சூரியநிலவு 26

சூரியநிலவு 26

அத்தியாயம் 26

அடைகாக்கும் கோழி தன் குஞ்சுகளைப் பாதுகாப்பது போல, பிரதாப்பும் ஆகாஷும் நிலாவை அடைகாத்தனர்.

நிலா என்றால் எப்போதும் பிரதாப்க்கு பொசசிவ் அதிகம். ஆகாஷை கூட அவர்கள் நடுவே விடமாட்டான். அதனால் வேண்டுமென்றே ஆகாஷ், நிலாவை செல்லமாக டார்லிங் என அழைத்து அவனை வெருப்பேற்றுவான். 

நிலாவுக்கும் ஏனென்றே தெரியாமல் அவர்களிடம் ஒரு ஒட்டுதல் வந்திருந்தது. அவளுக்கு எதுவும் தேவை என்றால், அவர்களிடம் உரிமையோடு சண்டையிட்டோ, கெஞ்சியோ, கொஞ்சியோ தன் காரியத்தை சாதித்துக் கொள்வாள். அவள்,’அஷு, டார்லிங்’ என கூறி எதையாவது கேட்டு விட்டால், அதற்கு மறுப்பு என்பதே கிடையாது.

நிலா! அவர்களிடம் காட்டும் உரிமையிலும், அவர்களிடம் மட்டுமே செய்யும் குறும்பிலும், அந்த ஆடவர்கள் தங்கள் பெற்றோர்களின் இழப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு கொண்டிருந்தனர். நிலா அறியாமலேயே அவர்களை சோகத்திலிருந்து மீட்டுக் கொண்டிருந்தாள்.

அவர்கள் இருவருக்கும் நிலா தேவதை பெண். அப்படிப்பட்ட தேவதை பெண்ணை கசக்கி முகர பார்த்தது ஒரு நாய். அதை சும்மா விட மனம் இல்லாமல், அதே சமயம் வேறு வழியும் இல்லாமல் விடுதியிலிருந்து திரும்பி இருந்தனர். 

அன்றைய நிகழ்விற்கு பின், இருவரும் நிலாவை நிழல்போல் தொடர்ந்தனர். அவர்கள் ஏற்கனவே அவளை அப்படித்தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள், என்றாலும் இப்போது இன்னும் கூடுதல் கவனத்துடன் அவளைப் பாதுகாத்தனர்.

அவள் வீட்டிற்கு செல்லும் வரை யாராவது ஒருவர் கூடவே துணை இருந்தனர். ஏதாவது வாங்க வேண்டுமென்றாலும், அவர்களின் துணை இல்லாமல் வெளியே செல்ல கூடாது என்பது அவர்களின் எழுதப்படாத சட்டம். அதை மீறி நிலா எதையும் செய்ததில்லை, அவளுக்கு தெரியும் அவர்கள் தன் நலத்தை மட்டுமே முன் நிறுத்தி யோசிப்பார்கள்.

அவ்வாறு அவர்கள் வாழ்வு சற்று இறுக்கத்துடன் சென்று கொண்டிருந்தபோது ஜான் மீண்டும் நிலாவின் வழியில் குறுக்கிட்டான். 

முதலிலாவது அவனுக்கு நிலாவின் அழகின் மீது மட்டுமே மயக்கம் இருந்தது. எப்போது பிரதாப் அவனின் மீது கை வைத்தானோ, அன்றிலிருந்து பிரதாப்பை பழிவாங்குவதற்காகவாவது நிலாவை அடைந்தே தீர வேண்டும் என்ற வெறி எழுந்தது. வேட்டையாட காத்திருக்கும் வெறிநாயின் நிலையில் ஜான்.

அன்றிலிருந்தே நிலா அவனிடம் தனியாக மாட்டும் நாளுக்காக காத்திருந்தான். அந்த இரு  ஆடவர்களை மீறி அவளை நெருங்க முடியாத ஆத்திரமும் பல மடங்கு பெருகியது. இது அனைத்திற்க்கும் முற்றுப் புள்ளியாக அவன் வகுத்திருந்த இலக்கு நிலாவின் உடல்.

அதன்பின் ஜான் கல்லூரிக்கு வருவதையும் நிறுத்தியிருந்தான். அந்தக் கல்லூரியில் அவன் தந்தைக்கும் பங்கு இருப்பதால் அவனை யாரும் கேள்வி கேட்க முடியாது. அட்டெண்டன்ஸ் பிரச்சினை என்பதில்லை.

மோனல் பெண்ணுக்கு ஜான் மதுவிடம் தவறாக நடந்து கொண்டது தெரியாததால், அவனிடம் எப்போதும் போலவே தொடர்பிலிருந்தாள். என்ன அவர்கள் வீட்டிற்கு வருவதை தவிர்த்து வெளியில் சந்தித்து கொண்டான்.

அப்படியே நாட்கள் கடக்க பரீட்சைக்கு முன் வரும் ஸ்டடி ஹாலிடேஸ், அவனின் கீழ்த்தரமான செயலுக்கு வழிவகுத்துக் கொடுத்தது.

“நான் படிப்பதற்காக இன்று இரவு பிரண்டு வீட்டுக்கு போகிறேன். அதனால் என்னால் உன்னை சந்திக்க முடியாது” என்ற மோனலின் வார்த்தைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டான்.

இப்போதெல்லாம் ஜானின் நடமாட்டம் அவர்கள் வீட்டில் தென்படாததால், நிலா அவளது அறை கதவை தால் இடுவதில்லை. அன்று மோனலும் வீட்டில் இருக்க மாட்டாள் என்பதால் சற்று இலகுவான இரவு உடையுடன் அறை கதவை பூட்டாமல்  உறங்கி இருந்தாள்.

ஜான் அங்கே அடிக்கடி வந்து செல்வதால் ஒரு டூப்ளிகேட் சாவி அவனிடம் எப்போதும் இருக்குமாறு வைத்துக் கொண்டான். அந்த சாவியின் உதவியுடன் வீட்டில் நுழைந்த ஜான்,’அவளின் அறை கதவை எப்படி திறப்பது?’ என ஒரு சில நிமிடங்கள் யோசித்து கதவில் கை வைக்க, அவனின் நல்ல நேரமோ, அல்லது நிலாவின் கெட்ட நேரமோ கதவு திறந்து கொண்டது.

ஜானுக்கு வானத்தில் பறக்கும் நிலை. அவனின் அதிர்ஷ்டத்தை மெச்சி கொள்ளாமல் இருக்க முடியவில்லை. அந்த லேசான இரவு உடையிலிருந்த நிலாவை, பார்த்தவனின் விழிகளில் மது போதையையும் தாண்டி காம போதை அதிகரித்தது.

*******

ஏனோ அன்று பிரதாப்பின் மனம் ஒரு நிலையில் இல்லாமல் அலைபாய்ந்து கொண்டே இருந்தது. அதற்கு ஏற்றார்போல் நிலாவும்,”மோனல் இன்று வீட்டுக்கு வரப்போவதில்லை” என்பதை தெரிவித்திருந்தாள். 

“தனியா இருக்க வேண்டாம் நிலா.” என பிரதாப் தன் மன நிலையின் காரணமாக அவளுக்கு மறுப்புக் கூறினான்.

அவனின் மன அலைக்கழிப்பு புரியாத நிலா,”வீட்டில் இருப்பதற்கு என்ன பயம் சூரியா? நான்  வீட்டிலேயே இருந்துக்கறேன்” என மறுத்து விட்டாள். 

ஆனாலும் மனம் கேட்காத பிரதாப், அவள் உறங்க செல்லும் வரை அவளுக்கு துணையாக இருந்து, பிறகும் “ஒழுங்கா கதவை சாத்திக்கோ, யாரும் கதவை தட்டினால் திறக்காத” என ஆயிரம் அறிவுரையுடன் அவளை விட்டு சென்றான்.

பிரதாப்பின் வாகனத்தை அந்த அடுக்குமாடிக்குடியிருப்பு வாயிலில் பார்த்த ஜான், அவன் கிளம்பி செல்லும் வரை காத்திருந்தான்.  அவன் கிளம்பிய சில நிமிடங்களில் நிலாவின் அறையில் நுழைந்து இருந்தான்.

அப்போது தான் உறங்க தொடங்கியிருந்த நிலா, தன் மேல் ஏதோ அழுந்தும் பாரத்தை உணர்ந்து கண்களை திறக்க, எதிரே காமம் வழியும் கண்களுடன் இருந்த ஜானை கண்டு அரண்டு விட்டாள். 

அவள் உறக்கத்திலிருந்து விழித்ததை உணர்ந்த ஜான், அவள் சுதாரிக்கும் முன் அவளைத் தன் ஆளுமைக்குள் கொண்டுவர முயன்றான். அவனது கரங்கள் தொடக்கூடாத பாகங்களில் அவள்மீது பட, அருவருப்பில் கூனிக்குறுகி போனால் பெண். 

“ப்ளீஸ் லீவ் மீ ஜான். இப் சாம்திங் ஹேப்பென்ஸ் டு மீ, சூரியா வில் நெவர் லீவ் யு. (தயவுசெய்து என்னை விட்டுவிடு ஜான். எனக்கு ஏதாவது நடந்தால், சூரியா உன்னை வாழவே விட மாட்டான்) என எச்சரித்தாள்.

“ஆஸ்க் தட் பிளடி இடியட் டு கம். பிபோர் தட் ஐ வில் டேக் யூ டால்.”(அந்த ப்ளடி இடியட்டை வரச் சொல்லு. அதற்கு முன்னால் உன்னை நான் எடுத்துக் கொள்வேன்) என கொடூரமாக சொல்லி அவளின் ஆடைகளை களைய முற்பட்டான். 

அதைத் தடுத்து நிலா அவனிடம் போராடிக் கொண்டிருந்தாள். அந்தப் போராட்டத்தில் அவளின் உடைகள் ஆங்காங்கே கிழிய தொடங்கியது. அவனிடம் விடுபடப் போராடிய பெண்ணின் தலை சுவற்றில் முட்டி கொஞ்சம் கொஞ்சமாக மயக்கத்திற்கு சென்றாள். 

அந்த மயக்கத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட அந்த வெறிநாய், அவனின் இச்சையைத் தீர்த்துக்கொள்ள தயாரானான். அந்த மயக்க நிலையிலும் நிலாவின் உதடுகள் முணுமுணுத்தது,”சூரியா வந்து என்னை காப்பாத்து. சூரியா, சூரியா” என்ற நாமம் மட்டுமே ஜபமாக அவளின் வாயில் ஒலித்தது.

அவளின் அந்தப் போராட்டம் புரிந்ததோ என்னவோ? பிரதாப் ஆகாஷை அழைத்து பேச, ஆகாஷும் ஏதோ உள்ளுணர்வு உந்துதலால்,”நிலா தனியா இருக்க வேண்டாம் பிரது. நீ போய் அவளை கூட்டிட்டு வந்துரு. எனக்கும் மனசு ஏதோ நிம்மதியா இல்லாமல் தடுமாற்றமாகவே இருக்கு.” என முடித்தான்.

இனி பிரதாப்பை தடுக்க யாராலும் முடியுமா? கார் யுடர்ன் எடுத்து அந்த அடுக்குமாடிக்குடியிருப்பு வாசலில் நின்றது. 

விரைந்து சென்று கதவைத் தட்ட அதில் கை வைக்க, கதவு தானாக திறந்து கொண்டது. ஜான் கதவை அடைக்க வேண்டும் என்பதை மறந்து போயிருந்தான். மனம் பதறி விரைந்து சென்ற பிரதாப் பார்த்தது, ஜான் அவளை கைகளில் ஏந்தி, கால்கள் தடுமாற படுக்கையை நோக்கி செல்லும் காட்சி. 

எந்த ஆண்மகனும் பார்க்கக்கூடாத காட்சி,’தன்னவல் ஆடை களைந்து, இல்லை அது தவறு ஆடை கிழிந்து, அவளின் அங்கங்கள் பாதி வெளிச்சம் போட்டு காட்ட, வாடிய மலரை போல் மயக்க நிலையில் இன்னொருவரின் கைகளில்.’ 

கோபம் தலைக்கேற ஜானின் கரத்திலிருந்த தன்னவலை வாங்கி படுக்கையில் கிடத்திவிட்டு, போதையாலும் அவளுடன் போராடியதால் கால்கள் தள்ளாட நின்ற ஜானை அடி வெளுத்து வாங்கி விட்டான்.

“இப் ஐ சா யூ ஆன் ஹெர் சைட். ஆப்ட்ர் தட் யூ வில் நாட் பீ அலைவ் “(இனி உன்னை அவள் பக்கம் பார்த்தேன். அதற்குப் பின் நீ உயிரோடு இருக்க மாட்ட) என எச்சரித்து அவனை வெளியே தள்ளிவிட்டான்.

அறைக்கு சென்ற அவன் பார்த்தது சூரியா, சூரியா என பாதி மயக்கத்தில் அரற்றி கொண்டிருந்தவளை. கண்கலங்க தன்னவலை நெருங்கி அவள் நெற்றியில் தன் இதழ் பதித்து,”உன் சூரியா வந்துட்டேன் பேபி. இனி உன்னை ஒரு நிமிஷம் கூட பிரிய மாட்டேன்.” என அந்த நிமிடம் வெற்றியை மறந்து, தன் அத்தை மகளை மறந்து உறுதி அளித்தான்.

அவள் கபோர்டிலிருந்து ஒரு நைட்டியை எடுத்து, அவளின் கிழிந்த ஆடையின் மேலேயே அதை அணிவித்து, அவளைத் தன் கரங்களில் அள்ளிக்கொண்டு அவன் இல்லம் சென்றான்.

அன்று முதல் நிலா அவர்களுடன் ஒரே வீட்டில் குடிபுகுந்தாள்.

********

ஒரு பெண் தந்தை, சகோதரனுடன் இருக்கும்பொழுது, எந்த அளவு பாதுகாப்போடு இருப்பாளோ? அதையும் விட பாதுகாப்பை உணர்ந்தாள். 

தாய் பாசத்திற்காக ஏங்கிய மூவரும் ஒருவரையொருவர் ஆதரித்து அழகான குடும்பமாக மாறினர். தாயாக தாங்கி, சேயாக கொஞ்சி, தோழர்களாக தோள் கொடுத்து என அனைத்துமாகினர். 

முதல்முறை ஜானின் முயற்சியின்போது, போதை மருந்தின் மயக்கத்திலிருந்த நிலா அதிகம் பாதிக்கப்படவில்லை. ஆனால் இந்த முறை அவளின் சுயநினைவோடு அனைத்தும் நிகழ்ந்திருக்க மனதளவில் அடி வாங்கினாள். 

பரீட்சை எழுத கல்லூரிக்கு செல்ல பயந்து மறுத்த பெண்ணை,”நாங்கள் கூடவே இருக்கிறோம்” என்று சொல்லி அவளை அழைத்துச் சென்று பரீட்சை எழுத வைத்தனர். 

நடு இரவில் தூக்கத்தில் பயந்து அலறி துடிப்பாள். அதைப் பார்த்த ஆண்கள் ரத்தக் கண்ணீர் வடித்தனர். பிரதாப்பின்,”உன் சூரியா, உன் கூடவே இருக்கேன் நிலா” என்ற வார்த்தை மட்டுமே அவளை அமைதிப்படுத்தும் மருந்து. பின் சூரியாவின் கரத்தைப் பற்றிக் கொண்டே நிலா துயில் கொள்வாள். பல நேரங்களில் அவனும் அங்கேயே உறங்கி விடுவான். 

ஒரே படுக்கையில் அவளுடன் படுத்திருந்தாலும் மனதில் சிறிதும் பாதிப்பு இல்லாமல், அவளை ஒரு குழந்தையாகவே போற்றி பாதுகாத்தான்.

மனநல மருத்துவரிடம் கலந்தாலோசித்த பிறகு, அவள் இப்போது கொஞ்சம் தெளிவாக இருக்கிறாள். இன்னமும் மன உளைச்சல் அதிகமாகும்போது தூக்கத்தில் பயந்து கத்துவாள்.

கொறோனா தொற்று வியாதியால் விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், அவர்களால் இந்தியாவிற்கு திரும்பவும் முடியவில்லை. நிலாவின் மனநிலையை மாற்ற, அவள் கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வான டெக்ஸ்டைல்ஸில், டிசைனராக வேலைக்குச் சேர்ந்தாள். வீட்டிலிருந்தே அவளால் பணி செய்ய முடியும் என்ற நிலையில் ஆண்களும் இதற்கு மறுப்பு கூறவில்லை.

மேகவர்ஷினியின் உதவியுடன் சென்னையில் ஏ.எஸ்.என் டெக்ஸ்டைல்ஸ் தொடங்க அனைத்து ஏற்பாடுகளையும் முடித்தனர். (அந்த டெக்ஸ்டைல்ஸ் மதுநிலா, மேகவர்ஷினி பெயர்களிலேயே பதிவாகியிருந்தது. இந்த விஷயம் மேகவர்ஷினிக்கு இன்றுவரை தெரியாது.)

இவ்வாறு மேலும் ஒன்றரை ஆண்டுகள் கடக்க, நிலா தலை வலியால் மிகவும் அவதிப்பட்டாள். தலைவலிக்கு மருத்துவம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, விமானம் செயல்பட தொடங்கியது. உடனே இந்தியா திரும்ப டிக்கெட் முன்பதிவு செய்தனர். 

புறப்படுவதற்கு சில நாட்களுக்கு முன் நிலா மயங்கி சரிந்தாள். அவளை மருத்துவமனையில் அனுமதித்து அனைத்து சோதனைகளையும் மேற்கொண்டனர். அதன் அறிக்கை வரும் முன்பே, அவர்கள் இந்தியா திரும்பும் நாள் நெருங்கி விட, அறிக்கைகளை மெயில்லில் அனுப்புமாறு, மருத்துவமனையில் வேண்டிக்கொண்டு இந்தியா திரும்பினர்.

பிறகு நடந்தது நாம் ஏற்கனவே அறிந்தது. 

அறுவைசிகிச்சைக்காக மீண்டும் லண்டன் சென்ற நிலாவிற்கு, ஜானின் மூலம் எந்த ஆபத்தும் வராமல் இருக்க,”எந்த சூழ்நிலையிலும் இதை கழட்ட கூடாது.” என்ற கட்டளையோடு ஒரு சங்கிலியை பிரதாப் அணிவித்தான். 

அந்த சங்கிலி நிலா எங்கிருக்கிறாள் என்பதை காட்டும் கண்காணிப்பு சாதனம். (மதுநிலாவும் சூர்யதேவும் உணவகத்தில் சந்தித்தபோது, இந்த கண்காணிப்பு சாதனத்தின் உதவியுடன் தான் பிரதாப் அங்கே சென்றான்.)

வீட்டில் என்றால் அவளை பாதுகாப்பது எளிது. ஆனால் இப்போது அவர்கள் இருக்க வேண்டிய இடம் மருத்துவமனை. அங்கே யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், வந்து செல்லலாம் என்ற நிலையில், நிலாவின் பாதுகாப்பு முக்கியம் அல்லவா?

ஆனால் அவர்கள் பயந்தது போல் எதுவும் நடக்கவில்லை. தன் தவறை உணர்ந்த ஜான் அவர்களிடம் வந்து மன்னிப்பை வேண்டினான். 

நிலாவை அடைய வேண்டும் என்று நினைத்தானே தவிர, அவளின் உயிருக்கு ஆபத்து விளையும் என நினைக்கவில்லை.

ஜான் அந்த வட இந்திய பெண் மோனலை திருமணம் செய்ய இருப்பதாக சொல்லி விடைபெற்றான்.

அனைத்தும் நல்ல விதமாக முடிந்து, இன்று நிலா உங்கள் கண் முன்னால் இருக்கிறாள்” என பிரதாப், ஆகாஷ் கூறி முடித்தனர்.

********

அங்கே குண்டூசி விழுந்தால் கூட கேட்கும் அளவு அமைதியிலிருந்தது. அனைவரும் தாங்கள் செய்த தவறை இப்போது முழுமையாக உணர்ந்தனர். 

‘தங்கள் பெண் தனக்கு வரும் கஷ்டங்களை தங்களிடம் தெரிவிக்காமல், மூன்றாம் நபரிடம் அடைக்கலம் தேடும் அளவு நாம் நடந்து கொண்டோமே’ என அனைவரும் வெட்கித் தலை குனிந்தனர்.

மதுநிலாவிடம் மன்னிப்பு கேட்கவே தகுதியற்று கண்ணீர் வழிய கூனி குறுகி நின்றனர். 

கடந்த காலத்தை மீண்டும் வாழ்ந்த உணர்வில், உடல் நடுங்க, கண்ணீர் மல்க பிரதாப்பின் அணைப்பில், அவன் மார்பில் சரண் புகுந்திருந்தாள் மதுநிலா. பிரதாப்பின் கரங்கள் இதமாக அவளை அணைத்து, ஆதரவாக அவள் தலையை வருடியது.

நிலா பட்ட கஷ்டங்கள் எதுவும், அவள் குடும்பத்தாருக்கு தெரிய வேண்டாம் என்று மறைத்தார்கள். ஆனால் சூர்யதேவ் அனைத்தையும் வெளியே கொண்டு வந்திருந்தான்.

*******

மதுநிலாவின் கடந்த காலத்தை கேட்ட அனைவரும் ஒவ்வொரு விதத்தில் மனதளவில் காயம் பட்டனர். 

“மது என்னை மன்னிச்சிரு. தெரிஞ்சோ தெரியாமலோ நீ பட்ட எல்லா கஷ்டத்திற்கும், நான் காரணம் ஆகிட்டேன். நீ யார்கிட்டயும் மனசு விட்டு  பேசாம இருக்கிறதைப் பார்த்து,’நீ ரொம்ப பார்சியாலிட்டி பார்க்கிற’ அப்படின்னு நினைச்சு உன்னை திட்டி இருக்கேன். எல்லாத்துக்கும் காரணம் நான் தான்னு தெரியாது. ரொம்ப கஷ்டமா இருக்கு. ஐயம் சோ சாரி.” என ஓவியா மனதார மன்னிப்பு வேண்டினாள்.

“மது என்னையும் மன்னிச்சிடு. பிசினஸ், பிசினஸ்ன்னு உங்கள வசதியா வச்சுக்கணும்ன்னு ஓடின நான், உங்கள கவனிக்கத் தவறிவிட்டேன். இனி அப்படி இருக்க மாட்டேன். உனக்கு ஒரு நல்ல தந்தையா இருப்பேன்” என சுந்தரம் மதுவிற்கு உறுதியளித்தார்.

“குட்டிமா உன் கிட்ட மன்னிப்பு கேட்க கூட, தகுதி இல்லாத அளவு நடந்து இருக்கேன். ஒரு தாயாய் என்னோட கடமையிலிருந்து தவறிட்டேன். ஆனால் கற்பகம் ஒரு அன்னையாய் இருந்து உனக்கு நல்லது பண்ணி இருக்கா. இந்த பசங்க உன்னோட பல கஷ்டங்களில் துணை இருந்திருக்காங்க. கற்பகம் இல்லாமல், இந்த பிள்ளைகள் இல்லாமல் போயிருந்தால், உன்னோட நிலை. முடிந்தால் என்னை மன்னித்து விடு” என வேண்டி நின்றார்.

கற்பகமும் ராஜாவும்,”ஏன் குட்டிமா எங்க கிட்ட கூட சொல்லாம, இவ்வளோ பெரிய விஷயத்தை மறச்சிருக்க? நாங்கலாம் அவ்ளோ பாவம் பண்ணினவங்களா?” என மனம் வருந்தினர்.

அனைவருக்கும் அவரவர்களுக்கு தகுந்த மாதிரி  பதில் அளித்து ஓய்ந்து போனால் மதுநிலா. இப்போது கற்பகம், ராஜாவின் அருகிலிருந்த மதுவை நெருங்கினான் வெற்றிச்செல்வன். அதை உணர்ந்த சூரியபிரதாப் அடுத்த நிமிடம் மதுவை மறைத்தார் போல் வந்து நின்றான்.

“டேய் எஸ்.பி எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு டா. என்னை கூடவா அவகிட்ட பேச விட மாட்ட” என நொந்துகொண்டான் வெற்றி.

“உன்னை எல்லாம் நம்ப முடியாது. மூன்று மாசத்துக்கு முன்னாடி எங்களைப் பார்த்தபோது கூட என் மதுன்னு சொன்னவன் தானே. நீ என் நிலா கூட பேசக்கூடாது” என முறைத்தான் சூரியபிரதாப்.

“என்னது என் மதுன்னு சொன்னாரா? வெற்றி அது எப்படி என்னோடு மதுவை, நீங்க சொந்தம் கொண்டாடலாம்?” என சூரியதேவ் ஒரு பக்கம் உரிமை கொடியை தூக்கினான்.

இப்போது பிரதாப் தேவ்வை பார்த்து,”டேய் பேசாம போய்டு. உன் மேல சரியான கடுப்பில் இருக்கேன். எங்கிட்ட வாங்கி கட்டிக்காத” என எச்சரித்தான்.

“என்ன பாஸ் இப்படி சொல்லுறீங்க? உங்ககிட்ட இருக்க மதுவை குடுத்தா சந்தோஷமா வாங்கிக்கிட்டு போய்விடுவேன்.” என்றான் தேவ் நக்கலாக.

மீதி இருந்த அனைவரும் ‘என்னடா நடக்குது இங்கே?’ என திருதிருவென விழித்திருந்தனர். 

பிரதாப் ஏதோ சொல்ல வர, அதற்குள் மேகா,”போச்சு டா. இவங்க இப்போதைக்கு நிருத்த மாட்டாங்க. ஐயோ ஆண்டவா என்னை மட்டும் காப்பாத்து டா சாமி.” என தலையில் கையை வைத்து அமர்ந்துவிட்டாள். அதை பார்த்த அனைவரும் சிரித்து விட்டனர். இவ்வளவு நேரம் இறுக்கத்துடன் இருந்த வீடு, இப்போது கொஞ்சம் கலகலப்பை அடைந்தது.

“ஏய் வாலு கம்முன்னு இருக்க மாட்ட” என ஆகாஷ் அவளை அடக்க முயல,

“அவளை ஏன் டார்லிங் பேசாம இருக்க சொல்ற? அவ உண்மைய தான சொல்றா.” என்ற மது, மேகவர்ஷினியுடன் ஹைஃபை போட்டுக்கொள்ள, “என்னது டார்லிங்கா?” என பிரதாப், ஆகாஷை முறைத்தான். 

“டேய் அவ சொன்னதுக்கு, என்னை ஏன்டா முறைக்கிற? மீ பாவம் அப்பாவி புள்ள?” என ஆகாஷ்.

“நீ ஏன் டார்லிங் அவங்கிட்ட விளக்கிட்டிருக்க? டார்லிங்க டார்லிங் சொல்லாமல், அவனையா டார்லிங் சொல்ல முடியும்?” ஆகாஷின் கரங்களை ஓடுவதற்கு தயாராக பற்றிக்கொண்ட மதுநிலா சொல்ல,

“வரவர உங்கள் இரண்டு பேத்துக்கும் சேட்டை ரொம்ப ஜாஸ்தி ஆயிடுச்சு. இப்ப உங்களை என்ன பண்றேன் பார்.” என்ற பிரதாப் அவர்களை விரட்ட தொடங்கிவிட்டான். ஆகாஷின் கரம்பற்றி ஓடிய நிலா, ஒருவர் மாற்றி ஒருவரின் பின் ஒளிந்து விளையாட, அங்கே இருந்த இறுக்கம் முற்றிலும் விலகியது.

மதுநிலாவிடம் இப்படியொரு விளையாட்டை, இதுவரை பார்த்திடாத குடும்பத்தார் அனைவரும் விழி விரித்து அவர்களை பார்த்து இருந்தனர்.

********

அவர்களின் விளையாட்டை கொஞ்ச நேரம் பார்த்த சூர்யதேவ்,”ஓகே எல்லாம் பேசி முடிச்சாச்சா? எனக்கும் நிலாவுக்கும் எப்போ கல்யாணம்?” என ஒரு குண்டை போட்டான்.

“என்ன எல்லாரும் திகைச்சு பாக்கறீங்க? இன்னும் மிஸ்டர் சூரியபிரதாப்,’அவர் அத்தை பொன்னைக் கல்யாணம் பண்ணிக்கறேன்’ அவங்க அம்மாவுக்கு பண்ண சத்தியம் அப்படியேதான் இருக்கு. மதுநிலாவின் அம்மா எங்க அப்பாக்கு குடுத்த வாங்கும் அப்படியே தான் இருக்கு?” என சூர்யதேவ், மது எனக்கு வேண்டும் என திடமாக நின்றான்.

*********

பிரதாப் சொன்ன பதிலில் அனைவரும் அதிர்ந்து நிற்க அதேநேரம், அங்கு இரு கார்கள் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கியவர்களை பார்த்து, யார் அதிகம் அதிர்ந்தார்கள்?

பிரதாப் என்ன சொன்னான்?

அந்த காரிலிருந்து இறங்கியவர்கள் யார்?

கண்டுபிடிங்க friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!