தாழையாம் பூமுடித்து🌺21
தாழையாம் பூமுடித்து🌺21
21
“உங்க காலையே சுத்தி சுத்தி வரவும் பூனக்குட்டினு நெனச்சுட்டீங்கள்ல ண்ணே. ஆனா… உங்க காலச் சுத்தினது பூனை இல்ல… பாம்பு. பூனைனு நெனச்சு பாம்புக்கு பால் வார்த்துருக்கீங்க.” என்ற முத்துவேலின் வர்த்தைகளில் அவ்வளவு ரௌத்திரம். எவ்வளவு பெரிய காரியம் செய்து விட்டு ஒன்றுமே தெரியாதது போல் இருந்திருக்கிறான்.
“ஆட்டக்கடிச்சு, மாட்டக்கடிச்சு கடைசியில மனுசனக் கடிச்ச கதையாப் போச்சு.” என அவனை சட்டையைப் பிடித்து இழுத்து முத்துவேலும் அறைய யாரும் அவரைத் தடுக்கவில்லை.
இரண்டு நாள் கழித்தே ப்ரியாவை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்து வந்தனர். இந்த இரண்டு நாட்களும் குடும்பத்தில் ஒருவர் முகத்திலும் ஈயாடவில்லை.
யாராவது வீட்டிற்கு ஏதேச்சையாக வந்தாலோ, தொழில் விஷயமாகப் பார்க்க வந்தாலோ இதைப் பற்றி தான் விசாரிக்கப் போகிறார்களோ என மனம் பதை பதைத்தது.
ஃபோன் வந்தால் கூட எடுத்துப் எடுத்துப் பேச ஒரு அச்சம். ஆண்கள் வெளியே செல்லும் பொழுது… உங்க வீட்டு பொண்ணா அது, என தங்களை உற்றுப் பார்ப்பது போல் ஒரு பிரமை.
என்னதான் பதிவேற்றம் நீக்கப் பட்டாலும், அதில் இருந்தது உண்மை தானே என்ற உள்ளுணர்வு அவர்களுக்குள் அவமானத்தை தோற்றுவித்தது.
இத்தனைக்கும் காரணம் உறவுக்காரனே எனும் பொழுது ஆத்திரம் அத்தனை பேருக்கும் எல்லை மீறியது.
ஸ்ரீ கூறியது போல மற்றவர்களை பயமுறுத்த என, பயத்தால் கையை வெட்டிக் கொண்டது என்பதனால் நரம்பிற்கோ, எலும்பிற்கோ பாதிப்பு எதுவும் இல்லை. எனினும் ஸ்கேன், எக்ஸ்ரே, இஸிஜி என மருத்துவமனையில் எத்தனை உபகரணங்கள் இருக்கிறதோ அத்தனை டெஸ்ட்டுக்களையும் எடுத்து தான் வெளியே விட்டனர்.
பெரிய மாமன் குடும்பம், சின்ன மாமன் குடும்பம் என அனைவரும் வீட்டில் கூடியிருக்க சந்துரு மட்டும் மிஸ்ஸிங்.
சுந்தரியும் மகனிற்கு ஃபோன் போட்டு ப்ரியாவை பார்க்க வரவில்லையா என மகனை அதட்ட,
“அந்த குடும்பத்துக்கு நீங்க தானே காவடி தூக்குங்க. அவ என்னைய காலேஜ்லயே மதிக்க மாட்டா. அவள நான் எதுக்கு வந்து விசாரிக்கணும்.” என விட்டேத்தியாக பதில் கூறிவிட்டு அழைப்பை கட் செய்தான்.
இந்த அழைப்பை வைத்தே அவன் இருக்கும் இடத்தை கண்டு பிடித்தனர். பிரியா அட்மிட் ஆனதில் இருந்தே சுந்தரி மகனுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டு தான் இருக்கிறார். அவன் தான் அழைப்பை ஏற்கவில்லை. கணவரிடமும் விசாரித்ததற்கு அவன் வீட்டிற்கு வரவில்லை என கூறிவிட்டார்.
தான்தோன்றித் தனமாக நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு ஊர் சுற்ற, சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி விடுவான் என்பதால் மகனையும் தண்ணீர் தெளித்து விட்டுவிட்டார்.
பிரியா மீதான சந்துருவின் கோபம் அவனைக் கல்லூரியில் மதிக்காததால் மட்டும் வந்த கோபம் அல்ல.
ஈஸ்வரன் திருமணத்தன்று பிரியாவால் அவமானப்படுத்தப் பட்டதால் வந்த கோபம்.
நிச்சயதார்த்தத்தை நிறுத்தி, ஈஸ்வரன் சங்கரியை மணம் முடிக்க, அங்கு இருந்த சந்துரு,
“முறைப் பொண்ண கல்யாணம் பண்ண இப்படி ஒரு வழி இருக்கா?” என கேட்க,
“ஏன்… நீ யாரையாவது இந்த மாதிரி கல்யாணம் பண்ணப் போறியா?” என்றாள் பிரியா.
“நான் ஏன் வேற யாரையாவது கல்யாணம் பண்ணனும். ஈஸ்வரனாவது ஒன்னு விட்ட அத்தை மகன். நான் உனக்கு உரிமையுள்ள தாய்மாமன் மகனாக்கும். எனக்கு தான் முதல் உரிமை, உம்மேல…” எனக் கூறி கண் சிமிட்ட,
“ஓஹோ… அய்யாவுக்கு அப்படி ஒரு நெனப்பு இருக்கா. இருக்கணும்ல… வயித்துக்கு சோறு போட்டு, படிக்க வச்சவுங்க… பொண்ணும் கொடுக்கணும்ல. அது தானே நியாயம்.” என எகத்தாளமாகக் கேட்க,
“ஏய்… என்ன வாய் நீளுது.” என்றான் கோபமாக.
“எங்க வீட்டு சாப்பாட சாப்டுக்கிட்டு, எங்க அப்பா காசுலயே படிச்சுகிட்டு, என்னையவே கட்டிக்கலாம்னு வேற திட்டம் போடுறியே. உனக்கே இது அசிங்கமா இல்ல. ஈஸ்வரன் மாமா கேட்ட மாதிரி நீயும் சபையில வந்து ஏதும் கேட்டுறாத. அசிங்கப்பட்டுப் போயிறுவ. வெளக்க மாத்துக்கு பட்டுக் குஞ்சம் கேக்குதோ?” என அவளுக்கே உரிய துடுக்குத் தனத்தோடு, மானவாரியாக சந்துருவை அவமானப் படுத்த, அவளது பேச்சு அவனை கொம்பு சீவி விட்டது.
“வலிய வந்து, எனக்கு உன்னய கட்டி தர்றேனு சொல்ல வக்கிறேன்.” என சவால் விட்டான் ஆத்திரமாக அப்பொழுதே.
கல்லூரியில், இவள் என்னுடைய மாமன் மகள்… என்னோட ஆளு என சொல்லி வைத்ததால் வந்த எரிச்சல் எப்பொழுதும் அவன் மீது உண்டு. அடிக்கடி அவளை பார்க்கும் பொழுதெல்லாம் சீண்டிக் கொண்டே இருப்பான். அது மட்டுமில்லாமல் தன் பேச்சை மதிப்பதே இல்லை என சுந்தரியும், திலகவதியிடம் அடிக்கடி மகனைப் பற்றி புலம்புவதை பிரியா கேட்டிருக்கிறாள்.
நம்மை நம்பி வந்து விட்டார்களே என சக்திவேல் தான் அவனது படிப்பு செலவுகளையும் பார்த்துக் கொள்கிறார். பெற்றவர்களைக் கொண்டு தான் பிள்ளைகளுக்கு மதிப்பு. பிள்ளைகளைக் கொண்டு தான் பெற்றவர்களுக்கும் மதிப்பு.
சபையில் மகனை முன்னிருத்தும் தந்தைக்கு தான், இவனைப் பெற என்ன தவம் செய்தாரோ எனும் பெயர் வாங்கிக் கொடுக்கும் மகன் கிடைப்பான்.
முழு போதையில் இருந்தவனை பாரிலிருந்து ஸ்ரீ யும், வருணும் குண்டுக்கட்டாக தூக்கி வந்திருந்தனர்.
இரண்டு நாட்களுக்கு முன்பே ஃபோனை வைத்து பதிவேற்றம் செய்தது யார் என்ற தகவல் ஈஸ்வரனுக்கு கிடைத்து விட்டது. ஆனால் அவன் இருக்கும் இடம் தான் தெரியவில்லை. ஃபோனை சந்துரு ஸ்விட்ச் ஆஃப் செய்து வைத்திருந்தான்.
ரெங்கநாயகி சப்தநாடியும் அடங்கி ஒடுங்கிப் போய் உட்கார்ந்து இருந்தார்.
ஏனெனில், பிரியாவை வீட்டிற்கு அழைத்து வந்ததில் இருந்து, இப்பொழுது வரைக்கும், ஈஸ்வரன் குடும்பத்தையே வசை பாடிக் கொண்டு இருந்தார்.
வருணோடு தங்கிக் கொண்டு, இரண்டு நாட்களாக ஆஸ்பத்திரிக்கு மட்டுமே வந்து சென்றவன், இன்று பிரியாவோடு வீட்டிற்கு வந்திருந்தான்.
அனைவரும் ஹாலில் கூடியிருந்தனர். பிரியா யார் முகத்தையும் ஏறெடுத்தும் பார்க்கும் தைரியம் இல்லாமல் அமைதியாக அமர்ந்திருக்க,
ஈஸ்வரன் சபையில் வைத்து அவமானப் படுத்தியதால் தான் அஸ்வின் இவ்வாறு பழி தீர்த்திருக்கிறான் என எண்ணிக் கொண்டு இஷ்டத்திற்கு பேசினார் ரெங்கநாயகி.
”இவ்வளவு நாளா இவங்க சங்காத்தமே இல்லாம இருந்துச்சு. எந்த பிரச்சினையும் இல்ல. வந்து ஒன்னு கூடினாங்க. தொழில்லயும் பிரச்சன. பொம்பளப் பிள்ள மானமும் போச்சு. இப்ப யாரு இவள கட்டுவா?” என சகட்டு மேனிக்கு பேச,
“ஏம்மா… நாங்களே நொந்து போய் இருக்கோம். நீ வேற ஏம்மா வெந்த புண்ணுல வேலப் பாச்சுற.” என முதன் முறையாக அம்மாவின் பேச்சை எதிர்த்து கேள்வி கேட்டார் கயல்விழி.
மருமகனை அவமானப்படுத்தவும் கயல்விழிக்கும் அம்மாவின் மீது கோபம் வந்தது. மகள் அங்கு தானே வாழ்ந்தாக வேண்டும். இன்னொரு பெண்ணையும் இனி யார் திருமணம் செய்து கொள்வார்கள் எனக் கேட்டால் எந்த தாய்க்கு தான் கோபம் வராது.
ஈஸ்வரன் நடப்பதை எல்லாம் கையை கட்டிக்கொண்டு வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்தான். ரெங்கநாயகிக்கு எந்த பதிலும் கொடுக்கவில்லை. முத்துவேலும் நீ பேசறவரைக்கும் பேசு என அமர்ந்திருக்க,
“நான் சொன்னதுல என்னடி தப்பு. அதா… ஊரே கேளு நாடே கேளுன்னு வீடியோ போட்டு ஊருக்கே படம் காட்டிட்டாங்களே, நாளைக்கு இந்த விஷயம் தெரிஞ்சவங்க யாரு பொண்ணு கேட்டு வருவா?” என பேத்தியின் எதிர் காலம் பற்றி மிகவும் கவலைப்பட்டவராக ரெங்கநாயகி அங்கலாய்க்க,
“அதனால என்ன அம்மாச்சி! இதோ… இவனுக்கே நம்ம பிரியாவ கட்டி வச்சுறலாம். நம்ம வீட்லயே மாப்பிள்ளைய வச்சிக்கிட்டு வெளிய எதுக்கு தேடணும்.” என போதையில் இருந்த சந்துருவை இழுத்துக் கொண்டு வந்து அனைவர் முன்னும், ஹாலில் தள்ளினான் ஸ்ரீ. வருணும் உடன் இருந்தான்.
இரண்டு நாட்களாக ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் செய்திருந்தவன், நிலவரம் என்னவென்று அறிய ஃபோனை சிறிது நேரம் ஆன் செய்தான். பிரியாவிற்கு துணையாக கயல்விழியோடு மருத்துவமனையில் இருந்த சுந்தரியும் மகன் ஃபோன் எடுக்காத நிலையில், எங்கு சென்றானோ என மகனை அவ்வப்பொழுது அழைத்து கொண்டே இருக்க, மூன்றாம் நாள் தான் அழைப்பை ஏற்றான். சுந்தரியும் ஏன் பிரியாவை பார்க்க வரவில்லை எனக் கடிய, தன் மீது சந்தேகம் வரவில்லை என்பது தெரிந்தது.
அப்பொழுதே அவன் இருக்கும் இடம் ஃபோன் சிக்னல் காட்டி கொடுக்க, அதற்கெனவே காத்திருந்த ஸ்ரீயும், வருணும் அவன் இருக்கும் இடம் சென்று அவனை தூக்கி வந்தனர்.
உண்மை தெரிந்ததில் அனைவருக்குமே அதிர்ச்சியே. இவனா, அவனா என யார் யாரையோ யூகம் செய்து கொண்டிருக்க, வளர்த்த கிடாவே மாரில் பாய்ந்ததில் சக்திவேலிற்குமே பேச்சு வரவில்லை. தருதலையாய் சுற்றுகிறான் எனத் தெரியும். வயதின் பொருப்பற்ற தன்மை, படித்து வேலைக்கு சென்றுவிட்டால் பொறுப்பு வந்து விடும் என நினைத்துக் கொண்டிருக்க, இந்த அளவிற்கு கீழ்த்தரமான வேலை செய்வான் என கனவிலும் யாரும் நினைக்கவில்லை.
யாரென்று தெரிந்தால் வெட்டிப்போடும் அளவிற்கு அனைவருக்குமே கோபம் இருந்தது. உண்மை தெரிந்த ஈஸ்வரனுமே கூட கையில் கிடைத்தால் சந்துருவை துவம்சம் செய்யும் எண்ணத்தில் தான் இரண்டு நாட்களாக இருந்தான்.
சுந்தரிக்கு தான் நாக்கை பிடிங்கி கொள்ளலாம் போல் இருந்தது. மகன் செய்த காரியத்தால் அவமானத்தில் அனைவர் முன்னும் கூனிக் குருகிப் போனார்.
அன்று, நண்பன் அஷ்வினை பார்க்க ஹோட்டல் சென்றான் சந்துரு. வழக்கம் போல் நண்பன் கோட்டாவில் ஓசி குடி குடிக்க பார் சென்றான். எப்பொழுதும் நடப்பது தான்.
தங்கராசுக்கும் இவர்களுக்கும் வியாபாரத் தொடர்பு உண்டு. வேறொன்னும் இல்லீங்க. சக்திவேலின் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனிக்கு மெட்டீரியல்ஸ் சப்ளையர் அஷ்வின் ஹார்டுவேர்ஸ் தான். அந்த வகையில் மீடியேட்டராக (புரோக்கர்னு சொன்னா கௌரவக் குறைச்சல்) தங்கராசுவிற்கும் அஷ்வினின் தந்தை ராஜசேகருக்கும் நல்ல பழக்கம். அதைக் கொண்டு அஷ்வினும், சந்துருவும் பழக்கம். தந்தையைப் போலவே பணம் இருக்கும் இடத்தில் ஜால்ரா போட்டு ஒட்டிக் கொள்ளும் குணம்.
இந்தப் பழக்கத்தில் தான் சங்கரிக்கு அஸ்வினை திருமணம் செய்ய ஏற்பாடு நடந்தது.
பார் வந்தவனது கண்ணில், பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தனித்து நின்ற பிரியா தென்பட்டாள். அவளிடம் ஸ்வேதா பியர் கிளாஸை நீட்டியவாரு பேசிக் கொண்டு இருப்பது தெரிந்தது.
ஸ்வேதாவை கண்டிக்கும் எண்ணத்தில் வேகமாக அங்கு செல்ல எத்தனித்தவன், சட்டென்று யோசனை தோன்ற ஓரமாக நடப்பதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். பயத்தோடு பிரியா க்ளாசை கையில் வாங்குவதும், தயக்கத்தோடு குடிப்பதும் தெரிய அதை அப்படியே தனது கைபேசியில் பதிவு செய்ய ஆரம்பித்தான்.
தன்னை அசிங்கப் படுத்தியதால், இதை வைத்தே அவளை திருமணம் செய்யலாம் என்ற திட்டம் போட்டான்.
போதை அதிகமாகி ஆட்டம் போடும் வரைக்கும் முழுதுமாக பதிவு செய்தவன், அவளை அடையாளம் தெரிந்தவர்கள் மட்டுமே கண்டு பிடிக்கும் வகையில் எடிட் செய்து சோஷியல் மீடியாவில் பதிவேற்றினான்.
“அதெப்படி சந்துரு… அடுத்த வீட்டு பொண்ணுங்க, இப்படி ஆம்பளைங்க மத்தியில இருந்தாலே மனசு பதறுமே. நீ அங்கேயே இருந்தும் பிரியா கிட்ட அத்து மீறுறத பாத்துக்கிட்டே இருந்துருக்க. இப்ப எல்லாம் சின்ன புள்ளைக கூட ஐ.பி. அட்ரஸ் கண்டுபுடிச்சு யார் ஃபோன்ல இருந்து வீடியோ அப்லோடு ஆகுதுன்னு கேம் விளையாடுற மாதிரி கண்டு புடுச்சுர்றாங்க. சிம் கார்ட் மாத்தினவன் போனையும் மாத்தி இருக்கலாம்ல.” என ஈஸ்வரன் கேட்க,
“இவன என்ன மாமா பண்ணலாம்?” என்றான் ஸ்ரீ. ஏற்கனவே அவனை துவட்டி எடுத்திருந்தான்
“அங்க ஏன் ஸ்ரீ கேக்குற. நான் சொல்றே… போலீஸ்ல புடிச்சுக் கொடு. ஜெயில் சோறு தின்னாலாவது புத்தி வருதா பாக்கலாம்?” என சுந்தரி ஆத்திரமாக,
“அதோட அவன் லைஃபே போயிரும் சித்தி.” என்றான் ஈஸ்வரன்.
“இப்ப மட்டும் என்ன ஈஸ்வரா… எதுலயும் பொறுப்பே இல்ல.” என்றவர், மகன் முன் வந்தார். நிதானம் இல்லாமல் அம்மாவை சந்துரு ஏறிட்டுப் பார்க்க, அவனது உச்சிமுடியைப் பிடித்து தூக்கியவர்,
“கூடவே வளந்த புள்ளயவே வீடியோ எடுத்து போட்டுருக்குறியே? உன் முன்னாடி எப்படிடா நானெல்லாம் கூச்சம் இல்லாம வர்றது.” என கேட்க, அந்தக் கேள்வியின் தாக்கம் செருப்பால் அடித்தது போல் இருக்க,
“ம்மாஆஆ…” என அந்த நிலையிலும் அதட்ட,
“நான் கேட்டதுல என்னடா தப்பு?” என்றார் வெடித்த கோபத்தோடு.
“பிரியாவ எனக்குப் புடிக்கும்மா. என்னோட ஆசைய சொன்னதுக்கு அசிங்கமா பேசிட்டா.” என்றான்.
“நானும் தான் நீ ஒழுங்கா படிக்க மாட்டேங்குற, பொறுப்பில்லாம இருக்கேன்னு திட்டிக்கிட்டே இருக்கே. அப்ப என்னையும் வீடியோ எடுத்து போடுவியாடா?” என ஆதங்கமாகக் கேட்க, அந்தக் கேள்வி அனைவருக்குமே சங்கடத்தை கொடுக்க,
“திரும்ப திரும்ப அதையே சொல்லாதம்மா. எனக்கு என்னவோ மாதிரி இருக்கு. இப்படி பண்ணினா வேற வழியில்லாம நமக்கே கட்டி வச்சுருவாங்கனு தாம்மா இப்படி பண்ணிட்டே. அவ மேல உள்ள ஆசைல தாம்மா இப்படி பண்ணிட்டேன். சாரி ம்மா…” என அம்மாவின் கையை பிடித்துக் கொண்டு அழுதான்.
பெரும்பாலும் அப்படி தானே நடக்கிறது. பெண் ஏதாவது தப்பு செய்துவிட்டால் அது வெளியே தெரிவதற்குள் அவசர அவசரமாக சொந்தத்திலேயே ஏதாவது மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்துவிட்டால் எல்லாம் சரியாகிப் போகும் என்ற எண்ணம் தானே பெற்றவர்களுக்கு. சந்துருவும் அதையே நினைத்து தான் இப்படி ஒரு திட்டத்தை போட்டான்.
“வாழ்க்கை கொடுக்கலாம்னு நெனச்சுருக்க? ஒரு பொண்ணு கிட்ட உன் விருப்பத்த சொன்னா… அவ, இந்தப் பையன மிஸ் பண்ணக் கூடாதுன்னு நினைக்கணும் சந்துரு. ஆசப்பட்ட பொண்ண தான்… அத்தனபேர் முன்னாடி ஆடவிட்டு பாத்தியா? இப்படி அசிங்கப் படுத்தி, அதைக் காரணம் காட்டி கல்யாணம் பண்ற பொண்ணு எப்படி உங்கூட சந்தோஷமா வாழ்வான்னு நெனச்ச?” என ஈஸ்வரன் கேட்க,
“என்னடா நீ… அவனுக்கு என்னமோ கீதா உபதேசம் பண்ணிட்டு இருக்க?” என்றார் மாமன்.
“அதுக்காக இவனுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்து எங்க அப்பன் குதிருக்குள்ள இல்லைனு சொல்லப் போறீங்களா? நம்ம குடும்ப மானம் தான் முதல்ல போகும். தங்கராசு மகன்னு சொல்ல மாட்டாங்க. சக்திவேலோட மச்சான் மகன் தான்னு சொல்லுவாங்க. அரைகுறையா தெரிஞ்சத அம்பலமாக்கணும்னு பாக்குறீங்களா?” என ஈஸ்வரன் நிதர்சனத்தை எடுத்துரைக்க, அவன் சொல்வதில் இருந்த எதார்த்தம் அனைவருக்கும் புரிந்தது.
“இதோட முடிஞ்சுறாது. நாளைக்கு அத்தைக்கு பிறந்த வீட்டு சொந்தம் வேண்டாமா?” எனக் கேட்க,
“எனக்கு இப்படிப்பட்ட சொந்தமே வேண்டாம்.” என கயல்விழி கோபமாக கூற.
“இன்னைக்கு கோபத்துல இப்படி சொல்லலாம் அத்தை. ஒவ்வொரு விசேஷத்தப்பவும், மாமா குடும்பம் இருந்தா நல்லா இருக்கும்னு அம்மாவும், அப்பத்தாவும் புலம்பறத கேட்டிருக்கேன். பொண்ணுகளால பொறந்த வீட்ட மறக்க முடியாது.” என கயல்விழியிடம் கூற,
“உங்கள எல்லாம் கூட வச்சதுக்கு நல்லா பாடம் கத்து கொடுத்துட்டீங்க. ஏதோ தொழில் நடக்குற எடத்துல தான் அப்பன் அங்கங்க கை வைக்கிறான்னு நெனச்சா, மகன் அதுக்கு மேல இருக்கான். அடிமடியிலேயே கை வச்சுருக்கான். நாயக் குளிப்பாட்டி நடுவீட்ல வச்சாலும் அதோட புத்தி மாறாது. போதும்… உங்க ஒட்டு உறவே வேணாம். நான் மிருகமா மாறுறதுக்குள்ள, தயவு செஞ்சு எல்லாரும் வெளிய போயிருங்க.” என சக்திவேல் வெறுப்போடு கூற,
“அப்ப இவன இப்படியே விடப் போறீங்களா? இந்த ரெண்டு நாளா எனக்கு எவ்வளவு ஸ்ட்ரெஸ் தெரியுமா? காலேஜ் எப்படி போவேன்? ஃப்ரெண்ட்ஸ எல்லாம் எப்படி ஃபேஸ் பண்ணுவேன்” என பிரியா, சமூகத்தை எதிர் கொள்வதை நினைத்து அழ ஆரம்பிக்க,
“சும்மா விடுறதே தண்டனை தான் இவனுக்கு. புத்தி உள்ளவனா இருந்தா பொழச்சு போகட்டும். இது கூட சுந்தரி சித்திக்காக பாத்து இவனை விட்டா தான்.” என்ற ஈஸ்வரன்,
“பந்தியில உக்காந்துட்டு அடுத்தவங்க எலையில என்ன இருக்குனு பாக்குறவங்க, நிம்மதியா தன்னோட எலையில இருக்குறத சாப்பிட முடியாதுன்னு சொல்லுவாங்க. நீங்க என்னைக்காவது இப்படி ஒரு எடத்துல பொண்ணு கொடுத்துருக்கோம்னு பெருமப் பட்டுருக்கீங்களா? நம்ம மக இவ்வளவு வசதியா இருக்கேன்னு சந்தோஷப் பட்டிருக்கீங்களா? எப்ப பாரு எங்க குடும்பத்தோட, உங்க பிள்ளைகள கம்பேர் பண்ணி பாத்தே வயிறு எரிஞ்சு போவீங்க. அப்படி பேசிப் பேசியே இவங்க மனசுலயும் பொறாமையையும், வெறுப்பையும் வளத்து விட்டீங்க. அது நல்லாவே சந்துருவோட நடத்தையில தெரியுது அப்பத்தா.” என ரெங்கநாயகியைப் பார்த்து பேசியவன்,
“நீங்க பிரியாவுக்கு கத்து கொடுத்தது என்ன அத்தை, பிரச்சினைனா தற்கொலை மிரட்டல் விடலாம்கறது மட்டும் தான். அன்னைக்கு அவசரத்துல ஆழமா கிழிச்சுருந்தான்னா, உயிர் போச்சுன்னா திரும்ப வருமா?” என மாமியாரையும் சாட மறக்கவில்லை மருமகன்.
இந்த விஷயத்தை மேலும் பெரிதாக்க விரும்பவில்லை. மருமகன் சொன்னதில் இருந்த நிதர்சனம் புரிய, யாரையும் வைக்க வேண்டிய இடத்தில் வைத்திருக்க வேண்டும் என சக்திவேல் உணர்ந்தார்.
இவனால் எல்லாருக்கும் அசிங்கம் என சின்ன மாமன் குடும்பமும் புலம்பிக் கொண்டே வெளியேறியது.
வெளியேறும் முன் பிரியாவிடம் வந்தவன், அவள் முகம் கூட பார்க்காமல், “சாரி.” என மட்டும் சொல்லிவிட்டு சந்துரு வெளியேறி விட்டான்.
மழையடித்து ஓய்ந்தது போல் ஓர் அமைதி. ஈஸ்வரன் தான் அனைவருக்கும் உணவை ஆர்டர் செய்து வரவைத்தான்.
“முதல்ல எல்லாரும் சாப்பிடுங்க. அப்ப தான் தெளிவா யோசிக்க முடியும். அம்மாச்சி எந்திரிங்க. நீங்க முதல்ல சாப்பிட்டு மாத்திரையை போடுங்க.” என அதட்டிக் கூறிவிட்டு வெளியே வர சின்ன மாமனும் பின்னாடியே வந்தார்.
“ஏன்டா அவன சும்மா விட சொன்ன?” என மாமன் கோபமாகக் கேட்க,
“இது அவன் ப்ளான் பண்ணி பண்ணல மாமா. அப்படி பண்றவங்கள ஈசியா கண்டுபுடிச்சுறலாம். இவ்ளோ ஈஸியா சிக்கியிருக்க மாட்டான். ஏதோ ஆத்திரத்துல பண்ணிட்டான். தப்ப உணர ஒரு வாய்ப்பு. திருந்துனா அவன் நல்ல நேரம். இல்லைனா அவன் தலை எழுத்து. நம்ம கையே நம்ம கண்ண குத்திருச்சுனா வெட்டியா போட முடியும். அது மாதிரி தான் இதுவும்.”
“எனக்கு இந்த பொறும இல்லடா. அவன இப்படியே விட்டுருக்க கூடாது.” என்றார் இன்னும் கோபம் குறையாமல்.
“இது தாத்தா கிட்ட இருந்து கத்துகிட்டது மாமா. அவர் என்னய அவசரப்பட்டு அடிச்சுட்டு கடைசி வரைக்கும் என்னய பாக்குறப்ப எல்லாம் தப்பு பண்ணிட்டேன்னு புலம்புவாரு. அப்ப தான் எதுக்கும் அவசரப்பட கூடாதுன்னு கத்துகிட்டே. இல்லைனா அவன் மேல எனக்கு இருந்த ஆத்திரத்துக்கு முத அடி என் அடியாத்தான் இருந்துருக்கும்.”
“மறப்போம் மன்னிப்போம்னு சாமியாராட்டம் பேசுறடா. உன்னைய நம்பி பொண்ணு வேற கொடுத்துருக்கேன்.” என மாமன் சிரிக்க,
“நான் சாமியாராட்டம் பேசுறேனா? வந்து நாலஞ்சு நாளாச்சு. நானா ஃபோன் பண்ணாம, உங்க பொண்ணு கூப்புடறதே இல்ல. இந்த சாமியார் சித்தப்பா வளத்த பொண்ணு தானே. வேற எப்படி இருப்பா? பொண்ண கொடுத்துட்டு ஒரு வாரமா இங்கேயே புடுச்சு வச்சுருந்தா காவி கட்டிட்டு தான் போகணும்.” என மாமனையும், மனைவியையும் ஒன்று சேர்த்து கிண்டல் பண்ணி அலுத்துக் கொள்ள,
“யப்பா… சாமி! நாளைக்கே கெளம்புடா. மத்ததெல்லாம் நாங்க பாத்துக்கறோம்.” என மாமனும் மருமகனும் சற்று நேரம் கேலியாக பேசிவிட்டு சற்று சகஜமாகி வந்தனர்.
இனி எப்படி வெளியே போவேன் என தனக்குள் மருகியவளை, ஈஸ்வரன் தான் தைரியம் கொடுத்து அவளை சற்று தேற்றினான்.
“ நீ தானே பிரியா சொன்ன. என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் நல்லவுங்கனு. அப்ப இந்த மாதிரி நேரத்துல சப்போர்ட் தானே பண்ணுவாங்க. உன்ன சுத்தி இருக்கறவுங்கள பத்தி தெரிஞ்சுக்க இது ஒரு நல்ல சான்ஸ். யார்கிட்டயும் உன்ன ப்ரூஃப் பண்ணனும்னு அவசியமில்ல. உன்ன நம்புறவங்ககிட்ட ஃப்ரெண்ட்ஷிப்ப மெயின்டெயின் பண்ணு போதும். ஒவ்வொரு சம்பவமும் நமக்கு ஒரு பாடம் தான் பிரியா.’’ என கொளுந்தியாளை ஆறுதல் சொல்லி தேற்றியவன்,
“சாதாரண நேரத்துல வாய்ச்சவடால் விடுறது எல்லாம் பெரிய விஷயமில்ல. இந்த மாதிரி நேரத்துல தான் எதையும் தைரியமா ஃபேஸ் பண்ணனும். சும்மா இதையே நினைக்காம இதுல இருந்து வெளிய வரப்பாரு. அதிகமா ஸ்ட்ரெஸ் இருந்தா கவுன்சிலிங் கூட எடுத்துக்கோ.” என ஆலோசனை சொன்னவன், அதற்கான ஏற்பாட்டையும் செய்தான்.
இந்த முறை சித்தப்பா பிரியாவோடு செல்லவில்லை. சக்திவேலே மகளை கவுன்சிலிங் அழைத்து சென்றார். இனியும் பிள்ளைகளை விட்டு விலகி இருக்க கூடாது எனப்பட்டது. தொழில் அடுத்து… குடும்பம் தான் முதலில் என்ற எண்ணம் இப்பொழுது தான் வந்தது. சக்திவேல் உடன் வந்ததே பிரியாவிற்கு தைரியம் கொடுத்தது. அப்பா தன்னை தப்பாக நினைக்கவில்லை என்ற எண்ணமே அவளுக்கு தெம்பூட்டியது.
இந்த மாதிரி பாதிக்கப்படும் பெண்களுக்கு குடும்பத்தார் கொடுக்கும் சப்போர்ட்டில்தான் அவர்கள் மீண்டு வருவதே இருக்கிறது. ரெங்கநாயகி மாதிரி மானம் போச்சு மரியாதை போச்சு என குத்திக் குதறினால் உள்ளுக்குள்ளே சுருங்கி போவார்கள்.
அடுத்தடுத்த நாட்களில் பிரியா சற்று சகஜமாக, தொழில்ல என்ன பிரச்சினை என மாமனை விசாரிக்க,
“அது எப்பவும் இருக்குறது தான்டா. என்ன… இப்ப கொஞ்சம் அஸ்வினோட அப்பா அதிகமா குறுக்கிடுறாரு. லோக்கல் ஆளுகள தூண்டிவிட்டு பிரச்சினை பண்றாங்க.” என்றார்.
ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் தொடங்கி வேலையை முடிப்பதற்குள் அந்த ஏரியா கவுன்சிலர் முதற்கொண்டு எம்.எல்.ஏ வின் கைத்தடிகள் வரைக்கும் அனைவரையும் சரிக்கட்டினால் தான் பில்டிங் கட்டி முடிக்க முடியும். அந்த ஏரியாக்காரனே நான் தான் மெட்டீரியல்ஸ் சப்ளை பண்ணுவேன்னு வந்து நிப்பான். ஒன்னும் பண்ணமுடியாது. அவன் கிட்ட தான் வாங்கியாக வேண்டும். அரசாங்க அதிகாரி முதற்கொண்டு அரசியல்வாதிகள் வரை சரிக்கட்டி தான் ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் முடிக்க வேண்டியிருக்கு.
இதை எல்லாம் சமாளிச்சு பில்டிங் முடிச்சா, அந்த ஏரியா புரோக்கர்கள் நாங்க தான் புரோக்கரேஜ் பண்ணுவோம்னு வந்து நிப்பாங்க. நாம ஏற்கனவே கஸ்டமர்ஸ் புடிச்சுருந்தாலும் அவங்களுக்கும் கமிஷன் கொடுத்தாக வேண்டும்.
இதை எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்தவன், “இதுல அஸ்வின் ஃபேமிலி என்ன பண்றாங்க மாமா?” என்றான்.
“பதினாலு மாடிக்கு ப்ளான் போட்டு வேல ஆரம்பிச்சாச்சுடா. பில்டிங் அப்ரூவலுக்கு போன ஃபைல் மூவ் ஆகல. அஷ்வினோட அப்பாக்கு தெரிஞ்சவங்க அங்க இருப்பாங்க போலடா. பேப்பர்ஸ்ல அது இல்ல, இது இல்லைனு அலைக்கழிக்கறாங்க. கூடக் கொஞ்சம் எதிர்பாப்பானுக போல இருக்கு.”
“பில்டிங் பாதி வந்துருச்சு. அப்ரூவல் கெடச்சா தான் பேங்க் லோன் கெடைக்கும். கேஷ் ஃப்லோ இல்லாததால வொர்க்கர்ஸ் சம்பளம் போடாம நிக்குது. கைல இருந்த பணத்த எல்லாம் அடுத்த ப்ராஜக்டுக்கு லேன்ட்ல இன்வெஸ்ட் பண்ணியாச்சு.” என நடைமுறை பிரச்சினைகளை மருமகனிடம் மாமன் கூற,
ஒருவாரமாக கூடவே இருந்து பிரியா பிரச்சினை முதற் கொண்டு, பிஸினஸ் வரைக்கும் ஆலோசனை கூறியவனை பெரிய மாமனும் கவனித்துக் கொண்டு தான் இருந்தார். இருந்தும் இன்னும் மருமகனிடம் சகஜமாக பேச மனம் இடம் கொடுக்கவில்லை. தன்மானமா அல்லது குற்றவுணர்வோ ஏதோ ஒன்று தடுத்தது.
இந்த ஒரு வாரமும் அவன் மாமன் வீட்டில் தங்கவில்லை என்றதும், “அதென்ன… என் பொண்ணு மட்டும் வேணும். ஆனா நாங்கூப்பிடாம என் வீட்ல தங்க மாட்டானாமா? எங்கிட்டயே அவ்வளவு வீம்பா?” என உரிமையாக கொஞ்சம் ரோஷமும் எட்டிப் பார்த்தது.
சங்கரி… அம்மாவிற்கோ, திலகவதிக்கோ, தங்கைக்கோ ஃபோன் செய்த பொழுதும் யாரும் எதுவும் சொல்லவில்லை. அது கிராமம். எப்படியும் விஷயம் கசிந்து விடும். அதனால் யாருக்கும் சொல்ல வேண்டாம், சங்கரியிடம் தான் நேரில் சொல்லிக் கொள்வதாகக் கூறிவிட்டான்.
வேலை விஷயம் என வந்ததினால் ஈஸ்வரனை அதிகமாக சங்கரி ஃபோனில் அழைக்கவில்லை. இவனாக ஃபோன் செய்து பேசினால் தான் உண்டு.
‘எம்பொண்டாட்டிக்கு எம்மேல எவ்வளவு ஆசை.’ என மனம் அலுத்துக் கொண்டாலும், சொந்த வேலை, வந்த வேலை என எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு தான் ஃப்ளைட் ஏறினான்.
மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுதே
அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே
மச்சான் எப்போ வர போற
மச்சான் எப்போ வர போற
பத்து தல பாம்பா
வந்து முத்தம் தர போற
நான் ஒத்தயில தத்தளிச்சேன்
தினம் சொப்பனத்தில் மட்டும் தான்
உன்ன நான் சந்தித்தேன
ஹேய் எப்போ வர போற
மச்சான் எப்போ வர போற
பத்தமடை பாயில்
வந்து சொக்கி விழ போற
என மச்சானை எதிர்பார்த்து அவனது மாமன் மகள் உருகிக் கொண்டு இருப்பது தெரியவில்லை அவனுக்கு.