காலங்களில் அவள் வசந்தம் 5 (1)

காலங்களில் அவள் வசந்தம் 5 (1)

அமைதியாக அமர்ந்தபடி சாய்பாபாவை பார்த்துக்கொண்டிருந்தாள் ப்ரீத்தி. மனம் நிர்மலமாக இருந்தது. முந்தைய தினம் ஷானிடம் வேறு எதுவும் கூறவில்லை. கூறினால் அவனை உதவி கோரும்படி நேரிட்டு விடுமோ என்ற பயம் அவளுக்கு. அல்லது அவள் கேளாமலும் கூட அவன் உதவி செய்யலாம். ஆனால் இப்போதுள்ள நிலையில் அவனிடம் தான் கொண்டிருக்கிற அழகான நட்பை அவளால் விட்டுக் கொடுக்க முடியாது. அதோடு தன்னால் எவ்வளவு தூரம் சமாளிக்க முடிகிறதோ, அதுவரை சமாளிக்கலாம் என்ற எண்ணமும் கூட. அது தவறு கிடையாதே! முடியாவிட்டால், கண்டிப்பாக அவனிடம் தான் கேட்போம் என்பது திண்ணம். அவனைத் தவிர, அவளுக்கு வேறு யாரையும் தெரியாது.

அவனிடம் கூறிய பிறகு, ஏதோவொரு சொல்ல முடியாத வலிமை கிடைத்தார் போல இருந்தது. சமாளித்து விடலாம் என்ற தெம்பும் பிறந்தது.

ஷானை பொறுத்தவரை, அவள் தன்னுடைய பிரச்சனையைப் பற்றிக் கூறாதது ஒரு வடுவாக நின்று விட்டாலும், அவளாக எதிர்கொள்ளப் பார்க்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டான். கல்லூரிப் படிப்பை முடித்தவுடன், ஒன்றுமரியாத சிறு பெண்ணாகத் தான், அவனிடம் வந்து சேர்ந்தாள்.

உழைக்கத் தயங்காத, அப்பாவித்தனம் மிகுந்த, அந்தச் சிறு பெண்ணை எதனாலோ அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. எந்த அளவு வேலைச் சுமை என்றாலும், முகம் சுளிக்காமல், புகாரளிக்காமல் செய்து விடுவதாலோ என்னவோ, அவளை அத்தனை வேலைகளுக்கும் பழக்கிக்கொண்டிருந்தான். அவனுக்கும் அந்த வருடங்கள் அனைத்தும் பயிற்சிக் களமே!

சிறு வயது முதலே, அவர்களது வியாபாரங்கள் பரிட்சயம் என்றாலும், அவன் முழுதாகத் தொழிலுக்கு வந்தது, எம்பிஏ முடித்த பின் தான். அதுவும் அவனது தாயாரின் வற்புறுத்தல் காரணமாகத்தான்!

இவை அனைத்தையும் பிரீத்தியும் முழுவதுமாக அறிவாள்.

அவள் பாபாவை பார்த்தபடி அமர்ந்திருந்தாளே தவிர, மனம் ஷானை தேடித்தான் போனது.

முதலாளி என்பதைத் தாண்டி எவ்வளவு புரிந்தலான நண்பன்… அவளது முகம் கொஞ்சம் வாடியிருந்தாலும் கண்டுபிடித்து விடுவான். என்ன பிரச்சனை என்று அவளை நச்சரித்து விஷயத்தை வாங்கிவிடுவான். என்னவோ இந்தமுறை தான் இறுக்கத்தைத் தளர்த்தியிருந்தான். அவளாக நீந்தக் கற்றுக் கொள்ளட்டும் என்றுதான் நினைத்திருப்பான் என்பது அவளது திண்ணமான எண்ணம்!

இத்தனை வருடத்தில் அவனது எண்ணப்போக்குப் புரியாமல் இருந்தால் தான் ஆச்சரியம்!

இருவருக்குமிடையில் இருந்த இந்த நட்பு தான் அவளை அவனிடம் உதவிக்காக அணுக தடையாக இருந்தது. அவனது நட்பை எந்தவிதத்திலும் அவளால் தன்னுடைய சுயலாபத்துக்காக உபயோகிக்க முடியாது.

முகத்தை அழுந்த தேய்த்து விட்டபடி, ஒரு பெருமூச்சை வெளியேற்றினாள் ப்ரீத்தி.

சுற்றிலும் மக்கள், அங்கொன்றும் இங்கொன்றுமாக!

அன்று வியாழக் கிழமை இல்லையென்ற காரணத்தால் கூட்டம் சற்றுக் குறைவாகத்தான் இருந்தது.

ஈஞ்சம்பாக்கம் சாய்பாபா கோவிலில் இதுவொரு விஸேஷம். காற்றோட்டமான பெரிய கோவில். சென்னைக்கு நடுவில் இருக்கும் கோவில்கள் எல்லாம் கசகசவென இருக்கும் அல்லது சிங்கிள் பெட் ரூமில் பாபாவை அடைத்து வைத்தார் போல வைத்திருப்பார்கள். அவர்களைப் போலவே!

ஆனால் இங்கு, இடமும் சரி, சூழ்நிலையும் சரி, அவளுக்கு மிகவும் பிடித்தம். கடலலைகளின் தாலாட்டுடனான அமைதி…

பிரீத்தியை பொறுத்தமட்டில், அவளுக்கு தெய்வ நம்பிக்கை எல்லாம் ரொம்பவும் கிடையாது. உழைக்காவிட்டால் எந்தத் தெய்வமும் வந்து சோறு போட்டுவிடாது என்றெண்ணும் ரகம். கோவில்கள் என்பது மன அமைதிக்காக மட்டுமே!

அங்குத் தெய்வம் இருக்கிறது என்றோ, பிரார்த்திக்க வேண்டும் என்பதோ அவளுக்கு முக்கியம் கிடையாது. குறிப்பாக மந்திரத்தால் மாங்காயையை வரவைக்க முடியும் என்பதில் சற்றும் நம்பிக்கை இல்லாதவள் ப்ரீத்தி.

செய்யும் தொழிலே தெய்வம்… ஒருவர் நம் மீது வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றுவதே பக்தி… நேர்மையும் உண்மையுமே அபிஷேகமும் ஆராதனையும்!

இந்த இருபத்திஏழு வருடங்கள் சொல்லித் தந்த பாடம் இதுதான், எப்படி இருக்க வேண்டும் என்று!

பாபாவுக்கு ஆரத்திக் காட்டிக் கொண்டிருந்தனர். உன்னைப் பற்றி நானறிவேன் என்று அமைதியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார் அவர்!

கண்களால் அவரை நிறைத்துக் கொண்டவள், எழுந்து கொள்ள எண்ணும்போது செல்பேசி அழைத்தது.

தந்தை தான்!

அவசரமாக எடுத்தாள். நடேசனிடம் பேசப் போயிருந்தார். அவள் அமைதியை வேண்டி அங்கு வந்ததன் காரணமும் அவர்தான்.

எப்படியாவது சரியாக அவர் பேச வேண்டுமே என்ற பயம் உள்ளுக்குள் இருந்தது அவளுக்கு.

“பாப்பா…” அவர்மேல் கோபம் இருந்தாலும், அந்தச் சொல்லும் மென்மையான அந்தத் தொனியும் அவளை ஆற்றுப் படுத்தியது.

“சொல்லுங்க…”

“பஞ்சாயத்து பேசிட்டு இருக்கோம் பாப்பா…”

“ஹும்ம்… சொல்லுங்க…”

“வட்டியை குறைக்க முடியாதுன்னு பிடிவாதம் பண்றான்…” சொல்லும் போதே அவரது குரல் உள்ளுக்குள் போய்விட்டது.

இதென்ன அநியாயமாக இருக்கிறது? அவரிடம் கடனாக வாங்கியிருந்தால் வட்டி வசூலிக்க நினைக்கலாம். ஆனால் இது அவரது லாபத்துக்காக, வியாபாரத்துக்காகக் கொடுத்த பணத்துக்கு வட்டி வாங்க நினைப்பது எந்த வகையில் நியாயம்?

“ஏன்? நீங்க தெளிவா பேசினீங்களா?”

“சாஹிபு பாய் இங்க தான் இருக்காரு. நீ வேண்ணா கேக்கறியா பாப்பா?” என்று அருகிலிருப்பவரிடம் கொடுக்கப் பார்க்க,

“அதெல்லாம் வேண்டாம். நீங்களே சொல்லுங்க…”

“எவ்வளவோ கேட்டுப் பார்த்துட்டோம் பாப்பா… எதுவும் பண்ண முடியல…”

“அதெப்படி அப்படிச் சொல்ல முடியும்? இன்னும் கொஞ்சம் கறாரா பேச வேண்டியதுதான?”

“நடேசன் கிட்ட நீ பேசேன் பாப்பா…” பொறுப்பை அவள் புறம் தள்ளுவது அவளுக்கும் தெரிந்தது. ஆனால் முன் பின் தெரியாதவர்களிடம், அதிலும் ஒரு பெண்ணாக இருந்து கொண்டு… எப்படிச் சட்டென்று பேசிவிட முடியும். தன் வேலை சார்ந்து பேசுவதென்பது வேறு, யாரோ ஒருவர், சற்றும் பழக்கமில்லாதவர்களிடம் பேசுவது என்பது வேறு. அவளால் இயல்பாகப் பேசிவிட முடியாது. ‘எப்படி இவருக்கு இப்படிப் புத்தி போகிறது என்று புரியவில்லையே’ என்று நினைத்துக் கொண்டாலும்,

“சரி குடுங்க…” என்றாள். ‘வேறு வழி?’

அவசரமாக அவர் பக்கத்தில் இருந்தவரிடம் கொடுப்பது கேட்டது.

“சொல்லும்மா…” முந்தைய தினம் அவளிடம் பேசிய அதே குரல்.

“சார்… உங்க கிட்ட கடனா வாங்கியிருந்தா கூடப் பரவால்ல. உங்க வியாபாரத்துக்காக நீங்க போட்ட பணம். அதுக்கு எப்படி வட்டி வேற கேக்கறீங்க?” பொறுமையாகப் பேசலாம் என்று நினைத்தாலும் அவளால் அதைச் செய்ய முடியவில்லை. குரல் சற்று உயரப் பார்த்தது, எரிச்சலில்!

“இந்தா பாரும்மா… எனக்கு லாபம் சம்பாதிச்சு குடுக்கறேன்னு தானமா தான் உங்கப்பா என்கிட்ட பணம் வாங்கினாரு?”

“அதுக்காகப் பைனான்ஸ்ல உங்க பணத்தைப் போட்ட மாதிரி வட்டியோட கேப்பீங்களா?”

“அதெல்லாம் எனக்குத் தெரியாதும்மா. எனக்கு என் பணம் வட்டியோட வரணும்…”

“சர்… வியாபாரம் ஒரு நேரம் நல்லாருக்கும், ஒரு நேரம் வேற மாதிரி போகும். இதே லாபம் வந்திருந்தா டபுள் கமிஷன் தந்திருக்கப் போறீங்களா?”

“ஏம்மா… லாபமும் இல்லாம, இடமும் என் பேருக்கு வராம என் பணத்தை விட்டுட்டு சும்மா இருக்கேன். இன்னும் என்னைக் கடுப்பாக்கி பாக்கறியா? வேண்டாம்… இடமும் வேண்டாம், ஒரு மண்ணும் வேண்டாம். எனக்கு என்னோட பணம், வட்டியோட திரும்ப வேணும். அவ்வளவுதான்…”

தட்டையாக, அவர் சொல்வதுதான் நியாயம் என்பதைப் போல அவர் வாதிட,

“நீங்க பேசறதுல கொஞ்சமாவது நியாயம் இருக்கா?” என்று கேட்டாள், ஆற்ற முடியாமல்!

“நியாயமோ இல்லையோ… இதுதான் பைனல்…” என்று அவர் கறாராக முடிக்க, அதற்கும் மேல் போராட முடியாமல் செல்பேசியை வைத்தாள்.

மனிதர்கள் தான் எத்தனை வகை!

சுயநலம் ஒன்றே குறியாக… பணத்துக்காக எதையும் செய்பவர்களாக… தன் லாபம் ஒன்றே முக்கியமாக…. எத்தனை முகங்கள்!

மனதின் ஆழத்துக்குள் அந்தக் கசப்பு இறங்கியது.

‘வேறு வழிகளில் தான் முயற்சி செய்ய வேண்டும். வட்டியோடு சேர்த்துக் கொடுப்பதென்றால் தன்னால் அது முடியவே முடியாது’ என்றெண்ணிக் கொண்டவள், முகத்தை அழுந்த துடைத்தபடி எழுந்தவளின் முகம் ஒளிர்ந்தது.

அவளை நோக்கி ஓடி வந்தான் வைபவ்.

கூடவே வைஷ்ணவியும், மாதேஸ்வரனும், அவளைப் பார்த்துப் புன்னகைத்தபடி!

“ஹலோ மேம்…” என்று வைஷ்ணவியை பார்த்துக் கூறியவள், மாதேஸ்வரனை பார்த்துக் கைக் கூப்பி வணக்கம் தெரிவித்தாள். அவரும் தலையசைத்து ஏற்றுக் கொள்ள,

“மேம் சொல்லாத… அக்கா சொல்லு ப்ரீத்தி…”

“வர மாட்டேங்குது மேம்…” என்று புன்னகைக்க, வைஷ்ணவி முறைக்க, “சாரி… அக்கா…” என்றவளை கூர்ந்து பார்த்தார் மாதேஸ்வரன்.

காரணமின்றி ஒட்டவும் மாட்டாள், வெட்டவும் மாட்டாள்!

வைபவ்வோ கோவில் என்றெல்லாம் பார்க்கவில்லை.

“சாக்கி ஆண்ட்டி…” என்று மேலே வந்து விழுந்தவனைச் சிரிப்போடு ஏந்திக் கொண்டாள்.

பிரீத்தியை அவ்வளவு பிடிக்கும் அந்தக் குட்டி வாண்டுக்கு!

எப்படியும் அடிக்கடி மாதேஸ்வரனின் போட் கிளப் பங்களாவுக்குப் போக வேண்டியிருக்கும். கம்பெனி சம்பந்தமாக ஏதாவதென்றால் இவளைத்தான் அனுப்புவான். அதனாலேயே நல்ல பழக்கம் உண்டு.

அதிலும் ப்ரீத்தியின் முடியைப் பார்க்கும் போதெல்லாம் அதை இழுத்து விளையாடுவது அவனுக்கு ரொம்பவும் பிடித்த ஒன்று. அவள் முடியை வெட்டியபோது, யார் வருத்தப்பட்டார்களோ இல்லையோ, வைபவுக்கு தான் மிகுந்த வருத்தம்!

“ஏன் ஆன்ட்டி இவ்வளவு வெட்டிட்டீங்க?” முகத்தைச் சுருக்கிக் கொண்டு கேட்ட வைபவ்விடம், “வில்லப் பயலே… அவங்களை இப்பவே ஆன்ட்டியாக்காதடா. அக்கா சொல்லு…” என்று அவனிடம் மல்லடித்த சஷாங்கனை எப்போது நினைத்தாலும் புன்னகை தானாக மலரும்!

இப்போதும் சிரித்தபடி மேலே விழுந்தவன், “எங்க சாக்கி?” என்று கேட்க, இவள் புன்னகையோடு, அவளது கைப்பையிலிருந்த, எப்போதும் அவள் வைத்திருக்கும் கிட் கேட்டை எடுத்து அவனிடம் நீட்டியவள், அவனை இறுக்கமாக அணைத்துக் கன்னத்தில் முத்தமிட்டாள்.

அவள் செய்ததைப் போலவே வைபவ்வும் செய்ய, அவளது முகத்தில் புன்னகை பூப் பூத்தது.

பிரீத்திக்கு இதுவொரு பழக்கம். கிட்கேட் பிரியை. அதோடு டைரி மில்க்கும். அதனாலேயே அவளது பையில் ஏதாவது இருந்து கொண்டே இருக்கும். அவ்வப்போது உள்ளே போய்க் கொண்டே இருக்கும்.

அதிலும் வைபவ்வை பார்க்கும் போதெல்லாம், அவனுக்கு சாக்லேட் தராமல் இருந்ததில்லை என்பதால், அவள் வீட்டுக்கு வந்தால், உரிமையாக அவளிடமிருந்து கைப்பையைப் பறிப்பது அவனாகத்தான் இருப்பான். அதனாலேயே அவள் ‘சாக்கி ஆண்ட்டி’.

சாக்லெட்டைக் கொடுத்துவிட்டாலும், அவளது கைப்பையை ஆராயாமல் விடமாட்டான், வேறெந்த வகை சாக்லேட் இருக்கிறதா என்று பார்க்க!

அது போலவே அப்போதும் அவளது கைப்பையை அவன் கைப்பற்ற, அவசரமாக வந்தாள் வைஷ்ணவி.

“வைபவ்… ஹேன்ட்பேகை ஆன்ட்டி கிட்ட குடு…” கறாராக அவனைப் பார்த்துக் கூற,

“இட்ஸ் ஓகே மேம்…” என்றவள், நாக்கை கடித்துக் கொண்டு, “ஸ்ஸ்ஸ்… அக்கா…” என்று புன்னகைத்தபடி, “வைபவ் குட்டிக்கு இல்லாததா?” என்றவளை புன்னகையோடு ஏறிட்டாள் வைஷ்ணவி.

“ரொம்பச் செல்லம் கொடுக்காதே ப்ரீத்தி. தலைல ஏறி உட்கார்ந்துக்குவான். அவங்க மாமா மாதிரி…” முடிக்கும்போது குரல் சற்றே சுருதி குறைய,

“எம்டிக்கு என்ன? ஹி இஸ் எ ஜெம்…” என்று புன்னகையோடு கூற, அவளைச் சற்று வியந்த பார்வை பார்த்தாள் வைஷ்ணவி.

இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க, மாதேஸ்வரன் பிரீத்தியையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்.

அவருக்கும் மிகவும் பிடித்தவள் ப்ரீத்தி. எளிமையான குடும்பமாக இருந்தாலும் மரியாதை தெரிந்த பெண் என்ற மதிப்பு அவள்மேல் எப்போதும் உண்டு. அவருக்கு, ஏதோவொரு விதத்தில் ஸ்ரீமதியை நினைவுபடுத்திக் கொண்டே இருப்பாள் இவள்.

அதோடு அவளது அமைதியும், நேர்மையும், சுறுசுறுப்பும், எல்லை அறிந்து பழகும் முறையும், நேர்த்தியாக இடத்துக்குத் தகுந்தார் போல உடையணியும் பாங்கும் ஸ்ரீமதியை பார்த்தது போலவே இருக்கும்.

Leave a Reply

error: Content is protected !!