காதல் சதிராட்டம் 23b
காதல் சதிராட்டம் 23b
ஒரே நேரத்தில் ஒரே தொனியில் ஒலித்த கேள்வியைக் கண்டு இருவரும் ஒருவர் முகத்தை இன்னொருவர் திகைத்துப் போய் பார்த்தனர்.
“ஆதிரா உனக்கு எதனாலே வினய் இப்போ எல்லாம் வேற மாதிரி நடந்துக்குறா மாதிரி தோணுது.”
“தெரியல ஐஸ். இப்போ எல்லாம் அவன் எதுக்கோ தயங்கி நிற்கிறா மாதிரி இருக்கு… எதையோ கேட்க வந்து சொல்ல வந்து அப்படியே வேற டாப்பிக்கை மாத்துறா மாதிரி தோணுது… ஏன்னே புரியல… ” என்று தன் சஞ்சலத்தை சொன்னவள் திரும்பி ஐஸ்வர்யாவிடம் ” உனக்கு எது இப்போ வித்தியாசமா தெரியுது ஐஸ்?” என்று எதிர்க்கேள்வி கேட்டாள்.
“எனக்கு வினய்யே வித்தியாசமா தான் தெரியுறான் ஆதி… இன்னைக்கு அவன் ரூம்முக்குள்ளே ஒரு பொண்ணு இருந்தா. அவன் ஷர்ட் இல்லாம இருந்தான்.. பார்த்த உடனே ஒரு மாதிரி ஆகிடுச்சு… ” என்று சொல்ல ஆதிரா ஒரு நிமிடம் திடுக்கிட்டு மறுநொடி வேகமாக மறுத்தாள்.
“சீ சீ இருக்காது ஐஸ்வர்யா..நீ ஏதோ தப்பா புரிஞ்சு இருந்து இருக்கலாம். வினய் அப்படிப்பட்டவன் கிடையாது. வினய் வரட்டும் அவன் பக்கம் நியாயத்தைக் கேட்டுட்டு மீதியை முடிவுப் பண்ணிக்கலாம். அவசரப்பட்டு எந்த முடிவும் பண்ணாதே. ” என்று ஆதிரா பொறுமையாக சொல்ல ஐஸ்வர்யாவுக்கு ஆச்சர்யமாக இருந்தது.
“ஆதிரா வினய் மேலே அவ்வளவு நம்பிக்கையா?” என்றாள் வியப்பாக.
“வினய் இப்போ பண்றதுலாம் பார்த்து எனக்கு சின்னதா நெருடல் வர்றது உண்மை தான். ஆனால் அதுக்காக சந்தேகம் வரல. இதுவரை வினய் ஒரு தடவைக் கூட தப்பா நடந்துக்கிட்டது இல்லை. இந்த ஒரே ஒரு இன்சிடென்ட் வெச்சு முன்னாடியே நம்ம முடிவுப் பண்ணிடக்கூடாது… வினய் நாளைக்கு என் கிட்டே பேசுறேனு சொல்லி இருக்கான்.. நான் அவன் கிட்டே நேரடியா கேட்டுடுறேன். ” என ஆதிரா முடிவாக சொல்ல ஐஸ்வர்யாவுக்கு அவள் வினய் மீது வைத்து இருக்கும் நம்பிக்கை வியப்பளித்தது.
“நீ சொல்றதும் சரி தான் ஆதி.. வினய் கிட்டே பேசிட்டு முடிவு பண்ணிக்கலாம்.” என்றாள் ஐஸ்வர்யாவும் தீர்மானமாக.
அவர்கள் இருவரும் வேறு கதைகளைப் பேசிக் கொண்டு இருக்க விமலும் அங்கே வந்து இணைந்துக் கொண்டான் கையில் வைத்து இருந்த புத்தகத்துடன்.
“ஓய் என்ன ட்வின்ஸ் சிஸ்டர்களா? என்ன பேசிக்கிட்டு இருக்கீங்க… ஆமாம் இந்த வினய் பையன் எங்கே போனான்?” என்று விமல் கேட்க இருவரும் தெரியாது என்றனர் ஒரே நேரத்தில்.
“உன் கிட்டே தான் போன் இருக்கு இல்லை… நீ போன் பண்ணி கேட்கலாமே விமல்.. ” என்றாள் ஆதிரா இயல்பாக சொல்வதைப் போல்.
” போன் பண்ணனே..பட் ஸ்விட்ச் ஆஃப்ல இருக்கு… ” என்று சொல்லிவிட்டு விமல் ஐஸ்வர்யாவின் பக்கம் திரும்பினான்.
“அடியே ஐஸ்… என்ன பண்ணி வெச்சே அந்த ப்ரொஃபஸர் சிங்காரம் உன் மேலே செம காண்டுல சுத்திக்கிட்டு இருக்கார்…அவர் கண்ணுல பட்டுடாதே… “
“ஒன்னும் பண்ணல விமல்… அவர் சொட்டை மண்டையை வர்ணிச்சு என் ரெக்கார்ட் நோட் பின்னாடி ஒரு கவிதை எழுதி வெச்சு இருந்தேன். அதை மனுஷன் சைன் பண்ணும் போது பார்த்துட்டார். அதான் செம கொலைவெறியிலே இருக்கார் என் மேலே… நானே ரெண்டு நாளா அவர் கண்ணுல மாட்டாம தப்பிச்சுட்டு இருக்கேன். எப்போ மாட்ட போறனோ தெரியல. “
“ஏன் ஐஸ்.. உன் டேஸ்ட் இவ்வளவு மட்டமா போயிடுச்சு..போயும் போயும் வழுக்கை விழுந்த ப்ரொஃபஸர் மேலே இப்படி காதலிலே விழுந்துட்டியே… ” என்று அவன் கலாய்க்க ஐஸ்வர்யா காண்டாகி அவனைத் துரத்த ஆரம்பித்தாள். விமல் கையில் வைத்து இருந்த புத்தகங்களை எல்லாம் மூலைக்கு ஒன்றாய் சிதறவிட்டபடி ஓட ஆரம்பித்தான்.
அவர்கள் இருவரையும் பார்த்து சிரித்தவள் கீழே விழுந்த புத்தகங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு இருந்தவள் வெளியே சிதறி இருந்த அந்த காகிதத்தைப் பார்த்ததும் முகம் இறுகிப் பாறையாக மாறிவிட்டது.
ஐஸ்வர்யாவும் விமலும் ஓடி ஓடி களைத்துப் போய் மீண்டும் அந்த மரத்துக்கடியில் வந்து உட்கார ஆதிரா விமலின் முன்னால் வந்து நின்று தீர்க்கமாக ஒரு பார்வைப் பார்த்தவள் அவன் முன்னால் அந்த காகிதத்தை நீட்டினாள்.
vps textile mills என்ற கம்பெனியில் இருந்து கொடுக்கப்படும் ஸ்காலர்ஷிப் ரசீது அது. அதை ஆதிராவின் கைகளில் பார்த்தவுடன் விமல் வார்த்தைகளுக்கு திணறினான்.
“இதுக்கு என்ன பதில் விமல்?”என்றாள் கூர்மையாக .
“அது ஆதிரா… அது வந்து.. ” என்று திணறியவனிடம் ” எனக்கு உண்மை வேணும் விமல்.. ப்ளீஸ் பொய் சொல்லாம உண்மையை சொல்லு… நீ மட்டும் பொய் சொன்னது தெரிஞ்சா உன் கிட்டே பேசவே மாட்டேன்… ” என்றவளது குரலில் இருந்த உறுதி விமலை ஆட்டிப் பார்த்தது.
“ஆதிரா வினய் தான் உன் படிப்புக்காக ஸ்பான்சர்ஷிப் பண்றான். அதோட ரெசிப்ட் தான் இது. ” என்று உண்மையைப் போட்டு உடைக்க ஆதிரா அதிர்ந்துப் போய்விட்டாள்.
“நான் கேட்டனா விமல் எனக்கு ஸ்பான்சர்ஷிப் பண்ண சொல்லி? என் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு யார் கிட்டேயும் எந்த உதவியும் வாங்க மாட்டேன்னு என்னைப் பத்தி தெரிஞ்சும் வினய் ஏன் இப்படி பண்ணான்? நீ எதுக்கு விமல் உடந்தையா இருந்த? எனக்கு யாரோட உதவியும் வேண்டாம். பதிலுக்கு அவங்க என் கிட்டே எதுவும் எதிர்பார்க்கவும் வேண்டாம். வினய் வரட்டும் பேசிக்கிறேன். அதுவரைக்கும் எனக்கு இந்த விஷயம் தெரியும்னு வினய் கிட்டே யாரும் சொல்லக்கூடாது. ” என்று அழுத்தமாக பேசிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்.
அவள் உள்ளம் எரிகலனாக கொதித்தது.
இவன் ஏன் எனக்கு உதவி செய்ய வேண்டும்? எந்த காரணத்திற்காக செய்ய வேண்டும்? என்று திரும்ப திரும்ப அவளையே கேட்டுக் கொண்டு இருந்தாள்.
வினய்யிடம் தான் அதற்கான பதில் இருக்கிறது என்பதை அறிந்தவள் அவனுக்காகக் காத்து இருந்தாள்.
ஆனால் அன்று இரவு வரை அவன் வரவே இல்லை. பாவம் அங்கு அவன், கனி தந்தையின் இறுதி சடங்கில் இருக்கின்றான் என்பதை இவள் அறியாள்.
அடுத்த நாள் காலையும் இவள் அவனைத் தேடினாள். ஆனால் வினய் அவள் கண்களுக்கு அகப்படவே இல்லை. சோகமாக கிளம்பி ஹாட்சிப்ஸ் கடையிற்கு வந்தாள். அங்கு கனியை காணவில்லை.
“என்ன ஆயிற்று இந்த பெண்ணுக்கு ஏன் இன்னும் வரவில்லை.. ” என்று அவள் யோசனையுடனே கணேசனிடம் ” அண்ணா இன்னைக்கு கனி வரலையா?” என்று கேட்டாள்.
அவரோ மனதினில் பொங்கிய கோபத்தை அடக்கிக் கொண்டு ” அந்த பொண்ணு எப்படி மா இனி இந்த கடைக்கு வரும்? அதான் அந்த பொண்ணை வர விடாம இந்த வினய் பண்ணிட்டானே… ” என்று மொத்தமாக பழியை வினய்யின் பக்கம் திருப்பினார்.
“என்ன னா சொல்றீங்க?”என்றுக் கேட்டாள் திகைப்பாக.
“ஆமாம் மா அந்த பொண்ணு அவங்கப்பா ஆபரேஷன்காக வினய் கிட்டே காசு கேட்டு இருப்பா போல. ஆனால் அவன் பதிலுக்கு வேற ஒன்னை எதிர்பார்த்துக் கேட்டு இருக்கான். அந்த பொண்ணு மறுத்து இருக்கு. ஆனால் இவன் விடாம அந்த பொண்ணை தொல்லை பண்ணான்.
நேத்து நம்ம கடை டெலிவிரி கார் சாவியை இங்கே கடையிலேயே விட்டுட்டு போயிட்டேன். எடுக்க வந்தப்போ, அந்த பாவி பையன் அந்த பொண்ணை வலுக்கட்டாயமா இழுத்துட்டுப் போறதைப் பார்த்தேன். பின்னாடியே துரத்திப் பிடிக்கிறதுக்குள்ளே தப்பிச்சுட்டான். இந்நேரத்துக்கு அந்த பொண்ணை மொத்தமா சிதைச்சு சொந்த ஊருக்கே அனுப்பி வைச்சு இருப்பான். ” என்று சொல்லிச் சென்ற அந்த கணேசனின் வார்த்தைகளை அவளால் முழுவதாக நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.
நேற்று கனி அவள் வாயாலேயே ஆண்களைப் பற்றி சொன்னது நினைவிற்கு வந்தது அதிலும் குறிப்பாக வினய்யைப் பற்றி.
ஒரு வேளை மறைமுகமாக கனி வினய்யை சாடி இருக்கிறாளா?
வினய் அத்து மீற நினைத்தானா?என்ற கேள்விகள் அவள் அவனின் மீது வைத்த நம்பிக்கையை ஒரு உலுக்கு உலுக்குவதாய்.
இருந்தாலும் வினய் அப்படி செய்து இருக்க மாட்டான் என்று மனதினின் அடியில் முன்னே உரக்க ஒலித்தக் குரல் சற்று மெல்லியதாக தேய்ந்துப் போய் ஒலித்தது.
இன்னும் அவன் மேல் உள்ள நம்பிக்கை அவளுக்கு முழுவதாக அழியவில்லை.
அவன் வந்ததும் பேசி தெரிந்துக் கொள்ளலாம் எங்கேயோ ஏதோ தவறாக நடந்து இருக்கிறது. இது பேசி தீர்க்க வேண்டிய பிரச்சனை என்று உள்ளம் சொன்னது.
வினய் சீக்கிரமாக வந்துவிடு என்னில் இருக்கும் கேள்விகள் என்னை குத்திக் குடைந்து இருக்கிறது வந்துவிடு வினய் என்று மானசீமாக அவனை அழைத்தவள் அன்று ஹாட் சிப்ஸில் தன் வேலையை முடித்துவிட்டு கல்லூரிக்கு ஓடி வந்தாள்.
ஆனால் வினய்யைக் காணவே இல்லை.
என்ன நடந்தது என்று கனியிடம் கேட்க நினைத்தவள் கயல்விழியின் எண்ணில் இருந்து கனியை அழைத்தாள்.
ஆனால் அவள் உபயோகப்படுத்திக் கொண்டு இருந்த அலைபேசி எண் தற்போது உபயோகத்தில் இல்லை என இயந்திரக் குரல் எதிர் முனையில் பேசிக் கொண்டு இருந்தது.
சோர்ந்துப் போனவள் வினய்யை அழைத்தாள். இம்முறை வினய் போனை எடுத்துவிட்டான். எடுத்தவுடன் இவள் கேட்ட முதல் கேள்வி இது தான்.
“எங்க இருக்க வினய்?”
“மெடிக்கல் ஷாப்ல இருக்கேன் ஆதிரா.. ” என்றான் இவன் குறுஞ்சிரிப்பு சிந்தியபடி.
அவன் மீது எவ்வளவு குழப்பத்தில் கோபத்தில் இருந்தாலும்
சட்டென்று அவளை மீறி பதற்றமானாள்.
“என்னாச்சு வினய் உடம்புக்கு முடியலையா?” என்றவளின் குரலில் வருத்தம மேவிக் கிடந்தது.
“இல்லை இல்லை ஆதிரா எனக்கு ஒன்னும் இல்லை. உனக்காக தான் ஒன்னு வாங்க வந்து இருக்கேன்.” என்றான் ரகசியக் குரலில்.
“என்னது எனக்காக என்ன வாங்க போன மெடிக்கல் ஷாப்ல?”
“அது சப்ரைஸ் ஆதிரா.”
“ஓகே வினய்… நான் உங்க கிட்டே பேசணும்.. சீக்கிரமா வாங்க. “
“நான் உன் கிட்டே முக்கியமான விஷயம் கேட்கப் போறேன் ஆதிரா.. அதைப் பொறுத்து தான் நான் உன் முன்னாடி வர்றதும் வராததும் இருக்கு… சரி நான் அப்புறமா பேசுறேன்.. ” என்று அழைப்பைத் துண்டித்தவனுக்கு அங்கே இப்போது என்ன சூழ்நிலை என்றே தெரியாது.
பாராசிட்டமால் மாத்திரையை முழு சதுர டப்பாவுடன் வாங்கியவன் வேகமாக தன்னறைக்கு சென்று தன் காதலை எல்லாம் அந்த கடிதத்தில் வடிக்க காகிதத்தை எடுத்தான்.
பேனா மை காகிதத்தை மெல்ல மெல்ல நனைக்கத் துவங்கியது.
“ஆதிரா ப்ளீஸ் இந்த கடிதத்தைப் படிச்ச அப்புறம் என்னை தப்பா நினைக்காதே. என்னாலே மனசுல இதுக்கு மேலேயும் மறைச்சு வைக்க முடியல. எங்கே என் கண்ணே காட்டிக் கொடுத்துடுமோனு பயமா இருக்கு. அதான் நான் சொல்லலாம்னு முடிவு பண்ணிட்டேன்.
ஏனோ மனசுல ஒரு விதமான தவிப்பு நீ என்னை விட்டு கொஞ்சம் கொஞ்சமா தூரமா போறா மாதிரி இருக்கு.
நீ என்னை முழுசா விட்டு போறதுக்கு முன்னாடி என் மனசுல உள்ளதை எல்லாம் உன் கிட்டே கொட்டிடணும்னு ஆசைப்படுறேன்.
சத்தியமா சொல்றேன் எப்போ எந்த நிமிஷம் இந்த காதல் வந்ததுனு எனக்கு தெரியல.
அப்போ இருந்து தவிக்க ஆரம்பவிச்சவன் தான் இப்போ வரைக்கும் அந்த தவிப்பு இம்மியளவுக்கும்.குறையல. அந்த தவிப்பை கொஞ்சமாவது குறைக்கணும்ன்றதுக்காக தான் உனக்கு இந்த லெட்டரை எழுதுறேன்.
உனக்கு என்னைப் பிடிச்சு இருக்கோ இல்லையோ அதெல்லாம் எனக்கு முக்கியம் இல்லை ஆனால் நீ உன் லைப்ல கஷ்டப்படக்கூடாது அது தான் எனக்கு முக்கியம்.
ஒரு வேளை நான் இதை உன் முன்னாடி நின்னு express பண்ணி இருந்தா உனக்கு அசௌகர்யமா இருக்கலாம்.
என்னைப் பிடிக்கலைன்றது உன் பதிலா இருந்தா உனக்கு ஒரு வேளை என் முகத்தை நேருக்கு நேரா பார்த்து சொல்றதுக்கு குற்றவுணர்வா இருக்கலாம்.
அதனாலே தான் இந்த லெட்டரை எழுதி இருக்கேன்.
உனக்கு காய்ச்சல் வந்தா நான் காலம் முழுக்க மெடிக்கல் ஷாப்க்கு போய் உனக்கு மாத்திரை வாங்கிட்டு வந்து தருவேன்.
உன்னை நல்லா பார்த்துப்பேன் தீரா மா.
உனக்கு என்னை பிடிச்சு இருந்தா என் முன்னாடி இந்த மாத்திரை டப்பாவோட என்னைத் தேடி வா.
நீயும் என்னைக் காதலிக்கிறேனு புரிஞ்சுக்கிறேன். இல்லைனா என் முன்னாடி இன்னைக்கு ஃபுல்லா வராதே ஆதிரா.
நீ என்னை காதலிக்கலன்ற உண்மையை நான் உணர்ந்துக்கிறேன்.
அப்புறம் உன் கண் முன்னாடி வந்து நான் உன்னை வருத்தப்படவோ காயப்படவோ வைக்க மாட்டேன்.
முடிவு உன் கையிலே தான் தீரா மா. உன் முடிவுக்காக காத்து இருக்கேன். ” என்று அந்த கடிதத்தை எழுதிவிட்டு மாத்திரை டப்பாவோடு சேர்த்து மடித்தவன் விமலை நோக்கி சென்றான்.
“டேய் மச்சான் இதை ஆதிரா கிட்டே கொடுத்துடு… ” என்று அவன் அந்த கடிதத்தை நீட்ட விமல் ஆனந்த அதிர்ச்சியாய்ப் பார்த்தான்.
“டேய் மச்சான்.. ஆதிராவை காதலிக்கிறியா?” என்றான் வியப்பாக…
“ஆமாம் டா. முடிவு அவள் கையிலே தான் இருக்கு. ப்ளீஸ் கொஞ்சம் சீக்கிரமா அவள் கிட்டே கொண்டு போய் தாயேன். ” என்றான் தவித்தபடி.
“மச்சான் எனக்கு என்னமோ நீயே கொண்டு போய் தரது தான் சரினு படுது.. தங்கச்சி சில விஷயம் உன் கிட்டே கேக்கணும்னு இருக்கா.அதை தெரிஞ்சுக்கிட்டு தாயேன் ” என்றான் விமல் தவிப்பான குரலில்.
“எனக்கு இப்போ சுத்தமா பொறுமையே இல்லையே டா. ஏதோ ஆதிரா என்னை விட்டு தூரமா போகப் போற மாதிரி ஏதேதோ தோணுது. ப்ளீஸ் ப்ளீஸ் அவள் கிட்டே கொண்டு போய் குடேன். ” என்று அவசரப்படுத்திய நண்பனிடம் ஆதிராவிற்கு ஸ்பான்சர்ஷிப் விஷயம் தெரியும் என்ற உண்மையை சொல்ல முடியாமல் தவித்தான்.
ஆதிரா சொல்லக்கூடாது என்று சொன்ன வார்த்தைகள் திரும்ப திரும்ப ஒலித்தது.
எதுவும் பேச முடியாமல் மௌனமாக அந்த கடிதத்தை வாங்கிக் கொண்டு மகளிர் விடுதியின் கேட் அருகே வந்து நின்றான்.
இதற்கு மேல் உள்ளே போக முடியாதே எப்படி இந்த கடிதத்தை கொடுப்பது என்று யோசித்துக் கொண்டு இருந்தவனின் கண்களில் ஐஸ்வர்யாப்பட்டாள். உடனேயே அவள் பெயர் சொல்லி அழைக்க அவளும் அவனருகே வந்து நின்றாள்.
அவளின் முன்பு அவன் கடிதத்தை நீட்ட திகைத்துப் போய் அவனைப் பார்த்தாள். அதைக் கண்டவன் உதடுகளில் சிரிப்பு வந்தது.
“அம்மா தாயே நான் உனக்கு லெட்டர் தரல.. இது ஆதிராவுக்கு.. ” என்றான் மொட்டையாக.
“அப்போ நீ ஆதிராவைக் காதலிக்கிறியா?” என்றாள் இன்னும் திகைப்பாக.
“அடியே ராசாத்தி போதும் மா போதும் முடியல.. உன் முந்திரி கொட்டை புத்தி இருக்கே.. அது எதையும் முழுசா யோசிக்கவே விடாது. இது வினய் ஆதிராவுக்கு எழுதுன லெட்டர் இதைக் கொண்டு போய் கொடுத்துடுறீயா?” என கேட்க அவள் யோசனையுடன் அந்த லெட்டரை வாங்கிக் கொண்டு சரியென்று தலையாட்டினாள்.
“ஓகே தேங்க்ஸ்.. ” என்று விமல் சென்றுவிட அவளோ குழப்பத்துடன் அந்த லெட்டரைப் பார்த்தாள்.
அப்போது பார்த்து அவளுடன் படிக்கும் இன்னொரு பெண் வந்து நின்றாள்.
” ஐஸ்வர்யா உன்னை சிங்காரம் சார் கையோட அழைச்சுட்டு வர சொன்னார்.. வா ” என்று சொன்னவளோ விட்டால் அவளை இழுத்துக் கொண்டே போய்விடுவேன் என்கிற தோரணை தெரிந்தது.
“ஒரு நிமிஷம் நான் உள்ளே போய் ப்ரெஷ் ஆகிட்டு அப்புறமா வரனே. “
“இல்லை ஐஸ்வர்யா உன்னை இப்போவே கூட்டிட்டு வர சொன்னார்… என் கூட வா.. ” என்று அந்தப் பெண் சொல்ல மறுக்க முடியாமல் திணறியவள் கையில் இருந்த கடிதத்தை மீண்டும் பார்த்தாள்.
ஏற்கனவே கவிதை எழுதி அவரிடம் மாட்டிக் கொண்டது போதாது என்று இந்த கடிதம் வேறு கண்ணில் பட்டால் அவ்வளவு தான் என்று நினைத்தவள் அங்கே அந்த பெண் விடுதியின் முகப்பில் இருந்த சிறிய திண்டில் மெதுவாக யாருமறியாமல் அந்த கடிதத்தை உள்ளே சொருகிவிட்டு அந்தப் பெண்ணுடன் பேராசிரியரைப் பார்க்க போய்விட்டாள்.
ஆனால் அவள் மறைத்து வைத்ததை ஒரு ஜோடிக் கண் பார்த்ததை அறியாமல்.
பேராசிரியர் அவளை கடாயில் போட்ட வேர்க்கடலையைப் போல வறுத்து எடுத்துவிட்டு ” எல்லா ரெக்கார்ட் நோட்டையும் எடுத்துட்டு வா. இன்னைக்கு மொத்த எக்ஸ்பெரிமெண்ட்டையும் மறுபடியும் பண்ணணும்.. ” என்று உறுதியாக சொல்லிவிட வெளியே அனுப்ப ஒரு சோகப் பெருமூச்சுடன் வந்தவள் அந்த கடிதத்தை அவசர அவசரமாக எடுத்துக் கொண்டு ஆதிரா அறையை நோக்கிச் சென்றாள்.
“ஆதிரா இந்த லெட்டரை வினய் உன் கிட்டே கொடுக்க சொன்னான். நான் லேப் முடிச்சுட்டு அப்புறமா வரேன்.” என்று சொல்லிவிட்டு அந்த லெட்டரை ஆதிராவிடம் கொடுத்துவிட்டுச் சென்றாள்.
குழப்பமாக அந்த லெட்டரை வாங்கியவள் பிரித்து பார்க்க உள்ளே இருந்து ஒரு அட்டை வந்து அவள் கைகளில் விழுந்தது.
அந்த அட்டையைத் தொட்டதும் தீயிலிட்ட புழுவைப் போல கைகள் எரிந்தது.
கண்களில் அனல் ஏறியது.
உள்ளத்தில் கோபம் எரிமலையாய் வெடித்தது.
பொங்கியக் கோபத்தை அடக்கிக் கொண்டு அவள் அந்த கடிதத்தை வாசிக்க வாசிக்க அவள் துடித்துப் போனாள்.
கண்களில் கண்ணீர் கூடு கட்டியது.
கடிதத்தின் கடைசி வரை கண்ணீரோடு படித்தவளின் உள்ளத்தில் அடுக்கடுக்காய் பல கேள்விகள்.
வினய்யா இது? நான் முழுவதுமாக நம்பிய வினய்யா இது? எவ்வளவு நெருடல் இருந்தாலும் அவனை நம்பினேனே அந்த வினய்யா இது?