்த்தான். அன்று மகிழ்ச்சியில் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தாள். இன்றோ மகிழ்ச்சியை இழந்தவளாய் அவன் கண்களுக்குத் தெரிந்தாள்.

அந்த மலைகுன்றின் மேல் தேஷிகாவை பார்த்தவன் அவளை நோக்கி ஓடி வந்தான். அவன் அருகில் இருந்த அந்த ஒரு நாள் அவன் மனதில் நீங்கா இடம் பெற்றாள் அவள்.

நாளடைவில் அவளின் நினைவு அவனின் அடிமனதில் அப்படியே தேங்கி விட்டது. ஆனால் அவளை மீண்டும் காண வேண்டும் என்று மட்டும் அவன் நினைக்கவே இல்லை.

இப்பொழுது அவளை நோக்கி ஓடி வந்தவன் திடீரென அப்படியே அந்த இடத்தில் நின்று கொண்டான் “ஒரு வேளை அவளுக்குத் திருமணம் முடிந்திருந்தால்?. என்னை அவளுக்கு நினைவிருக்குமா?“ யோசனையுடன் அவளைப் பார்த்துக் கொண்டே நின்றுவிட்டான்.

ஏதோ யோசனையில் இருந்தவள். தன்னை யாரோ பார்ப்பது உணர்ந்து ஆற்றின் பக்கம் திரும்பி பார்க்க. அவனைக் கண்டு அப்படியே சிலையாகிப் போனாள்.

“அவன் வரமாட்டானா? வரமாட்டானா என்று ஏங்கிய நாள் போய் அவன் வந்தே விட்டான். அவளைத் தேடி“ முன்னால் அவன் நிற்பது உண்மையா? பொய்யா? அவளால் அறிய முடியவில்லை.

அவளின் அசையா பார்வையைக் கண்டவன். அவளை நோக்கி இரண்டெட்டு எடுத்து வைத்து, “எப்படி இருக்கீங்க தேஷிகா?“ மென்மையாக வினவினான்.

அந்த நொடி அவள் ஊமையாகிப் போனாள். அவனின் கேள்வி அவள் மனதில் புகுந்து. பதில் சொல்ல அவள் வாய் ஒத்துழைக்கவில்லை.

அந்த நேரம் ஒரு மூன்று வயது மதிக்கதக்க சிறுவன் அவள் கையைப் பிடிக்க.

“உனக்கு எத்தனை குழந்தைகள் தேஷிகா“ மிக மெதுவாக. உள்ளே போன குரலில் கேட்டவனின் கண்கள் அவளின் காலையும். கழுத்தையும் ஆராய்ந்தது.

அவனின் கேள்வியில் அடிபட்ட ஒரு பார்வை பார்த்தவள் வேகமாக வீட்டை நோக்கி ஓடினாள்.

அவளின் பின்னே வேகமாக வந்தவனுக்கு அப்பொழுது தான் இருக்கும் ஊர் கருத்தில் பட. நேராகக் காரை நோக்கி நடந்தவன். காரை எடுத்துக் கொண்டு மெதுவாக ஊரின் உள் சென்றான்.

எங்கும் பசுமையாக இருந்தது ஊர். ஆனால் ஒரு குறிப்பிட்ட இடம் மட்டும் பாலைவனமாகக் காட்சியளிக்க. அதைக் கண்டதும் அறிந்து கொண்டான் அது விஷ்ணுவின் இடம் என்று.

ஊர் ரொம்பவே மாறிவிட்டது. அன்று பல வீடுகள் குடிசைகளாகக் காட்சி தந்தது. இன்றோ அத்தனையும் அடுக்குமாடியாக மாறி இருந்தது. எல்லாம் காரிகையின் பணம் என்று அறிந்து கொண்டான்.

வண்டியை நேராகத் தேவ் வீட்டின் முன் நிறுத்தினான். அந்த வீடு மட்டும் இன்னும் பழமை மாறாமல் அப்படியே இருந்தது. அதே ஓடு வேய்ந்த வீடு. வெள்ளை மட்டும் அடிக்கபட்டிருந்தது.

காரை விட்டு இறங்கியவன் நேராகத் தேவ் வீட்டை நோக்கி நடந்தான். வீட்டின் வாசலில் ஒருவர் அமர்ந்திருக்க. அவர் அருகில் சென்று, “சத்யமூர்த்தி ஐயாவை பார்க்கணும்“ என்றபடி அவரிடம் கூற.

அவன் காரை கண்டவர் அவன் யார் என்று உடனே அடையாளம் கண்டுகொண்டார்.

“என்னவாக இருக்கும்“ என்ற யோசனையுடன் வீட்டின் உள் அழைத்துச் சென்றார் ராஜா.

வீட்டு ஹால் சுவற்றில் தேவ் போட்டோ பெரிய அளவில் மாலை போட்டு வைத்திருக்க. அதைப் பார்த்தவன் அதிர்ந்து போனான். அவனையும் அறியாமல் அவன் வாய் “பாஸ்“ என்று முணுமுணுத்தது.

இதுவரை அவன் தேவ்வை நேரில் பார்த்ததில்லை. ஒரே ஒரு நாள் தூரத்தில் இருந்து பார்த்ததோடு சரி. அவன் முகம் கூட அவனுக்கு மறந்து போனது. ஆனால் இன்று போட்டோவில் பார்க்கவும் அதில் அவன் விஷ்ணுவை கண்டான்.

அதன் அருகில் மற்றொரு போட்டோ இடம் பெற்றிருக்க. அதை நன்றாக உற்றுப் பார்த்தவன் மீண்டும் அதிர்ந்தான். “இது பாஸ் எதிரி அல்லவா?“ எங்கோ தவறு நேர்ந்திருக்கிறது.

உடனே மூர்த்திக்கு அழைத்தான் அகில். அதே நேரம் தேஷிகாவும் கீர்த்தியை தான் அழைத்தாள்.

அப்பொழுது தான் விஷ்ணுவிடம் பேசிவிட்டு. அப்பார்ட்மென்ட் வரவும் தேஷி அழைக்க, “சொல்லு தேஷி“ என்றாள்.

“அண்ணி அவர் வந்திருக்கார்“ மொட்டையாகக் கூறினாள் அவள்.

“யாருடி அந்த அவர்“ கடுப்புடன் வினவினாள் அவள். விஷ்ணுவிடம் பேசிய கடுப்பு அது.

“அகில்“

“என்ன அகில் அங்க வந்திருக்கானா?” வேகமாகக் கேட்டாள்.

அவளுக்குத் தெரியவேண்டி இருந்தது. ஆக அவனை அங்கு அனுப்பி விட்டு தான் என்னை ஹோட்டலுக்கு அழைத்தானா? விஷ்ணு. பல்லைகடித்துக் கொண்டாள்.

“ஆமா வந்திருக்கார்“

“என்ன விஷயமாம்?” கீர்த்திக்கு உடனே தெரிய வேண்டி இருந்தது.

“தெரியல. தாத்தா கூடப் பேசிட்டு இருக்காங்க“

“சரி. உடனே கிளம்பி வருகிறேன்“ என்றவள் உடனே அங்குக் கிளம்பினாள்.

கொ(வெ)ல்வாள்.

நல்லதோர் வீணை செய்தே – அதை

நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?

சொல்லடி சிவசக்தி – எனைச்

சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.

வல்லமை தாராயோ. – இந்த

மாநிலம் பயனுற வாழ்வதற்கே?

சொல்லடி. சிவசக்தி – நிலச்

சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?

 

Leave a Reply

error: Content is protected !!