கனவு 10

கனவு 10

அத்தியாயம்-10

வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பிய கௌசியின் கண்ணீர் நிற்கவே இல்லை..
வழி முழுதும் அழுதுகொண்டே
வந்தவளை ரோட்டில் போகும் வண்டியின் பின் உட்கார்ந்திருக்கும் சிலர்
கவனித்துக்கொண்டு தான் சென்றனர். ஆனால் எதை உணரும் நிலையிலும்
அவள் இல்லை..

ஏனோ நான்சியின் மேல் கோபம் வரவில்லை.. ஆனால் விக்னேஷிடம் சொல்லவே முடியாமல் போயிற்றே என்ற
வேதனை மிகுதியாய்த் தெரிந்தது. அதுவும் விக்னேஷ் நான்சியின் கையை
உரிமையாய்ப் பிடித்தது கண் முன் நின்றது..

தன் சிந்தனைகளிலேயே உழன்று கொண்டு வண்டியை ஓட்டியவள் ரோட்டில் இருந்த சிறு குழியைப் பார்க்கத்
தவறிவிட்டாள். வண்டியை விட்ட வேகத்தில் ஸ்கிட் ஆக எப்படியோ சமாளித்து பாலன்ஸ் செய்ய ஸ்கூட்டி ஆப்
ஆகிவிட்டது. வண்டியை ஸ்டார்ட் செய்ய முயற்சித்து தோற்றவள் தள்ளிக்கொண்டே நடக்க ஆரம்பித்தாள்.

வழிமுழுதும் கண்ணீர் சிந்திக் கொண்டே வந்தவள் தன் வீட்டுத் தெருக்குள் நுழையும் போது பேய்மழை பெய்ய
ஆரம்பித்தது. வீட்டிற்குள் நுழைந்து வண்டியை நிறுத்திக் கொண்டு இருந்தவளுக்கு சமையல் அறை ஜன்னலின் வழியாகத் தன் தந்தையின்
குரல் கேட்டது.. கூடவே சுமதி ஜெயாவின் குரலும். பெய்யும் மழையில் அரைகுறையாகக் கேட்க ஜன்னலின் அருகில் சென்று நின்றாள் கௌசிகா.

“ஏன்ணா.. ஏன் இப்படி நினைக்கறீங்க? நம்ம கௌசியோட குணத்துக்கும்
அழகுக்கும் அந்தக் குடும்பம் தான் குடுத்து வச்சிருக்கணும்.. நகை எல்லாம் நீங்க கவலைப்படாதீங்க.. நாங்க எல்லாம் இருக்கோம்ல” என்று ஜெயா ஏதோ பேசிக்கொண்டு இருந்தார்.

“அதெல்லாம் வேண்டாம் ஜெயா.. என் பொண்ணுக்கு நான் தான் எல்லாம் செய்யணும்.. சேமிப்பு நிறையவே இருக்கு.. கோமதியின் (கௌசியின்
அன்னை) நகையும் இருக்கு.. எப்படியும் 50 பவுனாவது போட்டு அனுப்ப வேண்டாமா.. இப்போதைக்கு முதலில்
வாங்கிய ஒரு இடம் இருக்கு அதை விற்கலாம்-ன்னு இருக்கேன்” என்று பேசிய தந்தையின் குரல் கேட்டு
கௌசிக்கு சரம் சரமாய் நீர்
வழிந்தோடியது.

கல்யாணமே இப்போது வேண்டாம் என்று சொல்லி விடலாம் என்ற முடிவோடு வந்த கௌசி தன் தந்தையும் அத்தைகளும் நடத்திய உரையாடலைக் கேட்டு அதிர்ந்து நின்றாள். பேசாமல் உள்ளே சென்று நிறுத்தச் சொல்லலாமா என்று எழுந்த
எண்ணத்தில் விழுந்த மணலாய் மேலும் சில உரையாடல்களைக் கேட்டாள்.

“அண்ணா.. இடமெல்லாம் எப்போதுமே நமக்கு ஒரு காலத்துல யூஸ் ஆகும்..
அதப் போய் விக்கணுமா.. அதுவும் இல்லாம அண்ணி இருந்தப்போ நீங்க இரண்டு பேரும் சேர்ந்து வாங்கியது..
அண்ணி நியாபகம் வரும் போதெல்லாம் அங்க போயிட்டு வருவீங்க.. அதைப் போய் விக்கணுமா அண்ணா?” என்று
சுமதியின் குரல் அங்கலாய்ப்பாய் கேட்டது.
“நாங்க நம்ம கௌசிக்கு பண்ண மாட்டோமா அண்ணா?” என்றும் சுமதி
கேள்வியை வீசினார்.

“சுமதி.. ஜெயா.. நீங்க இரண்டு பேரும் முதல்ல ஒன்னப் புரிஞ்சுக்கோங்க.. இடம்
இருந்தா யூஸ் ஆகும் தான் பிற்காலத்தில்.. ஆனால் என் பெண்ணை மிஞ்சியது
எனக்கு எதுவும் இல்லை.. உன்
அண்ணியே இருந்திருந்தாலும் இதைத் தான் சொல்லியிருப்பாள் சுமதி..” என்று தெளிவானக் குரலில் தங்கைகளைப் பார்த்துப் பேசியவர் “அதுவும் இல்லாமல்
சின்ன வயதில் இருந்து ஒருவர் முகம் சுளிக்க நடக்காதவள் என் பொண்ணு. எனக்கு உன் அண்ணிக்கு அப்புறம் ஒரே
நிம்மதி அவதான்.. என் மகாலட்சுமி கூட.. அப்படிப் பட்டவளை மனசு நிறைய
அனுப்பினால் தான் எனக்கு
உண்மையான நிம்மதி” என்று
அழுத்தமாகச் சொன்னார் வரதராஜன்.

“சரி அண்ணா.. அவ தான் நைட்
அவளோட முடிவைச் சொல்றேன்னு சொல்லி இருக்காளே.. வந்து என்ன
சொல்றான்னு பாப்போம்” என்று சுமதி சொன்னார்.

“என் பொண்ணு எனக்கு சாதகமான முடிவைத் தான் எடுப்பாள்” என்று வரதராஜனின் நம்பிக்கையான குரல் ஒலிக்க வெளியே நின்றிருந்த கௌசி
வேரோடி நின்றாள்.

அழுகை தாங்கமாட்டாமல் வெளியே வர வீட்டிற்குள் வேகமாக நுழைந்து தன்
அறைக்குள் ஓடினாள்.. அதற்குள் கௌசியைப் பார்த்துவிட்ட ஜெயா அவள்
அழுதுகொண்டு போவதையும்
பார்த்துவிட்டார்.

“கௌசி நில்லு” என்று பின்னாடியே ஜெயா போக அறைக்குள் புகுந்து கதவை
சாத்திக்கொண்டாள் கௌசிகா.

ஜெயாவின் குரலைக் கேட்டு கௌசி வந்துவிட்டாள் போல என்று சமையல் அறையில் இருந்து வெளியே வந்த
வரதராஜனும் சுமதியும் ஜெயா
சொன்னதைக் கேட்டுப் பதறிவிட்டனர். “கௌசிமா கதவைத் திற…” என்று
வரதராஜன் போய் கதவைத் தட்டினார்.

“அப்பா.. ப்ளீஸ் ப்பா.. நான் கொஞ்ச நேரம் தனியாக இருக்கனும்.. யாரும்
பயப்படாதீங்க.. நானே கொஞ்ச நேரம் கழித்து வெளில வந்திருவேன்” என்று கௌசி அழுகுரலிலேயே பேச வரதராஜன் கலங்கினார்.

அங்கு அறையின் முன் நின்று எந்தப் பயனும் இல்லை என்று எண்ணிய மூவரும்.. வந்து சோபாவில் அமர்ந்தனர்.
கௌசி அழுது இதுவரை ஒருத்தருமே பார்த்ததில்லை. சிணுங்குவாளே தவிர அழுக மாட்டாள். அப்படி இருப்பவள் இப்போது எதற்கு அழுகிறாள் என்று வரதராஜன், ஜெயா, சுமதி ஆகியோரின்
எண்ணங்களில் எழுந்தது.

உள்ளே அழுதுகொண்டிருந்த
கௌசிக்கோ என்ன செய்வது என்றே தெரியவில்லை.. அப்பாவிற்குத் தன் மேல் நம்பிக்கை என்று தெரியும்..
ஆனால் எவ்வளவு நம்பிக்கை என்று இன்று தான் தெரிந்துகொண்டாள்.
ஆனால் விக்னேஷை மறப்பது என்பது அவளுக்கு சாத்தியமே இல்லாதக் காரியம். மறுக்க முடியாத உண்மையும்
கூட. இரண்டிற்கும் இடையில் சிக்கித் தவித்தாள் கௌசிகா..

தன்னையே நினைத்து தன்
சந்தோஷத்திற்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் அப்பா முக்கியம் தான்.
ஆனால் அதற்காக விக்னேஷை நினைத்துக் கொண்டு இன்னொருவனை
எப்படி மணப்பது என்று நினைக்கும் போதே கௌசியின் உடல் கூசியது. தன் நினைவுகளிலேயே அழுதழுது கரைந்தாள். அதுவும் நான்சி தன்னைப் பார்த்த “பார்த்தாயா.. கடைசியில்” என்ற பார்வையில் கௌசியின் மனமும் முகமும்
சுருங்கிவிட்டது தான். இனி “விக்கா” தனக்கில்லை என்பதை அவளால்
ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதை நினைக்க நினைக்க அழுகை
அதிகம் ஆனதே தவிர
குறைந்தபாடில்லை.

பெசன்ட் நகரில் இருந்து அடையார் வந்து சேர்ந்த விக்னேஷ் நேராக வீட்டிற்குள்
புகுந்தான்.. பைக்கில் வந்ததால் சீக்கிரமே ஜீவா மதியை விட முன்னால்
வந்து சேர்ந்தான். வீட்டிற்குள் தொப்பலாக நனைந்து வந்தவனை ஹாலில்
உட்கார்ந்திருந்த மூவரும் திடுக்கிட்டுப் பார்த்தனர்.

“கௌசி எங்க மாமா?” என்றுத் தன் சட்டை ஸ்லீவ்சை மடித்தபடி கேட்டான் விக்னேஷ்.

“ஏன் விக்கி.. உனக்கும் அவளுக்கும் ஏதாவது பிரச்னையா?” என்று
வரதராஜன் எழுந்தபடிக் கேட்டார்.

“அதெல்லாம் இல்ல.. அவ எங்கே மாமா” என்று கண்கள் இடுங்கக் கேட்டான்.

“விக்னேஷ் நாங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு முதலில்” என்று சுமதி
விக்னேஷை அதட்ட விக்னேஷ் முகம் இறுகினான்.

“……” – விக்னேஷ்.

“என்ன ஆச்சு விக்னேஷ்.. அவ
அழுதுகிட்டே வந்தா” என்று ஜெயா கௌசிகா வந்தது… கதவை சாத்தியது என அனைத்தையும் சொல்லி முடித்தார்.

“உனக்கும் அவளுக்கும் ஏதாவது பிரச்சினையா? அல்லது ஜீவா ஏதாவது
சொன்னானா?” என்று சுமதி விசாரித்தார்.

“அம்மா.. நாங்க என்ன சின்னக்
குழந்தையா? சண்டை போட்டுக் கொண்டு அழ.. எப்போதுமே மூனு பேரும்
உங்க கிட்ட சண்டைன்னு வந்து
நின்னதில்லை.. இது…” என்று
தயங்கியவன் அப்படியே நிறுத்தினான். தான் காதல் என்று சொன்னால் தன்
அம்மா ஏற்றுக் கொள்வார்களா? என்று
நினைத்தான்.. ஜீவா சொன்னபோதே முதலில் எதிர்த்தவர்கள் ஜீவாவின்
பிடிவாதத்திலும் மதியின் குணத்திலும் தான் ஒப்புக் கொண்டதே.. என்றெல்லாம்
நினைத்தவன் “ஒரு குட்டி மிஸ் அண்டர் ஸ்டான்டிங்” என்று முடித்தான்.

அவன் பேசவும் ட்ராபிக்கில் மாட்டியிருந்த ஜீவாவும் மதியும் காரில் வந்து இறங்கவும்
சரியாக இருந்தது.

“இன்னிக்கு கௌசிகிட்ட கல்யாணத்தைப் பத்தி பேசினேன் விக்னேஷ்.. அவள்
அழுது கொண்டு வந்ததும் காதல்ன்னு இருக்குமோன்னு கற்பனை எல்லாம்
செஞ்சுட்டேன்” என்று பெருமூச்சை விட்டார் வரதராஜன்.

உள்ளே வந்த ஜீவாவும் மதியும் என்ன நடந்தது என்று தெரியாமல் நாம் வாய்விட
வேண்டாம் என்றபடி நின்றனர்.

“அவ இன்னும் ரூமில் தான் இருக்காளா?” என்று கேட்டபடி நகர்ந்தவன் கௌசியின்
ரூம் முன்னால் நின்று கதவைத்
தட்டினான்.

“கௌசி கதவைத் திற” என்றான் விக்னேஷ் அறைக் கதவைத் தட்டியபடியே.
கௌசியிடம் பதிலே இல்லை..

“கௌசி” என்று மறுபடியும் கதவைத் வேகமாகத் தட்ட சுவற்றில் மோதியது
போலத் தான் ஆகியது.

“கௌசி” என்று பொறுமை இழந்து கதவை இடியெனத் தட்டியவன் “இப்போ நீ கதவைத் திறக்கல-ன்னா நான்
உடைத்து விடுவேன்” என்று விக்னேஷ் குரலை உயர்த்திச் சொன்னான்.

“கௌசி…” என்று கதவை இடிக்கத் திரும்பியவன் கதவு திறக்கப்படும் ஓசை கேட்டு நின்றுவிட்டான்.

விக்னேஷ் வந்ததில் இருந்து
ஒவ்வொன்றும் கௌசியின் காதில் விழுந்து கொண்டுதான் இருந்தது. அழுது கொண்டே படுத்திருந்தவள் அவன்
அப்பாவும் அத்தைகளையும் கேட்கும் கேள்விகளுக்கு நன்றாக சமாளிப்பதைக்
கேட்டு இன்னும் கண்களில் இருந்து கண்ணீர் மணிகளை விட்டாள். ஜீவாவும் மதியும் வந்ததும் நன்றாகவே
உணர்ந்தாள்.

விக்னேஷ் வந்து கதவைத் தட்ட
அவளுக்குத் திறக்கவே தோன்றவில்லை.. தன் பெட்டில் படுத்திருந்தவள் அவன்
கதவைத் தட்டி தன் பெயர் சொல்லிக் கூப்பிடவும் தன் தலையணையில்
புதைந்தபடி கண்ணீர் விட்டாள். அவன் மீண்டும் மீண்டும் கதவைத் தட்டவும் அவளுக்குக் கதவைத் திறக்கத்
தோன்றினாலும் அவன் முகத்தை எதிர்கொள்ள முடியாது என்பதால் எழுந்து
உட்கார்ந்து அப்படியே தன் அறைக் கதவை வெறித்தாள். இறுதியில் அவன் கதவை உடைப்பேன் என்று மிரட்டவே
‘செய்தாலும் செய்துவிடுவான்’ என்று கதவின் லாக்கை மட்டும் திறந்து தன் கட்டிலில் போய் அமர்ந்துவிட்டாள் கௌசிகா.

கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்த விக்னேஷ் கதவை இழுத்து சாத்தி மூடி லாக் செய்தான்.

“எதுக்குடி எந்திருச்சு வந்தே?” என்று அழுத்தமானக் கேள்வியோடு கௌசியின்
பக்கத்தில் சென்று நின்றான்.

அமைதியாக கண்ணீர் சிந்தியபடியே எதுவும் பேசாமல் உட்கார்ந்திருந்தாள் கௌசிகா.. என்ன சொல்லுவது என்று
தெரியாமல் உட்கார்ந்திருந்தவளைக்
கண்டு எரிச்சல் உற்றவன் “இங்கே பார்” என்றான்.

தலையைக் குனிந்தபடியே
உட்கார்ந்திருந்தவளின் கன்னத்தை அழுத்தமாகப் பற்றித் தூக்கியவன் “உனக்கு இப்போ என்ன பிரச்சனை
கௌசி சொல்லு” எனக் கேட்டான்.

அவனைக் கட்டிப்பிடித்து நான் உன்னைத் தான் காதலிக்கிறேன் என்று சொல்லு என்று கதறிய மனதை அடக்கியவளின்
கண்களில் மனதின் வலி தாளாமல் கண்ணீர் வந்தது. கன்னங்களில் வழிந்த
கண்ணீர் கௌசியைப் பற்றி இருந்த விக்னேஷின் கையில் விழ விக்னேஷின் கைகள் தானாகக் அவளின் கண்ணீரை விட்டது. அவள் அழுதே பார்க்காதவன்
இன்று அவள் இப்படி கண்ணீர்
விடுவதைப் பார்க்க அவனின் மனம் ஏனோ சோர்ந்தது உண்மைதான்.

அவள் அருகில் உட்கார்ந்த விக்னேஷ் அவளின் கண்களை அழுத்தித்
துடைத்தான். அவளின் கைகளைப் பற்றி “என்னாச்சு கௌசி.. ஏன் அழறே?..” என்று கேட்டான் அவளின் கைகளை
பற்றியபடி.. ஏனோ அவன் நான்சியின் கையைப் பற்றியது நினைவு வர கௌசி
அவன் கைகளில் இருந்து தன் கையைத் தானாக விடுவித்தாள்.

“ஏன் விக்கா.. என்கிட்ட மறச்ச?” என்று தன் மனதில் எழுந்த முதல் கேள்வியைக் கேட்டாள்.

பதில் பேசாமல் இருந்தவனிடம் “நான் ஸ்கூல்ல பண்ணின மாதிரி ஏதாவது பண்ணி உங்களை பிரிச்சிடுவேன்-னு
நினைச்சையா? என்று தன் மனதில் நினைத்தை விக்னேஷின் முகத்தைப்
பார்த்து நீர் தேங்கிய விழிகளுடன் கேட்க
விக்னேஷின் முகம் கறுத்துவிட்டது.

“சொல்லு விக்கா.. அதை நினைச்சுத் தானே என்கிட்ட மறச்ச?” என்று அவன் தோளைப் பிடித்து இழுத்துக் கேட்கவிக்னேஷ் அவளையே பார்த்தபடி பதில் பேச முடியாமல் இருந்தான்.

“கௌசி ப்ளீஸ் அழறதை பர்ஸ்ட் நிறுத்து..” என்று கண்களை இறுக மூடிச்
சொல்ல கௌசி எழுந்தாள்.

“அவ்வளவு கேவலமாக எல்லாம் நான் நடந்துக்க மாட்டேன் விக்கா” என்று
எங்கோ பார்த்துச் சொல்ல விக்னேஷும் எழுந்தான்.

“ஆமாம் கௌசி.. உன்கிட்ட மறச்சேன் தான்.. அதுக்கு இரண்டு காரணங்கள்
இருக்கு.. பர்ஸ்ட் நீ என் மேல ரொம்ப பொசஸிவ்.. நீ ஒத்துக்கொள்ளவில்லை
என்றாலும் அதான் உண்மை கௌசி.. இரண்டாவது நான்சி வெளில தெரிய வேண்டாம் என்றாள். அவள் வீட்டில்
தெரிந்தால் பிரச்சினை ஆகிவிடும் என்று..” விக்னேஷ் பேசிக்கொண்டிருக்க
கௌசிகா இடையில் புகுந்தாள்.

“இன்று நீ அவ வீட்டுக்க போவறக்கு மட்டும் சம்மதித்து விட்டாளாக்கும்” என்று
வெடுக்கெனக் கேட்டாள். அவளின் மனதில் நான்சியின் மேல் இருந்த வெறுப்பை அப்படியே வெளியே
காட்டினாள் தன்னையும் மீறி.

“கௌசி….” என்று விக்னேஷ் அதட்ட “என்னிடம் எவ்வளவு பொய்.. இப்போது கூட என்னிடம் சண்டைக்கு நிற்கிறாய் இல்லை” என்று அழுதாள். அவளிற்காக
தன்னை அதட்டுகிறான் என்று அவளிற்கு துக்கம் தொண்டையை அடைத்தது.

“கௌசி.. இதே உன்னைப் பற்றி நான்சி தப்பாக நினைத்துச் சொன்னாலும் நான் அவளையும் அதட்டியிருப்பேன் டி.. ஆனால் நீ சொன்ன பாரு… உன்னை
கேவலமாக் நினைச்சுன்னு.. அப்படி ஒரு நாள் கூட நினைத்தது இல்லை டி..
நான் முன்னாடி சொன்ன இரண்டு ரீசன் தான்டி உண்மை” என்றவன் அவளின்
தோளைச் சுற்றிப் பிடித்தான்.

“என்னடி உன்னை நான் அப்படி
நினைப்பேனா? அவ்வளவு தான் நீ என்னப் பத்தி நினைச்சதா?” என்று கேட்க அப்படியே நின்றாள்.

“அதுவும் இல்லாமல் எனக்கு நான்சியை ரொம்ப பிடிச்சிருக்கு கௌசி.. அவளோட ஹோம்லினெஸ்.. என்னைக் கேர் பண்ற விதம்.. அடக்கமா அமைதியா இருக்கிறது..” என்று விக்னேஷ் பேசப்பேச கௌசிக்கு மனம் விம்பியது. அவன் சொன்ன அனைத்து குணங்கலும்
கௌசிக்கு எதிரானது. ஆனால் அவன் சொன்ன கேர் மட்டும் நான்சியை விட கௌசியிடம் அதிகமாகவே இருந்தது.
அதை விக்னேஷ் தான் உணரவில்லை.

“நான் அப்படி அடக்கமாக இருந்திருந்தா என்னையும் பிடித்திருக்குமா உனக்கு”
என்று கேட்க என்னிய நாவை
கட்டுப்படுத்த சிரமப்பட்டாள் கௌசிகா.

“சரி கௌசி… உன் கல்யாணத்தைப் பத்தி
மாமாட்ட என்ன சொல்லப்போற?” என்று
கேட்டான் விக்னேஷ்.

“எனக்கு கல்யாணம் வேண்டாம் இப்போ” என்றாள் கௌசிகா சுவற்றை
வெறித்தபடி.

“ஏன் வேண்டாம்… யாரையாவது லவ் பண்றையா?” என்று அவளைக் கூர்ந்து பார்த்துக் கேட்க கௌசிகா அவனை
முறைத்தாள். உன்கிட்டையே எப்படிடா உன் பெயரை சொல்லுவேன் என்று கௌசியின் மனம் ஊமையாய் அழுதது.

தன் மனதில் இருந்ததை மறைத்தவள் “அப்படி இருந்திருந்தா உன்னைப் போல மறைத்திருக்க மாட்டேன்” என்று முறைத்தபடியே கௌசிகா சொல்ல விக்னேஷ் சிரித்தான்.

“என்ன குத்திக் காட்றியா? சரி உனக்கு எப்போது எல்லாம் தோணுதோ பண்ணு.. நான் எதுவும் சொல்லலை…” என்றவன் “கல்யாணம் ஏன் வேண்டாம்-ன்னு சொல்லு” எனக் கேட்டான்.

“எ… என… எனக்கு” என்று யோசித்தவள் “எனக்கு அப்பாவை விட்டுப் போக
மனசில்லை” என்றாள்.. சொன்னவளால் அழுகையை அடக்க முடியவில்லை.. மூச்சை இழுத்து இழுத்து அழுதாள்.

“கௌசி என்னடி இது சின்னக் குழந்தை மாதிரி அழுதிட்டு.. அதுவும் கௌசிக்-க்கு அழுகத் தெரியும்-ன்னு இன்னிக்கு தான் எனக்குத் தெரியுது…” என்று அவள் நிலைமையை அறியாமல் அவளை சிரிக்க வைக்க எண்ணி நக்கல்
செய்தவன் “இங்க பாரு கௌசி.. நான் சொல்றதைக் கேளு.. பையன் சென்னை
தான்.. எனக்குத் தெரிந்தவனும் கூட.. என்கூட ஸ்கூல்ல +1,+2 படிச்சான்.. நல்ல பையன் தான்.. நீயும் யாரையும் லவ்
பண்ணலன்னு சொல்ற.. நீ மட்டும் ஓகே சொன்னா எவ்வளவு சந்தோஷப்படுவோம் தெரியுமா?” என்று நீளமாகப் பேசினான்.

அவன் பேசப் பேச கௌசிக்கு தான் ஏதோ உள்ளே குத்திக் காயப்படுத்துவது போல
இருந்தது. அவனே இன்னொருவனை கல்யாணம் செய்துகொள் என்று
கட்டாயப்படுத்துவது அவளை ஏதோ நரகத்தில் தள்ளுவது போல இருந்தது.

“உனக்குப் பையனைப் பார்க்க
வேண்டுமா? அப்படி இருந்தாலும் சொல்லு நான் அரேன்ஜ் பண்றேன்”
என்று விக்னேஷ் சொல்ல “வேண்டாம்” என்று அவசரமாகத் தலை ஆட்டினாள்
கௌசிகா.

“அப்போ உனக்கு ஓகே வா?” என்று விக்னேஷ் கேட்க அவன் கண்களை நிமிர்ந்து பார்த்தவளின் முகத்தில்
அத்தனை பயம்.. பதட்டம்.. வேதனையும்..

கௌசிக்கு ஏதோ தன்னை எல்லோரும் அடைத்தது போல இருந்தது.. அப்பாவின்
நம்பிக்கையும் பாசமும் ஒரு பக்கம்.. விக்னேஷ் காதலிக்காமல் இருந்திருந்தாவது அவனிடம்
சொல்லியிருக்கலாம்.. இவனுடன் வாழ்க்கை முழுதும் சண்டைபோட்டு வாழ
நினைத்தவளை அவனே
இன்னொருவனை மணக்கச் சொல்லிக் கேட்பது ஏதோ உயிரையே பறிப்பது போல இருந்தது.

“ஏன்டி பதட்டப்படறே.. ஒன்னும் இல்லை.. தலையை மட்டும் ஆட்டு போதும் என்று”
அவளின் கையைப் பிடிக்க வேண்டியவன் இன்னொருவனின் கையைப் பிடிக்க தைரியம் சொல்லிக் கொண்டு இருந்தான்.

ஏனோ எனக்கு விருப்பம் என்று சொல்ல கௌசிக்கு வாய் வரவில்லை. “உங்க
எல்லாருக்கும் சம்மதம்னா.. உங்க விருப்பப்படியே எல்லாம் நடக்கட்டும்” என்று அவள் மனதை பாறையாக வைத்துச் சொல்ல விக்னேஷ் அவளை
வெளியே அழைத்துச் சென்றான்..

வெளியே வர அனைவரும்
இருவருக்காகவே காத்திருந்தனர்..

“மாமா.. கௌசிக்கு கல்யாணத்தில் சம்மதம்.. உங்களை பிரிந்து போகணும்ன்னு தான் இவ்ளோ அழுகை” என்று விக்னேஷ் சொல்ல எல்லோரும்
கௌசியைக் கவனித்தனர்.

அழுது சிவந்திருந்த கண்களைப் பார்த்த
வரதராஜன் “கௌசிமா.. மாப்பிள்ளை சென்னை தான்.. இதுக்கா இப்படி அழுதாய். நான் என்னவோ ஏதோ என்று
பயந்துட்டேன்..” என்று கௌசியின் அருகில் வந்தவர் அவளின் கண்களில் இருந்த கண்ணீரைத் துடைத்துவிட்டார்.

கௌசி சம்மதம் சொன்னவுடன்
மாப்பிள்ளை வீட்டிற்கு போன் செய்து சொன்னவர் மகிழ்ச்சியின் உச்சியில்
இருந்தார். சின்னப் பையன் போல நடந்து கொண்டிருந்தவரைப் பார்க்க
அனைவருக்கும் வியப்பாக இருந்தது. தன் கல்யாணத்தில் இவ்வளவு சந்தோஷமா இவருக்கு என்று யோசித்தக்
கௌசி… அதுதான் அந்த ஆண்டவன் என் சந்தோஷத்தையும் இவருக்கே
குடுத்திட்டான் போல விரக்திப் புன்னகை சிந்தினாள்.

எல்லோரும் இரவு அங்கேயே சாப்பிட முடிவு செய்ய கௌசியின் அத்தையின்
கணவர்களும் சந்தியா என அனைவரும் வந்தனர்.. எல்லோரும் சாப்பிட்டு விட்டுக்
கிளம்ப கௌசியின் அருகில் வந்த மதி “உண்மையாகவே உனக்கு இதில் சம்மதமா கௌசி?” என்று கௌசியிடம்
கேட்டாள் மதி.

“ம்ம்” – கௌசிகா வெறுமனே தலையை ஆட்டினாள்.

“வாயைத் திறந்து பேசாமல் இருப்பவளா நீ?” என்று நேராகப் பார்த்து மதி கேட்க
கௌசி தடுமாறினாள்.. யாருக்கு உண்மை தெரிந்தாலும் பிரச்சினை
தானே..

“எனக்கு இன்னும் கல்யாணம்-ன்னு மைன்ட் செட் ஆகலை.. அதான் திடீரென இப்படி இருக்கு மதி.” – என்று
சமாளித்தாள் கௌசிகா.

“சரி வரேன் கௌசி.. குட் நைட்” என்று சொல்ல அனைவரும் கிளம்பினர்.. விக்னேஷும் பயங்கரக் குஷியாகக்
கிளம்புவதை இயலாமையுடன் பார்த்துக் கொண்டு நின்றிருந்தவள் எல்லோரும்
சென்ற பின் தன் அறைக்குள் புகுந்தாள்.

அறைக்குள் புகுந்தவள் நள்ளிரவு வரை ஜன்னலின் வெளியவே வெறித்துக்
கொண்டிருந்தாள். பிறகு திரும்பிப் படுக்க வந்து கட்டிலில் அமர்ந்தவளுக்கு
அவளுடைய டேபிளில் இருந்த டைரி கண்ணில் பட்டது.. எடுத்து வந்து உட்கார்ந்து படிக்க ஆரம்பித்தவள் பாதியில் நிறுத்தி அதைக் நெச்சோடு
சேர்த்து வைத்து குலுங்கி குலுங்கி அழுதாள்.

மீண்டும் டைரியைப் பிரித்தவள் தன் மனதில் தோன்றிய ஒன்றை எழுத
ஆரம்பித்தாள்.

“பிடிக்கவில்லை என்று உதிர்த்த வார்த்தையைத்
தாங்கியிருப்பேனோ?
அதை விட உன் காதலியோடு
பார்க்கும்போது உயிர் நின்றுவிட்டது.
வாழ்க்கையை ரசித்த எனக்கு
இப்போது அவளாகப் பிறந்திருந்தால்?
என்ற ஏக்கம் வதைக்கிறது..
அப்போது உன்னோடு வாழ்ந்திருப்பேனே.
உன்னுடன் கைகோர்க்க
நினைத்தவளுக்கு
நீ அடுத்தவருடன் கைகோர்க்க சொல்வது
நியாயமா?”
என்று எழுதியவள் அதன் மேலேயே சாய்ந்து விட்டாள் அழுக ஆரம்பித்துவிட்டாள்.

சம்மதம் சொன்ன அடுத்த வாரத்திலேயே
நிச்சயதார்த்தத்தை வைக்க கௌசிகா கலங்கிப் போனாள். தன் முகத்தை மறைக்க மிகவும் சிரமப்பட்டாள். அப்போது தான் மாப்பிள்ளை பெயர் என்று அனைத்தையும் தெரியவந்தது
கௌசிகாவிற்கு.

மாப்பிள்ளை பெயர் குரு.. தன்
அப்பாவின் பிஸ்னஸைப் பார்ப்பவன். அப்பா அம்மா குரு அக்கா என்ற குடும்பம். குருவின் அக்கா வினித்ராவிற்கு திருமணம் ஆகி ஒரு குழந்தையும் உள்ளது. பெரிய இடம் என்பதால் நிச்சியதார்த்தத்தையே தடபுடலாக நடத்தினர். தன் தந்தையை நினைத்த
கௌசிக்குத் தான் கலக்கமாக இருந்தது.. இவர் எப்படி செலவுகளைத் தாங்கப் போகிறார் என்று.

குரு நிச்சியத்தின் போது பேச ஓரிரு வார்த்தை பதில் பேசினாளே தவிர எதுவும் தானாகப் பேசவில்லை..
விக்னேஷையே கண்கள் கட்டுப்படுத்த முடியாமல் தேடின.. எப்போது இது முடியும்
என்று இருந்தவள் எல்லாம் முடிந்து வீடு வந்து சேர்ந்தவுடன் தன் அறைக்குள்
புகுந்து கொண்டாள்.

அவர்கள் போட்ட நகை என்று
ஒவ்வொன்றையும் கழற்றி
வைத்தவளுக்கு அப்போது தான் மூச்சு வந்தது.. ஏனோ ஒன்றுமே அவளுக்குப்
பிடிக்கவில்லை.. ட்ரெஸிங் டேபிள் முன்னால் உட்கார்ந்து தன்னையே வெறுத்த பார்வையில் நோக்கிக்
கொண்டு இருந்தாள் கௌசிகா.

காற்று வீசும் போது நகரும் மேகங்களைப் போல நாட்கள் நகர்ந்து கல்யாணத்திற்கு
ஒரு வாரம் இருக்கும் நிலையில் தான் கௌசி எது நடக்கக் கூடாது என்று
எண்ணினாளோ அதுவும் நடந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!