கனவு 3

கனவு 3

அத்தியாயம்-3

பிரபு வந்த அடுத்த தினம் வழக்கம் போல கௌசி வேலைக்குப் புறப்பட்டாள்.
கவிதா தான் என்ன ஆகப்போதோ என்றபடி சிந்தித்துக் கொண்டபடி வந்தாள். பள்ளிக்குச் செல்லும் வழியில் ஓரக்கண்ணால் கௌசியைக் கவனித்தாள் கவிதா.. கௌசி எப்போதும்
போல நடந்து வருவதைப் பார்த்தவள் “இவளால மட்டும் எப்படித்தான் இப்படி எதையுமே வெளியே காட்டாம இருக்க
முடியுதோ” என்று தனக்குள்
முணுமுணத்தாள் கவிதா.

பள்ளியை அடைந்து ஆபீஸ் ரூமிற்குள் நுழைந்தனர் இருவரும்.. கவிதா தன்
வேலையை கவனிக்கத் துவங்க கௌசி ஆபீஸ் ரெஜிஸ்டரைத் தேடினாள்.
‘எப்போதுமே இந்த டேபிள் மேல தான இருக்கும்.. எங்கே காணோம்’ என்று தேடியவள் “கவிதா.. ரெஜிஸ்டர் இல்ல..
வேற எங்காது எடுத்து வச்சுட்டியா?” என்று கௌசி கேட்க “இல்லயே கௌசி
எப்போமே இது மேல தான இருக்கும்” என்று கௌசிக்கு உதவ முன் வந்தாள்.
இருபெண்களும் சுமார் 15 நிமிடம் மாறி மாறி தேடினர்.

“நேத்து இங்க தான பாத்தேன்” என்று கவிதா முணுமுணுக்க.. அந்த சமயம் கரெக்டாக உள்ளே வந்த ப்யூனிடம் “அண்ணா இங்க இருந்த எங்க ஆபிஸ்
ரெஜிஸ்டர் எங்க?” என்று கேட்டாள் கவிதா.

“அட சொல்ல மறந்துட்ட பாருங்க மா… இனிமே நம்ம கரஸ்பாண்டன்ட் சார் ரூமுக்கு பக்கத்துல இருக்க கண்ணாடி
ரூமுல தான் கையெழுத்து போட வேண்டுமாம். காலை நேரத்தில ஆபிஸ் ரூமில் நிறைய பேர் நிக்கறது
கசகசவென்று இருக்குதாம். அதான் பிரபு சார் அங்க மாத்திவிட்டுட்டார்” என்று
ப்யூன் இருவரிடமும் சொல்லிக் கொண்டே சாமி படங்களுக்குப் பூவை வைக்க ஆரம்பித்தார். அவர் சொன்னதைக் கேட்ட
இருபெண்களும் இருவரின் முகம் பார்த்துக் கொண்டதை அவர் அறியவில்லை.

“கரஸ்பாண்டன்ட் சார் வந்துட்டாரா அண்ணா?” என்ன ப்யூனிடம் கேட்டாள் கௌசிகா.

“அதெல்லா ஏழரை மணிக்கே
வந்துட்டார் மா” என்றுவிட்டு அவர் வெளியே சென்றுவிட்டார். கௌசியைக்
காண அவன் தினமும் காலை செய்த ஏற்பாடு தான் அது.

அவர் சென்ற பின் கௌசியைப் பார்த்த கவிதா “இப்போ என்ன சொல்ற… அவர் உனக்காகத் தான் இங்க வர ஆரம்பிச்சிருக்கார்ன்னு
தெள்ளத்தெளிவா கன்பார்ம் ஆயிருச்சு” என்று நமட்டுச் சிரிப்பு சிரித்தாள்.

சில நொடிகள் அப்படியே நின்ற கௌசி “பாத்துக்கலாம்” என்று கவிதாவைப் பார்த்து சொல்லிவிட்டு “நீயும் தான்
ரெஜிஸ்டர்ல சைன் போடணும்.. வா போலாம்” என்று சொல்ல கவிதா வாய்விட்டுச் சிரித்தாள்.

“என்ன?” என்பது போலக் கௌசி கவிதாவைப் பார்க்க “பயமா தனியாப் போறதுக்கு” என்று கேட்டாள் கவிதா.

“ஹலோ மேடம்.. பயந்திருந்தால் இன்னிக்கு வந்திருக்கவே மாட்டேன்..
அதுவு இல்லாம சுரேஷ் லவ்வைச் சொன்ன அடுத்த நாளே காய்ச்சலில் படுத்த நீங்க பேசறீங்களா மேடம்?” என்று
கௌசி நக்கலாகக் கேட்க “ஐம் சரண்டர்” என்று கவிதா இரு கைகளையும் தூக்கினாள்.

பின் இருவரும் கரஸ்பாண்டன்ட அறைக்குப் பக்கத்தில் உள்ள அறைக்குச்
சென்றனர். கரஸ்பாண்டனட் அறையில் இருந்துப் பார்த்தால் அந்த அறை மிகவும் நன்றாகத் தெரியும். அறைக்குள் நுழையும் போது “நல்லா சாமர்த்தியமாக செயல் படுகிறான்” என்று
மனதிற்குள் நினைத்தபடியே சென்றாள் கௌசி.

அவள் அறைக்குள் நுழையும் போதே பிரபு தன் அறையின் சுழல் நாற்காலியில்
அமர்ந்தபடி அவளை எதிர்ப் பார்த்துக் காத்திருந்தான். அவளைப் பார்த்தவன் முகத்தில் ஆயிரம் வார்ட்ஸ் பல்ப் எரிந்தது. அதுவும் இன்று உன்னிப்பாகக் கவனித்தான் கௌசிகாவை.

“ஒரு காட்டன் சுடிதாரில்
சன்னமான தங்கச் சங்கிலி.. தங்கத் தோடு.. கையில் ஒரு வாட்ச்.. நெற்றியில் ஒரு கரும் பொட்டு.. இதைத் தவிர வேறு
எந்த ஒப்பனையும் இல்லை.. ஆனாலும் தேவதையாகத் தெரிகிறாளே” என்று
எண்ணினான் பிரபு.. கௌசிகாவைப் பற்றித் இன்னும் தெரிந்து கொள்ள
ஆர்வம் எழுந்தது பிரபுவிற்கு.

அந்த சமயம் பார்த்து உள்ளே வந்த சுரேஷ் கவிதாவிடமும் கௌசிகாவிடமும் பேச்சுக்
கொடுத்தான். கௌசிகா இலகுவாக சுரேஷிற்குப் பதில் அளிப்பதைக் கவனித்தான் பிரபு.. பின் மூவரும்
ரெஜிஸ்டரில் கையெழுத்துப்
போட்டுவிட்டு அவரவர் வேலையைப் பார்க்க அந்த அறையை விட்டு வெளியே
வந்தனர்.

கௌசிகா தன்னைப் பிரபு பார்ப்பதை நன்கு உணர்ந்தாள். ஏனோ தன்னை ஒருவன் பார்ப்பது கௌசிகாவிற்கு
மிகவும் சங்கடமாக இருந்தது. சீக்கிரம் கையெழுத்துப் போட்டுவிட்டு வெளியே
வந்துவிடலாம் என்று கௌசி எண்ண சுரேஷ் வேறு வந்துவிட்டான். கௌசியின்
நிலையை உணர்ந்த கவிதா தான் “சரி வாங்க டைம் ஆச்சு.. சீக்கிரம் அவங்கவங்க வேலையைப் பார்ப்போம்”
என்று கௌசிக்கு உதவினாள்.

வெளியே வந்து கௌசி வகுப்பிற்குச் செல்ல கௌசிக்கு மனம் கொஞ்சம்
லேசாயிற்று.

பிரபு ஒரு பதினைந்து நிமிடம் கழித்து ரவுன்ட்ஸ் வந்தான். வந்தவன் கௌசி எடுத்துக் கொண்டு இருந்த நான்காம்
வகுப்பிற்குள் வர எல்லா மாணவர்களும் எழுந்து நின்று
“குட்ட்ட்ட்ட்மாமார்ர்ர்ர்னினிங் சாசார்ர்” என்று கோரஸ் பாடினர். கௌசியும் “குட்மார்னிங் சார்” என்று சொல்ல “ம்ம் குட்மார்னிங் ஆல்” என்றவன் “நீங்க
க்ளாஸ் எடுங்க” என்றவன் கடைசியாக இருந்த காலி பென்ஞ்சில் அமர்ந்தான்.

ஒரு இங்லிஷ் போயம்-ஐ நடத்திக் கொண்டு இருந்தவள் விட்ட இடத்திலிருந்து அதைத் தொடங்கி நடத்தி முடித்தாள். பின் இன்னும் நாற்பது நிமிடம்
இருக்க ‘என்ன செய்யலாம்..” என்று யேசித்தவள் “எல்லாரும் ஃபேர் நோட் எடுங்க.. பேராகிராஃப் எழுதலாம்”
என்றுவிட்டு சாக்பீசை எடுத்துக் கொண்டு போர்ட்டு பக்கம் திரும்பி எழுத ஆரம்பித்து
விட்டாள்.

எழுதி முடித்துவிட்டுத் திரும்பியவள் பிரபு
இல்லாததைக் கண்டாள். “போய்விட்டான் போல” என்று மனதிற்குள் நினைத்தவள்
தன் மாணவர்களைக் கவனிக்கத் தொடங்கினாள்.

வழக்கம் போல மதிய உணவு
முடித்துவிட்டு அவரவர் வேலையைப் பார்க்கச் செல்ல சுரேஷை வந்து ப்யூன்
அழைத்தார். “தம்பி உங்களைப் பிரபு சார் கூப்பிடறார்” என்று ப்யூன் அழைத்தார்.

“சரிண்ணா.. வரேன்” என்றவன்
யோசனையுடனே பிரபுவின் அறையை நோக்கி நடந்தான்.

“வந்த அடுத்த நாளே நம்மள ஏன் கூப்பிடறார் இவர்? நாம் அந்த அளவு உயர் பணியிலும் இல்லயே.. பின்ன ஏனாம்?” என்று யோசித்தபடியே
நடந்தவன் பிரபுவின் அறையின் முன் நின்றான்.

“எக்ஸ்க்யூஸ் மீ சார்” என்று சுரேஷ் கதவைத் தட்ட “யெஸ் கம் இன்” என்று பிரபுவின் குரல் கேட்டது.

கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்ற சுரேஷ் “சார்
வரச்சொன்னிங்களாமே” என்று நின்றபடி சுரேஷ் கேட்டான்.

“பர்ஸ்ட் டேக் யுவர் சீட்” என்று பிரபு தனக்கு எதிரில் இருந்த இருக்கையைக் காட்டினான்.

சுரேஷ் உட்கார.. “ஓகே.. சுரேஷ்
உங்ககிட்ட சில விஷயம் கேட்க
வேண்டும்.. அதான் கூப்பிட்டேன்” என்று பேனாவை ஆள்காட்டி விரலிற்கும் நடு
விரலுக்கும் இடையே வைத்து ஆட்டியபடி சொன்னான் பிரபு.

“சொல்லுங்க சார்” என்றான் சுரேஷ் தன்மையான குரலில்.. ஆனால் உள்ளுக்குள்ளே யோசனைதான் “இவர்
நம்மிடம் என்ன கேட்கக்கூடும் என்று”.

“வந்து… சுரேஷ்” என்று இழுத்தான் பிரபு.

“சொல்லுங்க சார்.. என்னைப் பத்தி ஏதாவது கம்ப்ளைன்டா..” என்று சுரேஷ் கேட்க “நோ.. நோ.. அதெல்லாம் இல்ல..
எனக்கு கௌசிகாவைப் பற்றிய இன்பர்மேஷன் வேண்டும்” என்றான் பிரபு தயங்கிய குரலில்.

பிரபுவிற்கே தயக்கம் தான். ‘ஒரு பெண்ணைப் பற்றி வந்த முதல் நாளே கேட்டால் என்ன நினைப்பான்? அதுவும்
அவளிடம் பழகுபவன் வேறு.. வந்த அடுத்த நாளே தன்னிடம் வேலை செய்யும் பெண்ணைப் பற்றி கேட்டகிறான் பார் என்று நினைப்பான் தான் இந்த சுரேஷ்.. இருந்தாலும் கேட்பது சரியா? என்று பிரபுவின் மனதில் பல குழப்பமான
யோசனைகள்.

பிரபு கேட்டக் கேள்வி சுரேஷிற்கும் யோசனையைத் தந்தது. நேற்று பிரபுவைக் கண்ட பின் கௌசிகாவும்
கவிதாவும் செய்த முகபாவனையைக் கவனித்தான் தான். சரி மீட்டிங் முடிந்து கேட்டுக்கொள்வோம் என்று இருந்தவனை ஏதோ பேச வேண்டும் என்று சங்கரலிங்கம் ஐயா கூப்பிட
அவனால் பேசமுடியவில்லை. கவிதாவும் கிளம்பிவிட்டாள். அப்புறம் சுரேஷ் அதை
மறந்தும் விட்டான்.

“என்ன சுரேஷ்.. பதிலையே காணோம்” என்று பிரபு வினவ யோசனையில் இருந்த சுரேஷ் பிரபுவின் குரலில் நடப்பிற்கு வந்தான்.

முதல் எதற்காக பிரபு கேட்கிறான் என்று சுரேஷ் தெரிந்துகொள்ள எண்ணினான். “வந்து எதற்கு ஸார்…” என்று ஆரம்பித்தவன் “நீங்க கௌசிகாவைப்
பத்தித் தெரிஞ்சுக்கணும்” என்று தைரியமாகக் கேட்டுவிட்டான் சுரேஷ்.

“நான் கௌசிகாவை கல்யாணம் செஞ்சுக்கணும்ன்னு ஆசைப்படறேன்” என்று பிரபு சொன்னான்.

சுரேஷிற்கு அதிர்ச்சிதான். என்ன சொல்வது என்றே தெரியவில்லை.”சும்மா பொழுதுபோக்கிற்காகக்
கேட்கிறான் என்று நினைத்தால் இவன்
என்னடான்னா கல்யாணம் என்று சொல்கிறான். கண்ணைப் பார்த்தால் பொய் சொல்வது போலவும்
தெரியவில்லையே” என்று யோசித்த சுரேஷ் “ஸார் இத நீங்க அவங்ககிட்ட தான் சொல்லணும்.. நான் என்ன இதுல சொல்ல முடியும்” என்றான் சுரேஷ்.

“எனக்கு சில இன்பர்மேஷன் வேணும் சுரேஷ்.. அதான் உன்னைக் கூப்பிட்டேன்.
கௌசிகா ஸ்கூல்ல பழகுற இரண்டு பேர் நீயும் அந்தப் பெண் கவிதாவும் தான்..
அந்தப் பொண்ணுக்கிட்ட என்னால் கேட்க முடியாது.. அதான் உன்னை” என்ற பிரபு…
முன்பு நடந்த சம்பவத்தை.. அதாவது கௌசிகாவை ஃபாலோ செய்தது.. கௌசிகா பிரபுவை எச்சரித்தது என
அனைத்தையும் சுரேஷிடம் கூறினான்.

“ஸார்.. கௌசிகா எனக்கு ஒரு நல்ல ப்ரண்ட்.. நீங்க கேக்கறீங்க-ன்னு உங்ககிட்டே சொன்னா அது ரொம்ப தப்பு
ஸார்” என்றான் சுரேஷ்.

“நான் கௌசிகாவை ஏமாத்திடுவேன்னு
நினைக்கிறையா சுரேஷ்?” என்று நேராகப் சுரேஷைப் பார்த்துக் கேட்டான் பிரபு.

“அதெல்லாம் இல்ல ஸார்.. உங்களப் பத்தித் தெரியாது தான்.. ஆனால் சங்கரலிங்கம் ஸாரைப் பத்தித் தெரியும்.
அவரோட வளர்ப்பில் சந்தேகம் இல்ல” என்ற சுரேஷ் “ஸார் உண்மையை சொல்லணும்-ன்னா . எனக்கு மட்டும்
இல்ல.. கௌசிகாவோட பர்சனல் டீடெயில்ஸ் கவிதாக்குக் கூடத் தெரியாது”
என்றான் சுரேஷ்.

“கௌசிகா இங்க வந்த அப்புறம் நடந்த
விஷயங்களையாவது சொல்லு சுரேஷ்.. கௌசிகா எப்படின்னு” என்று பிரபு விடாமல் கேட்டான்.

சுரேஷ் சொன்னது இதுதான் “கௌசிகா மூன்றரை வருடங்களுக்கு முன்னால்
இங்கு வேலை கேட்டு வந்த பெண். வந்த புதிதில் யாருடனும் அவ்வளவாக
பேசவில்லை. கவிதாவிடமே இரண்டு வாரம் போன பின் தான் நன்றாக பேசினாள்.. கவிதாவின் நண்பன் நான்
என்பதால் என்னிடமும் பழகுவாள். வேறு யாரிடமும் அனாவசியமாக பேச்சுக்
கொடுக்க மாட்டாள். பொறுப்பான பெண்ணும் கூட. அதற்கு என்று பயப்படும் சுபாவமும் இல்லை. ஒரு தடவை பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர் ஒருவன் கை வைக்க வர கையில் கிடைத்த காம்பஸ்-ஸை வைத்து தோளில் குத்தி இறக்கி விட்டாள் அவனை.
.அந்த செய்தி சங்கரலிங்கம் அய்யா வரை எட்டி அந்த ஆசிரியரை பணி நீக்கம்
செய்தார்.. கௌசிகா கவிதாவின் மேல் அவருக்கு மரியாதையும் உண்டு..
இப்போது வரை பள்ளியில் எந்த கருப்புப் புள்ளியும் இல்லை..”

“ம்ம்…” என்று ஒரு பெருமூச்சை விட்டான் பிரபு.

“கௌசிகாக்கு யாரும் இல்லயா?” என்று வினவினான் பிரபு.

“கவிதாவிடம் இல்லன்னு தான் ஸார் சொல்லி இருக்கா கௌசி” என்றான் சுரேஷ்.

“ம்ம்.. ஓகே தாங்க்ஸ் சுரேஷ்” – பிரபு.

“ஓகே ஸார்.. நான் கிளம்பட்டுமா?” – சுரேஷ்.

“ஓகே நீங்க கிளம்புங்க..” என்ன பிரபு சொல்ல சுரேஷ் எழுந்துவிட்டான்.

அன்று மாலை பள்ளி முடிந்து
கௌசிகாவும் கவிதாவும் வீடு திரும்பினர். ஏனோ அன்று கௌசிகாவிற்கு மிகவும்
டயர்டாக இருந்தது. முகம் கழுவி விட்டு வந்தவள் “கவிதா எனக்கு ரொம்ப டயர்டா
இருக்கு.. நான் ஒரு… ஒரு மணி நேரம் தூங்கறேன். என்ன எழுப்பிவிடு” என்று கௌசி சொல்ல “ஏன்.. என்னாச்சு.. உடம்பு சரியில்லையா?” என்று கவிதா அக்கறையாகக் கேட்டாள்.

“இல்ல கவி… உடம்பு வலி தான்.. தூங்கினால் சரியாகிடும்” என்றவள்
படுக்கை அறைக்குள் புகுந்துகொண்டாள்.

கௌசிகா தூங்கச் சென்ற பின் கவிதா வீட்டின் பின்னால் உட்கார்ந்து வேடிக்கை  பார்த்துக் கொண்டு இருந்தாள். வீட்டில் தன் காதல் விவகாரம் பேசுவதைப் பற்றி எண்ணிக் கொண்டு இருந்தாள் கவிதா.
தன் பக்கத்தில் வைத்திருந்த மொபைல் திடீரென கத்தியதில் சுயநினைவிற்கு
வந்தாள்.

போனின் திரையில் அவளின் காதல் கள்வன் சுரேஷ் தான் கூப்பிட்டிருந்தான்.
புன்னகையுடன் போனை ஆன் செய்து காதில் வைத்தவள் “என்ன இன்னிக்கு
ஈவ்னிங்கே போன் பண்றீங்க”
குறுஞ்சிரிப்புடன் கேட்டாள்.

“சும்மாதான். என் கவிக் குட்டி என்ன பண்ணுது-ன்னு கேட்க கூப்பிட்டேன்” என்றான் சுரேஷ்.

“நானா.. உங்கள் மாமனார் மாமியாரிடம் எப்படி நம்ம லவ்வ பத்திப் பேசறது-ன்னு
யோசிச்சிட்டு இருந்தேன்” என்று நகையோடு சொன்ன கவிதாவின் குரலில் பதட்டமும் எட்டிப் பார்த்தது.

“அதெல்லா ஒத்துப்பாங்க-ன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு” என்று திடமான குரலில் பேசி தன் காதலிக்கு தைரியம்
ஊட்டினான் சுரேஷ்.

“ம்ம்… ஆனால் நான் போன இரண்டு நாள் அப்புறம் வாங்க… எங்க வீட்டில் வந்து
பேசுங்க” என்றாள் கவிதா.

“கண்டிப்பா வரேன்” என்று வாக்கு அளித்த சுரேஷ் “உன்கிட்ட இன்னொன்னு
சொல்லனும் கவி” என்றான்.

“என்ன” – கவிதா.

“பிரபு சாரை உனக்கும் கௌசிக்கும் முன்னாடியே தெரியுமா?” என்று கேட்டான்
சுரேஷ்.

“……..” என்ன சொல்லுவது என்று தெரியாமல் விழித்தாள் கவிதா.

“ஏ…. என்னடி பதிலே காணோம்.. பதில் சொல்லு..” என்று சுரேஷ் சற்று
சலிப்பாகக் கேட்டான்.

“கவிதா சுரேஷிடம் மறைக்க
எண்ணவில்லை.. இதெல்லாம் ஒரு விஷயம் என்று அவனிடம் சொல்ல வேண்டுமா?” என்றே நினைத்தாள். அவன் கேட்டபோதே இவனிற்கு எப்படித் தெரியும் என்று வியந்தாளே தவிர சொல்லக் கூடாது என்று எண்ணவில்லை.

அவன் கேட்ட பிறகு நடந்த
அனைத்தையும் கூறினாள்.. கிட்டத்தட்ட பிரபு சொன்னது அனைத்தையும் கவிதாவும் சொன்னாள். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட
சுரேஷிடம் “உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டாள் கவிதா.

“இன்னிக்கு பிரபு சார் என்னை லன்ச் அப்புறம் கூப்பிட்டார்” என்ற சுரேஷ் அங்கு நடந்த அனைத்தையும் கவிதாவிடம்
கூறினான். அவன் சொல்ல சொல்ல கவிதாவிற்கு வியப்பு தான்.

“உண்மையாவே கௌசிகாவை ரொம்ப லவ் பண்றார் ஆஆஆஆஆஆ” என்று
வியப்பை அடக்காமல் கேட்டாள்.
“மெல்லப் பேசு… கௌசிகாக்கு கேட்கப் போது” என்று சுரேஷ் கவிதாவை அடக்க “அவ தூங்கிட்டு இருக்கா” என்றாள்
கவிதா.

“ஆமாம் கவி… உண்மையாவே லவ் பண்றார் போல” என்று சுரேஷ் சொல்ல அங்கு ஐந்து நொடி அமைதி நிலவியது.

“என்னடி எதும் பேச மாட்டீங்கற” என்று சுரேஷ் ஆரம்பித்தான்.

“எனக்கு என்ன சொல்றது-ன்னு தெரியல” என்ற கவிதாவின் குரல் உள் வாங்கின.

“கவி… கௌசிகா-க்கு இதை விட நல்ல வாழ்க்கை அமையறது கஷ்டம்” என்று
அழுத்தமான குரலில் சுரேஷ் சொன்னான்.

“எனக்கு அது புரியுது… ஆனா அவகிட்ட இந்த மூன்று வருஷமா நான் பேசிப்
பாத்திருக்கேன்.. அவ பிடி கொடுத்ததே இல்ல சுரேஷ்” என்று தவிப்பான குரலில்
கவிதா சொன்னாள்.

“அவளுக்கு யாரும் இல்ல கவி.. நம்ம தான் ஏதாவது பண்ணி அவ மனசை மாத்தணும். இப்படியே அவளை உன்னால் விட முடியுமா? சொல்லு?” என்று சுரேஷ் கேட்டான்.

“முடியாது தான்.. ஆனால் அவளின் பிடிவாதம் பற்றி உங்களுக்குத் தெரியாது. ஆனா அவளிடம் எல்லோரும் பேசிப் பாக்கலாம்.. எடுத்துச் சொல்லலாம்” என்றாள் கவிதா.

“சரி.. பேசலாம்” – சுரேஷ்.

“எப்போ?” – கவிதா.

“ஹலோ கவிதா.. நான் பிரபு பேசறேன். நாளையே பேசிவிடலாம்” என்று பிரபு
பேச… பிரபுவின் குரலில் கவிதாவிற்குத் தூக்கிவாரிப் போட்டது.

“சா…. சா.. சார்..” என்று திணறியவளுக்கு சுரேஷின் மீது கோபம் வந்தது. அவனிடம்
தருகிறேன் என்றாவது சொல்ல வேண்டாமா? என்று மனதில் சுரேஷைத் திட்டினாள்.

“ஒன்றும் இல்ல.. நாளைக்கு நான்கு மணி வரை வேலைன்னே நீங்க இருங்கள்..
நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றான் பிரபு.

“ஓகே சார்” என்று கவிதா சொல்ல பிரபு போனை சுரேஷிடம் தந்தான்.

“சரி நான் கூப்பிடறேன்” என்று
போனை வைத்துவிட்டான் சுரேஷ்.

போனை அணைத்த கவிதா… வீட்டிற்குள் வந்து லைட்டைப் போட்டாள். மணி
ஐந்தரையைக் காட்டியது கடிகார முள். கௌசியை எழுப்பலாம் என்று உள்ளே
சென்றவள் அவள் நன்றாக உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டாள். சரி பேசாமல் டீயை வைத்துவிட்டு அவளை
எழுப்பிவிடலாம் என்று எண்ணியவள் சமையல் அறைக்கு வந்து டீயை
வைத்தாள். கவிதாவிற்கு பல
யோசனைகள் மனதில். சுரேஷ்
சொன்னதை யோசித்துப் பார்த்தாள். “கௌசியை அப்படியே விட இயலாது
என்பது நிச்சயம். அவளிடம் எப்படியாவது சம்மதம் வாங்க வேண்டும்” என்ற எண்ணம் பலமாக மனதில் எழுந்தது.

அதற்குள் டீ பொங்க அடுப்பை
அணைத்துவிட்டு கௌசியை
எழுப்பினாள். எழுந்தவளிடம் “வா கௌசி டீ குடிக்கலாம்.. போய் மூஞ்சியைக்
கழுவிட்டு வா” என்று கவிதா
சொல்லிவிட்டு வெளியே வந்தாள்.

கௌசிகா வர கவிதா டீயை இரு கப்பில் ஊற்றிக் கொண்டு ஹாலிற்கு வர.. இருவரும் உட்கார்ந்து டீயைக் குடிக்க
ஆரம்பித்தனர்.

“மணி ஆறு ஆயிடுச்சு… ரொம்ப நேரம் தூங்கிட்டேன் பார்” என்று டீயை உறிஞ்சியபடி கௌசி சொல்ல “நல்லா
தூக்கத்தில் இருந்த கௌசி.. அதான் எழுப்பல” என்றாள் கவிதா.

“சரி எப்போ ஊருக்கு கிளம்பற கவி?” என்று கௌசி கேட்க “நாளை விட்டு அதுக்கு அடுத்த நாள் காலைல” என்று
கௌசிக்கு பதிலை அளித்தாள் கவிதா.

கவிதாவின் போன் அடிக்க… எழுந்து சென்று போனை எடுத்தவள் போனின்
திரையில் சுரேஷின் எண்ணை
பார்த்தாள்.. போனை அட்டென்ட் செய்து காதில் வைத்தவள் “சொல்லுங்க”
என்றாள் ஒற்றை வார்த்தையாக.

“கோபமா…” என்று கேட்டவன் கவிதா பதில் பேசாததைக் கண்டு “உனக்கு மட்டும் கௌசி ப்ரண்ட் இல்லையே.. எனக்கும் தானே.. அதான்…” என்று அவன்
பேசப்பேச கவிதா குறுக்கிட்டாள்.

“ஆனால் பிரபு….” என்று ஆரம்பித்தவள் தான் கௌசிக்கு பக்கத்தில் நின்று
பேசிக்கொண்டிருப்பதை உணர்ந்து “ஓகே எனக்கு வேலை இருக்கு… பை.. நைட்
கூப்பிடறேன்” என்று வைத்துவிட்டாள் கவிதா.

மறுபடியும் வந்து உட்கார்ந்தவளை கௌசி கேள்வியாகப் பார்த்தாள். சுரேஷ் தான் கூப்பிட்டான் என்பதை அவள் பேசிய விதத்திலேயே கண்டு
கொண்டாள் கௌசி. ஆனால் ஏன் பிரபுவின் பெயரைச் சொன்னவள் அப்படியே நிறுத்திவிட்டாள் என்று
யோசித்தாள் கௌசிகா. கேட்கலாமா என்று எண்ணியவள் “சரி வேண்டாம்”
சொல்லும் விஷயம் என்றால் அவளே சொல்லுவாள் என்ன விட்டுவிட்டாள்.

வழக்கம் போல எல்லா வேலைகளையும்
முடித்துவிட்டு.. படுக்கை அறைக்கு வந்த இரு பெண்களும் அவரவர்
யோசனைகளில் மூழ்கி தூங்கிவிட்டனர்.

•••••

அதே நாள் கோயம்பத்தூரில்..

நேற்று இரவு தன் அன்னையை
ஜீவாவுடன் அனுப்பிய விக்னேஷ் ஹாஸ்பிடலிலேயே தங்கிவிட்டான். அன்று இரவு அவனிற்கும் தூக்கம்
வரவில்லை… ஏதேதோ
யோசனைகளிலேயே இருந்தான்.. நாலரை மணிக்கே அவனுக்கு உறக்கம்
கண்களைத் தொட்டது. உட்கார்ந்த நிலையிலேயே தூங்கிக் கொண்டு
இருந்தவனை காலையில் வந்த ஜீவாவும் சுமதியும் தான் எழுப்பினர்.

கண்களைத் திறந்தவன் கைகளால் தலை முடியைக் கோதியவாரே அங்கு இருந்த கடிகாரத்தைப் பார்த்தான். மணி ஏழரை ஆகி இருந்தது. “சரி நான் வீட்டிற்கு போய்.. குளிச்சிட்டு வரேன்” என்று இருவரிடம் பொதுவாகச்
சொன்னவன் “அம்மா.. வீட்டு சாவி தாங்க” என்ன கேட்டான். சுமதி பையைத் திறந்து
சாவியைத் தேடினார்.

“விக்கி.. நீ ரிலாக்ஸ் ஆகிட்டு வா.. நாங்க எல்லா இருக்கோம்..” என்று ஜீவா
சொல்ல “ம்ம்” என்று மட்டும் சொன்னான் விக்னேஷ்.

“இந்தா விக்னேஷ் சாவி” என்று சுமதி தர.. சாவியை வாங்கிக் கொண்டு வெளியே வந்தான் விக்னேஷ்.

காரை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தவன்… வீட்டின் வெளி கேட்டை திறந்து கொண்டு உள்ளே நுழைய
விக்னேஷின் மேலே வந்து தாவினான் ப்ரௌனி.. ப்ரௌனி அவன் செல்லமாக
வளர்த்தும் நாய். லாப்ரடோர் இனத்தைச் சேர்ந்தது. ப்ரௌன் கலரில் இருந்ததால் ப்ரௌனி என பெயர் வைத்திருந்தது. அட
இவனை மறந்தேவிட்டேன் பார் என்று நினைத்த விக்னேஷ் “ப்ரௌனினினி….” என்று அதன் கழுத்துக்குக் கீழ் தன் இரு கைகளால் அழகாகத் தடவியபடி கொஞ்சினான்.

“ங்ங்ங்ங்ங்” என்று ப்ரௌனியிடம் இருந்து
சத்தம் வர “பசிக்குதாடா….” என்று அவனை நன்றாகக் கொஞ்சிவிட்டு உள்ளே சென்றவன்… அதற்கான
உணவை எடுத்துக் கொண்டு வெளியே வந்து அவனது தட்டில் வைக்க புயல்
வேகத்தில் காலி செய்து விட்டான் ப்ரௌனி. பாவம் அவனும் நேற்றில் இருந்து சாப்பிடவில்லை. அந்தப் பசியில் அவனுடைய உணவை வேகமாய்க் காலி செய்தான்.

ஒரு நாள் முழுவதும் வீட்டைப் பூட்டி வைத்திருந்ததால் ப்ரௌனியை வாக்கிங் கூட்டிச் சென்று வந்தவன்..அவனையும்
கட்டிப் போடாமல் வெளிக் கேட்டை மட்டும் பூட்டிவிட்டு உள்ளே சென்றான். நன்றாக
குளித்து முடித்து அலாரத்தை
வைத்துவிட்டுக் கண்களை மூடித் தூங்கினான். ஒரு மணி நேரம் கழித்து எழுந்தவன் வீட்டில் நேற்று மீதமான உணவை எல்லாம் கொட்டிவிட்டு ஹாஸ்பிடலிற்குச் செல்லத் தயாரானான்.

ஹாஸ்பிடலை மறுபடியும் அவன் அடைய மணி ஒன்று ஆகிவிட்டது. அவன்
செல்லும் சமயம் இப்போது வரதராஜனும் கண்ணைத் திறந்திருந்தார். விக்னேஷைப் பார்த்தவர் ‘இங்க வா’ என்று கை ஆட்டினார்.

அவர் அருகில் சென்று அவரின் ஒரு கையை தன் இரு கைகளுக்குள் வைத்தவன்.. அவரைப் பார்த்து ஒரு
புன்னகை மட்டும் வீசினான்.

“என்னால.. உனக்கு கஷ்டம் விக்னேஷ்” என்று மிகவும் சிரமப்பட்டு பேசினார்.

“அதெல்லாம் இல்ல மாமா.. இப்படி எல்லாம் பேசாதீங்க.. பர்ஸ்ட் நல்லா ரெஸ்ட் எடுங்க.. ரிலாக்ஸ் ஆகுங்க அப்புறம் பேசலாம்” என்றான்
மென்மையான குரலில்.

“ரிலாக்ஸ்சாசாசா” என்றவரின்
கண்களில் வேதனை படர்ந்தது. “எனக்கு நிம்மதி என்றால் உன் கல்யாணத்தில் மட்டும் தான் விக்னேஷ்.. என்னால் தானே நீ இப்படி இருக்க” என்று அவர் கேட்க “அதில் மட்டும் தானா மாமா உங்க நிம்மதி இருக்கு” என்று தன்னையும் மீறிக்
கேட்டுவிட்டான்.

தன் செயலில் தன்னையே ஒரு நிமிடம் கடிந்து கொண்டவன் “மாமா.. எதுவா இருந்தாலும் நீங்க நல்லபடியா எந்திருச்சு
வந்தா தான் எல்லாவற்றையும் பார்க்க முடியும்.. நம்ம எல்லாவற்றையும் அப்புறம்
பேசலாம் சரியா…” என்று எழுந்தவன் “நீங்க மாத்திரை சாப்பிடுங்க மாமா.. நான்
டாக்டர் கிட்ட சிலது பேச வேண்டியது இருக்கு.. பேசிட்டு வரேன்” என்று சமாளித்துவிட்டு எழுந்து வெளியில் வந்தான்.

ஜீவாவும் வெளியே வர “ஜீ நாளைக்கு நைட் டிக்கெட் புக் பண்ணியிருக்கேன். ரெடியா இருடா.. இப்போ நான்
கிளம்பறேன். நான் இன்னிக்கும் நாளைக்கும் இங்க வரமாட்டேன். வந்தா
என்னை மீறி யாராது கிட்ட ஆத்திரத்தில பேசிவிடுவேன்னு இருக்கு.. நீ நாளைக்கு நேரா ஒன்பது மணிக்கு பஸ் ஸ்டாண்ட்
வந்துடு.. ஒன்பதரைக்கு பஸ்” என்றுவிட்டு ஜீவாவின் பதிலைக் கூட எதிர்ப்பார்க்காமல் நகர்ந்துவிட்டான்.

•••••

அடுத்த நாள் கம்பத்தில்..

அடுத்த நாள் வழக்கம் போல பள்ளி முடிந்தவுடன் தன் உடமைகளை எடுத்துக்
கொண்டு கவிதா இருக்கும் ஆபிஸ் அறைக்குள் நுழைந்தாள் கௌசிகா.
அவள் இன்னும் கிளம்பாததைப்
பார்த்தவள் “என்ன கவி.. இன்னும் வேலை இருக்கா?” என்றபடி கௌசி அங்கு இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.

“ஆமாம் கௌசி.. நாளைக்கு ஊருக்குப் போனால் எப்போ வருவேன்னு தெரியாது.
அதான் முடிந்த அளவுக்கு இன்னிக்கே முடிச்சிட்டு கிளம்பலாம்ன்னு” என்றாள் கவிதா.

“ஓ… சரி… நான் வெயிட் பண்றேன்.. நீ பொறுமையா முடி” என்று உட்கார்ந்துவிட்டாள் கௌசி.. ஏதாவது உதவி வேண்டுமா என்று கௌசி கேட்க “இல்ல கௌசி.. இது பிரபு சார் கிட்ட காட்ட வேண்டிய பேப்பர்ஸ்” என்று கவிதா
மறுத்துவிட்டாள்.

கௌசி சும்மா உட்காரப் பிடிக்காமல் தன் போனை எடுத்து ஒரு கேமை விளையாடிக் கொண்டு இருந்தாள். மணி நாலரை ஆனது. உள்ளே வந்த சுரேஷ்
“ஹாய் கௌசி.. இங்கதான் இருக்கியா? நான் கிளம்பிட்டீங்க-ன்னு நினைத்தேன்.. உன்னை பிரபு சார் கூப்டாரு” என்றான்
சாதரணமாக.

“என்னையா… எதுக்கு?” என்று கௌசி புருவ முடிச்சுடன் வினவ “எனக்கென்ன
தெரியும்” என்று கையை விரித்தான் சுரேஷ். எதுவுமே தெரியாதவன் போல அவன் கௌசியிடம் சொல்லிவிட்டு
கவிதாவிடம் பேசச் சென்றான்.

சரி என்றுவிட்டு பிரபுவின் அறையை நோக்கி நடந்தாள் கௌசிகா. ‘இவனின் தொல்லை இல்லாமல் கொஞ்சம் நிம்மதியாக இருந்தோம்.. மறுபடியும்
ஆரம்பித்துவிட்டான் போல.. இன்று திட்டவட்டமாக சொல்லிவிட வேண்டும்’
என்று நினைத்தபடி நடந்தவள் அவன் அறை வாயிலில் வந்து நின்றாள்.

கதவைத் தட்டி “மே ஐ கம் இன் சார்” என்று குரல் கொடுக்க “யெஸ் கம் இன்” என்று பிரபுவின் குரல் கேட்டது.

உள்ளே நுழைந்த கௌசி “குட் ஈவ்னிங் சார்.. வரச் சொன்னிங்களாமே” என்று
ஆரம்பித்தாள்.

“யெஸ்.. உட்காருங்க” என்று
இருக்கையைக் காட்டினான்.

“இல்லை சார்.. பரவாயில்ல” என்று மறுத்தாள் கௌசி.. அதாவது விஷயத்தை சீக்கிரம் சொல்லிமுடி நான் கிளம்பனும் என்றபடி நின்றாள் கௌசி.

“நீங்க பர்ஸ்ட் உட்காருங்க…” என்று அவன் இருமுறை சொல்ல கௌசி உட்கார்ந்தாள்.

யாராவது வந்தால் விரட்ட வேண்டும் என்று சுரேஷும் கவிதாவும் பிரபுவின் அறை வாயிலின் முன்னால் கொஞ்சம் தள்ளி நின்றனர்.

“சொல்லுங்க சார்.. என்ன விஷயம்” என்று ஆரம்பித்தாள் கௌசி.

“நான் உன்ன லவ் பண்றேன் கௌசிகா. உன்னைக் கல்யாணம் செய்து கொள்ள
ஆசைப்படறேன்” என்று பிரபு சொல்ல எரிமலைக் குழம்பை காதில் ஊற்றியது போல இருந்தது கௌசிகாவிற்கு.

“சார் ப்ளீஸ்.. ஸ்கூல் விஷயமா மட்டும் பேசுங்க.. இல்லன்னா நான் கிளம்பறேன்” என்றாள் பொறுமையை இழுத்துப்
பிடித்தபடி.

“கௌசிகா.. நான் பேசறதை காது கொடுத்தாவது கேளு.. நான் உன்ன ஏமாத்திட மாட்டேன்” என்று கெஞ்சும்
குரலில் பிரபு கேட்டான்.

“……” – கௌசிகா.

“உனக்கு என்னிடம் எதுவும்
பிடிக்கவில்லையா சொல் கௌசிகா.. மாற்றிக்கொள்கிறேன்” என்று கேட்டான்.

“அட்ஜஸ்ட் செய்து கொள்வது தான் லவ் மிஸ்டர்.பிரபு… நமக்காக இன்னொருத்தரை மாத்தறவது இல்லை” என்றாள் கௌசிகா.

“என்னை உனக்கு பிடிக்கவில்லையா?” – பிரபு.

“எனக்கு சங்கரலிங்கம் சாரின் மகனாக உங்களிடம் மரியாதை இருக்கு.. அவ்வளவே.. தயவு செய்து என்ன நிம்மதியாக இருக்கவிடுங்க ப்ளீஸ்”
என்றுவிட்டு கௌசி எழுந்து வெளியே செல்லக் கதவைத் திறந்தாள்.

“கௌசிசிசி… நில்..” என்று வந்தவன் கௌசியின் கையைப் பிடித்துவிட்டான்.
அதற்குள் கௌசி கதவையும் திறந்து கொண்டு பாதி வெளியே வர.. பிரபு கையைப் பிடித்ததை வெளியே
நின்றுகொண்டிருந்த சுரேஷும்
கவிதாவும் பார்த்தனர். கௌசிகாவிற்கு
புரிந்துவிட்டது.. நேற்று கவிதாவின் போன் உறையாடல் என எல்லாம்
விளங்கிவிட்டது.

சுரேஷும் கவிதாவும் பார்த்துவிட்டதைக் கண்ட கௌசிக்கு அவமானமும் கோபம் தலைக்கேறியது.. “கையை விடுங்க மிஸ்டர்.பிரபு” என்று அவனை எரித்து
விடுவதைப் போலக் கௌசி முறைக்க அவன் கை தன்னால் கௌசியின் கரத்தை விட்டது.

“ஒரு தடவை சொன்னாப்
புரிஞ்சிக்கோங்க.. எனக்கு கல்யாண வாழ்க்கையில் இஷ்டம் இல்ல.. இனி யாரும் இந்தப் பேச்சை எடுக்காதீங்க”
என்று அழுத்தமானக் குரலில் மூவரையும் பார்த்துச் சொன்னாள்.

“கௌசி.. உன்னோட ஒப்பனையில்லா அழகுல நான் விழுந்தது உண்மைதான்..
ஆனால் அதைவிட உன்னோட அமைதி, அடக்கம், ஆண்களிடம் நீ தள்ளி நிக்கற குணம்ன்னு எல்லாத்தையும் பாத்து தான்
உன்கிட்ட இன்னும் விழுந்தேன்” என்று பிரபு கௌசிக்கு விளக்கினான்.

“போதும் நிறுத்துங்க… நீங்க சொல்ற எல்லா குணமும் என்கிட்ட இப்போ இருக்கலாம்.. ஆனால் இதில் ஒன்று கூட
மூன்றரை வருசத்துக்கு முன்னால் என்கிட்ட இல்ல..” என்ற சொன்ன கௌசியின் குரல் தழுதழுத்தது.

சுரேஷும் கவிதாவுமே இந்தக் குரலில் அதிர்ச்சியுற்றனர். கௌசி முகம் இறுகி
பார்த்திருக்கிறார்கள்.. ஆனால்
கௌசியின் முகம் வாடிப் பார்த்ததில்லை.. ஆனால் இப்படியே விட முடியாதே…

“கௌசி… நீ கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்றதுக்கு என்ன காரணம்ன்னு மட்டும் சொல்” என்று பிரபு கேட்டான்.

“……” – கௌசிகா.

“ஆமா கௌசி… சொல்லு… சும்மா வேணாம் வேணாம்-ன்னு செல்லாமல் கரெக்டான காரணத்தைச் சொல்..
இல்லையென்றால் பிரபு சாரை
கல்யாணம் பண்ணிக்க.. உன்
வாழ்க்கை நல்லபடியாக
இருக்கணும்ன்னு தான் சொல்றோம் கேளு” என்றான் சுரேஷ் தன் பங்கிற்கு.

“உண்மையான காரணத்தைச்
சொன்னால் விட்டிடுவீங்க தானே”.. என்று கண்களில் கண்ணீருடனும் உதட்டில்
கோபத்துடனும் மூவரையும் பார்த்துக் கேட்டாள் கௌசிகா.

மூவரும் கௌசியையே கூர்ந்து அவள் என்ன சொல்லப்போகிறாள் என்று
பார்த்தனர்.

“நான் ஒரு விடோ.. அதாவது விதவை.. புரியுது தான.. என்ன விட்ருங்க ” என்று தன் இரண்டு கைகளால் சத்தமாக ஒரு
கும்பிடு போட்டுவிட்டு வெளியே விறுவிறுவென்று நடந்து வந்து தன் உடமைகளை எடுத்துக் கொண்டு
கிளம்பிவிட்டாள்.

கௌசிகா சொல்லிவிட்டுச் சென்றதை அடுத்து அந்த அறையில் அமைதி நிலவியது.. மூவரும் ஆணி அடித்தார்
போல நின்றிருந்தனர். பிரபுவின் முகம் முழுதும் வெளுத்திருந்தது.

கௌசிகா கணவனை இழந்த பெண்ணா?

அப்போது அவளுக்கு குடும்பம்
இருக்கிறதா?

ஏன் இங்கு அனாதை போல இருக்கிறாள்?

எனப் பல கேள்விகள் மூவரின் மனதிலும்
எழுந்தன.

Leave a Reply

error: Content is protected !!