கனவு 5

கனவு 5

அத்தியாயம்-5

வீட்டிற்குள் வைப்பரேட்டர் மோடிலேயே ஆடிக்கொண்டு நுழைந்த கௌசி “அப்பா
மாத்திரை போட்டிங்களா இன்னிக்கு சுகர்-க்கு” என்று தன் தந்தையை நோக்கிக்
கேட்டாள்.

அவர் திருதிருவென்று விழிப்பதிலேயே அவர் மாத்திரை போடவில்லை என்று
புரிந்து கொண்டவள் “மிஸ்டர்.வரதராஜன்
உங்களுக்கு என்னச் சின்னக்
குழந்தைன்னு நினைப்பா?
ஒவ்வொன்னையும் நியாபகப்படுத்திக் கொண்டே இருக்கனுமா” என்று தன்
தந்தையை ஒரு புருவத்தைத் தூக்கி மிரட்டியவள் உள்ளே சென்று மாத்திரையை எடுத்து வந்து கொடுத்து தண்ணீரையும் தந்தாள்.

மாத்திரையைப் போட்டுவிட்டு சிரித்தபடி டம்ளரை தந்தவரிடம் “என்ன அப்படி ஒரு சிரிப்பு ?” என்று புரியாமல் கேட்டவளிடம்
“அது ஒன்றுமில்ல மா.. அப்பாவை மட்டும் இப்படி மிரட்டுறாயே.. கல்யாணம்
ஆகி மாப்பிள்ளை வீட்டிக்கு போயிட்டா அங்க இப்படி யாரை மிரட்ட முடியும் சொல்லு? ஒரு வேளை அப்படி ஒரு அப்பாவி கிடைத்தால் பாவம் தான்.
அதை நினைச்சேன் சிரித்தேன்” என்று வரதராஜன் கேலி செய்ய “போங்கப்பா இந்தக் கல்யாணத்திற்கு எல்லாம் என்ன அவசரம்.. இப்போதைக்கு நோ சான்ஸ்”
என்றாள் கௌசிகா.

“அச்சச்சோ நாய்க்குட்டியை மறந்துட்டேன் பாருங்க” என்று நியாபகம் வந்தவளாக
ரூமிற்குள் ஓடியவள் அந்தக் கூடைக்குள் அமைதியாக எட்டிப் பார்த்தாள். அழகாகத் தூங்கிக்கொண்டிருந்தது
ப்ரௌனி. சமையல் அறைக்குள் நுழைந்தவள் பாலைக் காய்ச்சி பிரிட்ஜில்
இருந்த மில்க் பிக்கிஸ் மூன்றை எடுத்து பாலில் நன்றாக கலந்து கரைத்தாள். பின் பாலை ஆற வைத்தவள் வீட்டில்
இருந்த ஒரு பழைய ஃபீடிங் பாட்டிலைத் தேடி எடுத்து அதில் பாலை ஊற்றிக் கொண்டு அவள் அறைக்கு எடுத்துச்
சென்றாள்.

ப்ரௌனியை எடுத்து தன் மடியில் வைத்தவள் அதற்கு ஃபீடிங் பாட்டிலை வாயில் வைத்து பாலைப் புகட்டினாள்.
அழகாக வயிறு முட்டக் குடித்துவிட்டு “ங்ங்” என்று அவளின் மடியில் படுத்து
உறங்கிய ப்ரௌனியைக் கண்டு சிரித்தவள் அதை மீண்டும் கூடைக்குள்ளேயே வைத்து ஹாலில் கொண்டு சோபாவின் ஓரத்தில் வைத்து ஒரு சின்ன டர்க்கி கர்ச்சிஃபால்
போர்த்திவிட்டாள்.

“அப்பா நான் போய் தூங்கறேன் நீங்களும் தூங்குங்க” என்றுவிட்டுத் தன் அறைக்குள் புகுந்துவிட்டாள்.

அறைக்குள் நுழைந்தவளுக்கு ஒரே கசகசவென்று இருந்தது. ஒரு டவலை எடுத்துக் கொண்டு நன்றாக குளித்துவிட்டு டவலை மட்டும் உடம்பில் சுற்றிவிட்டு வெளியே வர கௌசிகாவின் செல்போன் சிணுங்கியது.

எடுத்து போனைப் பார்த்தாள்.. திரையில் “விக்கா” என்ற பெயரோடு.. பெயருக்கு
பின்னால் அவனது போட்டோ அழகாகக் காட்சியளித்தது.

போனை அட்டன்ட் செய்து காதில் வைத்தவள் “ஹலோ மிஸ்.கௌசிகா ஹியர்.. சொல்லுங்க என்ன வேணும்”
என்று பெட்டில் கட்டின துண்டோடு அமர்ந்தபடிக் கேட்டாள்.

“ஏய்ய்ய் ரௌடி..” என்று ஆரம்பித்தவன் “சரி உன்கிட்ட ஒன்னு கேக்கணும்” என்று
விக்னேஷ் கேட்க கேட்க..

“கேளு” – கௌசிகாவின் நக்கலான குரலில்.

“ஹோட்டல்ல ஏண்டி அந்தப்
பொண்ணுங்கள மிரட்டிட்டு இருந்த?” – விக்னேஷ்.

“நானா..” – அப்பாவித்தனமான குரலோடு கௌசிகா.

“ப்ராடு.. நான் பார்த்தேன்.. சொல்லு ஏன் மிரட்டீட்டு இருந்த” என்று விடாமல்
கேட்டான்.

“என்னைப் பார்த்தால் மிரட்டுகிற பொண்ணு மாதிரியா இருக்கு.. பேசுனேன் தான்.. ஆனால் அட்வைஸ்
குடுத்திட்டு இருந்தேன்” என்று சிரிப்பை அடக்கியபடி சொன்னாள்.

“என்னங்க மேடம் அட்வைஸ் அப்படிக் குடுத்தீங்க” – கேலியான குரலோடு விக்னேஷ்.

“அதுவா.. அங்க ஒரு வைட் சர்ட் போட்ட ஒரு பையனை கரெக்ட் செய்ய ட்ரைப் பண்ணீட்டு இருந்தாங்க.. நான் போய்..
இங்க பாருங்கம்மா அந்தப் பையன் நல்லவன் இல்லை.. சரியான ப்ளே பாய்.. பத்து பொண்ணுங்களை இதுவரை
ஏமாத்தி இருக்கான். அதுவும் இல்லாமல் அவனிற்கு சொறியாசிஸ் இருக்கு..
அப்புறம்..” என்று சொல்லிக் கொண்டே போனவளை விக்னேஷின் குரல் தடுத்தது.

“ஏய்..ஏய்.. ஏண்டி இப்டி பண்ற.. நான் உனக்கு என்னடி பாவம் பண்ணேன்.. நல்லது பண்ணலனாலும் பரவாயில்லை.. கெட்டதாது பண்ணாம இரேன்” என்றவனிடம் “நான் உண்மையைத் தான சொன்னேன் விக்கா” என்று
உதட்டைக் பிதுக்கிக் கேட்க அவனிற்கு கோபம் எட்டிப் பார்த்தது.

“ஏண்டி.. என்ன எவ பாத்தா உனக்கு என்னடி” – விக்னேஷ்.

“என்னடா இப்படி கேட்டுட்ட.. என் அத்தை பையன்.. கல்யாணம் வரை உன்னைக்
காக்க வேண்டியது இந்த முறைப் பெண்ணின் கடமையல்லவா.. சொல்லு”
என்று போலியாய் அழுவது போல பிகு செய்தாள் கௌசி.

“சொப்ப்ப்ப்பாபாபாபா” என்று பெருமூச்சு விட்டவன் “ஏய் வந்தன்னு வெய்.. அவ்வளவு தான்” என்று விக்னேஷ்
சொல்ல தான் உட்கார்ந்திருக்கும் அழகை
ஒரு தடம் பார்த்தவளுக்குச் சிரிப்பு வந்தது.

“போய் தூங்குடா.. எனக்குத் தூக்கம் வருது.. டு நாட் டிஸ்டர்ப்” என்றபடி போனை கௌசி வைக்க, அந்தப்பக்கம்
விக்னேஷ் ராட்சசி என்று லேசான முறுவலுடன் முணுமுணுத்தபடி போனை
வைத்தான்.

போனை வைத்துவிட்டு தனது
கப்போர்டை திறந்து நைட் ட்ரெஸை எடுத்தவள்.. ட்ரெஸை உடுத்திக் கொண்டு மதி குடுத்த டைரியைப் பிரித்தபடி தன் ரைட்டிங் டேபிள் முன்னாள் அமர்ந்தாள். தான் இது வரை எழுதி வைத்திருந்த
பழையகவிதைகள் எல்லாவற்றையும் கட் செய்து அதில் பெவி-ஸ்டிக் போட்டு
ஒட்டினாள்.

பிறகு இன்று நடந்ததை எழுத
நினைத்தவளுக்கு அவளது விக்காவின் முகம் முன்னால் வந்து நின்றது.

ஆமாம் அவள் விக்காவைக்
காதலிக்கிறாள்.. எப்போதிலிருந்து என்றுத் தெரியவில்லை ஆனால் அவளது விக்கா-வுடன் பேசாமல்.. இல்லை இல்லை.. வம்பிழுக்காமல் ஒரு நாள் கூட
அவளால் இருக்க முடியாது. ஆனால் இதுநாள்வரை யாருக்கும் தெரியாது. ஏன்
விக்னேஷிற்கே தெரியாது. சொல்லத் தைரியம் இல்லாமல் இல்லை, ஏனோ அவனிடம் மறைத்து…. மறைந்து
காதலிப்பதில் அவ்வளவு சுகம் அவளுக்கு. இப்படியே நாட்களும் செல்லுகிறது.

‘இயல்பாய் இருக்கிறேன்
உன் முன்னால்
ஆனால்
இரவிற்கும் பகலிற்கும்
இடையே உள்ள
நேரத்தையெல்லாம்
ஆக்கிரமிக்கின்றன
உன் நினைவுகள்டா..
கொஞ்சம்
நிதானமாகவே
சேமித்துக்கொண்டிருக்கிறேன்
என் காதலை
ஏனென்றால்
மொத்தமாகக் கொட்டி
என் காதலின் போதையில்
உன்னைத்
தள்ளாடவைப்பதற்கு..
என் பேனாவின்
திசை
நோக்கிச் செல்லும்
எழுத்துக்கள் போல
என்னையும் அழைத்துச் செல்
என்பதே
தீராத ஆசை’
என்று டைரியில் தன் பேனாவால் எழுதி முடித்தாள். தன் கையால் அதற்கு ஒரு முத்தத்தைத் தந்தவள் மூடி
வைத்துவிட்டு அப்படியே சென்று படுக்கையில் விழுந்தாள். அன்றைய நாளை ஒரு தரம் முழுதாக நினைத்தவள் அப்படியே உறங்கியும் போனாள்.

வரதராஜனிற்கு சொந்த ஊர் சென்னை தான். அம்மா, அப்பா, இரண்டு தங்கைகளோடு அழகானக் குடும்பம்
வரதராஜனுடையது. வரதராஜனின் பெற்றோரிடம் அவ்வளவு வசதி இல்லை
என்றாலும் பிள்ளைகளுக்கு கல்வி முக்கியம் என்று தன்னுடைய மூன்று
பிள்ளைகளையும் ஒரே பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார் வரதராஜனின்
தந்தை. வரதராஜனின் மூத்த தங்கை ஜெயா. இரண்டாவது தங்கை சுமதி. நன்றாகப் படித்து முடித்து வேலையில்
சேர்ந்தார் வரதராஜன். குடும்பமே மகிழ்ச்சியில் நீந்தினர்.

ஆனால் அந்த சந்தோஷம் அவர்களுக்கு நிலைக்கவில்லை. அடுத்த ஆறு மாதத்தில் வரதராஜனின் தந்தை மாரடைப்பால் இறந்தார். அவர் இறந்த
சோகத்திலேயே அடுத்த ஆறு மாதத்தில் வரதராஜனின் தாயும் இறந்துவிட்டார். தாய் தந்தையை அடுத்தடுந்து இழந்ததில் மூன்று பிள்ளைகளும் கலங்கி நின்றனர். அப்போது ஜெயா பத்தாவது.. சுமதி
எட்டாவது.

தந்தை வாங்கிய கடன் வேறு அவர்களை தொந்திரவு செய்தது. வயசுப் பெண்கள்
இருக்கும் இடத்திற்கு கடன்காரர்கள் வருவது அவ்வளவு சரியாகப் படவில்லை வரதராஜனிற்கு. ஆகவே தன் தந்தை வைத்துப் போயிருந்த ஒரே நிலத்தை
விற்றவர் கடனை எல்லாம் செட்டில் செய்தார். கையில் கொஞ்சம் கூட நிற்கவில்லை.

அதற்குள் தங்கைகளை வேறு தேற்றும் பொறுப்பு. தங்கைகளைத் தேற்றி
பள்ளிக்கு அனுப்பினார். அதற்குள் ஸ்கூல் ஃபீஸ்.. வீட்டுப் பொருட்கள் என்று
வர திணறிப்போனார் வரதராஜன். சம்பளத்தை அன்னையின் கையிலே
குடுத்துப் பழக்கப்பட்டவரால் எப்படி சிக்கனமாய் செலவு செய்வது என்று தெரியவில்லை. பின்பு தங்கைகளை தன்னுடன் அமர்த்தி மாதாமாதம் வாங்கும்
மளிகை சாமான் லிஸ்ட் என்று பட்டியல் போட்டார்.

பின் அதிலிருந்து ஜெயா
தேவையில்லாதவற்றை (அதாவது தன் அம்மா வாங்குவதைப் பார்த்துப் பழகி
இருந்ததால்) கழிக்கச் சொன்னாள். பின் ஒருவாறு சமாளித்தனர் மூவரும்.

வரதராஜன் அயராது உழைத்து ஆபிஸில் பதவி உயர்வை வாங்கினார். அப்படியே
ஐந்து வருடங்கள் கடந்தன. அதற்குள் ஜெயாவும் தன் கல்லூரிப் படிப்பை முடித்தாள். சுமதி கல்லூரி முதலாம்
ஆண்டு சென்று கொண்டு இருந்தாள். வரதராஜன் ஜெயாவிற்கு மாப்பிள்ளை
பார்க்க ஜெயா மறுத்தாள்.

“ஏன் ஜெயா.. கல்யாணம் வேண்டாம்-ன்னு சொல்ற” என்று கேட்டவரிடம் “அண்ணா நான் போயிட்டா சுமதியும்
நீங்களும் தனியாக இருப்பீங்க.. இன்னும் இரண்டு வருசம் போகட்டும்..சுமதியோடு
சேர்த்து எனக்கும் கல்யாணத்தை வைத்து
விடுங்கள்” என்று சொன்னார் ஜெயா.

நல்லவேளை காதல் அது இது என்று இருக்குமோ என்று நினைத்தவர் நிம்மதி
அடைந்தார் வரதராஜன். அவருக்கும் கொஞ்சம் கையில் பணம் கம்மியாக இருப்பது போலத் தோன்றியது. போற
இடத்தில் நன்றாக வாழ வேண்டும் என்று
ஆசைப்பட்டவர் அதற்குப் பிறகு எதுவும் பேசவில்லை.

அடுத்த இரண்டரை வருடத்தில் நன்றாக உழைத்து கல்யாணத்திற்கு சேர்த்தியவர்
இரண்டு மாத இடைவெளியில்
ஜெயாவின் கல்யாணத்தையும் சுமதியின் கல்யாணத்தையும் வைத்தார். நல்ல நேரமோ என்னமோ நல்ல குடும்பமாக
சென்னையிலேயே அமைந்தனர் இரு
பெண்களுக்கும். அம்மாவின் நகை இவரின் சேமிப்பு என இரண்டு பெண்களுக்கும் ஆளுக்கு முப்பது பவுன்
போட்டார்.

முதலில் ஜெயா கல்யாணம்.. அடுத்து சுமதி கல்யாணம் என்று அடுத்தடுந்து கல்யாணம் நன்றாகவே முடிந்தது. ஜெயாவின் கணவர் சதாசிவம். சுமதியின் கணவன் செந்தில்நாதன். இரண்டு தங்கைகளின் பிரிவு
சோகத்தைத் தந்தாலும் அவர்கள் நன்றாக
இருக்கிறார்கள் என்பதே அவருக்கு பெரிய நிம்மதி. அவ்வப்போது அவர்கள்
இவரைப் பார்க்க வருவது வழக்கம். இல்லையென்றால் இவர் பார்த்து வருவார்.

அடுத்து வந்த ஒரு வருடத்தில் அதே இரண்டு மாத இடைவெளியில் ஜெயா
ஜீவாவையும் சுமதி விக்னேஷையும் பெற்றெடுத்தனர். தான் தாய்மாமா ஆகிவிட்ட பெருமை அவரிடம் அன்று அதிகமாகத் தெரிந்தது. தாய்மாமன் சீரை
எந்தக் குறையும் இல்லாமல் செய்தார் வரதராஜன். செந்தில்நாதனிற்கும்
சதாசிவத்திற்கும் வரதராஜனின் மேல் நல்ல மரியாதை உண்டு. “வேறு
எவனாவதாக இருந்திருந்தால்
தங்கைகளின் படிப்பை நிறுத்தி
வேலைக்கு அனுப்பி கையாலாகாத ஒருவனிடம் தள்ளியிருப்பான். ஆனால்
இவரோ எந்தக் குறையும் இல்லாமல் படிக்க வைத்து நகையையும் சேர்த்தி
நல்ல இடத்தில் கட்டிக்
கொடுத்திருக்கிறாரே” என்று ஒரு நாள் செந்தில்நாதனும் சதாசிவமுமே பேசிக்கொண்டனர்.

அடுத்த மூன்று வருடத்தில்
செந்தில்நாதனும் சதாசிவமும் உறவில் ஒரு பெண்ணைப் பார்த்து வரதராஜனிற்கு மணம் முடித்து வைத்தனர். முதலில் கல்யாணம் வேண்டாம் என்றவர் கோமதியைக்
கண்டவுடன் தலை ஆட்டி விட்டார். கோமதி அழகில் மட்டுமல்ல குணத்திலும் தங்கம்
தான். முதலில் அண்ணி எப்படியோ என்ன பயந்த ஜெயாவுக்கும் சுமதிக்கும்
“அப்பாடா” என்று இருந்தது.

அடுத்து ஒரு வருடத்தில் ரோஜாப் பூவே தோற்றுவிடும் அளவிற்கு ஒரு குழந்தையைப் பெற்றுத் தந்துவிட்டு இறைவனிடம் சேர்ந்துவிட்டார் கோமதி. வரதராஜன் தான் உடைந்துபோனார்.
வாழ்க்கையில் முதல் தடவையாக கதறினார். அப்பா அம்மா இறந்தபோது கூட கண்ணீர் விட்டாரே தவிர இந்த
அளவு அழவில்லை. வாழ்ந்த இந்த ஒரு வருட வாழ்க்கையில் ஒரு சின்ன சண்டை கூட போட்டதில்லை. தாயும் தாரமுமாக இருந்து.. இந்த ஒரு வருடம் மனைவியுடன் வாழ்ந்த நாட்களை மறக்கவே முடியாது
வரதராஜனால்.

அவருக்கு அதற்குப் பிறகு கிடைத்த ஒரே ஆறுதல் கௌசிகா மட்டும் தான்.
குழந்தையை கவனித்துக் கொள்ள வரதராஜன் மிகவும் சிரமப்பட ஜெயாவும்
சுமதியும் கௌசியை அவர்கள் வீட்டில் அவர் வேலைக்குச் செல்லும் போது சுமதியிடம் கௌசிகாவைக் கொடுத்துவிட்டுப் போய்விடுவார். சுமதியின் வீடும் ஜெயாவின் வீடும் பக்கம்
பக்கம் என்பதால் ஜெயாவும் எல்லோரும் காலை சென்ற பிறகு தங்கையின் வீட்டிற்கு வந்து அண்ணனின் மகளைப்
பார்த்துக்கொள்வார்.

மற்ற குழந்தைகளைப் போலக் கௌசிகா அழுததே கிடையாது. பசி வந்தால் மட்டுமே அழுகை. அவளைப் பார்த்துக்
கொள்வதும் யாருக்குமே சிரமமாக இருக்கவில்லை.

ஜீவாவும் விக்னேஷும் அப்போது தான் நான்கு வயது என்பதால் கௌசிகாவை
ஆச்சரியமாகப் பார்த்தனர்.
குழந்தையாகத் தொட்டிலில்
படுத்திருக்கும் அவளைக் காண இருவருக்குமே குஷி தான். ஜீவா.. “கௌசியை கையில் வாங்குவேன்” என்று அடம்பிடிக்க அவ்வப்போது சுமதி அவனை உட்கார வைத்து அவனது மடியில் வைப்பார். விக்னேஷைக் கேட்டால் வேண்டாம் என்று விடுவான்.
ஆனால் கௌசியின் மேலே அவன் கண்கள் இருக்கும். தலையில் அடர்த்தியான முடியுடன் முட்டைக் கண்களை உருட்டிக் கொண்டு கை
கால்களை உதறி அந்தச் ரோஜா இதழ்களை விரித்துச் சிரிக்கையில் வாயைத் திறந்து அவளைப் பார்த்துக் கொண்டு இருப்பான் விக்னேஷ்.

அழுதுகொண்டு இருந்தால் கூட விக்னேஷைக் கண்டால் அழுகை அடங்கிவிடும் பிஞ்சுக் குழந்தையாக இருக்கும் போதே. பின் கௌசிகா தவழ
ஆரம்பிக்க யாராலும் சமாளிக்க
முடியவில்லை. ஒரு நாள் வேலை விஷயமாக வரதராஜன் வெளியில் சென்று விட அன்று கௌசிகாவை சுமதி வீட்டிலேயே வைத்திருந்தார். அடுத்த நாள்
காலை(ஞாயிற்றுக்கிழமை) தவழ்ந்து கொண்டே சென்ற கௌசி நன்றாக தூங்கிக் கொண்டிருந்த விக்னேஷின்
அருகில் உடகார்ந்தாள். ஜீவாவும் விடுமுறை என்பதால் சுமதி வீட்டிலேயே இவர்களுடன் இருந்தான். அப்போது தான் எழுந்து தூக்கக் கலக்கத்தில்
உட்கார்ந்திருந்த ஜீவா.. கௌசி
விக்னேஷின் அருகில்
உட்கார்ந்திருந்ததைக் கண்டான். ஒரு நொடி தாமதிக்காமல் அவனின் உட்சி
முடியை அப்படியே இரண்டு பிஞ்சுக் கையால் பிடித்துவிட்டாள்.

முடியைப் பிடித்து இழுத்த வலியில் விக்னேஷ் கத்த ஆரம்பிக்க சுமதியும்
செந்தில்நாதனும் படுக்கை அறைக்குள் ஓடி வந்தனர். அதற்குள் ஜீவா கௌசியின்
கையை விக்னேஷின் தலையில் இருந்து எடுத்துவிட தூக்கத்தில் இருந்தவன்
எழுந்து உட்கார்ந்து உச்சந் தலையைப் பிடித்தபடி கண்களில் நீருடன் சிணுங்க
ஆரம்பித்தான் விக்னேஷ். உள்ளே வந்த சுமதியும் செந்தில்நாதனும் ஜீவா விவரம்
சொல்ல சிரிப்பை அடக்கியபடி
விக்னேஷை சமாதானம் செய்தனர்.

“வி.. விக்..விக்கா”.. “விக்க்காகா..” என்று
விக்னேஷை முதல்முதலாக தன் மழலைக் குரலால் அழைத்தாள் கௌசிகா. அவள்
முதல் உச்சரித்த வார்த்தையும் “விக்கா” தான். எல்லோரும் கண் விரிய கௌசியைப் பார்க்க.. அழுது கொண்டிருந்த விக்னேஷின் அழுகையும்
அப்படியே நின்று வாயைத் திறந்து “பேபே…” என்று கௌசியைப் பார்த்துக்
கொண்டிருந்தான்.

செந்தில்நாதன் தான் கௌசியைத் தூக்கிக் கொஞ்ச ஆரம்பித்துவிட்டார்.
அதிலிருந்து எதற்கெடுத்தாலும் “விக்கா” “விக்கா” தான். அவளின் சுட்டித்தனத்தால் அனைவருக்கும் ப்ரியமாகிப் போனாள். ஆனால் வளர வளர தான் சேட்டை குறும்பு எல்லாம் அதிகமாகிவிட்டது. ஆனால்
அடுத்தவர் மூஞ்சி சுளிக்கும் படியான குறும்பு இல்லை.. சிறு வயதில் இருந்தே பசங்களுடன் இருப்பதால் இயல்பாக
வந்த ஒன்று.

தன் மனைவியையே உரித்து
வைத்திருந்த மகளையும் அவளது சேட்டைகளையும் காணக்காண வரதராஜனும் கொஞ்சம் சோகத்தில்
இருந்து வெளியே வந்தார்.

பள்ளி சேரும் வயது வந்தவுடன்
விக்னேஷ் ஜீவா படிக்கும் பள்ளியிலேயே மகளை சேர்த்துவிட்டார் வரதராஜன்.
பள்ளி முடிந்து விக்னேஷ் ஜீவா உடனே பள்ளியில் இருந்து வருபவள் தன் தந்தை
வரும்வரை சுமதி அத்தை வீட்டிலேயே தங்கி விடுவாள்.

ஜீவா, விக்னேஷ், கௌசிகா மூவரும் நல்ல நெருக்கம். வயது வித்தியாசம் இருந்தாலும் பசங்கள் இருவரையும் செய்வதைக் கண்டு நானும் அதையே
செய்வேன் என்று குளறுபடி செய்வாள். அவள் செய்தது தப்பாகி விட்டால் அவ்வளவு தான் அதுவும் அவளை
விக்னேஷும் ஜீவாவும் கிண்டல் செய்து விட்டால் அவ்வளவு தான். இருவரையும்
அடித்து வைத்து விடுவாள். அதுவும் சின்ன வயதில் இருந்தே கிடைப்பது
விக்னேஷின் உச்சி முடிதான். என்னதான் சண்டையிட்டுக் கொண்டாலும் மூவரும்
பிரிந்ததே இல்லை.

சின்ன வயசில் இருந்தே காலை நேரத்தில் எழும் பழக்கம் இருந்ததால் தன்
தந்தையுடன் எழுந்து ஏதாவது
உதவுகிறேன் என்று ஆரம்பித்து விடுவாள். தந்தையிடம் தினமும் நடக்கும்
அனைத்தையும் சொன்ன படியே அவரின் மேல் படுத்து சொல்லச் சொல்லப் பாதியில் உறங்கிவிடுவாள்.

கௌசிக்கு நான்கு வயது இருக்கும் போது சந்தியா பிறந்தாள் ஜெயாவிற்கு.

அப்படியே நாட்கள் செல்ல கௌசி 13 வயது பதிமூன்று ஆனது. விக்னேஷ் ஜீவாவின் வயது 17.. 12ஆம் வகுப்பு
படித்துக் கொண்டிருந்தனர். 12ஆம் வகுப்பு என்பதால் மாலை ஆறு மணிக்கு
வீட்டிற்கு வந்தவன் யாரும் வீட்டில் இல்லாததைக் கண்டு வீட்டிற்குள் தேடினான். ஒரு வேளை கோவிலிற்குச்
சென்றிருப்பார்கள் என்று நினைத்தவன் உடையை மாற்றிக் கொண்டு மீண்டும்
ஹாலிற்கு வர கௌசிகா அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்திருந்தாள்.

“ஏய் இங்க தான் இருக்கியா? எங்கிருந்த? அம்மா எங்கடி? என்றபடி சோபாவில்
வந்து உட்கார்ந்து டி.வி யைப் போட்டான். “நான் பாத்ரூமில் இருந்தேன்” என்றவள்
“அத்தை கோயிலுக்கு போயிருக்காங்க” என்று தரையைப் பார்த்தபடியே பதில்
வந்தது.

“என்ன இவ இவ்வளவு அமைதியா உட்கார்ந்திருக்கா” என்று நினைத்தவன் அவளை உற்று கவனித்தான். மஞ்சள் நிற ப்ராக் முட்டியின் கீழ் வரைப் போட்டு.. கைகளைக் வயிறிற்குக் குறுக்காகக்
கட்டிக்கொண்டு ஏதோ யோசித்தபடி.. எட்டுக்கால் பூச்சி போல உடல்வாகுடன்
தரையைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

“ஏய் என்ன ஆச்சு.. ஏன் இப்படி
உட்கார்ந்திருக்க.. என்ன ஃபெயில் ஆயிட்டயா எதாச்சு சப்ஜெக்ட்ல” என்று கேலியாகக் கேட்டுப் பார்த்தான். அவளிடம் பதிலில்லை. அவள் ஏதோ தீவர
யோசனையில் மூழ்கி இருந்தாள்.

“கௌசி.. இங்க பாரு டி.. என்ன ஆச்சு” என்று அவளது தாடையைக் கன்னத்தோடு பிடித்துத் திருப்பிக் கேட்டான்.

அவளைப் பார்த்தவன்.. அவள் ஏதோ பயமாகவும் பதட்டமாகவும் இருப்பது
போலத் தெரிந்தது. “விக்கா.. நா.. நான்.. பெரிய பொண்ணு ஆயிட்டேன் டா.. அதாவது ஏஜ் அட்டன்ட் பண்ணிட்டேன் டா”
என்று மூச்சுவாங்க உதடு நடுங்க அவள் சொல்ல விக்னேஷ் “பேபே…” வென
விழித்தான்.

அவனுக்கு என்ன என்றுத் தெரியாமல் இல்லை. ஆனால் இப்போது என்ன செய்வது என்று தான் தெரியவில்லை.
ஏனோ அவளை விட பதட்டமாக இருந்தது. தன் அம்மாவிற்குக் வீட்டு போனில் இருந்து கூப்பிட்டுப் பார்த்தான்.. சுமதி
எடுக்கவில்லை. அடுத்து ஜீவாவின் வீட்டிற்கு போன் போட ஜெயா தான் எடுத்தார்.

“பெரியம்மா..” என்றவனுக்கு குரல் உள்ளே சென்றது.

“என்னடா விக்னேஷ்.. என்ன ஆச்சு.. ஏன் குரல் ஒரு மாதிரி இருக்கு” என்று ஜெயா
கேட்க விஷயத்தைச் சொன்னான்.

“சரி நான் பத்து நிமிடத்தில் வரேன்” என்று போனை வைத்தவர் அடுத்து பத்து
நிமிடத்தில் வந்தார். அவர் வந்த அடுத்த சில நொடிகளிலேயே சுமதியும் வர உறுதியாகிவிட்டது. உடனே தன் அண்ணனுக்குப் போன் செய்து தங்கைகள் விவரம் சொல்ல அவர் பூரித்துப் போனார். பின் எல்லா சீர்களும்
நன்றாகவே செய்யப்பட்டது. அதற்குப் பிறகு இரண்டு மாதம் மட்டுமே கௌசியை சுமதி, ஜெயாவால் அடக்கி வைக்க முடிந்தது.. மறுபடியும் ஆட்டம்
பாட்டம் சேட்டை தான்.

இப்போது மட்டும் இல்லை பள்ளியில் இருந்தே எந்தப் பெண்ணையும் விக்னேஷிடம் பேசவிட மாட்டாள் கௌசி.
ஒரு தடவை விக்னேஷுடன் படிக்கும் பெண் கௌசியிடம் வந்து ஒரு லவ் லெட்டரை வந்து தந்து “இதை நீ விக்னேஷிடம் தந்துடு ப்ளீஸ்” என்று சொல்ல “ஏய்.. இந்தா.. அப்படியே
ஓடிப்போயிடு” என்ன அவள் கையில் கௌசி லெட்டரைத் திணிக்க அந்தப் பெண் கௌசியை முறைத்தாள்.

“நீ இல்லையென்றால் எனக்கு வேறு யாரும் கிடைக்க மாட்டார்களா?” என்று
முறைத்தபடி கேட்டாள்.

“சூப்பரா முறைக்கற.. வந்து உன் அப்பா குமார் அங்கிள் தானே.. என் அப்பாவிற்குத் தெரிந்தவர் தான்.. நான்
எங்கு சொல்லணுமோ அங்க
சொல்லிகறேன் ” என்று மிரட்ட அவள் அவ்வளவு தான்.. ஓடியே விட்டாள். பாவம் அவள் கழுத்தில் மாட்டியிருந்த ஐடி
கார்டு-இல் இருந்த அவள் அப்பாவின் பெயரை கௌசி பார்த்ததை அவள்
அறியவில்லை. இது எல்லாம் கௌசிக்கு பள்ளி முடிந்து செல்லும் போது அதாவது
பண்ணிரெண்டாம் வகுப்பு
மாணவர்களுக்கு இடைவெளி இருந்த நேரத்தின் போது நடந்தது.

ஆனால் இந்த விஷயம் விக்னேஷின் காதுகளில் எப்படியோ எட்டிவிட்டது.
வீட்டிற்கு வந்து கௌசியை அவன் கேள்வி கேட்க “ஏய்ய் என்னடா கேள்வி கேக்கற.. அவ ஓவரா பேசுனா.. நான் சும்மா விடணுமா” என்று கேட்க இருவருக்கும் சண்டை வந்தது. அதற்குள் சுமதி வந்து விசாரிக்க சின்ன வயதில்
இருந்தே எதையும் மறைக்கும் பழக்கம் இல்லாத விக்னேஷ் தன் அன்னையிடம்
எல்லாவற்றையும் கூறி “அம்மா.. பாரும்மா இவள.. அந்தப் பொண்ணு சீனியர்ன்னு கொஞ்சம் கூட பயமில்லாம அந்தப் பொண்ண பிடிச்சு மிரட்டி அனுப்பியிருக்கா.. பாவம் க்ளாஸ்-ல வந்து என்கிட்ட அழுது.. கௌசிய யார்கிட்டையும் சொல்ல வேணாம்-னு சொல்லீரு அப்படி கேக்கறா” என்று சொல்ல கௌசிக்கு கோபம் வந்தது.

“உனக்கு ஏண்டா அவ மேல அவ்வளவு அக்கறை..” என்றவள் “அத்தை பாத்தீங்களா அவன் அந்தப் பொண்ணு பத்தி பேசறான் நோட் பண்ணுங்க” என்று
சுமதியைக் குழப்பினாள்.

அதற்குள் செந்தில்நாதன் வர
இருவரையும் சமாதானம் செய்தார். இந்த மாதிரி விஷயங்களில் சண்டைகள்
வருமே தவிர ஒருவருக்கொருவர் இல்லாமல் இருக்க மாட்டார்கள் ஜீவா,
விக்னேஷ், கௌசிகா.. ஆனால் வெளியே காட்டிக் கொண்டதே இல்லை.

ஜீவாவின் வீடு கொஞ்சம் வசதியாகவே இருந்தனர். விக்னேஷின் வீடும் நல்ல
மிடில் க்ளாஸ் வாழ்க்கையையே
வாழ்ந்தனர். கௌசிகாவின் வீட்டிலும் எந்தப் பிரச்னையும் இல்லாமல் இருந்தது.

இப்படியே ஸ்கூல் என எல்லாவற்றையும் முடித்து கௌசி கல்லூரியில் சேர்ந்தாள். காலேஜிலும் பண்ணாத வேலை இல்லை.
ஒரு பெண்ணைத் தப்பாகப் பேசினான் என்று ஒருவனைக் க்ளாஸில் அடித்து.. பெண்கள் படிப்பிற்கு மட்டும் தான்
லாயிக்கு என்று ஒருவன் சொல்ல “வர்ரியாயாயா பைக் ரேஸ் வச்சுக்கலாம்” என்று கேட்டாள்.

“ஏய் இங்க பாருங்கடா.. ரேஸ் வராளாம்” என்று சிரித்தான். அதாவது கௌசியின்
நண்பன் தான் அவன்.. சும்மா பேசிக் கொண்டிருந்தவர்கள் பேச்சின் திசை மாறி இப்படிவந்து நின்றது.

“இந்த ஹேஹேஹே லாம் வேண்டாம்.. ரேஸ் வரியா இல்லையா?” என்று கெத்தாக கேட்க ஒரு சண்டே காலை 5.40 மணிக்கு ecr ரோட்டில் வைத்திருந்தனர். கௌசியிடம்
பைக் எல்லாம் இல்லாததால் க்ளாஸில் உள்ள ஒரு பையன் பைக்கையே வாங்கினாள்.

ரேஸ் நீலாங்கரையில் ஆரம்பித்து முட்டுக்காடு வரை என்று முடிவு பண்ணி
வைத்திருந்தனர். ஒரு சிலர் தவிர மிச்ச பத்து பேரும் முட்டுக்காடில் நின்றிருந்தனர். ரேஸ் ஆரம்பிக்க வண்டியை இருவரும் கிளம்ப ரேஸ்
பைக்கிற்கே உண்டான சத்தத்தோடு அந்த அதிகாலையில் பைக் கிளம்பியது. விஜிபி தாண்டி பனையூர் வரை கௌசியால் தன் நண்பனை முந்த
முடியவில்லை.

விக்கா பைக் ஓட்ட சொல்லிக் கொடுக்கும் போது சொன்னதை நியாபகத்திற்குக்
கொண்டு வந்தாள் கௌசி. கியரை டவுன் செய்தவள் ஆக்சலரேட்டரைக் குடுத்து
சைட் எடுத்து ஓவர் டேக் செய்துவிட்டாள். ஓவர் டேக் செய்த சந்தோஷத்தில்
இன்னும் ஸ்பீட் எடுக்க முட்டுக்காடை முதலில் அடைந்தாள்.

முதலில் யாருக்குமே கௌசி முதல் வருவாள் என்று தோன்றவில்லை. சும்மா
வாய் அடுக்கிறாள் என்று தான்
நினைத்தார்கள். முதலில் வந்தது கூட அவள் இல்லை என்றுதான் நினைத்தனர்.
காரணம் ஒரே மாதிரி ரேஸ் சூட் அன்ட் ஹெல்மெட் அணிந்திருந்தனர். ஹெல்மெட்டை கழட்டிவிட்டு இறங்கி வந்து “ஹே பர்ஸட் பர்ஸ்ட்” என்று ஆட எல்லோரும் அவளுடன் சேர்ந்து ஆட
இரண்டாவதாக வந்த கவின் (பைக் ரேஸ்-இல் உடன் வந்தவன்) சேர்ந்து ஆடினான்.

அவள் ஆடிவிட்டுத் திரும்ப அப்படியே நின்றுவிட்டாள். விக்னேஷும் ஜீவாவும்
ஆப்போசிட் ரோட்டில் நின்று இவர்கள் அடித்தக் கூத்தைத் தான் பார்த்துக்
கொண்டிருந்தனர். அவ்வளவு தான் அப்படியே நின்றுவிட்டாள். “போச்சு
மாட்டுனோம்” என்று முணுமுணுத்தவள் ஹெல்மெட்.. ரேஸ் ஜாக்கெட்டை எல்லாம் கழற்றி தன் நண்பர்களிடம் தந்துவிட்டு
ரோட்டைக் க்ராஸ் செய்து அவர்களின் அருகில் சென்றாள்.

அப்போது விக்னேஷும் ஜீவாவும் ஐடி கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து ஒரு
வருடம் ஆகியிருந்தது. சும்மா காலை ஒரு ரௌன்ட் போறோம் என்று வீட்டில் சொல்லி வந்த இருவரும் முட்டுக்காட்டின்
பாலத்தில் நின்றுவிட்டனர். பைக் வரும் சத்தத்தில் எதேச்சையாகத் திரும்பிய
இருவரும் ஹெல்மெட்டைக் கழட்டிய பின்பு தான் அது கௌசிகா என்றே
கவனித்தனர். அவர்கள் அருகில் கௌசிகா செல்ல அவர்கள் இருவரும் திருட்டு முழி முழித்தனர்.”திட்டுவாங்கப்
போகிறோம்” என்று நினைத்து வந்தவள் இவர்கள் இருவரும் முழிப்பதைப் பார்த்து
“என்ன இவனுக முழியே சரி இல்ல…” என்று புருவத்தைச் சுருக்கியபடி அருகில் சென்று நிற்க இருவரும் கையைக் கோர்த்து இடைவெளி விடாமல் ஒட்டி நின்றனர்.

“என்னடா.. என்ன மறைக்கறீங்க?” என்று
கௌசி கேட்டுக் கொண்டே அருகில் வர இனி மறைக்க முடியாது என்று நினைத்த
இருவரும் நகர அங்கு ஒரு பெண் நிற்பதைப் பார்த்த கௌசிகாவின் கண்கள் வெளியே தெறித்துவிடும்
அளவிற்கு விரிந்தது.

“யாருடா இந்தப் பொண்ணு?” என்று கேட்க இருவருடன் சேர்ந்து அந்தப் பெண்ணும் விழித்தாள்.

“கௌசி.. கௌசி.. யார்கிட்டையும் சொல்லிவிடாதே டி.. இது நான் லவ் பண்ற பொண்ணு..” என்று ஜீவா கிட்டத்தட்ட கெஞ்சத் துவங்க “என்னது லவ் பண்றையா. என்கிட்ட சொல்லவே இல்ல.. மறைச்சுட்டல ஜீ?” என்று
கேட்டவள் முகத்தைத் திருப்பிக்
கொண்டாள்.

“நான் இன்னிக்கு தாண்டி ப்ரபோஸே பண்றேன். இன்னிக்கு இவ பர்த்டே.. இவ
ஓகே சொன்னால் அப்புறம் சொல்லலாம் என்று நினைத்தேன்” என்று ஜீவா
கௌசியை சமாதானம் செய்ய..
விக்னேஷ் ஜீவாவின் கையை
அழுத்தியதை ஜீவா கவனிக்கவில்லை.

“இவனிடம் மட்டும் சொல்லி கூட்டிட்டு வந்திருக்க.. ஆனா என்ன மட்டும் விட்டுட்டேல” என்று விக்னேஷைக்
கைகாட்டி ஜீவாவிடம் சண்டையிட்டாள் கௌசிகா. ஜீவா பேசாமல் நின்றான்.

“ப்ரபோஸ் பண்ணிட்டையா?” என்று கௌசி கேட்க அப்போதுதான் தான் இன்னும் அவளைப் ப்ரபோஸ்
செய்யவில்லை.. கௌசி வந்த
அவசரத்தில் அவளிடம் எல்லாவற்றையும்
உளறிவிட்டதை.

ஒரு நிமிடம் நாக்கைக் கடித்துக் கொண்டு திரும்பியவன் மதியைப் பார்த்தான். மதி
இடுப்பில் கை வைத்தபடி “இதற்குதான் கூட்டிட்டு வந்தீங்களா?” என்று
முறைத்தபடிக் கேட்டாள்.

காரைத் திறந்து ஒரு கிப்டை எடுத்தவன் அவள் முன் ஒரு காலை மடித்து அமரந்து
மதியின் ஒரு கையைப் பிடித்து “மதி.. ஐ லவ் யூ.. I want to marry you.. Will you marry me?” என்று நடு ரோட்டில் கேட்க மதியின்
முகம் சிவந்து விட்டது.

“ப்ளீஸ் ப்ளீஸ் ஜீவா.. கெட் அப்..” என்று இன்னொரு கையைப் பிடித்து எழுப்பினாள் மதி.

அவள் எதுவும் பேசவில்லை.. ஆனால் உதடுகள் வெட்கத்தில் சிரித்தபடி இருந்தது. “ஓகே வா?” என்று ஜீவா கேட்க..
தலையை ஆட்டினாள் மதி.

“ஹேஹே சூப்பர் ஜீ மாமா கமிட்
ஆயிட்டான்” என்று விக்னேஷும் கௌசிகாவும் குதிக்க ஜீவாவிற்கு
அப்போது தான் அவர்கள் இரண்டு பேரும் அங்கு இருப்பதையே நியாபகம் வர
“அய்யோயோ இனி இத வச்சே
ஓட்டப்போறாங்களே” என்று சொல்லிச் சிரித்தான் ஜீவா.

“மதி இவ தான் கௌசிகா.. ஆனா இனி கௌசிக்” என்று விக்னேஷ் ஆரம்பிக்க “வாட் கௌசிக் ஆஆஆ?” என்று கேட்டாள் கௌசிகா. அந்தப் பெயர் இங்கு இருந்து தான் ஆரம்பித்தது.

“ஆமாம் நீ பைக்ல இருந்து
இறங்குனப்பவே முடிவு பண்ணிட்டேன்.. இனிமேல் நீ பையன் தான்.. பொண்ணு
இல்ல” என்று விக்னேஷ் சொல்ல அவனை இடித்தவள் “இவங்க சொல்றது எல்லாம் கேட்காதீங்க” என்று மதியிடம்
பேசினாள்.

பின் நால்வரும் காரில் ஏறி அவரவர் இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.

டக்கென்று இடித்த இடியில் நிகழ்விற்கு வந்த கௌசிகா தன் கண்களிலும் கன்னத்திலும் கண்ணீர் கரையை உணர்ந்தாள். திரும்பிக் கவிதாவைப்
பார்த்தாள்.. நன்றாக உறங்கிக்
கொண்டிருந்தாள். மெதுவாக எழுந்து வந்து எப்போதும் பூட்டியிருக்கும் தன் ட்ராளியைத் திறந்தவள் அந்த டைரியை எடுத்தாள். ஆம் மதி அவளது 22வது பிறந்த நாளன்று எழுதிய டைரி.

டைரியை எடுத்துக் கொண்டு வெளியே வந்தவள் மூன்றரை வருடத்திற்குப் பிறகு ஒரு கவிதையை அதில் கண்ணீருடன் எழுதினாள்.

‘பகலினில் வெளிச்சமாய்
இரவினில் தென்றலாய்
தனிமையில் இனிமையாய்
கஷ்டத்தில் கண்ணீராய்
தேயாத பிறையாய்
உன் நினைவுகள் ஒளிர
வளர்பிறையாய்
உன் காதல் என்னுள்
வளர்கிறது’
என்று எழுதி முடித்தாள்.

வெளியே பெய்து கொண்டிருந்த மழையைப் பார்த்தவள் டைரியைத்
திறந்து முதலில் எழுதி வைத்திருந்த கவிதையைப் படித்தாள்.

அவளின் முதல் கவிதை.. விக்னேஷ் கல்லூரி சேர்ந்த புதிதில் அவனை ரொம்பவும் மிஸ் செய்த போது எழுதியது.

‘என் வாழ்க்கை என்னும் கவிதையில்
நீயோ ஓர் உயிர் எழுத்து’

இரண்டாவது கவிதை.. அவனிற்குத் தெரியாமல் அவனை சைட் அடிக்கும்
போது எழுதியது.

‘மறைந்து நின்று தன் காதலனை
பார்க்கும் ஒவ்வொரு பெண்ணின்
முகத்திலும் பார்த்துக்கொள்ளலாம்
அவளது வெட்கத்தை’

மூன்றாவது கவிதை.. ஒருமுறை காற்றடித்த போது மாடியில் ஜீவா விக்னேஷுடன் நின்று பேசிக் கொண்டிருந்த போது

‘காற்றிடம் ஒவ்வொரு முறையும்
தோற்றுத்தான் போகிறேன்
உன் கூந்தலை அதுகலைத்து
விட்டுச் செல்லும்போது
உன்னுடைய தோற்றத்தில்’

நான்காவது கவிதை.. ஒரு நாள்
வரதராஜன் வேலை விஷயமாக வெளியே சென்றபோது கௌசிக்கு
காய்ச்சல் வந்து படுத்தாள். அப்போது விக்னேஷ் தன்னைப் பார்த்துக்
கொண்டபோது எழுதியது

‘ஆயிரம் எழுத்துக்களால்
உன் அன்பை
அலங்கரித்தாலும்
நீ காட்டும் அன்பையும்
பாதுகாப்பையும்
பாதிதான் வெளிப்படுத்தும்
என் கவிதைகள்’

“கௌசி…” என்று கவிதாவின் குரல் கேட்க டக்கென்று டைரியை ட்ரெஸிற்குள்
ஒளித்துவிட்டாள் கௌசி.

“என்னடி இங்க உட்கார்ந்துட்டு இருக்க?” என்று கண்களைத் தேய்த்தபடி வந்தாள் கவிதா.

“தூக்கம் வரல டி” – கௌசிகா.

“உள்ள வா.. மழைச் சாரல்ல உட்காராதே..” என்று கவிதா உள்ளே கூப்பிட “நான்
தண்ணி குடிச்சிட்டு வரேன். நீ போய் படு” என்று கௌசி சொல்லிவிட்டு டைரி கீழே
விழாதவண்ணம் எழுந்து உள்ளே வந்தாள்.

உள்ளே வந்து படுத்தவளுக்கு மீண்டும் பழைய நினைவுகள் வந்து சுனாமியாய் எழுந்தது.

Leave a Reply

error: Content is protected !!