Kaarkala Vaanavil – 6

Kaarkala Vaanavil – 6

அத்தியாயம் – 6

வானம் செவ்வானமாக மாறுவதைப் பார்த்தபடி ஜன்னலின் அருகே நின்ற குழலியின் மனம் முழுவதும் மகிழ்வதனியை சுற்றி வந்தது. அவள் வேலை விஷயமாக மும்பை சென்றது அவளின் மூளைக்கு புரிந்தாலும், அவளின் மனதிற்கு புரியவில்லை. தன் காட்டில் வேலை இல்லையென்று பக்கத்து காட்டிற்கு வேலைக்கு கிளம்பினாள் குழலி.

“என்னடி குழலி இந்நேரத்திற்கு எங்கே கிளம்பிட்ட” செவ்வந்தி அவளை வேணுமென்றே வம்பிற்கு இழுக்க, “எங்க தோட்டத்தில் வேலையில்லடி. பெரிய வீட்டுகாரங்க தோட்டத்தில் வேலை இருக்குன்னு சொன்னாங்க அங்கேதான் போறேன்” என்றாள் எதர்த்தமாக.

“அடியாத்தி ஒரு ஏக்கரா நிலம் வெச்சிருக்கும் நீயே வேற தோட்டத்துக்கு வேலைக்கு போனா எங்க நிலைமை என்ன ஆகிறது” என்று ஆதங்கத்தோடு கேட்டாள்.

“எனக்கு ஒரு ஏக்கரா நிலம் இருக்குன்னு வேலையில்லாமல் கௌரவம் பார்த்துட்டு வீட்டில் உட்கார்ந்து வெறும் கஞ்சியைக் குடிக்க சொல்றீயா? இந்த வரட்டு கௌரவத்தை வெச்சு நான் ஒண்ணுமே பண்ண முடியாது” என்றவள் பெரிய பண்ணையார் தோட்டத்திற்கு வேலைக்கு சென்றாள்.

தன்னோடு வந்த செவ்வந்தியுடன் பேசியபடியே சென்ற கார்குழலி வேலையை முடித்துவிட்டு மதியம் நேரம் வீட்டிற்கு கிளம்பினாள். அதே நேரத்தில் ஊரைச் சுற்றிபார்த்தபடி நடந்த மேகவேந்தன் ஒற்றையடி பாதை வழியாக வீடு நோக்கி சென்று கொண்டிருந்தான். அவனுக்கு  பத்தடி முன்னே சென்ற இரு பெண்களும் பேசுவதை கேட்டபடி அவர்களை பின் தொடர்ந்தான் மேகவேந்தன்.

“இன்னைக்கு வீட்டிற்கு போய் என்ன சமைக்கறதுன்னு தெரியலடி” என்று செவ்வந்தி புலம்பிட, “அட புலம்பாமல் வா ஏதாவது வழி கிடைக்கும்” என்ற குழலியின் கண்களில் விழுந்தது அத்திபழ மரம்.

“செவ்வந்தி வழி கிடைக்குன்னு சொன்னேன் இல்ல கிடைச்சிருச்சு பாரு” என்றவளை அவள் புரியாத பார்வை பார்க்க, “அங்கே பாரு அத்திபழமரம்” என்றாள் குழலி.

“இதை வெச்சு என்னடி பண்றது” அவள் சலித்துக்கொள்ள, “அத்திபழத்தை போரியல் பண்ணி ரசம் வைத்தா வேலையே முடிஞ்சிது” என்ற கார்குழலி சுற்றும் முற்றும் பார்வையை சுழலவிட தூரத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவனைப் பார்த்தாள்.

“டேய் தம்பி இங்கே வாடா” என்றழைக்க, “என்னக்கா” என்றான் அவன்.

“இந்த மரத்தில் ஏறி அந்த காயைக் கொஞ்சம் பறிச்சி போடு” என்று கூறியதும், “அக்கா எங்களுக்கு என்ன தருவீங்க” என்று பேரம் பேசினான்.

“உனக்கு வேற ஏதாவது கொடுத்த தான் இந்த வேலையை செய்வ இல்ல” என்றவளின் செயல்களை அங்கிருந்த மரத்தின் மீது சாய்ந்து நின்றபடி ரசித்தான் மேகவேந்தன். பக்கத்து தோட்டத்தில் குச்சிகிழக்கு மூன்று மாதமாகி இருந்தது. அதைப் பார்த்தவளின் மனதில் அந்த எண்ணம் தோன்றியது.

அவளின் பார்வை சென்ற திக்கை கவனித்த செவ்வந்தி, “அடியேய் வேண்டான்டி. காட்டுகாரனிடம் சிக்கின நம்மள உண்டுஇல்லன்னு பண்ணிருவான்” என்றாள் பயத்துடன்.

“டேய் நீ கையைப் பறிச்சுபோடு அக்கா இதோ வரேன்” செவ்வந்தி சொல்வதை காதில் வாங்காமல் சத்தமே இல்லாமல் காட்டிற்குள் சென்று பார்க்க நன்றாக நீரில் ஊறியிருந்த செடிகளில் ஒன்றை வேரோடு பிடிங்கினாள்.

வேரோடு வந்த கிழங்கை மட்டும் எடுத்துகொண்டு செடியை அங்கேயே நட்டுவிட்டு எழுந்து வந்த கார்குழலியைப் பார்த்து, ‘அடிப்பாவி அடுத்த காட்டுக்காரன் தோட்டத்தில் புகுந்து கிழங்கை திருடிட்டு வராளே’ என்றவன் வாயைப் பிளந்தான்.

“என்னடா காயெல்லாம் பறிச்சிட்டியா” என்று சிரித்தபடியே கேட்டாள்.

“ம்ம் அதெல்லாம் பறிச்சிட்டேன் அக்கா”   என்றான் சிறுவன்.

“இந்தா இதில் குச்சிகிழங்கு இருக்கு போய் சாப்பிடு” என்று மொத்த கிழங்கையும் அவனிடம் கொடுத்துவிட்டு செவ்வந்தியுடன் வீட்டை நோக்கி நடக்க  தொடங்கினாள் கார்குழலி.

அப்போது எதிரே வந்த பெரியவர், “என்னம்மா குழலி வேலையெல்லாம் முடிச்சிட்டு வெரசா வீடு போற மாதிரி தெரியுது” என்றார்.

செவ்வந்தியோ, ‘இவ செய்த காரியம் பெருசுக்கு தெரிஞ்சிது. அப்புறம் அவ்வளவுதான்’ என்றவள் பயத்துடன் குழலியையும் அவரையும் மாறிமாறிப் பார்த்தாள்.

“ஆமாங்க அப்பாரு” என்றவளோ அவரைக் கடந்து இரண்டடி எடுத்து வைத்தவளோ திடீரென்று கீழே குனிந்தவள், “ஐநூறு ரூபா” என்று எடுத்த குழலி அந்த பெரியவரிடம் சென்று, “அப்பாரு இது உங்க பணம் போல” என்றதும் அவரும் தன் பாக்கெட்டை தொட்டுப் பார்த்தார்.

“ஆமா” என்றவரோ அவளிடமிருந்து பணத்தை வாங்கிகொண்டு அங்கிருந்து நடக்க தொடங்கினார்.

அவர் சென்றதும் மீண்டும் தன் வழியில் நடக்க தொடங்கிய குழலியின் செயலிற்கு அர்த்தம் புரியாமல் நின்றிருந்தான் மேகவேந்தன். அவனின் மனதில் தோன்றிய சந்தேகம் செவ்வந்திக்கும் வந்தது போல.

“ஏண்டி இந்த ஆளோட காட்டில் கிழங்கு திருடி அந்த பையனுக்கு கொடுத்திட்டு வந்த. இப்போ இந்த ஆளோட பணமென்று தெரிஞ்சும் நேர்மையாக கொண்டுபோய் கொடுத்துவிட்டு வர. உன்னை என்னால புரிஞ்சிக்கவே முடியல” என்று புலம்பினாள்.

மேகவேந்தன் அவளின் பதிலை எதிர்பார்த்து காத்திருக்க, “பண்ணையத்தில் வேலை செய்யும் பையனிடம்  எத்தனை வேலை வாங்கறாங்க தெரியுமா? மூணு நேரம் சோறு போட்டுட்டா எல்லாம் முடிஞ்சி போச்சா. அவனோட படிப்பு இப்போ போச்சு நாளைக்கு இவன் வேலைக்கு எத்தனை பக்கம் ஏறி இறங்கணும் தெரியுமா?” என்றவளின் கேள்விக்கு செவ்வந்தி மறுப்பாக தலையசைத்தாள்.

“பணம் இருக்குன்னு வேலைக்கு ஆள் வைக்கிறாங்க. ஆனா அவங்க கொடுக்கிற தொகை இப்போதைய தேவைக்கு உதவுமே தவிர நாளைக்கு இந்த பையனோட வாழ்க்கைக்கு உதவாது. அந்த ஆளோட காட்டில் ஒரு கிழங்கு செடியில் ஒரு கிழங்கு திருட்டு போனால் அவருக்கு அவ்வளவு பெரிய நட்டம் வர போவதில்லை. அதன் திருடி அவனிடம் கொடுத்துட்டு வந்தேன்..” என்றாள் சாதாரணமாகவே.

‘உன்னை மாதிரி நாலுப்பேர் நினைச்சா காட்டுகாரன் எல்லாம் தலையில் துண்டை போட்டுட்டு தான் போகணும்’ என்று மேகவேந்தன் கடுப்புடன் நினைக்க, “சரி அந்த ஆளோட பணத்தை எதுக்கு கொடுத்த அதுக்கு விளக்கம் சொல்லு” என்றாள்.

“அந்தாளோட பணத்தை வெச்சு என்ன பண்ண சொல்ற. நல்ல உழைச்சு சாப்பிடும்போதே உடம்பில் ஓட்டமாட்டேங்குது. இதில் அந்த ஆளோட பணத்துக்கு நான் ஆசைப்பட்டா ஒரு மடங்குக்கு இரு மடங்காக  செலவு வரும் தேவையா இது எனக்கு” என்றவளின் விளக்கத்தில் மேகவேந்தன் தான் விழி பிதுங்கி நின்றான்.

அவளின் செயலில் இருந்த ஞாயம் அவனின் மனத்தைக் கவர்ந்தது. ஒரு தொழிலாளரின் உயிரை குடிப்பது போல அவனின் உழைப்பை திருடும் முதலாளிகளின் முதல் எல்லாம் இப்படித்தான் வீணாக போகுமென்று அவளின் மூலம் உணர்ந்தான்

மதியம் வேந்தன் வீடு திரும்பும்போது மணிவண்ணன் வீட்டில் இருந்தான். காலையில் வெளியே சென்றவன் வீட்டிற்கு வரவில்லை என்ற கோபம் ஒருபக்கம் இருக்க, செழியன் ஏதோ மீட்டிங் விசயமாக வேந்தனிடம் பேச நினைத்து கால் செய்ய அவன் எடுக்கவில்லை என்றதும் பெரிய அண்ணனாக மணிவண்ணனுக்கு போனைப் போட்டு சண்டை போட்டுவிட்டு போனை வைத்ததில் மணிவண்ணனின் கோபம் இன்னும் அதிகரித்தது.

இந்த விஷயம் அறியாத வேந்தன் ஊரைச் சுற்றிவிட்டு அப்போது தான்  வீட்டிற்குள் நுழைவதைப் பார்த்தும், “வேந்தா இந்நேரம் வரை எங்கே போயிட்டு வர” என்று விசாரிக்க, “அண்ணா ஊரை சுற்றிப் பார்க்க போறேன்னு சொல்லிட்டு தானே போனேன்” என்றான்.

“அதுக்குன்னு செல்லை சுவிச் ஆப் செய்வியா” என்றவன் கோபத்தில் எரிந்து விழுக, “ஏன் அண்ணா என்னை தேடினீங்களா” என்றவன் செல்லை ஆன் செய்து கால்ஸ் லிஸ்ட் பார்க்க செழியன் பலமுறை அழைத்திருப்பது புரிந்து பெரிய அண்ணனை நிமிர்ந்து பார்த்தான்.

“25௦௦௦000 போட்டு செல்லு வாங்கின பத்தாது, அதை ஆன் பண்ணியும் வெச்சிருக்கணும்” என்றவன் வெடுக்கென்று பேசிவிட்டு சென்றதும் பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவன் செழியனுக்கு அழைத்து பேசினான்.

மறுநாள் காலைபொழுது அழகாக விடிந்தது..

காலையில் வழக்கம்போல முக்கியமான வேலையெல்லாம் முடித்துவிட்டு வீட்டிலிருந்து கிளம்பிய செழியன் ஒரு நண்பனை வழியனுப்ப ஏர்போர்ட் சென்ற செழியன் எதிர்பாராதவிதமாக மகிழ்வதனியை அங்கே சந்தித்தான்.

மகிழ்வதனி காத்திருப்பவர்கள் இருக்கையில் அமர்ந்திருப்பதைக் கண்டவன், ‘என்ன மேடம் இங்கே உட்கார்ந்திருக்காங்க’ என்ற சிந்தனையோடு அவளை நெருங்கினான்.

பெண் என்பவள் குனிந்த தலை நிமிராமல் இருக்கவேண்டும் என்ற கட்டுபாடுகளை மீறி நேர்கொண்ட பார்வையுடன் கால்மேல் கால்போட்டு கம்பீரமாக அமர்ந்திருந்தவளின் தோற்றம் அவனின் மனதில் சலனத்தை உருவாக்கியது.

“இப்போ எதுக்குடா இங்கே வந்த” என்ற வாக்கியத்தைக் கேட்டு திடுக்கிட்டு நின்றுவிட்டான்.

‘நம்மளத்தான் சொல்றாளா’ அவன் சுற்றிலும் பார்வையை சுழற்றினான்.

அவளின் அருகே அவனைத் தவிர வேறு யாருமில்லை என்ற உண்மை உணர்ந்தவன், ‘நல்ல மரியாதையான பொண்ணாக இருப்பான்னு பேச வந்தா இவ என்ன இப்படி இருக்கிற. செழியா இவளிடமா உன் மனசு சலனப்படணும்’ என்று மனதிற்குள் புலம்பியபடி அவளின் அருகே அமர்ந்தான்.

தன்னருகே யாரோ அமரும் ஆராவாரம்கேட்டு சட்டென்று திரும்பிப் பார்த்தவளின் காதிலிருந்த புளூடூத் பார்த்தும், ‘இவ போனில் யாரோட பேசிட்டு இருப்பா போல. நல்லவேளை நம்மள சொல்லல’ என்று பெருமூச்சை வெளியிட்டான் செழியன்.

அவனை ஏறயிறங்க பார்த்துவிட்டு மறுபக்கம் திரும்பிய மகிழ்வதனி அந்த உருவத்திடம்,“உன்னைத்தான் கேட்கிறேன் காதில் விழுகிறதா இல்லையா” என்று வார்த்தையைக் கடித்து துப்பியவளைப் பார்த்து இளஞ்செழியனின் பொறுமை மெல்ல குறைய தொடங்கியது.

இதெல்லாம் அறியாத மகிழ்வதனி தன்னருகே அமர்ந்திருந்த அவனின் உருவத்துடன் சண்டையிட, ‘நான் அப்படித்தான் வருவேன். உன்னை வழியனுப்ப நான் வராமல் வேற யாரு வருவா?’ என்று அவளை வம்பிற்கு இழுத்தது.

“நீ வந்து வழியனுப்பலன்னா எனக்கு ஊருக்கு போக வழியா தெரியாது..” என்றவள் கோபத்துடன் அந்த உருவத்துடன் சண்டையிட்டாள்.

“அப்புறம் எதுக்கு நீ என்னை நினைச்ச? நீ நினைக்காமல் இருந்திருந்திருந்தா நான் வந்திருக்க மாட்டேன் இல்ல” என்றவளைப் பார்த்து குறும்புடன் கண்சிமிட்டியது.

தங்கள் இருக்கும் இடத்தை உணர்ந்து தன்னைக் கட்டுபடுத்திக் கொண்டவளோ,

“நீ வேற நேரம் காலம் தெரியாமல் என்னை சோதிக்காதே. மரியாதையாக எழுந்து போயிரு..” என்றவளின் மிரட்டலைக் கண்டு அந்த உருவம் அவளைப் பார்த்து குறும்புடன் கண்சிமிட்டி சிரித்து, “முடியாது”என்றது.

அவளின் காதிலிருந்த புளூடூத் கீழே விழுந்ததைக் கூட உணராமல் பெசிகொண்டிருந்தவளிடன் நடவடிக்கையில் வித்தியாசமாக இருப்பதை அப்போது தான் கவனித்தான் செழியன். அவளின் இடதுபுறம் அமர்ந்திருந்த செழியன் அவளையே இமைக்காமல் கேள்வியாக நோக்கினான். அந்த பார்வையைக் கூட உணராதவளோ வலதுபுறம் இருந்த அமர்ந்திருந்த அந்த உருவத்துடன் சண்டையிட்டு கொண்டிருந்தாள்.

“இப்போ நீ போகல அப்புறம் நான் உன்னோட பேசவே மாட்டேன்” என்றாள் பிடிவாதமாகவே.

“நான் போறது பற்றி அப்புறம் யோசிக்கிறேன் அந்தப்பக்கம் திரும்பிப் பாரு உன்னை ஒருத்தன் குறுகுறுன்னு பார்த்துட்டு இருக்கான்” என்றதும், ‘யாரது’ என்றவள் சட்டென்று திரும்பிப் பார்த்தாள்.

செழியன் முகத்தை வேறுபுறம் திருப்பிவிட, “ஹலோ மிஸ்டர்” என்று அவனை அழைக்க, “என்ன” என்று திரும்பியவனை விழி விரிய பார்த்தாள்.

செழியன் என்றாலே பெண்கள் எல்லாம் பத்தெட்டு நகர்ந்து நிற்கும் பெண்களின் நடுவே, தன்னை விழிவிரிய பார்த்த அவளின் பார்வை அவனின் உள்ளத்தில் தடுமாற செய்தது. ஏற்கனவே அவளை பார்த்த நொடியிலிருந்து ஏற்றப்பட்ட சலனத்துடன் இந்த தடுமாற்றமும் இணைந்து அவனின் மனதை என்னவோ செய்தது.

இந்த பார்வைக்கு அர்த்தத்தை அவனால் உணரமுடியாவிட்டாலும் தனக்குள் நிகழும் மாற்றத்திற்கு காரணம் காதல் என்ற உண்மையைக் கண்டுபிடித்த செழியன், ‘நானா இவளை காதலிக்கிறேன்’ என்று ஒரு நிமிடம் விழி மூடி திறந்தான்.

காதல் என்று சுற்றிவரும் பெண்களை அவன் ஏறெடுத்தும் பார்த்ததில்லை. எந்தொரு பெண்ணின் மீது ஏற்படாத ஒரு ஈர்ப்பு அவளின் மீது ஏற்பட்டது. அவன் உள்ளத்தை உணர்ந்தநொடியை மனதில் பொக்கிஷமாக சேகரித்தான்.

அவள் அப்போதும் பார்வையை மாற்றாமல் இருப்பதுக்கண்டு, ‘அடியேய் முட்டக்கண்ணி முழியை மாத்துடி’ என்றவன் நினைக்கும் அளவிற்கு இருந்தது அவளின் செய்கை.

அவளின் முகத்தின் முன்னாடி சொடக்கு போட்டு அவளின் கவனத்தை ஈர்த்தான் செழியனைப் பார்த்து அவள் பே என்று முழித்தாள்.

அவளின் நிலையுணர்ந்து மனதிற்குள் புன்னகைத்துக் கொண்டவன், “என்னவோ பேச வந்தீங்க” என்றவன் கேட்க அவளுக்கோ மற்றது எல்லாம் மறந்தே போனது. அதை வெளிக்காட்டாமல் மனதிற்கு மறைத்து தன்னை நிலைபடுத்திகொண்டு நிமிர்ந்தாள்.

“ஏன் என்னையே பார்த்துட்டு இருந்தீங்க” என்றாள் கோபமாகவே.

“நான் உங்களைப் பார்த்தது உங்களுக்கு எப்படி தெரியும்?” என்றவனின் கேள்விக்கு அவளிடம் பதிலில்லை

அவள் மௌனமாக இருக்க, “ம்ம் சொல்லுங்க மேடம்” என்றவனின் அழைப்பில், “நீங்க பார்த்ததாக என் உள்ளுணர்வு சொல்லுச்சு” அவளின் காரணத்தைக்கேட்டு அவனின் உதடுகள் ஏளனமாக வளைந்தது.

அவளை இமைக்காமல் பார்த்தவனோ, “உங்க மனசுக்கு நான் அவ்வளவு நெருக்கமானவனா?” என்றவன் கிசுகிசுப்பாக கேட்டு புருவம் ஏற்றி இறக்கியவனின் கம்பீரம் அவளின் மனத்தைக் கவர்ந்தபோதும் அவளால் நிதர்சனத்தை ஏற்க முடியவில்லை.

“நான் எப்ப அப்படி சொன்னேன்” என்றவள் கேள்வியை அவனின் பக்கம் திருப்பிட,  “பழக்கம் இல்லாதவங்களை பற்றி உள்ளுணர்வு அவ்வளவு சீக்கிரம் உண்மை சொல்லாது. அப்படி இருக்கும்போது என்னைப்பற்றி உங்க உள்ளுணர்வு எப்படி சொல்லுச்சு” என்று பிளேட்டை திருப்பிப் போட்டுவிட்டான்.

இந்த இரண்டு வருடங்களில் ஆண்களோடு அவள் பழகியபோதும் இவன் அளவிற்கு யாருடனும் அவள் இணக்கம் காட்டியதில்லை. ஆனால் எங்கிருந்தோ வந்த ஒருவன் தன்னிடம் இவ்வளவு இயல்பாக பேசுவது தன் நிலையை எண்ணி அவளுக்கே வியப்பாக இருந்தது.

“ஹலோ மிஸ்டர் பேச்சை மாற்றாமல் எதுக்காக என்னை பார்த்தீங்க என்ற காரணத்தை சொல்லுங்க” என்றாள் அவளோ கோபமாக.

“நான் உங்களைப் பார்க்க கூடாதா?” என்றான் அவளின் மீது பார்வை பதித்தபடி.

“என் கேள்விக்கு இது பதில் இல்லையே” என்றவள் அவனின் பார்வையை சளைக்காமல் எதிர்கொள்ள, “உங்க கேள்விக்கு பதில் சொல்ல முடியாது” என்றவன் வீம்புடன் கூறி அவளின் கோபத்தை அதிகரிக்க செய்தான்.

இதற்குமேல் அவனோடு பேசுவதில் பயனில்லை என்ற உண்மையை உணர்ந்த மகிழ் எழுந்து சென்றுவிட்டாள். அவள் சென்ற திசையை பார்த்தபடி அமர்ந்திருந்தவனின் கவனத்தை ஈர்த்தது செல்போன் ரிங்டோன்.

“என்னைக் காதலிக்க பிறந்தவனே நீதானென்று..

கைகள் கோர்த்து என் தோள் சாயும் தோழனேன்று..

எனக்கு தோன்றியதாலே.. எல்லாம் மாறியதாலே..

உன் கண்ணுக்குள்ளே காதலனே விழுந்து எழுகிறேன்..”  அவளின் செல்போனை எடுத்தான் செழியன்.

“இவ எல்லாம் டாப் டென் லிஸ்ட் ல எப்படி இடம்பிடிச்சா? இவ்வளவு கவனக்குறைவாக இருக்காளே” என்றவன் சிந்தனையோடு அவளின் கேலரியை ஓபன் செய்து ஒவ்வொரு பிக்சராக பார்த்தபடி வந்த இளஞ்செழியனின் விரல்கள் அந்த பெயிண்டிங் பார்த்தும் அப்படியே நின்றது.

அந்த கேலரியில் இருந்த பெயிண்டிங் அனைத்தையும் பார்த்தவனின் முகத்தில் குழப்பம் அதிகரித்தது. அதுவரை இருந்த இலகுத்தன்மை மாறிவிட சிந்தனையோடு அவள் சென்ற திசையைப் பார்த்தான். அப்போது தான் அவன் வந்தபோது புளூடூத் கீழே விழுந்ததை உணராமல் பேசிய அவளின் செயல் அவனின் மனதில் வந்துசென்றது.

மகிழ்வதனி பற்றிய பிஸ்னஸ் விவரங்கள் தெரியும் என்றபோதும், ‘எந்த ஊரிலிருந்து வந்திருக்கிற’ நெற்றியை தடவி சிந்திக்க அவன் கைபட்டு ஆடியோ அவளின் குரலில் ஒலித்தது.

ஓடக் காண்பது பூம்புனல் வெள்ளம்
ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்
வாடக் காண்பது சூல்உளைச் சங்கு
போடக் காண்பது பூமியில் வித்து
புலம்பக் காண்பது கிண்கிணிக் கொத்து
தேடக் காண்பது நல்லறம் கீர்த்தி
திருக்குற் றாலர் தென் ஆரிய நாடே!என்ற பாடலைக்கேட்டதும் அவனின் முகம் பளிச்சென்று மலர்ந்தது.

“திருக்குற்றால குறவஞ்சி இலக்கிய பாடல்” என்றவன் சிந்திக்க, “ஓஹோ  குற்றாலம் தான் இவளோட சொந்த ஊரா” அடுத்து செய்ய வேண்டிய விஷயங்களை மனதிற்குள் பட்டியலிட்டுக் கொண்டே ஆபீஸ் கிளம்பினான் செழியன்.

error: Content is protected !!