Kandeepanin Kanavu-20

Kandeepanin Kanavu-20

                  காண்டீபனின் கனவு 20

 

 

“அப்பா! எதுக்கு எங்கள இவ்வளவு சீக்கிரம் வர சொன்னீங்க?” சுஜாதா தாத்தாவின் அருகில் அமர்ந்து கேட்க,

“சொல்றேம்மா.. வீராவுக்கு கல்யாணம் பண்ணனும்.!” அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“என்னப்பா திடீர்னு. அவனுக்கு இன்னும் ஒன்னு ரெண்டு வருஷம் போகட்டும்.” மோகன் மறுத்தார்.

“இல்லப்பா. இப்போவே பண்ணியாகணும்.” தாத்தா உறுதியாகக் கூறினார்.

“மாமா. நீங்க இவ்வளோ அவசரப் படுத்தினா அதுக்கு எதாவது ஒரு காரணம் இருக்கும். என்னன்னு சொல்லுங்க மாமா?” வேதாவும் காரணம் அறிய விரும்பினார்.

கிருஷ்ணனும் சுஜாதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அவர்கள் மனதில் ஒன்று ஓடிக் கொண்டிருந்தது.

“வேதா, ஆமாம்மா. காரணம் இருக்கு. ஆனா அதை என்னால இப்போ சொல்ல முடியாது. அவனுக்குக் இப்போ கல்யாணம் ரொம்ப அவசியமான ஒன்னு.அதுவும்…பொண்ணு…” அவர் நிறுத்த,

சுஜாதா முன் வந்தார்.

“வீராவுக்கு கல்யாணம் இப்போவே நீங்க பண்ணனும் ஆசப் பட்டா.. நம்ம சம்ரக்க்ஷாவ பண்ணிவைங்கப்பா. வீர தவிற வேற யாருக்கும் எனக்கு மாப்பிளையா வரத் தகுதி இல்ல. நம்ம சொந்தம் விட்டுப் போகக் கூடாது. வேற யாரும் புதுசா வந்த நம்ம பொண்ண அவங்க வீட்டுக்கு அனுப்பனும். எனக்கு அதுல விருப்பமில்லப் பா.” அனைவர்க்கும் தன் மனதில் இருப்பதைக் கூறிவிட்டார் சுஜாதா.

தாத்தாவிற்கு பாதி வேலை முடிந்தது போல ஆனது.

“ஆமா மாமா. எனக்கும் அது தான் விருப்பம்.” வேதா சுஜாதாவுடன் சேர்ந்து கொண்டார்.

“கிருஷ்ணா நீ என்ன சொல்ற?” தாத்தா கேட்க,

“மாமா நானே சொந்தத்துக்குள்ள என் அக்கா பொண்ண தான கட்டிகிட்டேன். அதே மாதிரி என் பொண்ணும் சொந்ததுக்குள்ளயே குடுக்கறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்.”

“எல்லாருக்கும் இது சம்மதம், மோகன் நீ என்ன சொல்ற.?” மீண்டும் மகனிடம் வந்தார்.

“அப்பா, வீராக்கும் நம்ம ரக்க்ஷாக்கும் கல்யாணம் பண்றதுல எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்ல. ஆனா…!” தந்தை எதற்கு இப்போது திடீரென இந்த ஏற்பாடு செய்கிறார் என அறிந்து கொள்ள நினைத்தார்.

“அப்பறம் என்ன விடு, எல்லாத்தையும் இனி நான் பார்த்துக்கறேன்.” மகிழ்ச்சியாக அங்கிருந்து அகன்றார்.

வேதாவும் சுஜாதாவும் தங்களின் ஆனந்தத்தை பரிமாறிக் கொண்டனர்.

மோகன் தோட்டத்திற்குச் சென்று கயிற்றுக் கட்டிலில் படுத்தார். சிலு சிலுவென அந்த மரங்களின் காற்றும் இயற்கை எழிலும் தாலாட்ட அப்படியே உறங்கிப் போனார்.

இரவு உறங்கச் செல்ல அவரைத் தேடிய போது, அவர் இங்கிருப்பது தெரிந்து எழுப்பாமலே சென்று விட்டார் வேதா.

**

“என்ன வீரா இது அம்பு வருது?” சாம் திகைக்க,

“எனக்கும் தெரியல. ஒரு வேளை இதெல்லாம் பின்னாடி உபயோகப் படலாம். பார்ப்போம். வா அடுத்த முக்கோனத்தைக் கடக்கணும்.” கடமையில் கண்ணாய் இருந்தான்.

அவன் தாத்தா சொல்லிக் கொடுத்தது போல ஒவ்வொரு முக்கோணத்தையும் இடமும் வலமுமாக மாறி மாறிக் கடந்த பின் பதினான்காம் முக்கோணத்தின் முன் வந்து நின்றான்.

“இது தான் கடசியா? இதுக்கு அப்பறம் டேன் பேசுனது யாருன்னு நம்ம முன்னாடி வருமா.. பயமா இருக்கு டா.” அவனது வலிய தோள்களை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்.

ஏனோ அது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவள் கைகளின் மேல் தன் கைகளை வைத்து அழுத்தியவன்,

“கவலைப் படாத. உனக்கு எதுவும் ஆக நான் விடமாட்டேன்.” தைரியம் சொன்னான்.

“நாயே! மொதல்ல உன்ன போட்டுட்டு அப்புறம் என்கிட்ட வந்தா என்ன செய்வ?” அவளின் சுயநல சிந்தனை அவனுக்குச் சிரிப்பை வரவைத்தது.

“செல்பிஷ் நாய் டி நீ! அப்போ நான் போனாலும் பரவால்ல.. உன் சேஃப்டி முக்கியம். அப்படித் தான.?” போலியாக முறைத்தான்.

“ச்ச.. ச்ச.. அப்டி இல்ல வீரா…. ஒரு பேச்சுக்கு சொன்னேன். ஆனாலும் பயமா தான் டா இருக்கு. என்னை காப்பாத்திரு டா..ப்ளீஸ்.. வீட்டுக்கு ஒரே பொண்ணு.” கெஞ்சினாள்.

“வடிவேலு வ விட பெரிய காமெடி நீ..வந்து தொல” சிரித்துக் கொண்டே அவளது கையைப் பிடித்தான்.

பதினான்காவது இடது புறமாக கடந்தான். மணிக் கணக்கை சரியாக யோசித்து சரியான நேரத்திற்கு முடித்தான். ஆனால் மற்றவைகளைப் போல அது உடனே மறைய வில்லை.

“ஐயையோ தப்பா சுத்திடோமா? ஏன் மறையல.” சாம் கண்களில் பீதி ஏற்பட,

அந்த முக்கோணம் ‘பக்’ என தீப்பிடித்து எரிந்தது. இருவரும் சற்று தள்ளி நின்று கொண்டனர்.

தீ குபு குபுவென எரிந்து விண்ணை முட்டியது. அதிலிருந்து வெளிப்பட்டான் பிரம்ம ராட்ஷசன்.

“காண்டீபா…சொன்னபடியே முக்கோணங்களை கடந்து விட்டாய்.” அதிரும் குரலில் பெரிய உருவமாக தொந்தியுடன் தலையில் கொம்புடன் எதிரே நின்றான்.

சம்ரக்ச்ஷா அவனைக் கண்ட மாத்திரத்தில் அலறி வீராவின் முதுகில் முகத்தை புதைத்துக் கொண்டாள்.

வீராவும் சற்று பயந்து தான் போனான். இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், தைரியப் படுத்திக் கொண்டு நின்றான்.

முன்னமே யாரோ எதிரே வரப் போவது தெரியும் ஆனால் இப்படி ஒரு ராட்ஷனை அவன் எதிர்ப்பார்க்கவில்லை.

“என்ன வேணும் உனக்கு?” பதில் கேள்வி கேட்டான்.

“உன்னிடம் இருக்கும் நீலக் கல் நீலத் தாமரை. அது என்னிடம் கொடு.” கையை நீட்டியது.

“ஏன் உன்கிட்ட கொடுக்கணும். நீ யாரு. இங்க என்ன நடக்குது. எனக்கு எல்லாம் சொல்லு.”

“இது உன் குடும்பத்தின் சாபம். அத நீ தான் சரி பண்ணனும்னு உன்னை தேர்ந்தெடுத்து இந்த சோதனை எல்லாம் நடக்குது. நீ இந்த விஷ்ணு மலைய கடந்து போய் சிவன் மலையை தொட்டுட்டா பாதி கண்டம் முடிஞ்சது.” பூதம் சொல்ல,

“உன்னை நான் எப்படி நம்பறது. எனக்கு ஒண்ணுமே புரியல.” வீரா தலையில் கை வைத்துக் கொண்டான்.

அந்த பூதம் இப்போது தன் உருவத்தை சுருக்கிக் கொண்டு அவன் அளவு வந்து நின்றது.

“நான் பிரம்ம ராட்ஷன். உண்மையைத் தவிற வேறு எதுவும் என்னால் பேச முடியாது. என்னை நீ தாராளமாக நம்பலாம். அதே சமயம் என் சாபம் தீர நான் இந்த மலரை பெற வேண்டும். அதனால் தான் கேட்கிறேன்.” இப்போது குரல் அந்த அளவு கடுமை இல்லாமல் இருக்க,

சம்ரக்ஷா எட்டிப் பார்த்தாள்.

“உன்கிட்ட இந்த மலரை கொடுத்துட்டா நாங்க எப்படி இங்கிருந்து போறது.?” அவள் கேட்க,

“அது பற்றி எனக்குக் கவலை இல்லை.”

“இந்த பூவ வச்சு நாம் என்ன செய்யணும்னே தெரியலயே.” சாம் வீராவின் காதில் சொல்ல,

“சரி. உனக்கு நான் இந்த மலரைக் கொடுக்கணும்னா எனக்கு இதெல்லாம் என்னன்னு நீ விளக்கமா சொல்லணும். என்ன சாபம். நான் என்ன செய்யணும். நீ யாரு? எல்லாத்தையும் நீ எனக்கு சொல்லணும்.” வீரா பேரம் பேசினான்.

“ஹே நீ பாட்டுக்கு அதுகிட்ட குடுத்துட்டா.. நாம எப்படி தப்பிக்கறது.” சாம் மீண்டும் காதைக் கடிக்க,

“அந்த ராட்ஷசன் தான் பொய் சொல்லாது. நாம சொல்லாம். அதுகிட்ட முழு கதையும் கேட்டுட்டு, எஸ்கேப் ஆகர வழியும் கேட்டுட்டு அப்படியே தப்பிக்க வேண்டியது தான்.” கண்ணடித்தான்.

“டேய் அது கண்டு பிடிச்சுடுச்சுன்னா..?” சந்தேகமாகக் கேட்க,

“ ராட்ஷசனுக்கு அவ்வளவு அறிவு இருக்கும்னு எனக்குத் தோணல..” சாதரணமாக பதில் சொன்னான்.

“எனக்கு ராட்ஷசன் ஒன்னு நிஜமாவே இருக்குனே இப்போ தான் தெரியும். நீ அதோட அறிவ பத்தி எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கியா..”

“சும்மா இரு.” அவளை அடக்கியவன்,

“உனக்கு சம்மதமா இல்லையா?” ராட்ஷசனிடம் கேட்டான்.

“எல்லாத்தையும் சொல்ல எனக்கு அனுமதி இல்லை. ஆனால் நீ என்ன செய்யவேண்டும் என்பதை மட்டும் தான் சொல்ல முடியும்.”

“சரி சொல்லு”

“இது விஷ்ணு மலையின் அடி மட்டம்.. நீலத் தாமரை விஷ்ணுவிற்கு சொந்தமானது. இந்த வெட்டவெளியில் தோன்றும் ஸ்ரீசக்கரத்தை கடந்து சென்றால் உருவாகும் ஒரு குளம். அந்தக் குளத்தில் இந்த நீலத் தாமரையை விட்ட பிறகு தான் நீ ஏறி வந்த மலை உனக்குத் தெரியும். இங்கிருந்து அந்த மலை உச்சியைப் பார்த்தால் விஷ்ணுவின் முகம் போலத் தெரியும். அப்போது இந்த நீலக் கல்லால் சரியாக குறி பார்த்து எரிந்து விஷ்ணுவின் முகத்தில் திலகம் வைத்தால் தான் மீண்டும் நீ வந்த இடத்திற்குச் செல்ல முடியும்.” ராட்ஷசன் சொல்லி முடிக்க,

“சரி நீ எப்படி இங்க வந்த?” சம்ரக்க்ஷா கேட்க,

“நான் ஒரு காலத்தில் அரசனாக இருந்தவன், பேராசை காரணமாக இந்த விஷ்ணு மலையை அடைந்தேன். ஆனால் என்னால் நீலக் கல்லையும் நீலத் தாமரையுமே அடைய முடியாமல் போனதால், நான் வணங்கிய தெய்வங்களை தூற்றி பிரம்ம ராட்ஷசனாகும் சாபம் பெற்றேன். எப்போது எனக்கு நீலக் கல் , தாமரை கிடைக்கிறதோ அப்போது தான் எனக்கு சாப விமோசனம்.” பயங்கரமாக தெரிந்த ராட்ஷசன் இப்போது பாவமாகத் தெரிந்தான்.

“அப்படி என்ன பேராசை உனக்கு? எத வேண்டி இங்க வந்த?” வீராவிற்கு என்னவென்று தெரிந்து கொள்ளும் ஆர்வம்.

“அது தான் உன் குலதெய்வம்!!” சொன்னான் அந்த ராட்ஷசன்.

“என்னது… என் குலதெய்வமா?” அதிர்ச்சியாக இருந்தது.

“ஆஆ….!” சிறிது நேரத்தில் ராட்ஷசன் அலற….

“என்ன ஆச்சு என்ன..” இருவரும் பயந்தனர்.

“உன் குலதெய்வத்தைப் பற்றி நான் பேசி இருக்கக் கூடாது. அதனால் என் உடல் தகிக்கிறது…..” மீண்டும் அலறினான்.

கீழே விழுந்து புரண்டான். வீராவிற்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அவனைக் காப்பாற்றுவதா… இல்ல அப்படியே விடுவதா என யோசிக்க,

“வா வீரா ஓடிடலாம்.” சாம் அவனை உலுகினாள்.

“ஹே…இவன்…”

“அவன பத்தி நமக்கென்ன… நாம தப்பிக்கணும் மொதல்ல. அவன் கிட்ட கல்லையும் பூவையும் குடுத்துட்டு நானும் நீயும் ராட்ஷசனா இங்கயே இருக்க வேண்டியது தான். வாடா…” என இழுத்தாள்.

முக்கொனங்களைத் தாண்டிய தாமரை இதழ்களை கடந்து பின் வட்டம் சதுரம் இரண்டையும் தாண்டினர். ராட்ஷசன் கத்தினான்.

 “உன்னை விடமாட்டேன். என்னை ஏமாற்றிவிட்டாய். பின் தொடர்வேன்!” என்றான். ஓடி வந்தான் ராட்ஷசன். என்ன செய்வதென்று தெரியாமல் ஒவ்வொரு முக்கோனத்தைக் கடந்த போதும் வந்த பொருட்களைப் பார்த்தவன் முதலில் கிடைத்த சிவப்பும் பச்சையுமான கற்களை எடுத்து அவன் மேல் வீசினான்.

அந்தக் கற்கள் ராட்ஷசனை வருத்தியது.

“வேண்டாம்.. எறியாதே! அதை என் மேல் எறியாதே!” கத்தினான்.

சாமும் கூடச் சேர்ந்து கற்களை அவன் மேல் விட்டெறிந்தாள். அந்த வேதனையும் பொறுத்துக் கொண்டு ராட்ஷசன் முன்னேற,  

அவசரமாக சக்கரத்தை விட்டு வெளியே வந்தனர். உடனே அவர்கள் பின்னால் வந்த ராட்ஷசன் அப்படியே உறைந்தான்.

அந்த ஸ்ரீசக்கரம் ராட்ஷசனுடன் சேர்ந்து மறைந்தது.

“அப்பாடா…!” சாம் பெருமூச்சு விட, இப்போது ஒரு வளையும் கம்பு போன்ற ஒன்று கிடைத்தது.

கையில் எடுத்துக் கொண்டான். ஒரு அம்பும் இந்த கம்பும் மட்டும் கையில் இருக்க,

மீண்டும் பெரும் சத்தம் கேட்டது. பூமி பிளந்து ஒரு குளம் தோன்றியது. அவர்களது சொந்த ஊரில் இருக்கும் வீட்டின் பின்னால் தோன்றும் அதே குளம் அது. ஆனால் இது இருவருக்கும் தெரியாது.

அந்தக் குளத்தில் தாமரையை விட்டான் வீரா.

அந்த ஒரு மலர் , இப்போது பெருகி குளம் முழுதும் பல மலர்களால் நிறைந்தது.

அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டு குளம் மீண்டும் மறைந்தது. இப்போது மலை கண்ணுக்குத் தெரிந்தது.

அந்த ராட்ஷசன் கூறியது போல விஷ்ணு வின் முகம் போன்ற அமைப்பு நன்றாகத் தெரிய, இருவரும் வணங்கினர்.

“வீரா அந்த நீலக் கல்லால திலகம் வைக்கணும். நீ தான் நல்லா குறி பார்த்து எரிவியே… சரியா பண்ணிடு. அப்போ தான் நாம போகமுடியும்.” சாம் கெஞ்சினாள்.

ஹே இது எவ்வளவு தூரம் இருக்கு பாத்தியா…அப்படி எல்லாம் எரிய முடியாது. இரு யோசிப்போம்.” என்றவன் அமைதியாக சிந்தித்தான்.

சற்று நேரத்திற்குப் பிறகு,

“ஹே அந்த கம்ப எடு.” என்றவன் அவள் கொடுத்தது, அதை வளைத்து ஒரு வில் போன்று செய்தான்.

தன்னிடம் இருந்த சிறு துணியை வைத்து அந்த நீலக் கல்லை அப்போது கிடைத்த அம்பின் நுனியில் நிறுத்திக் கட்டினான்.

“சூப்பர் ஐடியா!” சாம் குதித்தாள்.

தன்னுடைய ஆர்ச்சரி பயிற்சி இப்போது உதவியது.

சரியாக குறி பார்த்து நீலக் கல்லை விஷ்ணுவின் முகத்தில் திலகம் போல அமையுமாறு பார்த்து எய்தினான்.

 

 

 

Leave a Reply

error: Content is protected !!