உள்ளத்தின் காதல் நீங்காதடி-6
உள்ளத்தின் காதல் நீங்காதடி-6
காதல்- காதலைச் சொல்ல எத்தனை வழிகள் இருந்தாலும், தனக்கென்று வருகையிலே மொத்த மூளையும் காலியாகி விடுகிறதே!
காதல்_6
பூரி கட்டையைத் தட்டிவிட்டவள் ஆக்ரோஷமாகக் கத்த துவங்கி விட்டாள்.
“கொலை முயற்சி, என் உயிருக்கு ஆபத்து, முதலில் காவல்துறை கம்ப்ளையிண்ட் கொடுக்கணும் . எனக்கு ஏதாவது ஆனா அதுக்கு என்னைப் பெற்ற புண்ணியவதிதான் காரணம்!” என்று கிட்சனை ஒரு கண்ணால் நோட்டம் விட்டபடி சொன்னவள். இந்த முறை என்ன வருமோ என்று பதறியபடி பார்க்க, அவள் தாயே தரிசனம் தந்தார்.
“கம்ப்ளையிண்ட் குடுப்பியா, போய் குடேன், இன்றொன்றும் சேர்த்துக்கொடு, எங்க அம்மா என் மண்டையை உடைச்சிட்டாங்கனு” என்று கூறிக்கொண்டே கீழே விழுந்திருந்த கட்டையை எடுத்தவர் அவளை விரட்ட,
அவரின் கைகளில் சிக்காமல் பறந்தவள், “நோ மம்மி… நோ வயலன்ஸ். நீ எனக்கு ஒரே அம்மா! சீ…சீ… நான் உனக்கு ஒரே பெண்ணில்லையா ? “என்றாள் ஓடியபடியே.
“நீ பொண்ணே இல்லடி. வாலில்லாத குரங்கு, மரியாதையா நில்லு” என்று அவரும் துரத்தியபடி கூறிக்கொண்டிருக்கும்போதே சோபாவின் முனையில் காலில் இடித்துக்கொண்டாள் மீரா.
கால் வலி உயிர்போக, “அம்மா”என்று அலறிவிட்டிருந்தாள் மீரா, அதில் பயந்துபோன ராதாவும்.
“எத்தனை தடவை சொன்னேன், ஓடக்கூடாதென்று”என்று அவளைக் கண்டித்தவர் அவளது காலை ஆராய முற்பட,
அதைத் தடுத்தவளாக,”நானும் எத்தனை முறை சொன்னேன் என்னை துரத்தாதேன்னு… “என்று இடைவெளி விட்டவளும் பின், “நீங்கப் போய் என் காலை தொடலாமா, தாயைத் தெய்வமாய் மதிப்பவள் நான்”என்று ஒரு போடு போட.
அவளின் அந்த வார்த்தைகளில் அதிர்ந்தவராக “அடியேய், பொய் பேசலாம், இப்படி அண்டா அண்டாவா புழுகக்கூடாது “என்று அவளது கையில் ஒன்று வைக்க.
மறுபடியும் கத்தியவள் “நீயெல்லாம் ஒரு தாய், ஆல்ரெடி காலுல அடிப்பட்டுக் கத்திக்கிட்டு இருக்கேன்…யூ, கையில் அடிச்சிபையிங்” என்று போலியாக குறைபட்டுக் கொண்டவள்.
அவளின் முகத்தில் உண்மையான வேதனையையும் கண்டவர், இதற்கு மேல் முடியாது என்று அவளை அதட்டினார். “மீரா, போதும் உன் விளையாட்டு. காலை காட்டு நான் பார்க்கிறேன்” என்று கண்டிக்க,
தன் வாயை கப்சிப் என்று மூடிக்கொண்டவள் தன் காலை முன் நகர்த்திக் காட்டினாள். பெறு விரல் நகம் பிய்ந்து, இரத்தம் கசிய, அடிப்பட்டவளைக் காட்டிலும் அடிப்பட்டவளின் தாயிற்கு வலித்தது. வீட்டில் அவசரத்திற்கு என்று வைத்திருக்கும் முதல் உதவி பெட்டியைக் கொண்டு வந்தவர், அவசரமாய் அவளுக்கு மருந்திட்டார் .
டெட்டால் கொண்டு முதலில் அவளது இரத்தத்தைச் சுத்தம் செய்தவராக, பஞ்சால் மெல்ல அவளின் விரலின் காயத்தில் ஒற்றியெடுக்க மீராவின் முகமே அவளின் வலியை எடுத்துக்கூற,பஞ்சை வைத்து காட்டன் பேன்ட் எய்டால் கட்டியவரின் கண்ணீர்த் துளி அவளின் காலில் பட்டுவிட, அவள் அன்னையின் அந்த தூய்மையான அன்பில் நெகிழ்ந்தவளாக,
‘இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும், இவரையே எனக்குத் தாயாய் கொடு இறைவா,’என்று அவள் உளமார வேண்டுகையில்,
அவளின் மனமோ, ‘தாய் மட்டும் இவரே போதுமா… இல்லை வேறு யாரும் வேண்டுமா?’ என்று கேட்ட கேள்வியில் அதிர்ந்து விட்டாள்.
தன் மனதின் எண்ணப்போக்கை அறிந்தவளாக ‘அது எப்படி நடக்கும்? அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை…தேவையில்லாமல் நீயே ஏதாவது கற்பனை பண்ணிக்கொண்டு அப்புறம் வருத்தப்படாதே’ என்று தன்னையே அடக்கிக்கொண்டவளின் நினைவில் அவனின் நினைவுகள் மட்டும், அந்த வலியிலும் அவளது அதரங்களில் குறுநகை.
பின் நினைவு வந்தவளாக, “அம்மா, சீக்கிரம் நான் கிளம்பனும்” என்றாள்.
அவளை உக்கிரமாக முறைத்தவரும் “காலை வெளியே எடுத்து வை, நான் யாருனு காட்டுகிறேன் இன்றைக்கு” என்று உக்கிரமாக மிரட்ட.
அதற்கெல்லாம் அசருபவளா மீரா “ஓகே, அப்போ வண்டியை பத்தி என்கிட்ட கேட்காத”என்று அவளே அவளது தாயின் பழைய கோபத்தை நியாபகபடுத்தி விடக் கோபத்தின் மொத்த உருவமாய் மாறியவர்.
“எங்கடி வண்டி? வந்ததுமே கேட்கவேண்டுமென்று இருந்தேன், மரியாதையா சொல்லு?”என்று ஒரு விரல் நீட்டி மிரட்ட.
அதை தூசி எனத் தட்டியவள் “நான் போனா வண்டி வந்திடும்”என்றாள் அசால்ட்டாக.
அவளின் அந்த பதிலில் கடுப்பானவர் “உன்னையெல்லாம்… போய்ட்டு சீக்கிரம் வா, அதுவும் வண்டியோட!”என்றார்.
அவசரமாய் போய் லைசண்ஸை தேடி எடுத்தவளும் வாசலுக்கு விரைய, அவளுடன் வாசல் வரை சென்ற அவளது தாயும் “பார்த்து போ, ஆட்டோல போ”என்று கூறவும் தவறவில்லை.
****************
ஒரு ஆட்டோவை பிடித்தவள் உதயிடம் வந்தவளாக அவன் அலைப்பேசியில் யாருடனோ பேசுவது தெரிய முதலில் மௌனம் காக்க நினைக்க ஆனால் அவளின் இயல்பு அதை விடாததால், “ஹலோ மிஸ்டர்”என்றிருந்தாள் உரக்க.
அதில் அவளைத் திரும்பிப் பார்த்தவனும் ‘நீ யார் ?’என்ற ரீதியில் ஒரு பார்வை பார்த்து வைக்க, கடுப்பானவளோ, “என் வண்டி சாவி தறீங்களா? எனக்கு லேட் ஆச்சு” என்றாள் அதீத கடுப்போடு.
அவசரமாய் “ஒன் மினிட்”என்று அலைப்பேசியில் உறைத்தவன் அதை ஹோல்டில் போட்டவனாக.
“பேஸிக் மேனர்ஸ் தெரியாதா உங்களுக்கு? நான் இங்க வெட்டியாலாம் பேசிட்டு இல்ல, ஒரு அபிஷியல் கால், உங்க இஷ்டத்துக்கு கத்திட்டு இருக்கீங்க” என்று அவனும் கத்த.
இவளும் “உங்களுக்கு மட்டும் தான் வேலை வெட்டி இருக்கிறதா நினைப்பா? எங்களுக்கும் இருக்கு, நீங்க வண்டியை கொடுத்தால்தான் நான் கிளம்ப முடியும்”என்று கத்தியவளின் கத்தல்களைப் புறம் தள்ளியவன்.
“இப்போது தர முடியாது, கொஞ்ச நேரம் வெய்ட் பண்ணி வாங்கிட்டு போங்க இல்லாவிட்டால், உங்க வேலைகளை முடித்துக்கொண்டு அப்புறம் வந்து வாங்கிக்கோங்க”எற்று அவளது பீபீமை எகிறவைத்தவன், சற்று தள்ளிச் சென்று தன் பேச்சைத் தொடர.
கடுகு போட்டால் பொறிந்துவிடும் அளவிற்குக் கடுப்பின் உச்சத்தில் இருந்தவள் “வேணும்னே பண்றானா? இல்லை தெரியாமல் பண்றானா? பரதேசி பயப்புள்ள” என்று அவனை வாயிற்குள் திட்டியவள் திரும்பி நின்றுகொள்ள.
திரும்பியதும் அவளையே பார்த்திருந்தவனின் பார்வையில் தெரிந்தது என்ன என்றே புரியாத ஒரு உணர்வு. அதன் பெயர் தடுமாற்றமா காதலா? தேடலா? அன்பா? பரிவா? நட்பா?சந்தோஷமா? கோபமா? ஆத்திரமா? அல்லது இதன் எதற்குள்ளும் அடங்காத ஒரு உணர்வையா ?
சரியாக ஒரு மணி நேரம் அவளது பொறுமையைச் சோதித்தவன் “குடுங்க மிஸ்”என்றான் எள்ளலாக.
முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க அதை அவள் நீட்ட வெகு நிதானமாக அதை வாங்கி பார்த்தவன் அவளையும் லைசண்ஸையும் உன்னித்துப் பார்க்க, அவனின் பார்வை அவளைச் சில்லிட வைக்க, கோபத்தின் அளவோ பிய்த்துக்கொண்டு செல்ல.
அவளை மேலும் கடுப்பாக்க அவளின் உச்சி முதல் பாதம் வரை அவன் கூர்ந்து நோக்க அவனது கூரிய விழியின் தாக்கம் அவளைத் தடுமாறச் செய்ய “போட்டோல இவ்ளோதான் இருக்கும்” என்றாள் அவளது கழுத்திற்குச் சற்றே கையை கீழிறக்கிக் கடுப்போடு.
ஏளனமாக உதட்டை வளைத்தவன் “இந்தாங்க மிஸ்… இப்போது நீங்க உங்க மெடிக்கல் கல்லூரிக்குப் போகலாம்”என்றான் அவளை வெறுப்பேத்தவென்று.
வெடிக்கென்று லைசண்ஸையும் சாவியையும் பிடுங்கியவளும், “அது எங்களுக்குத் தெரியும்”என்று அவள் வாயிற்குள் முனங்க, அதைச் சரியாக உள்வாங்கிக்கொண்டவனும் அவளை அசராது பார்க்க.
வெடுக்கென்று திரும்பி நடந்தவளின் கோபத்தை ரசித்தவனின் பார்வை அவளது முதுகை துளைக்க குடுகுடுவென சென்று வண்டியை எடுத்தாள்.அவள் புறப்படப் போகையில்.
“ஒரு நிமிஷம்”என்றவனோ, நிதானமாய் அவளின் அருகே சென்று “ஏன் தலை முதல் பாதம் வரை பார்த்தேனென்று கேட்டீங்கல்ல அது எதுக்குனு சொல்லிவிடுகிறேன்”என்றான் பீடிகையுடன்.
அவள் அவனைப் புரியாது நோக்க அவளின் கண்களைப் பார்த்துக் கூறினான் அந்த வார்த்தையை.
“நீ பொண்ணுதானான்னு ஒரு டவுட்,அதான் பார்த்தான், நீ தெரியாம பெண்ணா பிறந்துட்ட””என்று அவன் முடிக்கவில்லை.
“போடா எருமை”என்று பறந்திருந்தாள் மீரா, அவளின் கோபத்தின் அளவு அவள் வண்டியை முறுக்கிய வேகத்திலே தெரியச் சிரித்துவிட்டான் உதய்.
இந்த வார்த்தையை உதயைத் ரசிக்கத்தான் செய்தான்,இதை வேறு யாரவது சொல்லியிருந்தால் அவளை விட்டுவிடுவானா எனன, அது தான் நடக்கவில்லையே…
************
வழக்கத்திற்கு மாறாக உற்சாகமாகக் காணப்பட்டான் உதய், அவனின் நினைவுகள் டைம் மிஷின் என்கிற ஒன்றில்லாமையே பின்னோக்கி நகர்ந்தது சில பசுமையான நினைவுகளின் தாக்கம், சிலது அவன் மனதின் மகிழ்வுகள், சிலது அவன் மனதின் வலிகள்.
இன்றைய பொழுதில் அவன் உள்மனத்தில் தோன்றிய உற்சாகத்தின் காரணத்தை அறிந்துகொண்டவனுக்கோ கால்கள் தரையில் இல்லை…
அவனின் அவளின் ஞாபகங்களில் சிக்கித் தவித்தவனுக்கோ காதலின் ஏக்கங்கள். அறியாத வயதில் அவளின் கைபிடித்த நடந்திருக்கிறான். கட்டியணைத்திருக்கிறான். தோள் சாய்ந்திருக்கிறான். ஆனால், அது பப்பி லவ், அது லவ் என்றே சொல்லமுடியாத, உணரமுடியாத லவ்வாக இருந்தது.
சிறு வயது காதல் என்ன மாதிரி காதல்? உள்ளத்தின் காதலே,மனதின் காதலே அவளின்பால் அவனும், அவனின்பால் அவளும் அன்பு கொண்டு,காதல் கொண்டு அதையே நினைத்து வாழ்வது, உலகத்தின் தூய்மையான காதலுக்கே ஒரு எடுத்துக்காட்டுதானே?
அவனின் காதல் மனதோ இப்பொழுது நான் அவளின் கைகளைப் பிடித்தால் எப்படி அவள் முகம் சிவப்பாள் என்று புது கனவுகளைக் காண ஆரம்பிக்க, தன் தலையில் தானே நங்கென்று கொட்டிக்கொண்டவன் “ஏன்டா டேய், நீ இன்றைக்குப் பண்ணிய வேலைக்கு அவ இனிமே உன்ன பார்த்தா கண்ணத்துலையே ஒன்னு வைப்பா”என்று தன்னையே நொந்துக்கொண்டவன்.
பின், “அடிச்சா வாங்கிக்க வேண்டிதான்”என்றவனின் எண்ணமோ காதலுக்கே உரித்தான வெ .மா.சூ,சு என்ற அனைத்தையும் சேட்டுக் கடையில் அடைமானம் வைத்தவனாக, காதலின் முதல் விதியில் பாசாகி, பர்ஸ்ட் கிளாஸ் மதிப்பெண்ணையும் எடுத்துவிட்டிருந்தான்.
ஆனால் வெகுநாட்களுக்குப் பின்,உதய் பழைய புத்துணர்வுடன் இருந்தது என்னவோ உண்மை,பழைமையை மறக்கவும் நினைக்கிறான், அதையே போற்றியும் வைக்கிறான்.
மறக்க நினைப்பதும், நினைக்க நினைப்பதும் ஒன்றோ? இல்லை வேறு வேரோ?
விதியின் கைகளில்…
**********
அவனின் வார்த்தையில் கடுப்பின் உச்சிக்குச் சென்றவளோ, காலேஜ் செல்ல மனமில்லாததால் வண்டியை ஒரு குழந்தைகள் பூங்காவில் நிறுத்தியவள் உள்ளே சென்று ஒரு மரபெஞ்சில் அமைதியாய் அமர்ந்துகொண்டாள்.
அவளின் மனது அவளிடம் பல கேள்விகளைக் கேட்டது ‘இவ்வளவோ நடந்தும், எப்படி இப்படி பேசிட்டு இருக்கான், அதுவும் அவ்ளோ உரிமையா? முதலில் என்னைத் தெரியாத மாதிரி இருந்தான், ஒரு வேலை ஐடியில் உள்ள பேரை பார்த்து தெரிந்திருக்குமோ ‘என்று அவசரமாய் ஐடியை பேக்கில் துழாவி எடுத்தவள் அதை அவசரமாக ஆராய்ந்தால்.
சில நேரங்களில் அப்படித்தான், நமக்கு நன்றாகப் பரிச்சயமான ஒரு பொருள் அதில் உள்ள அனைத்தும் தமக்கு அத்துப்படியே, ஆயினும் நம் மனது சஞ்சலப்பட்டிருக்கும்போது அதை புதிதாக ஆராய்வோம், நமக்கு வேண்டிய தகவல் அதில் இருக்காது என்று தெரிந்தும் நம் திருப்திக்காக அதை ஆராய்வோம்.
அப்படிதான் மீராவும் செய்தால், ஐடி என்றால் அதில் பேரு, ஊரு, தந்தை பெயர் என்ற ஒரு அளவுக்குத் தேவையான அனைத்து தகவலும் இருக்கும் என்பது அவளுக்கு தெரியாதா என்ன?
அவளின் முகத்தைப் பார்த்தவனுக்குச் சந்தேகம் வந்திருக்கலாம் அதை தீர்க்க அவளது ஐடியை கேட்டிருக்கலாம், அதில் தந்தை பெயரை வைத்து மொத்தத்தையும் தெரிந்துகொள்ளலாம் அல்லவா?
இது அவளின் கணிப்பு, தலைவனின் மனதில் உள்ளது தலைவிக்குத் தெரியாமல் போனால்தானே ஆச்சரியம்.
ஏன் இருவருமே, தங்களை வெளிப்படுத்திக்கொள்ளவில்லை?ஒருவேலை இருவருக்கும் தங்களை நினைவுகூருவதில் விருப்பம் இல்லையோ.
எவ்வளவு நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தாளோ தெரியாது… சற்று நேரத்தில் தெளிவாக ஒரு முடிவு எடுத்தவளாக ‘முடிந்தது முடிந்தது தான், மனதின் உணர்வுகளைத் தீயில் பொசுக்கியபின், சாம்பலான பின் அதை எவ்வாறு பழையபடி மாற்றமுடியும்?
‘எதுவும் தன்னை மாற்றாது, யாரும் என்னை மாற்ற முடியாது’ என்று தீட்சண்யமாக முடிவெடுத்தவளோ, அவளது இல்லத்தை நோக்கிச் சென்றுவிட்டாள்.
வீட்டில் அவளுக்குக் காத்திருக்கும் விதியின் விளையாட்டைப் பற்றி அறியாது.
************